"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 9, 2009

பிதற்றல்கள் - 1 (09/11/2009)

முதலில் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்த காரணம்...

மனதின் ஓட்டங்களை கூர்ந்து கவனிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் அது மாறுகிறது, நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்கிறது, பல்வேறு விசயங்களில் சமரசம் செய்து கொள்கிறது, நடிக்கிறது. கெளரவம் பார்க்கிறது, மானம், ரோசம், வெட்கம் பார்க்கிறது.

முக்கியமாக நான் எப்படி வாழவேண்டும் என நினைக்கிறேனோ அதற்கு முரணாகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது, அறிவு சில சமயங்களில் விழித்து கொண்டு மனதை அடக்கினாலும் தன் வேலையைக் காண்பிக்கிறது,

என் மனதை ஒழுங்குபடுத்தவேண்டும், அதற்கு அடக்கினால் அடங்காது, அறிய நினைத்தால் அடங்கும். அப்படி அறிய வேண்டுமானால் மனதில் தோன்றுவதை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் நான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் தெரியும். என் மன அழுக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் பதிவு செய்யவே விரும்புகிறேன்.

இது ஒரு சோதனை முயற்சி, உங்களுக்கும் இது ’சோதனை’ தான் :))

மிக கண்டிப்பாக, நட்போடு பழகுவதில் இந்த தலைப்பில் ஏதேனும் கருத்துகள் வந்தால் இவரா இப்படி என்று நினைத்து விடாதீர்கள்.

பிரித்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள், உள்ளொன்று புறமொன்று இருக்கக்கூடாது என நினைப்பதால் இதையும் குறிப்பிடுகிறேன்.

இன்று..


காலையில் அருகில் உள்ள உழவர் சந்தைக்கு வீட்டுக்காரி(மனைவி)யுடன் சென்றேன், அங்கு ஒரு பெரியவர் வயது எழுபதுக்கு மேல் இருக்கலாம், கையில் சிறு பாலீதீன் பையுடன் மெதுவாக கீழ் நோக்கி பார்த்துக் கொண்டே வந்தார், பையில் சில வெங்காயங்கள், வெண்டைக்காய், கத்திரிக்காய் முதலியன மொத்தமாகவே கால்கிலோ கூட தேறாது.

மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக இருக்கவே, சந்தையின் நடைபாதை இன்னும் மற்ற இடங்களிலும் கீழே சிதறிக் கிடக்கும் காய்கறிகளில் தேர்ந்தெடுத்து சிலவற்றைப் பொறுக்கி பையில் போட்டுக்கொண்டே வந்தார்,

மனம் ஓட ஆரம்பித்தது,

அடடே எதுக்காக பொறுக்குகிறார்?

ஒருவேளை தனது உணவுக்காக பொறுக்குகிறாரா? பணமில்லா வறுமை என்ன பாடுபட வைக்கிறது?

ஆகா.. பரவாயில்லை பிச்சை எடுக்காமல் சுகாதாரம் இல்லாவிட்டாலும் உழைப்பின் வழி  வாழ்கிறாரே!!

ஒருவேளை பொறுக்கி சின்ன கடையாப் பார்த்து விற்றுவிடுவாரோ? பார்த்தா அப்படி தெரியவில்லையே?

ஒருவேளை அப்படி கடைக்கு விற்றால் அதை தின்கிறவன் கதி?

இதுக்கு நாம எதாவது பண்ணலாமா?


வேணுமின்னா எண்ணத்தை உள்ள போட்டுவச்சுக்கோ., நீ முதல்ல ஒழுங்கா வீட்டு வேலையச் செய்யி, அப்புறம் பார்க்கலாம்!

22 comments:

  1. கண்டிப்பா அவர் ஒரு ஏழையாத் தான் இருக்கணும்,பாவம் அதனாலத் தா இப்படி எடுத்துகிட்டு இருக்காரு.

    ReplyDelete
  2. //Thirumathi Jaya Seelan said...

    கண்டிப்பா அவர் ஒரு ஏழையாத் தான் இருக்கணும்,பாவம் அதனாலத் தா இப்படி எடுத்துகிட்டு //

    ஆம் சகோதரி, ஆனால் இங்கு மையப்படுத்தி இருப்பது என்மனதை, அதில் தோன்றிய எண்ணங்களை..

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அவரிடமே கேட்டிருக்கலாம். அப்படி வறுமை என்றால் அன்றைய காய்கறியை நாமே வாங்கி கொடுக்கலாம். ஆனால் அன்றாடம் முடியாது.

    ReplyDelete
  4. எண்ணங்களின் பின்னால் ஓடாமல், அவை எங்கிருந்து வருகின்றன என்பதைப்பார்க்க இது ஒரு நல்ல ஆரம்பம்.

    ஸ்ரீ அரவிந்தருக்கு ஒரு மராத்திய யோகி, விஷ்ணு பாஸ்கர் லீலே என்பது பெயர், எண்ணங்களை நன்றாகக் கவனித்துப்பார், அவை உன்னுடையது தானா அல்லது வெளியில் இருந்து உனக்குள் ஊடுருவி வருபவையா என்று? உனக்கு வெளியில் இருந்து அம்பு மாதிரி வருவதாகத் தெரிகிறவற்றைப் பிடுங்கித் தூர எறிந்து விடு என்று சொல்கிறார். ஸ்ரீ அரவிந்தரும், மூன்றே நாட்களில் எண்ணங்கள் வெளியில் இருந்து ஊடுருவுவதைத் தடுப்பதில் வெற்றி பெறுகிறார்.

    லீலேவுக்கு ஆச்சரியம்! தனக்குப் பல வருட சாதனையில் கிடைத்த விஷயம் இவருக்கு மூன்றே நாட்களில்!

    எண்ணங்களை ஆராய்வது என்பது, அவை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்வதுதான்!

    ReplyDelete
  5. \\ புலவன் புலிகேசி said...

    அவரிடமே கேட்டிருக்கலாம். அப்படி வறுமை என்றால் அன்றைய காய்கறியை நாமே வாங்கி கொடுக்கலாம். ஆனால் அன்றாடம் முடியாது.\\

    வருகைக்கு நன்றி நண்பரே

    அந்த விநாடியில் என் மனதில் தோன்றியதை நான் கவனித்தேன், சுயநலமாக இருந்தாலும் உண்மையாக இருக்க விரும்பியே இந்த பிதற்றல்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கிருஷ்ணமூர்த்தி

    \\எண்ணங்களின் பின்னால் ஓடாமல், அவை எங்கிருந்து வருகின்றன என்பதைப்பார்க்க இது ஒரு நல்ல ஆரம்பம். \\


    பிதற்றலை மிகச் சரியாக அவதானித்தது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது

    தங்களைப் போன்றவர்களின் ஆதரவு உற்சாகத்தையும் தருகிறது..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. ஸ்ரீ ரமணரும் இதே வழிமுறையைத்தான் பயிலச் சொல்கிறார்,சிவா.
    நல்ல மனப் பயிற்சியைத்தான் பயில்கிறீர்கள்.

    ReplyDelete
  8. ஷன்முகப்ரியன் சார் சொன்ன மாதிரி, லீலே மட்டும் அல்ல. பகவான் ஸ்ரீ ரமணரும் விசார மார்கமாகச் சொல்வது இதைத்தான்!

    இது என்னுடையதா? இல்லையென்றால் கழித்துவிடு. இப்படி, ஒவ்வொன்றாகப்பார்த்துக் கழித்துக் கொண்டே போனால் நான் யார் என்பது, கழிக்க முடியாத ஒன்றாக நிற்கும் என்கிற "நேதி"(இல்லை) மார்க்கம்!

    ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமானது தான்! அதனால்தானோ என்னவோ, நான் இன்னும் ப்ரீ கேஜியைக் கூடத் தாண்ட முடியவில்லை!

    ReplyDelete
  9. //நீ முதல்ல ஒழுங்கா வீட்டு வேலையச் செய்யி, அப்புறம் பார்க்கலாம்!//

    இதுதான்... இந்த எண்ணம்தான் நம்மை ஆள்கிறது சிவா

    ReplyDelete
  10. //ஒருவேளை அப்படி கடைக்கு விற்றால் அதை தின்கிறவன் கதி//

    அப்ப அவரு தின்னா.. ஒன்னும் ஆகாதா?

    ReplyDelete
  11. //இதுக்கு நாம எதாவது பண்ணலாமா?//

    மனம் கேட்ட இந்தக் கேள்விக்கு அறிவு மறுமொழி சொல்லி இருக்கவேண்டும்; என்ன சொன்னது?

    ReplyDelete
  12. \\ஷண்முகப்ரியன் said...

    ஸ்ரீ ரமணரும் இதே வழிமுறையைத்தான் பயிலச் சொல்கிறார்,சிவா.
    நல்ல மனப் பயிற்சியைத்தான் பயில்கிறீர்கள்.\\

    இந்த வழிதான் சரியாகத் தோன்றுகிறது.,

    முதலில் நான் தெளிவானால்தான் எல்லாவகையிலும் மேம்படமுடியும். அதன் பின்னரே சமுதாயத்திற்கு எதைச் செய்தாலும் அது முழுமையாகவும், முழுவீச்சிலும் இருக்கும்.

    ReplyDelete
  13. கிருஷ்ணமூர்த்தி said...



    \\ நான் யார் என்பது, கழிக்க முடியாத ஒன்றாக நிற்கும்

    அதனால்தானோ என்னவோ, நான் இன்னும் ப்ரீ கேஜியைக் கூடத் தாண்ட முடியவில்லை!\\

    சரியான பாதையில் பயணம் செய்கிறோம், சீக்கிரம் வந்துவிடும் நம் இலக்கு :))

    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  14. \\கதிர் - ஈரோடு said...

    //நீ முதல்ல ஒழுங்கா வீட்டு வேலையச் செய்யி, அப்புறம் பார்க்கலாம்!//

    இதுதான்... இந்த எண்ணம்தான் நம்மை ஆள்கிறது சிவா\\

    மனதின் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

    மனதை சரி செய்வதன் மூலம் சமுதாயத்திற்கு உதவியாக இருக்க முடியும் என நம்புகிறேன்.

    சமுதாயத்தில் எல்லா வளங்களையும் பயன்படுத்தித்தான் நாம் வாழ்கிறோம், அந்த வளம் வற்றாமல் இருக்க வேண்டுமானால் நாம் வழங்கவேண்டும்.

    உடலை நன்றாக வைத்திருந்தால் அரசுக்கு என் மருத்துவ செலவு மிச்சம், அரசுக்கு பாரமாக இல்லை என நினைக்கிறேன்

    வாழ்த்துக்கள் கதிர்

    ReplyDelete
  15. \\கலையரசன் said...

    //ஒருவேளை அப்படி கடைக்கு விற்றால் அதை தின்கிறவன் கதி//

    அப்ப அவரு தின்னா.. ஒன்னும் ஆகாதா?\\

    நல்ல கேள்வி அப்போது எனக்கு தோன்றவில்லை, ஏன் என இப்போதுதான் யோசித்துப் பார்க்கிறேன்.

    மனம் சொல்கிறது, அவரு பொறுக்கினா கண்டிப்பா அவரே சுத்தம் பண்ணித்தான் சாப்பிடுவார் அப்படின்னு நம்புது,

    கிராமங்களில் செடிகளில் இருந்து பொறித்த காய்கறிகளில் எதையும் விடமாட்டார்கள்.

    ’அட அது என்ன பண்ணிப்போடுது போடு கொழம்புல’ என்றுதான் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    இந்தக் கேள்விக்கு மனம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே உண்மை..:))

    ReplyDelete
  16. \\அ. நம்பி said...

    //இதுக்கு நாம எதாவது பண்ணலாமா?//

    மனம் கேட்ட இந்தக் கேள்விக்கு அறிவு மறுமொழி சொல்லி இருக்கவேண்டும்; என்ன சொன்னது?\\

    மனதைக் கவனிக்கவே அறிவுக்கு பழக வேண்டிய சூழ்நிலை,

    ஆகவே மனதின் கேள்விக்கு உடனடியாக அறிவு கட்டளையிட இன்னும் அறிவைப் பழக்க வேண்டும்

    முயற்சிக்கிறேன் நண்பரே :))

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  17. //மனதின் ஓட்டங்களை கூர்ந்து கவனிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் அது மாறுகிறது, நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக்கொள்கிறது, பல்வேறு விசயங்களில் சமரசம் செய்து கொள்கிறது, நடிக்கிறது. கெளரவம் பார்க்கிறது, மானம், ரோசம், வெட்கம் பார்க்கிறது.//

    அதுதான் மனம். அதனால் தான், மனதை குரங்கென்றும் அழைக்கிறார்கள். சில சமயங்களில், நாம் செய்த தவறுகளையும் நமக்கு உறுத்தலாக சுட்டி காட்டுகிறது.

    பயிலுவோம் மனவளக் கலை.

    நல்ல பிதற்றல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அன்பின் சிவசு

    மனம் ஒரு குரங்கு - கண்டதையும் நினைக்கும் - கண்டதையும் கற்ப்னை செய்யும் - எண்ணங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை - பல எண்ணங்கள் நீர்க்குமிழி போல சடாரென மறைந்து விடும் - சில எண்ணங்கள் நம்மைப் படுத்தி எடுத்து விடும்.

    நாட்குறிப்பாக வலைப்பூவினில் பிதற்றுவதில் தவறில்லை - பலரும் பல கருத்துகள் கூற - எண்ணம் செம்மைப்படலாம் அல்லது அழியலாம்

    நல்ல முயற்சி நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete
  19. ரோஸ்விக் said...

    \\பயிலுவோம் மனவளக் கலை.\\ \

    பயின்றதை பின்பற்றுவோம்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. \\Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    நல்ல சிந்தனை\\

    நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  21. cheena (சீனா)

    \\எண்ணம் செம்மைப்படலாம் அல்லது அழியலாம்
    நல்ல முயற்சி நல்வாழ்த்துகள் சிவசு\\

    இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன் நண்பர் அன்பின் சீனா அவர்களே

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)