"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, March 30, 2009

வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்

ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு தூரத்து உறவினரின் பெண் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து அழைக்க உதவியாக, உடன் சென்றோம். ஒவ்வொரு வீடாக அழைப்பு, பத்திரிக்கை கொடுத்துக்கொண்டே வந்தோம்

ஒருவீட்டில் காபி,
அடுத்தவீட்டில் டீ,
அடுத்தவீட்டில் சுவீட்,காரம், காபி,
அதற்கடுத்த வீட்டில் பிஸ்கட்,காபி,
அதற்கடுத்த வீட்டில் தண்ணீர் மட்டும்
என வரிசையாக சாப்பிட வேண்டியதாகிவிட்டது.

இது போன்ற நிகழ்வுகளில் அன்றைய அடுத்தவேளை உணவை தியாகம் செய்து வயிற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என் வழக்கம்.

கடைசியாக சென்ற வீட்டில் எங்களுக்கு உணவு செய்ய சொல்லி சிக்னல் கொடுத்து விட்டார் எங்களுடன் வந்த உறவினர். எங்களை உபசரிப்பதாக நினைத்துக்கொண்டு. மணியோ ஏழுதான் ஆகிறது.

அந்த வீட்டுக்காரர் கோதுமை ரவை உப்புமா செய்யத் தொடங்கிவிட்டார். அன்போடு வேண்டாம் என்று மறுத்தும் கேட்கவில்லை. கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர். அவர்களின் மனநிலையைப் பற்றி சிறிது கூட சிந்திக்கவில்லை.

உப்புமாவிற்கு தயிர் பற்றாக்குறை, நன்கு புளித்த தயிரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு ஒரு வழியாக சமாளித்துவிட்டார்

சூழ்நிலைகள் தர்ம சங்கடமாக இருந்தபோதும் நாம்தான் ஜீரோ ஆயிற்றே. அமைதியாக ஏற்றுக்கொண்டு சாப்பிட்டு விட்டேன்.

சிந்தனை விரிந்தது.

என் வீட்டில் யார் பத்திரிக்கை கொண்டு, அழைப்பு சொல்ல வந்தாலும், தண்ணீர் மட்டுமே முதலில் தரவேண்டும் என்பது என் இல்லத்து அரசிக்கு நான் இட்டுள்ள அன்புக்கட்டளை. இதில் ’அவன் வீட்டுக்கு போய் பச்சத் தண்ணி கூட தரவில்லை’ என வருபவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதும் அடக்கம்.

அதன் பின்னர் அவர்களிடம் என்ன வேண்டும், எனக் கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உணவோ, டீயோ தரவேண்டும். அதுவும் ஒருமுறைக்கு மேல் கேட்கக்கூடாது.

உறவினர்கள் தன் அன்பை காட்டுவதாக எண்ணிக்கொண்டு, அவர்களும் திடீர் விருந்தாளிகளை சமாளிக்க சிரமப்பட்டுக் கொண்டு, வருபவர்களின் சூழ்நிலை அறியாமல், உபசரிப்பதை விடுத்து, சிரமப்படுத்தாமல் ”அவர்கள் இன்னும் பல இடங்களுக்கு போகவேண்டியது இருக்கும்.” என்பதை கருத்திற்கொண்டு அன்பாக நாலுவார்த்தை விசாரித்து அனுப்புலாம் அல்லவா?

இதிலும் சில வீடுகளில் சாப்பிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏற்கனவே சிறு பிணக்கு ஏதேனும் இருக்கலாம். நாம் பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது சாப்பிட்டால் சமாதானமும், சாப்பிடாவிட்டால் பெரும் பிணக்காக மாறும் நிலை இருக்கலாம். இதனால் பெரும்பான்மையாக மற்ற இடங்களில் தண்ணீரே சாப்பிட்டால்தான் சவுகரியமாக இருக்கும். வயதானவர்கள் உடல்நிலையும் இதில் முக்கியம். விசேசத்தின் போது மருத்துவமனைக்கு செல்லும் நிலை தவிர்க்கலாம்.

இப்ப சொல்லுங்க , நீங்க யார்? கேட்காமலே தண்ணீர் மட்டும் தருபவரா?
வருபவரை காபி,டீ,டிபன்,சாப்பாடு சாப்பிட வற்புறுத்துபவரா?

Saturday, March 28, 2009

தீ வெச்சு எரிச்சுடுவேன்..ஜாக்கிரதை

திருப்பூரில் பனியன் கம்பெனிகள் ஏராளம். பெரிய கம்பெனிகளில் செக்யூரிட்டி, அலுவலக கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனல் சிறிய கம்பெனிகளில் இவை ஏதும் அதிக அளவில் இருக்காது.

அதில் ஒன்று, வேலை நேரத்தில் பணியாளர்களை, வெளிஆட்கள் சந்திப்பது என்பது சிறிய கம்பெனிகளில் சாத்தியமான நிகழ்வு.

நண்பரின் நிறுவனத்திற்கு ஒருநாள் மதியம் சென்றுவிட்டு,பின்னர் வெளியே கிளம்பினேன். தரைத்தளம்,முதல் தளம் கொண்டது அக் கட்டிடம். வெளியே ஒரு நடுத்தர வயது திடகாத்திரமான, பெண் ஒருவர் , முதல் தளத்தில் உள்ள பெண் வேலையாளை பார்க்க வந்திருக்கிறார்.

அவர் கீழே நின்று கொண்டு, “என்னடா இது,கட்டிடத்தை இப்படி கட்டி வச்சிருக்காங்க.. நம்மால மேலவேற ஏறமுடியாதே..மூச்சு வாங்குமே..அந்தப்பெண்ணை கீழ இறங்கி வரச்சொல்லு..” என்று உயரே பார்த்து சப்தமிட்டுக் கொண்டு இருந்தார்...

இது நான் வெளியே கிளம்பிய தருணத்தில் கவனித்தது.

திரும்ப மாலைவேளையில் நண்பரின் கம்பெனிக்கு சென்றேன். அவர் முதல்தளத்தின் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ப்ளம்பருடன் ஈடுபட்டிருந்தார்.

கொஞ்சநேரம் கழித்து, கீழிருந்து மேனேஜர், ஒரு பெண், முதலாளியை கட்டாயம் பார்க்கவேண்டும் என வற்புறுத்தியதாக மேலேயே அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண் மதியம் நான் பார்த்த அதே பெண். யாரும்மா, என்ன வேணும்? என்று நண்பர் கேட்டவுடன்...

“கீழ இருக்கிறவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு, யாரவன், வேலைக்கு இருக்கிரானா, வாடகைக்கு இருக்கிரானா, தொலச்சுப்போடுவேன், போலிஸ்ல புடிச்சு கொடுத்திருவேன், ..”என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

“சரிம்மா, என்ன என்று விசாரிக்கிறேன்” என நண்பர் சொல்லச்சொல்ல, “போலீசுக்கு போவேன்’" என அந்த பெண் மீண்டும் சொல்ல, ”சரி போய்க்கோம்மா” என்று நண்பர் சொன்னார்.

அதற்கு அந்த பெண் ”தீ வைத்து எரிச்சிடுவேன், கம்பெனியே காணாமல்
போயிடும், ஜாக்கிரதை, அத்தனை பொருளையும் தீ வைத்து கொளுத்திவிடுவேன்” என்று சத்தமிட்டார்.

அருகில் இருந்த நான் அதிர்ந்தேன். நண்பரைப் பார்த்தேன்.

கட்டிடத்தின் உரிமையாளரான நண்பரோ, சற்றும் அசராமல் ”எங்கே கடைசியாக சொன்னதை இன்னொருமுறை சொல்லு” என்றார்.

அந்தப்பெண் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. ”என்னோடஇடத்தில் வந்து என் கட்டிடத்தையே தீ வைச்சிருவேன்னு சொல்றியா? பொம்பளைங்கிறதால தப்பிச்சிட்ட,” என்று நண்பர் குரலை உயர்த்த அந்தப்பெண் சட்டென கீழிறங்கி சென்றுவிட்டார்.

பின்னர் இதைப்பற்றி விசாரித்தேன். மதியம் அந்த பெண் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது
யாரைப் பார்க்க வந்தாரோ, அந்த பெண் பணியாளரிடம், உதவிமேனேஜர் அந்தப் பொம்பிளையை சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த விசயத்தை ஏடாகூடமாக அந்தப் பெண்ணிடம், இந்தப் பெண் பணியாளர்
சொல்லிவிட்டார். அதனால்தான் மாலை அந்த சம்பவம் நடந்தது.

இப்போ சில கேள்விகள் எனக்குள்...

ஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.

இந்த பெண் இப்படி பேசுமுன் யோசித்துத்தான் பேசுகிறாரா?

பேசினால் அதன் பின் என்ன விளைவு வரும் என உணர்ந்தாரா?

மதியம் படி ஏறமுடியவில்லை என்றவர் இரண்டுமாடி ஏறியது எப்படி?

மதியம் பேசியது அலட்டலா?

ஒரு நிறுவனத்தில் வந்து ஒருவரை சந்திக்கவேண்டும் என்றால் சுய ஒழுங்கு இல்லாமல் இப்படி எப்படி நடந்துகொள்ளமுடிகிறது?

இவரது குழந்தைகளை எப்படி வளர்த்துவார்? அவர்களின் எதிர்காலம் என்ன?

ஒருவேளை வருங்காலத்தில் மருமகள் எடுத்தால் அவளின் நிலை என்ன?

இதில் இரண்டு மகளிர் குழுவுக்கு தலைவியாம். அந்த மகளிர் எப்படி மேம்படுவர்?

ஒருவேளை ஏதேனும் அரசியல்’தொடர்பு’ இருந்தால்கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா?



இதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க
அனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை
எப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.

பெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது.

சாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்
தூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்

Friday, March 27, 2009

இந்த வீடியோவை பாருங்கள்....1





Super conductivity

This is an excellent demo of super conductivity. The liquid is liquid nitrogen. The disk is a magnet. The black block is the super conducting (SC) material (but becomes SC only below its critical temperature, somewhat higher than liquid nitrogen).

When warm, the block has no particular magnetic / electric properties. When cooled, it becomes a SC. One of the properties of a SC is that magnetic fields can be pinned in place in the SC.

A moving magnetic field generates eddie currents within conductors, and can be felt as a resistance to relative motion. In most materials, this current quickly decays due to electrical resistance. In SC, eddie currents do not decay, but instead will tend to hold the magnetic field in place.

நன்றி, மீண்டும் சந்திப்போம்

Wednesday, March 25, 2009

இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?

இன்றிலிருந்து இடது, வலது என்றெல்லாம் பிரித்து பார்க்கக் கூடாது. இதில் எந்த அரசியல் உள்குத்தும் கிடையாது.

இனிமேல் சாலையில் செல்லும் பொழுது இடப்பக்கம், வலப்பக்கம் எப்படி வேண்டுமானாலும் போகும்படி விதிகளை மாற்றவேண்டும்.

இடப்பக்கம் என்ன தாழ்ந்துவிட்டது. ஏன் எங்களை இடப்பக்கமாகவே போகச் சொல்கிறீர்கள்?
இரண்டு பக்கமும் ஒரே திசை நோக்கி போக அனுமதிக்க வேண்டும்.

பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.

நீங்கள் பாராட்டுதலுக்காக கை கொடுத்தாலோ, கும்பிட்டாலோ ப்திலுக்கு நான் காலை பயன்படுத்தினால் கோபம் கொள்ளக்கூடாது. கையைவிட கால் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது.

உணர்ச்சி வசப்படாதீர்கள். கோவி அண்ணாரின் கட்டுரையை படித்தவுடன் எழுதியது.

இனி என் கருத்துகள்

//வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// மூட நம்பிக்கைதான். கூடவே எது நம்பிக்கை, இதில் உள்ள உண்மைத்தத்துவம் என்ன? காலப்போக்கில் எப்படி மூடநம்பிக்கையாய் மாறியது என்று விளக்கினால் பொறுப்பான எழுத்தாக
அமையும்.

//அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// //வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை//.

வெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரியான வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை நோக்கம் ஆரோக்கியம். எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது. கவனக்குறைவாக கையை சுத்தப்படுத்துதலில் குறைநிகழும்போது, ஆரோக்கிய குறைபாடு நிகழாவண்ணம் த்டுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒருகையை குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்துவது. மாற்றிமாற்றி பயன்படுத்தினால்
என்ன விளைவு என்பதைப் பாருங்கள்?.

கால் பட்டவிதம் தற்செயலா, அல்லது தெரிந்தே, வேண்டுமென்றே பட்டதா என்பதை உணர்த்தும் செயற்குறிப்புதான், தெரியாமல் பட்டுவிட்டது எனக்காட்ட தொட்டு கண்ணில் ஒற்றுதல். இதில் என்ன மூடநம்பிக்கையை இருக்கிறது. குற்றமா இல்லையா என்பதல்ல, தெரிந்தா, தெரியாமலா என்பதே இங்கே முக்கியம்.

//இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.// எந்தப் பொருளுக்கும் பழக்கம் காரணமாக ம்ரியாதை கொடுப்பது பொருளற்ற செயல்தான். உணர்ந்து கொடுப்பதே சிறப்பு.

//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.

//மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார்.// இவர் யார் காலிலாவது விழுந்தால் அவர் காலை உயர்வாக மதிக்க விழுவார். நம்மைப் போன்றோர் அவர்களிடம் நாம் காட்டும் பணிவையும், உள்ளத்தில் உள்ள உயர்வை வெளிக்காட்ட வார்த்தைகள் இன்றி, சுருக்கமாக உணர்த்தும் செயற்குறிப்பாகவே விழுகிறோம்.

//கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.//

மாட்டுசாணியை வரட்டி தட்டியும், சாணிக்குழியில் சேர்த்து உரமாக்கியும்,வீட்டிற்க்கு பாதுகாப்பாக சுத்தம் கருதி வழித்தும் தான் மட்டமாக பயன்படுத்த தெரியும். சாணியை பிள்ளையாராக வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைப்பது சரிதானே? இதில் என்ன முரண்.?
முரணாகவே இருக்கட்டும் இதில் யாருக்கு என்ன நட்டம்?


//ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//
//ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது ?//

பிராமணர் வீட்டு ஒருவயது குழந்தை சரஸ்வதி படத்தின் மீது ஒன்னுக்கு போய்ட்டா அது ச்மூக ஒற்றுமைக்கு எதிரானாதா?

அவன் எதை அச்சிட்டான் என்று பார்ப்பதோடு, எந்த நோக்கத்துடன் அச்சிட்டான் என்று அறிந்துகொள்வது நல்லது. வெறுமனே படம் நன்றாக உள்ளது என அச்சிட்டு இருந்தால், அந்த படத்தின் சிறப்பை, உயர்வை தகுந்த முறையில் எடுத்துச் சொன்னால் தானாக எடுத்து விட்டுப் போகிறான்.

ஒருவேளை தெரிந்தே செய்திருந்தால், நம் எதிர்கருத்தை தெரிவிக்கலாம். மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம்.

எதை எப்படி பார்க்கவேண்டும் என்று தெரிந்தவரை சொல்லித்தராமல், சும்மா புறங் கூறுவது கோவியாருக்கு அழகல்ல.

Tuesday, March 24, 2009

தைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....

ஒரு ஜோக்

"தம்பி.. என்ன வேலை செய்கிறீர்கள்?"

"அப்பாவுக்கு உதவியாக, ஒத்தாசையாக இருக்கிறேன்."

"வெரிகுட், அப்பா என்ன செய்கிறார்?"

"சும்மா வீட்ல இருக்கிறார்"

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த இளைஞன் , 'தான் காலத்தை வீணாக்குகிறோம்' என்ற குற்ற உணர்வே இல்லாத இவன் எப்படி முன்னேற முடியும்?

நம் நிலைமையை சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன?

நம் குடும்பத்தின் நிலை என்ன?

வேலையில் கற்றுக் கொள்ளவேண்டியது என்ன?

முழுதிறனுடன் உழைக்கிறோமா?

வாய்ப்புகள் நம்மை தேடி வரும்படி நம்மை தகுதியாக்கி கொண்டோமா?

நம்முடைய சுயபொருளாதாரம் எப்படி இருக்கிறது?

இது போன்ற சின்னச் சின்ன கேள்விகள் உங்களுக்குள் பிறந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். விளக்கம் செயலுக்கு வரும்.

ஒன்றை மறந்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னதுதான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ.....பூட்டை விடச் சின்னது.

சரியான சிறிய சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளை திறந்து, பெரிய கதவையே சுலபமாக திறக்கலாம்.

எனவே சின்னச் சின்ன கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். அவை பெரிய பெரிய வந்த, வரப்போகும் பிரச்சினைகளை தகர்க்கும் சாவிகள்.

வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

நன்றி; சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலிலிருந்து.

Monday, March 23, 2009

டென்சன் இல்லாமல் வாழ.....

மன இறுக்கம் (TENSION) இல்லாமல் வாழ வழி என்ன?


உலகில் நல்ல மணமுள்ள பொருள்களும் உண்டு; கெட்ட நாற்றமடிக்கும், அழுகிய பொருள்களும் உண்டு.

அதுபோல் மனதினுள் வரும், ஏற்படும் எண்ணங்களுள் ஊக்கமும் இன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு. AFFECTIONATE THOUGHTS. பலவீனமும் துன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு INFECTIONATE THOUGHTS.

வீட்டினுள் செத்த எலி நாற்றமடிக்கிறது என்றால், அதை நாலுபேரிடம் காட்டிப் புலம்புவதாலோ, நினைத்து நினைத்து வருத்தப்படுவதாலோ, அதன்மீது வாசமுள்ள ‘செண்ட்’ அடிப்பதாலோ நாற்றம் போகாது; சிக்கல் போகாது. எலியை தூக்கிப் போட்டு விட்டு, இடத்தைக் கழுவிவிட்டால் தானாக நாற்றம் போய்விடும். இதுதான் சரியான வழி.

அதுபோல் மனத்துள் வரும் ஒவ்வாத எண்ணங்களை ALERGIC THOUGHTS இனங்கண்டு, எதுவாய் இருந்தாலும் இரக்கமின்றி, தயக்கமின்றி எடுத்து வெளியே எறியுங்கள். இறுக்கம் குறையும்; தானாக மன அமைதி வாய்க்கும்.

நன்றி. கவனகர் முழக்கம்.மே-2002

Saturday, March 21, 2009

கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

தினத்தந்தி--கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

படித்துப் பாருங்கள். படம் வரைந்தபோது அவரின் மனோநிலையை உணர முடிகிறதா என்று பாருங்கள்..

கடமையை, செயலை எப்படி செய்யவேண்டுமோ அப்படி முழுஈடுபாட்டோடு செய்தார்.

எதிர்பாராமல் செய்ததற்கு கிடைத்த பலனையும் பாருங்கள்.கிடைத்த பின்னும் அதே மனநிலையில் இருப்பதையும் பாருங்கள்.

இதுதான் கீதை சொல்வது.

ஓவியருக்கு பணம் கொடுத்தவரின் மனநிலையையும் உணருங்கள். அவர் இப்போதுதான்
செயலை செய்திருக்கிறார், நிச்சயம் பலன் கிடைக்கும்.

மனம் மட்டும் தரமும்,தகுதியும் ஆனால் வாழ்வில் கிடைக்கும் பலன்கள் அதிசயத்தக்கது.

மனதை மேம்படுத்துவோம், பாரம் குறைந்து பலன் அடைவோம்

Thursday, March 19, 2009

நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே

நமக்கு தெரிந்த விசயந்தான்,

0,1,2,3,4,5,6,7,8.............+ + + +
சைபருக்கு அடுத்த மதிப்பு கூடிக்கொண்டே போகும்

..........-5,-4,-3,-2,-1,0
சைபருக்கு முன்மதிப்பு குறைந்து கொண்டே போகும்.

சரி ஒரு சின்ன விளையாட்டு

-5,-4,-3,-2,-1,0,1,2,3,4,5 இதுதான் எண்வரிசை, நிரந்தர அமைப்பு, உண்மையானது.

மேலே சைபர் இல்லாமல் பத்து எண்கள் இருக்கிறாதா? உங்களை பொறுத்தவரை இதன் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லையே?

சரி நான் தான் சைபர், இப்ப நான் கடைசியில் வந்து நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை -10,-9,-8,-7,-6,-5,-4,-3,-2,-1,0.

சரி மீண்டும் நடுவில் நிற்காமல் முதலில் சென்று நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை 0,1,2,3,4,5,6,7,8,9,10

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்வரிசை, மாற்றமுடியாத உண்மை. சத்தியம்.

உங்களின் 0 வை நான் நிற்கும் இடத்தைப் பொறுத்து நான் எப்படி மதிக்கிறேன்,பார்க்கிறேன் தெரியுமா? முதலில் நிற்பதால் 5 ஆகவும், கடைசியில் நிற்பதால் மைனஸ் -5 ஆகவும் பார்க்கிறேன், என்னைப் பொறுத்தவரை இடம் மாற மாற மதிப்பும் கூடியோ, குறைந்தோ போகும்., உண்மையில் மாறுவதில்லை.

பல சமயங்களில், வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும், எழுத்திலும்,நடப்பவற்றை இப்படி மாறி நின்று நாம் பார்ப்பதால்தான் பிரச்சனைகளே உருவாகிறது. ஜீரோவாக நின்று பார்த்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்பது புரியும்.


புரியலை இல்லையா.....

சரி இந்தப் பதிவு

3 மிகமிக நல்லபதிவு
2 மிக நல்லபதிவு
1 நல்லபதிவு
0 பதிவு 0
-1 மொக்கை
-2 படுமொக்கை
-3 சூரமொக்கை

இதில் ஏதோஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

உண்மையில் இந்த பதிவு, ஒரு பதிவு அவ்வளவுதான். ஜீரோ . இதுதான் உண்மை

ஆனால் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாத் தோன்றுகிறது. இது தவறுமல்ல, அதே சமயம் உண்மையும் அல்ல.


இதே மாதிரி எல்லாபிரச்சினைகளையும் அணுகி பாருங்கள், அதனுடைய எல்லா கோணங்களும் தெரியும், சாதக பாதகங்கள் புரியும். சரியான படி முடிவெடுக்கலாம்

நான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், பலன் கிடைக்கிறது. நீங்களும் முயற்சித்து பார்த்து எந்த பலன் கிடைத்தாலும் பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். ஒருவேளை நான் புரிந்துகொண்டுள்ளது தவறாக இருந்தால் அதை புரிந்து கொண்டு மாற்றிக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

Tuesday, March 17, 2009

கடமையை செய்....... பலனை அனுபவிக்காதே

பதிவுலக நண்பர் கோவியாரின் தகவலின் பேரில் தோழர் சூர்யன் அவர்களின்
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்”
பதிவைப் படித்ததால் பதிலுக்கு இந்த பதிவு.

நமக்கு எளிமையாகத்தான் யோசிக்க வரும்.

நாலு வர்ணங்களும் ஆதியில் முழுக்க முழுக்க தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கி, குறிப்பிடப்பட்டது. இந்த தொழில் செய்வோர் இந்த வர்ணத்தினர் என நிர்வாக வசதிக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில், பின்னர் வந்த மக்கள் கூட்டம் பிறப்பின் அடிப்படையில் சாதியாக, வர்ணமாக அறிந்தோ, அறியாமலோ மாற்றிவிட்டது. அதையே நாமும் பிடித்துக்கொண்டு இருக்காமல், சாதி மத இன வேறுபாடுகள் இன்றி, மனிதனை மனிதனாகவே மதித்து அவனுடைய இன்பத்திற்கு உதவியும், துன்பத்தை நீக்கவும் நம்மால் இயன்ற அளவு உதவி செயல்பட வேண்டும் என்பதே என் முந்தய இரு பதிவுகளின் நோக்கம்.

கீதையின் கருத்துக்களின் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. கீதையை புரிந்து கொள்வதில் தவறு இருக்கலாம். அது படிப்பவரின் மனோநிலையைப் பொறுத்தது.

மாற்று மதத்தினரை, சாதியினரை இழித்தும், பழித்தும் பேசுவதால் என்னபலன்? அவர்களின் வெறுப்பை, பதிலடியை ஏன் நாம் சம்பாதிக்க வேண்டும்?இரு தரப்பினருக்கும் என்ன கிடைக்கப்போகிறது? இது அவசியமே இல்லை.

விசயத்திற்கு வருகிறேன்.

\\யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.\\-- இது சூரியனின் கருத்து.

கடமையை செய், பலனை எதிர்பாராதே என்றுதான் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே இக்காலத்திற்கேற்றவாறு நான் புரிந்துகொண்டவாறு சொல்லி இருக்கிறேன்.

இதில் கடமையை செய், பலனை அனுபவிக்காதே என்றா குறிப்பிட்டு இருக்கிறோம்? நண்பரின் பதிவில் இந்த தொனிதான் இருக்கிறது.

ஒன்றை எதிர்பாராமல் இருப்பது------ஒன்றை அனுபவிக்காமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது நண்பரே...

எதை செய்தாலும் அதற்கு நிச்சயம் விளைவு உண்டு. அதை அனுபவித்துதான் ஆக வேண்டும். இல்லையென்று நான் சொல்லவே இல்லை. உதாரணமாக என் முந்தய பதிவுக்கு பலனாக உங்கள் பதிவை நான் அனுபவிக்கிறேன், அதேபோல் தங்களின் பதிவுக்கு பலனாக என் பதிவை தாங்கள் அனுபவிக்கிறீர்கள்.

ஆனால் எதிர்பாராமல் இருப்பது என்பது, என் முந்தய பதிவை எழுதியபோது தமிழ் மணம் மகுடத்தில் இடம்பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து எழுதுவில்லை. விளக்கத்தை தெரிவிப்பதை என் கடமையாகவே செய்தேன்.

ஆனால் நடந்தது என்ன? தமிழ்மணம் மகுடத்தில் வாசகர் பரிந்துரையாக இரு நாட்களாக இடம் பிடித்துவிட்டது. இதுதான் எதிர்பாராமல் எழுதியதன் பலன். புரிகிறதா நண்பரே. இத்தனைக்கும் அடியேன் புதிய பதிவர்தான்.

வலையுலக நண்பர்களுக்கு நன்றிகள்.பதிவரைப் பார்க்காமல் பதிவின் உள்ளடக்கத்தை கவனித்து பாராட்டியதற்க்கு.

சாதரணமாக எதிர்பார்த்தால் சில பின்னூட்டங்களும், சற்று அதிக எண்ணிக்கையில் பதிவர் வருகையுமே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்த பலனோ மிகப் பெரியது.

’கடமையை செய், பலனை எதிர்பாராதே’ என்பதற்கு, பலனை எதிர்பார்க்காமல் சரியானபடி செயல்பட்டால், கிடைக்கவேண்டிய பலனைவிட அதிகமாக கிடைக்கும் என்பதற்க்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.

எதிலும் சல்லடைபோல் நல்லதை விட்டு அல்லதைப் பிடிக்காதீர்கள்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

Sunday, March 15, 2009

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்---தொடர்ச்சி

கோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம் கட்டுரை விமர்சனத்தின் தொடர்ச்சி

\\கீதை கர்மயோக பிரிவில் வருவது, செயல் தொடர்பான ஆலோசனை வழங்குவதே அந்த செய்யுளின் பொருள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் உனது செயலை ஆற்று என்பதே இதன் பொருள். மாறாக எதையும் செய்யாது இரு என்று சொல்லவில்லை. இந்த செய்யுள் ஊக்க மருந்து தான். எதிர்மறை பொருளில் புரிந்து கொள்வது பிழையே.\\

கீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்

\\பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை மட்டுமே, அதை எதிர்பார்பாக மாற்றி கிடைக்கும் என்று உறுதியாக இருந்து கொண்டு, இறுதி செயலில் எற்படும் தடை போன்ற புறகாரணிகள் உங்களால் முன்கூட்டியே தீர்மாணித்து தவர்க்க முடியும் என்றால் உங்கள் எதிர்ப்பார்ப்பு தகுந்த பலனைத் தரலாம். இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன, அவற்றை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனம் நம்மிடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?\\

இலக்கின் கடைநிலை சிதைவதற்க்கு ஒரு போதும் புறக்காரணிகள் காரணமாக அமைவதில்லை. எந்த ஒரு புறக்காரணமும் தானாக த்குந்த காரணமின்றி வருவதில்லை. நம் பரம்பரையாகவோ, நம் செயல்களால் சேர்த்துவைத்தவைகளே புறக்காரணமாக வரும்.
இதை அறிய எந்த தீர்க்கதரிசனமும் தேவையில்லை. அமைதியாகவும், ஆழமாகவும் சிந்திக்கும் ஆற்றல் மனதிற்கு வாய்த்தால் போதும்.

உதாரணமாக ஓட்டப் பந்தய வீரன் தான் பங்கேற்க்கும் பந்தயத்தில் முதலிடத்தில் வர வேண்டும் என்ற திடமான முடிவோடு தன் கடமையைச் செய்தால் கண்டிப்பாக முதலிடம் பெறுவான்.பலனை எதிர்பார்த்தபடி அடைவான்.

ஆனால் அவனே ஓட்டப்பந்தய நுணுக்கங்களை மிகச் சரியாக கற்றுத் தேர்ந்து,மிகத் துல்லியமாக ஓடிப்பழகி,பந்தயத்தில் பங்கேற்கும்பொழுது,நான் முதலாவதாக ஓடுகிறேனா? என்று சைடில் பார்க்காமல்,அல்லது பலனை எதிர்பார்க்காமல் ஓடினால் நிச்சயம் அவன் அந்த போட்டியில் முந்தய உலக சாதனையை முறியடிப்பான். முதலிடமும் கிடைக்கும், போனசாக உலக சாதனையும் கிடைக்கும்.
இதுதான் பலனை எதிர்பார்க்காது கடைமையை மட்டும் செய்தல். இதனால் அதிகபலன் உறுதியாக கிடைக்கும்.

ஒருவேளை புறக்காரணங்களினால் அவன் காலில் சுளுக்கு ஏற்படலாம். அடுத்தவன் குறுக்கே வந்து விழலாம். இது அவனைப் பொருத்தவரை தோல்வியில் முடியும். புறக்காரணங்களுக்கும் நம் செயல்களுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. எந்த தகுதி வாய்ந்த வீரனையாவது குறுக்குவழியில் ஒதுக்கி வந்திருப்பான். அதன் தாக்கம்தான் புறக்காரணமாக அமைகிறது.-----—இதன் மறுபக்கமாக இரண்டாவதாக வரவேண்டியவன் முதலாக வந்திருப்பான். அவனைப் பொறுத்தவரை புறக்காரணம் ஒன்றினால் அவனுடய போட்டியாளன் விலக்கப்பட்டது நன்மைதானே. இதற்கும் அவன் முன் செய்த செயல் ஒன்று காரணமாக இருக்கலாம். ஏதேனும் ஒரு ஜூனியருக்கு சில டிப்ஸ், உடைகள் கொடுத்திருக்கலாம். அதனால்கூட முதலில் வந்திருக்கலாம். இங்கு அவன் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ததாகவே நான் உணர்கிறேன்.

\\’இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன’\\ என்று ஏன் ஒரு தலைப் பட்சமாக சொல்கிறீர்கள்.? இரண்டாவது நபருக்கு முழுக்க நன்மைதானே விளைந்திருக்கிறது. ஆக செயல்திருத்தம் வந்தால் புறக்காரணங்கள் நன்மையே தர வைக்கமுடியும். இதை உணர்ந்து செயல்படுவதே கடமை.

\\kannabiran, RAVI SHANKAR (KRS) 9 \\உண்மையான பொருள் என்னான்னா
கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது, பலனை எதிர்பாராதே! எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான்! ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம்! ஆனா அந்தச் செயலைச் செய்யும் போது...செய்து கொண்டிருக்கும் போதே, பலன் வந்துருமா, வந்துருமா-ன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தா காரியம் தான் சிதறும்!

அதான் முடிவு எப்படி இருக்குமோன்னு யோசிக்காது, செயலை மட்டும் செய்-ன்னு சொல்லப்பட்டது!\\

KRS பாதியளவு சரியாகவே சொல்லி இருக்கிறார். நன்றி
கோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.

மீண்டும் சந்திப்போம்,சிந்திப்போம்

கோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்கள்

கோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகளில்

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்

என்ற பதிவைப் படிக்க நேர்ந்தது. சில கருத்து இடைவெளிகள் இருப்பதாக மனதிற்கு தோன்றியது அதாவது பலவிஷயங்களில் அவர் சரியாக இருந்தாலும், சில இடங்களில் மட்டும் எடுத்துச் சொல்லியவிதம், கோணம் பொருந்தவில்லை. இதை நான் மேலோட்டமாகவே அணுகி இருக்கிறேன்.

//எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட வாய்புகள் உண்டு பலனை எதிர்பாராமல் செய்யும் இலக்கு நோகிய பயணத்தில் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி, இல்லை என்றாலும் முயற்சித்தோம் என்ற மன நிறைவு கிடைக்கும்" - என்பதை மேற்கண்ட கீதை வரிகளினால் புரிந்து கொண்டேன்.//----இது கோவியாரின் புரிதல்.

கடமையை செய், பலனை எதிர்பாராதே.. என்ற வரிக்கு நேரடியாக அர்த்தம் சொல்வதை விட்டுவிட்டு எதிர்பார்க்காமல் இருந்த பின்னர் ஏமாற்றம் வந்தால் நடப்பவற்றை, அப்போது மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லிஇருக்கிறார்.

SP.VR. SUBBIAH--//‘கடமையைச் செய் !உன் விருப்பப்படி பலனை எதிர்பாராதே' என்பது சரியாக இருக்கும் என்று சிற்றறிவு சொல்கிறது.//

--’உன்’ என்ற வார்த்தைக்குப் பதில் வேறு எந்த வார்த்தையை போடுவது என நம்மை குழப்பிவிட்டார்.

TBCD--//திட்டமிட்ட செயல் என்பது பலன் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதே ஆகும். வருவது வரட்டும் என்று வியாபாரம் செய்ய முடியாது..//.

-----அறிந்தே செயல்படுங்கள்..இவரை ’கடமையை செய்,பலனை எதிர்பாராதே’ என்கிற வாக்கியத்தில். அறியாமல் செயல்படுங்கள் என்ற பொருள் கொள்ளச் செய்தது எந்த வார்த்தை..?

கோவி அண்ணன் பின்னூட்ட விளக்கங்களில் இருந்து.....
//’கோவி……//முதலில் எதெல்லாம் கடமை? அதுக்கு என்ன வரையறை? //

கடமை என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட செயலில் / இலக்கில் நாம் ஆற்றவேண்டிய பங்கு. நம்மீது உள்ள பொறுப்புகள், நாம் செய்யவேண்டியவை என்று தீர்மானித்துக் கொள்பவை ஆகியவற்றில் நாம் செயாலற்றுவதற்கு முனைவதே கடமை’.//

(கோவி கருத்தில் உணர்த்தப்படாதது----செயலாற்றுமுன் முழுமையாக உணர்வது,புரிந்து கொள்வதும் கடமையின் முக்கியமான பகுதி இதை விட்டுவிட்டதால்தான் குழப்பமே.)

’//எதைச் செய்தாலும் வெற்றியை மட்டுமே இலக்காக்கக் கொண்டு செய்யாமல் இலக்குக்கு தேவையான கடமையை சரியாக செய்யுங்கள் என்று சொல்வதாகத்தான் புரிந்து கொள்கிறேன்.’// --கோவி

மேலோட்டமாகவோ, தவறாகவோ புரிந்துகொண்டு அதை உணராமல், என்ன புரிந்ததோ அதை சரியாக செய்யவேண்டும் என கொள்வதா?...

’//எந்த ஒரு செயல் வெற்றி அடைவதற்கும் அது சரியாக செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்பது முதன்மையான விசயங்கள் மட்டுமே, அதில் வெற்றி என்பது புறகாரணிகளையும் உள்ளடக்கியது.

நீங்கள் நாளை செய்ய வேண்டியதை இன்றே கூட தொடங்கிவிட்டீர்கள், விடியும் போது அதன் தேவையே கூட இல்லாமல் போக வாய்ப்புண்டு, அது போன்ற நேரங்களில் செய்ததெல்லாம் வீன் ? என்று அலுத்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வீர்கள் ? எல்லாம் விதி என்று தானே சமாதனமடைவீர்கள் அல்லது முதிர்ச்சியுடன் செய்யவேண்டியதை சரியான நேரத்தில் தான் செய்தேன், ஏனோ அதன் தேவை இல்லாமல் போய்விட்டது என்று சமாதனம் அடைவீர்கள்.//.--கோவி

திரும்பவும் வேதாளம் முருங்கைமரத்தில்...

உதாரணத்த்ற்க்கு தயிர் புரைஊற்றுவது ஒரு நிகழ்வு கோவி அவர்களின் பாணியில் நம் கடமை, நம் பங்கு நன்கு காயவைத்து சிறிது தயிர்சேர்த்து புரை ஊற்றுவது. அதன்பின் பூனை வந்து குடித்துவிடுவது, காரணம் தெரியாமல் கெட்டுப்போவது என்ற புறக்காரணிகளால் இந்நிகழ்வு நடக்காமல் போகலாம்.இதற்கு மனதை தயார்படுத்தி, சமாதானம் அடையுங்கள் என்கிறார்.

இவர் தன் பங்கையே முதலில் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்கிறேன்.

பாலைவாங்கியவுடன் அதன் தரத்தை சரியாக பரிசோதித்து நல்லபால் என்பதை உறுதி செய்து, நன்கு சுண்டக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டுக்கு வரும்வரை பொறுத்திருந்து, அளவாக தயிர்கலந்து புரைஊற்றி, அதன்பின் அடுக்களையின் இதமான சூட்டில் வைத்து, பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்ற தன் கடமையை முழுமையாக இவர் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தரமான தயிர் கிடைக்கும்.

இந்த தன்மைதான் கடமையை உணர்வது.முதலில் உணர்ந்து, பின் அதன் வழிமுழுமையாக கடமை செய்வது அவசியம். அதாவது செயலைக்கு முன்னதாக சரியாக எதையும் விட்டுவிடாது புரிதலே முக்கியம்.

இதில் விதி எங்கிருந்து வந்தது.....? எதற்காக மனதை சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டும்..? நம் இயலாமைக்காகவா..?

சரியாக கடமையைச் செய்தால் சரியான பலன் மிக நிச்சயமாக கிடைத்தே தீரும்.இதுதான் விதி என்பது. இந்த பலனை எதிர்பார்க்கவேண்டியதே இல்லை. கிடைத்தே தீரும். இதுதான் கடமையை செய், பலனை எதிர்பாராதே என்பது.


பதிவு தொடரும்.......

Saturday, March 14, 2009

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்.......

தவறு செய்வது மனித இயல்பு. . ஆனால் அதற்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கி அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுஅல்ல. ஆனால் வழக்கத்தில் இருப்பது இதுதான்.

அதேபோல் தன் தவறுகளை நியாயப்படுத்துவத்தில் எந்தப் பயனும் இல்லை. தற்காலிகப் பலன் இருக்கலாம். அது முன்னேற்றத்திற்கு உரியதாக இருக்காது. மனம் ஒரு தவறுக்கு ஏதாவதுஒரு சமாதானத்தைதான் எப்போதும் சொல்லும். அதனால் யாரும் தன் தவறை, குறைபாடுகளை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

நாமாக நடக்கும்போது கல்லில் மோதி விட்டு, ‘கல் இடித்துவிட்டது’ என்கிறோம். கல்லை இந்த நிகழ்வுக்கு பொறுப்பாக்கி நாம் தப்பித்துக்கொள்கிறோம்.இதே போலத்தான் ’முள் குத்திவிட்டது’ ‘செறுப்பு கடித்துவிட்டது’ என்பவையெல்லாம்.

இப்படி உயிரற்ற பொருட்கள் சம்பந்தபடும்போது, அது நம் குணத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அமையும். ஆனால் மனிதர்கள் சம்பந்தபடும்போதுபிரச்சனை ஆரம்பிக்கிறது. சண்டை, கருத்துவேறுபாடு, என மனித உறவுகள் இனிமை கெடுகிறது.

"இந்த செயலை இப்படி செய்திருக்கவேண்டும்.உன்னால்தான் கெட்டுப்போச்சு...."

என தவறை பிறர்மீது சுமத்தி தாக்குதலை தொடங்கி வைப்போம்.

நாம் கண்காணித்து வழிகாட்டி இருக்கவேண்டும். அல்லது முதலிலேயே தகுந்த ஆலோசனை கூறியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு தவறை பிறர் மீது சுமத்துவதால் என்ன பலன்..?.

முடிவை அமைதியாக ஏற்று, இழப்பையும் தாங்கிக்கொண்டு, இதிலிருந்து தேவையானதைக் கற்றுக்கொண்டு அடுத்தமுறை தவறில்லாமல் செயல்படவேண்டும்.

தவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறபோதே அந்த தவறின் தன்மை மறைந்துவிடுகிறது. ஏனென்றால், அதற்கு அசாத்தியத் துணிச்சலும், பரந்த மனப்பான்மையும் தேவைப்படுகிறது. இதுவே ஆன்மபலம் . இவை நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

நாம் தவறு செய்வது இயற்கை ஆனால் எப்போது ’தவறு’ என்று உணர்ந்து, ஏற்றுக் கொள்கிறோமோ அந்த நொடியிலேயே அத்தவறில் இருந்து நாம் விடுதலை அடைகிறோம். இதற்கு ஒரு ஆழ்ந்த சுயபரிசோதனை தேவைப்படுகிறது இதைத்தான் introspection என்கிறோம்.

என்ன படிச்சிட்டீங்களா? எவ்வளவு நாளைக்குத்தான் வெளியிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது?

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்.......

மீண்டும் சந்திப்போம்.

நன்றி: கருத்து-இறையன்புவின் ஏழாவது அறிவு- நூலில் இருந்து

Friday, March 13, 2009

பணமும் கடவுளும்

"பணத்தைக் கொடுப்பவன் கடவுளே என்கிறீர்,
படைத்தவன் மனிதனே, கொடுப்பவன் கடவுளோ?"

- வேதாத்திரி மகான்


நாம் பேச்சுவாக்கில் ”எல்லாம் கடவுள்
கொடுத்தது” என்று சொல்லுவோம்.
சில சமயத்தில் உபசாரத்திற்காகவும், சில சமயம்
உண்மையாகவும், சில சமயம் அடக்கி வாசிப்பதற்காகவும்
உபயோகப்படுத்துவோம்.
முயற்சி செய்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
கருத்தை வலியுறுத்துவதே இந்த கவி.
கூடவே கடவுள் சிந்தனையை விரிவாக்க வேண்டிய
அவசியமும் உள்ளடக்கி உள்ளது.

நன்றி; ஞானக்களஞ்சியம். வேதாத்திரி மகானின் கவிதைத் தொகுப்பு

Thursday, March 12, 2009

மயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....


அடுத்தது என்ன...? என்ற திகிலுடன் பார்த்த படம் இது.

உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்களேன்

Wednesday, March 11, 2009

சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே

மனதளவில் நாம் தனிஆள் அல்ல. மிகப் பெரிய கூட்டம்.

நம் பெற்றோர், மனைவி--(சிலருக்கு மனைவிகள்) கணவன், காதலி,பிள்ளைகள், சொந்த பந்தங்கள், சுற்றத்தார், சுற்றியுள்ள குடித்தனக்காரர்கள்,மேலதிகாரி, முதலாளி, சகதொழிலாளி, நண்பர்கள், விரோதிகள், நமக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், கடன்காரர்கள்,எழுத்தாளர்கள், நடிகர்கள்,நடிகைகள் ... இப்படி பல்லாயிரக் கணக்கானோர்கள் நம் மனதினுள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படி தொண்ணூறு சதவீதம் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு. போனால் போகிறது என்று பத்து சதவீதமே நமக்கு.

முதலில், மனதில் உள்ள இந்த சந்தைகடை இரைச்சலை நிறுத்தவேண்டும்.

இதில் நம் குரல் எங்கே? எது? என கண்டுபிடிக்க வேண்டும்.

நம் மனதிற்கும் நமக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொள்ள,நம் மனம் நம்மைப் பற்றி உண்மை சொல்ல அனுமதிக்கவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளும் துணிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, ஓர் அழகிய இளம்பெண்ணும், ஆணும் கைகோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு தெருவில் செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
நம் மனம் அவர்களை பார்த்தவுடன் அவர்களை வெறுக்கும்; வாய்ப்பிருந்தால் வெளிப்படையாக கண்டிக்கவோ, கிண்டல் செய்யவோ தூண்டும்.

இதற்கு என்ன காரணம்?

உண்மையான காரணம் “இவ்வளவு அழகான பெண்ணுடன் இவன் சுற்றுகிறானே... நம்மால் முடியவில்லையே.... என்ற ஆதங்கமும் பொறாமையுமாகவுமே இருக்கும். ஆனால் மனம் வெளியே காட்டும் நடிப்பு, “இப்படி அலைந்தால் சமுதாயம் என்ன ஆகும்? ஒழுக்கம் கெட்டு விடாதா? என்பது போன்ற போலி சமுதாய அக்கறையாக இருக்கும்.

இது போன்ற உண்மைகளை உணர்ந்தால், உரிய பயிற்சிகளை மேற்கொண்டு மனதை செம்மைப்படுத்தி, சிறந்த நோக்கத்தோடு செயல் புரிய வைக்கமுடியும்.

எனவே, நம் மனம், நம்மிடம் உண்மை பேச வசதியாக இரைச்சலை குறைக்க வேண்டும். மனதோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.இதற்கு பல்வேறான எண்ணக் குறுக்கீடுகளை தடுக்கவேண்டும். அதற்கு எண்ணங்களை பின்னால் விரட்டிப் பழக வேண்டும்.

ஏதோ ஒன்றை படிக்கிறோம், அல்லது வேலை அல்லது பயிற்சி செய்கிறோம்; மனம் அதை விட்டு விலகி வேறு எங்கோ போய்விட்டது என வைத்துக் கொள்வோம். உடனே நம் சிந்தனையைப் பின்னோக்கித் திருப்ப வேண்டும்.

எந்த இடத்தில் விலகியது? எந்த குறுக்கீட்டால் விலகியது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடித்தபின் பயனுள்ள காரணத்திற்காக விலகியிருந்தால் பாராட்டிவிட்டு, மீண்டும் பழைய வேலையில் ஈடுபடுத்தவேண்டும். தேவையற்ற காரணத்திற்காக விலகியிருந்தால், இப்படி போகாதே என கண்டித்துவிட்டு, மீண்டும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுத்தவேண்டும்.

இப்படி தொடர்ந்து, விடாமல் கவனிக்கத் தொடங்கினால், நம் மனதினுள் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்.

கண்காணிப்புடன் இருக்கும் முதலாளியிடம், வேலைக்காரன் ஒழுங்காக பணியாற்றுவது போல் மனம் விலகி சென்று அலையும் குறைந்து போகும். நம் கட்டளைக்கு கீழ்படிய ஆரம்பிக்கும்.

முடிவில் மனம் ஒரு வேலையிலிருந்து தப்பித்துச் செல்லும் வினாடியிலேயே,அதை கையுங் களவுமாகக் கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு alertness, நமக்கு வந்துவிடும். அப்புறம் இந்த சந்தை இரைச்சல் தானாகக் குறைந்துவிடும்.

நடப்பில் மட்டும் மனம் ஈடுபடும்.அமைதி ஆட்கொள்ளும். ஆற்றல் வளரும்.
முயற்சி செய்து பாருங்களேன்.



நன்றி; நினைவாற்றல் வளர...புத்தகத்திலிருந்து
நன்றி:கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம்.

Monday, March 9, 2009

தும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்

உடல் நலம், மனநலம் நன்றாக இருந்தால் நாம் சிறப்பாக செயல்படமுடியும். நமக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, சமுதாயத்திற்க்கு பாரம் இல்லாமல் இருக்கமுடியும். இருக்கவேண்டும். அதாங்க, மருத்துவமனைக்கு அன்றாடம் செல்வது நமக்கு தேவையா? அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்,வலியை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

சரி வழிதான் என்ன? எண்ணெய் கொப்பளித்தல் !!!

எப்படி செய்வது?

தரமான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் சுமார் 15 மில்லி,வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.விழுங்கி விடாமல் வாயிலியே வைத்துக் கொள்ளுங்கள். பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக, மெதுவாக, வாயில் சப்பியவாறு,,வாய் முழுவதும் கலந்து திரியும்படி, வாய் வலிக்காமல் ஒரே சீராக கொப்பளியுங்கள். தாடை சற்று உயர்ந்தே இருக்கட்டும். தொண்டைக்குள் செல்லாமல், பற்களின் இடை வெளிகளுக்கு உள்ளாக எண்ணெய் சென்று வருமாறு பத்து முதல் பதினைந்து நிமிடம் கொப்பளியுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்து, ஐந்து நிமிடத்தில் எண்ணை நீர்த்து, நுரைத்து,வெண்மையாகி, கனம் குறைந்து எளிதாக பல் இடுக்குகளில் அலைந்து திரியும். பத்து நிமிடத்திற்க்கு பின் துப்பி விடுங்கள். பிறகு வாயை நீரால் நான்கைந்து முறை கொப்பளித்து தூய்மை செய்யுங்கள்.

என்ன பலன்?

இப்படி செய்வதால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கேடு விளைவிக்கும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. விடியற்காலை,பல் தேய்த்த உடன், எண்ணெய் கொப்பளிப்பது சிறப்பு. அவசியமானால் மூன்று வேளையும் காலிவயிறாக இருக்கும்போது செய்யலாம். இதை நான் ஒரு மாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து உடல்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைத்ததால்தான் எழுதுகிறேன்.செய்து பார்த்து பலன் அடைந்தால் அதை பின்னூட்டம் இடுங்கள்.

நன்றி:வியத்தகு எண்ணெய் மருத்துவம். தமிழில்:கோ.கிருஸ்ணமூர்த்தி செல்வி பதிப்பகம்

நன்றி: எண்ணை கொப்பளித்தல், தாமோதரன். மனவளக்கலை பேராசிரியர், அன்புநெறி வெளியீடு திண்டுக்கல்

டிப்ஸ் உதவி: கவனகர் இராம.கனக சுப்புரத்தினம்

மெகா டி.வியில் காலை 7.30 முதல் 7.40 வரை பேசுவதை கண்டு பயன் பெறுங்கள்.

Sunday, March 1, 2009

லெப்ட்... ரைட்... லெப்ட்...ரைட்...

லெப்ட்... ரைட்... லெப்ட்...ரைட்

ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பின்போது கேட்கும் ஒலி. இதை இதுநாள்வரை ஒழுங்காக ஒரேசீராக நடைபயில கொடுக்கப்படும் குரலாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.

பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் நினைவாற்றல் வளர புத்தகம் படித்தபொழுது முழுவிளக்கம் கிடைத்தது.

”கட்டளைக்குக் கீழ்படிந்து நட” இதை பழக்கிவிட்டால் போதும்.நடக்கச் சொன்னால் நடப்பார்கள்;நிற்கச் சொன்னால் நிற்பார்கள்;பதுங்கச் சொன்னால் பதுங்குவார்கள்; பாய சொன்னால் பாய்வார்கள். தூக்கத்திலும் கூட அதே ஆயத்தநிலையில் இருப்பார்கள்.
உடலுக்கு தரும் இதே பயிற்சியை மனதிற்க்கு கொடுத்தால் நம் சொன்னபடியெல்லாம் மனம் கேட்க ஆரம்பித்துவிடும். அதைத்தான் ‘மந்திரப் பயிற்சி’ என்கிறோம்.
ஓம் முருகா ஓம்
ஓம் நமசிவாய…
ஓம் நமோ நாராயணாய..
இயேசுவே…
நபியே…..
இதில் மதம் முக்கியமில்லை. இது போன்று எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும்
அமைத்துக் கொள்ளுங்கள். ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம் அதை சொல்லிப்
பழக்குங்கள்.
இதற்கு மதமும் தடையல்ல, மொழியும் தடையல்ல
பேருந்தில் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.சிந்திப்பதற்கு ஏதும் உருப்படியான செய்தி இல்லையென்றால், உடனே “ஓம்……….” போன்ற மந்திரங்களை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.
படுக்கையில் படுத்து, தூக்கம் வராமல், மனம் அலைகிறதா? உடனே ஆரம்பித்துவிட வேண்டியதுதான். மனம் கட்டுக்குள் வரும்.
மனதை கட்டுப்படுத்துவதன் ஒரு கட்ட பயிற்சியே இது.

மிகச் சரியான விளக்கமாக என் மனதில் பதிந்தது