"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, April 30, 2009

ஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1

தெய்வத்தைப் பற்றிய கருத்து

தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்

தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்

தெய்வ மென்று கும்பிடுவோன் பக்தன், அந்தத்

தெய்வத்தையறிய முயல்வோனே யோகி,

தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம், அத்

தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்

தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே

தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன் காணீர்


--வேதாத்திரி மகரிஷி


டிஸ்கி
: மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஞானக்களஞ்சியம் என்ற பாடல் தொகுப்பு நூலில் இருந்து அவ்வப்போது சில (தேர்ந்தெடுக்கப்பட்ட) பாடல்கள் இத்தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்படும்.

டிஸ்கி குன்னூர் போகலாம் வர்றீங்களா?

Tuesday, April 28, 2009

பெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு !

”கடவுள் இல்லை, வேதங்களை கொளுத்து, விநாயகர் சிலைகளை உடை’... ”என்பது போன்ற முழக்கங்களை ஒருபுறம் எழுப்பினாலும் மறுபுறம், ஏதேனும் ஓர் உயர்ந்த ஒழுக்க நெறியையும் மக்களுக்குக் காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் தந்தை பெரியார் உள்ளத்தில் இருந்தது.

அதனால் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திராவிடர் கழக மாநாடு நடத்தும்போதெல்லாம் அதற்கு முதல்நாள் திருக்குறள் மாநாடு என ஒன்றை நடத்தித் திருக்குறளின் சிறப்புகளை அறிஞர்கள் வாயிலாகக் கூறச் சொல்லிக் கேட்க வைத்தார்.

வள்ளல் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கை பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு முறை வடலூர் சென்று சத்திய ஞானசபையை பார்க்கவேண்டும். அவரது கொள்கைகள் குறித்து விளக்கம் கேட்கவேண்டும் என விருப்பம் கொண்டார்.

அதன்படி ஒருமுறை தம் தொண்டர்கள் புடைசூழ வடலூருக்கு வந்துவிட்டார். சத்திய தருமச்சாலையின் அணையா அடுப்பையும், அங்கு நிகழும் அன்னதானப் பணிகளையும் பார்த்து முடித்தபின் சத்தியஞானசபையைப் பார்க்கவேண்டி அந்த வாசலுக்கு வந்தார்.

உடன் வந்தவர்கள் எல்லாம் ’திமுதிமு’வென்று ஞானசபை வளாகத்திற்குள் புகுந்துவிட்டனர். ஆனால் தந்தை பெரியாரோ பொறுமையாக ஞானசபையின் வெளியே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ச்சி செய்தபடி வாசலுக்கு முன் வந்தார்.

வந்தவர் ஞானசபையின் வாசலில் உள்ள கல்வெட்டில் இருந்த வாசகத்தைத் தம் மூக்கு கண்ணாடியை தூக்கிப் பிடித்தபடி படித்தார். அதில்,

’கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே செல்லவும்

என்ற வாசகம் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றிருந்தது. உடனே வழிகாட்டியாளராய் அருகில் நின்றிருந்த ஊரன் அடிகளாரிடம்,”இது என்ன?” என்று கேட்டார் பெரியார்.

"கொலை செய்யாதவர்கள், புலால் உண்ணாதவர்கள் மாத்திரம்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று அய்யாவே எழுதச் சொன்ன வாசகம்” என்று ஊரன் அடிகள் பதில் சொன்னார்

”அப்படியா? அப்ப உள்ளே செல்லும் அருகதை எனக்கில்லை. ஏனென்றால் நான் புலால் உண்ணுபவன்” என்று கூறியபடி அய்யா உள்ளே நுழையாமல் திரும்பினார்.

உடனே ஊரன் அடிகள் ”அதனால் ஒன்றும் தவறில்லை அய்யா. எழுதிப் போட்டிருக்கிறதே தவிர யாரும் அதைப் பின்பற்றுவதில்லை. பேரறிஞர் அண்ணா,கலைஞர் என எல்லோருமே வந்திருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்த்திருக்கிறார்கள்.” என்று கூறினாராம்.

உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம். அவர் வாழும்போது அவர் கட்டளையை அவரது ஒப்புதலுடன் மீறினால் கூடத் தவறில்லை. அவர் இல்லாதபோது அவரது கட்டளையை மீறுவது அறிவு நாணயம் இல்லை. அத்தகைய தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியபடி சத்திய ஞானசபையை பார்க்கமலேயே புறப்பட்டு விட்டாராம்.

இந்த நிகழ்ச்சியை கோவை ஆர்.எஸ்.புரம் மரக்கடை வசந்தம் அய்யா
கூறியதாக கவனகர் முழக்கம் ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பெரியார் ஒரு உதாரணம். அவர் வழி வருபவர் எப்படி இருக்கக்கூடாது, அல்லது தலைவர் கடைபிடிப்பது பின்னர் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதற்க்கு இந்த விஷயத்தில் மட்டும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் பிற ஆன்மீக அன்பர்கள் உதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்க்கு இந்நிகழ்ச்சி ஓர் நல்ல உதாரணம்.

நன்றி: கவனகர்முழக்கம் ஏப்ரல் மாத இதழ்

Monday, April 27, 2009

கடவுளும்..நல்ஒழுக்க உறவும்..அன்பான உறவும்

‘கடவுளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வார்!’

என்னும் மூன்றாம் வகை உறவே நல்ஒழுக்க உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலதேவர் போன்ற மகான்களே இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளைப் பற்றிப் பேசவில்லை; புகழவில்லை; கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்த உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்யம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை உள்ளிட்ட சகல நல் ஒழுக்கங்களையும் கடுமையாய்ப் பின்பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டு கொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களைக் கண்டுகொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.சமாதியும் வாய்த்தது. இந்த வழி போற்றுதலுக்குரிய வழி. தாரளமாய் இந்த வழியில் நாம் பயணிக்கலாம்.

நான்காம் வகை ; அன்பான உறவு

‘கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர், கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் !’

என்னும் நான்காம் வகை உறவே அன்புவழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தடிகள், சைவ நாயன்மார்கள், சித்தர்கள் எனப் பலரும் பின்பற்றிய உறவு இது.கடவுள் விரும்பும் அனைத்து நல் ஒழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்து உயர்வடைந்தவர்கள். அதே வேளையில் கடவுளைப் புகழ்ந்து போற்றிப் பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.

’திருநீறு வர வைக்கிறேன். எலுமிச்சம்பழம் வர வைக்கிறேன்’ என்பதுபோல் அல்ப சித்துக்களைக் காட்டிப் பாமரர்களை ஏமாற்ற மாட்டார்கள்.

’என்னிடம் பணம் கட்டிப் பாதபூஜை செய்தால் வினைகள் தீர்ந்துவிடும்’ என்பதுபோல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்

’தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் !’ என்பது போல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள்.

‘நின் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்குப்போல் அடக்கமாய், எளிமையாய், மறைவாய், தனியாய் வாழ்வார்கள்.

இருப்பதில் உயர்ந்த நிலையை எய்தும் வல்லமை இவர்களுக்கே உண்டு. இவர்களை பின்பற்றுவோர் தாரளமாய் கடைத்தேறலாம்

இந்த நால்வரில் நீங்கள் யார் ?

நீங்கள் யார் என்பதையும், எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உணருங்கள். யாராக வேண்டுமானாலும் மாற உங்களுக்கு உரிமையும் தகுதியும் சுதந்திரமும் உண்டு முடிவு செய்யுங்கள் செயல்படுங்கள்.

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

Friday, April 24, 2009

கடவுளும்....வியாபார உறவும்...

“கடவுளை இவர்கள் கண்டு கொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை!”

என்னும் இரண்டாம் நிலை உறவே வியாபார உறவு.

இது ஆன்மீக வியாபாரிகளிக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு.

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிச்சாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காகக் கடவுளை விரும்புபவர்கள். சுவரொட்டிகள், ’கட் அவுட்’கள், பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எனப் பலவழிகளில் மக்களைக் கவர்வார்கள்.

சிலர் நான் தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் நான் தான் கடவுள் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள். ஆனால் இவர்கள் சிறுதெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் , துர்தேவதைகளுக்கும் பேய், குட்டிச் சைத்தான் போன்றவற்றிற்கு
மிகவும் விருப்பமானவர்கள்.

அதனால்தான் இவர்களை நம்பிச் செல்பவர்களுக்குச் சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும் சமாதியும் கிடைக்கவே கிடைக்காது.

கடவுள் என்பது ஒரு நாட்டின் பிரதமர் போல. (இந்தியா அல்ல)
தெய்வங்கள் என்பன அமைச்சர்கள் போல
தேவதைகள் என்பன அதிகாரிகள் போல

ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ நாடு நலமாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல்தான் கடவுளும்.

ஆனால் நாடு நாசமாய்ப் போவது யாரால்? அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆசைகளாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் தான்.

அந்த வகையில் இத்தகைய ஆன்மீக வியாபாரிகளுக்கு சில சமயங்களில் தெய்வங்களின் துணையும், தேவதைகளின் துணையும் கிடைப்பதுண்டு.

கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்குக் கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது. எனவே ஆன்மீக வியாபாரிகளிடம் தொடர்பு தேவையா
என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

டிஸ்கி: கடவுளை பிரபஞ்ச ஆற்றலாக இவர் நினைப்பதாக கருதுகிறேன்.
தெய்வங்களும், தேவதைகளும் இருப்பதாக தற்காலிகமாக, இதை படிக்கும்வரை ஒப்புக்கொண்டு பார்த்தால் இவர் சொல்ல வருவது முழுமையாக புரியும்.

தொடரும்....அடுத்து … நல்ஒழுக்க உறவு….

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

Thursday, April 23, 2009

கடவுளும்... நாத்திக உறவும்...

பொதுவாய்க் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காகப் பிரித்துக் கொள்ளலாம். இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு கிடைக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும்.

முதல்வகை உறவு - நாத்திக உறவு

கடவுளும் நாத்திக உறவும்


'கடவுளையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை.கடவுளும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை’


நாத்திகர்கள், பொதுவுடமைவாதிகள், உலகாயதவாதிகள், பொருள்முதல்வாதிகள் போன்றோர் இந்தப் பட்டியலில் வருவார்கள்.

’கடவுளைக் கண்டுகொள்ளாதோர் அல்லது கடவுளை மறுப்போர்’ என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு - வெறுப்பு அற்ற நடுவுநிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

பொதுவாக ஒருவர் ஆளும் கட்சியை வெறுத்து, விமர்சிப்பவராக இருந்தால் கூட அரசின், மக்களுக்கு கிடைக்கக் கூடிய பொதுவான சலுகைகள் அவருக்கும் கிடைக்காமல் போகாது. ரேசன், தகுதிக்கேற்ப அரசுவேலை, அரசு மருத்துவம் போன்ற நியதிப்படி
கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.(இன்றைய சூழ்நிலை அல்ல)

அதுபோலவே கடவுளை இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடவுள் படிப்படியாய் ஏற்படுத்தி வைத்திருக்கும் உலக வாழ்க்கை எனும் பஞ்சபூத அமைப்புகள் இவர்கள வெறுக்காது. கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், நியதிப்படியே நடக்கவேண்டிய எல்லாம் முறைப்படி நடக்கும்.

இதைத்தான்


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே


வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே


மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே


நல்லோர்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே


நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே


எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே


என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே


என்று வள்ளல் பெருமான் விளக்கமாக வர்ணிப்பார். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவுநிலை நிர்வாகம்.

ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு வாய்க்காது.
சாவை வெல்லும் சமாதி, முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லை. இவைகள் எல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோர்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகைகள்.

தற்சோதனை செய்யுங்கள்.

இந்த நாத்திக உறவு என்ற வகையில் நீங்கள் இருந்தால் இதுவே போதுமென்றால், தொடர்ந்து பயணம் செய்யுங்கள். இதை ஒரு வகையில் எதுவமற்ற நடுவுநிலை என்றுகூட சொல்லலாம்.

தொடரும்... அடுத்து......கடவுளும் வியாபார உறவும்

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

Tuesday, April 21, 2009

தோல் பொருட்களை உபயோகிப்போருக்கு...(18+)

டிஸ்கி;இருதய பலவீனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
இளவயதினர் தவிர்க்கவும்....

தோல் பொருட்களின் உபயோகத்தை குறைத்துவிடலாமா!!!





















வருகைக்கு நன்றி, மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

Monday, April 20, 2009

உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)

நண்பர் ஓம்கார் அவர்களின் யோகம் சம்பந்தமான நடுநிலையற்ற காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்ட உலகின் ”யோக”மான வியாபாரம் கட்டுரையை படித்ததன் விளைவே இந்த இடுகை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி; யோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்களைவிட நாம் இந்த இந்த வகைகளில் சிறப்பாக இருக்கிறோம் என்று ஒப்பிட்டுசொல்வது ஒரு ரகம்,

யோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்கள் இந்த இந்த வகைகளில் மோசமாக இருக்கிறார்கள் என்று சொல்வது மற்றொரு ரகம்,

சம்பந்தபட்ட கட்டுரையில் மட்டும் திரு ஓம்கார் இரண்டாவது ரகத்துக்கு வந்துவிட்டதாக நாம் உணர்ந்ததாலே இந்த கட்டுரை. மற்றபடி அவர்மீது மரியாதையே வைத்திருக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் இங்கே \\ குறிகளுக்குள் கொடுத்துள்ள அவரின் வார்த்தைகள், சம்பந்தபட்ட இடுகையின் மொத்த சாராம்சத்தையும் வெளிப்படுத்துவதாக நாம் கருதுகிறோம்.

இனி என்னுடைய பார்வையில் பெரிய விஷயஞானம் ஏதும் இல்லாமல் எளிமையாக
(இருந்தாத்தானே வர்றதுக்கு)—பார்ப்போம்.

\\நாளாக நாளாக மூளை மற்றும் மூல தனம் குறைந்து பிறரை ஏமாற்றி பொருள்சேர்க்கும் தன்மை அதிகரித்து வருகிறது.\\

இதை தாங்கள் சாதாரண பதிவராக சொல்கிறீர்களா? அல்லது ஜோதிட வல்லுநராக சொல்கிறீர்களா? ’

’காலம்’ பற்றி APRIL 3—விளக்கம் சரிதான். அதையே காலத்திற்கும் பொருத்திப்பாருங்கள். இங்கு ஏமாற்றத்திற்கும் பொருத்திப் பாருங்கள். ஏமாற்றவில்லை என்பதாகவும் புரியும். இதே தத்துவத்தைதான் வாழ்க்கைக்கு உபயோகமாக ஜீரோவில் MARCH 19 -நாம் சொல்லி இருக்கிறோம்.
பொருளாதாரமாக பார்த்தால்கூட கட்டணம் பெறுவது, எப்படி அவர்களை ஏமாற்றுவதாக அமையும். சொல்லிக் கொடுக்கும் விஷயத்திலும் ஏமாற்றவில்லை.அதை பின்னர் பார்ப்போம்.

\\தற்காலத்தில் யோகசாஸ்திரத்தை மக்கள் எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.\\

யாரும் சீரழிக்கவில்லை. யோகத்தில், யானையைக் கண்ட குருடன் போல் மக்கள் இருக்கின்றனர். தங்களை போன்றோர் அவனுக்கு சரியான பார்வையைக் கொடுத்து யானையை இன்னதென்று உணர்த்தவேண்டும். மாறாக யானையை சீரழிக்கிறான் என்று குறைசொல்ல தாங்கள் தேவையில்லை.

இன்னொரு குருடனே போதும்.,

\\உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது.\\
யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது. \\


அதைப்பற்றித் தெரிந்த, தங்களைப் போன்ற சிறுபான்மையினர் சொல்வது சரிதான்.

ஆனாலும் பெரும்பான்மையான யோகத்தைப் பற்றி தெரியாத மக்களிடம் ( நம்மாளுக்கு தியானம், தவம், யோகம், ஞானம் எல்லாம் ஒன்னுதானே! என்னமோ கண்ணைமூடி உட்காருங்கிறாங்க.., கையத்தூக்கு, கால அசைங்கிறாங்க.)அறிமுகப்படுத்தும் விதமாக, பொதுவாக அப்படி சொல்வதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

தேர்தல் என்கிற வார்த்தை இப்போது சொல்லப்பட்டால், அது ஒன்றும் தவறில்லையே. பாராளுமன்ற தேர்தல் என்று அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது என சலித்து கொள்வீர்களோ? சட்டமன்ற,உள்ளாட்சி,உட்கட்சி தேர்தல் என பல வகைகள் உள்ளது. எனவே தேர்தல் என்ற சொல்லை இங்கே தவறாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்வீர்களோ? இடத்திற்கு தகுந்தாற்போல் பொருள்கொள்வதில் என்ன தவறு?

\\நமது நாட்டில் யோக பயிற்சி பள்ளிகள் யோகாவை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)\\\\

”நமது நாட்டில் ஜோதிடப் பயிற்சி பள்ளிகள் ஜோதிடத்தை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)—”

இப்படி நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்குமா? ஏன் இந்த தாக்குதல்?

யோகம் என்ற வார்த்தைக்கு பதில் ஜோதிடம் என்ற வார்த்தையை போட்டால், நான் ஜோதிடத்தை தாக்குவதுபோல் இருக்கிறதா? இல்லையா? ”சாந்தமடைவீராக

தங்களின் பயிற்சிகள் ஒரு வேளை இலவசமாக சேவை நோக்கில் அளிக்கப்படுகிறதா? தாங்கள், தங்கள் மாணவர்களை பொதுமக்களுக்கு இலவசமாக ஜோதிடம் பார்க்க பயிற்றுவிக்கிறீர்களா? .யோகப் பயிற்சி இலாபகரமான வியாபாரமாகவே இருக்கட்டும். என்ன தவறு? பயிற்சிகளை கற்றுக்கொள்பவர் எந்த வகையில் நட்டம் அடைகிறார்? ( நம்மாளுதான் கத்துக்கிறதோடு சரி, செய்வதே இல்லையே )

\\கையை தூக்கு, மூச்சு விடு என சொன்னால் அது யோகா ஆகிவிடுமா?\\

அதன் பலன் என்ன என்று பாருங்கள் எதுவுமே தெரியாதவனுக்கு அப்படிதான் சொல்ல வேண்டும். பின்னர் படிப்படியாக சகல விளக்கமும் தரலாம். புரிந்து கொள்வான்.


\\மாயை எனும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒருவன் மேலே வர யோக பயிற்சிக்கு சென்றால் அங்கே அவனை குண்டலினி எனும் பெயரில் மாயை எனும் மாபெரும் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.\\\\

கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஜோதிடம் ஒரு சிகரம்!!!!??...ம்ம்ம்ம்
ஜோதிடத்தை விட்டுவிட்டு இதை சொல்லுங்கள். ஒரு சதவீதமேனும் நம்புகிறேன்.

\\குண்டலினி என்பதை குரு ஒருவர் தனிப்பட்ட சிஷ்யனுக்கு போதிக்க வேண்டியது. ஆனால் தற்சமயம் ஒரு விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து பல்லாயிர கணக்கான பேருக்கு சொல்லிகொடுப்பதால் அதன் தாத்பரியம் கெட்டுப்போய் விடுகிறது.\\

ஒன்றும் கெட்டுவிடவில்லை. பல்லாயிரத்தில் பத்தாவது தேறும். ஒன்று தேறினாலும் நன்மையே. குருகுலம் நடத்துவது, இன்று பொருத்தமாக இருக்காது. மக்கள்பெருக்கம் அப்படி. எந்த ஒரு கலையின் தாத்பரியமும் அப்படியேதான் இருக்கும். அவ்வப்போது தகுதியானவர்களால் முழுமையாக வெளிப்படும். அப்படியே கெட்டுப்போவதாக வைத்துக் கொண்டால்கூட, இராவணன் இல்லை என்றால் இராமன் யார்?

\\இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.\\

இது தரம் குறைந்த பதில். பெருமைபடக் கூடியதுஅல்ல. இதை தங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. (அதனாலேயே இந்த இடுகை போடவேண்டியதாகிவிட்டது) “அப்படியா தொடர்ந்து கவனியுங்கள். இத்தனை நாள் நாம் வெளியே மட்டுமே பார்த்து பழகியிருக்கிறோம். இப்பத்தானே உள்ளே கவனிக்கிறீங்க, இன்னும் பல விசயங்கள் நடக்கும்,” என்று யோகம் பயில்பவரை ஊக்கப்படுத்தி இருக்கவேண்டும். உங்கள் பதிலால் அவன் யோகம் என்பது ஏதோ தவறானது என்று ஓடியே போயிருப்பான். திருப்தியா?

உங்களுக்கு தெரியாதா உள்ளே ஒளி தெரிவது, யோகத்தில் PRE KG மாதிரிதானே என்று.?

என் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர் இந்த அமைப்பிற்கு இந்நேரம் புல் பூண்டு முளைத்து பூத்திருக்கவேண்டுமே? என்று அதிர்ச்சியடைந்தார். சரி உங்களிடம் நான் வந்து, இது பற்றி கேட்டால், “ஜாதகத்தைக் கொடுங்கள். அவர் கணிப்பில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. நல்ல நிலையில் இருப்பதற்கான ஏதோ ஒரு கணிப்பு அவரால் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்று சொல்வீர்களா?”
அல்லது “பூவைப் பறித்து தலையில் வையுங்கள் என்று சொல்வீர்களா? (“காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.)

இதற்கு நமது பேச்சுவழக்கில் சொன்னால் ‘எ……த்தாளம்’ என்று பொருள்.

இந்த கிண்டல், நையாண்டி, தங்கள் செயல்பாடுகளுக்கு பொருத்தமானது அல்ல தங்களுக்கு உரிய அணிகலனும் அல்ல. அப்படித்தான் இருப்பேன் என்றால் அது உங்கள் உரிமை. நான் நேரடியான கருத்துப் பரிமாற்றத்திற்கு வராமல் தாரளமாக ஒதுங்கிக் கொள்கிறேன்.


\\எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை. \\

யோகத்தினால் மனநிலை தவறுவதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். மனநிலை தடுமாற்றத்திற்கு யோகம் காரணமல்ல. ஜோதிடம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஒரு மணி நேரம் கற்றுக் கொள்பவன் குருவை சந்திக்க அவசியம் இல்லை. குரு தகுதியான சிஷ்யனைத் .தேடி வருவார்தானே!! (இது உங்கள் வார்த்தை)

\\அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.\\

”அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் ஜோதிட பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் கோவையில் ஒம்கார்ஜி சொல்லிகொடுத்தார். அவர் எல்லார் கண்களுக்கும் தெரிவார் என சொல்லுங்கள்.-

என்று நான் சொன்னால் அது சரியானதா?” அது நக்கல் இல்லையா?

இந்த காழ்ப்புணர்ச்சி ஆரோக்கியமானதல்ல.உங்களை சராசி மனிதனாக நான் பார்க்கவில்லை.

இது போதாது என்று பின்னூட்டத்தில் வேறு பிதற்றல்…

\\திரு அப்துல்லா அண்ணே,

கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...!

இதை எழுதும் பொழுது எனக்கு பரிதாபமே வருகிறது.\\

தங்களை நினைத்தால் எனக்கு அதைவிடபரிதாபமாக உள்ளது. இப்போது தாங்கள் குண்டலினி சக்தியை உணர்ந்தவராக இருந்தால், குண்டலினியால் ஒரு ஓம்கார் “பூரண கால தந்திரி” இச்சமுதாயத்திற்கு கிடைத்துள்ளார் என உண்மையில் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இது நன்மையா? இல்லையா? (உணர்ந்திருந்தால், மனநிலை பாதிப்பிற்கு குண்டலினி காரணமில்லை எனப் புரிந்திருக்கும்.)

இல்லை, குண்டலினியை உணரவில்லை என்றால், உணராத நீங்கள் எப்படி ’கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...!’ என்று சொல்லலாம்?

உண்மையை சரியாக ஒருவர் சொல்லவில்லை எனில் அதில் பெரிய தவறேதும் இல்லை.
அந்த பொறுப்பை முடிந்தவரை நாம் சரிசெய்யலாம். மாறாக அவர்களை மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜோதிடக்கலையை வளர்த்துங்கள். மகிழ்ச்சியே,
நோயாளிக்கு, நல்ல மருத்துவர் தேவைதான்.

ஆனால் அதற்காக எந்த உருவில் தாங்கள் யோகத்தை, அல்லது யோகத்தை சொல்லிக்கொடுக்கும் விதத்தை விமர்சித்தால் அது பூமராங் போல் உங்களிடமே திரும்ப வரும். (நான் சொல்லிக் கொடுப்பவன் அல்ல) அதே சமயம் ஒருவரிடத்தில் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடு இருந்தால் விமர்சிக்கலாம். அதில் தவறேதுமில்லை.

பொறுப்பை உணர்ந்து பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகிறேன். இது வேண்டுகோள் அல்ல. இது பச்சைக்கு பின் வரும் மஞ்சள்.

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்…

Saturday, April 18, 2009

ஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....

ஒரு விஞ்ஞானி, எலிகளை ஆராய்ச்சி செய்பவர். தன் ஆராய்ச்சிக்காக பல எலிகளை வைத்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

எலிகளை மனிதன் தன் கட்டளைப்படி கேட்கச் செய்யமுடியும் என தீவீரமாக நம்பினார். அது சம்பந்தமாக அவருடைய ஆய்வின் போக்கு அமைந்திருந்தது.

முதலில் அதை உணவு விசயத்தில் பழக்க முடிவு செய்தார். அதற்கு பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி, எலியை, அந்த கட்டளைக்கு கீழ்படியப் பழக்கினார். ஒன்றும் பலன் இல்லை. அது தன் இஷ்டப்படி, அவ்வப்போது கூண்டை விட்டு வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தது.

சரி இது ஆகாது என முடிவு செய்து, உணவு கொடுக்கும் நேரங்களை மாற்றி அமைத்துப் பார்த்தார்.சில சமயங்களில் எலி வந்து உணவை எடுத்துக் கொண்டது. சில சமயங்களில் உணவு சாப்பிடவில்லை.

சரி இதுவும் ஆகாது, என முடிவு செய்து தானியங்கி ஒலி எழுப்பும் மணி ஒன்றை நிறுவினார்.உணவுநேரத்திற்கு முன் மணியை ஒலிக்க செய்தார். மணி சப்தம் கேட்டவுடன் எலிக்கு தவறாமல் உணவு வைத்தார். ஓரிரு நாட்களில் எலி கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொண்டது. பின்னர் தொடர்ந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

கிட்டதட்ட ஒரு மாத காலம் இதற்கு ஆனது. இறுதியாக தனது ஆராய்ச்சி குறிப்பில் விஞ்ஞானி இவ்வாறு எழுதினார்.

எலி எந்த சப்தத்திற்கும் கீழ்படியாது. மணி சப்தத்திற்கு மட்டுமே கீழ்படியும். இதுவே நான் கண்ட உண்மை என நிறைவு செய்தார்









அன்று இரவு புதிதாக வந்த எலி ஒன்று நமது எலியிடம், என்ன அண்ணே! எப்படி இருக்குது இந்த வாழ்க்கை, விஞ்ஞானி நல்லவரா? எனக் கேட்டது.

அட அத ஏன் கேட்கிற? ஒரு மாசமா இந்த ஆள்கிட்ட நா பட்டபாடு, ! பசிக்கிற நேரத்துக்கு ஒழுங்கா சாப்பாடு வைக்கத்தெரியல. ஒரு வழியா மணி அடித்தவுடன் சாப்பாடு வைக்கிற மாதிரி பழக்கறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்து போச்சு போ! என்றது.

நண்பர்களே பலசமயங்களிலும் நாம் எலியாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ இருக்கிறோம்.

உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புரிந்து கொள்வதிலும் இந்த நிலைதான் இருக்கிறது.

சரி இதற்கும் ஓம்காருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இப்போதைக்கு நான் எலி, ஓம்கார் விஞ்ஞானி

மீண்டும் அவசியம் சந்திப்போம்.

அடுத்த இடுகையின் தலைப்பு

உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)


Tuesday, April 14, 2009

மனநல காப்பகமும் ...அரசியல்வாதியும்...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் அருகே ஊத்துக்குளி ரோடில் உள்ள S.பெரியபாளையம் ஊரில் அமைந்துள்ள ’கருணை இல்லம்’அமைப்பிற்கு சென்றிருந்தோம்.

அங்கே உடல் ஊனமுற்றவர்,மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் என மொத்தம் 72 நபர்கள் தங்கவைத்து பராமரிக்கப் படுகின்றனர். அதன் நிறுவனரே நிர்வாகியாக இருக்கிறார். குடும்பமே அந்த சேவையில் ஈடுபட்டு உள்ளது.

காப்பகத்தில் இருக்கும் சூழ்நிலைகள் ரம்யாவின் ஐம்பதாவது பதிவை படித்து புரிந்து கொள்ளுங்கள்.

நான் சில காப்பகங்களுக்கு குழந்தைகளின் பிறந்தநாட்களை முன்னிட்டு ஒருநாள் செலவினை அன்போடு வழங்கிவருவது வழக்கம். நான் பார்த்தவரை ஓரளவிற்கு எல்லா இல்லங்களுமே அருள்கொடையாளர்களின் நன்கொடைகளால் நன்கு பராமரிக்கப்பெற்று இருந்தன.

விசயமே இனிமேல்தான்...

ஆனால் இந்த கருணைஇல்லமோ தகுந்த விளம்பரம் இல்லாததாலோ என்னவோ எளிமையாகத்தான் இருந்தது. இடப் பரப்பளவு சுமார் இரண்டரை ஏக்கர். நிறுவனர் வேலுச்சாமியின் பூர்வீக நிலம். முழுமையாக இதற்கென ஒதுக்கிவிட்டார். அதனுடைய இன்றைய மதிப்பு சுமாராக 2 கோடி இருக்கலாம்.

உள்ளூர் பஞ்சாயத்து முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் உடமையாக்கப்பட்ட நிலம், இந்த காப்பகத்திற்கு எதிரே உள்ளது. அதை வாங்க வருபவர்கள், எதிரே காப்பகத்தை பார்த்தவுடன் வாங்க மறுத்து சென்றுவிடுகிறார்களாம். இது ஒரு காரணம்.

நிறுவனருக்கு வாரிசு இல்லாததால் பிற்காலத்தில் இந்த நிலத்தையும் அபகரிக்க எண்ணி தன்னை அந்த காப்பகத்திற்கு தலைவராக நியமிக்க அதிகாரத்தை பயன்படுத்தி வற்புறுத்துகிறாராம். இது மற்றொரு காரணம்.

ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் போட்டிருக்கிறார்.

இந்த விசயம் CM தாத்தா வரை விசயம் போயும்(!?!!) இன்னும் காப்பகத்திற்கு விடிவு பிறக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக குடிதண்ணீர் சப்ளை தரப்படவில்லை. விளைவு தினமும் (ரூபாய் 200 க்கு) விலைக்கு குடிதண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஒரு வார கால தண்ணீர் செலவைக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத்துணைவி வாங்கிவந்த அரிசி மூட்டையையும் கொடுத்துவிட்டு, அவரோடு பேசிக் கொண்டு இருக்கும்போது

”தண்ணீருக்கு இந்த கஷ்டப்படவேண்டியுள்ளதே என்ன செய்யலாம். மீடியா-வின் கவனத்திற்கு கொண்டு போய்விடலாமா?” என்றேன்.

அதற்கு அவர் ”வேண்டாம். இப்பொழுதே மிகுந்த எதிர்ப்பை
சமாளித்து கொண்டு இருக்கிறேன். அது இன்னும் அதிகமாகிவிடும்.
காப்பக பராமரிப்புக்கு பொருளோ, பணமோ நண்பர்களிடம் சொல்லி
உதவுங்கள். அதுவே போதுமானது”.என்றார்.

பாருங்களேன்.. நம் அரசியல்வாதிகளின் லட்சணத்தை

உதவ மனமில்லாவிட்டாலும், உபத்திரவம் பண்ணாமல் இருக்கலாம் அல்லவா!!

சரி இந்த விஷயத்தில் நாம் முடிந்தால் உதவி செய்யலாமே..பொதுவாக காப்பகங்களுக்கு உதவுவது சிறப்பு என்றாலும், அதோடு சேவை மனப்பான்மையோடு சொத்து முழுவதையும் அர்ப்பணித்து, அதிலேயே சேவையும் ஆற்றுகிற ஒரு அன்புள்ளம் கொண்ட நபருக்கு அரசியல் எதிர்ப்பையும் சந்திக்கவேண்டிய அவலம்,கொடுமை நேர்ந்திருக்கிறது.

அவர் தேவையான மனவலிமை பெற பிரார்த்திப்பதோடு பொருளோ, பணமோ முடிந்தவரை உதவி செய்வோமே...பதிவர்களால் ஒரு நன்மை நடக்கட்டுமே...

தொடர்புக்கு..

கருணை இல்லம்
பதிவு எண் 18..2003
Dr.K.வேலுச்சாமி M.com.,M.A.,M.Lit.,
S.பெரியபாளையம்,
ஊத்துக்குளி ரோடு
திருப்பூர்-641607

தொலைபேசி:0421-291887. 0421-6541998

நன்றி

தீயினும் கொடியது காமம்! (18+)

மலரினும் மெல்லியது காமம் என்ற வள்ளுவன், இன்று வாழ்ந்தால் இப்படிச் சொல்வானா என்பது ஐயமே. 8 வயது பள்ளிச் சிறுமியை அவளது பள்ளியின் தலைமை ஆசிரியரே கற்பழிக்கிறார். தம் மனைவிக்கு, தாம் ஊரில் இல்லாதபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என்று 62 வயது தாய்மாமனையும் 63 வயதுச் சித்தப்பனையும் தம் மனைவியுடன் இருக்கச் செய்கிறார்.

இந்த 25 வயதுப் பெண்ணை இந்த இரு கிழவர்களும் கற்பழித்துக் கொன்றும் போடுகிறார்கள். இந்தத் தாய்மாமன் இப்பெண்ணுக்குச் சிற்றப்பன் முறை. அந்தச் சிற்றப்பனோ மாமன்முறை.

முறையாவது வெங்காயமாவது? வயது, தரம் உணராமல் காமம் வளர்த்துக்கொள். அதை யார் மீது வேண்டுமானாலும் பிரயோகி என்று கீழ்த்தரமாக எண்ணுமளவு பண்பாடு பற்றி வாயின் இருமுனைகளும் காதுகளைத் தொடுமளவு பேசும் தமிழகத்தில் இவ்விரு சம்பவங்களும் நடந்துள்ளன. இன்னும் கேவலமான உதாரணங்களையும் என்னால் காட்ட முடியும்.

இவ்விரு சம்பவங்களும் சில தினங்களின் இடைவெளியில் நடந்துள்ளதாலும், மிக அண்மையில் நடந்துள்ளதாலும் தமிழகம் எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது என்று மதிப்பிடத் தோன்றியது.

இவ்விரு சம்பவங்களிலிருந்து இரு உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம் சமூகத்திற்கு உணர்த்தத் தோன்றியதன் விளைவே இக்கட்டுரை.

பெண்பிள்ளைகளைக் குடும்ப உறுப்பினர்களாகக் கொண்டவர்கள் எவரையும் எளிதில் நம்பாதீர்கள். ‘சேச்சே! அவரைப் பற்றி அப்படியெல்லாம் கனவில்கூட நினைக்கக்கூடாது’ என்கிற நம்பிக்கைகளெல்லாம் தவிடுபொடியாகிக்கொண்டிருக்கிற காலம் இது.

பார்க்க அப்பாவியாய் இருக்கிற பலர் மனத்திற்குள் பொல்லாத வக்கிரங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புற்றிலிருந்தா இந்தப் பாம்பு கிளம்பியது என ஊகிக்க முடியாத நிலை.

சமூகத்தின் வக்கிரக் குணங்களைச் சூடேற்றிவிட்டுக் கொண்டிருப்பவை இன்றைய ஊடகங்களே.

எதுவும் தவறில்லை; சும்மா அனுபவி என்றே இன்றைய பொறுப்பற்ற ஊடகங்கள் பல உணர்வுகளுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் பத்திரிகைகளின் பங்கும் உண்டு என்றாலும் இவற்றின் பங்களிப்புக் குறைவே. சின்னத்திரையும், பெரிய திரையும், கணினி, செல்போன்கள் வழியேயும் மக்கள் மனத்தில் கொடூர எண்ணங்கள் வளர்க்கப்படுகின்றன. அடைகாத்து அடைகாத்து அவை குஞ்சு பொரிக்கின்றன.

வாய்ப்புகள் உருவாகும்போது வடிகால்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கிட்டாதவர்கள் வேறு வழியின்றி நல்லவர்களாக நமக்குக் காட்சியளிக்கிறார்கள்.

ஊடகங்களின் போக்கை மாற்றி அவற்றிற்குப் பொறுப்புணர்ச்சியை ஊட்டமுடியும் என்பதில் எனக்கு அரைகுறை நம்பிக்கையே இருக்கிறது. ஆனால் யார் மனசில யாரு? யார் மனசில என்ன இருக்கு? என்பதை ஊகிக்க ஆற்றலற்ற நாம், பெண்களுக்கு மிகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் தருவதிலாவது கூடுதல் கவனம் செலுத்தலாம்.

(கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் சமீபத்திய கட்டுரை படித்தேன். அதை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். இவருடைய ஒரு பக்க கட்டுரைகளும் நன்றாகவே இருக்கும். வாய்ப்பிருந்தால் தொடர்ந்து படியுங்கள்)

நன்றி: தமிழ்வாணன்.காம்

Monday, April 13, 2009

மன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....

மனிதர்களுக்குத் தோன்றும் விதவிதமான கவலைகளை எந்தவொரு புத்தகத்திலும் (பதிவிலும்) அடக்கிவிட முடியாது. கவலைகளுக்கு முடிவே கிடையாது.

எதைப் பற்றியாவது, சதா யோசித்துக்கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும் இருப்பது மனித சுபாவம்.

சின்னச் சின்னதாகத் தோன்றும் கவலைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் அவை தோன்றும் வேகத்திலேயே காணாமல் போய்விடும்.

பஸ் வருமா, வராதா என்ற கவலை, பஸ் வந்தால் தீர்ந்துவிடும்.பரிட்சையில் பாஸ் ஆகிவிட்டால், பரீட்சை பற்றிய கவலை தீர்ந்துவிடும்.

அதேசமயம் பரீட்சையில் பெயில். அது மூட் அவுட் ஆக்கும் சங்கதிதான்.ஆனால் அடுத்தது என்ன செய்வது என்று சிந்தித்து, அப்போதே அதிலிருந்து மீண்டு விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை.

மீளா விட்டால்தான் பிரச்சினை, மன அழுத்தம் என்ற விஷயம் இங்கேதான் வருகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டால், மனம் மட்டுமல்ல, உடலும் சேர்ந்தே பாதிப்படைகிறது. அதனால்தான் ”பிரச்சினையா? என்னால் முடியவே முடியாது சாமி” என சோர்ந்து ஒடுங்கி விடுகின்றனர் பலர்.

அதோடு நம் எண்ணங்கள் மாறுகின்றன. நமது சாப்பிடும் முறை மாறுகிறது.தூக்கம் கெடுகிறது. மூச்சு குறுகி விடும். மொத்தத்தில் நம்மை முற்றிலுமாக தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.

மன அழுத்தம் தாக்கும்போது பயப்படக்கூடாது. உடைந்து போகக்கூடாது


மன அழுத்தம் என்பது ஒரு மூட், மனநிலை. அவ்வளவுதான்..அதில் அழுந்திவிடக் கூடாது.


ஆரம்பநிலையில் ’வாழ்க்கையே வெறுமையா இருக்கு. ரொம்ப போரடிக்குது.என்ன செய்யறதுன்னே தெரியலே ’இப்படி ஓர் எண்ணம் வந்தால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிய வேண்டும். என்ன செய்தால் வெறுமை ஒழியும், எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறது என்று நமக்குநாமே டிடெக்டிவ்வாக மாறி கண்டு பிடிக்க வேண்டும்.

மாறாக மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டால் பிரச்சினை தீராது. மாறாக அதிகரிக்கவே செய்யும்.யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும். கணவனோ, மனைவியோ, பெற்றோர் அல்லது நண்பராக இருக்கலாம். அப்படி பேசினால்தான் மன பாரம் குறையும். புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.

சரி, பிறருக்கு மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் நாம் என்ன செய்யலாம்?

அவர்களோடு மனம் விட்டுப் பேசவேண்டும். மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்கள், பிறருடைய அரவணைப்பை எதிர்பார்ப்பார்கள். நல்ல விதமாக யாரவது நாலு வார்த்தை சொல்லமாட்டார்களா? என்று ஏங்குவார்கள்.

என்ன....அவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர இனிமேல் உதவுவீர்களா?

(தொடரும்)

நன்றி; கருத்து நோ ப்ராப்ளம் -- (சிபிகே சாலமன்) நூலில் இருந்து

Thursday, April 9, 2009

குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து...

இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை அடைய...

குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து இயங்குவது அவசியம்

மின் மோட்டார்களில் அதன் திறனைக் குறிக்க 1HP, 2 HP, எனக் குறிக்கப்பட்டிருக்கும்.
HP (horse power) என்பது குதிரைதிறன் என்பது உங்களுக்கு தெரிந்ததே.

குதிரையைவிட வேகமாக ஓடும் பல விலங்குகள் இருக்கின்றன.

புலி, சிறுத்தை போன்ற மற்ற மிருகங்கள் இரையைப் பிடிக்க குறிப்பிட்ட தூரத்திற்கு, மிக வேகமாக ஓடும். ஆனால் தொடர்ந்து ஓடாது. ஓட முடியாது.

ஆனால் குதிரை தொடர்ந்து பலமணி நேரம் ஓடும்.
இரைக்காக அன்றி இயல்பாகவே ஓடும்.

வேகமாக ஓடுவதை விட தொடர்ந்து ஓடுவது மிக முக்கியம்.

சமயத்தில் வேகமாக செயல்படும் ஆற்றலும் தேவைதான். அதைவிட தொடர்ந்து தாக்குப்பிடித்து, இயங்கும் ஆற்றலே மிகமுக்கிய தேவையாகும்.


இலக்கை நோக்கி ஓடும்போது,வழியில் தடைகள் வரலாம். பல்வேறு சூழ்நிலைகளால் இலக்கின் தூரம், காலம் தள்ளிப் போயிருக்கலாம். அதனால்.. தொடர்ந்து இயங்குங்கள். இல்லாவிடில் உங்களது இலக்கை அடைவது இன்னும் தள்ளிப் போகலாம். அல்லது தடைபட்டே போகலாம்.

அதனால் நண்பர்களே... குறிக்கோளை அடையும் வழிகளில் தொடர்ந்து இயங்குவது என்பது மிகவும் அவசியமானது.


நன்றி: கருத்து:அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து.

Tuesday, April 7, 2009

துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

தீக்குச்சியை பற்ற வைக்கிறீர்கள். அது எரிந்து கொண்டிருக்கிறது.
காற்றடிக்கிறது. தீக்குச்சி அணைகிறது

அதே சமயம்..

உலைகளில், அடுப்பில், தீ எரிந்து கொண்டிருக்கிறது.

காற்று வீசப்படுகிறது.

தீ மேலும் நன்றாக பாதுகாப்பாக எரிகிறது.

தீக்குச்சியை அணைத்த அதே காற்று,
சூழ்நிலையை பலப்படுத்திய பின் தீயை வளர்க்கிறது.


துவக்க நிலையில்..

உங்கள் யோசனைகள் திட்டங்கள் முயற்சிகள் சூழ்நிலைகளினால்,
அல்லது மற்றவர்களால் பாதிக்கப்படலாம்.

அதைக் கண்டு மனம் தளர்ந்து, அத்துடன் அக் காரியத்தை அதோடு விட்டுவிடாதீர்கள்


அந்த திட்டம், எல்லா வழிகளிலும் உங்களால் யோசிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்பொழுது, அசாதாரண சூழ்நிலை அமைந்தால் ஒழிய பின்வாங்க வேண்டியதில்லை

மனம் தளராமல் கூடுதல் அக்கறையுடன், சரியான வழியில் உழைப்பைச் செலுத்துங்கள்.
உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இலக்கை அடைவது நிச்சயம்.


குறிக்கோளை அடைய.. துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

நன்றி; கருத்து ,அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து

Saturday, April 4, 2009

இரும்பை பதப்படுத்த......

உங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை
மேலும் தேவைகளுக்கேற்ப கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அது உங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும். அதில் முக்கிய பங்கும் வகிக்கும்.

இரும்பை பதப்படுத்த…

அதை உலைகளில் வைத்து சூடாக்கி, பழுக்க வைத்து….

அ) சூடான பழுத்த இரும்பைத் தண்ணீரில் முழுக வைத்து,உடனே குளிரச் செய்தல்..

ஆ) சூடான பழுத்த இரும்பைத் தரையில் போட்டு,தானாகக் குளிரச் செய்தல்.

இ) சூடான பழுத்த இரும்பை மணலில் புதைத்து,மெதுவாக குளிரச் செய்தல்..

இப்படி பல முறைகளில் குளிரச் செய்கிறார்கள்.

இதில் எந்தமுறை சரி, எந்தமுறை தவறு என பிரிக்கவே முடியாது.

காரணம் இரும்பை, கடினப்படுத்துவதற்கு, வளைப்பதற்க்கு, உடைப்பதற்க்கு என்ற தேவைகளுக்கு ஏற்பவே., குளிர வைக்கும் வழிமுறையும் மாறுகிறது.

இப்படி தேவைக்கேற்ப இரும்பை முழுமையாக உபயோகப்படுத்தும் பொருட்டு, அதனை எப்படியெல்லாம் பக்குவப்படுத்துகிறோம்.

அதேபோல் நம் மனதை , நமது தேவைக்கேற்ப பக்குவப்படுத்தி, மாற்றிக்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும். எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனியுங்கள்.பல இடங்களிலும் அலைவதை விட்டுவிட்டு, உங்கள் சொல்படி கேட்க ஆரம்பிக்கும். அதன்பின் சரியான முடிவுகள் எடுப்பது எளிதாகிவிடும்.


நான் இப்படித்தான் என்று இருந்தால் ஏதோ ஒருவிதத்தில் தான் பயனடைவோம். பல இழப்புகள் வரலாம். இரும்பை பாருங்கள். மாற்றத்திற்கேற்ப பலனடையுங்கள்.

மாறாக மனோநிலை பக்குவமானால், நிறைய பலன் அடைவோம், பிறருக்கும் பலன் தருவோம்.

ஆக ஒரு விசயத்தில் முடிவை எடுக்கும் முன், தேவையை தெளிவாகப் புரிந்து கொண்டால், மனதால் நல்ல சரியான, முடிவாக எடுக்கமுடியும்.

தீர்க்கமான உறுதியான முடிவுகளால்... குறிக்கோளை அடையும் வழி எளிதாகிறது

நன்றி: கருத்து, ‘அடுத்த ஆயிரம் நாட்கள்’ நூலில் இருந்து....

Friday, April 3, 2009

ஊட்டி போலாம் வர்றீங்களா?

நண்பர்களின் அனுபவங்கள், கருத்துகள், எண்ணங்களை பதிவுலகம் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம்.

அந்த வகையில் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றமடைய கற்றது கை மண்ணளவு என்கிற உணர்வில் எங்கு, என்ன கிடைக்கும் அது சரியானதா? என்ற தேடுதலோடு இருக்கிறோம்.

அதில் ஒன்றுதான் கவனகர் திருக்குறள் இராம கனகசுப்புரத்தினம் அவர்களின் குன்னூர் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை.

இவருடைய நிகழ்ச்சிகளில் ஏற்கனவே சில முறை பங்கெடுத்துள்ளேன். இதில் நான் பங்கேற்பாளன் மட்டுமே.

உடல்நலம், மனநலம், பொருள்வளம் இவற்றில் நாம் முன்னேற வேண்டிய வழிகளும், அதில் உள்ள தடைகளை நீக்குவது பற்றியும் பயிற்சி (சிறப்பாக) இருக்கும்.

அழைப்பை இணைத்துள்ளேன். வாய்ப்பு உள்ளவர்கள் வரலாம்.

இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

முதல் பக்கம் :



இரண்டாவது பக்கம் :

Wednesday, April 1, 2009

அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.

அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.

நாளை கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்.

இன்று கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்

இது நம் வாழ்வில் பொதுவாக நடைபெறும் சாதரண நிகழ்ச்சியே..

டெலிபோன் பில், கரண்ட் பில், பள்ளிக் கட்டணம் இது போல பல கட்டணங்கள், கையில் பணம் இருந்தும், சரியான நேரத்திற்க்கு முன் கட்ட முடியாமல் போயிருக்கும்.

இவ்விதமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,நாம் ஒவ்வொரு விதமாக நடக்கிறோம்.

அவசரமில்லாத முக்கிய வேலைகளை தள்ளிப் போட்டால்..
பின்னர் அதுவே அவசரமான முக்கிய வேலையாகிறது.


அதை மிகுந்த மன உளைச்சலோடு, அதிக பொருட்செலவில், அதிக நேரம் செலவு செய்து சமாளிக்க வேண்டியிருக்கிறது.


அதுமட்டுமல்ல.. சூழ்நிலைகளால் நாம் பலவீனம் அடைய அடைய....

கோபம், பயம், ஆத்திரம், கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படுகிறோம். இதனால் நாம் செயல்படும் திறன் மங்கிவிடுகிறது. இன்னும் சிக்கல் அதிகமாகிறது.

உடல்நலம், பெற்றோர்நலம், குழந்தைகள் நலம்,கல்வி, நடத்தை, வாகனப் பராமரிப்பு, கடன், கட்டணங்கள் போன்ற விசயங்களுக்கு அவ்வப்போது உரிய முக்கியத்துவம் கொடுத்தால் அவை இயல்பான, இனிமையான வேலையாகிவிடும்.

நான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்....

குறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்றை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே?

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)

கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்
தெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.

5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.

இப்போது சொல்லுங்கள்!

உங்கள் வாழ்க்கை...

ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?

5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?

வாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.

அடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்
பல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.

சொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.

குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்...

சுயமானதாக................................................SELF
அளவிடக் கூடியதாக..................................MEASURABLE
அடைய முடிவதாக....................................ACHIVEABLE
யதார்த்தமுள்ளதாக...................................REASONABLE
காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED

நம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.

உதாரணமாக..

அடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....

20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...

என் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.

குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)