"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 18, 2019

5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.


      ஜோதிஜின் புதிய புத்தகமான 5 முதலாளிகளின் கதை, amazon pen to publish 2019 Tamil competition போட்டியில் பங்கெடுப்பதற்காகவே எழுதப்பட்டிருதது. Kindle E-book ஆக மட்டுமே வெளியாகி இருப்பதால் முதன்முறையாய் Kindle for Pc மூலம் வாசிக்க வேண்டியதாகிவிட்டது.

      ஒரு முதலாளி, தனது வெற்றிக்கான வாய்ப்பினை, ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி கண்டுபிடித்து, அதனைத் தன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்கிற, தன் குணத்தையே அனுபவமாக எழுதி இருக்கிறார். இந்தப்புத்தகம் அவரது பலவருட தொழில் அனுபவங்களின் காரணமாக, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த வழிகாட்டியாய் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

      அடுத்த தலைமுறை என்பது நடுத்தர மக்களான குடிசைச் சமூகம் என்று ஜோதிஜியினால் வர்ணிக்கப்பட்ட, நம் இக்கால இளம் சிறுதொழில் முனைவோர் என்பதாகக் கொண்டால், இப்புத்தகம் அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

      இரவு என்ற ஒன்று இருப்பதால்தான் பகலைப்பற்றியும், ஒளியைப் பற்றியும், அதன் தேவையைப் பற்றியும் பேச நேரிடுகிறது. ஒளியின் அவசியத்திற்கு, இரவைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஆனால் உலகம் நம்மை எதிர்மறையாளன் என்றே முத்திரை குத்தும். பாதையில் உள்ள பள்ளங்களைப் பற்றிப் பேசுவது, இலக்கினை நோக்கிய பயணம் வெற்றியாக முடிய வேண்டும் என்ற அடங்கவொண்ணா ஆர்வம் மட்டுமே காரணம். ஜோதிஜியின் எழுத்துகளில் இதைக் காண்கிறேன்.

      இன்றைய காலகட்டம், வாழ்க்கை என்பது பணம் சார்ந்து, சற்று கடினமாக மாறிவிட்ட சூழலிலும் கூட, சொந்த உழைப்பினால் சேர்த்த முதலீடு இல்லாமல், எதாவது பரம்பரை அல்லது தாய்தந்தையரின் சொத்தினை விற்றுவரும் பணம், அல்லது யாரிடமோ மிகைப்படுத்திக் கூறி, முதலீட்டினை கவர்ந்து ஆரம்பிக்கப்படும் தொழில்கள் எனத் புதியன துவங்கப்படும் காலமாக மாறிவிட்டது.

  அதேசமயம், ஏற்கனவே அந்தந்தத் துறையில் இருப்பவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தி, புதிய இயந்திரங்கள், புதிய கட்டமைப்பு என்று ஆரம்பித்தாலும் பழையதுக்கு மாற்று அல்லது நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்தல் என்றே மாற்றங்களைச் செய்து கொண்டும் இருக்கின்றனர். இது மற்றவர்கள் பார்வையில் அசுர வளர்ச்சி என்பதாகவே தோன்றுகிறது.

      இத்தகைய இன்றைய சூழலில், புதிய தொழில்முனைவோரை வரவேற்று, நீங்கள் நூலுக்குள் செல்லும்போது, ஆரம்பிக்கவேண்டிய இடம் கடைசி அத்தியாயம். அதை, முதலில் ஒருமுறை படித்துவிட்டு, பின்னர் நூலை முதலில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். இப்போது கடைசி அத்தியாயம் மூலம் ஜோதிஜி திருப்பூர் பனியன் தொழிலின் மீதும், புதிய தொழில் முனைவோர்களின் மீதும் கொண்டுள்ள அக்கறை எளிதில் விளங்கும்.

      சுமார் இருபது முப்பது வருடங்களுக்கு முன் இருந்த திருப்பூரை நூல் கண்முன்னே நிறுத்திவிடுகிறது. பணியிடங்களில் காமம் என்பது இப்போது சற்று நாகரீகமடைந்து பணியிடத்திற்கு வெளியே என்பதாக  வரவேற்கத்தகுந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. காரணம் Buyerரின் விதிமுறைகள் பின்பற்றுவதற்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகம் எல்லா இடங்களிலும் Camera மாட்டி இருப்பது, முக்கிய மாற்றம்.

        தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் Buyerரின் விதிமுறைகள், அதற்கான ஆடை உற்பத்திச் சூழல், இன்ன பிற வசதிகள் நிறைவேற்றுவது என்பது வேப்பங்காயாக இருந்தகாலம் நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போதோ, வசதிகளை விரும்பி ஏற்படுத்தி, Buyer வருவாரா என்று காத்திருக்கும் காலமாக மாறிவிட்ட சூழலில், புதிய தொழில் முனைவோர், தன்னை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது. 

    எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை, பகலை, ஒளியைச் சொல்வதற்காக இரவினைப்பற்றி விளக்குவதுபோன்று சொல்லியிருக்கிறார். இந்த, தவிர்க்கப்பட வேண்டிய மனப்பான்மை, குணங்கள் என்பவை, பனியன் தொழிலுக்கு மட்டுமானதல்ல, எந்தத் தொழிலானாலும் பொருந்தும்.

   கூடவே, நாம் தொழில் செய்ய இறங்கும் களமான திருப்பூர், திடீரென வளர்ந்த நகரம். திட்டமிடப்பட்டு வளர்ந்ததல்ல. அதற்குச் சற்றும் குறையாத நம் அரசுகள், தொழிலுக்குச் செய்து கொடுக்கும் வசதிகள். அதை கேட்டு வாங்கும் அமைப்புகளுக்குள் கட்சிகள் புகுந்துகொண்டு ஒற்றுமையின்றி குரல் ஓங்கி ஒலிக்காவண்ணம் பார்த்துக் கொள்கின்றன.

    இதையெல்லாம் மீறி தொழிலின் வளர்ச்சிக்கான நடைமுறைகள், குறிப்பாக ஏமாற்றும் பையர்களிடம் பணம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்கள், எச்சரிக்கைகள் என இளம்தலைமுறையினரின் பாய்ச்சல்கள்தான் திருப்பூர் மீண்டும் முன்னைவிட உத்வேகத்தோடு எழும் என்ற நம்பிக்கையை, நமக்கு மிச்சம் வைக்கின்றது.

திருப்பூரின் தொழிலில், அப்படியே தொடர்கிற இரண்டாம் தலைமுறையினர் மிகக்குறைவு. ஆனால் புதிய தலைமுறையினர் வருகை அதிகம். அவர்களின் வெற்றி சதவீதம் அதிகரிக்கவேண்டும் என்ற அக்கறையை மட்டுமே, இந்த நூலில் நான் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எந்தவடிவிலேனும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.

5 முதலாளிகளின் கதையை வாங்கிப் படிக்க இதை அழுத்தவும்.

5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by [ஜோதிஜி, Jothi G, Ganesan, Jothi]

நிகழ்காலத்தில்சிவா