"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label முழக்கம். Show all posts
Showing posts with label முழக்கம். Show all posts

Tuesday, February 2, 2010

மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று

கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது மனத்திலிருந்து எடுத்தெறிய வேண்டிய தொல்லைகளில் முதன்மையானது.

நம் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒருவகையில் நம் மனதிற்கோ, உடலுக்கோ துன்பம் தரும் நிகழ்வுகள் நடந்திருக்கும்.. நம்மை காத்து வளர்த்த தாய்,தந்தை, நெருங்கிய உறவினர் மறைந்திருக்கலாம்.

தொழில் சூழ்நிலைகளினால், பல்வேறு காரணங்களினால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். மிகவும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்,

பிறர் நம்மை புரிந்து கொள்ளாமல் அவமதித்திருக்கலாம்,

இந்த விசயங்கள் எல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக, ஒரு அனுபவமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அளவில் ஆராய்வதோடு, உணர்ந்து கொள்வதோடு, யோசித்து முடிவெடுப்பதோடு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

மாறாக நினைத்து நினைத்து வருந்துவது, கவலைப்படுவது என்பது நமது மனம் நிகழ்காலத்தில் இயங்குவதை தடுத்து இறந்தகாலத்தில் சஞ்சரிக்கும் நிலையையே ஏற்படுத்தும்.

விளைவு இனிமேல் நடக்க வேண்டிய செயலில் நம் கவனம் சிதறும். நமது செயல்வேகம் குறையும். உறவுகளில் சிக்கல்கள் நம்மால் வரலாம். பலன் இதிலும் இன்னும் நட்டம், இழப்பு, இந்த நிலை நமக்கு தேவையா? என சிந்திப்போம். 

மீண்டும் மீண்டும் அதை நினைத்து வருந்துவதால் நேரம் வீணாவதோடு மனம் இன்னும் பல்வீனமடைகிறது. அது அதிகமாகிறபோது அது உடல் நோயாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.


ஏனெனில் நடந்து முடிந்த ஒரு செயலை யாராலும் மாற்ற முடியாது. என்ன வருத்தப்பட்டாலும் நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய அடுத்த கட்டத்திற்கு நம்மால் முன்னேற முடியாது



இதற்கு மனதை வேறு பல நல்ல வழிகளில் திருப்பலாம். எந்த வழி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

அருள்கூர்ந்து, நடந்து முடிந்த துன்ப அனுபவங்களை மனதிலிருந்து அகற்றுங்கள். இதுவே பலவழிகளிலும் நாம் முன்னேற வழி.

வாழ்த்துகள்

Thursday, May 14, 2009

‘டத்து வசவரு டா !’

கோவில்பட்டி நகரின் நூலக வாரவிழா நிகழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் எண்கவனக சிறப்பு நிகழ்ச்சி. அதில் கொடுக்கப்பட்ட ஈற்றடி என்ன தெரியுமா?

‘டத்து வசவரு டா !’

ஈற்றடியின் பொருள் புரியாமல் அரங்கம் முழுவதும் குழப்பத்தில் அமைதியாய் இருந்தது. ஆனால் திருக்குறள்.இராமையா அவர்கள் தெளிவான புன்னகையுடன். ”ஈற்றடி கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவினார்.

”பெரும்புலவர் அங்கப்ப பிள்ளை !” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.

”அதானே பார்த்தேன். ஈற்றடியைப் பார்த்தால் சாதரணமாகத் தெரியவில்லையே.. இந்தக் கோவில்பட்டி மண்ணில் இப்படி ஈற்றடி கொடுப்பதற்கும் ஆள் இருக்கிறதா என்று சி்ந்தித்தேன்..! என்றார்.

உடனே அங்கப்பபிள்ளை, “பாடுவதற்குச் சிரமமாய் இருந்தால் வேறு ஈற்றடி தருகிறேன்” என்கிறார்.

திருக்குறளார் சிரித்துக்கொண்டே”ஈற்றடிக்கு மாற்றடி தேவையில்லை. பாடல் சைவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா அல்லது வைணவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா? என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் !” என்றார்

இப்போது அங்கப்பபிள்ளை ஆடிப்போய்விட்டார். ஏனெனில் அவர்,”சைவக் கடவுளுக்கு மட்டுமே இந்த ஈற்றடியை வைத்துப் பாடமுடியும்’என்ற முடிவில் இருந்தார். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,”வைணவக் கடவுளுக்கு எப்படி...இந்த ஈற்றடியை”....என்று இழுத்தார்.

உடனே ”நான் இரண்டு கடவுளுக்கும் பொதுவாகப் பாடிவிடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு

”ஆக்கம் அறிவுடைமை

ஆன்ற பொருளுடைமை

ஊக்கம் பெருமை

ஒழுக்கமொடு வீக்குபுகழ்

இத்தரையில் என்றும்

இனிதடைய வேகுக்கு/கரு

டத்து வசவரு டா !”

இந்த வெண்பாவைப் பாடினார்.

”ஆக்கம்,அறிவு,செல்வம்,ஊக்கம்,பெருமை,ஒழுக்கம்,புகழ் என்னும் இத்தனை நன்மைகளையும் எனக்கு அருள வேண்டும் !” என்று கடவுளிடம் வேண்டும் விதத்தில் இந்த வெண்பா அமைந்துள்ளது.

சரி, எந்தக் கடவுளிடம் வேண்டுவது?

சைவ நெறியைப் பின்பற்றுவோர் முருகனிடம் வேண்டுவதாக இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம் . எப்படி?

“குக்குடத் துவச அருள் தா !”

’குக்குடம்’ என்றால் சேவல், ‘துவசம்’ என்றால் கொடி. சேவற்கொடியோனாகிய முருகனே அருள் தா !’ என்பதாக பொருள் வரும்.


அதே சமயம் ’குக்கு’ வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘கரு’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டால் வைணவக் கடவுளான திருமாலுக்கு உரிய பாடலாக மாறிவிடும். ’கருடன்’ என்றால் பருந்து. துவசம் என்றால் வாகனம் ‘கருடனை வாகனமாய் உடைய திருமாலே அருள் தா ! ’ என்பதாகவும் பொருள்தரும் என விளக்கினார்.

இந்த விளக்கத்தைக் கேட்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

நன்றி 2002 ஏப்ரல் கவனகர் முழக்கம்