"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label மிர்தாத். Show all posts
Showing posts with label மிர்தாத். Show all posts

Wednesday, June 22, 2022

மிர்தாதின் புத்தகம் 2

                                     வேலைக்காரன், எசமானனின் எசமான்


இப்படி சொன்னாலே, நம்மை முறைக்கும் பலர் உண்டு. 

இன்றைய பொருளாதார சூழலில், உடல் சார்ந்த வேலைகளில், வேலைக்காரனே, எசமான். இதுதான் இன்றைய பெரும்பான்மை நிலவரம். ஒரு வேலைக்காரனின் சிரமங்களை அறியாதவனல்ல, நான். அவனின் நியாயங்கள் தெரியாதவனல்ல, நான். 

ஆயினும், மிகச்சிறுபான்மையினரே எசமானின் வேலைக்காரனாக இருக்கிறார்கள். இவர்களே வருங்கால எசமானர்கள். 

இதன் பொருள், எசமானின் சொல்லுக்கு, ஆமாம் சாமி போட்டு, காலம் தள்ளுபவர்கள் என்பது அல்ல. 

எசமானின் நிறுவனத்திற்கு எது நல்லதோ, எசமானின் தொழிலுக்கு எது நல்லதோ. அதை தொய்வின்றி அனுதினமும் செய்து முடிப்பவனே, நல்ல வேலைக்காரன். வருங்கால எசமானன்.

சரி சரி. வேலைக்காரன் எசமானனின் எசமான் என்று சொன்னது யார்? நான் அல்ல. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம்தான், இப்படி பேசுகிறது. 

இந்த நூல் தத்துவநூல் என்று யாரேனும் நினைத்திருந்தால், உங்கள் எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மிகெய்ல் நைமியின் வாழ்க்கை. சமூகத்திற்கு, தான் வாழ்ந்த வாழ்வை, எண்ணங்களை பகிர்ந்ததன் அடையாளம் மட்டுமே. இந்த வாழ்வின் மனநிலை நம்மால் அனுபவிக்க முடியுமா? முடியும். முடியவேண்டும் என்றுதான் மிகெய்ல் நைமி, இதை நூலாக எழுதி இருக்கிறார்.

இந்நூலின் பொருள், இதன் சொற்களில் இல்லை.  இதன் வாக்கியங்களில் இல்லை. இந்தப் புத்தகத்தின் பொருள் சொற்களுக்கு இடையிலும், இதன் வாக்கியங்களுக்கு இடையிலும், இதன் வரிகளுக்கு இடையிலும் இடைவெளிகளிலும் ஓடிக்கொண்டே இருக்கும்.  இந்த நூல் படிப்பதற்கன்று. அனுபவபூர்வமாக பருகுவதற்கே.

இங்கே சொற்கள் இரண்டாம்பட்சம்தான். வேறு ஏதோ ஒன்று (ஒருமை) முதன்மை பெற்றுவிடும். இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம், இது. மனதால் அன்று. புரிந்து கொள்ளப்பட வேண்டிய புத்தகம் அல்ல, இது. உணர வேண்டிய ஒன்று.  - இதெல்லாம் நான் சொன்னது அல்ல. ஓஷோ சொன்னது.

இந்த நூலை வெறுமனே படிக்க ஆரம்பியுங்கள். முன் கற்றவற்றை எல்லாம் பொருத்திப் பார்க்காது, படியுங்கள். இந்நூல், உங்களுக்கு தன்னைக் காட்டும்.

கண்ணதாசன் பதிப்பகம். மிர்தாதின் புத்தகம். (The Book of Mirdad - Mikhail Naimy)

தொடரும்.


Monday, June 20, 2022

மிர்தாதின் புத்தகம் -1




மனிதனுக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் இருமையை, இரண்டுபட்ட தன்மையை, அவன் உள்ளுணர்வில் கரைத்து, ஒருமைப்படுத்தி, அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை, அவனுக்கு திரை நீக்கி காட்டும் சுய தரிசனத்திற்கான தூண்டுதல் முயற்சிதான்  மிர்தாதின் புத்தகம் என்கிற நூலின் சாரம். - இப்படித்தான் முன்னுரை சொல்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டும் எனில் இது தியான அனுபவத்தை, வார்த்தைகள் அற்ற நிலை எதுவோ, அதனை வார்த்தை ஆக்கும் முயற்சியினை, செய்கிறது. அந்த வார்த்தை அற்ற நிலைக்கு, நம்மை அழைத்துச் செல்லும்போது, பல தருணங்களில் நம் மனதை சம்மட்டியால் அடித்து இழுத்துச் செல்லும். மயிலிறகால் தடவியும் கூட்டிச் செல்லும்.  இந்த நூலை எத்தனை முறை படித்து, புரிந்து, உணர்ந்து கொண்டு எவ்வளவு பேசினாலும், அது கால்பங்கு அளவே பொருந்தும்.

இந்த நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கிற உத்தி, நம் மனதை, திகைப்பில் ஆழ்த்தி, உறைய வைக்கிற வேலையை செய்து கொண்டே வரும்.  மனம் திகைப்பதும், அதிலிருந்து மீள்வதும் சாதரண விசயம் என்று எண்ணலாம். ஆனால் மிர்தாத், நம் மனதை மீள முடியாத திகைப்பில் தொடர்ந்து ஆழ்த்திக் கொண்டே வருவார்.

நிகழ்வுகளில் கலக்கும் இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகள், இதனூடே பயணிக்கும் உண்மை, மற்றும் கற்பனை  பாத்திரங்கள். மனநிலை மாறுபாடுகள், இதனினூடே பிரபஞ்சத்தில், இந்த பூமியில், இந்த விண்ணில் உருவெடுத்திருக்கும் அனைத்தும் எப்படி வேண்டுமானாலும், உள்ளே கலந்து வரும். மாயஜால உலகில் நடப்பது போன்று, எந்த தர்க்கத்துக்கும் உட்படாததாகவே நகரும். உட்பட்டும் நகரும்.

மிர்தாத்தின் புத்தகத்தைப் பற்றி, எதுவுமே சொல்ல முடியாது என்கிற போதும், உடையத் தயாராய் இருக்கிற மனதை, சல்லி சல்லியாய் உடைத்து நொறுக்கும் தன்மையை கொண்டது, இந்த புத்தகம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இந்நூலை பற்றி மனதில் பட்டதை எழுதும் எண்ணம் எனக்கு உண்டு. முழுக்க முழுக்க இது, எனக்கான புரிதல் மட்டுமே. ஒத்த கருத்துடையோராய் இருப்பின் உரையாடுவோம்.  மாற்றுக் கருத்து இருப்பின், நூலை உணர்வோடு படியுங்கள். உங்களுக்கு வேறு விதமான புரிதலை நிச்சயம், இந்தப் புத்தகம் கொடுக்கும். அதுவும் முழுக்கவே சரியாகத்தான் இருக்கும்.

இந்தப் புத்தகம் இப்புவியில் உள்ள 780 கோடி பேரால் படிக்கப்படுமாயின், அதே எண்ணிக்கையிலான புரிதல்களை தரும் என்பதே உண்மை.

வார்த்தை என்பது,  சுட்டிக் காட்ட  விரும்பும், பொருளை உணர்த்தும் குறியீடு மட்டுமே.  அந்த பொருளின் முழு பண்பை, அந்த சொல் முழுமையாய் எப்போதும் உணர்த்தாது.

கல் என்ற சொல், கல்லின் கனத்தை உணர்த்தாது. தென்னை என்ற சொல், அதன் உயரத்தை பயன்பாட்டையும் உணர்த்தாது. முல்லை, அதன் வெண்மையையோ, அளவையோ, நறுமணத்தையோ உணர்த்தாது. இன்பம் என்ற சொல் தனக்குப் பின்னால் எத்தனை கதைகளை ஒவ்வொருத்தருக்கும் வைத்திருக்கிறது? அப்படி இருக்கையில் உங்கள் இன்பத்தை நான் எப்படி உணர முடியும்?

 ஒரு சொல், சொல்லப்பட்ட உடனே, எழுதப்பட்ட உடனே, அவற்றின் பண்புகள் அனைத்தையும், நம் அனுபவ அறிவின் காரணமாக, அந்தச் சொற்களின் மீது ஏற்றி உணர்ந்து கொள்கிறோம்.

 - மிர்தாதின் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் புவியரசுவின் வார்த்தைகள் மேலே.

இங்கே சொற்கள் முக்கியம் அல்ல.
சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம் - மிர்தாத்

வார்த்தைகள் என்னுடையவை. அதற்கான அர்த்தம் உன்னுடையவை - ஓஷோ

நடைமுறை வாழ்க்கையில் அது தொழிலாகட்டும், குடும்பமாகட்டும், நட்புகள் ஆகட்டும். நம் வார்த்தை, நாம் நினைத்த பொருளை/அதிர்வினை அப்படியே சம்பந்தப்பட்டவருக்கு கொண்டு சேர்க்கிறதா என்பதை, சற்றே சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். குறைந்த அளவாக, கருத்திற்கு நெருக்கமாகவேனும் கொண்டு செல்கிறதா என்று பார்ப்போம். 

( தொடரும் )