"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label ஓஷோ. Show all posts
Showing posts with label ஓஷோ. Show all posts

Monday, December 31, 2018

பயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் ?

மனதை விலகி நின்று கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கவனிக்க முடியாமல் போகும். அப்போது குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்.  இதுதான் கடந்த இடுகைகளின்  சாரம்.

மனதை கவனித்தலில் உள்ள சூட்சமமே, புலன்களால் அறியப்படுகிற எதனையும், எதனோடும் இணைத்துப் பார்த்துக் கொண்டு, மனம் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கும்.. உங்களை அறியாமலே இது நடக்கும்.

கவனித்தல் கைவரப்பெற்றால் மனம் இந்த வேலையைச் செய்யாமல் அனுபவத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கும்.

இந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதில் உள்ளடங்கிய செய்திகளை அப்படியே மனம் வாங்கிக்கொண்டு இருந்தால் கவனித்தலில் முன்னேற்றம்.. மாறாக இப்படி செய்தால் அப்படி நடக்காதா? என்ற கேள்வி, இந்தமாதிரி எத்தனை படிச்சிருக்கேன். செஞ்சும் பார்த்தாச்சு, பலன் இல்லை என்றோ மனம், எதனோடாவது கொக்கி போட்டால் ’நழுவுகிறது’ என்றுதான் பொருள்.:)

எனக்கு ஒரு பனியனைப் பார்த்தால் துணி என்ன ஃபைனா? இண்டர்லாக்கா? சிங்கிள் ரிப்பா? லூப்நிட்டா? டர்க்கியா? லைக்ரா பைனா? என்று பார்த்த மாத்திரத்தில் மனம் தன்னிச்சையாக விடையினை உணர்ந்துகொள்ளும் . இதற்கு விநாடிக்கும் மிகக்குறைவான நேரமே போதும். இது வெளியே குவியும் மனம்.

ஆனால் கவனித்தல் எனக்கு வசப்படும்போது துணியை துணியாக மட்டுமே பார்ப்பேன். பார்க்கிறேன் என்ற உணர்வு இருக்கும். துணி என்ன வகைன்னு சொல்லு என மனதிற்கு கட்டளை என்னுள் உருவகம் பெற்று, மனதிற்கு தரப்பட்டபின்/தரப்பட்டால் மட்டுமே அதே விநாடியில் இந்த துணி இன்ன வகை என்று மனம் எனக்குச் சொல்லிவிட்டு அமைதியாக வேண்டும். இது போல் எல்லா கணங்களிலும் விழிப்புணர்வு கைவரப்பெற்ற நிலை. ஒவ்வொரு கணமும் நிகழ வேண்டும். அவ்வப்போது மட்டுமே இது எனக்கு நிகழ்கிறது. இதில் நிலைத்த தன்மை வேண்டும் என்ற முயற்சிதான் எனது இந்த எழுத்துகள்.:)

சரி வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்போது எதிரே வரும் லாரியினை பார்த்து, இப்படி வருகின்றதே ஒதுங்க வேண்டுமே மனதின் உத்தரவிற்கு காத்திருப்பதா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எப்பொழுது வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டத் துவங்கி விட்டீர்களோ அப்போதே மனம் இயங்கத் தொடங்கிவிடும்...மிகக்குறைந்த அளவில், வாகனத்தை இயக்கும் அளவிற்கு மனம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஓட்டும்போது தன்னிச்சையாக கையும் காலும் இயங்க, மனம் எங்கோ நழுவத் துவங்கும். இதையே எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை என்று சாதரணமாகச் சிலர் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வற்ற நிலைதான் தவிர்க்கப் படவேண்டும்.

மனதை இப்படிக் கவனித்துப் பழக்க, சாத்தியக்கூறான வழிகளில் ஒன்று மந்திரம்.. , அலைகிற மனதை கட்டுக்குள் கொண்டுவர மந்திரங்கள் பெரும்பாலும் உதவும். ஆனால் அவைகளைக் கையாளும்போது மட்டுமே பலனளிக்கும். அதன் பின் மனம் மீண்டும் குரங்காகிவிடும். இது மனதின் தன்மை :)

இதைக் கட்டுக்குள் கொண்டு வர நமது மனதை நமது உடலோடு பிணைக்க வேண்டும்/ ஏற்கனவே அப்படித்தானே இருக்குது என்கிறீர்களா? மனதின் பிறப்பிடம் நமக்குள்ளே.  ஆனால் அது விளையாடிக் கொண்டு இருக்குமிடம் நமக்கு வெளியே, ஊர் உலகம் அரசியல் என்று எங்கு வேண்டுமானாலும் :)

மனதைக் கவனிக்க, அதை நம் கண் பார்வையிலேயே (ஙே..) வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்கமோ, இந்தப்பக்கமோ ஓடவிடக் கூடாது. அதற்குச் சிறந்த வழி, சரியான வழி, உடலை கவனிக்கச் செய்தல். இது மனதை பழக்குவதற்கான ஆரம்பநிலைப்பாடம். உடலின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கச் செய்வதுதான். முயற்சித்துப்பாருங்கள். ரோபோட் மாதிரி அசைவதா என்கிற குழப்பம் வருகிறதா?  இயல்பான செயல்களில் உங்களின் அசைவுகளோடு மனதை ஒட்டவையுங்கள்.  அது  அப்படியே அசைவுகளுடன் பொருந்திக்கொள்வதை அனுபவமாக அடைவீர்கள்.

வெற்றி உண்டாகட்டும்.


Thursday, August 30, 2018

ஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ


முன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது.  முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது.   கிறிஸ்துவர்களுக்கு   இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது .  ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும்,  நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.

இயேசுவைத் தெரியும்,  ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும்,  பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும்.  உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன.   இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது

ஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்.,  பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.

 அப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ  விட்டு விலகி விடுவதும் இல்லை.  மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.  அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்  பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்

ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா



Sunday, October 22, 2017

தானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ


நீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது

ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.

ஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும்  எண்ணங்கள்.

இந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.

ஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.

உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது

எதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்தனத்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா






Tuesday, June 27, 2017

கர்ம வினைகள் பற்றி.... ஓஷோ


உன் பெற்றோரை, உன் ஆசிரியர்களை, அரசியல்வாதிகளை, சாமியார்களை, இப்படி சமூகத்தில் பலரையும், வெகுவாக நம்பிக் கொண்டிருந்து விட்டாய்.  அவர்கள் சொன்னதை எல்லாம் மூட்டை கட்டி உன்னுள் அடுக்கி வைத்துக் கொண்டே இருந்துவிட்டாய்.

ஏழ்மையுடன் இருக்கிறாய். காந்தி ஏழைகளைத் தரித்திர நாராயணர்கள் என்றார். ஏழைகள் கடவுள்களாம். ஏழ்மை தெய்வீகமாம். இது உண்மையென்றால் ஏழையாக இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள் ?

இந்த வியாக்யானத்தை சமணர்கள், பெளத்தர்கள் போன்றோர் கடவுளை நம்பாதவர்கள் என்பதால், அவர்களுக்கு தரமுடியாது அல்லவா ? அவர்களுக்காகவே கர்மா கோட்பாடு வந்தது

உன்னுடைய முற்பிறவிகளில் பாவங்கள் செய்துவிட்டாய். அதனால் இந்தப் பிறவியில் ஏழையாக இருக்கிறாய்., துன்பங்கள் அனுபவிக்கிறாய். முற்பிறவியில் பாவங்கள் செய்திருப்பதால் அதை இந்தப் பிறவியில் கழித்துவிட வேண்டும். அதனால் வறுமை, துன்பம் அனுபவி. எதிர்த்தால் இன்னும் புதிய கர்மவினைகளைப் புரிந்து அடுத்த பிறவிக்கு வழிவகுக்கிறாய். மனதார துன்பப்பட்டு கர்மாவைக் கழித்துவிடு.

இப்படிச் சொல்லிச் சொல்லி மனிதர்களை மாடுகளாகவும், எருமைகளாகவும் ஆக்கிவிட்டார்கள். குற்ற உணர்ச்சி கொள்ள வைத்து, எந்த  எதிர்ப்பும் இன்றி துயரத்துடனும், துன்பத்துடனும் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.

நான் சொல்வதை வெறுமனே நம்பாதே. நம்புகிறவர்களை உருவாக்குவதல்ல என் வேலை.  முகம்மதுவை, கிறிஸ்துவை, புத்தரை நம்பிக்கொண்டிருந்த நீ என்னையும் நம்ப ஆரம்பித்துவிடாதே. என்மீது நம்பிக்கை வை என்று நான் சொல்லவில்லை. எல்லா நம்பிக்கைகளையும் ஓரம்கட்டிவிட்டு நீயாக உனக்குள் பார் என்கிறேன்.  பரிசோதனைகளை மேற்கொள். தியானி, அனுபவங்களை உணர்ந்துபார். சாத்திரங்களை நம்பாமல் உன் அனுபவங்களை நம்ப ஆரம்பித்து விடுவாய்  அனுபவங்கள் உன்னுடையது ஆகும்வரை எந்தப்புரிதலாலும் பயன் இல்லை.

உனக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் உன்னிடம் ஏற்கனவே உள்ளது.  உள்ளே திரும்பிப் பார்க்க வேண்டியது மட்டுமே பாக்கி. நாம் கடவுளின் ஒரு பகுதி. கடவுள் நம்மில் ஒரு பகுதி. நீ உள்ளே திரும்பிக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறது.

ஆனந்தம் அன்பு பரவசம் என்று வற்றாத பொக்கிசம் உள்ளே இருப்பதை காண்பாய்.
.
ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா





Monday, June 26, 2017

கேள்வியும் பதில்களும் - ஓஷோ

முந்தய பதிவில், கேள்வி எப்போதுமே சரிதான்.. பதில்கள்தாம் தவறுக்கு உட்பட்டவை என்று பார்த்தோம். வாழ்க்கை அனுபவத்தில் பல வருடங்களுக்கு முன் சரியாக இருந்தது. தற்போது, எனக்குள் எழுகின்ற கேள்விகள் அனைத்தும் தேவையில்லாதவை என உணர்கிறேன்.

பிறரது கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேருகின்றபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. மறைமுகமாக ஒரு பிரச்சினை உண்டு.. பலவிதமான பதில்கள் முந்திக்கொண்டு நிற்கும். மனம் சார்ந்த கேள்விகள் என இங்கே குறிப்பிடுவது அவசியம்.

எனக்குள் எழும் கேள்விகளே தேவையில்லை என்றபொழுது ஏற்கனவே எனக்குள்  இருக்கின்ற பதில்கள் பலவும் இல்லாது போக வேண்டியவையே..

ஆம். கற்றவை அனைத்தும் பயன்பட்ட காலம் போய், கழித்துவிடவேண்டிய தருணம் வந்துவிட்டது.

இனி ஓஷோவின் வார்த்தைகளைப் பார்ப்போம்.
                                                                           ----


மனதில் பதில்கள், பதில்கள் என்று பலவும் இருக்கின்றன.  இது முடிவில்லாது தொடரும். ஆனால் உண்மையில் பதில் என்பது ஒன்றே ஒன்றுதான்.
அந்த பதில் எல்லா கேள்விகளையும் கரைத்துவிடும்.

 கேள்விகளின் சித்திரவதை இருந்து கொண்டேதான் இருக்கும். மனதில் பதில்கள் இருக்கும்வரை புதிய கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். மன வேர் இருக்கும்வரை கேள்விகள் கிளைத்து, புதிய தளிர்கள் அரும்பிக் கொண்டேதான் இருக்கும்.

மனதின் பிணைப்பை அறுக்கும்போது, அதன் வேர்களை வெட்டுகிறாய்.
மனதோடு ஆன அடையாளங்களை விட்டு ஒதுக்கும்போது, எதனோடும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பரிசுத்தமாக, ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டு, கவனித்துக்கொண்டு இருக்கும்போது எல்லோரிடத்திலும் கேள்விகள் கரைந்து போகின்றன.

இப்போது மிஞ்சி இருப்பது ஒரே ஒரு பதில்தான். அதுவே ஆழ்ந்த நிர்ச்சலனம்.

ஒருவேளை  கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் தெரிவது போல் நினைக்கிறாயா ? அது ஒரு பிரமை. இந்த மனம் பிரமைகளைத் தோற்றுவிப்பதில் வெகு சமர்த்து. இந்த மனம் பசப்பக் கூடியது. அறிவு என்ற பெயரில் உன்னை ஏமாற்றிவிடும். எல்லாவற்றிலும் உன்னை ஏமாற்றக் கூடியது.  ஏற்கனவே ஞானியாகி விட்டாய். புத்தனாகிவிட்டாய் என்று கூட உன்னை நம்ப வைத்து ஏமாற்றி விடும். எச்சரிக்கையாக இரு.

மனதைக் கூர்ந்து கவனி. அப்படி கவனிப்பதில் கேள்விகள் மறைந்து போகின்றன. அவ்வளவே. பதில்கள் கிடைத்துவிடுகின்றன என்று நான் சொல்லவில்லை.

பதில்கள் என்ற தகவல்களை நூல்கள், பல்கலைக்கழகம், ( இணையம் ) என எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். விபரம் தெரிந்தவராக ஆகிவிடலாம். ஆனால் என் பணியோ '' நீ கற்றுக்கொண்டதை விட்டுவிட வைப்பதுதான்” இப்போது உன்னிடம் பதில்கள் இருப்பது இல்லை. இயல்பாகச் செயல்படுகிறாய். ஏற்கனவே இருக்கின்ற முடிவுகளைச் சார்ந்தோ, கடந்த காலம் சார்ந்தோ இல்லாமல் இயல்பாய் நீரூற்று கிளம்புவது போல் உன் செயல்கள் அமைகின்றன.



ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா


Thursday, June 15, 2017

கவனி.. கவனி.. கவனி - ஓஷோ

கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்

கவனித்திருப்பது.

கவனி.   உன் மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனி.  உன்
ஒவ்வொரு  செயலையும், ஒவ்வொரு அசைவையும்  தொடர்ந்து கவனித்துப் பார்.

நடக்கும்போதும், பேசும் போதும், உணவு உண்ணும் போதும், குளிக்கும் போதும், உன் ஒவ்வொரு அசைவையும் கவனி. அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இரு.

Wednesday, June 14, 2017

குருவை உணரும் வழி - ஓஷோ

அன்புக்குரிய போதிச் சத்துவர்களே.. என்று உங்களை நான் அழைக்கும்போது, என்னுடைய அறிவு நிலையில் நின்று பேசவில்லை. 

என் உயிரினை உங்களின் உயிருக்குள் கொட்டுகின்றேன்.

இது சக்திகளின் சங்கமம். ஆன்மாக்களின் சந்திப்பு. அதனால்தான் என்னோடு நீங்கள் இருக்கும்போது நான் பேசுவது சத்தியம் ஆகத் தெரிகின்றது. உங்களால் முழுமையாக நம்ப முடிகின்றது.

Tuesday, June 13, 2017

தூசு படியாத கண்ணாடி - ஓஷோ

மனம் என்பது ஆசைகளின் தொகுப்பு. இந்த ஆசைகள் எல்லாம் நினைவகத்தைச் சார்ந்தவை. நினைவகம் என்றபோதே கடந்தகாலம்தான்.

ஆனால் நெஞ்சம் இந்தக் கணத்தில் வாழ்கிறது.அதன் துடிப்பு இந்தக் கணத்துக்கானது. இதனாலேயே பரிசுத்தமானதாகிறது.

மனமோ நெஞ்சுக்கு நேர் எதிர்., மனம் எப்போதுமே இங்கே இப்போதயதில் இருப்பதில்லை. கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களை அசைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.  அல்லது அத்தகைய அனுபவங்களை எதிர்காலத்தில், எதிர்நோக்கிக் கற்பனையில் திளைக்கின்றது.
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டு நிகழ்காலத்தில் கால் ஊன்றுவதில்லை. நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
இப்போது பிரச்சினையாக இருப்பதே அறிவார்ந்த மனம்தான்..

நீ உன் இதயத்திலிருந்து, மூளைக்குள் குடி புகுந்து விட்டாய். பகலில் எண்ணங்கள், இரவில் கனவுகள் என வாழ்க்கை கழிந்து கொண்டே இருக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும் ?

வேதங்கள், உபநிடதங்களில் அழகிய வார்த்தை அலங்காரங்களைக் காணும்போது கவனமாக இரு. தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கவனி. வார்த்தைகளில் தொக்கி நிற்கும் செய்தியை மட்டும் பார். ஆனால் நுண்மையான தர்க்கத்தில் உன் நேரத்தை வீணடிக்காதே. வார்த்தைகளில் அதீத கவனத்தை செலுத்தி அர்த்தம் தேடிக்கொண்டு இருக்காதே.

மெளனம் கைக்கொள். நெஞ்சகத்தை நோக்கு., இயல்பைக் கைக்கொள், உன்னோடயே இயைந்து பிரவாகி. இதுவே நீ சுதந்திரம் அடைய வழி 

இயல்பு என்பது என்ன ? பிரக்ஞையே உன் இயல்பு.

மனதின் சலனநிலையை, எண்ணங்களின் வயப்பட்டு பின் செல்லுதலை, வெளியே போவது என்று குறிக்கின்றோம். எண்ணங்களுக்கு அகப்படாமல் இருப்பது என்பதே உள்ளே போவது.. எண்ணமும் ஆசையுமே சேர்ந்ததே மனம்., இதுவே வெளியே போகும் யாத்திரைக்கு எரிபொருள். இங்கே ஆசை என்பது மனம் எதிர்காலத்தில் சிக்கிக் கொண்டு இருப்பதையே குறிக்கும் என்பதையும் அறிக.

மனம் வெளியே போகமல் இருந்துவிடுவதே.....   உள்ளே இருப்பது

மனம் வெளியே போகாமல் எப்படி நிறுத்தி வைப்பது ? எண்ணங்களை அலட்சியப்படுத்திவிடு. அவைகள் பற்றி கவலைப் படவேண்டாம்
அவை இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாதே. அவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதே. இருக்கட்டும் விடு. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு மெளனமாக இருந்துவிடு. கவனிப்பது என்பது கண்காணிப்பதல்ல.. விழிப்போடு இருத்தல், சாட்சியாக இருத்தல்.

மனம் உள்ளே போக என்ன வழி ? உன்னுடைய எண்ணங்களை  உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இரு.  உன் எண்ணங்களும் நீயும் வேறு வேறு என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி விட்டேற்றியாக உன் எண்ணங்களை கவனித்துப்பார். இவை தவறு, இவை சரி என்றும் தீர்மானங்களின் பாற்பட்டு எண்ணங்களைப் பார்க்காதே..  அவை பற்றி எந்தக் கருத்தும் எழுப்பாதே.

எண்ணங்களின் ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிரு.

எண்ணங்களின் போக்குவரத்து நகர்வதற்கு நீ சக்தியைக் கொடுக்கும் வரைக்கும் அது நகர்ந்து கொண்டுதான் இருக்கும். உன்னுடைய சக்திதான் அதற்கு ஆதாரம்.. அந்த சக்தியை நிறுத்தினால் எண்ணப் போக்குவரத்து நின்றுவிடும்.. அப்படி உன்னை அறியாமல் வழங்கும் சக்தியை தடுப்பதுதான் கவனித்தல் என்ற செயல். கண்ணாடியைப் போல் மனம் எதையும் வெறுமனே பிரதிபலிக்க வேண்டும்.  மாறாக உருமாற்றம் செய்யக்கூடாது.

வெளிச்சத்தை பார்க்கும் குழந்தை இது சூரியன், இல்லை மின்சார விளக்கு, இல்லை வாகன விளக்கு, என்று சொல்லிக்கொள்ளுமா ? எல்லாவற்றையும் பார்த்தாலும் எதைப் பற்றியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாது.  இதுதான் பிரதிபலிப்பது என்பது ஆகும்.

எண்ணங்கள் என்பவை தூசுத் துகள்கள்..
தூசு படியாத கண்ணாடியாக இருங்கள்.

ஓஷோ
தம்மபதம் I






Saturday, June 10, 2017

அந்த உணர்வு உங்களைப் பற்றிக்கொள்ள.. ஓஷோ

அந்த உணர்வு உங்களைப் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள். அப்போது அது என்னவென்று புரிந்துவிடும். ஆனால் அதற்கு மாறாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். அதை நீங்கள் ‘பற்றிக்’ கொள்ளவே முயல்கிறீர்கள். மனம் அப்படித்தான் விரும்புகிறது. இதைத்தான் மனம் ‘புரிந்து கொள்ளுதல்’ என்று உங்களுக்குச் சொல்கிறது. எதையாவது ஒன்றைப் பற்றாத வரை மனம் நிறைவடைவதே இல்லை.

எதுவும் செய்யாமல் , சாதரண மெளனத்துடன் உடலளவிலோ, உணர்வுபூர்வமாகவோ, அறிவுபூர்வமாகவோ எதுவும் செய்யாமல் , சும்மா அப்படியே முழு அமைதியுடன் இருக்க முடிகிறதா ? முடிந்தால் அது உங்களைப் பிடித்துக் கொள்ளும்.  அதை அறிவதற்கான ஒரே வழி, அது உங்களைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பது மட்டுமே.

பறவைகளின் பாடல் கேட்கும்போது, காற்று மரங்களிடையே வீசும்போது, நீரோடையில் தண்ணீர் சலசலத்து ஓடும்போது உங்களை அந்த உணர்வு பற்றிக் கொள்ள அனுமதித்தால் போதும், சட்டென எங்கிருந்தோ உண்மை வெளியாகிவிடும். உங்களுக்குள் தம்மம் தோன்றிவிடும்.

வைகறை விண்மீன் மறைவதைப் பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போதுதான் புத்தர் ஞானம் பெற்றார்.
புத்தருக்கு ஞானம் கிட்டியது மரத்தடியில்...
மகாவீரருக்கு ஞானம் கிட்டியது வனத்தில் சும்மா உட்கார்ந்திருந்த போது...
முகம்மதுவிற்கு ஞானம் பிறந்தது மலையொன்றின் உச்சியில்...

அதிகாலையில் எழுந்துபோய் உதிக்கும் சூரியனைப் பார். நடு இரவில் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைப் பார்.. நிலவினைப் பார். மரங்களையும் பாறைகளையும்  நண்பனாக்கிக் கொள். ஆற்றருகே அமர்ந்து அதன் கலகலப்பைக் கேள்.  அப்படிச் செய்யும்போது இயற்கை உன்னைத் தன் வசப்படுத்த விடு. இயற்கையை மனதால் உன் உரிமையாக்க நினைக்காதே.  உன்னை அதன் வசப்பட அனுமதித்துவிடு.

அது உன்னை வசப்படுத்தட்டும்.  விடு... அதை ஆடி அனுபவி..  பாடி அனுபவி. அதனோடு இரண்டாகக் கலந்துவிடு.அதுதான் அதை அறிந்துகொள்ளும் ஒரே வழி.

ஓஷோ
தம்மபதம் I

பொழுதுபோக்கு - கடவுள் - ஓஷோ


பொழுது போக்கு

எத்தனை நாளைக்குத்தான் உணவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டு இருப்பது ?

யாருக்குமே அலுப்புத் தோன்றத்தான் செய்யும்.  அப்படி அன்றாட வேலையில் அலுப்புத் தோன்றும்போது மாற்றாக இரண்டு வழி உண்டு.

ஒன்று சும்மா இருப்பது... சும்மாயிருப்பது என்பது தன்னோடேயே மட்டும் இருப்பது. அவரவர் உள்ஆழத்தில் இருப்பதை எதிர்கொள்வது. ஆனால் சும்மா இருப்பது என்பது உன்னை பயப்பட வைக்கின்றது.  முடிவில்லாத, பயத்தை தரக்கூடிய, புரிந்து கொள்ள இயலாத, பரந்திருக்கும் மனதின் அளவே பெரியதொரு நடுக்கத்தை தரக்கூடியதாக அமைந்துவிடுகிறது.

மற்றொன்று... ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தில் இறங்கிவிடுவது.  அதற்குப் பொழுதுபோக்கு என்று பெயர் வைத்துவிடுவது. எல்லாப் பொழுதுகளும் உன்னிடமிருந்தே உன்னைத் தப்பித்திருக்கச் செய்யும் முயற்சிகள்தாம். பொழுதுபோக்கு என்பதே வேலையின் மற்றொரு பெயர்தான். உண்மையான வேலை உனக்கு இல்லாத நேரங்களில் பொழுது போக்கு என்ற போலி வேலையில் ஈடுபட்டு பொழுதைக் கழிக்கிறாய்.

ஞாயிற்றுக்கிழமைக்கு ஏங்குகிறாய்.. ஏதோ ஒன்றைச் செய்து நாளைக் கழிக்கிறாய். அதற்கு பொழுதுபோக்கு என்று பெயர் வைத்து விடுகிறாய். சம்பளமில்லாத வேலையின் பெயர்தான் பொழுதுபோக்கு.

உனக்கு ஓய்வெடுக்கத் தெரியாது. தளர்வாக இருக்கத் தெரியாது. இதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிப்பார். எப்போதெல்லாம் செய்வதற்கு ஒன்றுமில்லையோ, அப்போதெல்லாம் உன்னோடயே இருந்து பார்.



                                                  ********************



கடவுள் ஒரு முழுமை. முழுவதும் அவரே. இருப்பவரும் அவரே. நாம் அவருடைய பகுதிகள். பகுதிகள் முழுமையைப் பார்த்து பயந்திருப்பது ஏன் ?
முழுமைக்குத் தன் பகுதிகளின் மீது அக்கறை இருக்கின்றது.. பகுதிகள் இல்லாமல் முழுமை இருக்க முடியாது அல்லவா ?
அதனால்தான் முழுமை தன் பகுதிகளை அலட்சியப்படுத்த முடியாது.

இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமையின்மீது விசுவாசம் பிறக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமை தன்னை வசப்படுத்தி வைத்துக் கொள்ள, தன்னை ஒப்புக் கொடுக்கிறான். பயங்களை விட்டுத் தொலைக்கிறான். சரண் அடைகிறான். முழுமை இருப்பது சரணாகதியில், விசுவாசத்தில்...

ஓஷோ
தம்மபதம் I
                                                             



Friday, June 9, 2017

பிரார்த்தனை - தியானம் - ஓஷோ

பெளத்தம் பற்றி ஓஷோ குறிப்பிடும்பொழுது..

கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து பெளத்தம் வேறானது.
இம்மூன்று சமயங்களும் ஏதோ ஒரு வகையில் உரையாடலை பற்றிக் கொண்டிருந்தன. உரையாடல் என்று வந்தாலே இருமையை, துவைதத்தை வலியுறுத்தல்தான்… 

பிரார்த்தனை என்றவுடன் உன்னிலும் வேறாக கடவுள் ஒருவர் இருக்கின்றார். நீ அவருடன் பேசுகிறாய் என்று பொருளாகி விடுகிறது. அந்த உரையாடல் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கு நிலவுவது பிரிவினைதான். பிளவுதான். பிரார்த்தனை என்பதே இன்னொருவரிடத்தில் முறையிடுவது.. உண்மையோ உண்மையில்லையோ யாரிடமாவது முறையிடுவதுதான்.

ஆனால் பெளத்தமோ தியான மதம். மெளனமே இதன் வழி.  தியானத்தில் முறையீடே கிடையாது, ஒருவர் மெளனத்தில் வீழ்ந்துவிடுவது.. ஒன்றுமில்லாமல் அப்படியே காணமல் போய்விடுவது. ஒருவர் இல்லாமல் போய்விடும்போது எஞ்சி நிற்பது தியானம் மட்டுமே.

                                *********************

புத்தர் தியானத்தை மட்டுமே வலியுறுத்துகிறார். அது கடவுள்தன்மையின் ஒரு பக்கம் மட்டுமே. 

முகம்மது நபி தொழுகை, இசை, பாடல் இவற்றினை வலியுறுத்தினார். குரானைப்போல் வேறு எந்த வேதநூலிலும் அந்த அளவு இசையைக் காணமுடியாது.

உலகில் மூன்று வகையான சமயங்கள் மட்டுமே உண்டு. 

இஸ்லாம், இந்து, கிறிஸ்துவம், யூதம், இவை இசைச் சமயங்கள். 

இரண்டாவதாக பெளத்தம், தாவோயிசம் போன்றவை தியான சமயங்கள். 

சமணமோ கணிதச் சமயம். மகாவீரர் சார்புடைமைக் கோட்பாடு பற்றிப் பேசிய முதல் மனிதர். அதன்பின் இருபத்தி ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் ஐன்ஸ்டீனால் அறிவியல் பூர்வமாக அதை நிரூபிக்க முடிந்தது.

இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்த முழுமையானதொரு சமயத்தையே நான் (ஓஷோ ) வழங்க  முயல்கிறேன்.

ஓஷோ
தம்மபதம் I

Tuesday, January 31, 2017

சிறுபுல்லும் பிரபஞ்சமும் -- ஓஷோ

'தம்ம' என்ற சொல் பல பொருள் தரும். இயற்கைச் சட்டம் அல்லது விதி என்ற ஒரு பொருளும் உண்டு. விதி என்பது  பிரபஞ்சத்தையே ஒன்றிணைத்து வைத்திருக்கும் மேலான விதி.. கண்ணுக்குப் புலப்படாத விதி., புதிரான விதி., ஆனால் சர்வ நிச்சயமாய் இருக்கும் விதி.

இல்லாவிட்டால் பிரபஞ்சம் சிதறுண்டு போகும். எல்லையற்ற, விசாலமான பிரபஞ்சம் எவ்வளவு இணக்கமாக, அமைதியாக, ஆற்றலுடன் ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உணருங்கள். எல்லாவற்றையும், எல்லாவற்றோடும் இணைக்கும் ஆதார சக்திப் பிரவாகம் ஒன்று இருக்கின்றது என்பதற்கு, இந்த ஒத்திசைவான இயக்கமே சான்று.

எல்லாவற்றையும் இணைக்கும் பாலமாக அமைந்திருப்பது அந்தச் சக்திப் பிரவாகம். நாம் தீவுகள் அல்ல. ஒரு சிறு புல்லின் இலையும் மாபெரும் நட்சத்திரத்தோடு பந்தப்பட்டிருக்கின்றது. ஒரு சிறு புல்லின் இலையைச் சிதைத்தாலும் மதிப்புமிக்க பிரபஞ்சப் பகுதி ஒன்றைச் சிதைத்ததாகவே ஆகிவிடும்.


*********************************************************************************
சொற்கள் சக்தியற்றவை. பகுதி உண்மையைத்தான் சொற்கள் உணர்த்தும். முழுமையாக உணர்த்த வல்லது மெளனமே.
அர்த்தம் என்னுடனேயே தங்கிவிட சொல் மட்டுமே உங்களை அடைகிறது. அந்தச் சொல்லுக்கு உங்கள் அர்த்தத்தையே நீங்கள் தருகிறீர்கள்.அதில் உங்கள் அர்த்தமே இருக்கும். என் அர்த்தம் இருக்காது

வார்த்தைகளை புரிந்து கொள்வது மிகச் சிரமம்.
அதைவிட உங்களுக்கு புரியவில்லை எனப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். இந்த இரண்டுமே ஏறத்தாழ சாத்தியமில்லை. அதனால் இருக்கும் ஒரே சாத்தியக்கூறு தவறாகப் புரிந்து கொள்வதுதான்.


********************************************************************************************************************************** 

காலம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு.  இருப்பதென்னவோ எப்பொழுதும் இப்பொழுதுதான். இயற்கைக்கு இறந்தகாலமும் தெரியாது. எதிர்காலமும் தெரியாது. இயற்கை அறிந்ததெல்லாம் நிகழ்காலம் மட்டுமே.

ஓஷோ
தம்மபதம் 1
கண்ணதாசன் பதிப்பகம்

Thursday, December 15, 2016

தம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ


வெறுப்பு என்பது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பது. நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது. இறந்தகால, எதிர்காலத் தொடர்பில்லாமல் வெறுப்புக் காட்டவே முடியாது.

நேற்று யாராவது உங்களை அவமானப்படுத்தி இருப்பார்கள். அதை ஒரு மனக்காயமாக,  தலைவலியாக நீங்கள் சுமந்து கொண்டு இருக்கலாம். அல்லது நாளை யாராவது  உங்களை அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமோ, அதன் நிழலோ இருக்கலாம்.

இப்படிப்பட்ட வெறுப்பு,  வெறுப்பையே உருவாக்கும்.  வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும்போது அவர் மனதில் உங்களுக்கு எதிரான வெறுப்பையும் உருவாக்கி விடுகிறீர்கள்.

ஆனால் அன்புக்கு இறந்தகாலமும் கிடையாது எதிர்காலமும் இல்லை. அன்பு காரணமில்லாமல் நிகழ்வது. அது உங்கள் பரவசத்தின் வெளிப்பாடு. பரவசமோ விழிப்பின் துணைத் தயாரிப்பு. விழிப்புணர்வு ஏற்பட்டதும் ஆனந்த பரவசம் தானாக வந்துவிடும்.

நமது அன்பு வேறு... உண்மை அன்பு வேறு.

நமது அன்பு வெறுப்பின் மறுபக்கமே தவிர வேறில்லை. அதனால் நம் அன்பிற்கு ஒரு பின்னணி இருக்கும். யாராவது உங்களிடம் நேற்று இனிமையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு அவர்மீது அன்பு தோன்றி இருக்கும். அது அன்பே அன்று.. வெறுப்பின் மறுபக்கம்தான்.

அதனால்தான் எந்தக்கணத்திலும் அன்பு வெறுப்பாக மாறிவிடக்கூடியதாக இருக்கின்றது. மாறுவேடம் பூண்ட வெறுப்புதான் உங்கள் அன்பு.

உண்மையான அன்பிற்குப் பின்னணி தேவை இல்லை. உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பொழிவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமும் தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.

நான் குறிப்பிடும் அன்பு அப்படிப்பட்ட அன்பு. இதற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால் அதுவே சுவர்க்கம். அன்பே ஒளி. உங்கள் இருப்பின் ஒளி.

அன்பு மட்டுமே வெறுப்பை விரட்டும். ஒளி மட்டுமே இருளை விரட்டும். இதுவே நிரந்தரவிதி. புத்தர் இதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்
               “ஏஸ் தம்மோ ஸனந்தனோ..”

ஓஷோ
தம்மபதம் 1

Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)


Wednesday, December 19, 2012

பயனற்றதைப் பேசாதே...ஓஷோ

குழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும். வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும். இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம். இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் நமது மன உளைச்சலுக்கும் அமைதி இன்மைக்கும் காரணமாகவும் அமைகிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ?

மனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும். மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு  நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.

பயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர  வாழ்கையை முழுமையாக வாழ முடியாது:)

கண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள். எவ்வளவு நேரம் முடியும்? சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும். அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது  இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.

சாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல். இதுவே தியானத்தில் நடப்பது.:)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.

கவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.

தியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம் :)