"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label கண்ணதாசன் பதிப்பக. Show all posts
Showing posts with label கண்ணதாசன் பதிப்பக. Show all posts

Monday, June 20, 2022

மிர்தாதின் புத்தகம் -1




மனிதனுக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் இருமையை, இரண்டுபட்ட தன்மையை, அவன் உள்ளுணர்வில் கரைத்து, ஒருமைப்படுத்தி, அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை, அவனுக்கு திரை நீக்கி காட்டும் சுய தரிசனத்திற்கான தூண்டுதல் முயற்சிதான்  மிர்தாதின் புத்தகம் என்கிற நூலின் சாரம். - இப்படித்தான் முன்னுரை சொல்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டும் எனில் இது தியான அனுபவத்தை, வார்த்தைகள் அற்ற நிலை எதுவோ, அதனை வார்த்தை ஆக்கும் முயற்சியினை, செய்கிறது. அந்த வார்த்தை அற்ற நிலைக்கு, நம்மை அழைத்துச் செல்லும்போது, பல தருணங்களில் நம் மனதை சம்மட்டியால் அடித்து இழுத்துச் செல்லும். மயிலிறகால் தடவியும் கூட்டிச் செல்லும்.  இந்த நூலை எத்தனை முறை படித்து, புரிந்து, உணர்ந்து கொண்டு எவ்வளவு பேசினாலும், அது கால்பங்கு அளவே பொருந்தும்.

இந்த நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கிற உத்தி, நம் மனதை, திகைப்பில் ஆழ்த்தி, உறைய வைக்கிற வேலையை செய்து கொண்டே வரும்.  மனம் திகைப்பதும், அதிலிருந்து மீள்வதும் சாதரண விசயம் என்று எண்ணலாம். ஆனால் மிர்தாத், நம் மனதை மீள முடியாத திகைப்பில் தொடர்ந்து ஆழ்த்திக் கொண்டே வருவார்.

நிகழ்வுகளில் கலக்கும் இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகள், இதனூடே பயணிக்கும் உண்மை, மற்றும் கற்பனை  பாத்திரங்கள். மனநிலை மாறுபாடுகள், இதனினூடே பிரபஞ்சத்தில், இந்த பூமியில், இந்த விண்ணில் உருவெடுத்திருக்கும் அனைத்தும் எப்படி வேண்டுமானாலும், உள்ளே கலந்து வரும். மாயஜால உலகில் நடப்பது போன்று, எந்த தர்க்கத்துக்கும் உட்படாததாகவே நகரும். உட்பட்டும் நகரும்.

மிர்தாத்தின் புத்தகத்தைப் பற்றி, எதுவுமே சொல்ல முடியாது என்கிற போதும், உடையத் தயாராய் இருக்கிற மனதை, சல்லி சல்லியாய் உடைத்து நொறுக்கும் தன்மையை கொண்டது, இந்த புத்தகம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இந்நூலை பற்றி மனதில் பட்டதை எழுதும் எண்ணம் எனக்கு உண்டு. முழுக்க முழுக்க இது, எனக்கான புரிதல் மட்டுமே. ஒத்த கருத்துடையோராய் இருப்பின் உரையாடுவோம்.  மாற்றுக் கருத்து இருப்பின், நூலை உணர்வோடு படியுங்கள். உங்களுக்கு வேறு விதமான புரிதலை நிச்சயம், இந்தப் புத்தகம் கொடுக்கும். அதுவும் முழுக்கவே சரியாகத்தான் இருக்கும்.

இந்தப் புத்தகம் இப்புவியில் உள்ள 780 கோடி பேரால் படிக்கப்படுமாயின், அதே எண்ணிக்கையிலான புரிதல்களை தரும் என்பதே உண்மை.

வார்த்தை என்பது,  சுட்டிக் காட்ட  விரும்பும், பொருளை உணர்த்தும் குறியீடு மட்டுமே.  அந்த பொருளின் முழு பண்பை, அந்த சொல் முழுமையாய் எப்போதும் உணர்த்தாது.

கல் என்ற சொல், கல்லின் கனத்தை உணர்த்தாது. தென்னை என்ற சொல், அதன் உயரத்தை பயன்பாட்டையும் உணர்த்தாது. முல்லை, அதன் வெண்மையையோ, அளவையோ, நறுமணத்தையோ உணர்த்தாது. இன்பம் என்ற சொல் தனக்குப் பின்னால் எத்தனை கதைகளை ஒவ்வொருத்தருக்கும் வைத்திருக்கிறது? அப்படி இருக்கையில் உங்கள் இன்பத்தை நான் எப்படி உணர முடியும்?

 ஒரு சொல், சொல்லப்பட்ட உடனே, எழுதப்பட்ட உடனே, அவற்றின் பண்புகள் அனைத்தையும், நம் அனுபவ அறிவின் காரணமாக, அந்தச் சொற்களின் மீது ஏற்றி உணர்ந்து கொள்கிறோம்.

 - மிர்தாதின் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் புவியரசுவின் வார்த்தைகள் மேலே.

இங்கே சொற்கள் முக்கியம் அல்ல.
சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம் - மிர்தாத்

வார்த்தைகள் என்னுடையவை. அதற்கான அர்த்தம் உன்னுடையவை - ஓஷோ

நடைமுறை வாழ்க்கையில் அது தொழிலாகட்டும், குடும்பமாகட்டும், நட்புகள் ஆகட்டும். நம் வார்த்தை, நாம் நினைத்த பொருளை/அதிர்வினை அப்படியே சம்பந்தப்பட்டவருக்கு கொண்டு சேர்க்கிறதா என்பதை, சற்றே சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். குறைந்த அளவாக, கருத்திற்கு நெருக்கமாகவேனும் கொண்டு செல்கிறதா என்று பார்ப்போம். 

( தொடரும் )