"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label வேதாத்திரியம். Show all posts
Showing posts with label வேதாத்திரியம். Show all posts

Monday, May 30, 2016

கிரிவலமும் நாய்க்குட்டியும்

சித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது.  சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு,  நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள்.  குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..

அந்த இடத்தில்  ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும்.  காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த  தெரு நாய்க்குட்டி.

இப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்  மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது..  அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா? அந்த ஃபிரீக்வன்சிதான் அதை  இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..


இப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில்  பிஸ்கட் பாக்கெட் வாங்கி,  அதற்கு கையில் வைத்துக்கொண்டே,  இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில்  அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின..  மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.

பிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.

வீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.

FRACTION DEMANDS, TOTALITY SUPPLIES என்பது இயற்கை நியதி..
தேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி

Tuesday, November 24, 2009

பரிணாமம் குறித்தான...1

 முந்தய இடுகையின் பின்னூட்டங்களின் தொடர்ச்சியே இந்த இடுகை
இந்த பதில் பின்னூட்டமாக வெளியிடுவதில் கூகுளாண்டவர் ஒத்துழைக்காததால் இங்கே இடுகையாக..


டவுட் தனபாலின்  கேள்விக்கான பதில்

\\அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது? அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே?\\

அதற்கு முன்னர் பஞ்சபூதங்களின் தோற்றம், அதற்கு முந்தய நிலை இவற்றிற்கு எந்த செயலும் விளைவும் காரணம் இல்லைதான்.

காரணம் உருபொருள் என தாங்கள் சொல்லும் இறையின் தன்மைகளுள் ஒன்று விரிவு,அழுத்தம்

ஆகவே அதன் பெருக்கத்தில் மலர்போல் உள்ளிருந்து உள்ளாக தோன்றியதே இப்பிரபஞ்சம், இதில் மறைபொருளாய் இருப்பது காந்த ஆற்றல்.

விளைவு என்பதே வித்திலிருந்துதான் தொடங்குகிறது. அதன் பின்னரே வினைப்பதிவுகள் வந்தன.

\\புல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது? \\

பஞ்சபூதங்களாக, அதற்கு முன்னதாக இந்த பூமியை எது தாங்கிக் கொண்டிருக்கிறதோ அதுவாக இருந்தது.அதற்கு முன் அதுவுமில்லாமல் இருந்தது.

\\புல்லாக எது செயல்பட்டது? \\

தோற்றுவித்தது எதுவோ அதுவே புல்லாகவும் செயல்பட்டது.

\\எதன் கருமையம் புல்லில் இருந்தது?\\

உயிரோட்டம் எதை மையமாக வைத்து ஓடுகிறதோ அதை கருமையம் என்கிறோம். அப்படி பார்க்கும்போது தாவர இனங்கள் புவியோடு வேர்மூலம் இணைந்தே இருப்பதால் கருமையம் என்று ஒன்று தனியாக இல்லை. அது நகரும் உயிரினங்களுக்கே உரித்தானது

\\புல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது? பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.?\\

இதற்கு சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது செயலுக்கு வினைக்கு விளைவு நிச்சயமே தவிர செயலினால்தான், அதன் விளைவினால்தான் அடுத்த பிறவி (பரிணாமம்)என என்னால் சொல்ல முடியவில்லை.

ஆனால் அதன் குணங்களும்,அமைப்புகளும் காந்ததின் மூலம் சுருக்கி இருப்பாக வைத்து அடுத்த நிலையில் விரித்து காண்பிக்கப்படுகிறது.

 காந்தஓட்டம் பஞ்சபூதங்களுள் முறையான சுழற்சி அடையும் போது ஒருசெல் உயிரினம், இந்த ஓட்டம் மேலும் ஒழுங்கு பெற்றபோது பிற உயிரினங்கள் வந்தன.

அவையும் அழுத்தம், ஒலி,ஒளி,சுவை, மணம் இவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் வரிசையாக தோன்றின. இதில் காந்த(சக்தி) ஆற்றலின் பங்கு மகத்தானது

இறையின் பண்புகளின் ஒன்று ’விரிவு‘ அதுதான் காரணம்., யார் கண்டார்கள், பலகோடி வருடத்திற்குபின் பரிணாமத்தில் நாம் என்ன உருவம் எடுப்போமோ?

இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையது. நிறை இருந்தால் வேதாத்திரி மகானுடையது.

வாழ்த்துகளைத் தனபாலிடம் சொல்லுங்கள்.

Monday, November 23, 2009

டவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை

திரு.டவுட் தனபால் அவர்களின் சென்ற இடுகையை ஒட்டிய கேள்வி

\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?


முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது? \\

டிஸ்கி:என்னைச் சார்ந்த மரியாதைக்குரிய புரியாத பொன்னுசாமி அவர்களிடம் இந்த கேள்வியின் விபரம் தரப்பட்டு அதற்கான பதில் வாங்கி இங்கு இடுகையாக வெளியிடப்படுகிறது.:))


முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது ? சரிங்களா !!”

இதையே கொஞ்சம் மாற்றிப் பாருங்க..

முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,

எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.

போதுங்களா., தேவைன்னா இனி சற்று விளக்கமாப் பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.

ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை, அதேசமயம் மனிதனுக்காக வேறு எந்த உயிரினத்தையும் படைக்கவில்லை. :))

 பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன்வந்தான்.

இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.

மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.

பிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வரும் கோடிக்கணக்காக வருடங்களில் இப்புவியில் நிலம், நீர், காற்று, வெப்பம், விண் முதலான பஞ்சபூதங்கள் முதலியன  ஒரு பொருத்தமான கூட்டாக தக்க சூழ்நிலையில் சேர்ந்தது.

அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.

சரி அந்த சாராம்சம் என்ன பறித்துண்ணுதல்

சுருக்கமாக..  ஈரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக, வேறு ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகக் கொண்டே வாழுகின்றன,

இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.

பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
பிற உயிரைத் துன்புறுத்தல், கொல்லுதல்,
பிற உயிரின் பொருளைத்திருடுதல் - இதுவே விலங்கின செயல்


உணவாகப் போகிற, உணவாக்கிக்கொள்கிற இரு உயிர்களின் போராட்டத்தில் ஒன்றால் மற்றொன்றுக்கு துன்பம் விளையும்போது அதை சமாளிக்க எழும் வேகம், கோபமாகவும், பயமாகவும், தனது உணவை மற்றவை பறிக்க வரும்போது அதை காப்பாற்றிக்கொள்ள முனைவது (அதிக)ஆசையாகவும், தன்னைத்துன்புறுத்திய உயிரினத்தை எதிர்க்கும் முயற்சி தோல்வியடையும்போது எழும் உணர்வு வஞ்சமாகவும் வளர்ந்து தொடர்ந்து நீடித்து நம்மிடம் வந்துள்ளது.

இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..

இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.

இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.

தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம்.

அவ்வளவுதான் விசயம். இதை நண்பர் டவுட் தனபாலிடம் சேர்த்து விடுங்கள், இதில ஏதாவது டவுட் வந்தா அதையும் அய்யா கிட்ட சொல்லிடுங்க..

-----புரியாத பொன்னுசாமி.