"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Wednesday, October 2, 2019

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை. ஏனெனில் எதை எழுதினாலும், அதன் மறுபக்கம் அல்லது நியாயம் கூடவே மனதில் வந்து விடுகிறது. அதை ஒதுக்கி,  ஒன்றை நியாயப்படுத்தி எழுத வேண்டுமா என்ற கேள்வி தோன்றுகிறது.

கடும்கோடையில், பறவைகளுக்கு மொட்டை மாடியில்  சிறு கிண்ணங்களில் தண்ணீரும், சிறுதானியங்களும் வைத்தால், ஆகா அருமையான யோசனை  என, உயிர்களின் மீதான அன்பினை பாராட்டத் தோன்றுகிறது.

கூடவே, அது எங்கோ, தன் முயற்சியால் உணவு தேடி, நீர் அருந்தி, கூடு அடையும் பறவையாக இருப்பதை, நாய் பூனை போன்ற வீட்டு விலங்கு போல மாற்றி, அதன் இயல்பை, வாழும்திறனை ஒழிப்பதற்கு துணை போக வேண்டாம் எனவும் தோன்றுகிறது. இதுவும் அந்த உயிர்களின்  மீதுள்ள அன்பினால்தான் எனும்போது, இதையும் ஏற்க வேண்டியதாக இருக்கின்றது.

ஆக இரண்டு விசயங்களுமே சரிதான். செய்யலாம். ரொம்ப யோசிக்காமல் தோன்றுவதைச் செய்யலாம். இப்படி இருதரப்பு அபிப்ராயங்கள் வரும்போது எனக்கு என்ன விருப்பமோ அதையும், உங்களுக்கு என்ன விருப்பமோ அதையும் செய்ய வேண்டியதுதான்.  உள்ளார்ந்த அர்த்தம் அவரவர் வெளிப்படுத்தினால் அன்றித் தெரியாது.

தீனி வைக்காதவன் கஞ்சன் என்றோ, பிற உயிர்களின்மீது அக்கறை இல்லாதவன் என்று மற்றவனால் பார்க்கப்படலாம். தீனி வைத்தவன் நாயைக் கெடுத்தான்,  பூனையைக் கெடுத்தான், இப்ப குருவியின் வாழ்க்கை முறையை கெடுக்கிறான் என இவனால் பார்க்கப்படலாம். இதுதான் சமூக இயல்பு. இவற்றைக்  கண்டு கொள்ளாமல் உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே நல்லது. ஏன்?

இப்படியான நம் விருப்பத்தில் எது சரி, எது தவறு என்பதெல்லாம் விளைவுகளைப் பொறுத்தே அமையும் என்பதே, என் நிலைப்பாடு. சரி, தவறு என்பதெல்லாம் தர்க்கரீதியாக மனதை வைத்து யோசிக்காமல், சொல் விளையாட்டில் சிக்கிக் கொள்ளாமல், செயலின் விளைவாக என்ன நடந்தது என்று கவனித்தால் போதுமானது. இது மனிதர்களோடு தொடர்ந்து உறவாட உதவியாக இருக்கும்.

அப்படி நடப்பது அல்லது கிடைப்பது மனரீதியாக இருக்கலாம். இல்லை, பொருள்ரீதியாக இருக்கலாம். ஒரு சில ரூபாய் மதிப்புள்ள சிறுதானியங்கள் மூலம், உங்கள் மனதிற்கு ஒரு சந்தோசம், நிம்மதி கிடைக்கிறது. கூடவே குருவிகளின் வயிறும் நிறைகிறது எனில், அதை ஏன் தவிர்ப்பானேன்?  இது ஒரு சுயநலமான யோசனைதான். நான் மறுக்கவில்லை.

சுயநலமின்றி, பொதுநலம் இல்லை. என்னிடம் இரண்டு வேளைக்கான உணவு இருக்கிறது. எனில், அடுத்தவேளையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம், இப்போது பசியுடன் இருக்கும் ஒருவரோடு பகிர்ந்து கொள்பவன் பாராட்டுக்குரியவனே.

தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என இரு நபர்களுக்கு கொடுப்பவன் தியாகி, தெய்வம், முட்டாள் என்று எப்படிச் சொன்னாலும், ஒரே பொருள்தான்.

இதில், நான் செயல்களை உயர்வு தாழ்வு எனப் பிரிக்கவில்லை.  உங்களின் செயல்கள் உங்களைச் சார்ந்தோருக்கு, குடும்பம், தொழில் நட்புகள் என எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது  என்பதை கவனத்தோடு இருங்கள். குருவி வயிறும் நிரம்பவேண்டும், நம் மனதும் நிரம்பவேண்டும். வீட்டில் இருப்போரை பட்டினி போட்டு, உணவை வெளியே பகிர்வது, இங்கு பாதிப்பு, அங்கு மகிழ்ச்சி என்று அமைந்துவிடும்.

எந்தச் செயலாக இருப்பினும், அதன் பலன் இரு தரப்பிலும் மகிழ்ச்சியை விதைக்குமாறு அமைய, முயற்சிப்போம். மனநிம்மதியைப் பெறுவோம்.

நிகழ்காலத்தில் சிவா

Friday, May 10, 2019

உங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா ?

சின்ன வயதில் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாரேனும் மாந்திரீகம் செய்து வைப்பதாகப் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களிடம் சவால் விடுவதுண்டு. ”உனக்கு என்ன வேணும்?.என்னோட இரத்தம்?, என்னோட முடி?, என்னோட உடை எதுவேண்டுமோ? கேள், தருகிறேன். முடிந்தால் , என்னை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.ஒரே நிபந்தனை என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ, அதை கால நிர்ணயம் செய்து நடத்திக் காண்பிக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி என்னுடைய வாழ்வில் இயல்பாக நடக்கிற ஏற்ற தாழ்வுக்கு உரிமை கொண்டாடாதே”,

இந்த சவாலுக்கு இதுவரை நான் அறிந்த சில மாந்திரீகர்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள்.எனக்குத் தெரியும் என்னிடம் பருப்பு வேகாது என்று.. ஆனால் அவர்கள் , தங்கள் வாடிக்கையாளரிடம் பாவம்னு விட்டுட்டேன் என்று தன் திறமைக்கு உரிமை கொண்டாடக்கூடும். அதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.  

இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை. எந்த ஒரு உயிரும்/பொருளும் சுயமாக இயங்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.. தொடர்பு கொள்ளும் பொருளுக்கு ஏற்ப மாற்றம் அடையும் .  பொருள் மற்றும் தொடர்பு கொள்ளும் பொருள் இரண்டின்  (உறுதித்} தன்மையைப் பொறுத்து நேர்மறையான மாற்றம் அல்லது எதிர்மறையான மாற்றம் நிகழும்

மேலே சொன்னதை மேலோட்டமான உதாரணம் ஒன்றின் மூலம் பார்ப்போம். 

எதிர்மறை விசயங்களையும் அலச வேண்டி இருப்பதால் விஷத்தை உதாரணமாக வைத்துக் கொள்வோம். அதிலும் சையினைடு விசம். இப்போது உங்களிடம் பால் இருக்கின்றது. பாலில் சையினைடினை கலக்கின்றீர்கள் அல்லது கலந்தால். பாலின் நிலை என்ன ? உடனடியாகக் திரிந்து கெட்டுப்போய் கொல்வதற்கு உரிய விசமாக மாறிவிடும். அருந்தினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஆக நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்பதும், பாலில் கலந்த அனுபவமும் சொல்லித் தருவது விசம் குறித்த பயம், எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதே. விசத்தை ஒதுக்குவதேதான் ஒரே வழி

சரி நேர்மறையாகப் பார்ப்போம். உங்களிடத்தில் சையினைடு விசம் இருக்கின்றது. கூடவே உங்களிடம் பெருநெருப்பொன்று இருக்கின்றது. ஆம் அதில் சையினைடு வீசப்படுகிறது. இப்பொழுது சையினைடு தீயை என்ன செய்து விடும் ?  தீயில் பஸ்பமாவதைத் தவிர விசத்திற்கு வேறு வழி இல்லை. விசம் குறித்த பயம் நெருப்புக்கு  இருக்குமா ?

விசத்தில் ஒரு விசயமும் இல்லை. விசத்தை எதிர்கொள்ளும் பொருளே விசத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றது.  அதுபோலவே மாந்திரீகம் என்பது ஓரளவிற்கு வேலை செய்யும் என்பதாக  ஒரு பேச்சுக்கு, வைத்துக்கொண்டு பார்ப்போம்.

மந்திரங்களை சுயமாய் , தனக்கெனப் பிரயோகிக்கலாம். பிறர் நலம் பெறவும் பிரயோகிக்கலாம்.. இதனை சம்பந்தப்பட்ட பிறரின் விருப்பப்படியே செய்கிறர்கள். அவர்கள் ஏற்புத் தன்மையுடன் இருப்பதால் பலன் உண்டு

ஆனால் மாந்திரீகம் என்பது தான் கெட்டுப்போவதற்காக செய்யப்படுவதில்லை.. பிறர் கெட்டுப்போகவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு செய்யப்படுவது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபரின் நேரடி பங்கேற்பும் இருக்காது. அதனால் பலன்கள் அந்நபரின் மனநிலையைப் பொறுத்தே மிகக் குறைவாகவே தாக்கும்  அதுவும் மன உறுதியின்றி பால்போல் வெள்ளை உள்ளமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

சரி, நம் மனதின் தற்போதய நிலை என்ன ? பால் போன்ற வெள்ளை மனமா ? கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றதா ? 

வாழ்க்கையில் வெற்றியை குவிக்க, அல்லது வெற்றி தாமதம் ஆகிக் கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டுமானால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று சுயபரிசிலனை செய்து கொள்வது உத்தமம். பாலாக நீங்கள் இருக்கலாம். நெய்யாக உருமாறி சிறப்படைவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பாதையில் விசம் போன்ற சில விஷயங்கள் குறுக்கும் மறுக்கும் வரத்தான் செய்யும்.

உங்கள் மனம் தீயாய் இருந்தால் எல்லாவற்றையும் பஸ்பம் செய்துவிட்டு நினைத்தை அடைந்தே தீரும். இந்தத் தீ இயல்பாய் உங்களுக்குள் இருக்க வேண்டும். கருத்தொடர் வழியே வந்திருக்க வேண்டும்.  சிறு வயது முதல் வளர்ந்த சூழல் அந்தத் தீயை மேலும் தூண்டக்கூடியதாய் அமைந்திருக்கலாம்.

வெற்றிகள் தாமதமானால் மற்றவைகள் மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. நம் பங்கு என்ன என்று சுய ஆய்வு மேற்கொள்வோம். நாம் பாலா, நெருப்பா என்பதில் தெளிவடைவோம். , நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் மனமே.. நம் விருப்பமும் கூட.

 மகிழ்ச்சி நன்றி
நிகழ்காலத்தில் சிவா







Thursday, April 4, 2019

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)

கோவை ராமநாதபுரம் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஏறத்தாழ மதியம் 11.30 மணி கடும்வெய்யிலில் திணறினேன். காரணம் தேர்தல் பிரச்சாரம்.  சாலையின் இரும்ருங்கிலும் டெம்பொ டிராவலர் வேன்கள். சுமாராக 100 எண்ணிக்கையில் இருக்கலாம். சந்துபொந்துகளில் புகுந்து  சிங்காநல்லூர் செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது

அடுத்து மாலை 4.15 க்கு பவர்ஹவுஸ் பகுதியில் முக்கிய வேலை.. அது முடிந்தபின் 4.45 க்கு கலெக்டர் அலுவலகம் அருகில் வேலை.. பவர் ஹவுஸ்கிட்ட அரசியல் மீட்டிங்.. ரோடு மறிக்கப்பட...... வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றேன். இங்கும் சின்ன வேன்களில் சாரி சாரியாய் மக்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்தபின், உள்ளே அனுப்பி, எண்ணி சரிபார்க்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்

எதற்காக இந்த கூட்டம் சேர்த்தல் என்று புரியவில்லை. யாருக்காக என்றும் புரியவில்லை..  எந்தக்கூட்டணியாக இருந்தாலும் சரி.. மக்களிடையே இந்த மீட்டிங், பிரச்சாரம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றியது.  எல்லோரின் கையிலும் வாட்ஸாப், ஃபேஸ்புக் வசதியுடன் அலைபேசி. எல்லா ஊழல்களும், அயோக்கியத்தனங்களும் விரல் நுனியில்.  இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. 

சிங்காநல்லூர் நகராட்சி மண்டல  அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். வரவேற்புக்கு ஒரு வயதான பெண் அலுவலர். .. வருபவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கூட்டம் அதிகமாக இருக்கவே சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நபர் சொத்துவரி கட்டுவதற்கான பாஸ்புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து. புது புத்தகம் வேண்டும் என்றார். அந்த அம்மா ஏனுங்க இதுக்கு என்ன ஆச்சு ? என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. ? நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போனாத்தானே வருவாங்க ? வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். ? நல்லாப் பார்க்கக் கூட மாட்டீங்கறீங்க என்று மானாங்காணியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அந்த அம்மா சற்றே யோசனையுடன் புத்தகத்தை புரட்டிப் பார்க்க அருகில் நின்ற எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.. சரி என்றைக்குமே அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொங்க வேண்டுமா ? இன்று ஆதரவாக ஓரிரு வார்த்தைகளச் சொல்வோம் என்று எண்ணி “ அண்ணா.. நீங்க வந்து புத்தகத்தை கொடுத்ததில் இருந்து அந்தம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க பார்த்துச் சொல்லுவாங்க என்று சொன்னேன்.

ஆனால் அவரோ என்னை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு.. நீங்க கம்முனு இருங்க என்றார். சிரித்துக் கொண்டே சரி என அமைதியாக நின்று  விட்டேன். பெண் அலுவலர் அந்த புத்தகத்தை நன்கு புரட்டிப் பார்த்துவிட்டு, கடைசிப் பக்கத்தில் 2019-2020 என்று பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்து இது இருக்கின்றதே இதுவே போதுமே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்
அவரோ அதெப்படி ஒரு பக்கம் போதுமா ? இந்த வருடம் முழுவதும் கட்ட இது போதுமா புது புத்தகம்தான் வேண்டும் என்று சண்டைக்கு நின்றார்.  இரண்டு வரி பதிவு செய்ய அந்த கடைசிப் பக்கமே தாரளமாகப் போதும் என்ற நிலைகூடத் தெரியாமல் வந்ததில் இருந்து சண்டைக் கட்டிக் கொண்டே இருந்த அந்த நபரைப் பார்த்ததும் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான்டா லாயக்கு :) 

Tuesday, March 19, 2019

இனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ


அலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின்  இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்தக்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை.  மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.
சரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்து சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான். 
.
இதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது.  சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.

எதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவரது இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார்.  நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir  என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.


Monday, January 7, 2019

மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?

சுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)
ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).
நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..
உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..
ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..
மன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 🌻ஸ்ரீனி🌻

facebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்

Monday, December 31, 2018

பயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் ?

மனதை விலகி நின்று கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கவனிக்க முடியாமல் போகும். அப்போது குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்.  இதுதான் கடந்த இடுகைகளின்  சாரம்.

மனதை கவனித்தலில் உள்ள சூட்சமமே, புலன்களால் அறியப்படுகிற எதனையும், எதனோடும் இணைத்துப் பார்த்துக் கொண்டு, மனம் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கும்.. உங்களை அறியாமலே இது நடக்கும்.

கவனித்தல் கைவரப்பெற்றால் மனம் இந்த வேலையைச் செய்யாமல் அனுபவத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கும்.

இந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதில் உள்ளடங்கிய செய்திகளை அப்படியே மனம் வாங்கிக்கொண்டு இருந்தால் கவனித்தலில் முன்னேற்றம்.. மாறாக இப்படி செய்தால் அப்படி நடக்காதா? என்ற கேள்வி, இந்தமாதிரி எத்தனை படிச்சிருக்கேன். செஞ்சும் பார்த்தாச்சு, பலன் இல்லை என்றோ மனம், எதனோடாவது கொக்கி போட்டால் ’நழுவுகிறது’ என்றுதான் பொருள்.:)

எனக்கு ஒரு பனியனைப் பார்த்தால் துணி என்ன ஃபைனா? இண்டர்லாக்கா? சிங்கிள் ரிப்பா? லூப்நிட்டா? டர்க்கியா? லைக்ரா பைனா? என்று பார்த்த மாத்திரத்தில் மனம் தன்னிச்சையாக விடையினை உணர்ந்துகொள்ளும் . இதற்கு விநாடிக்கும் மிகக்குறைவான நேரமே போதும். இது வெளியே குவியும் மனம்.

ஆனால் கவனித்தல் எனக்கு வசப்படும்போது துணியை துணியாக மட்டுமே பார்ப்பேன். பார்க்கிறேன் என்ற உணர்வு இருக்கும். துணி என்ன வகைன்னு சொல்லு என மனதிற்கு கட்டளை என்னுள் உருவகம் பெற்று, மனதிற்கு தரப்பட்டபின்/தரப்பட்டால் மட்டுமே அதே விநாடியில் இந்த துணி இன்ன வகை என்று மனம் எனக்குச் சொல்லிவிட்டு அமைதியாக வேண்டும். இது போல் எல்லா கணங்களிலும் விழிப்புணர்வு கைவரப்பெற்ற நிலை. ஒவ்வொரு கணமும் நிகழ வேண்டும். அவ்வப்போது மட்டுமே இது எனக்கு நிகழ்கிறது. இதில் நிலைத்த தன்மை வேண்டும் என்ற முயற்சிதான் எனது இந்த எழுத்துகள்.:)

சரி வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்போது எதிரே வரும் லாரியினை பார்த்து, இப்படி வருகின்றதே ஒதுங்க வேண்டுமே மனதின் உத்தரவிற்கு காத்திருப்பதா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எப்பொழுது வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டத் துவங்கி விட்டீர்களோ அப்போதே மனம் இயங்கத் தொடங்கிவிடும்...மிகக்குறைந்த அளவில், வாகனத்தை இயக்கும் அளவிற்கு மனம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஓட்டும்போது தன்னிச்சையாக கையும் காலும் இயங்க, மனம் எங்கோ நழுவத் துவங்கும். இதையே எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை என்று சாதரணமாகச் சிலர் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வற்ற நிலைதான் தவிர்க்கப் படவேண்டும்.

மனதை இப்படிக் கவனித்துப் பழக்க, சாத்தியக்கூறான வழிகளில் ஒன்று மந்திரம்.. , அலைகிற மனதை கட்டுக்குள் கொண்டுவர மந்திரங்கள் பெரும்பாலும் உதவும். ஆனால் அவைகளைக் கையாளும்போது மட்டுமே பலனளிக்கும். அதன் பின் மனம் மீண்டும் குரங்காகிவிடும். இது மனதின் தன்மை :)

இதைக் கட்டுக்குள் கொண்டு வர நமது மனதை நமது உடலோடு பிணைக்க வேண்டும்/ ஏற்கனவே அப்படித்தானே இருக்குது என்கிறீர்களா? மனதின் பிறப்பிடம் நமக்குள்ளே.  ஆனால் அது விளையாடிக் கொண்டு இருக்குமிடம் நமக்கு வெளியே, ஊர் உலகம் அரசியல் என்று எங்கு வேண்டுமானாலும் :)

மனதைக் கவனிக்க, அதை நம் கண் பார்வையிலேயே (ஙே..) வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்கமோ, இந்தப்பக்கமோ ஓடவிடக் கூடாது. அதற்குச் சிறந்த வழி, சரியான வழி, உடலை கவனிக்கச் செய்தல். இது மனதை பழக்குவதற்கான ஆரம்பநிலைப்பாடம். உடலின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கச் செய்வதுதான். முயற்சித்துப்பாருங்கள். ரோபோட் மாதிரி அசைவதா என்கிற குழப்பம் வருகிறதா?  இயல்பான செயல்களில் உங்களின் அசைவுகளோடு மனதை ஒட்டவையுங்கள்.  அது  அப்படியே அசைவுகளுடன் பொருந்திக்கொள்வதை அனுபவமாக அடைவீர்கள்.

வெற்றி உண்டாகட்டும்.


Thursday, August 30, 2018

ஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ


முன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது.  முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது.   கிறிஸ்துவர்களுக்கு   இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது .  ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும்,  நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.

இயேசுவைத் தெரியும்,  ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும்,  பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும்.  உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன.   இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது

ஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்.,  பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.

 அப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ  விட்டு விலகி விடுவதும் இல்லை.  மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.  அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்  பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்

ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா



Wednesday, November 8, 2017

தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ

தளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.
சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:

ஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.

இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.

ஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.

அடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது

முழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு
வாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.

உன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்

கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’  என்று அதனிடம் சொன்னால் போதும்.

 உன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.

அடுத்து
இன்னும் ஆழமாக,

மனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது.  சிறிது கால அவகாசம்  பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.
உடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.

அடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.

 உடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து
நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு.  உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து. 

 உடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி   இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.

ஓஷோ
தம்மபதம்



Sunday, October 22, 2017

தானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ


நீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது

ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.

ஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும்  எண்ணங்கள்.

இந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.

ஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.

உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது

எதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்தனத்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா






Sunday, June 25, 2017

கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்..

சுமார் 20 வருடங்களுக்கு முந்தய மனநிலையை நினைவுக்கு கொண்டு வந்து பார்க்கிறேன். பள்ளிப்பருவம் முடிந்து  பணிக்குச் சென்று கொண்டிருந்த காலகட்டம்.  கல்வி கற்ற அந்த நாட்களில் நான் அனுபவித்த உலகம் வேறு.. வேலைக்குச் சென்ற போது கண்ட உலகம் வேறு.. விதமான விதமான மனிதர்கள்., உணர்வுகள்.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வருமானம் இருந்தாலும், மனதில் உலகம் பற்றிய புரிதல் தேவையும், நான் எப்படி இயங்க வேண்டும் என்ற அறியும் வேட்கையும் மனதிற்கு ஒரு நிறைவின்மையைக்  கொடுத்துக்கொண்டே இருந்தது. கேள்விகள் நிறைய மனதில் எழுந்து கொண்டே இருக்கும்..

இந்த சூழலில் வேதாத்திரி மகானின் பாதை கிட்டியது. அப்போதய மனநிலையில் வேதாத்திரி அவர்களின் உரைத் தொகுப்புகளை நேரில் கேட்டபோது பல்வேறு தெளிவுகள் கிடைத்தன. அவரது சிறப்பே கேள்வி ஏதும் எழாதவாறு மிகத் தெளிவாக,தொடர்பு அறுந்து போகாமல் உரையாற்றுவதுதான்..

ஆழியாரில் ஒரு சிறப்புப் பயிற்சியில் அன்பர் ஒருவர் எழுந்து,  கேள்வி கேட்கிறார்.. அந்தக் கேள்வி, பிறரது பார்வையில்  ‘மகானிடம் இதையெல்லாமா கேட்பார்கள் ?  இது கூடத் தெரியலையா ‘ என்கிற பாணியில் அமைந்திருந்தது.. கூடியிருந்த கூட்டத்தில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. கேள்வி கேட்டவருக்கோ கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது போலும். முக வாட்டம் தெரிந்தது.

ஒரு நிமிடம் அமைதி.. வேதாத்திரி மெளனம் கலைத்தார்..

எந்தக் கேள்வியிலும் தவறு என்பதே இருக்கவே முடியாது. ..
பதிலில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்..

கேள்வி கேட்டவரின் அறிவு நிலைக்கு ஏற்ப, வாழ்க்கைச்  சூழலுக்கு ஏற்ப  பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்துடன் கேள்வி கேட்கின்றார். அதை ஏற்று அவருக்குப் பொருத்தமான பதிலைக் கூற வேண்டும்.பதில் சொல்பவருக்கே பொறுப்பு அதிகம். பதில் சொல்வதில், சொல்பவரின் அறிவாற்றல் திறம், பண்பு வெளிப்பட்டுவிடும். அதனால் அக்கறையுடன், கவனத்துடன் பதில் சொல்ல வேண்டும்’ என்று பதில் சொன்னார்.

கேள்வியினை எப்படி எதிர்கொள்வது ? கேட்டவரின் மீது கிண்டலை, ஆணவத்தை  வீசாது கருணையோடு எந்தவிதமாக பதில் சொல்ல வேண்டும்?. இருவருக்கு இடையே ஆன உரையாடலில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்த்தல் அனைவருக்கும் அங்கே தரப்பட்டது.

சரி இதை நான் இங்கே ஏன் குறிப்பிட வேண்டும். ?

உறவுகள், நட்புகள், தொழில்ரீதியாக தொடர்புடையோர் என சமூகத்தில் புழங்கும்போது மனதில்  எழும் பல கேள்விகளுக்கு பதில் நிச்சயம் தேவை. கூடவே நாம் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் ? இந்த பதில்கள் நமக்கு எப்படிச் சொல்லப் பட்டிருக்கவேண்டும் ?  என்ற சூழலுக்குச் சாட்சியாக ..
இருதரப்புக்கு இடையே உரையாடல் கலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சாட்சியாக இந்தச் சம்பவம் இருந்தது.

அப்போதய மனநிலைக்கு இந்த பதில்களே நிறைவானதாக இருந்தது. மன அமைதியும் , செயல்களில் கிடைத்த விளைவுகளும் நிறைவாகவே இருந்தது. 100 சதவீதம் சரியாகவே இருந்தது..மற்றொருவரிடம் உரையாட மகானின் இந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது..

காலச் சக்கரம் சுழன்றது..  எது பொருத்தமாகவும், தெளிவைத் தருவதாகவும் இருந்ததோ அது எனக்குத் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. மாற்றம் என்னிடத்தில்...

முரண்பாடாகத் தெரிகின்றதா ? ஏன் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.



Saturday, October 12, 2013

Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)


Tuesday, April 30, 2013

நம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி


சுமார் இருபது வருடங்களாக எனது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரை கவனித்து வந்திருக்கிறேன். அவர் சுய தொழில் செய்வதில் கைதேர்ந்தவர். தன்னிடம் முதலீடு அதிகம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்துவிடுவார். வாங்கிய கடனை, கொடுத்துவர்களுக்கு தேவைப்படும்போது தரமாட்டார். வட்டியை மட்டும் கொடுத்து பேசிச் சமாளித்துவிடுவார். தனது தொழிலின் பணத்தேவை பூர்த்தியான பின்னர்தான் மீதியை கொடுப்பார். கணக்கு வழக்கில் வாய்ப்பு கிடைத்தால் வேலையக் காண்பித்துவிடுவார்.

தனதுதொழில்களுக்கு ஒத்தாசையாக பிறரை கொண்டுவந்துவிடுவதிலும், அல்லது சிரமமான காரியங்களை அதன் பாசிட்டிவ் பகுதிகளை மட்டும் சொல்லி மெருகேற்றி செய்ய வைத்து பயன் அடைந்துவிடுவார்.

நான் பள்ளிப்பருவகாலத்திலிருந்தே அவரை கவனித்து வந்ததால் அவரின் வலை விரிப்புகளுக்கு சிக்காமல் கடந்துவிட்டேன். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்தியாக விலகமாட்டர்கள். ஏதேனும் ஒரு சங்கடத்துடன் விலகுவார்கள்.

அவருக்கு இரு மகன்கள். அதிலும் அவரது மனைவிக்கு சற்று கர்வமும் கூட.. இரண்டு பெண்குழந்தை பெற்றவர்களைப் பார்த்தால் ”பாவம் இரண்டும் புள்ளையாப் போச்சு” என்பார். இந்த குடும்பம் பலதொழில்கள் செய்து இறுதியில் துணிக்கடை வைத்து செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு மகன்களுக்கும் தனித்தனிக்கடை.

காலச்சக்கரம் உருண்டோடியது, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியவன் திருமணமாகி தன் பெண்குழந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தார். அன்று இரவு சின்னமகன் வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம். எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்த செய்தி.

சற்று வேகமாக வந்ததால் நடந்த விபத்து. ஹெல்மெட் போட்டிருந்ததால் சின்னமகன் உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய சின்ன மகனை மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. உடனடியாக இருபதுஇலட்சம் பணம் கட்டியாக வேண்டியது ஆகிவிட்டது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

வழக்கம் போல் மனம் இதிலிருந்து வெளியே வந்து பிரச்சினையை தனக்கு பிடித்தமான கோணத்தில் அலச ஆரம்பித்துவிட்டது.

காசு காசு என்று அலைந்தவரை, அப்படிச் சேர்த்த காசை எப்படி பறிக்க வேண்டும் என்பது விதிக்குத் தெரியுமோ. இந்த விதி துல்லியமான கணக்கீடாக அமையும் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வேகமாக வந்ததல் நடந்த தற்செயல் விபத்துக்கு இந்த சாயம் பூசுகிறேன் என்பதல்ல.. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்து கொள்ளும் சம்பவம் இது. இந்த பிணைப்புதான் நாமாறியா மாயச் சங்கிலி :)

இந்த துல்லியமான கணக்கீட்டுக்கு பலிகடாவாக சின்ன மகன் அமையக்காரணம் என்ன?

போனபிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் என்றால் அது உண்மையாகக்கூட இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிறவியில் செய்வதற்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்போது போன பிறவிக்கு இப்போது பலனை அனுபவிப்பது வலிக்கின்றதே...

எந்தவகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்தவன் இப்போது அதே துன்பத்தை அனுபவித்தால் அர்த்தம் உண்டு. விபத்தில் சிக்கும் அந்த உயிர் துடிப்பதை நினைத்தாலே மனம் கலங்குகின்றது. எது எப்படி இருப்பினும் செய்கின்ற செயல்கள் நம்மையும் தொடர்ந்து நமது வாரிசுகளையும் நாம் அறியாமல் பாதிக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இந்த தெளிவுக்காகவே இதைப்பகிர்ந்தேன்.

நான் யாரையாவது மனதளவில் உடலளவில் துன்புறுத்தி இருக்கின்றேனா என்பதில் கவனமாக இருக்கிறேன். பணம் என்னளவில் இழப்பானாலும் சரி..பிறருக்கு என்னால் இழப்பு என்று தவறு நேராவண்ணம் இன்று வரை காத்து வருகிறேன்.

செய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணம் இவற்றில் கவனமாக இருப்போம். நமது விதியை நிர்ணயிப்போம்

Sunday, March 24, 2013

விபத்து - விதியின் சதியா

காத்துக்கொண்டிருக்கையில் கண்முன்னே இன்னொரு விபத்து...நான் இருந்த இடமோ நகரத்தின் நடுவில் பழமையின் மிச்சமீதி அடையாளங்களை வைத்து இருக்கும் கிராமம். நகரத்தின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து முக்கால் கிலோமீட்டர் வந்து அதன் பின்னர் 20 அடிச் சாலையில் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

 நகராட்சி பகுதி ஆனதினால் அந்த சாலை காங்கிரீட் சாலையாக, மாற்றம் பெற்றிருந்து. அந்த சாலை முடிவடைந்த இடம் ஊரின் மையப்பகுதி. நான்கு வீதிகள்  சந்திக்கும் இடமாக அமைந்திருந்தது. அந்த இடம் இரண்டு மூன்று லாரிகள் சாதரணமாக நிற்கும் அளவிற்கு இடம் அகலமாகவே இருந்தது.


ஆனாலும் கூட அப்படி இடம் இருப்பது  தெரியாத அளவில் நெருக்கமாக வீடுகள். அந்த இடத்தில் நுழைந்த பின்தான் அதன் விஸ்தீரணம் தெரியும். .. சின்ன சதுரமாக வலதுபுறம் தெரிவது மளிகைக்கடை. அங்கே வயதான பாட்டியுடன் மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று 10 ரூ மதிப்பிள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பாட்டியின் கையைப் பிடித்து படி இறங்கியது. படி இறங்கியதுதான் தாமதம் தனது வீட்டுக்கு செல்லும் ஆர்வத்துடன்  பாட்டியின் கையை உதறிவிட்டு,  மேற்குப்புறத்திலிருந்து தென் கிழக்கு வீதிக்காக உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தென் மேற்குசாலைக்காக சின்ன யானையான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று அதேசமயம் சாதரண வேகத்துடன் வந்தது.
அந்த வாகனம் உள்ளே நுழையவும் ஓட்டுநரின் பார்வையில் காலி மைதானம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கும். சட்டென வலதுபுறத்தில் குழந்தை வர ஆரம்பித்ததை கவனிக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தையின் ஓட்டத்தை விட சற்று அதிகமான வேகம் 20 கிமீ வேகம்தான் வேன் வந்திருக்கும்.

வேனும் குழந்தையும் முக்கோணப்புள்ளியில் சந்தித்துக்கொள்ள குழந்தை வேனின் சைடில் மோதி  வேனுக்குக் கீழ் உள்புறமாக முன் சக்கரத்துக்கு முன்னதாகச் சென்று விழுந்தது. வேன் டிரைவர் ஏதோ மோதிவிட்டது என்று உணர்ந்து பிரேக் அடித்த அதே தருணம் வண்டி நகர்ந்து குழந்தை மீது ஏறி நின்றது.

டயருக்கு முன்னதாக குழந்தை விழுந்தவுடன் அதற்குப்பின் நடப்பதை முன்னதாகவே மனம் யூகித்துக்கொள்ள,  நடப்பதை காணும் சக்தி இல்லாததால் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன. இது பயமோ, கிறுகிறுப்போ இல்லை. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மனம் தன்னை தற்காத்துக்கொள்ள இயங்கியதாகத் தோன்றியது.

வலுக்கட்டாயமாக கண்விழித்துப் பார்த்து  எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும் என்று தெரியாத நிலையில் வேனில் அருகில் ஓடினேன். எல்லாம் முடிந்தது. விஸ்வரூபம் படத்தில் வர்ற மாதிரி இரத்தம் கடகடவென தரையில் விரவி பாய்ந்தது. எந்த வித அசைவும் இன்றி குழந்தை கீழே சிக்கிக்கிடந்த கோணம், அதன் முடிவை, மரணத்தை  தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரைவர்  நடந்தை புரிந்து கொள்ள முடியாமல் நிற்க.. சத்தம் கேட்டு அருகில் வந்த சிலருடன் சேர்ந்து வேனின் முன் பக்கத்தை தூக்கினோம்.

யாரோ குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட..மெளனமாக விலகினேன். அடுத்த 20 நிமிடத்தில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை.என மரணம் உறுதி செய்யப்பட மனதில் பல கேள்விகள் எழ, அந்த விபத்தை நேரில் பார்த்ததன் தாக்கம், அதிர்வு சற்று மனதைப் பாதிக்க அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். இயல்புக்கு வர சில மணி நேரங்கள் ஆனது...

Friday, February 22, 2013

விதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன?

விதி வலியதா, மதி வலியதா என்றால் நிச்சயம் விதிதான் வலிது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே விதி என்ற வார்த்தை தலைவிதியைக் குறிப்பது அல்ல. அதே சமயம் அதையும் உள்ளடக்கியதுதான். அப்ப முயற்சி என்பது என்ன? அது எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது?

மழைபெய்வதும் வெள்ளம் வருவதும் விதி.. இதை அணை கட்டி தேக்கி நாம் பயன்படுத்துகிறோமே. அது மதி..  மழை தொடர்ந்து பெய்வது விதி....குடையோ மழைக்கோட்டோ போட்டுக்கிட்டு வேலையப் பார்க்கிறது மதி. விதியை அனுசரித்து செயல் செய்து பலனடைவதுதான் மதி :) எதிராக அல்ல..

சரி.. ரொம்ப சூதானமா இருந்தும் மழை நின்னதுக்கு அப்புறம் பார்த்துப் பார்த்துப் போயும் கரண்டுஷாக் அடித்தோ, சாக்கடையில் தவறி விழுந்தோ விபத்தோ சாவோ நடப்பது மதியை மீறிய விதிதான்..இப்படியும் சொல்லலாம். விதியை வெல்ல முடியா மதி :)

ஆக மனதில் இருத்தி வைத்துக்கொள்ளுங்கள்.  மதி என்பது இயற்கைவிதியை அனுசரித்து நம்மால் செய்யப்படும் முயற்சிகள் .. அது வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பல்வேறு காரணிகளால் நடக்கிறது... இருப்பினும் இந்த முயற்சிகள் விதியின் தீவிரத்தை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ செய்யும்.

நேர் மாறாக எந்தவித பெரிதான முயற்சிகள் இல்லாத போதும் வெற்றி தேடி வருவதும் அதே பல்வேறு காரணிகளால்தான்.. பல்வேறு காராணிகள் என்று வரும்போதே எதைச் சொல்வது எதை விடுவது என்ற சிக்கலும் கூடவே எழுகின்றது.

இந்தப் பீடிகை எதற்கு....சில புரிதல்கள் நமக்குள் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்,:)

மனித மனத்தைப் பொறுத்தவரை, அல்லது ஆன்மீகம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியம் என்பதில் தெளிவாகிக் கொள்ளுங்கள்.

ஒன்று மனம் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை மட்டுமே ஒத்துக்கொள்ளும். அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது நெருடல் இல்லாமல், இருந்தால் மட்டுமே திருப்தி அடையும்.

நான் சொல்லக்கூடியவற்றை இந்த மாதிரி உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அது உண்மையா, பொய்யா, சாத்தியமா, சாத்தியமில்லாததா என்பதெல்லாம் தேவையில்லை என்பதுவும் உண்மை..:)

 மனம் என்கிற கருவி சமுதாயத்தில் நாம் தொடர்பு கொள்ளும்போது, நாம் பிறந்தபோது இருந்த மனம் போல் இருப்பதில்லை. நம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நிறைய சேகரங்களுடன், முன்முடிவுகளுடன் வளர்ந்து இயங்க ஆரம்பிக்கிறது. சேகரங்கள், முன்முடிவுகள் ஏதுமின்றி உங்களால் மனதை விரும்பும்போது இயக்கமுடிந்தால் முதல்நிலை மனதிற்கு நேர் எதிரான மனமாக இந்த மனம் இருக்கும். இந்த இரண்டு விதமான மனநிலைதான் இவ்வுலகில் சாத்தியம்.  ஆனால் இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட மனநிலை சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.  இம்மனநிலை கொண்டவரை யோகிகள், ஞானிகள் என்று சந்தேகமின்றி சொல்லலாம்.  இதற்கு சாதி, மதம், இனம், நாடு தடையில்லை. வழிமுறைகளும் முக்கியமல்ல.. இந்த விளைவைத் தருகிற எந்தச் செயல்முறையும் மிகச் சரியானதே....

கடந்த சில நாட்களுக்கு முன் தூரத்து உறவினர் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்குச் சொந்தமான வாடகைகாரை ஓட்டுவதுதான் தொழிலே.. அவ்வப்போது தண்ணியடிப்பதும் உண்டு. சுமார் 25 வருட ஓட்டுநர் அனுபவம் இருந்தும் அவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிரே வேனில் மோதி விபத்து...., மரணம் நிகழ்ந்துவிட்டது:(.

அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.. இவரது மரணம் இவரது அலட்சியத்தால், எங்கோ நேர்ந்த சிறு தவறால் விபத்து எனில் மதியின் தோல்வியே... ஆனால் அந்த மதியை அந்த நேரத்தில் துவளச் செய்வது விதியின் வேலைதான் :(

சரி நாம் இதை நேரில் பார்க்கவில்லை எனினும் அவர் மிகச் சரியாக வாகனத்தை செலுத்தி இருந்தாலும் எதிரே வந்த வேன் டிரைவரின் அலட்சியத்தால், தவறால் விபத்து ஏற்பட்டு இவர் மரணித்து இருந்தால் அது விதி..மதியை மீறிய விதி...இது ஏன்?


இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது. ஏதாவது ஒரு லாஜிக் வேண்டுமே.. தர்க்க ரீதியான காரணம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ நம் மனதிற்கு தேவையாக இருக்கிறது. நம்மை, நம் வாழ்வை ஒழுங்குபடுத்த இந்த காரணங்கள் உதவுமா?

இந்த துக்கநிகழ்வில் கலந்து கொண்டு இருக்கையில் கண்முன்னே நடந்த இன்னோர் விபத்து இன்னும் பல கேள்விகளை எழுப்பியது......






Sunday, February 17, 2013

விபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை

விபாஸ்ஸனா என்றால் என்ன ?

விபாஸ்ஸனா என்பதில் ஒரு ஒழுக்கமான வாழ்வை வாழ்வது மொத்தமும் அடங்கும். இதை எந்த மதம், எந்த இனம், எதிர்க்கக்கூடும் ? இப்படிப்பட்ட ஒழுக்கமான வாழ்வை வாழ உங்களுக்குத் தேவை வலிமையான மனம்.. இதற்கு யார் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்.?

உங்கள் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதன் விளைவாய் ஒழுக்கம், மன ஒருமைப்பாடு, தூய்மையாக்கும் ஞானம், தெள்ளறிவு இவை நம்மிடம் வந்தடைய வேண்டும். மனதளவில் ஆரோக்கியமானவராகவும், அமைதியான, சலனமின்றி மனநிலை அமைந்து இருக்க,  பழக வேண்டியது விபாஸ்ஸனா தியான முறை..
 

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த முகாம் இருக்கின்ற குறையை நீக்கி, தென் தமிழகத்தில் மதுரை அருகே திண்டுக்கல் செட்டியபட்டியில் அமைந்துள்ள விபாஸ்ஸனா தியான முகாமை ஆர்வமுடையவர்கள் பயன்படுத்திக் கொள்வீர்க்ளாக :)

வருடம் முழுவதும் நிகழ்ச்சி அட்டவணை இருக்கிறது. வசதியான நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இணையம், பேச்சு எதுவும் இல்லாத  10 நாட்கள் அடிப்படை தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனம் என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை வெறும் வார்த்தை ஜாலங்கள் இன்றி அனுபவமாக உணருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள் :)

இருப்பிடம், நிகழ்வுகள் குறித்த அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய இதை சொடுக்கவும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய இதைச் சொடுக்கவும்.

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, January 8, 2013

ஆண்கள் சந்தர்ப்பவாதிகளே....

பனியன் தொழில் நிறுவனத்தில் அன்றாடம் தொழிலாளர்கள் மாறுவது மிகச் சாதாரணம். சுமார் ஒரு வாரம் இரண்டு வாரத்திற்குள் அலைவரிசை ஒத்துவரக்கூடியவர்கள்  மனம் ஒத்து தங்களுக்குள் (பால்) உறவை ஏற்படுத்திக்கொள்வது சாதரண விசயம்தான். இதனால். யாருக்கும் நட்டமில்லை.  இங்கே கற்பு என்பதெல்லாம் கக்கூஸ் என்ற் அகராதியில் இல்லாத வார்த்தை போலத்தான் :)

சரி இப்படி இணையக்கூடியவர்களில்  ஒரு கட்டத்தில் சலித்து, இன்னபிற காரணங்களினால் அப் பெண்விலகும்போது இவனும்  புரிதல் உள்ளவனானால் விலகிவிடுவான். அல்லது தவறானவன் எனில் இவனது மிரட்டல் ஆரம்பமாகும். இன்னும் சிக்கலாகும்போது நண்பர்களுக்கு விருந்தாக வேண்டிய அவசியமும் ஏற்படும். இந்த சூழ்நிலைகளும் தனித்தனியாக நடந்தால் பிரச்சினை இல்லை. இங்கே கூட்டணி குழப்பம் வரும்போது பெண்மீதான தாக்குதல் நடைபெறும்.

இது ஓரளவு நடுத்தர வயதுபெண்களாக இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை . இப்படித்தான் திருப்பூரில் நடுத்தர வயதுப்பெண் மதியவேளையில் , நகரத்தில் முக்கிய இடத்தில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் ஆடைகளின்றி தாக்கப்பட்டு மயங்கிக்கிடக்க அது பெட்டிச் செய்தியானது. அத்தோடு மறக்கப்பட்டது.

இதை இங்கே குறிப்பிடவேண்டிய அவசியம் ஆணின் தவறுகளை நியாயப்படுத்துவது அல்ல.. ஆண் தவறு செய்ய பெண் எந்த அளவு இடம் கொடுக்கிறாள் என்பதை கவனத்தில் வைக்கத்தான் ...

ஆண் எப்போதுமே சந்தர்ப்பவாதிதான்....அவனுள் இருக்கும் பரம்பரை மிருககுணம்தான்.. இது ஆண்கள் எல்லோருக்கும் ஜீனின் வழிவந்த குணம்.  ஆண் பெண்ணோடு உறவுக்கு விரும்புவது என்பது உயிரினம் அழியாமல் இருக்க இயற்கை செய்திருக்கிற ஏற்பாடு.. இதில் குடும்ப அமைப்பு என்பதுவும் சந்ததி பெருக்க நடவடிக்கைதான். ஆனால் சந்ததி பெருக்கத்திற்கு மட்டுமின்றி சுகத்துக்கென பாலுறவை ஏற்படுத்திக்கொள்வதில் முதலிடம் மனிதனுக்கு மட்டும்தான்.

டெல்லி விசயத்தில் உடை ஒரு காரணமாக இல்லாதபோதும், எவனோட சுற்றுகிறாள் என்ற் அம்சமே முன்னிலையில்....இங்கே சரி எது தவறு எது நான் ஆராயவில்லை. சூழ்நிலைகளை உருவாக்கியதில் அப்பெண்ணின் பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். இத்தாக்குதலில் சம்பந்தபடட் ஆண்களுக்கு தண்டனை அவர்களின் உறுப்பு சார்ந்ததாகவே இருக்க வேண்டும். இது அவர்களுக்கான் தண்டனை. சில வருடங்கள் கழித்தேனும் தூக்கில் இடலாம். இது மற்றவர்களுக்கு எச்சரிக்கைக்காக....இரவு நேர ஊர்சுற்றல் எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது . அதனால்  உடை கட்டுபாடு இரவு நேரச் சுற்றல்களை தவிர்த்தால் நன்மை பெண்குலத்துக்குத்தான்..

 பெண்ணைக்கண்டால் ஆண் ஈர்க்கப்படுவது இயல்புதான். இதுதான் பிள்ளையார் சுழி.. மேலும் ஈர்க்கப்படுகிற வாய்ப்பை ஆணுக்கு ஏற்படுத்தித் தரவேண்டாம் என்பதே வேண்டுகோளாய் பெண்களிடத்தில் வைப்பது.

அதைவிட்டுவிட்டு பெண் சுதந்திரத்தில் குறுக்கிடாதே.. ஆடை உடுப்பது அவர்கள் விருப்பம். நீ திருந்து என்றால் என்ன லாஜிக்னு தெரியல.. அடுத்தவரை திருந்து என்று சொல்வதை எளிது. ஆனால் ஒரு பைசா பிரயோசனம் இல்லை. நடக்காத விசயம். ஆனால் தான் திருந்துவது எளிது.
என் வீடு நான் என் விருப்பப்படி (முதுகுல) தான் கதவு ஜன்னல் வைப்பேன். திறந்தும்கூட இருக்கும். நீ என்ன ......க்கு திரும்பிப்பார்க்கிற திருந்து.. திறந்து வச்சிருந்தா உள்ள வந்திருவையா .. இப்படி பெண் பேசினால் அடிபட்டாத்தான் திருந்துவீங்க என்றும் ஒதுங்க வேண்டியதுதான்..

ஒருவேளை பெண்களுக்காக ஆண் பரிந்து பேசினால் கொஞ்சம் நஞ்சம் சைட்டு அடிச்சிட்டு இருக்கிறோம். அது பொறுக்கலையா என்றும் கேட்பதாகவும் எடுத்துக்கொள்கிறேன். :)))))))))))

மற்ற நாடுகளின் சூழல் எனக்குத் தெரியாது. அதனால் இந்தியச் சூழலில். குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் தன்மையான பார்வை அல்ல இது. பாதிக்கப்படுபவர் யாரோ அவருக்கு இந்த எச்சரிக்கை.

திருடனுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்காதே என்றால் அதைச் செய்யாமல் திருடன் திருந்தவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு என்னைப் பொருத்தவரை அநியாயம்தான் :)

 பாலியல் சம்பவங்களில் உடல்ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே..
படித்தால் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் சற்று பொறுமையாக யோசித்தால் பெண் இடம் கொடுக்காமல் இது நடந்திருக்காது என்பது புரியும் :(

எனவே பெண்கள் பொது இடங்களில் நடத்தையிலும், உடை ஒழுக்கம் காப்பதுவும் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். தன் உடலை காட்சிப்பொருளாக சற்று நாகரீகமாக காட்டுவது என்பது தான் தற்போதய நவீன உடைக் கலாச்சாரம்.  பெண்கள் இவற்றிலெல்லாம்  தெளிவாக இருந்துவிட்டு, அதன் பின் ஆண்களைத் திருந்தச் சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.

கோவியாரின் இடுகையைப் படித்தவுடன் ஜிந்திச்சது :)

Wednesday, December 19, 2012

பயனற்றதைப் பேசாதே...ஓஷோ

குழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும். வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும். இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம். இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் நமது மன உளைச்சலுக்கும் அமைதி இன்மைக்கும் காரணமாகவும் அமைகிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ?

மனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும். மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு  நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.

பயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர  வாழ்கையை முழுமையாக வாழ முடியாது:)

கண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள். எவ்வளவு நேரம் முடியும்? சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும். அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது  இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.

சாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல். இதுவே தியானத்தில் நடப்பது.:)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.

கவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.

தியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம் :)