"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.





இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.

Monday, April 20, 2009

உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)

நண்பர் ஓம்கார் அவர்களின் யோகம் சம்பந்தமான நடுநிலையற்ற காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்ட உலகின் ”யோக”மான வியாபாரம் கட்டுரையை படித்ததன் விளைவே இந்த இடுகை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி; யோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்களைவிட நாம் இந்த இந்த வகைகளில் சிறப்பாக இருக்கிறோம் என்று ஒப்பிட்டுசொல்வது ஒரு ரகம்,

யோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்கள் இந்த இந்த வகைகளில் மோசமாக இருக்கிறார்கள் என்று சொல்வது மற்றொரு ரகம்,

சம்பந்தபட்ட கட்டுரையில் மட்டும் திரு ஓம்கார் இரண்டாவது ரகத்துக்கு வந்துவிட்டதாக நாம் உணர்ந்ததாலே இந்த கட்டுரை. மற்றபடி அவர்மீது மரியாதையே வைத்திருக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் இங்கே \\ குறிகளுக்குள் கொடுத்துள்ள அவரின் வார்த்தைகள், சம்பந்தபட்ட இடுகையின் மொத்த சாராம்சத்தையும் வெளிப்படுத்துவதாக நாம் கருதுகிறோம்.

இனி என்னுடைய பார்வையில் பெரிய விஷயஞானம் ஏதும் இல்லாமல் எளிமையாக
(இருந்தாத்தானே வர்றதுக்கு)—பார்ப்போம்.

\\நாளாக நாளாக மூளை மற்றும் மூல தனம் குறைந்து பிறரை ஏமாற்றி பொருள்சேர்க்கும் தன்மை அதிகரித்து வருகிறது.\\

இதை தாங்கள் சாதாரண பதிவராக சொல்கிறீர்களா? அல்லது ஜோதிட வல்லுநராக சொல்கிறீர்களா? ’

’காலம்’ பற்றி APRIL 3—விளக்கம் சரிதான். அதையே காலத்திற்கும் பொருத்திப்பாருங்கள். இங்கு ஏமாற்றத்திற்கும் பொருத்திப் பாருங்கள். ஏமாற்றவில்லை என்பதாகவும் புரியும். இதே தத்துவத்தைதான் வாழ்க்கைக்கு உபயோகமாக ஜீரோவில் MARCH 19 -நாம் சொல்லி இருக்கிறோம்.
பொருளாதாரமாக பார்த்தால்கூட கட்டணம் பெறுவது, எப்படி அவர்களை ஏமாற்றுவதாக அமையும். சொல்லிக் கொடுக்கும் விஷயத்திலும் ஏமாற்றவில்லை.அதை பின்னர் பார்ப்போம்.

\\தற்காலத்தில் யோகசாஸ்திரத்தை மக்கள் எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.\\

யாரும் சீரழிக்கவில்லை. யோகத்தில், யானையைக் கண்ட குருடன் போல் மக்கள் இருக்கின்றனர். தங்களை போன்றோர் அவனுக்கு சரியான பார்வையைக் கொடுத்து யானையை இன்னதென்று உணர்த்தவேண்டும். மாறாக யானையை சீரழிக்கிறான் என்று குறைசொல்ல தாங்கள் தேவையில்லை.

இன்னொரு குருடனே போதும்.,

\\உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது.\\
யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது. \\


அதைப்பற்றித் தெரிந்த, தங்களைப் போன்ற சிறுபான்மையினர் சொல்வது சரிதான்.

ஆனாலும் பெரும்பான்மையான யோகத்தைப் பற்றி தெரியாத மக்களிடம் ( நம்மாளுக்கு தியானம், தவம், யோகம், ஞானம் எல்லாம் ஒன்னுதானே! என்னமோ கண்ணைமூடி உட்காருங்கிறாங்க.., கையத்தூக்கு, கால அசைங்கிறாங்க.)அறிமுகப்படுத்தும் விதமாக, பொதுவாக அப்படி சொல்வதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

தேர்தல் என்கிற வார்த்தை இப்போது சொல்லப்பட்டால், அது ஒன்றும் தவறில்லையே. பாராளுமன்ற தேர்தல் என்று அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது என சலித்து கொள்வீர்களோ? சட்டமன்ற,உள்ளாட்சி,உட்கட்சி தேர்தல் என பல வகைகள் உள்ளது. எனவே தேர்தல் என்ற சொல்லை இங்கே தவறாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்வீர்களோ? இடத்திற்கு தகுந்தாற்போல் பொருள்கொள்வதில் என்ன தவறு?

\\நமது நாட்டில் யோக பயிற்சி பள்ளிகள் யோகாவை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)\\\\

”நமது நாட்டில் ஜோதிடப் பயிற்சி பள்ளிகள் ஜோதிடத்தை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)—”

இப்படி நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்குமா? ஏன் இந்த தாக்குதல்?

யோகம் என்ற வார்த்தைக்கு பதில் ஜோதிடம் என்ற வார்த்தையை போட்டால், நான் ஜோதிடத்தை தாக்குவதுபோல் இருக்கிறதா? இல்லையா? ”சாந்தமடைவீராக

தங்களின் பயிற்சிகள் ஒரு வேளை இலவசமாக சேவை நோக்கில் அளிக்கப்படுகிறதா? தாங்கள், தங்கள் மாணவர்களை பொதுமக்களுக்கு இலவசமாக ஜோதிடம் பார்க்க பயிற்றுவிக்கிறீர்களா? .யோகப் பயிற்சி இலாபகரமான வியாபாரமாகவே இருக்கட்டும். என்ன தவறு? பயிற்சிகளை கற்றுக்கொள்பவர் எந்த வகையில் நட்டம் அடைகிறார்? ( நம்மாளுதான் கத்துக்கிறதோடு சரி, செய்வதே இல்லையே )

\\கையை தூக்கு, மூச்சு விடு என சொன்னால் அது யோகா ஆகிவிடுமா?\\

அதன் பலன் என்ன என்று பாருங்கள் எதுவுமே தெரியாதவனுக்கு அப்படிதான் சொல்ல வேண்டும். பின்னர் படிப்படியாக சகல விளக்கமும் தரலாம். புரிந்து கொள்வான்.


\\மாயை எனும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒருவன் மேலே வர யோக பயிற்சிக்கு சென்றால் அங்கே அவனை குண்டலினி எனும் பெயரில் மாயை எனும் மாபெரும் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.\\\\

கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஜோதிடம் ஒரு சிகரம்!!!!??...ம்ம்ம்ம்
ஜோதிடத்தை விட்டுவிட்டு இதை சொல்லுங்கள். ஒரு சதவீதமேனும் நம்புகிறேன்.

\\குண்டலினி என்பதை குரு ஒருவர் தனிப்பட்ட சிஷ்யனுக்கு போதிக்க வேண்டியது. ஆனால் தற்சமயம் ஒரு விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து பல்லாயிர கணக்கான பேருக்கு சொல்லிகொடுப்பதால் அதன் தாத்பரியம் கெட்டுப்போய் விடுகிறது.\\

ஒன்றும் கெட்டுவிடவில்லை. பல்லாயிரத்தில் பத்தாவது தேறும். ஒன்று தேறினாலும் நன்மையே. குருகுலம் நடத்துவது, இன்று பொருத்தமாக இருக்காது. மக்கள்பெருக்கம் அப்படி. எந்த ஒரு கலையின் தாத்பரியமும் அப்படியேதான் இருக்கும். அவ்வப்போது தகுதியானவர்களால் முழுமையாக வெளிப்படும். அப்படியே கெட்டுப்போவதாக வைத்துக் கொண்டால்கூட, இராவணன் இல்லை என்றால் இராமன் யார்?

\\இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.\\

இது தரம் குறைந்த பதில். பெருமைபடக் கூடியதுஅல்ல. இதை தங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. (அதனாலேயே இந்த இடுகை போடவேண்டியதாகிவிட்டது) “அப்படியா தொடர்ந்து கவனியுங்கள். இத்தனை நாள் நாம் வெளியே மட்டுமே பார்த்து பழகியிருக்கிறோம். இப்பத்தானே உள்ளே கவனிக்கிறீங்க, இன்னும் பல விசயங்கள் நடக்கும்,” என்று யோகம் பயில்பவரை ஊக்கப்படுத்தி இருக்கவேண்டும். உங்கள் பதிலால் அவன் யோகம் என்பது ஏதோ தவறானது என்று ஓடியே போயிருப்பான். திருப்தியா?

உங்களுக்கு தெரியாதா உள்ளே ஒளி தெரிவது, யோகத்தில் PRE KG மாதிரிதானே என்று.?

என் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர் இந்த அமைப்பிற்கு இந்நேரம் புல் பூண்டு முளைத்து பூத்திருக்கவேண்டுமே? என்று அதிர்ச்சியடைந்தார். சரி உங்களிடம் நான் வந்து, இது பற்றி கேட்டால், “ஜாதகத்தைக் கொடுங்கள். அவர் கணிப்பில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. நல்ல நிலையில் இருப்பதற்கான ஏதோ ஒரு கணிப்பு அவரால் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்று சொல்வீர்களா?”
அல்லது “பூவைப் பறித்து தலையில் வையுங்கள் என்று சொல்வீர்களா? (“காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.)

இதற்கு நமது பேச்சுவழக்கில் சொன்னால் ‘எ……த்தாளம்’ என்று பொருள்.

இந்த கிண்டல், நையாண்டி, தங்கள் செயல்பாடுகளுக்கு பொருத்தமானது அல்ல தங்களுக்கு உரிய அணிகலனும் அல்ல. அப்படித்தான் இருப்பேன் என்றால் அது உங்கள் உரிமை. நான் நேரடியான கருத்துப் பரிமாற்றத்திற்கு வராமல் தாரளமாக ஒதுங்கிக் கொள்கிறேன்.


\\எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை. \\

யோகத்தினால் மனநிலை தவறுவதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். மனநிலை தடுமாற்றத்திற்கு யோகம் காரணமல்ல. ஜோதிடம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஒரு மணி நேரம் கற்றுக் கொள்பவன் குருவை சந்திக்க அவசியம் இல்லை. குரு தகுதியான சிஷ்யனைத் .தேடி வருவார்தானே!! (இது உங்கள் வார்த்தை)

\\அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.\\

”அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் ஜோதிட பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் கோவையில் ஒம்கார்ஜி சொல்லிகொடுத்தார். அவர் எல்லார் கண்களுக்கும் தெரிவார் என சொல்லுங்கள்.-

என்று நான் சொன்னால் அது சரியானதா?” அது நக்கல் இல்லையா?

இந்த காழ்ப்புணர்ச்சி ஆரோக்கியமானதல்ல.உங்களை சராசி மனிதனாக நான் பார்க்கவில்லை.

இது போதாது என்று பின்னூட்டத்தில் வேறு பிதற்றல்…

\\திரு அப்துல்லா அண்ணே,

கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...!

இதை எழுதும் பொழுது எனக்கு பரிதாபமே வருகிறது.\\

தங்களை நினைத்தால் எனக்கு அதைவிடபரிதாபமாக உள்ளது. இப்போது தாங்கள் குண்டலினி சக்தியை உணர்ந்தவராக இருந்தால், குண்டலினியால் ஒரு ஓம்கார் “பூரண கால தந்திரி” இச்சமுதாயத்திற்கு கிடைத்துள்ளார் என உண்மையில் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இது நன்மையா? இல்லையா? (உணர்ந்திருந்தால், மனநிலை பாதிப்பிற்கு குண்டலினி காரணமில்லை எனப் புரிந்திருக்கும்.)

இல்லை, குண்டலினியை உணரவில்லை என்றால், உணராத நீங்கள் எப்படி ’கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...!’ என்று சொல்லலாம்?

உண்மையை சரியாக ஒருவர் சொல்லவில்லை எனில் அதில் பெரிய தவறேதும் இல்லை.
அந்த பொறுப்பை முடிந்தவரை நாம் சரிசெய்யலாம். மாறாக அவர்களை மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜோதிடக்கலையை வளர்த்துங்கள். மகிழ்ச்சியே,
நோயாளிக்கு, நல்ல மருத்துவர் தேவைதான்.

ஆனால் அதற்காக எந்த உருவில் தாங்கள் யோகத்தை, அல்லது யோகத்தை சொல்லிக்கொடுக்கும் விதத்தை விமர்சித்தால் அது பூமராங் போல் உங்களிடமே திரும்ப வரும். (நான் சொல்லிக் கொடுப்பவன் அல்ல) அதே சமயம் ஒருவரிடத்தில் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடு இருந்தால் விமர்சிக்கலாம். அதில் தவறேதுமில்லை.

பொறுப்பை உணர்ந்து பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகிறேன். இது வேண்டுகோள் அல்ல. இது பச்சைக்கு பின் வரும் மஞ்சள்.

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்…