"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, April 9, 2009

குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து...

இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை அடைய...

குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து இயங்குவது அவசியம்

மின் மோட்டார்களில் அதன் திறனைக் குறிக்க 1HP, 2 HP, எனக் குறிக்கப்பட்டிருக்கும்.
HP (horse power) என்பது குதிரைதிறன் என்பது உங்களுக்கு தெரிந்ததே.

குதிரையைவிட வேகமாக ஓடும் பல விலங்குகள் இருக்கின்றன.

புலி, சிறுத்தை போன்ற மற்ற மிருகங்கள் இரையைப் பிடிக்க குறிப்பிட்ட தூரத்திற்கு, மிக வேகமாக ஓடும். ஆனால் தொடர்ந்து ஓடாது. ஓட முடியாது.

ஆனால் குதிரை தொடர்ந்து பலமணி நேரம் ஓடும்.
இரைக்காக அன்றி இயல்பாகவே ஓடும்.

வேகமாக ஓடுவதை விட தொடர்ந்து ஓடுவது மிக முக்கியம்.

சமயத்தில் வேகமாக செயல்படும் ஆற்றலும் தேவைதான். அதைவிட தொடர்ந்து தாக்குப்பிடித்து, இயங்கும் ஆற்றலே மிகமுக்கிய தேவையாகும்.


இலக்கை நோக்கி ஓடும்போது,வழியில் தடைகள் வரலாம். பல்வேறு சூழ்நிலைகளால் இலக்கின் தூரம், காலம் தள்ளிப் போயிருக்கலாம். அதனால்.. தொடர்ந்து இயங்குங்கள். இல்லாவிடில் உங்களது இலக்கை அடைவது இன்னும் தள்ளிப் போகலாம். அல்லது தடைபட்டே போகலாம்.

அதனால் நண்பர்களே... குறிக்கோளை அடையும் வழிகளில் தொடர்ந்து இயங்குவது என்பது மிகவும் அவசியமானது.


நன்றி: கருத்து:அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து.

Tuesday, April 7, 2009

துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

தீக்குச்சியை பற்ற வைக்கிறீர்கள். அது எரிந்து கொண்டிருக்கிறது.
காற்றடிக்கிறது. தீக்குச்சி அணைகிறது

அதே சமயம்..

உலைகளில், அடுப்பில், தீ எரிந்து கொண்டிருக்கிறது.

காற்று வீசப்படுகிறது.

தீ மேலும் நன்றாக பாதுகாப்பாக எரிகிறது.

தீக்குச்சியை அணைத்த அதே காற்று,
சூழ்நிலையை பலப்படுத்திய பின் தீயை வளர்க்கிறது.


துவக்க நிலையில்..

உங்கள் யோசனைகள் திட்டங்கள் முயற்சிகள் சூழ்நிலைகளினால்,
அல்லது மற்றவர்களால் பாதிக்கப்படலாம்.

அதைக் கண்டு மனம் தளர்ந்து, அத்துடன் அக் காரியத்தை அதோடு விட்டுவிடாதீர்கள்


அந்த திட்டம், எல்லா வழிகளிலும் உங்களால் யோசிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்பொழுது, அசாதாரண சூழ்நிலை அமைந்தால் ஒழிய பின்வாங்க வேண்டியதில்லை

மனம் தளராமல் கூடுதல் அக்கறையுடன், சரியான வழியில் உழைப்பைச் செலுத்துங்கள்.
உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இலக்கை அடைவது நிச்சயம்.


குறிக்கோளை அடைய.. துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

நன்றி; கருத்து ,அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து

Saturday, April 4, 2009

இரும்பை பதப்படுத்த......

உங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை
மேலும் தேவைகளுக்கேற்ப கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அது உங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும். அதில் முக்கிய பங்கும் வகிக்கும்.

இரும்பை பதப்படுத்த…

அதை உலைகளில் வைத்து சூடாக்கி, பழுக்க வைத்து….

அ) சூடான பழுத்த இரும்பைத் தண்ணீரில் முழுக வைத்து,உடனே குளிரச் செய்தல்..

ஆ) சூடான பழுத்த இரும்பைத் தரையில் போட்டு,தானாகக் குளிரச் செய்தல்.

இ) சூடான பழுத்த இரும்பை மணலில் புதைத்து,மெதுவாக குளிரச் செய்தல்..

இப்படி பல முறைகளில் குளிரச் செய்கிறார்கள்.

இதில் எந்தமுறை சரி, எந்தமுறை தவறு என பிரிக்கவே முடியாது.

காரணம் இரும்பை, கடினப்படுத்துவதற்கு, வளைப்பதற்க்கு, உடைப்பதற்க்கு என்ற தேவைகளுக்கு ஏற்பவே., குளிர வைக்கும் வழிமுறையும் மாறுகிறது.

இப்படி தேவைக்கேற்ப இரும்பை முழுமையாக உபயோகப்படுத்தும் பொருட்டு, அதனை எப்படியெல்லாம் பக்குவப்படுத்துகிறோம்.

அதேபோல் நம் மனதை , நமது தேவைக்கேற்ப பக்குவப்படுத்தி, மாற்றிக்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும். எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனியுங்கள்.பல இடங்களிலும் அலைவதை விட்டுவிட்டு, உங்கள் சொல்படி கேட்க ஆரம்பிக்கும். அதன்பின் சரியான முடிவுகள் எடுப்பது எளிதாகிவிடும்.


நான் இப்படித்தான் என்று இருந்தால் ஏதோ ஒருவிதத்தில் தான் பயனடைவோம். பல இழப்புகள் வரலாம். இரும்பை பாருங்கள். மாற்றத்திற்கேற்ப பலனடையுங்கள்.

மாறாக மனோநிலை பக்குவமானால், நிறைய பலன் அடைவோம், பிறருக்கும் பலன் தருவோம்.

ஆக ஒரு விசயத்தில் முடிவை எடுக்கும் முன், தேவையை தெளிவாகப் புரிந்து கொண்டால், மனதால் நல்ல சரியான, முடிவாக எடுக்கமுடியும்.

தீர்க்கமான உறுதியான முடிவுகளால்... குறிக்கோளை அடையும் வழி எளிதாகிறது

நன்றி: கருத்து, ‘அடுத்த ஆயிரம் நாட்கள்’ நூலில் இருந்து....

Friday, April 3, 2009

ஊட்டி போலாம் வர்றீங்களா?

நண்பர்களின் அனுபவங்கள், கருத்துகள், எண்ணங்களை பதிவுலகம் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம்.

அந்த வகையில் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றமடைய கற்றது கை மண்ணளவு என்கிற உணர்வில் எங்கு, என்ன கிடைக்கும் அது சரியானதா? என்ற தேடுதலோடு இருக்கிறோம்.

அதில் ஒன்றுதான் கவனகர் திருக்குறள் இராம கனகசுப்புரத்தினம் அவர்களின் குன்னூர் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை.

இவருடைய நிகழ்ச்சிகளில் ஏற்கனவே சில முறை பங்கெடுத்துள்ளேன். இதில் நான் பங்கேற்பாளன் மட்டுமே.

உடல்நலம், மனநலம், பொருள்வளம் இவற்றில் நாம் முன்னேற வேண்டிய வழிகளும், அதில் உள்ள தடைகளை நீக்குவது பற்றியும் பயிற்சி (சிறப்பாக) இருக்கும்.

அழைப்பை இணைத்துள்ளேன். வாய்ப்பு உள்ளவர்கள் வரலாம்.

இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

முதல் பக்கம் :



இரண்டாவது பக்கம் :

Wednesday, April 1, 2009

அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.

அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.

நாளை கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்.

இன்று கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்

இது நம் வாழ்வில் பொதுவாக நடைபெறும் சாதரண நிகழ்ச்சியே..

டெலிபோன் பில், கரண்ட் பில், பள்ளிக் கட்டணம் இது போல பல கட்டணங்கள், கையில் பணம் இருந்தும், சரியான நேரத்திற்க்கு முன் கட்ட முடியாமல் போயிருக்கும்.

இவ்விதமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,நாம் ஒவ்வொரு விதமாக நடக்கிறோம்.

அவசரமில்லாத முக்கிய வேலைகளை தள்ளிப் போட்டால்..
பின்னர் அதுவே அவசரமான முக்கிய வேலையாகிறது.


அதை மிகுந்த மன உளைச்சலோடு, அதிக பொருட்செலவில், அதிக நேரம் செலவு செய்து சமாளிக்க வேண்டியிருக்கிறது.


அதுமட்டுமல்ல.. சூழ்நிலைகளால் நாம் பலவீனம் அடைய அடைய....

கோபம், பயம், ஆத்திரம், கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படுகிறோம். இதனால் நாம் செயல்படும் திறன் மங்கிவிடுகிறது. இன்னும் சிக்கல் அதிகமாகிறது.

உடல்நலம், பெற்றோர்நலம், குழந்தைகள் நலம்,கல்வி, நடத்தை, வாகனப் பராமரிப்பு, கடன், கட்டணங்கள் போன்ற விசயங்களுக்கு அவ்வப்போது உரிய முக்கியத்துவம் கொடுத்தால் அவை இயல்பான, இனிமையான வேலையாகிவிடும்.

நான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்....

குறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்றை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே?

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)

கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்
தெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.

5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.

இப்போது சொல்லுங்கள்!

உங்கள் வாழ்க்கை...

ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?

5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?

வாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.

அடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்
பல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.

சொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.

குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்...

சுயமானதாக................................................SELF
அளவிடக் கூடியதாக..................................MEASURABLE
அடைய முடிவதாக....................................ACHIVEABLE
யதார்த்தமுள்ளதாக...................................REASONABLE
காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED

நம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.

உதாரணமாக..

அடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....

20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...

என் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.

குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)