"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 11, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 4

நியாலத்தில் அன்று இரவு தங்கினோம். ஒரு அறையில் 7 பேர், கிட்டத்தட்ட சின்ன சின்ன குழுக்களாக எங்களை அறியாமலே சேர்ந்துவிட்டோம். மாலைவரை உடலில் குளிரின் தாக்கம் தெரியவில்லை. ஆனால் இரவு வந்தவுடன் குளிர் அதிகமாகிவிட்டது. இதை எப்படி தாங்குவது?

தெர்மல்வேர் என்கிற உடலை ஒட்டிய ஆடைகள் (உள்ளாடைகளுக்கு அடுத்ததாக)அணிந்து கொண்டோம். இந்த உடைகள் என்றால் என்ன என தெரியாமல் வந்த நண்பரும் உண்டு. இந்த உடைகள் உள்பக்கம் ரைசிங் என்கிற நுட்பத்தில் பஞ்சு வெளியே தெரியும் வண்ணம் செய்யப்பட்ட பனியன் துணியினால் ஆனது.

லைட்வெயிட் ஆக இருக்கும். அதே சமயம் வெப்பநிலை எளிதில் இந்த ஆடையை ஊடுருவமுடியாது. காற்றும் புகுந்து வெளியே வரமுடியாது. அதே சமயம் ஈரத்தை எளிதில் வெளியே கடத்திவிடும்.தனக்குள்ளே வைத்திருக்காது.
இதனால் உடலின் வெப்பம் வெளியே அதிகம் கடத்தப்படாமல் காப்பாற்றும்.. இதன்மீது கண்டிப்பாக வேறு வழக்கமான உடைகள் அணிய வேண்டும். இதற்கு மேல் மூன்றாவது அடுக்காக ஜெர்கின்போன்றவையும் அணிந்து கொள்ளலாம்.

அதே சமயம் காது மூக்கு தொண்டை போன்ற பகுதிகளை முடிந்தவரை மூடியே வைத்திருத்தல் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டிய அம்சம்.

 குளிரினால் மூக்குமுனைப்பகுதி பாதிக்கப்பட்டு பாளம் பாளமாக மேல்தோல் வெடிக்க ஆரம்பித்துவிடும். இதற்கு மூக்கையும் தலை, முகம் அனைத்தையும் முக்கால்வாசி மூடியே வைத்திருப்பதுடன் பகல்வேளைகளில் சன்கிரீம் 30+ உபயோகப்படுத்த வேண்டும். முகத்தை மூட மங்கிகேப் அணிதல் அவசியம்.

காதினை மூடி வைக்காவிடில் எளிதில் உடல் வெப்பநிலை குறைந்துவிடும். தொண்டை பகுதி ஏற்கனவே தொண்டையில் கிச்கிச் இருந்தால் அதிகம் ஆகிவிடும். உடலின் வெப்பநிலை குறைந்தால் மீண்டும் இயல்புநிலைக்கு வர சிரமப்பட வேண்டி இருக்கும்.

கூடவே பிளாஸ்க் வைத்திருப்பதால் இரவு உணவின்போது குடிக்க வழங்கப்படும் வெந்நீர் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு  சில பாடல்கள் பஜன் வகையைச் சார்ந்தவை குழுவாக அனைவரும் சேர்ந்து பாடிவிட்டு உறங்கச் சென்றோம். இந்த பாடல்கள் மறைமுகமாக மூச்சு எடுக்கும் திறனை அதிகப்படுத்தும் தன்மையில் இருந்தது எனக்குப்புரிந்தது. ஆகவே லயித்து பாடிவிட்டு உறங்கச் சென்றோம்.

அடுத்தநாளும் நியாலத்தில் தங்குவதாக திட்டம். ஏனென்றால் நம் உடல் இந்த உயர் மட்ட நோய்குறிகளான தலைசுற்றல் வாந்தி மயக்கம் போன்றவை பழக வேண்டும். நியாலம் ஒரு சோதனைத்தளம் என்றும் சொல்லலாம்:)

எனக்கு ஏதும் ஆகவில்லையா என்றால் இரவு உணவின்போது சற்று தலைசுற்றல் வந்தது.....

3 comments:

  1. நாங்களே நேரில் பயணப்படுவது போல உள்ளது.. தொடருங்கள்.. காத்திருக்கிறோம்..

    பகிர்வுக்கு நன்றி

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. மன்னிக்கவும் நீங்கள் சொல்வது சில இடங்களில் கடவுள் நம்பிக்கை அட்றவர் போல உள்ளது உதரணமாக "இந்த பாடல்கள் மறைமுகமாக மூச்சு எடுக்கும் திறனை அதிகப்படுத்தும் தன்மையில் இருந்தது எனக்குப்புரிந்தது. ஆகவே லயித்து பாடிவிட்டு உறங்கச் சென்றோம்." அதிகாலம் தொட்டே இந்துமதம் அறிவியல் சிந்தனையை மைய்யமாக கொண்டுள்ளது. உதாரணமாக வடக்கே தலை வைத்து படுப்பது போன்றவைகளை சொல்லலாம். மற்றபடி கட்டுரை அருமை

    ReplyDelete
  3. கடவுள் குறித்தான புரிதல் வேறுபாட்டினால் இப்படித் தோன்றுகிறது கார்த்தி..

    பஜன் பாடல்கள் நேரடியாக நீங்கள் நினைக்கிற பலனையும் குடுக்கும். கூடவே கூடுதலாக நான் சொன்ன பலனையும் கொடுக்கும். இது ரகசியம்:)

    இதனை பாடுபவர்கள் உணர்ந்து கொண்டால் இன்னும் பலன் அதிகம் கிடைக்கும் என சிறப்பித்துத்தான் சொல்லி இருக்கிறேன் கார்த்தி.,

    சுருக்கமாக சொன்னதால் இப்படி அர்த்தம் தோன்ற வாய்ப்பு அமைந்துவிட்டது.

    அப்புறம் மன்னிப்பு என்ற வார்த்தை நமக்குள் எதற்கு. எந்த கருத்தாயினும் உரிமையோடு சொல்லுங்கள்.

    நன்றி கருத்துக்கும் வரவுக்கும்..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)