"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, November 24, 2010

லிவிங் டு கெதர்..... (18+)

லிவிங் டு கெதர் என்பது என்ன.. இது சரியா தவறா என்பதைவிட இதன் விளைவுகள் என்ன? சாதக பாதகங்கள் என்ன? இது தேவையா எனப் பார்ப்போம்.

லிவிங் டு கெதர் என்றால் என்னுடைய புரிதல் வயது வந்த ஆணும் பெண்ணும் இருவராக சேர்ந்து வசித்துப் பார்ப்போம். எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் இணைந்து வாழலாம். இல்லையெனில் பிரிந்துவிடலாம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சி என வைத்துக்கொள்கிறேன்.



புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்வது என்கிற ஒரு அம்சத்தை மட்டும் பார்த்தால் நூறு சதவீதம் லிவிங் டு கெதர் ஏற்றுக்கொள்கிறேன். சமுதாயத்தால் வரக்கூடிய எந்தவிதமான பிரச்சினைகளையும் என்னால் எதிர்கொள்ள முடியும். மன உறுதி இருக்கிறது என்றால் ஆதரவு அளித்துவிட்டு இதோடு கடையை மூடி விடலாம் :))))

ஆனால் புரிதலில் ஒத்துவரவில்லை என்றால் சுமுகமாக விலகிக்கொள்வது என்கிற நிலையைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. எல்லாப்பிரச்சினைகளுமே இதில்தான்  ஆரம்பிக்கிறது......

விலகுவதால் ஏற்படும் இழப்புகள், பாதிப்புகள் பற்றியும் இதனால் இது அவசியமா என்கிற சிந்தனையும் இப்போது அவசியமாகிறது.

முதலில் நான் லிவிங் டு கெதர் வாழும் பெண் என வைத்துக்கொள்ளுங்கள், நண்பருடன் சேர்ந்து வாழ்ந்து பார்க்கிறேன். ஒரு வருடம் ஆயிற்று. ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தது. உடல்பொருத்தம் மனப்பொருத்தம் இரண்டுமே சரிதான். பொருள் சம்பாதிக்கும் பல முயற்சிகளில் மெல்ல மெல்லஇருவரின் விருப்பங்களும் மாறுபடுகின்றன. விலகிவிட்டேன். அடுத்து ஒரு வருடம் கழித்து இன்னொரு நண்பருடன் பழகுகிறேன். ஒத்துவரவில்லை. மூன்றாவதாக இன்னொருவரைப் பார்க்கிறேன். அவரோடு சேர்ந்து வாழ்கிறேன். ஒத்து வரவில்லை விலகுகிறேன். இப்போது நான் என்ன செய்வது? தீர்வு என்ன?

தேவையான வருமானம் இருக்கிறது, தனியே வாழ்ந்து விடுவதா? எனக்குப்பிடிக்காத முந்தய நண்பர்களால் மீண்டும் சேர்ந்து வாழ அழைப்போ அல்லது பாலியல் தொந்தரவுகளோ வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?? இப்போது எந்த உறவு வந்து எங்களுக்குள் வாழ்க்கையின் பல முகங்களை உணர்த்தி சேர்த்து வைக்கும். அல்லது எந்த நட்பு வந்து சேர்த்து வைக்கும். அல்லது எந்த நட்பு சேர்த்து வைக்க வந்து நிரந்தரமாக பிரித்து கொண்டுபோய்விடும் என்கிற குழப்பங்கள் சாத்தியக்கூறுகள் வரத்தான் செய்யும்.

அடிபட்டு திருந்தி கடைசியில் ஒருவருடன் அனுசரித்து வாழ்வதா, அல்லது இதே அனுசரிப்பை முதலில் சேரும் துணையுடனே காட்டி சுமுகமாக வாழ்வதா, இதற்குப்பெயர் தாலி இல்லா திருமணம்தானே.. இங்கே எங்கே லிவிங் டு கெதர் வாழுகிறது!

சமூகத்தில் இரண்டு அல்லது மூன்று ஆண்களோடு வாழ்ந்த பெண்ணை உங்களால் ஆரோக்கியமாக பாலியல் எண்ணம் மனதில் தோன்றாமல் இயல்பாக பார்க்க முடியுமா?. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தாமல் எல்லாராலும் இருக்கமுடியும். இது வெளிவேஷம். இந்த வேஷம் நாம் உண்மையாக இருப்பதைத் தடுக்கும். எந்த வழியிலாவது அப்பெண்ணிற்கு இடைஞ்சலாக மாறுமே தவிர சாதகமாக மாறாது:) நிதர்சன உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இயற்கையில் ஆண் எப்போதுமே பெண்ணை காமத்தின் தேடலாகத்தான் பார்க்கிறான். ஆனால் பெண் எப்போதுமே பாதுகாப்பை முன்னிறுத்தி அதில் காமத்தை ஒரு கருவியாகப் பார்க்கிறாள். எல்லா உயிர்களிலும் பெரும்பாலும் இப்படித்தான். இது இயற்கை விதி

இந்த இயற்கைவிதியோடுதான் முரண்படுகிறது லிவிங் டு கெதர். ஆணின் இந்த பெண்ணைகாமத்திற்கான கருவியாக பார்க்கும் இயல்பை மாற்ற சில தலைமுறைகள் ஆகலாம். இன்றைய வாழ்க்கை சூழல் இந்த நம்பிக்கையைத் எனக்குத் தரவில்லை....

 இந்த சமுதாய அமைப்பில் ஒருவருடன் சேர்ந்து உடல்தொடர்பு இல்லாமல் ஒர் இரவு இருந்து வந்தால் கூட ஆணைவிட்டு பெண்ணை சமுதாயம் ஏசும். இங்கே சமுதாய அமைப்பை குறை கூறவில்லை. இது அப்பெண்ணிற்கான பாதுகாப்பினை முன்னிறுத்திய கண்டிப்புதான்:)

இங்கே எந்த ஆண் ஒரு பெண்ணோடு ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்து பின்னர் சுமுகமாக பிரிந்தபின் மீண்டும் அந்தப்பெண்ணை சந்திக்கும்போது பழையதை கிளறாமல் இருந்ததாகவோ, குறை கூறாமல் இருந்ததாகவோ, குறைந்த பட்சம் என்னோடு உறவு கொண்டவள்தானே.. இப்போது வாய்ப்பு கிடைத்தால் இன்னொருமுறை........எனச் சிந்திக்காத ஆணை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா, ஆம் எனில் எத்தனை சதவீதம்??????

நம் சமுதாயம் இருவர் தற்காலிகமாக சேர்ந்து வாழ்வதை ஆரோக்கியமாக பார்க்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. காரணம் திருமணம் என்கிற வாழ்க்கைக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் கட்டமைப்பில், பண்பாட்டில் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். ஆகவே ஆணைப்பற்றி சமுதாயம் அக்கறைப்படுவதை விட பெண்ணின் நிலையை, உடல்ரீதியான மனரீதியான குடும்பரீதியான பாதுகாப்பு பெண்ணுக்கு கிடைக்காமல் போய்விடும் என்கிற அக்கறையுடன் தான் லிவிங் டு கெதர் நிலையை நம் சமுதாயம் கேள்விக்கு உட்படுத்துகிறது.

சுயவிருப்பத்துடன் யாருக்கும் தெரியாமல் விருப்பமானவருடன் உறவு என்பது சரியா என்றால் வெளியே தெரியாதவரை எல்லாமே சரிதான்!!! இதற்கு
திருமணமோ, லிவிங் டு கெதரோ அல்லது எதுவுமற்ற சூழ்நிலையோ காரணமே இல்லை.

மனதளவில் பெண்ணை தன்னுயிராக மதித்து இயல்பாக விடைபெற்று விலகும் தன்மை வந்தால் லிவிங் டு கெதர் சாத்தியம். அதே சமயம் அந்த மனநிலை நமக்கு வாய்க்குமானால் லிவிங் டு கெதர் அவசியமில்லாத ஒன்றாகிவிடும். காரணம் எந்தப் பெண்ணாக/ஆணாக இருந்தாலும்   எனக்கு ஒன்றே. என்கிற மனநிலை வந்துவிடும்:))

என்னோடு சேர்ந்து வாழ்பவரை சரியாகப் புரிந்து கொண்டு அவரை எனக்கேற்றவாறு மாற்ற முயற்சிக்காமல் அவருக்கேற்றவாறு அல்லது அவரை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வேன் என்கிற மனநிலை வந்தால் லிவிங் டு கெதரில் பிரிவு என்பதே வராது. அதே சமயம் இந்த மனநிலை வந்தால் லிவிங் டு கெதர் எதற்கு:))).. முன்பின் தெரியாதவளை திருமணம் செய்து கொண்டாலும் என்னால் இப்படி அன்போடு அரவணைக்க முடியும்தானே:))

இன்னும் கொஞ்சம் பார்ப்போம்...

ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பது திருமணத்திற்கும், லிவிங் டு கெதருக்கும் பொதுவான தன்மையே:)) இதுவரை வருகின்ற நிகழ்வுகள்,
குடும்ப உறவுகள் பிரச்சினைகளை நம் துணையின் சார்பாக நின்றுதான் அணுகிறோம். இது அனுபவம்.....

இதன் பின்னர் ஓரளவு மயக்கம் தீர்ந்து நடுநிலையோடு பார்க்கிறோம்(?) அப்போது துணயின் இயல்புகள் தெரியவருகிறது. அது நமக்கு உடன்பாடில்லை அல்லது பிரச்சினைகளை உண்டாக்க முயலுகிறது,.என்பது தெரிகிறது.

சரி சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இயல்பை சற்று மாற்றி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் அவர்கள் பார்வையில் நாம்தான் தவறு எனப்பார்க்கிறார். அவரைப்பொறுத்தவரை இது சரிதான்

இப்ப என்ன செய்வது மணமுறிவா, ஒதுங்கி வாழ்வதா, சகித்துக்கொண்டு வாழ்வதா என்கிற குழப்பங்களும் வரத்தான் செய்கிறாது. இதற்குத் தீர்வைத்
தேடவேண்டுமே தவிர இந்த பிரச்சினை லிவிங் டு கெதரில் இல்லை, விலகிவிடலாம்  எனச் சொல்ல முடியாது, மற்ற பாதக அம்சங்கள் நிச்சயம் இருக்கிறது.

என்னதான் மூன்றுமாதம் அல்லது ஒரிரு வருடங்கள் நெருங்கிப்பழகினால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது ஓரளவிற்கே சாத்தியம். நமது வாழ்க்கைஅனுபவத்தில் கணவன் மனைவியை ஒருவரைஒருவர் முற்றிலுமாய் அறிந்து கொண்டோமா என்றால் இல்லை. திருமணமாகி பலப்பல வருடம் ஆகியும் இன்னும் புரிந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதே உண்மை.


பிடிக்கவில்லை என்பது என்ன? எந்தவிதத்தில் / பணவிசயத்திலா? இது வருடத்திற்கு வருடம் மாறும். யாருக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
அரசுப்பணியாக இருநதாலும் கூட அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாது. அடிப்படை வாழ்க்கைக்கான பணம் கிடைக்கும் என்பதற்கு ஓரளவிற்கு உத்தரவாதம் தரலாம். சரி என் இரசனை வேறு, ஆனால் என் இரசனைப்போல் என் துணையாக வரப்போறவருக்கும் இருக்கிறது என நம்பி பழகிப்பார்த்தோம். ஆனால் இரசனை வேறு மாதிரி இருக்கிறது என்றால் இரசனை என்றால் என்ன என்ற கேள்வி வருகிறது....

உடை, நட்பு, உணவு, வாழ்க்கை நடத்தும் விதத்தில் ஒற்றுமை என பல இரசனையான விசயங்களிலும் நான் இப்படி என அடையாளப்படுத்திக் கொண்டு நம்மை ஒரு மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு இயங்குகிறோம். துணையை இதை வைத்துக்கொண்டு அளக்கிறோம். அல்லது இயங்க வேண்டும் என விரும்புகிறோம். துணைக்கும் ஒரு மையப்புள்ளி இருக்கும் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம். ஒத்துவரவில்லை என முடிவு செய்கிறோம்.

உண்மையில் அவர் அப்படியேதான் இருக்கிறார். நாம் விலகியபின் இன்னொருவருக்கு சரியான பொருத்தம் இருக்கிற்து என்ன்றால் என்ன அர்த்தம்.?

அவருடைய மனோநிலைக்கு மிக அருகிலான மனநிலையில் இன்னொருவர் இருக்கிறார், துணையின் நிலை எதுவாயினும் என்னை பாதிக்காது. விலகாது இருக்கமுடியும் என்கிற உள்ளே திடமான மனநிலை, ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருக்குமானால் நாம் எளிதில் வெற்றிபெறலாம். லிவிங் டு கெதர் படி துணையின் விருப்பத்தை பூர்த்தி செய்து பிரிவு என்பதே இல்லாமல் இருக்கலாம். அல்லது பெற்றோர் ஏற்பாட்டில் நடக்கும் திருமணமாக இருந்தாலும் இதே மனநிலையில் அணுகினால் பிரிவு இன்றி வாழ முடியும்.

ஆக தன் மனதை மாற்றிக்கொள்ள விரும்பாத மன அடிமைகளுக்கே லிவிங் டு கெதர் பொருத்தம். மாறாக லிவிங் டு கெதரினால் சமுதாயம் கெட்டு விடும் என்றால் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கும் இல்லை என்பதே உண்மை. அதன் பாதகங்களை கணக்கில் கொண்டு மிகச் சாதரணமாக ஒதுக்கும் திறன் வேண்டும். அதனால் என் மகள் கெட்டுவிடுவாள் என்றால் என் மகளுக்கு மனதின் திருட்டுத்தனங்களை சொல்லிக்கொடுக்கும், தெளிவு  செய்யும் ஆற்றல் எனக்கு இல்லை என ஒத்துக்கொள்வது சிறப்பு..

லிவிங் டு கெதர் சரி என வைத்துக்கொண்டு, அதனோடு முரண்பாடு கொள்ளாமல் முதலில் சந்திக்கிற துணையே என் வாழ்க்கைத் துணை என வாழ முயற்சி செய்வோம். அதற்கு திருமணம் பல வழிகளிலும் உதவும். அந்தப் பாதையையும் பாதுகாப்பையும் தேர்வு செய்வோம்.


நிகழ்காலத்தில் சிவா

10 comments:

  1. வலைக்குள் மான் சிக்கி விட்டது. ஆனால் மானுக்கும் காயம் இல்லை. வலையும் அறுந்து போகவில்லை.

    சிவா உங்கள் புகைப்படத்தில் தாவாக்கட்டையில் தெரியும் ஒளி இந்த எழுத்திலும் தெரிகின்றது.

    அதென்ன பயணக்கட்டுரைக்கு இடையில் இது போன்று? படித்து படித்து பல மக்கள் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியவில்லையோ?

    ஆனா திருப்பூர்ல இந்த கலாச்சாரத்திற்கும் "இடை" ப்பட்ட கலாச்சாரம் தானே வாழ்ந்து கொண்டுருக்கிறது.

    ReplyDelete
  2. ஐயோ சாமி ஆளை விடு ...அனானி வாரான் வார்த்தைக்கனைகளோடு
    நான் எஸ்கேப்.

    ReplyDelete
  3. //சிவா உங்கள் புகைப்படத்தில் தாவாக்கட்டையில் தெரியும் ஒளி இந்த எழுத்திலும் தெரிகின்றது//

    அவ்வ்வ்வ்....:)))))))

    \\அதென்ன பயணக்கட்டுரைக்கு இடையில் இது போன்று? படித்து படித்து பல மக்கள் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியவில்லையோ?\\

    தீவிரமான என் நண்பர்கள் சிலரின் ஓட்டுகள்.. நூறுபேர் பார்வையிடும் அந்த இடுகைவிட இதுபோன்ற இடுகைகள் அதிகமாக படிக்கப்படுகிறது. எனக்கு தோணுகிறபடி எழுதிக்கொண்டு இருக்கிறேன். :))

    ReplyDelete
  4. //ஐயோ சாமி ஆளை விடு ...அனானி வாரான் வார்த்தைக்கனைகளோடு
    நான் எஸ்கேப்.//

    நான் இருக்கிறேன் துணையாக:))
    அனானி வசதி என் பதிவில் இல்லை.

    பொதுவாக யாருமே பிரச்சினையை தெளிவாக அலசுவதில்லை. மாறாக கருத்து தெரிவிப்பவரைத் கும்மி விடுகிறார்கள்.

    கடமையைச் செய்வோம்...

    வரவுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. இதற்குப்பெயர் தாலி இல்லா திருமணம்தானே//

    இந்த விடயத்தால்தான் நிறையப் பேர் முரண்படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
    திருமணம் என்றாலே பல லட்சங்கள் செல்க்வழித்து யாகம் வளர்த்து தாலி
    கட்டுவது மட்டும்தான் என்று நினைக்கிறார்கள்.

    ஆனால் நாம் வேண்டுவது லிவ்விங் டுகேதராக வாழ்பவர்கள் சட்டப்படி
    திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதைத்தான்.//

    . மூன்றாவதாக இன்னொருவரைப் பார்க்கிறேன். அவரோடு சேர்ந்து வாழ்கிறேன். ஒத்து வரவில்லை விலகுகிறேன். இப்போது நான் என்ன செய்வது? தீர்வு என்ன?//

    நாலாவதாக வருபவராவது கட்டாயம் உங்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டுகிறேன் .

    ReplyDelete
  6. தலைப்பில் தேவையா?

    ReplyDelete
  7. //நாலாவதாக வருபவராவது கட்டாயம் உங்களுக்குப் பிடித்தவராக இருக்க வேண்டுகிறேன் .//

    ஹிஹிஹிஹி...

    //தலைப்பில் தேவையா?//

    அந்தப்பெண்ணை சந்திக்கும்போது பழையதை கிளறாமல் இருந்ததாகவோ, குறை கூறாமல் இருந்ததாகவோ, குறைந்த பட்சம் என்னோடு உறவு கொண்டவள்தானே.. இப்போது வாய்ப்பு கிடைத்தால் இன்னொருமுறை........எனச் சிந்திக்காத ஆணை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா, ஆம் எனில் எத்தனை சதவீதம்??????

    இந்த ஒன்றுக்குகாகத்தான்
    18+ போட வேண்டியதாகிவிட்டது.

    மனம் குறித்து அலசினாலும் கலாச்சார காவலர்களுக்கு பயப்பட வேண்டியதாக இருக்கிறது:))

    ReplyDelete
  8. \\தமிழ் அமுதன் said...
    தெளிவான பதிவு...!
    \\

    பல முக்கிய தலைப்பிலான கருத்துகள் விரிவாக அலசப்படுவதே இல்லை.

    என்னால் முடிந்தவரை எழுதி உள்ளேன்.

    நன்றி வரவுக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete
  9. உங்கள் கருத்தைப் படித்துவிட்டு,ரீடரில் பார்த்தால் நண்பர் கேபிள்சங்கர் அவர்களின் இதே தலைப்பிலான இடுகை.

    உங்கள் கோணமும்,அவர்தன் கோணமும் படிக்கிற எங்களுக்குச் சரியென்றே தோன்றுகிறது.

    அதுசரி நாங்கள் எதை எடுத்துக் கொள்வது எனக் குழம்பிப் போனேன்.

    அந்தக் கால ஆசைநாயகி,ஆசை நாயகர்கள் கதையே தான் தற்போதும்.

    சபலங்களால் ஜென்மம் பாழ்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)