"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, March 30, 2009

வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்

ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு தூரத்து உறவினரின் பெண் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து அழைக்க உதவியாக, உடன் சென்றோம். ஒவ்வொரு வீடாக அழைப்பு, பத்திரிக்கை கொடுத்துக்கொண்டே வந்தோம்

ஒருவீட்டில் காபி,
அடுத்தவீட்டில் டீ,
அடுத்தவீட்டில் சுவீட்,காரம், காபி,
அதற்கடுத்த வீட்டில் பிஸ்கட்,காபி,
அதற்கடுத்த வீட்டில் தண்ணீர் மட்டும்
என வரிசையாக சாப்பிட வேண்டியதாகிவிட்டது.

இது போன்ற நிகழ்வுகளில் அன்றைய அடுத்தவேளை உணவை தியாகம் செய்து வயிற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என் வழக்கம்.

கடைசியாக சென்ற வீட்டில் எங்களுக்கு உணவு செய்ய சொல்லி சிக்னல் கொடுத்து விட்டார் எங்களுடன் வந்த உறவினர். எங்களை உபசரிப்பதாக நினைத்துக்கொண்டு. மணியோ ஏழுதான் ஆகிறது.

அந்த வீட்டுக்காரர் கோதுமை ரவை உப்புமா செய்யத் தொடங்கிவிட்டார். அன்போடு வேண்டாம் என்று மறுத்தும் கேட்கவில்லை. கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர். அவர்களின் மனநிலையைப் பற்றி சிறிது கூட சிந்திக்கவில்லை.

உப்புமாவிற்கு தயிர் பற்றாக்குறை, நன்கு புளித்த தயிரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு ஒரு வழியாக சமாளித்துவிட்டார்

சூழ்நிலைகள் தர்ம சங்கடமாக இருந்தபோதும் நாம்தான் ஜீரோ ஆயிற்றே. அமைதியாக ஏற்றுக்கொண்டு சாப்பிட்டு விட்டேன்.

சிந்தனை விரிந்தது.

என் வீட்டில் யார் பத்திரிக்கை கொண்டு, அழைப்பு சொல்ல வந்தாலும், தண்ணீர் மட்டுமே முதலில் தரவேண்டும் என்பது என் இல்லத்து அரசிக்கு நான் இட்டுள்ள அன்புக்கட்டளை. இதில் ’அவன் வீட்டுக்கு போய் பச்சத் தண்ணி கூட தரவில்லை’ என வருபவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதும் அடக்கம்.

அதன் பின்னர் அவர்களிடம் என்ன வேண்டும், எனக் கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உணவோ, டீயோ தரவேண்டும். அதுவும் ஒருமுறைக்கு மேல் கேட்கக்கூடாது.

உறவினர்கள் தன் அன்பை காட்டுவதாக எண்ணிக்கொண்டு, அவர்களும் திடீர் விருந்தாளிகளை சமாளிக்க சிரமப்பட்டுக் கொண்டு, வருபவர்களின் சூழ்நிலை அறியாமல், உபசரிப்பதை விடுத்து, சிரமப்படுத்தாமல் ”அவர்கள் இன்னும் பல இடங்களுக்கு போகவேண்டியது இருக்கும்.” என்பதை கருத்திற்கொண்டு அன்பாக நாலுவார்த்தை விசாரித்து அனுப்புலாம் அல்லவா?

இதிலும் சில வீடுகளில் சாப்பிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏற்கனவே சிறு பிணக்கு ஏதேனும் இருக்கலாம். நாம் பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது சாப்பிட்டால் சமாதானமும், சாப்பிடாவிட்டால் பெரும் பிணக்காக மாறும் நிலை இருக்கலாம். இதனால் பெரும்பான்மையாக மற்ற இடங்களில் தண்ணீரே சாப்பிட்டால்தான் சவுகரியமாக இருக்கும். வயதானவர்கள் உடல்நிலையும் இதில் முக்கியம். விசேசத்தின் போது மருத்துவமனைக்கு செல்லும் நிலை தவிர்க்கலாம்.

இப்ப சொல்லுங்க , நீங்க யார்? கேட்காமலே தண்ணீர் மட்டும் தருபவரா?
வருபவரை காபி,டீ,டிபன்,சாப்பாடு சாப்பிட வற்புறுத்துபவரா?

12 comments:

  1. நல்ல பதிவு, ஆனால் போகிற இடமெல்லாம் வெறும் பச்சை தண்ணீரே கிடைத்தால், வெட்கத்தை விட்டு ஒரு வாய் காபி கொடுங்கன்னு எப்படிக் கேட்பது என்பதும் சங்கடம் தானே ?

    வந்தவுடனேயே கையில் தண்ணீரை வைத்துக் கொண்டேன்... காபியா டீயா என்ன சாப்பிடுறிங்க என்று கேட்டால்... விருப்பம் இருந்தால் கேட்பாங்க, இல்லாவிடில் வழக்கம் போல் பச்சை தண்ணீர் கொடுக்கலாம்.

    சொந்தக்காரர்களுக்கு ஈகோவும் மிகுதிதான், எதையும் கேட்டு வாங்கிக் குடிக்கக் கூடாதுன்னு நினைப்பாங்க.

    ReplyDelete
  2. \\வெட்கத்தை விட்டு ஒரு வாய் காபி கொடுங்கன்னு எப்படிக் கேட்பது என்பதும் சங்கடம் தானே ?\\

    வெட்கம் விட்டு இயல்பாக மாற வேண்டும் என்பதே
    நமது விருப்பம். இதன்பலன் இருவருக்குமே,
    நன்மை செய்யாமல் இருப்பதாக வைத்துக்கொண்டால் கூட, அதைவிட, துன்பம் செய்யாமல் இருப்பது மேல் அல்லவா?.

    நான் உங்களை நெருக்கமாக நினைத்தால் கேட்டு சாப்பிடவேண்டும். அப்படி நான் நினைக்கவில்லை என்றால் என்னைப்பற்றி நீங்கள் அக்கறைப்பட
    வேண்டியதில்லைதானே? தண்ணியே போதும்.

    ஈகோவை விட்டு தோழமையுடன் இருக்கவேண்டும்.
    அதற்குத்தான் நான் முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. \\நான் உங்களை நெருக்கமாக நினைத்தால் கேட்டு சாப்பிடவேண்டும். அப்படி நான் நினைக்கவில்லை என்றால் என்னைப்பற்றி நீங்கள் அக்கறைப்பட
    வேண்டியதில்லைதானே? தண்ணியே போதும்.\\

    சிறப்பான சிந்தனை.

    \\கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர்.\\

    வெறுப்பு என்பது கூட ஒரு வகையில் பாசத்தின் படிகட்டாக கூட அமையலாம் அல்லவா?. சொந்தங்களுக்கு ஈகோ அதிகம் தான், ஒருவேளை ஒரு உறவின்ர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மற்றோருவர் வீட்டில் சாப்பிட மறுத்தால் அந்த இருவரும் சந்தித்திக்கொள்ளும் வேலையில் (நம்மை பற்றி பேசினால்)நம்முடைய செயல் அந்த உறவினருக்கு வெறுப்பாய் அமையும். முடிந்தால் அனைவரது வீட்டிலும் சாப்பிட முயற்சி செய்யலாம் இல்லையெனில் அனைவரது வீட்டிலும் மறுத்துவிடலாம்.

    ReplyDelete
  4. முடிஞ்ச மட்டும் நல்லா சாப்புடுற ஆள் நான்.

    ReplyDelete
  5. \\முடிஞ்ச மட்டும் நல்லா சாப்புடுற ஆள் நான்.\\\

    வருங்கால முதல்வர் ..ஆவதிற்கு முழுத்தகுதியான
    நபர்...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. \\வெறுப்பு என்பது கூட ஒரு வகையில் பாசத்தின் படிகட்டாக கூட அமையலாம் அல்லவா?.\\

    வாய்ப்புகள் மிகக் குறைவு..

    \\ஒருவேளை ஒரு உறவின்ர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மற்றோருவர் வீட்டில் சாப்பிட மறுத்தால் அந்த ஒருவேளை ஒரு உறவின்ர் வீட்டில் சாப்பிட்டு விட்டு மற்றோருவர் வீட்டில் சாப்பிட மறுத்தால் அந்த இருவரும் சந்தித்திக்கொள்ளும் வேலையில் (நம்மை பற்றி பேசினால்)நம்முடைய செயல் அந்த உறவினருக்கு வெறுப்பாய் அமையும். முடிந்தால் அனைவரது வீட்டிலும் சாப்பிட முயற்சி செய்யலாம் இல்லையெனில் அனைவரது வீட்டிலும் மறுத்துவிடலாம்.(நம்மை பற்றி பேசினால்)நம்முடைய செயல் அந்த உறவினருக்கு வெறுப்பாய் அமையும். முடிந்தால் அனைவரது வீட்டிலும் சாப்பிட முயற்சி செய்யலாம் இல்லையெனில் அனைவரது வீட்டிலும் மறுத்துவிடலாம்.\\

    நட்போ, உறவோ நெருக்கம், மிகநெருக்கம், அளவுடன், என பல வட்டங்களில் இருப்பர், எனவே சம்பந்தபட்டவரை பொறுத்து நம் நடவடிக்கை அமைவது சிறப்பு.

    தங்களது சிந்தனை இந்த இடத்திற்கு பொருத்தமானது
    அல்ல. இது போல் சிந்தித்தால் நாம் குழப்பம் அடைய வாய்ப்புகள் அதிகம். நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் சிந்தித்துப்
    பாருங்கள் நண்பரே

    விஷ்ணு-க்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. முற்றிலும் உண்மைங்க...
    நிலமையை உணர வச்சிருக்கீங்க...
    நானும் அதிகமா மாட்டியிருக்கேன்...

    ReplyDelete
  8. வருக வேத்தியன்..

    தவிர்க்க நம்மால் ஆன சிறு முயற்சிதான் நண்பரே..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. கரெக்டா சொல்லி இருக்கீங்க நண்பா.. இதுக்கு முன்னாடி நான் இதைப் பத்தி யோசிச்சது இல்லை.. நன்றி.. நல்ல பதிவு..

    ReplyDelete
  10. கார்த்திகைப் பாண்டியன்
    கருத்துக்கு நன்றி....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. முற்றிலும் உண்மை

    ReplyDelete
  12. அன்பு நண்பா! அருமையான பதிவு, நன்றாக சொன்னீர்கள், நானும் இதை போன்று அனுபவித்து இருக்கிறேன், அன்பு தொல்லையால், வயிற்று தொல்லையும் வருவதுண்டு, இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள் -வாழ்த்துக்கள்
    அன்புடன் ஜீவா

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)