"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, March 14, 2009

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்.......

தவறு செய்வது மனித இயல்பு. . ஆனால் அதற்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கி அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுஅல்ல. ஆனால் வழக்கத்தில் இருப்பது இதுதான்.

அதேபோல் தன் தவறுகளை நியாயப்படுத்துவத்தில் எந்தப் பயனும் இல்லை. தற்காலிகப் பலன் இருக்கலாம். அது முன்னேற்றத்திற்கு உரியதாக இருக்காது. மனம் ஒரு தவறுக்கு ஏதாவதுஒரு சமாதானத்தைதான் எப்போதும் சொல்லும். அதனால் யாரும் தன் தவறை, குறைபாடுகளை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.

நாமாக நடக்கும்போது கல்லில் மோதி விட்டு, ‘கல் இடித்துவிட்டது’ என்கிறோம். கல்லை இந்த நிகழ்வுக்கு பொறுப்பாக்கி நாம் தப்பித்துக்கொள்கிறோம்.இதே போலத்தான் ’முள் குத்திவிட்டது’ ‘செறுப்பு கடித்துவிட்டது’ என்பவையெல்லாம்.

இப்படி உயிரற்ற பொருட்கள் சம்பந்தபடும்போது, அது நம் குணத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அமையும். ஆனால் மனிதர்கள் சம்பந்தபடும்போதுபிரச்சனை ஆரம்பிக்கிறது. சண்டை, கருத்துவேறுபாடு, என மனித உறவுகள் இனிமை கெடுகிறது.

"இந்த செயலை இப்படி செய்திருக்கவேண்டும்.உன்னால்தான் கெட்டுப்போச்சு...."

என தவறை பிறர்மீது சுமத்தி தாக்குதலை தொடங்கி வைப்போம்.

நாம் கண்காணித்து வழிகாட்டி இருக்கவேண்டும். அல்லது முதலிலேயே தகுந்த ஆலோசனை கூறியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு தவறை பிறர் மீது சுமத்துவதால் என்ன பலன்..?.

முடிவை அமைதியாக ஏற்று, இழப்பையும் தாங்கிக்கொண்டு, இதிலிருந்து தேவையானதைக் கற்றுக்கொண்டு அடுத்தமுறை தவறில்லாமல் செயல்படவேண்டும்.

தவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறபோதே அந்த தவறின் தன்மை மறைந்துவிடுகிறது. ஏனென்றால், அதற்கு அசாத்தியத் துணிச்சலும், பரந்த மனப்பான்மையும் தேவைப்படுகிறது. இதுவே ஆன்மபலம் . இவை நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

நாம் தவறு செய்வது இயற்கை ஆனால் எப்போது ’தவறு’ என்று உணர்ந்து, ஏற்றுக் கொள்கிறோமோ அந்த நொடியிலேயே அத்தவறில் இருந்து நாம் விடுதலை அடைகிறோம். இதற்கு ஒரு ஆழ்ந்த சுயபரிசோதனை தேவைப்படுகிறது இதைத்தான் introspection என்கிறோம்.

என்ன படிச்சிட்டீங்களா? எவ்வளவு நாளைக்குத்தான் வெளியிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது?

கொஞ்சம் உள்ளேயும் பாருங்களேன்.......

மீண்டும் சந்திப்போம்.

நன்றி: கருத்து-இறையன்புவின் ஏழாவது அறிவு- நூலில் இருந்து

4 comments:

  1. அன்பு அறிவே தெய்வம் அவர்களே, தங்களின் வலை பதிவை பார்த்தேன் மிகவும் அருமை, எனக்கு குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும், அறிவே தெய்வம் வலை பதிவில் குழந்தையை பார்த்தவுடனே உற்சாகம் பிறந்து விட்டது, மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள், வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ஜீவா

    ReplyDelete
  2. வருக ஜீவா
    தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்தியமைக்கு
    நன்றி. கொஞ்சம் வித்தியாசமாகவும்,
    உபயோகமாகவும் இருக்கட்டும் என்றுதான் இந்த சிறுமுயற்சி

    ReplyDelete
  3. தன்னைத்தான் அறிய வேண்டும்.

    நல்லப்பதிவு நன்றி.

    ReplyDelete
  4. உன்னையே நீ எண்ணிப் பார் - சுய பரிசோதனை செய்து கொள் - இவை எல்லாம் தேவையான ஒன்று

    வெளியே மட்டும் பாக்காம கொஞ்சம் உள்ளேயும் பாப்போம

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)