"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, October 6, 2009

பணமும் பெரியாரும்... பாரதியும்....

பணம் நமது வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிவிட்டது.,

திறமைகள் இருந்தும், தகுந்த தொழிலோ, வேலையோ செய்தும் போதுமான பணம் வருவதில்லை. ஏன்?

பணம் வரும் வழிதான் என்ன? இதில் நம் பங்கு என்ன?

பணத்தின் மீது பற்றும் அக்கறையும் வைத்துக் கேட்டால்தான் பணம் வரும்.





தந்தை பெரியார் ஒரு மாபெரும் அறிஞர். அவர் இந்த பணவிசயத்தில் மிக சரியாகவும், தெளிவாகவும் சிந்தித்தார். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அவர் முதலில் கேட்கும் கேள்வி. “ புத்தகம் எத்தனை ரூபாய்க்கு விற்றது?” என்பதுதான்.

மக்கள் அவரிடம் நினைவுக்குறிப்பில் கையொப்பம் கேட்டால்கூட. ‘இருபத்தி ஐந்துகாசு’ இன்றைய கணக்குப்படி இருபத்தி ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம், வாங்கிக்கொண்டுதான் கையொப்பம் இடுவார்.

பணத்தின்மீதும் ஒருகண் வைத்திருந்தார். இன்று அவர் தேடி சேர்த்து வைத்த சொத்து நீங்கள் அறிந்ததுதான்.

நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,


பாரதியார் பணம் சேர்ப்பது குறித்து கணப்பொழுதேனும் சிந்தித்திருக்கவில்லை. அவரது துணைவியார் பக்கத்துவீட்டில் கடனாக வாங்கி வைத்திருந்த அரிசியையே, “காக்கை குருவி எங்கள் சாதி..” என்று பாடியபடி முற்றத்தில் சிதறவிட்டுக் குருவிகள் தின்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர். ஆனால் எண்ணத்தை முறைப்படி வானத்தில் அனுப்பாமல் வறுமையில் உழன்றார். இதில் தவறேதும் இல்லை என்றாலும் பணம் சம்பாதிக்கும் நுட்பத்தை அவர் கைக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

பணத்தை உணர்ந்து மதிப்போம், வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.

Sunday, October 4, 2009

முருகக் கடவுள் தலைமைச் சித்தர்


ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.

தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.

வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்;இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், அவ்வையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை.

முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.

Friday, September 25, 2009

நாய் வளர்த்ததும், கண்கள் பனித்ததும்

நாய், பூனை என செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், ரொம்ப உயர்ந்தரகம் என்கிற அளவில் நினைத்து விடாதீர்கள்,

சாதரண கிராமத்தில் கிடைக்கக்கூடிய பழகிய நாய், பூனை அவற்றின் குட்டிகளை பார்க்க பார்க்க, வளர்த்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு செயலில் இறங்கிவிடுவேன்

இப்போது அல்ல, சின்ன வயதில், 12 அல்லது 13 வயது இருக்கும்,

நாய்க்குட்டி வளர்த்தும்போது அதைப் பராமரிப்பது தனிசுகம்,அது உணவுக்காக நம்மை எதிர்பார்ப்பதும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மோடு உறவாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது ஒரு தனி சுகம்.

எனக்கு கிடைக்கிற உணவு, பால் ஆகியவற்றை அதனோடு பகிர்ந்து கொள்வேன், இதற்கிடையில் கிணற்றில் நீந்தப்போகும்போது நாய்குட்டியை உடன் கூட்டிச்சென்று, அதைத் தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, அப்புறம்தான் நான் குதிப்பேன்.

நாம் நீச்சல் பழகும்போது, கத்தாளைமுட்டி, என்கிற கத்தாளையின் காய்ந்த தண்டுப்பகுதி, சுரைப்பொரடை என்கிற காய்ந்த சுரைக்காய் ஆகியனவற்றை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது உண்டு,

நாய்க்குட்டியோ எந்த உதவியும் இல்லாமலே இயற்கையாகவே நீந்தும். அது மட்டுமில்லாமல் இரவு திண்ணையில் நான் தூங்கும்போது , அது அருகிலேயே வாசற்படியில் தூங்கும், அதிகாலையில் பார்த்தால் எனது போர்வைக்குள் படுத்துக்கொண்டிருக்கும்,

அதற்கு ஆரம்பத்தில் பெயர் வைத்ததுதான் வேடிக்கை, எந்தப்பெயரும் தோன்றாமல், ஏனோ எனக்கு பிடித்தது எனத் தோன்றிய மணி என்கிற பெயரை வைத்தேன்

என் தந்தை சற்று கண்டிப்பானவர், எனவே அவர் பணிக்கு சென்ற பின்னர்தான் இந்த நாய்க்குட்டியுடன் கொஞ்சல் எல்லாம்
.
அவர் இருந்தால் அமைதியாக இருப்பேன், நாயும்தான்

மணி,மணி,மணி... என்று அழைத்தால் போதும், எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும், அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,

காரணம் புரியாமல் விழித்தேன்,

அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))

அன்றிலிருந்து நாயின் பெயர் ’ஏய்’ தான்,


அப்போது ஒரு நாய்க்கு பெயர் வைப்பதில் இத்தனை விசயங்கள் அடங்கி உள்ளதா !!!
இந்த சுதந்திரம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என அந்த வயதில் வருத்தப்பட்டது உண்டு

இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன், காரணம் சிவா என்கிற என்பெயர் குறித்துதான். அவ்வப்போது ஏதோ தகுந்த காரணத்தோடுதான் பெயர் அமைந்திருக்கிறது என நினைத்து கொள்வேன்,

என் நண்பரால் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அன்றாடம் அழைத்து மகிழும் வகையில் அமைந்தது கண்டு உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.

நண்பர் ஓம்கார் தினமும் என்னை கவனித்துக்கொண்டும், அழைத்து மகிழ்வதும் நான் பெற்றபேறுதான் :) ஏனோ இன்னும் நெருக்கமாக உணர்கிறேன். மேலதிக விவரங்களுக்கு





இதை சிவனின் திருவிளையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்கிறேன்.

கண்கள் பனிக்க இதயம் கனக்க      சிவா

Wednesday, September 23, 2009

பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரம், குளித்துவிட்டு தயாராகி காலை உணவுக்காக காத்திருப்பேன், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மும்முரமும் சேர்ந்து கொள்ள, கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் இணயத்தில் மேய்வது வழக்கம்,






அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து "அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க" என்று அழைக்க

"அம்மாகிட்ட போயேன்,"


"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா?"


"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்..."


"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது...."


"சரிங்ங்ங்..."

சட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

என் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.

மேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...

உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,

இது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.


இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.


பல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,

விளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.

சிந்திப்பதுடன் செயல்படுவோம்

வாழ்த்துக்கள்,

Sunday, September 20, 2009

பொன்னுச்சாமியின் புலம்பல்

என்றைக்கும் இல்லாத சத்தம் , விளம்பர பாடல்கள் காதில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன், எங்கும் எந்த ஸ்பீக்கரையும் காணோம்

பகல் பொழுதில் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ்நிலையம் பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்,

சுற்றும் முற்றும் பார்த்தேன். பாடல் தொடர்ந்து காதில் விழுந்தது.மேலிருந்து சத்தம் வந்ததால் நிமிர்ந்து பார்த்தேன்

பாதையின் வலதுபுறம் இரண்டு மாடிக் கட்டடம், மொட்டை மாடியில் பத்தடிக்கு பத்தடி அளவில் பெரிய திரை, அது திரையா அல்லது டிவியா என சரியாக தெரியவில்லை.

எங்கள் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள், சரி தீபாவளி நெருங்கிவிட்டது, அதனால் துணி,நகை விற்பனையகங்கள் விளம்பரம் செய்தால்தான் வாடிக்கையாளாரை ஈர்க்க முடியும் என்று நினைத்தபடியே சென்றுவிட்டேன்,

பனியன் உற்பத்தி துறை வேலைகள் அலைக்கழிக்க ஒருவழியாய் முடித்து அலுவலகம் திரும்பினேன், இரவு வர, பணி முடிந்தது, அப்போதுதான் பார்த்தேன்

பொன்னுசாமி சற்றே காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார், போகும்போது நன்றாகத்தானே போனார்,??

”ஏனுங்ன்னா, என்னாச்சுங்க,.. ”

”ஒன்னுமில்லைங்கைய்யா, டவுனுக்குள்ளார போகும்போது ஒரு மொப்பட்க்காரன் மேலே கொண்டு வந்து வண்டிய விட்டுடான்ங்ய்யா.. கீழ விழுந்ததுல சுளுக்கு மாதிரி ஆயிப்போச்சுங்க.”

“ஆசுபத்திரிக்கு போனிங்களா..”

”ஆமாங்கய்யா எக்ஸ்ரே எடுத்து பார்த்து ஒன்னுமில்லை அப்படினு சொல்லிட்டாங்க, தசைப்பிடிப்புன்னு ஆயின்மெண்ட் கொடுத்திருக்காங்க”

”எப்படி ஆச்சு, வண்டியிலெ போகும்போது எச்சரிக்கையாத்தானே போவீங்க?”

நா போயி என்ன பண்றதுங்க, எதிரில வர்றவுங்க பார்த்து வரோணுமில்ல,”

அப்படி என்ன ஆச்சு?”

”மொபட்டுக்காரன் ஒருத்தன் மேல பார்த்துக்கிட்டே வந்து எம்மேல உட்டுட்டானுங்..”

”மேலயா” என்றேன்.  “ரோட்டப்பார்க்காம மேல பார்த்தானா !!”

”மேல ஏதோ புதுப்படப்பாட்டு கேட்டுதுங்க, மாடிமேல இருக்கிற டிவிய பாத்துக்கிட்டே எம்மேல வந்து ஏறிட்டானுங்..”

“என்ன கவருமெண்டோ இத்தனை நாளா போஸ்டர் வச்சு குப்புற அடிச்சு விழ வெச்சானுக, இப்ப பல்டியே அடிக்கிற மாதிரி பெரிய டிவி விளம்பரம், என்ன லாஜிக்கோ தெரியலீங்க.”என்றவாறே உள்ளே சென்றார்.

யோசித்தபடியே வீடு திரும்பினேன்

Wednesday, September 16, 2009

திரு.கோவி.கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பாசத்துக்குரிய நண்பர் கோவியானந்தா, கோவியார், என்று நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கோவி கண்ணன் அவர்களுக்கு இன்று திருமணநாள்

பதினோராவது ஆண்டுதொடக்கம், ஆண்டு முழுவதும் இனிமையாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.

திரு.கோவி.கண்ணன் குடும்பத்தார் அனைவரும் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,  உயர்புகழ்,மெய்ஞானம் இவற்றில் ஓங்கி, நீடூழி வாழ வேண்டும்என குடும்பத்தினர், நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்




***********************************************
டிஸ்கி; நம்மால சமாளிக்க முடியாத இவரை சமாளித்துக்கொண்டிருக்கும்  அண்ணியாருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்
***********************************************

Friday, September 11, 2009

பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலை செய்வது.....

ஏற்றுமதி பனியன் தயாரிப்பு தொழிலில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. நிட்டிங், டையிங்,பிரிண்டிங், எம்ப்ராய்டரி இதுபோல இன்னும் பல துறைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் தேவையான பிரிண்டிங் வரைபடத்தை கணினியில் மேம்படுத்தித் தருதல், அங்கு பணிநிமித்தம் சென்றேன், காலை 10.00 மணி இருக்கும் ,

மூன்று கணினிகள் உள்ள அலுவலகம், தொழிற்சாலையும் அதுதான்:))

எனக்குத்தேவையான டிசைனை மேம்படுத்த சென்றிருந்தேன். கணினியின் பின்புலத்தில் சினிமா பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது. எல்லா பாடல்களுமே நான் அதிகம் கேள்விப்படாதவை, எல்லாமே புதியவை.

சற்று சத்தமாகவே இருந்தது."என்ன தம்பி, வேலை செய்யும் போது கொஞ்சம் மெதுவாக சத்தம் வைக்கலாம் அல்லவா?" என்றேன்.

சிரித்துக் கொண்டே சத்தம் குறைத்து, பின்னர் வேலையில் ஈடுபட்டார்.

வேலையின் சலிப்பை போக்கிக்கொள்ள பாட்டுக்கேட்பதாக எடுத்துக்கொண்டேன்.

அந்த நபர் பாட்டை ஒழுங்கா கேட்பாரா !!

இல்லை வேலைய ஒழுங்கா செய்வாரா !!






சரி நான் கார் ஓட்டிப்பழகும்போது, பாட்டுக்கேட்டால் எப்படி கார் ஓட்டமுடியும், ரோட்டைப்பார்த்து எப்படி காரோட்டுவது என்று பயிற்றுவிக்கும் நண்பருடன் சண்டைக்கே போய்விட்டேன்.

ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.

இதெல்லாம் சரியா, தவறான்னு மனசு யோசிக்குது :)))

நீங்க எப்படி ?

உங்க மனசுல தோணுவதை சொல்லுங்க, அலசிப் பார்ப்போம் :)

Sunday, September 6, 2009

அனானியும் வேதாத்திரி மகானும்

நண்பர் ரவிஆதித்யா அவர்களது அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா? கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. மிகச் சரியான முறையில் விஞ்ஞானம் சொன்னதை அலசி இருந்தார்.


\\ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.\\

அதே சமயம் இறைநிலை என்பது பொருள் அல்ல,அதற்கு இந்த சூத்திரம் உதவாது.

சுலபமா யோசித்தால்கூட நாம் ஓட்டுகிற வாகனம், கீழே பூமி தாங்கி இருப்பதால்தான் பாதையில் ஓடுகிறது. ஒரு அடி உயரமா சக்கரம் நிலத்தில் படாமல் இருந்தால் ஓடாது, வெறும் சக்கரம்தான் சுற்றும், வாகனம் நகராது.

சரி பூமியின் எடையும், பருமனும் எவ்வளவு?
இதை எது தாங்கிக் கொண்டிருக்கிறது ?
பூமிக்கு கீழ் எந்த ரோடு சூரியனைச் சுற்றி வர போடப்பட்டிருக்கிறது ?
பூமி அதில் உருண்டு கொண்டு இருக்கிறதா ?
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் மற்றும் சூரியனைச் சுற்றி வரும் வேகத்திற்கு காரணம் என்ன?

பதிலே கேள்விக்குரியதாக அமையும் அறிவியலில். 

சூன்யத்திற்கு காரணம் வேண்டியதில்லை, ஏனெனில் சூன்யமே காரணம், சூனியமே காரியமாகவும் மலர்கிறது, சூனியம் என்பது அனைத்துக்கும் மூலம், அதனுள் அனைத்தும் அடக்கம்.

இனி இதோ வேதாத்திரி மகானின் கருத்துக்கள்

“சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா?
அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் இரகசியம் என்ன?


மகானின் பதில்

”படுத்திருக்கிறீர்கள், நல்ல ஓய்வு, அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே...? ஏன் எழுந்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் மிகும் உடல்ஆற்றல் வேகம் தானகவே எழுந்திருக்கச் செய்கிறது.

சுத்தவெளி தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்தன்மை கொண்டது. அது எப்போதுமே தானாகவே விரிந்து கொண்டே இருக்குக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும், தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.”

எனக்கு மகானின் இக்கருத்து, முழுமையாக, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவானதாக இருக்கிறது. சுத்தவெளி என்ற இறைவெளி இதையே இறை என மதிக்கிறோம்.

இந்த கருத்தை நான் இடுகையாக்க தூண்டுதலாய் இருந்த நண்பர் ரவி ஆதித்யாவுக்கு  எனது நன்றிகள், வாழ்த்துக்கள்

Friday, September 4, 2009

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

சித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது?

ஆன்மீகத்தின் பெயரால் உலகில் எத்தனையோ மார்க்கங்கள் உருவாகி விட்டன. சைவம், வைணவம், அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், சமணம், பெளத்தம், சாங்கியம், சீக்கியம், கிறித்துவம்,இஸ்லாம், திபேத்தியம்... இப்படி எண்ணற்ற மார்க்கங்கள்

எது உண்மையான முக்தியைக் கொடுக்கும் ?

ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையோரை குழப்பும் விசயம் இது.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்த்தால் இவற்றை இரண்டே இரண்டாக வகுத்து விடலாம்.
(1) இறைவனை உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளிமார்க்கம்,
(2) இறைவனை இல்லை என்று மறுக்கும் இருள்மார்க்கம்

உண்டு என்று ஒப்புக்கொள்ளும் ஒளி மார்க்கத்தை சித்தாந்தம் என்று பொதுவாய் அழைக்கலாம்.

இல்லை என்று மறுக்கும் இருள் மார்க்கத்தை வேதாந்தம் என்று அழைக்கலாம்.

இந்த உடலை மெய் என்று போற்றுவது சித்தாந்தம்

இந்த உடலை பொய் என்று போற்றுவது வேதாந்தம்.

இந்த உலகம், சூரியன்,கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அண்ட சராசரம் அனைத்தும் உண்மை என்கிறது சித்தாந்தம்.

அத்தனையும் உண்மையல்ல, மாயையே என்கிறது வேதாந்தம்.

அது என்னும் பிரம்மம் நீயாக இருக்கிறாய்! என்று உள்ளே காட்டுவது சித்தாந்தம்.

நீ அதுவாய் இருக்கிறாய் என்று வெளியே தேடச் சொல்வது வேதாந்தம்

’அவன் கால்பட்டு அழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே!’ என்று அருணாகிரிநாதப்பெருமான் பாடியதுபோல், ’கர்மவினையைக் கடவுள் நினைத்தால் கணப்பொழுதில் அழிக்கலாம்!‘ என்கிறது சித்தாந்தம்.

கர்ம வினையை யாரலும் அழிக்கமுடியாது, அதை அனுபவித்துதான் தீர்க்க வேண்டும்!’ என்பது வேதாந்தம்.

நாம் மனது வைத்தால் இந்த ஒரே பிறவியில் முயன்று முக்தி பெறலாம்! என்கிறது சித்தாந்தம்.
பல பிறவிகள் எடுத்துப் படிப்படியாய்த் தான் முக்தியை அடைய முடியும் !’ என்கிறது வேதாந்தம்.

உள்ளே கடவுளைப் பார்க்கலாம் என்கிறது சித்தாந்தம்.
‘உலகையே கடவுளாகப்பார்’ என்று உபதேசிக்கிறது வேதாந்தம்.

’தொண்டு செய்தால் கண்டு கொள்வார்கள் மகான்கள்!’ என்கிறது சித்தாந்தம்.
தொடர்ந்து கடும்பயிற்சிகள், தவ முயற்சிகள், கடும் வைராக்கியம்,கடும் ஒழுக்கம் தேவை என்கிறது வேதாந்தம்.



நன்றி-அரங்கராச தேசிக சுவாமிகள், ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.





இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.

Saturday, August 29, 2009

மனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..!!!

மிருகம் ஐந்தறிவு உள்ளது, மனிதனோ ஆறறிவு படைத்தவன், மிருகங்கள் உணவுக்காக
உணவை உற்பத்தி செய்ய தெரியாததால் பிற உயிரை கொன்று தின்கின்றன.

மனிதன் ருசிக்காக மிருகங்களை கொன்று தின்று வாழ்கிறான்.

அதே சமயம் சீவகாருண்யத்துடன் உயிர்களைப் பார்ப்பவர்களும் உண்டு.

இந்த காணொளியை என் முந்தய இடுகையில் க. தங்கமணி பிரபு பின்னூட்டத்தில் தெரிவித்த இணைப்பில் முதன்முதலாக பார்த்தேன். மனிதம் இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ? அதிர்ச்சியாக இருந்தது.

இங்கு ஒருபுறம் முகம் தெரியாத நண்பர்கள் ஒன்று சேர்ந்து செந்தில்நாதனை இயல்புக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம்.

கைக்கெட்டும் தூரத்தில் மனிதனை மனிதன் சத்தமிடக்கூட வாய்ப்பின்றி, காக்கை குருவியை சுடுவதுபோல் சுடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சுடப்பட்டவன் நிலையில் இருந்து பார்க்கிறேன்.

அவன் மனம் அந்த கணத்தில் என்ன பாடுபட்டிருக்கும் ?

வார்த்தைகள் எழும்ப மறுக்கின்றன…

எதைக் குற்றஞ் சொல்வது, மனிதன் இப்புவியில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதற்க்கு
அறிவியலையா, மதத்தையா, இனத்தையா, இது நமக்கு தேவைதானா?

கதிரின் இடுகை

நர்சிம்


இலங்கை இராணுவத்தின் கோரம் : மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்




பார்த்தால் மனம் பதைபதைக்கும் இந்த நிகழ்வுக்கு என்ன பதில் ? இதை அந்த நாடே அனுபவிக்கும், இயற்கைச் சட்டம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம் !

Friday, August 28, 2009

உங்களை பாம்பு கடித்திருக்கிறதா ?

சில்லென்ற காற்று முகத்தில் அறைகிற மாதிரி வீசிக் கொண்டிருந்தது. இங்கு எப்பவுமே இப்படித்தான், நல்ல கிராமம், ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, மெள்ள மெள்ள விவசாயம் குறைந்து பெரிய பெரிய குடோன்கள் முளைத்துவிட்டன. இவை பனியன் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கு வசதியானவை, துணியை தயார் செய்து அதை வேண்டிய வடிவம், அளவுகளில் வெட்டி தயார் செய்வதில் கழிவுகள் ஏதும் வெளியேறாததால் அக்கம்பெனிகளும் வந்துவிட்டன.

நகரத்தில் ஆட்கள் பற்றாக்குறை, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி இயங்கி கொண்டிருக்கின்றன.கிராமத்திற்கு பஸ் அனுப்பி வேலைக்கு ஆள்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் கிராமத்திலேயே இந்த கம்பெனிகள் அமைவதால் பல வசதிகள்., சில சிரமங்கள், அதில் ஒன்றுதான் எனக்கு தினமும் வீட்டுக்கு போவது என்பது, வீட்டுக்கு சுமாராக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் வரும். பைக்கில் இந்த குளிரில் வீட்டிற்கு செல்வது சற்று சிரமாகத்தான் இருக்கும்.

விளக்குகள் அணைக்கப்பட்டன.வேலை முடிந்தது. வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப நானும் வீட்டிற்கு கிளம்பினேன். சட்டென ஞாபகம் வந்தது. மனைவியும் குழந்தைகளும் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்கள். சரி இன்றைக்கு இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான், உணவுக்குத்தான்...ம்ம்சரி

இங்கு பெரிய அளவில் உணவுவிடுதி ஏதும் கிடையாது. அரை கிலோ மீட்டர் சென்றால் ஊர் மையத்தில் மங்கலான குண்டுபல்பு வெளிச்சத்தில் அமைந்துள்ள குடிசைவீடுதான் இங்கு உள்ள ஒரே உணவு விடுதி, கிடைப்பதை வைத்து வயிற்றை நிறைத்துக்கொண்டு இன்று இங்கேயே இருக்கிற ஓய்வறையில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒத்தையடிப்பாதை வழியாக சென்றால் பக்கம், சீக்கிரம் சென்று திரும்பிவிடலாம்.
உணவை முடித்துக் கொண்டு திரும்பினேன். தனியாக வருவதால் பயம் வேறு, அப்பயத்தை துரத்த வேண்டி அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா எனப் பாடிக்கொண்டே நடையை எட்டிப்போடுகிறேன்
சட்டென இருள் சூழ்ந்தது. சரியான நேரத்திற்க்கு எது நடக்குதோ இல்லையோ மின்சாரம் போவது மட்டும் நடந்து விடுகிறது.
தொழிற்சாலை வாசலை அடைந்து, நிதானத்திலேயே கேட்டை உட்புறமாக பூட்டிவிட்டு, ஓய்வறைக்கு நகர்ந்தேன். தொழிற்சாலை கட்டிடத்தை விட்டு தள்ளி உட்புறமாக 200 அடி தொலைவில் அறை, கட்டில், குளிக்கும் வசதிகளுடன் ஓய்வறை,

வழக்கமான பாதைதான், முழங்கால் உயரத்துக்கு செடிகள் கண்டபடி வளர்ந்து பாதையை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிட வேலை நடந்த போது ஏற்பட்ட குழிகள், மண் மேடும் பள்ளமுமாய், அந்த இடத்தை கடக்க முயற்சிக்கும் போது சட்டென புத்திக்கு ஏதோ உரைக்கிறது, காலுக்கு கீழ் ஏதோ மிதிபடுவதைப்போல் உணர்வு, சற்று உருண்டையாக , கனமாக, வழுவழுப்பாக செருப்புக்கு கீழ் உணர முடிந்தது. அனிச்சை செயலாய் உடல் துள்ள, அந்த இடத்தை விட்டு எட்டிக் குதித்து,எப்படி அறைக்கு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது, உடல் நடுங்குகிற நடுக்கம், படபடவென்ற இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் இதெல்லாம்,

கதவை நீக்கினேன், மேசைமீது இருந்த, குளிர்ந்த நீரை சொம்போடு எடுத்து அப்படியே அண்ணாந்து ஒரே மொடக்காக குடித்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டேன்,. கிறுகிறு என்று வந்தது. கண்ணை மூடிக்கொண்டேன்

யார் செய்த புண்ணியமோ, தப்பித்தேன் என நினைத்துக்கொண்டேன்.

பாம்புகள் பலவிதம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், விசமுள்ளது, விசம் இல்லாதது, என்று, நமக்கென்ன தெரியும் எந்த பாம்பு எப்படி இருக்கும், எதில் விசம் இருக்கும் என்று? காற்று வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது, சன்னலை திறந்து வைத்தேன்

அப்போது கால் பாதம் சற்றே ஈரமானது போன்ற உணர்வு, குடித்த தண்ணீர் சிந்திவிட்டதோ, சட்டென மனம் எச்சரிக்கை செய்ய கையால் தொட்டு பார்த்தேன், பிசுபிசுப்பாக இருந்தது, கையில் ஒட்டுவதுபோல் தெரிந்தது,கீறல் இருந்தது. வலிக்கவும் ஆரம்பித்தது.
கையை கிட்டே கொண்டுவந்து பார்த்ததில் இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், சிவப்பாக தெரிந்தது, இரத்தம் என மனது அலற ஆரம்பிக்க, முகர்ந்து பார்த்தேன், வாடையை வைத்து இரத்தம்தான் என உறுதி செய்தேன்.

அய்யய்யோ ! பாம்பு கடித்து ஒரேடியாக போய்விட்டால் என்ன ஆவது, மனைவி, குழந்தைகள் எல்லாம் வெளியூர் போன சமயத்தில் ஏதாவது ஆகிவிட்டால் ? ஒருவேளை அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்காமலே போய்விட்டால் என்ன ஆகும்?

அட அது எப்படியோ போகட்டும் அக்கம் பக்கத்தில் யாராவது விடிந்தவுடன் எட்டிப்பார்த்து தகவல் சொல்லாமலா போய்விடுவார்கள்.,

இந்த வாரம் அனுப்ப வேண்டிய சரக்கு இன்னும் தைக்க முடியாமல் இருக்கிறது, இந்த நிலையில் இப்படி என்றால் என்ன செய்வது, விடியும் வரை தாங்குமா, இந்த நேரத்திற்கு திருப்பூரில் எந்த ஆஸ்பத்திரி இருக்கும், டாக்டர் யாராவது இருப்பார்களா? இருந்தாலும் விசமுறிவு வைத்தியம் நல்லமுறையில் தெரிந்திருக்குமா

செல்போனை எடுத்தேன், யாரை அழைக்க,? உடனடியாக இங்கு யாராவது வந்தால்தான் நாம் உயிர் தப்பிக்க முடியும். போனை அழுத்த இயங்க மறுத்தது, ச்ச்சே மாலையிலேயே சார்ஜ் குறைந்து இருந்தது, வேலை மும்முரம், மறந்தாயிற்று

இனி ஒரே வழி, எப்படியாவது தொழிற்சாலைக்கு சென்று ஜெனரேட்டர் போட்டுத்தான் ஆகவேண்டும், அப்போதுதான் செல்போன் சார்ஜ் பண்ணமுடியும். அல்லது இருட்டில் சரக்குகளுக்கிடையே சென்று தடுமாறிக்கொண்டே அலுவலகத்தை திறந்து போன் பண்ண வேண்டும்.

எங்கே செல்வது, ஓரேடியாக கோவை சென்றுவிடுவது நல்லதோ?

எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள், இரத்தமே முழுவதாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தால் கூட செய்ய முடியும், அதுவரை தாங்குவேனா?

குழந்தைகள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
அவர்களுக்கு மரணம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கும் வயதாயிற்றே? தாங்கிக் கொள்வார்களா? இவர்கள் ஒருபுறம் இருக்க, மனைவியை நினைத்தால் இன்னும் கஷ்டம்..
நீங்க இல்லைன்னா நான் இருக்கமாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளே இவ, என்ன பண்ணப்போறா? அப்படி ஏதேனும் அவ தவறான முடிவெடுத்திட்டா குழந்தைகளின் கதி?

இருட்டினூடே வெளியேறி தொழிற்சாலைக்கு செல்வதே இப்போதைக்கு ஒரே வழி, இருட்டினுள் துழாவ கட்டிலின் அருகே ஒரு பனியன் துணி நீளமாக கயிறுபோல் கிடந்தது தட்டுப்பட்டது.எடுத்து கணுக்காலோடு சேர்த்து இறுக்க்கிக் கட்டிக் கொண்டேன், விசம் ஏறாமல் இருக்க வேண்டும்.மீண்டும் இருட்டினுள் அதே வழியில் நடக்க வேண்டும், கால் மரத்துப்போக ஆரம்பித்தது. வாழ்வா சாவா போரட்டம் என்றால் என்ன என புரிந்தது.

பயமாக இருந்தது. இன்னும் ஏதேனும் பாம்பு இருந்தால்,? சரி இனி எந்த பாம்பு கடித்தால் என்ன? ஏற்கனவே கடித்துவிட்டதே,, மனதை தைரியப்படுத்திக்கொண்டேன்.

தடுமாறி எழுந்து தொழிற்சாலையை நோக்கி நடந்தேன், இல்லை தவழ்ந்தேன், சரி எப்படியோ சென்றேன். கையில் இருந்த சாவியால் கதவை நீக்கினேன், இதெல்லாம் ஒரு யுகம் போல் தெரிந்தது.

சட்டென முகத்தில் வெளிச்சம் அடித்தது, மின்சாரம் வந்துவிட்டதோ?

கண்ணுக்கு எல்லாமே மங்கலாக தெரிந்தது, யாரோ இருவர் எதிரே நிற்பது போல் தெரிந்தது, உற்றுப்பார்த்ததில் தலையில் கிரீடம் வைத்துக்கொண்டு கொம்புடன்…. குழப்பத்துடன் பார்த்தேன்,ஒன்றுமே தெரியவில்லை, தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கொஞ்சதூரம் நடந்த மாதிரி தெரிந்தது.பின்னர் தேரில் ஏறி பறந்தது தெளிவாக உண்ர முடிந்தது. சொர்க்கமா, நரகமா எங்கே போகிறோம் என்றும் புரியவில்லை,

கண்விழித்துப்பார்த்தேன். வெண்ணிற் ஆடையில் அங்குமிங்கும் தேவதைகள் நடந்து கொண்டிருந்தன.

எதிரே மனைவியும் குழந்தைகளும், மனைவி அழுகையை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். மருத்துவமனையில் படுக்கையில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன்

தூரத்தில் அலுவலக நண்பர்கள், அருகில் அம்மா, அப்பா,

எனக்கு என்ன நடந்தது என்று நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. கையில் குளுக்கோஸ் வாட்டர் ட்யூப் வழியாக உள்ளே ஏறிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மாதிரியாக இருக்க, கண்ணை மூடிப் படுத்துக்கொண்டேன்.

மதியம் மருத்துவர் வந்து எல்லாமே நல்லாயிருக்கு, எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல மாலையில் வீடுதிரும்பினேன். இரண்டுநாள் ஓய்விற்கு பின் தொழிற்சாலைக்கு திரும்பினேன். உடல் முழுவதும் இலேசான வலி,

தொழிற்சாலையில் உள்ளே செல்லும் வழியில் ஏதோ பைப் உடைந்து விட்டது போல. பிளம்பர் வந்து பிரித்து போட்டு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்.

அருகில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்னுச்சாமி நின்றிருந்தார், என்னைப் பார்த்தவுடன் ”அய்யா வாங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லீங்களா?” என்று கேட்டவாறே என் பதிலுக்கு காத்திராமல் ”என்னையா உங்கோட ஒரே வம்பாப் போச்சு, தேவையானத கொண்டு வரமாட்ட, இங்க வந்து அதுவேணும், இது வேணும் அப்படின்னுட்டு, இப்ப என்ன, பைப்ப சூடுபண்ண ஏதாவது வேணும் அவ்வளவுதானே?” என்றவாறு அங்கும் இங்கும் துழாவியவர் சட்டென காலில் தட்டுப்பட்ட ஏற்கனவே பாதி எரிந்த கம்பிகள் வெளியே துருத்திக்கொண்டிருந்த, பழைய சைக்கிள் டயரை எடுத்து இந்தா என்று பிளம்பர் கையில் கொடுத்துவிட்டு, என்னிடம் திரும்பி ”அய்யா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு, திடீர்ன்னு நீங்க மயங்கிக் கிடந்ததை காலையில் பார்த்து எனக்கு உசிரே போச்சிங்க, அப்புறம் ஆசுபத்திரில சேர்த்து உங்களுக்கு ஒண்ணுமில்ல அப்படின்னு கேட்ட பொறவுதான் நிம்மதி ஆச்சுங்க… என்றவாறு என் கையை ஆதரவாகப் பிடித்தார். எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

Tuesday, August 18, 2009

ஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்?

இதுதான் என் வாழ்க்கை, என் வாழ்வும் சாவும் இரண்டும் என் கையில் என்பதே ஆன்மீகம்.

நண்பர் எல்லாம் இருக்கும் வரை அவர்களின் இடுகையை படித்தேன். அவருடைய கருத்துக்களோடு ஒத்துப் போன போதிலும் சில கருத்துப் பகிர்வுகள் தேவை என நினைத்ததால் இந்த இடுகை. எனவே இதை படிக்கும் முன் அவரது இடுகையினை படித்துவிடுதல் நலம். அதன் தொடர்ச்சியே இது:))

\\ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. \\ இது நண்பரின் கருத்து.,

இனி எனது கருத்து

மீன் தண்ணீருக்குள் இருந்து வாழ வேண்டும் என்பது விதி.

ஆனால் ஆற்று நீரோட்டத்தின் வழியே வாழ்வது, விதியின் வழியே வாழ்வது ஆகும் ஆனால் எதிர்நீச்சல் போட்டு, தன் விருப்பப்படி வாழ்வது முயற்சி ஆகும். ஆனால் இரண்டுமே தண்ணீரை விட்டு வெளியே வராது, வந்தால் மரணம்தான்.

இது மனித வாழ்வில் உன் முயற்சியினால். எப்படி வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொள் என அனைத்தையும் இயற்கை விதி நமக்கு வழங்கி இருக்கிறது. இது நம் முறை, விளையாட்டாக சொன்னால் பந்து நம் கையில், என்னவேண்டுமானாலும் செய்யலாம், அந்த உரிமையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வது நம் சுதந்திரம்:))

ஆன்மீகம் என்பது விளக்க வேண்டிய ஒன்றே. அந்த விளக்கம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் சரியாக உணர்ந்து இருக்க வேண்டும் அல்லது சரியாக வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும். அப்படி வாழ முழுமையாய் உணர்ந்தால்தான் வாழ முடியும்.

இந்த கருத்தை, அதாவது ஆன்மீகத்தை விளக்க முயலாவிட்டால் நாம் எதிர்கால சந்ததியினருக்கு தவறிழைக்கிறோம் என்பதே என் கருத்து.


ஆன்மீகம் என்பது ஒருங்கிணைத்துப் பார்ப்பது

அறிவியல் என்பது தனித்தனியாக பார்ப்பது

இவ்வளவுதான். இதை சரியாக பிடித்துக் கொண்டால் ஆன்மீகம் என்பது எளிதில் விளங்கிவிடும்.

ஆன்மீகம் என்பது வேறொன்றுமில்லை, உடல்நலம், உயிர்நலம், மனநலம், சமுதாயநலம் இவை ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இனிமை காத்து வாழ்வது என்பதுதான். இதில் பல சாதனைகளும் சாதரணமாகிவிடும்.

இதற்கு உதவவே வேதங்கள்,கலைகள், புராணங்கள் என்று புரிந்து கொண்டு பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது தெரியவரும்,

மனதிற்குத்தான் எல்லாமுமே.மனம் சிலசமயம் சொன்னதைக்கேட்கும், சில சமயம் முரண்டுபிடிக்கும்,அலையும்,எப்படி வேண்டுமானாலும் மாறும், இதை கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உயிரும், உடலும் மேன்மை அடையவே இந்த வேதங்கள்,கலைகள், புராணங்கள், மதங்கள் அனைத்தும்

மனம் அடங்கிவிட்டதா,? அன்பாகவே, கருணையாகவே மாறிவிட்டதா,? இனி எச் சூழலிலும் இதிலிருந்து மாறாதா? அப்படியானால் உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல வேதங்கள்,கலைகள், புராணங்கள்.! இனி உங்களுக்கு அவை தேவையுமில்லை.

மனதோடு போராடிக் கொண்டு இருப்பவருக்கே இவையெல்லாம் தேவை

ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டால் நமக்கு நாமே பிணக்கு, அல்லது பிறரிடம் சமுதாயத்திடம் பிணக்கு என்பது எழாது. அப்படி எழுந்தால் நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

*** ***

நோய் இல்லாத உடம்பை இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்பது ஆன்மீகம் என்றால் இறைவனுக்கு இந்த மனிதர்களின் உடம்பை வைத்து என்ன செய்யப் போகிறான், ஒருவேளை சிவன் வெட்டியான் என்பதால் இந்த கருத்தோ?:))

நோய் இல்லாத உடம்பில் இறைவன் குடி கொள்வான் என்பதே குறிப்பு, நாம் உடல்நலம், உயிர்நலம் பேண வேண்டும் என்பதே இங்கு முக்கியம்,

நோய் வந்த பின் மருந்து என்பதை விட நோய் வராத நிலை வேண்டும் என்பதே ஆன்மீகம், வந்த பின் நோயை குணமாக்கலாம் என்பது அறிவியல். இதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆன்மீகத்துக்குள் அறிவியல், நோக்கம் ஒன்றுதான்.

மதம், சடங்கு சம்பிரதாயம் எல்லாமே ஆன்மீகத்தில் அடக்கம்தான், தேவையானதுதான். ஆனால் அதை புரிந்து கொள்வதில், அல்லது எடுத்து விளக்குவதில்தான் தவறு நேர்கிறது, எல்லாமே மனிதகுல மேன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது என்ற உணர்வோடு பார்த்தால் எல்லாமும் சரியாகவே இருக்கும்.

சரி இப்போது சிந்தியுங்கள் ஆன்மீகம் என்றால் ஒதுங்கிப்போவோரா நீங்கள்?:))

மீண்டும் சந்திப்போம்

Saturday, August 15, 2009

குழந்தையும், சுதந்திர தின அனுபவமும்

சுதந்திர தினத்தில் காலையில் 9.00 மணிக்கு குழந்தைகளோடு பள்ளிக்கு சென்றேன். இரண்டுமணி நேர நிகழ்ச்சி, கொடியேற்றம், பின்னர் மாணவ மாணவியரின் அணிவகுப்பு, கூட்டு உடற்பயிற்சி என கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை., பள்ளியில் சுமாராக 1800 பேர் அமைதியாக அமர்ந்து கேட்டனர். பெரிய மைதானத்தில் ’ப’ மாதிரி மாணவ மாணவியர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அனைவரும் தூய வெண்ணிற ஆடை அணிந்து அமர்ந்திருந்தது கண்கொள்ளா காட்சியாக அமைந்து இருந்தது.

இறுதியாக விழா நிறைவு பெறும் நேரம் நெருங்கிவிட்டது. என்னைப்போன்ற பெற்றோர்கள் அனைவரும் சுமார் 200 அடி தொலைவில் கூடி நின்றிருந்தோம். அங்கிருந்து பார்த்தால் மாணவ மாணவியரைப் பார்த்த போது அவர்களின் முதுகுப்பக்கமே எங்கள் பார்வையில் பட்டதால் வெண்மையைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.

இதிலும் எனக்கு பொதுவாக பள்ளியினுள் என் மகளை எளிதில் அடையாளம் காண இயலாது. எந்த குழந்தையைப் பார்த்தாலும் என் குழந்தைபோலவே இருக்கும், அல்லது என் மகள் கூட வேறு பெண்போல தெரிவாள். இந்நிலை பலநாட்கள் ஆகியும் இப்படித்தான்.

விழா நிறைவு பெற்றது. இனி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி. வகுப்பு ஆசிரியைகள் இனிப்பு வழங்கிக் கொண்டு வந்தார்கள்.

நாங்கள் நின்றிருந்த பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை வயது குழந்தை ”அக்கா, அக்கா” என்ற சத்தம் போட்டபடி விழா நடந்த இடத்தை நோக்கி ’தத்தக்கா பித்தக்கா’ என்று ஓட ஆரம்பித்தது. அந்த நடையைப் பார்த்தால் கீழே விழாமல் நடக்க கற்றுக்கொண்டு ஒரிரு நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும்.

குழந்தையின் பெற்றோர் ”அங்கே போகாதே” என சப்தமிட, அவனோ அதை காதில் வாங்காமல் ”அக்கா அக்கா” என்றவாறு 50 அடி தூரமேனும் சென்றிருப்பான்.

நானும் இன்னும் சிலரும் அக்குழந்தையின் பெற்றோரிடம் ”தடுக்காதீர்கள், பள்ளியினுள் விழா முடிந்தபின்னர் தானே போகிறான், போகட்டும்.” என்றோம்

அவர்களுக்கோ தனியாக செல்லும் குழந்தை விழா நடைபெற்ற இடத்திற்கு தனியே அவ்வளவு தூரம் நடக்க இயலுமா? நல்லபடியாக சென்றாலும் அங்கே எப்படி 1800 மாணவர்களுக்குள் தன் அக்காவை எப்படி கண்டுபிடிக்கப்போகிறான்., குழந்தைகள் கூட்டத்தில் சிக்கி விடுவனோ என்ற எண்ண ஓட்டத்துடன் நின்றிருந்தனர்.

நானோ ’உறுதியாக சென்று விடுவான், தன் அக்காவை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து விடுவான். மற்றவர்கள் குழந்தையைக் கண்டு ஒதுங்கி விடுவார்கள்’ என்ற நம்பிக்கையுடன் நின்றிருந்தேன்.

மாணவ மாணவியர் எழுந்து நின்றனர். ஒழுங்குடன் வகுப்பறை திரும்ப அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. யாரும் கலையவில்லை. அருகில் நின்றிருந்த வகுப்பு ஆசிரியைகளின் தலையசைப்புக்கு ஏற்ப நகர எத்தனிக்கின்றனர்.

இதற்குள் அவர்களின் முதுகுப்பக்கமாக இந்த குழந்தை அக்கா, அக்கா என்று சப்தமிட்டவாறு ஓடிக்கொண்டே இருக்கிறான். சுமார் 100 அடிதூரம் சென்றிருப்பான். இதெல்லாம் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கோ ஒரு ஆனந்த உணர்வு, அந்த குழந்தை ஓடிக்கொண்டிருக்கும் அழகு, அது தன் அக்காவை உள்ளார்ந்த உணர்வோடு அழைத்துக் கொண்டே செல்லும் பாங்கை பார்த்து, அது நானாக இல்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

மாணவ மணிகள் குழந்தை ஓடிய திசை நோக்கி திரும்பி வகுப்பறை நோக்கி நகரத் தொடங்கினர். சற்றே ஒழுங்கு குலைய முதலில் ஓடி வந்த நாலைந்து சிறுமிகளில் ஒருத்தி குழந்தையிடம் ஓடி வர அக்கா என்றவாறே அவளிடம் ஓடி ஒட்டிக்கொண்டான். அவர்கள் இருவரும் எங்களை நோக்கி வர அந்த மாணவி உண்மையிலே அந்த குழந்தையின் அக்காதான், வேறு அல்ல என்பதை அறிந்தேன்.

அதிர்ந்து நெகிழ்ந்து நின்றேன்.

இது எப்படி நடந்தது?

பெற்றோரோ அக்குழந்தை நிச்சயம் ஓடிச்சென்று அக்காவை அக்கூட்டத்தில் கண்டுபிடிப்பது கடினம் என நினைத்தனர்.

நானோ குழந்தைகளை தன்னம்பிக்கையோடு வளர்த்த வேண்டும், அவன் தனியாகவே சென்று தன் அக்காவை எப்பாடுபட்டாவது எவ்வளவு நேரமானாலும் கண்டுபிடித்துவிடுவான், இவனைப்பார்த்து இவன் அக்கா வந்து விட வாய்ப்பும் உண்டு என திடநம்பிக்கையோடு நின்றிருந்தேன்.

ஆனால் நடந்ததோ இரண்டு நிமிடத்திற்குள்ளாக தன் அக்காவை முதல் ஆளாக கண்டுபிடித்து எப்படி சேர்ந்தான்?

இதிலிருந்து நான் மீள சில நிமிடங்கள் ஆயிற்று.

நாமாக இருந்தால் ஆளை அடையாளம் கண்டுபிடிக்கும்வரை பொறுத்திருந்து. பார்த்தவுடன் அவர் காதில் விழும் வண்ணம் சப்தமிட்டு கவனத்தை ஈர்த்து அருகில் செல்வோம்.

தன் அக்கா எங்கு அமர்ந்திருப்பாள் என்று தெரியாது, முதுகு காட்டி அமர்ந்திருக்கும் அந்த கூட்டத்தில் தன் அக்கா யாரென்று தெரியாமலே ‘அக்கா அக்கா’ என அழைத்து சென்று அக்குழந்தை ஒரு நிமிடத்தில் சேர்ந்தது எப்படி?


குழந்தையின் அக்காவோ அந்த கூட்டத்தில் வரிசையில் பின்னதாக அமர்ந்திருந்தது எப்படி,?

கூட்டம் முடிந்த சில நொடிகளில் தன் தம்பியை அடைந்தது எப்படி?

இந்த நிகழ்வை என்னவென்று சொல்வது?

விதியின்படிமுன்னரே தீர்மானிக்கப்பட்டது என்றா?

அறிவியல்பூர்வமாக தற்செயலாக அமைந்த நிகழ்வு என்பதா?

மனதில் எந்த வித மாச்சரியங்களும் இல்லாமல் அன்பு ஒன்றே மனதில்நிறைந்திருக்க ஒன்றை நோக்கி சென்றால் அது கிடைத்தே தீரும் என்ற இறைவிதியாகக் கொள்வதா?


--- புரியாத பொன்னுச்சாமி

Thursday, August 13, 2009

கடவுள் எனபது என்ன? கட -- உள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வலையுலகில் தற்போது வால்பையன் அவர்கள் விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.


அவரது கருத்துகள் கடவுள் மறுப்பாக இருந்தாலும், இலாவகமாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கப்பட்ட விதத்திற்கு பதிலடியாக உள்ளது. அதற்கு வரும் பின்னூட்டங்கள் சில சமயங்களில் ஆரோக்கியமாகவும்,சில சமயம் அர்த்தமற்றதாகவும் (என் பார்வையில்), இருக்கின்றது.


கடவுள் இருக்கிறார் என சில நண்பர்கள் விவாதம் செய்யும் தொனியில், எனக்கு சில அடிப்படை விசயங்கள் அதில் தவறு என நினைக்கும்போது, அதை மிக வலுவாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்க்கின்ற இவர்களிடமும் எனக்கு குழந்தைகள் விளையாட்டுக்கு அடித்துக்கொள்வதை பார்க்கின்ற உணர்வே ஏற்படுகிறது.


சரி விசயத்துக்கு வருவோம்


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய வெட்டின நீயோ, உன் வம்சமோ இனிமேல் இருக்கக்கூடாது என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை உயிரோடு விட்டால்தான் ஆச்சரியம்.


சரி அரசாங்கமும், நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?. சிறையில் அடைத்து தண்டனை தந்துவிடும்.


அட ஒண்ண சொல்ல மறந்திட்டேனே


நான் ஒரு டாக்டர், நீங்க என்னிடத்தில் அறுவைச்சிகிச்சைக்கு வந்த நோயாளி !


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய எடுத்து, என்ன காப்பத்தின டாக்டர், நீங்களும் உங்க வம்சமும் நீண்ட நாளைக்கு நல்லா இருக்கனும் என நினைப்பீர்கள்.


உங்களை சேர்ந்தவர்களோ என்னை தெய்வமாக நினைக்கா விட்டால்தான் ஆச்சரியம்.


பாருங்க மக்கள் எப்படின்னு??


ஒருத்தர் கைய வெட்டினா அது தப்புங்கிறாய்ங்க..

இன்னொருத்தர் கைய வெட்டினா ரொம்ப நல்லதுங்கிறாய்ங்க...

ய்ஏஏஏஏஏன்ன்ன்???


செயலிலே இல்லை சரி என்பதும் தவறு என்பதும். அதன் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.


இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்??


தேங்காய், பழம் உடைத்து வைத்தால் சாமியா வந்து சாப்பிடுது? ஆனா அது ஏன் என்று மெதுவா உள்ளே கேளுங்கள், மூட நம்பிக்கையா நினைக்காதீங்க, பொருத்தமான விடை வந்து சேரும். அதுதான் தத்துவம், உள்ளடங்கிய விளைவு,


உருவ வழிபாட்டு முறையின் செயல்பாடுகளில், உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் யார் சொன்னாலும் நம்புங்க, கூடவே நம்பாதீங்க


(பொன்னுச்சாமி சகவாசத்தால் வந்த வினை, புரியற மாதிரி எழுத மறந்து போச்சு)


உருவ வழிபாட்டின் எந்த ஆன்மீக செயலாக இருந்தாலும் அதன் விளைவை கூர்ந்து கவனியுங்கள். (செயல் செய்து முடித்த பின்), ஆடி மாதம் கடவுளுக்கு கிடாவெட்டா, விளைவு உயிர்ப்பலி தேவையான்னு யோசிங்க வேண்டாம்னு ஒதுக்குங்க


திருவண்ணாமலை கிரிவலம் போகனுமா என்னபலன் மேலோட்டமா பார்த்தாக்கூட நடைப்பயிற்சிதானே! யாருக்கு நட்டம்? போயிட்டு வாங்க.


கடவுள் விசயமும் இப்படித்தான், ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம்,

பிராமணரா? முடிந்தால் சரியான நபரா என ஆராயுங்கள், சொல்றத கேளுங்க, பிடிக்கலை விட்டுடுங்க, ஆனால் சொல்றத செய்துபார்த்துட்டு, தவறுன்னு தெரிஞ்சா விட்டுடுங்க, ஆனா செய்யாமலேயே அது எப்படி சரியா வருமான்னா குழப்பம்தான் மிஞ்சும்.

எல்லாமே மனசுக்குத்தான், அது நிறைவடையத்தான் இத்தனையும்

சும்மா இயல்பா இருங்க, கடவுளப் பத்தி கவலைப்படாம இருங்க, அவரு உங்கள பார்த்துக்குவாரு. அல்லது பார்த்துக்க மாட்டாரு அப்படின்னும் வச்சுக்குங்க , ஆனா இயல்பா இருங்க,


நீங்க உங்களுக்கும் பிறருக்கும் நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மாத்திரம் செய்யுங்க, அது எதுவானாலும் சரி


செயல் செய்யும்போது ஆராய்ச்சி பண்ணாம, செய்வதற்கு முன் ஆராய்ச்சி பண்ணுங்க.,

தெரியல, புரியல அப்படின்னா செய்துட்டு அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுங்க

இத அனுபவத்தில் கொண்டு வந்து பாருங்க, விவாதம் குறையும், விளக்கம் கூடும்.



இனி வேதாத்திரி மகானின் கவிதைகள் இங்கே உங்கள் சிந்தனைக்கு....



கடவுள்

கடவுள் யார் என அறிய ஆர்வம் கொண்டு

கருத்துடனே ஆராயும் அன்பா கேளாய்

கடவுள் ஒன்றே பூரணமாம், உவமை இல்லை

கருத்தொடுங்கிக் கருத்தறிந்த நிலையில் மெளனம்

கடவுள் அணு,ஒலி,ஒளி,ஈர்ப்பு இவையாக உள்ளான்

கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக

கடவுளே அணு, அண்ட பிண்டமானான்

கருத்தானான் அந்நிலையே நீயும் நானும்.

* * *

கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்

கருத்தறியான் ஊன்றி இதைக்காணவில்லை;

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி

கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்ககூட்டி

கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு

கடவுள்! என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்

கடவுள் எங்கே? என்று பலரும் தேடுகின்றார்


நன்றி மீண்டும் சந்திப்போம்

Wednesday, August 12, 2009

திருந்திய கலைஞரும், நானும்


சென்னை:""இந்திய அரசியலின் ஜாதகத்தை கணிக்கக் கூடிய அளவில் தி.மு.க., வெகு விரைவில் இடம்பெறும்,'' என முதல்வர் கருணாநிதி கூறினார். தினமலர்-12/08/09

ஜாதகம் பார்க்கும் சோதிடக் கலை நிபுணர்கள் இனி மனமகிழ்வு கொள்ளலாம். சோதிடம் இல்லை, மூடநம்பிக்கை என சொல்லும் 'பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள்' என தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர், சோதிடக்கலையில் ’இந்திய அரசியலின் ஜாதகத்தை’ கணிக்கும் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த போகிறார். அவரை உலகில் அளவில் பாராட்டிய முதல் நபர் என்ற பெருமையும், முடிந்தால் பட்டமும் எனக்கே சேர வேண்டும் என்பதை பின்னாளில் வேறு யாரும் பிரச்சினையாக்காமல் இருக்க இங்கே பதிவு செய்கிறேன்.

இலங்கை தமிழர்களின் ஜாதகத்தை மாற்றி எழுதியபோதே நான் சந்தேகப்பட்டேன். இவர் ஒரு தேர்ந்த சாமர்த்தியமான சோதிடக் கலை நிபுணர் ஆவார் என்று. சரி இனி எதிர்காலத்தில் கழக கண்மணிகள் எல்லாம் சோதிடக்கலையில் தேர்ந்து விடப்போவதால், எதற்கும் தற்சமயம் இத்தொழிலில் உள்ள அனைவரும் ஒன்று கழகத்தில் சேர்ந்து விடுங்கள், அல்லது வேறு தொழில் பார்ப்பது உத்தமம்.

இது குறித்து மேலும் நுட்பங்களை அறிய உள்ளூர் கழக, அல்லது வலையுலக கழக நண்பர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பெரியார் வழி வந்த தொண்டர்களுக்கு என் அனுதாபங்கள். என்ன கலைஞர் இருந்தால் அவ்வப்போது, நெற்றியில் திருநீறு இடுவது மூடப்பழக்கம் என ஒரே நாளில் உலகத்தமிழர்களை எல்லாம் சென்று சேரும்படி கொள்கைகளை பரப்புவார். இனி ….


--அங்கலாய்ப்புடன்

புரியாத பொன்னுச்சாமி

Monday, August 10, 2009

சரியை, கிரியை, யோகம், ஞானம்

பேரின்பத்தை உணர்வதற்கென்று நான்குவித மார்க்கங்கள் உள்ளன.

*சரியை மார்க்கம்

*கிரியை மார்க்கம்

*யோக மார்க்கம்

*ஞான மார்க்கம்

சரியை மார்க்கம்: சிலைகளை வைத்து வணங்குதல், கோவில் கட்டுதல், குடமுழுக்கு நிகழ்த்துதல், தேர் உள்ளிட்ட அத்தனை உருவ வழிபாட்டு ஆராவாராங்களும் ‘சரியை மார்க்கம்’ எனப்படும் முதல் நிலையைச் சார்ந்தவை. இந்த மார்க்கத்தின் வழியே மன வைராக்கியம் பெறலாம். சில சித்துவேலைகள் கைவரப் பெறலாம்.இந்த மார்க்கத்தின் வழியே உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை அவ்வளவு எளிதில் பெற இயலாது.

கல்கத்தாக் காளிகோவில் பூசாரியான இராம கிருஷ்ணபரமஹம்சரும், திருக்கடையூர் அபிராமி கோவில் பூசாரியான அபிராமப்பட்டரும்தான் நமக்குத் தெரிய இந்த மார்க்கத்தின் வழியே உயர்ஞானம் பெற்றதாகத் தெரிகிறது.

கிரியை மார்க்கம்

தகுந்த குருவிடம் மந்திர உபாசனை பெற்று, அதைவிடாமல் பயிற்சி செய்து மனோலயப்படுதல் கிரியை மார்க்கம் எனப்படும். பல்வேறு சக்கரங்கள் வரைதல், கற்பனையாய் தெய்வ உருவங்களை ஆராதித்தல் உள்ளிட்ட அத்தனை மனப்பயிற்சிகளும் இந்த மார்க்கத்தில் அடக்கம். மெஸ்மரிசம்,ஹிப்னாடிசம் உள்ளிட்ட ஈர்ப்பு சக்திகள் இந்தப் பயிற்சிகளால் வரும். உயர்ந்த ஞானிகளின் அன்பை மானசீகமாகப் பெறலாம். சிறுதெய்வங்கள், குட்டிச்சைத்தான்கள் போன்றவற்றின் துணை பெறலாம். இந்த மார்க்கத்திலும் மனதின் ஆதிக்கம் இருப்பதால், உயர் ஞானம் எனப்படும் பேரின்ப அனுபவத்தை இதன் வழி பெறுதல் எளிய செயல் அல்ல.

சிலர் இதன் வழி அற்பக்காரியங்களைச் சாதித்துக் கொள்வார். ஆனால் இது நிலையானது அல்ல. யாகம், இரத்தப்பலி,யானைதானம்,என அலைபவர்கள் இந்த மார்க்கத்தை நம்பியிருப்பவர்களே.

அடுத்தது யோக மார்க்கம்,

ஆசனப் பயிற்சிகள் செய்து உடலை ஒழுங்கு செய்தல். மூச்சுப் பயிற்சிகள் செய்து மனத்தை ஒழுங்கு செய்தல்;இடைவிடாத தியானத்தால் உயிரை ஒழுங்கு செய்தல்; உள் ஒளியைக் காணும்வரை இடைவிடாது இந்த மார்க்கத்தின் ஒழுக்கங்களைப் பின்பற்றுதல்.

இது ஏறத்தாழ இறைஅனுபவத்திற்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும் ஓர் அற்புதமான மார்க்கம். ஆனால் நம்பத்தகுந்த குருநாதரின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே இந்த மார்க்கத்தில் முழு வெற்றியை அடைய முடியும். சகல சித்திகளும் கைகூடும் வாய்ப்பு உண்டு.

உண்ணல், உடுத்தல், காமஇன்பம் அனுபவித்தல் உள்ளிட்ட சிற்றின்ப நுகர்ச்சிகளில் நிறைவு காணாதோர் இந்த மார்க்கத்தில் மிக எளிதில் சறுக்கி விழ வாய்ப்பு உண்டு.



அடுத்தது ஞானமார்க்கம். எல்லோருக்கும் உகந்த மிக இனியமார்க்கம் இதுதான். தாயுமானவர் இந்த மார்க்கத்தைக் ’கனி’ எனப் பாராட்டுவார்.

’கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கும் முறையே அரும்பு, மலர், காய், கனிக்கு இணையாகும்!’ என்பது அவரது கருத்து.

ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள் என்ன தெரியுமா?

வற்றாத அன்பு,

குறையாத ஆனந்தம்,

கொடுத்து மகிழும் கொண்டாட்டம்,

குறைகளை கண்டு கொள்ளாத குழந்தைத்தனம்,

கோவலன் கொடுக்காத அன்பைக் கொடுத்ததாய்க் கருதி நிறைவுடன் வாழ்ந்த கண்ணகியைப்போல்,இறைவன் நமக்கு கொடுக்காத இன்பங்களைக்கூட கொடுத்ததாய்க் கருதி நன்றியுடன், ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ வணங்கும் விசுவாசம்

இவைதாம் ஞானமார்க்கத்தின் அடிப்படைத் தேவைகள்.

திருமணம் செய்து சிற்றின்பம் வழியே வருபவர்க்கும் இந்த மார்க்கம் பொருந்தும். காமத்தை விரும்பாத வள்ளலார், அவ்வையார் உள்ளிட்ட அத்தனை ஞானியர்க்கும் பொருந்தி வந்த மார்க்கம்.

மன இறுக்கத்துடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதா? அல்லது வழிகாட்டிய குருவின் வாலைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துப்பா பாடிக்கொண்டு திரிகிறீர்களா? இந்த மார்க்கத்தை உணர வாய்ப்பே இல்லை.

எல்லாம் வல்ல இறையாற்றலை மானசீகமாக சரணடைவதைத் தவிர வேறு யார் காலிலும் விழுந்து வணங்க கூச வேண்டும்.

இந்த நான்குவகை மார்க்கங்களைப் பின்பற்றுவோர்க்கு எந்தெந்த வகையில் இறையாற்றல் துணைநிற்கும் என்பதைக் கூறும் ஞானநெறிப்பாடல் இதோ. (ஈசன் என்றால் இறை அவ்வளவுதான். உடனே உருவ வழிபாட்டில் சென்று விடாதீர்கள்)

’சரியையிலே ஈசன்

சட வடிவாய் நிற்பான்

கிரியையிலே மந்திரத்தில்

கிட்டி அருகிருப்பான்

ஊனமில்லா யோகத்தில்

உள் ஒளியாய் நிற்பான்

ஞானத்தில் தானாகுவான்!’


ஏற்கனவே நீங்கள் இருக்கும் மார்க்கம் எது என்பதில் முதலில் தெளிவு பெறுங்கள். இனி எந்த மார்க்கத்தில் செல்வது? என்பதை அடுத்ததாக முடிவு செய்யுங்கள். அதற்குரிய தகுதிகளை முழுமையாக வளர்த்துக்கொள்ள விளையாட்டாய் முயற்சிசெய்யுங்கள்.

இவ்வளவுதான் ஆன்மீகம், இதை மையமாக வைத்துப் பார்த்தால் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆன்மீகத்தைப்பற்றி சொல்லும் விளக்கம் இவற்றிற்குள் நன்கு பொருந்தி வருவதை உணரலாம்.


நன்றி: கவனகர் முழக்கம் ஆகஸ்ட் 2002

Friday, August 7, 2009

விதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்

விதியும் முயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே இரண்டையும் தனித்தனியாய்ப் பிரிக்க முடியாது. விதி எதிர்மின்வாய்-Negative(-) என்றால் முயற்சி என்பது நேர்மின்வாய்–Positive(+)

இயல்பாய் இருப்பவை, நிகழ்பவை எல்லாம் விதி; நாமாக மாற்றுபவை எல்லாம் முயற்சி.

இருள், தானாக வரும்; எனவே அது விதி. வெளிச்சம், தானாக வராது. ஒரு நட்சத்திரம், சூரியன், நிலவு, விளக்கு இருந்தால்தான் வரும். எனவே அது முயற்சி.



ஓர் இடம் குப்பையாக மாறுவதும் ஒழுங்கின்றி இருப்பதும் தானாக நிகழ்பவை. எனவே அது விதி. ஓர் இடம் தூய்மையாக இருப்பதும், ஒழுங்குடன் திகழ்வதும் தானாக நிகழாது. நாமாக மாற்ற வேண்டும்; எனவே அது முயற்சி.

அறியாமை, பிறப்பிலிருந்தே இயல்பாய் நம்மிடம் இருப்பது. எனவே அது விதி. ஆனால் அறிவு என்பது கல்வி, உயர்ந்தோர் எனப் பல்வேறு வழிகளில் நாமாகத் தேடிப் பெறுவது; எனவே அது முயற்சி.

வெறுப்புணர்ச்சி என்பது இயல்பாக நம்மிடம் இருப்பது. எனவே அது விதி.
அன்பு என்பது படிப்படியாய் அம்மாவிடம் தொடங்கி உறவினர், நண்பர்,பிற உயிர்கள் என வளர்த்துக்கொள்ள வேண்டிய உணர்வு. எனவே அது முயற்சி. (வெறுப்புணர்வை அகற் முயற்சி செய்தால் அன்பு தானாய் மலரும்)

பிறரிடமிருந்து எதையும் வாங்குவது என்பது குழந்தைப்பருவம் முதலே நம்மிடம் இருக்கும் இயல்பான குணம். எனவே அது விதி; பிறருக்கு கொடுத்து மகிழும் ஈகை என்பது நாமாக வளர்த்துக் கொள்ள வேண்டிய குணம். எனவே அது முயற்சி.

இது போல் பொறாமை என்பது விதி; பொறுமை என்பது முயற்சி.
சுயநல உணர்வு என்பது விதி;பொதுநல உணர்வு என்பது முயற்சி.
பொய்யை நம்புவது விதி; உண்மையை உணர்வதும் நம்புவதும் முயற்சி

நம் முன்னோர் அறியாமல் செய்த தவறுகளும், நாம் செய்த தவறுகளும் நம்மை வருத்த வருவது விதி.அதை முன் கூட்டியே அறிவால் உணர்ந்து நம்மை இறையருளால் பலப்படுத்திக் கொண்டு நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பது முயற்சி.

இன்னும் இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.


நன்றி: கவனகர் முழக்கம்

நண்பர்களே விதி என்ற வார்த்தைக்கு விளக்கங்களைப் பார்த்தீர்களா. இன்னும் வேறு விதமாகவும் சமயம் வாய்க்கும்போது பார்ப்போம்.

Wednesday, August 5, 2009

மனிதருள் வேறுபாடு ஏன்?

மனிதருள் வேறுபாடு

கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.

ஞானக் களஞ்சியம் - 177



ரசாயன அமைப்பும் மாற்றமும்

கருஅமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல்-எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்,
தகுந்த அளவாம். இதிலோர் சக்திமீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்


ஞானக் களஞ்சியம் - 816

வேதாத்திரி மகான் அவர்களின் பாடல்கள் நம் சிந்தனைக்கு:

வாழ்த்துக்கள்

Friday, July 31, 2009

சமயத்தில் ஒத்துழையா - சிலேடை

கோவை வானொலிக்காக நடந்த நிகழ்ச்சியில் திருக்குறள்.பெ.இராமையா அவர்கள் பங்கேற்றபோது, அவரிடம் ஒரு புலவர், ”மின்சாரத்திற்கும் சம்சாரத்திற்கும் சிலேடையாக ஒரு வெண்பாவைப் பாடவேண்டும்” என்றார்.

”ப்ளிச்...” என்று ஆரம்பித்த சிலேடைப் பாடலின் முதல் வரி, அனைவரையும் சிரிப்புக் கடலில் ஆழ்த்தியது.


சமயத்தில் ஒத்துழையா
ஷாக்அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை
ஊட்டும்-நமை உயர்த்தும்
தன்சாரம் குன்றாத
தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சாரமே!


சமயத்தில் ஒத்துழையா...’ என்பதில் ‘மின்சாரம்,சம்சாரம் இரண்டுமே எந்த நேரத்தில் காலை வாரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாரத நேரத்தில் தகராறு செய்து நமக்கு அதிர்ச்சியை (tension) உண்டாக்கும்.

ஷாக் அடிக்கும் தொட்டால்...’ என்பது அடுத்த வரி, தகராறு செய்யும் சமயத்தில் இரண்டின் மீதும் கையை வைக்காதே. பட்...டென்று அடித்து விடும்.

இமைசிமிட்டும்...’ அதிக அழுத்தம் (ஹீவோல்ட்), குறை அழுத்தம் காரணமாக மின்சார விளக்குகள் ‘ப்ளிச்..’ என எரிவதும், மங்கலாக ஒளிர்வதும் இயற்கை.
அதுபோல் வீட்டுக்கு வரும் விருந்தினரைப் பொறுத்து சுறுசுறுப்பாய் இயங்குவதும், மந்தமாய் இருப்பதும் சம்சாரத்தின் இயற்கை.
அதாவது பிறந்த வீட்டுச் சொந்தங்களாகிய அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என்று வந்தால் சுறுசுறுப்பாய்ப் ‘ப்ளிச்’சென்று மின்னும். புகுந்த வீட்டுச் சொந்தங்களாகிய மாமியார்,நாத்தனார் என்று வந்துவிட்டால் மந்தமாகி விடும்’.

இன்பமதை ஊட்டும்..’ வீட்டில் மின்விசிறி சுழல, மின் அடுப்பு எரிய,குளிர்பெட்டி குளிர, விளக்குகள் ஒளிர, மின்சாதனப் பொருட்கள் இயங்க என எல்லாவற்றிற்கும் மின்சார ஓட்டம் சீராக இருந்தால் நமக்கு இன்பமான மனநிலை தரும். அதேபோல் ஒரு குடும்பத்தின் அத்தனை இன்பங்களுக்கும் காரணமாய் இருந்து நமக்கு இன்பத்தை தருவது சம்சாரமே.

நமை உயர்த்தும்...’ ஒரு வீட்டின் உயர்வுக்கும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கும் மின்சக்தி ஓர் அடிப்படைத் தேவை. அதேபோல் ஒரு குடும்பத்தின் உயர்வுக்கு சம்சாரம் ஓர் அடிப்படைத் தேவை

தன்சாரம் குன்றாத தன்மையால்’ நேரம் கருதியோ, ஆளைக் கருதியோ மின்சாரம் தன் ஆற்ற்லைக் குறைத்துக் கொள்வது கிடையாது.240 வோல்ட் மின்சக்தி என்றால் யார், எப்போது தொட்டாலும் ஒரே மாதிரிதான் மின் அதிர்ச்சி இருக்கும். அதேபோல் இல்லத்தில் எப்போதும் தன் மதிப்புக் குறையாமல் பார்த்துக் கொள்வது சம்சாரத்தின் இயல்பாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மின்சாரமும் சம்சாரமும் ஒரே இயல்புடையவை
என பாடலை முடித்தார்.பதின்கவனகர் திரு.இராமையா பிள்ளை.

எப்படி..?

சுவையாக உள்ளதா சிலேடை..?!!!!!!

நன்றி: கவனகர் முழக்கம் தி.ஆ.2033 வைகாசி வெளியீடு

Wednesday, July 29, 2009

அன்னை தெரஸா

மெகா டிவியில் காலை 7.15 க்கு கவனகர் சொற்பொழிவில் கிடைத்த ஒரு தகவல். இதை பதிவேற்ற எண்ணம் இருந்தும் நேரமின்மையால் பொறுத்திருந்தேன். சாருநிவேதிதா அதை பதிவேற்றம் செய்திருக்கிறார். தன் கட்டுரைக்காக சொல்லி இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்ததால் அவருக்கு நன்றியைச் சொல்லி இங்கே...

கனக சுப்புரத்தினம் என்பவரின் ஆன்மீகச் சொற்பொழிவு. ஒரே ஒருநாள் அதைக் கேட்டேன். அதில் அவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். மதர் தெரஸா கல்கத்தாவில் ஆசிரமத்தை ஆரம்பித்த புதிதில் அதற்குத் தேவையான பணச் செலவுக்காகத் தன்னுடன் சில குஷ்ட நோயாளிகளை அழைத்துக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று பெரிய கடைகளில் பிச்சை கேட்பாராம். ஒருநாள் ஒரு சேட்டுக் கடையில் கேட்கிறார். சேட்டு அன்றைய தினம் (இதை வியாபார நேரத்தில் தொந்தரவாக நினைத்து) மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ” வேறு இடம் பார் ” என்கிறார். தெரஸா தன்னுடைய ஆசிரமத்தைப் பற்றிச் சொல்லி உதவி கேட்கிறார். சேட்டுக்குக் கோபம் எல்லை மீறுகிறது.

“உன்னிடம் தருவதற்கு இப்போது எதுவும் கிடையாது. ”

“இருப்பதைத் தாருங்கள்; போதும். ”

“இதோ இதுதான் இருக்கிறது ” என்று சொல்லி தெரஸாவின் முகத்தில் காறி உமிழ்கிறார் சேட்.

உடனே தெரஸாஎனக்கு இது போதும்; இவர்களுக்கு ஏதாவது தாருங்கள்என்று மிக அமைதியாகச் சொல்கிறார்.

இதைக் கேட்டதும் சேட் ஆடிப் போய் விடுகிறார். அன்றைய தினத்திலிருந்து தங்கள் நிறுவனத்திலிருந்து ஆண்டு வருமானத்தில்,(இலாபத்தில்) பத்து சதவிகிதத்தை மதர் தெரஸாவின் ஆசிரமத்துக்கு இன்று வரை கொடுத்து வருகிறார்கள் சேட்டின் குடும்பத்தினர்.

மீண்டும் சந்திப்போம்

Tuesday, July 28, 2009

அருட்காப்பு


நண்பர் திரு.முக்கோணம் அவர்கள் எழுதியுள்ள சொற்களின் சக்தி இடுகையை படித்தவுடன் அதன் தொடர்ச்சியாக அதில் உள்ள நுட்பத்தை, வேதாத்திரி மகான் விளக்கிய வண்ணம் கொடுக்க விரும்பினேன். இதோ ஏன் அருட்காப்பு தேவை என்பதன் விளக்கம்.

அருட்காப்பு:

”எல்லாம் வல்ல அருட்பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமைவதாக..”



வெளி உலகில் ஒரே புழுதிமயம்,புகைமயம்,புழுக்கம், இதனால் நம் உடல் ஒழுங்கு பாதிப்படைகிறது. அந்த பாதிப்பால் நம் மன அமைதி கெடுகிறது. மனஇறுக்கம் (TENSION) அதிகமாகிறது.

நாம் இருக்கும் அறைக்குள் தூசி நுழையாமல், புகை வராமல், புழுக்கம் இல்லாமல் குளிர்வசதி (AIR CONDITION) செய்து கொண்டால் இந்தத் தொல்லைகளிலிருந்து நம்மளவில் விடுதலை பெறுகிறோம்.

அதேபோல் சமுதாய அமைப்பில் உள்ள சீர்கேடுகளால் பாதிக்கப்பெற்ற மக்கள், இறுகிய முகத்துடன், குழப்பமான எண்ணங்களுடன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது எரிச்சலுடன், பொறாமையுடன், புழுக்கத்துடன் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்மறை எண்ண அலைகளின் தாக்குதலால் (THOUGHT POLUTION) நம்மை அறியாமலே நாம் மனப்பாதிப்பை அடைகிறோம்.

அந்தப்
பாதிப்பிலிருந்து நம்மளவில் நாம் விடுதலை பெறவேண்டியேஅருட்காப்புஎன்னும் AIR CONDITION மனவளக்கலை பயின்றவர்கள் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி போட்டுக் கொள்ளவேண்டும் என நான் சொல்லி வருகிறேன்.

அதே வேளையில் நம் செய்தியை உணராத, சமுதாயத்தின் மற்ற சகோதரர்கள் மத்தியில் உள்ள புழுதி,புகை,புழுக்கம் முதலிய புறக்குற்ற்ங்களையும், பொறாமை, சினம், குழப்பம் போன்ற அகக் குற்றங்களையும் நீக்கும் முயற்சியாக வாழ்த்து, தியானம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

நகரம், நாடு எனத் தொடங்கி, முடிவில் உலகமே அருட்காப்பு பெற்ற அமைதி உலகமாக மாற வேண்டும் என்பதுதான் எம் இலட்சியம்.

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !.

நன்றி-- வேதாத்திரி மகான்

Thursday, July 23, 2009

''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''



32 கேள்வி பதில் வந்தபோது பதிவுலக நண்பர்களைப்பற்றிய ஓர் அறிமுகமாக இருந்தது. நண்பர்களை அறிந்து கொள்ள முடிந்தது. கூடுதல் விவரங்கள் கிடைத்தன.

ஆனால் இப்போது சுவாரஸ்ய வலைப்பதிவு விருது நண்பர் கதிர் மூலமாக எனக்கு கிடைத்துள்ளது. இந்த விருது செந்தழல்ரவி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது,அப்போதிருந்த பதிவுலக சூழ்நிலைக்கு சரியான மாற்றாக இருந்தது.முதலில் கதிர்,செந்தழல் ரவி இருவருக்கும் நன்றிகள்.

இதில் உள்ள முக்கியத்துவம், நமது பதிவு சுவாரஸ்யமாக இருப்பதாக, விருது வழங்கிய நண்பர் நமக்கு தந்திருக்கிறார். இது பலபேருக்கு சென்று சேரவேண்டும் என எண்ணி வழங்குகிறார்.


காரணம் இதுவாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த விருது வழங்கக் காரணம் அன்பு, அன்பு,அன்பு இதைத் தவிர வேறொன்றும் இல்லை.

பிறருக்கு விருது வழங்குவதும் கொண்டாட்டம், அவர்களை மகிழ்ச்சியடைய செய்வதால் அவர்களோடும் கொண்டாட்டம். இதை நான் பெரிதும் விரும்புகிறேன்

திருப்பி, நாம் விருது வழங்க வேண்டியது ஆறு பேருக்கு என்பதால் விரைவில் வலையுலகம் முழுதும் பரவும். அதாவது அன்பு பரவும்.

எனக்கு பிடித்த சுவாரஸ்யமான பதிவர்களில் சிலர் நான் தினமும் படிப்பவர்கள் என்கிற தலைப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கு தகுதியானவர்களே. இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.

ஆகவே நானும் அன்பை வாரி வழங்க விரும்புகிறேன். பிடித்தவர், பிடிக்காதவர்,.. வேண்டியவர், வேண்டாதவர்.., என அனைவரிடத்திலும் என் அன்பை பகிர்ந்து கொள்கிறேன்.

வேண்டியவரிடத்தில் அன்பு காட்டுவது என்பதை நாயும் செய்யும்., மனிதன் நீ, அன்பு மயமாய் அ
னைவரிடமும் இரு என்கிற சாது அப்பாதுரையின் வாக்குக்கேற்ப, அனைவரிடமும், குறிப்பாக வலையுலகத்தில் அனைவரிடத்திலும் நாம் அனைவரும் நட்பு பாராட்டுவோம்., என்கிற செய்தியை அனைவருக்கும் சொல்லி அடுத்த கட்டமாக, விருது வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைப்படி






பாலகுமாரன் பேசுகிறார் தனக்குள்ளே பேசும்,பார்க்கும் வகையில் அமையும் இவரது எழுத்துக்களை படியுங்கள். இவரது ஆன்மீக கதைகள் எனக்கு விருப்பமான ஒன்று.

பூ வனம் தத்துவ கருத்துகள் நிறைய உண்டு எளிமையான உரையாடலாய்.

வெயிலான் திருப்பூர் பதிவர்கள் சங்க தலைவர். பிரபலபதிவர்களால் அறியப்பெற்றவர்.புதியவர்களுக்காக

சாஸ்திரம் பற்றிய திரட்டு ஸ்வாமி ஓம்கார், ஞானமார்க்கம் குறித்து தெளிவான கருத்துக்களோடு செயல்படுபவர்

தமிழில் டாக்டர் ஷாலினி ,உளநல மருத்துவர்,

நெஞ்சின் அலைகள் பிரபஞ்ச அறிவியலை அற்புதமாக தருபவர்.

விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்

ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு மட்டும் இதிலிருந்து [விதியிலிருந்து:)] விதிவிலக்கு.
அவருக்கு அன்பை மட்டும் வழங்கி விருதை நானே வைத்துக் கொள்கிறேன்.


நிகழ்காலத்தில் இருப்போம், அன்பு மயமாய் இருப்போம்.

வாழ்த்துக்கள்

Wednesday, July 22, 2009

பொன்னை வைக்கும் இடத்தில்...

கல்வி என்பது வெறும் நூல்களில் இருந்து மட்டுமே அறியப்படுவது இல்லை.

பள்ளிக்கூடங்களில் மட்டுமே கற்பிக்கப்படுவதும் இல்லை.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.


வெறும் நூல்களால் மட்டுமே அறிவாளிகள் உருவாவது என்றால், வீட்டிலே
(புத்தக அலமாரியில்) குடியிருக்கும் சிலந்திகள் நம்மைவிட ஞானிகளாக இருக்கும்.


பழங்காலத்தில் குருகுல முறை ஒன்றுண்டு. கற்க வேண்டுமென்றால் குருவிடம் சென்றுதான் கற்க வேண்டும்.குருவுடனேயே தங்கி இருக்கவேண்டும். குருவுடனேயே வாழ வேண்டும்.

குரு கற்றுத் தருவனவற்றிற்கும், அவர் வாழ்க்கைக்கும் இடைவெளி இருந்தால் அது சீடனுக்கு வெகு எளிதில் தெரிந்துவிடும்.

அப்படிப்பட்ட குருவை ஒருக்காலும் அவனால் மதித்து மரியாதை செலுத்த முடியாது.

குருவின் வாழ்க்கை அவனுக்குள் மெளனமாகச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவரின் அன்பு, அவரின் உணர்வு, அவரின் பரிவு ஆகிய ஒவ்வொன்றும் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குருவிடம் பணிவிடைகள் செய்யும்போது, அவனுடைய தான் என்கிற எண்ணத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக அவன் உதிர்க்க ஆரம்பிக்கின்றான்.

தன்னிடம் ஏற்கனவே நிறைத்து வைத்திருந்தவற்றைக் காலி செய்யக் கற்றுக்கொள்கிறான்.

ஏற்கனவே நிரம்பியதில் எதையும் ஊற்ற முடியாது.அவன் வெறும் பலகை ஆனபிறகு, குரு எழுத ஆரம்பிக்கிறார்.


பைபிளில் ஒரு வாசகம் வருகிறது.

’பன்றிக்கு முன் முத்துக்களைப் போட்டால், அவை அந்த முத்துக்களைக் காலால் நசுக்கிவிட்டு நம்மைத் தாக்க வரும்’ என்று!

இதற்கு பதில் சொல்லும்போது, பன்றிகளைக் குறை கூறுவதுபோல் விளக்கத்தைத் தருவது பலரது வழக்கம்.

ஆனால் சென் துறவி ஒருவர் விளக்குகையில், பன்றியின் முன் முத்துக்களைப் போடக்கூடாது என்று சொல்வது பன்றிகளைக் குறை கூறுவதாகப் பொருள் அல்ல

பன்றிகளுக்கு முன் எதைப் போடவேண்டுமென்று தெரியாமல் இருப்பது
நமது தவறு ஆகும். இதை உணரவேண்டும்.

நமக்கு வேண்டுமானால் முத்துக்கள் விலை உயர்ந்தவையாக இருக்கலாம்.உண்மையில் முத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அந்த மதிப்பை நாம்தான் அவற்றுக்கு உண்டாக்குகிறோம்.

ஒருவேளை காகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்திருந்தால் நாம் அவற்றை இன்னும் அதிகமாக நேசித்திருப்போம்.

முத்தும் அபரிமிதமாகக் கிடைத்திருந்தால் அதற்கு நம்மிடம் மரியாதை இருந்திருக்காது.

ஆக, பன்றிகளுக்கு எது தேவையாக உள்ளதோ அதைத்தான் அவற்றிற்கு முன்னால் போடவேண்டும்.பன்றிகளைப் பற்றி நாம் பல தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் பன்றிகள் மிகவும் புத்திசாலியான பிராணிகள்.

அதைப்போலவே குருவினுடைய பணி, அந்த மாணவனிடம் எந்த அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்கிற நுட்பத்தின் அடிப்படையில் ஏற்படுவது.

ஒவ்வொரு சீடனுக்கும் ஒரு அணுகுமுறையைக் குரு வைத்திருக்கிறார்.


அந்த அணுகுமுறை இன்னொருவருக்குப் பயன்படாது.


குருவிற்கும் ஆசிரியருக்கும் இருக்கின்ற வேறுபாடு, அவர்கள் அணுகுமுறையினால் ஏற்படுவது.


ஆசிரியர் எல்லா மாணவர்களுக்குமாகச் சொல்லித் தருகிறார்.


குரு தனித்தனி சீடர்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றார்.



நன்றியுடன்
:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து