"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, June 13, 2017

தூசு படியாத கண்ணாடி - ஓஷோ

மனம் என்பது ஆசைகளின் தொகுப்பு. இந்த ஆசைகள் எல்லாம் நினைவகத்தைச் சார்ந்தவை. நினைவகம் என்றபோதே கடந்தகாலம்தான்.

ஆனால் நெஞ்சம் இந்தக் கணத்தில் வாழ்கிறது.அதன் துடிப்பு இந்தக் கணத்துக்கானது. இதனாலேயே பரிசுத்தமானதாகிறது.

மனமோ நெஞ்சுக்கு நேர் எதிர்., மனம் எப்போதுமே இங்கே இப்போதயதில் இருப்பதில்லை. கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களை அசைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.  அல்லது அத்தகைய அனுபவங்களை எதிர்காலத்தில், எதிர்நோக்கிக் கற்பனையில் திளைக்கின்றது.
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டு நிகழ்காலத்தில் கால் ஊன்றுவதில்லை. நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
இப்போது பிரச்சினையாக இருப்பதே அறிவார்ந்த மனம்தான்..

நீ உன் இதயத்திலிருந்து, மூளைக்குள் குடி புகுந்து விட்டாய். பகலில் எண்ணங்கள், இரவில் கனவுகள் என வாழ்க்கை கழிந்து கொண்டே இருக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும் ?

வேதங்கள், உபநிடதங்களில் அழகிய வார்த்தை அலங்காரங்களைக் காணும்போது கவனமாக இரு. தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கவனி. வார்த்தைகளில் தொக்கி நிற்கும் செய்தியை மட்டும் பார். ஆனால் நுண்மையான தர்க்கத்தில் உன் நேரத்தை வீணடிக்காதே. வார்த்தைகளில் அதீத கவனத்தை செலுத்தி அர்த்தம் தேடிக்கொண்டு இருக்காதே.

மெளனம் கைக்கொள். நெஞ்சகத்தை நோக்கு., இயல்பைக் கைக்கொள், உன்னோடயே இயைந்து பிரவாகி. இதுவே நீ சுதந்திரம் அடைய வழி 

இயல்பு என்பது என்ன ? பிரக்ஞையே உன் இயல்பு.

மனதின் சலனநிலையை, எண்ணங்களின் வயப்பட்டு பின் செல்லுதலை, வெளியே போவது என்று குறிக்கின்றோம். எண்ணங்களுக்கு அகப்படாமல் இருப்பது என்பதே உள்ளே போவது.. எண்ணமும் ஆசையுமே சேர்ந்ததே மனம்., இதுவே வெளியே போகும் யாத்திரைக்கு எரிபொருள். இங்கே ஆசை என்பது மனம் எதிர்காலத்தில் சிக்கிக் கொண்டு இருப்பதையே குறிக்கும் என்பதையும் அறிக.

மனம் வெளியே போகமல் இருந்துவிடுவதே.....   உள்ளே இருப்பது

மனம் வெளியே போகாமல் எப்படி நிறுத்தி வைப்பது ? எண்ணங்களை அலட்சியப்படுத்திவிடு. அவைகள் பற்றி கவலைப் படவேண்டாம்
அவை இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாதே. அவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதே. இருக்கட்டும் விடு. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு மெளனமாக இருந்துவிடு. கவனிப்பது என்பது கண்காணிப்பதல்ல.. விழிப்போடு இருத்தல், சாட்சியாக இருத்தல்.

மனம் உள்ளே போக என்ன வழி ? உன்னுடைய எண்ணங்களை  உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இரு.  உன் எண்ணங்களும் நீயும் வேறு வேறு என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி விட்டேற்றியாக உன் எண்ணங்களை கவனித்துப்பார். இவை தவறு, இவை சரி என்றும் தீர்மானங்களின் பாற்பட்டு எண்ணங்களைப் பார்க்காதே..  அவை பற்றி எந்தக் கருத்தும் எழுப்பாதே.

எண்ணங்களின் ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிரு.

எண்ணங்களின் போக்குவரத்து நகர்வதற்கு நீ சக்தியைக் கொடுக்கும் வரைக்கும் அது நகர்ந்து கொண்டுதான் இருக்கும். உன்னுடைய சக்திதான் அதற்கு ஆதாரம்.. அந்த சக்தியை நிறுத்தினால் எண்ணப் போக்குவரத்து நின்றுவிடும்.. அப்படி உன்னை அறியாமல் வழங்கும் சக்தியை தடுப்பதுதான் கவனித்தல் என்ற செயல். கண்ணாடியைப் போல் மனம் எதையும் வெறுமனே பிரதிபலிக்க வேண்டும்.  மாறாக உருமாற்றம் செய்யக்கூடாது.

வெளிச்சத்தை பார்க்கும் குழந்தை இது சூரியன், இல்லை மின்சார விளக்கு, இல்லை வாகன விளக்கு, என்று சொல்லிக்கொள்ளுமா ? எல்லாவற்றையும் பார்த்தாலும் எதைப் பற்றியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாது.  இதுதான் பிரதிபலிப்பது என்பது ஆகும்.

எண்ணங்கள் என்பவை தூசுத் துகள்கள்..
தூசு படியாத கண்ணாடியாக இருங்கள்.

ஓஷோ
தம்மபதம் I






No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)