"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, June 26, 2017

கேள்வியும் பதில்களும் - ஓஷோ

முந்தய பதிவில், கேள்வி எப்போதுமே சரிதான்.. பதில்கள்தாம் தவறுக்கு உட்பட்டவை என்று பார்த்தோம். வாழ்க்கை அனுபவத்தில் பல வருடங்களுக்கு முன் சரியாக இருந்தது. தற்போது, எனக்குள் எழுகின்ற கேள்விகள் அனைத்தும் தேவையில்லாதவை என உணர்கிறேன்.

பிறரது கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேருகின்றபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. மறைமுகமாக ஒரு பிரச்சினை உண்டு.. பலவிதமான பதில்கள் முந்திக்கொண்டு நிற்கும். மனம் சார்ந்த கேள்விகள் என இங்கே குறிப்பிடுவது அவசியம்.

எனக்குள் எழும் கேள்விகளே தேவையில்லை என்றபொழுது ஏற்கனவே எனக்குள்  இருக்கின்ற பதில்கள் பலவும் இல்லாது போக வேண்டியவையே..

ஆம். கற்றவை அனைத்தும் பயன்பட்ட காலம் போய், கழித்துவிடவேண்டிய தருணம் வந்துவிட்டது.

இனி ஓஷோவின் வார்த்தைகளைப் பார்ப்போம்.
                                                                           ----


மனதில் பதில்கள், பதில்கள் என்று பலவும் இருக்கின்றன.  இது முடிவில்லாது தொடரும். ஆனால் உண்மையில் பதில் என்பது ஒன்றே ஒன்றுதான்.
அந்த பதில் எல்லா கேள்விகளையும் கரைத்துவிடும்.

 கேள்விகளின் சித்திரவதை இருந்து கொண்டேதான் இருக்கும். மனதில் பதில்கள் இருக்கும்வரை புதிய கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். மன வேர் இருக்கும்வரை கேள்விகள் கிளைத்து, புதிய தளிர்கள் அரும்பிக் கொண்டேதான் இருக்கும்.

மனதின் பிணைப்பை அறுக்கும்போது, அதன் வேர்களை வெட்டுகிறாய்.
மனதோடு ஆன அடையாளங்களை விட்டு ஒதுக்கும்போது, எதனோடும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பரிசுத்தமாக, ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டு, கவனித்துக்கொண்டு இருக்கும்போது எல்லோரிடத்திலும் கேள்விகள் கரைந்து போகின்றன.

இப்போது மிஞ்சி இருப்பது ஒரே ஒரு பதில்தான். அதுவே ஆழ்ந்த நிர்ச்சலனம்.

ஒருவேளை  கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் தெரிவது போல் நினைக்கிறாயா ? அது ஒரு பிரமை. இந்த மனம் பிரமைகளைத் தோற்றுவிப்பதில் வெகு சமர்த்து. இந்த மனம் பசப்பக் கூடியது. அறிவு என்ற பெயரில் உன்னை ஏமாற்றிவிடும். எல்லாவற்றிலும் உன்னை ஏமாற்றக் கூடியது.  ஏற்கனவே ஞானியாகி விட்டாய். புத்தனாகிவிட்டாய் என்று கூட உன்னை நம்ப வைத்து ஏமாற்றி விடும். எச்சரிக்கையாக இரு.

மனதைக் கூர்ந்து கவனி. அப்படி கவனிப்பதில் கேள்விகள் மறைந்து போகின்றன. அவ்வளவே. பதில்கள் கிடைத்துவிடுகின்றன என்று நான் சொல்லவில்லை.

பதில்கள் என்ற தகவல்களை நூல்கள், பல்கலைக்கழகம், ( இணையம் ) என எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். விபரம் தெரிந்தவராக ஆகிவிடலாம். ஆனால் என் பணியோ '' நீ கற்றுக்கொண்டதை விட்டுவிட வைப்பதுதான்” இப்போது உன்னிடம் பதில்கள் இருப்பது இல்லை. இயல்பாகச் செயல்படுகிறாய். ஏற்கனவே இருக்கின்ற முடிவுகளைச் சார்ந்தோ, கடந்த காலம் சார்ந்தோ இல்லாமல் இயல்பாய் நீரூற்று கிளம்புவது போல் உன் செயல்கள் அமைகின்றன.



ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா


No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)