"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, June 28, 2017

'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா ?


'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகளை பட்டியலிடுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் கங்கா

பெண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது பிறப்புறுப்பைத் தொட்டுக் கொண்டே இருக்கும். இதனால், அந்த இடத்தில் தோலில் அழற்சி - 'டெர்மெடைட்டிஸ்' ஏற்படும். சிறுநீரில் உள்ள யூரியா போன்ற வேறு உப்புகள், குழந்தையின் தோலில் தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூஞ்சைத் தொற்று - 'டேண்டிடா' ஏற்படுத்தும்.
காற்றோட்டம் இல்லாத ஈரமான இடங்களில் பூஞ்சைத் தொற்று எளிதில் ஏற்படும். பிறப்புறுப்பின் உள்ளே கிருமிகள் சென்று, யூரினரி இன்பெக் ஷனை ஏற்படுத்தக் கூடும். பெண் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

அதேபோல், ஆண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது விரை பையில் பட்டு, அதிகச் சூட்டை உண்டாக்கும். இந்தச் சூடு அவர்களுக்கு நல்லதல்ல. இதனால், அணுக்கள் பாதிக்கப்படும்; விந்தணு உற்பத்தியாவது குறைகிறது. இந்தப் பாதிப்பு குழந்தையாக இருக்கும்போது தெரியாது; வளர்ந்து பெரியவர்களான பின் தான் தெரியவரும்.

ஜெல் டெக்னாலஜி உள்ள டயாபரில் உள்ள ரசாயனப் பொருட்கள், குழந்தையின் மென்மையான தோலுடன் வினைபுரிந்து, அதிகமான அழற்சியை ஏற்படுத்தும். மேலும், தளர்வான டயாபர்களே சிறந்தவை. பிளாஸ்டிக் இழைகள் கலந்த, இறுக்கி பிடிக்கும் டயாபர், அரிப்பு, வறட்சி மற்றும் தோல் சிவந்து போதல், புண் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.

இரவு நேரங்களில் டயாபர் அணிவிக்கும்போது, குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்தால் அம்மாவுக்கு தெரியாது. ஆனால், குழந்தை அசவுகரியமாக உணரும். கழிவில் உள்ள பாக்டீரியாக்களால் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

வெளியூர் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும்போது, டயாபர் அணிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இச்சூழ்நிலைகளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கண்டிப்பாக டயாபரை மாற்ற வேண்டும். அத்துடன், டயாபரைக் கழற்றியவுடனேயே அடுத்ததை அணிவிக்கக் கூடாது. அரை மணி நேரம் காற்றுப் பட விட்டு, பின்னர் போடவும். சிறுநீரோ, மலமோ குழந்தை போகவில்லை என்பதற்காக, பயன்படுத்தியதையே திரும்பப் போடக் கூடாது.

ஒன்றரை வயது தாண்டிய குழந்தைகளுக்கு, டயாபரைத் தவிர்த்து, 'டாய்லெட் டிரெயினிங்' கொடுக்க வேண்டும். தொடர்ந்து டயாபர் போடும் குழந்தைகளுக்கு, இந்தப் பயிற்சி அளிப்பது தாமதமாகும்.
டயாபர் போடும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், தடிப்பு ஏற்படுவது குறையும் என்பது தவறு. சிறுநீரில் உள்ள யூரியா மற்றும் மற்ற உப்புக்கள், எண்ணெயுடன் வினைபுரிந்து மேலும் பாதிப்பை அதிகரிக்கும்.

டயாபருக்கு மேல் பேன்டீசையும் அணிவிப்பது முற்றிலும் தவறு. இதனால் காற்றோட்டம் சுத்தமாகக் கிடைக்காது. தொடர்ந்து இவ்வாறு அணிவிக்கும்போது, குழந்தைகளின் இரண்டு தொடைகளும் விலகி, அவர்கள் நடையில் மாற்றம் ஏற்படும்.

நன்றி
தினமலர்
28/06/2017


No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)