"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 8, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 2

இரயிலில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து நெடுமங்காடு ,விதுரா , ஊர்களின் வழியாக போனகாடு  செல்லும் பஸ் பிடிக்க, விசாரித்தபோது வர லேட்டாகும், அந்த பஸ்ஸில் சென்றால் போனாகாடு ஊரில் இரவு 9.30 க்கு இறக்கிவிடப்பட்டு தனியாக இருக்க வேண்டியதாகிவிடும்   , அதனால நாம நெடுமங்காடு போயிட்டு அங்கிருந்து கனெக்சன் பஸ் பிடித்தும் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. நாங்கள் சென்ற மாலை வேலையில் நெடுமன்காடு,விதுரா  பஸ்தான் கிடைத்தது. விதுராவுக்குச் செல்லும்போது மணி இரவு 8.30 மணி...எனவே விதுராவில் இரவு தங்கினோம். ஓரிரு லாட்ஜ்கள்தாம் .. இங்கேயே தங்குவது உத்தமம். ஏனெனில் பலர் மலை அடிவாரத்துக்கு முந்தய நாள் இரவு சென்று தங்கினர்.  அங்கே வாசலில்தான் படுக்கவேண்டும். மழை பெய்தால் படுக்குமிடமெல்லாம் நனைந்து விடும், கூடவே குளிரும்..

அடுத்தநாள் காலை 6 மணிக்கு பஸ் இருப்பதாக செய்தி கிடைத்தது .. காலை 5.30 க்கே சென்று  காத்திருந்தோம் அங்கே உணவு இருக்குமா? இருக்காதா என்ற சந்தேகம் .. கூட வந்த நண்பர்களுக்கு :)  இல்லையென்றால் மலை ஏறும்போது என்ன செய்வது என்று ஆலோசனை செய்துவிட்டு, காலை 5.30 க்கே அருகில் உள்ள மெஸ்ஸில் அப்பமும், சுண்டல் குழம்பும் ஊற்றி அடித்துவிட்டு, காத்திருக்க 6.30 க்கு பஸ் வந்து சேர, போனாகாடு என்ற ஊரில் காலை 7.30 க்கு வந்து சேர்ந்தோம்.



இந்த ஊர்தான் நமக்கான போக்குவரத்தின் ஆதாரம். இங்கிருந்து சுமார் 2 கிமீ நடந்தால் வனத்துறை அலுவலகம் வரும். அங்கிருந்துதான் நமது பொதிகை மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் இயங்காத தொழிற்சாலை ஒன்று தென்பட.....



 ஜீப்கள், கார்கள் செல்கிற அளவிலான மண்பாதை..அரைமணி நேரம் நடக்க வனத்துறை அலுவலகம் அடைந்தோம்.




எங்களுக்கு முன்னதாக இரவே வந்து தங்கியவர்கள் வெள்ளைரவை உப்புமா டிபனாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க.. முன்பதிவு இரசீதுகளை பதிவு செய்து கொண்டோம். மதிய உணவு பார்சலாக கட்டிக்கொடுத்தனர். எங்களுடைய பைகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.. ஏதேனும் உற்சாகபானங்கள், இருக்கிறதா என்று பார்த்து அனுப்புகிறார்கள். காலை 9.மணிக்குத்தான் மேலே அதிரமலைக்குச் செல்ல அனுப்புகிறார்கள். அங்கே தங்கி அதற்கு மேல் அகஸ்தியர் கூடம் போகவேண்டும் :)

அலுவலகத்தில் இருந்து காலை 9.15 க்கு கொஞ்சதூரம் நடந்தவுடன் காட்சியளித்த பிள்ளையார்.. இவரை வழிபட்டு நகர்ந்தோம்.



Thursday, July 4, 2013

வேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்...

வருடம் தவறாமல் தீபாவளி பொங்கல் முத்து தாத்தா வந்துவிடுவார். அவருடைய முதல் விசிட் என் வீடுதான்.. வயிறாற விருந்திட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்புவேன்.  சமைத்ததில் முதல் பங்கே அவருக்குதான். குழந்தைகளே பரிமாறுவார்கள். 

நாங்கள் பயன்படுத்தும் டம்ளர் போன்றவைகள் தரப்படும். இயல்பாக கழுவி பயன்படுத்துவோம். இலையை அவரே எடுக்க எத்தனித்தால் அனுமதி இல்லை. நாங்கள் தான் எடுப்போம். அவர் மெள்ள மெள்ள வெளியேறும்போது வாசலில் நின்று மறையும் வரை பார்ப்போம். குழந்தைகளின் மனநிறைவு அளவற்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பெற்ற தந்தையை விட மனம் உயர்வாகவே நினைக்கும்.

காரணம்  என்னன்னு தெரியல... எல்லோரையும் சாமி, சாமி ந்னு க்கூப்பிடற வாஞ்சையா? முதுமை காரணமா, எதுவும் புரியலை... இப்படித்தான் சாதி என்கிற உணர்வு உள்ளுக்குள்ள பனித்திரை மாதிரி இருக்குது.. என் குழந்தைகளுக்கு சாதி என்பது என்னன்னு தெரியாது.... ஆனா மன அலைவரிசைக்கு ஒத்துவர்றவுங்க, வராதவங்கன்னு பிரித்துப் பார்க்கத் தெரியும். 

சுருக்கமாச் சொல்லனும்னா அசைவம் சாப்பிடறவங்க வேற சாதி.. சைவமா இருக்கிறவங்க நம்ம சாதி.. இத நான் சொல்லிக்கொடுக்கலை... எனக்கு அசைவம் சாப்பிடறவங்களோட ஒன்னா உட்கார்ந்து சைவம் சாப்பிடுவேன். அவர்களுக்கு தேவையானதை பரிமாறவும் செய்வேன். மனம் பற்று, பிடிப்புன்னு ஒட்டாமல் இருக்கிறது சாத்தியமாயிட்டுது.

சரி என் புள்ளைங்க பெரிசான வேற சாதியில கட்டி வைப்பயான்னு கேட்டா என்ன பதில் சொல்றது தெரியல ..அப்படி கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் என்னன்னு புரியல... சாதி சோறுபோடாது.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசு இல்லாம இந்த உலகத்துல பிழைக்க முடியாது..  மாசம் இப்போதைக்கு இருபதாயிரம் இருந்தாத்தான் குடும்பம் தள்ள முடியும்..

வீட்டு வேலை எல்லாம் செஞ்சாகனும். ஆள்போடனும்னா இன்னும் பத்தாயிரம் சேத்து சம்பாதிக்கோனும். வீட்டு நிர்வாகம்,  காசு சம்பாதிக்கிறதுல உள்ள சிரமங்கள், நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற சுதந்திரம்னு எல்லாம் என் புள்ளைங்களுக்கு லேசுபாசா சொல்லித்தான் வளர்த்துகிட்டு வர்றேன்.

இவளுங்க வளர்ந்து குடும்பம் தள்றதுல உள்ள சவால்கள், வேறு சூழ்நிலை அங்கு வாழ்தலில் உள்ள அனுசரிப்பின் அவசியம் இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் என் எதிர்ப்பார்ப்பு....சாதி முக்கியமில்லைதான்.

படிக்க ஹாஸ்டல்ல கொண்டு விடறன்னா பக்கிக நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு வீட்ல எங்களை மேய்ச்சுக்கிட்டு இருக்கிறாங்க... இதுக வளர்ந்து எல்லாம் புரிஞ்சுகிட்டு வேற சாதியிலதான் கட்டுவேன்னா கட்டி வச்சுற வேண்டியதுதான்.

நமக்கென்ன.. மாட்டுற ஐயரு பாடுதான் திண்டாட்டம் ...அவ்வளவு விபரமா இருப்பாங்கன்னுதான் நடவடிக்கைகளைப்பாத்தா தோணுது .

தர்மபுரி விசயத்த படிச்சவுடன் தோணுச்சு.. எழுதினேன்.

இளவரசன் மரணம் வருந்தத்தக்கது எனினும் அது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இளவரசனோ, திவ்யாவோ ஆரம்பத்தில் இந்த அளவு எதிர்ப்பு வரும் என நினைத்திருக்க மாட்டார்கள். இடையில் அரசியல் புகுந்து பிரச்சினை பெரிதாகிவிட்டது உண்மைதான்... ஆனால் காதலுக்கு கண் இல்லை. சக்தியும் இல்லை போல.. இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது.. நம்பி வந்தவளை விட்டுட்டு போயிட்டது குற்றம்தான்... கொலை எனில் அடப்பரதேசி.. எங்கிட்டாவது ஓடிப்போயாவது பொழச்சு இருந்திருக்கலாமே.. அதொன்னும் கேவலம் இல்லையே? சில வருசம் கழிச்சு.. அல்லது எப்படியாவது திவ்யாவை பிக்கப் பண்ணி இருக்கலாமே.... ஏன் இப்படி மாட்டினேன்னு அங்கலாய்க்கத்தான் முடிகிறது.

சாதி என்பது வரும் தலைமுறையிடம் நாம் விதைக்காமல் இருந்தால் போதும். நம்மோடு அது மறைய வேண்டும். அரசும் சாதிகளை, சாதிக்கட்சிகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும். மெள்ள மறைந்துவிடும்.... இதற்கு அரசியல், சாதிக்கட்சிகள் தயாராகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் அது சாத்தியமாகும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

Friday, June 28, 2013

பொதிகை மலை பயணத்தொடர்...1


கடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..

எனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)

அட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா? வேண்டாமா? என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..

யாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள  வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.

Office of the Wildlife Warden,
Wild life Division ,
Vattiyoorkkavu .P.O,
PTP Nagar,
Thiruvananthapuram.
Fax No. 0471-2360762
Phone No. 0471-  2360762


பிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும்.  நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ஒருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக்கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.

நேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.

டிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

இதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.

இப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)

Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)


Tuesday, April 30, 2013

நம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி


சுமார் இருபது வருடங்களாக எனது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரை கவனித்து வந்திருக்கிறேன். அவர் சுய தொழில் செய்வதில் கைதேர்ந்தவர். தன்னிடம் முதலீடு அதிகம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்துவிடுவார். வாங்கிய கடனை, கொடுத்துவர்களுக்கு தேவைப்படும்போது தரமாட்டார். வட்டியை மட்டும் கொடுத்து பேசிச் சமாளித்துவிடுவார். தனது தொழிலின் பணத்தேவை பூர்த்தியான பின்னர்தான் மீதியை கொடுப்பார். கணக்கு வழக்கில் வாய்ப்பு கிடைத்தால் வேலையக் காண்பித்துவிடுவார்.

தனதுதொழில்களுக்கு ஒத்தாசையாக பிறரை கொண்டுவந்துவிடுவதிலும், அல்லது சிரமமான காரியங்களை அதன் பாசிட்டிவ் பகுதிகளை மட்டும் சொல்லி மெருகேற்றி செய்ய வைத்து பயன் அடைந்துவிடுவார்.

நான் பள்ளிப்பருவகாலத்திலிருந்தே அவரை கவனித்து வந்ததால் அவரின் வலை விரிப்புகளுக்கு சிக்காமல் கடந்துவிட்டேன். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்தியாக விலகமாட்டர்கள். ஏதேனும் ஒரு சங்கடத்துடன் விலகுவார்கள்.

அவருக்கு இரு மகன்கள். அதிலும் அவரது மனைவிக்கு சற்று கர்வமும் கூட.. இரண்டு பெண்குழந்தை பெற்றவர்களைப் பார்த்தால் ”பாவம் இரண்டும் புள்ளையாப் போச்சு” என்பார். இந்த குடும்பம் பலதொழில்கள் செய்து இறுதியில் துணிக்கடை வைத்து செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு மகன்களுக்கும் தனித்தனிக்கடை.

காலச்சக்கரம் உருண்டோடியது, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியவன் திருமணமாகி தன் பெண்குழந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தார். அன்று இரவு சின்னமகன் வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம். எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்த செய்தி.

சற்று வேகமாக வந்ததால் நடந்த விபத்து. ஹெல்மெட் போட்டிருந்ததால் சின்னமகன் உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய சின்ன மகனை மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. உடனடியாக இருபதுஇலட்சம் பணம் கட்டியாக வேண்டியது ஆகிவிட்டது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

வழக்கம் போல் மனம் இதிலிருந்து வெளியே வந்து பிரச்சினையை தனக்கு பிடித்தமான கோணத்தில் அலச ஆரம்பித்துவிட்டது.

காசு காசு என்று அலைந்தவரை, அப்படிச் சேர்த்த காசை எப்படி பறிக்க வேண்டும் என்பது விதிக்குத் தெரியுமோ. இந்த விதி துல்லியமான கணக்கீடாக அமையும் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வேகமாக வந்ததல் நடந்த தற்செயல் விபத்துக்கு இந்த சாயம் பூசுகிறேன் என்பதல்ல.. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்து கொள்ளும் சம்பவம் இது. இந்த பிணைப்புதான் நாமாறியா மாயச் சங்கிலி :)

இந்த துல்லியமான கணக்கீட்டுக்கு பலிகடாவாக சின்ன மகன் அமையக்காரணம் என்ன?

போனபிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் என்றால் அது உண்மையாகக்கூட இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிறவியில் செய்வதற்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்போது போன பிறவிக்கு இப்போது பலனை அனுபவிப்பது வலிக்கின்றதே...

எந்தவகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்தவன் இப்போது அதே துன்பத்தை அனுபவித்தால் அர்த்தம் உண்டு. விபத்தில் சிக்கும் அந்த உயிர் துடிப்பதை நினைத்தாலே மனம் கலங்குகின்றது. எது எப்படி இருப்பினும் செய்கின்ற செயல்கள் நம்மையும் தொடர்ந்து நமது வாரிசுகளையும் நாம் அறியாமல் பாதிக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இந்த தெளிவுக்காகவே இதைப்பகிர்ந்தேன்.

நான் யாரையாவது மனதளவில் உடலளவில் துன்புறுத்தி இருக்கின்றேனா என்பதில் கவனமாக இருக்கிறேன். பணம் என்னளவில் இழப்பானாலும் சரி..பிறருக்கு என்னால் இழப்பு என்று தவறு நேராவண்ணம் இன்று வரை காத்து வருகிறேன்.

செய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணம் இவற்றில் கவனமாக இருப்போம். நமது விதியை நிர்ணயிப்போம்

Sunday, March 24, 2013

விபத்து - விதியின் சதியா

காத்துக்கொண்டிருக்கையில் கண்முன்னே இன்னொரு விபத்து...நான் இருந்த இடமோ நகரத்தின் நடுவில் பழமையின் மிச்சமீதி அடையாளங்களை வைத்து இருக்கும் கிராமம். நகரத்தின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து முக்கால் கிலோமீட்டர் வந்து அதன் பின்னர் 20 அடிச் சாலையில் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

 நகராட்சி பகுதி ஆனதினால் அந்த சாலை காங்கிரீட் சாலையாக, மாற்றம் பெற்றிருந்து. அந்த சாலை முடிவடைந்த இடம் ஊரின் மையப்பகுதி. நான்கு வீதிகள்  சந்திக்கும் இடமாக அமைந்திருந்தது. அந்த இடம் இரண்டு மூன்று லாரிகள் சாதரணமாக நிற்கும் அளவிற்கு இடம் அகலமாகவே இருந்தது.


ஆனாலும் கூட அப்படி இடம் இருப்பது  தெரியாத அளவில் நெருக்கமாக வீடுகள். அந்த இடத்தில் நுழைந்த பின்தான் அதன் விஸ்தீரணம் தெரியும். .. சின்ன சதுரமாக வலதுபுறம் தெரிவது மளிகைக்கடை. அங்கே வயதான பாட்டியுடன் மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று 10 ரூ மதிப்பிள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பாட்டியின் கையைப் பிடித்து படி இறங்கியது. படி இறங்கியதுதான் தாமதம் தனது வீட்டுக்கு செல்லும் ஆர்வத்துடன்  பாட்டியின் கையை உதறிவிட்டு,  மேற்குப்புறத்திலிருந்து தென் கிழக்கு வீதிக்காக உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தென் மேற்குசாலைக்காக சின்ன யானையான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று அதேசமயம் சாதரண வேகத்துடன் வந்தது.
அந்த வாகனம் உள்ளே நுழையவும் ஓட்டுநரின் பார்வையில் காலி மைதானம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கும். சட்டென வலதுபுறத்தில் குழந்தை வர ஆரம்பித்ததை கவனிக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தையின் ஓட்டத்தை விட சற்று அதிகமான வேகம் 20 கிமீ வேகம்தான் வேன் வந்திருக்கும்.

வேனும் குழந்தையும் முக்கோணப்புள்ளியில் சந்தித்துக்கொள்ள குழந்தை வேனின் சைடில் மோதி  வேனுக்குக் கீழ் உள்புறமாக முன் சக்கரத்துக்கு முன்னதாகச் சென்று விழுந்தது. வேன் டிரைவர் ஏதோ மோதிவிட்டது என்று உணர்ந்து பிரேக் அடித்த அதே தருணம் வண்டி நகர்ந்து குழந்தை மீது ஏறி நின்றது.

டயருக்கு முன்னதாக குழந்தை விழுந்தவுடன் அதற்குப்பின் நடப்பதை முன்னதாகவே மனம் யூகித்துக்கொள்ள,  நடப்பதை காணும் சக்தி இல்லாததால் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன. இது பயமோ, கிறுகிறுப்போ இல்லை. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மனம் தன்னை தற்காத்துக்கொள்ள இயங்கியதாகத் தோன்றியது.

வலுக்கட்டாயமாக கண்விழித்துப் பார்த்து  எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும் என்று தெரியாத நிலையில் வேனில் அருகில் ஓடினேன். எல்லாம் முடிந்தது. விஸ்வரூபம் படத்தில் வர்ற மாதிரி இரத்தம் கடகடவென தரையில் விரவி பாய்ந்தது. எந்த வித அசைவும் இன்றி குழந்தை கீழே சிக்கிக்கிடந்த கோணம், அதன் முடிவை, மரணத்தை  தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரைவர்  நடந்தை புரிந்து கொள்ள முடியாமல் நிற்க.. சத்தம் கேட்டு அருகில் வந்த சிலருடன் சேர்ந்து வேனின் முன் பக்கத்தை தூக்கினோம்.

யாரோ குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட..மெளனமாக விலகினேன். அடுத்த 20 நிமிடத்தில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை.என மரணம் உறுதி செய்யப்பட மனதில் பல கேள்விகள் எழ, அந்த விபத்தை நேரில் பார்த்ததன் தாக்கம், அதிர்வு சற்று மனதைப் பாதிக்க அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். இயல்புக்கு வர சில மணி நேரங்கள் ஆனது...

Friday, February 22, 2013

விதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன?

விதி வலியதா, மதி வலியதா என்றால் நிச்சயம் விதிதான் வலிது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே விதி என்ற வார்த்தை தலைவிதியைக் குறிப்பது அல்ல. அதே சமயம் அதையும் உள்ளடக்கியதுதான். அப்ப முயற்சி என்பது என்ன? அது எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது?

மழைபெய்வதும் வெள்ளம் வருவதும் விதி.. இதை அணை கட்டி தேக்கி நாம் பயன்படுத்துகிறோமே. அது மதி..  மழை தொடர்ந்து பெய்வது விதி....குடையோ மழைக்கோட்டோ போட்டுக்கிட்டு வேலையப் பார்க்கிறது மதி. விதியை அனுசரித்து செயல் செய்து பலனடைவதுதான் மதி :) எதிராக அல்ல..

சரி.. ரொம்ப சூதானமா இருந்தும் மழை நின்னதுக்கு அப்புறம் பார்த்துப் பார்த்துப் போயும் கரண்டுஷாக் அடித்தோ, சாக்கடையில் தவறி விழுந்தோ விபத்தோ சாவோ நடப்பது மதியை மீறிய விதிதான்..இப்படியும் சொல்லலாம். விதியை வெல்ல முடியா மதி :)

ஆக மனதில் இருத்தி வைத்துக்கொள்ளுங்கள்.  மதி என்பது இயற்கைவிதியை அனுசரித்து நம்மால் செய்யப்படும் முயற்சிகள் .. அது வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பல்வேறு காரணிகளால் நடக்கிறது... இருப்பினும் இந்த முயற்சிகள் விதியின் தீவிரத்தை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ செய்யும்.

நேர் மாறாக எந்தவித பெரிதான முயற்சிகள் இல்லாத போதும் வெற்றி தேடி வருவதும் அதே பல்வேறு காரணிகளால்தான்.. பல்வேறு காராணிகள் என்று வரும்போதே எதைச் சொல்வது எதை விடுவது என்ற சிக்கலும் கூடவே எழுகின்றது.

இந்தப் பீடிகை எதற்கு....சில புரிதல்கள் நமக்குள் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்,:)

மனித மனத்தைப் பொறுத்தவரை, அல்லது ஆன்மீகம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியம் என்பதில் தெளிவாகிக் கொள்ளுங்கள்.

ஒன்று மனம் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை மட்டுமே ஒத்துக்கொள்ளும். அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது நெருடல் இல்லாமல், இருந்தால் மட்டுமே திருப்தி அடையும்.

நான் சொல்லக்கூடியவற்றை இந்த மாதிரி உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அது உண்மையா, பொய்யா, சாத்தியமா, சாத்தியமில்லாததா என்பதெல்லாம் தேவையில்லை என்பதுவும் உண்மை..:)

 மனம் என்கிற கருவி சமுதாயத்தில் நாம் தொடர்பு கொள்ளும்போது, நாம் பிறந்தபோது இருந்த மனம் போல் இருப்பதில்லை. நம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நிறைய சேகரங்களுடன், முன்முடிவுகளுடன் வளர்ந்து இயங்க ஆரம்பிக்கிறது. சேகரங்கள், முன்முடிவுகள் ஏதுமின்றி உங்களால் மனதை விரும்பும்போது இயக்கமுடிந்தால் முதல்நிலை மனதிற்கு நேர் எதிரான மனமாக இந்த மனம் இருக்கும். இந்த இரண்டு விதமான மனநிலைதான் இவ்வுலகில் சாத்தியம்.  ஆனால் இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட மனநிலை சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.  இம்மனநிலை கொண்டவரை யோகிகள், ஞானிகள் என்று சந்தேகமின்றி சொல்லலாம்.  இதற்கு சாதி, மதம், இனம், நாடு தடையில்லை. வழிமுறைகளும் முக்கியமல்ல.. இந்த விளைவைத் தருகிற எந்தச் செயல்முறையும் மிகச் சரியானதே....

கடந்த சில நாட்களுக்கு முன் தூரத்து உறவினர் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்குச் சொந்தமான வாடகைகாரை ஓட்டுவதுதான் தொழிலே.. அவ்வப்போது தண்ணியடிப்பதும் உண்டு. சுமார் 25 வருட ஓட்டுநர் அனுபவம் இருந்தும் அவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிரே வேனில் மோதி விபத்து...., மரணம் நிகழ்ந்துவிட்டது:(.

அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.. இவரது மரணம் இவரது அலட்சியத்தால், எங்கோ நேர்ந்த சிறு தவறால் விபத்து எனில் மதியின் தோல்வியே... ஆனால் அந்த மதியை அந்த நேரத்தில் துவளச் செய்வது விதியின் வேலைதான் :(

சரி நாம் இதை நேரில் பார்க்கவில்லை எனினும் அவர் மிகச் சரியாக வாகனத்தை செலுத்தி இருந்தாலும் எதிரே வந்த வேன் டிரைவரின் அலட்சியத்தால், தவறால் விபத்து ஏற்பட்டு இவர் மரணித்து இருந்தால் அது விதி..மதியை மீறிய விதி...இது ஏன்?


இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது. ஏதாவது ஒரு லாஜிக் வேண்டுமே.. தர்க்க ரீதியான காரணம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ நம் மனதிற்கு தேவையாக இருக்கிறது. நம்மை, நம் வாழ்வை ஒழுங்குபடுத்த இந்த காரணங்கள் உதவுமா?

இந்த துக்கநிகழ்வில் கலந்து கொண்டு இருக்கையில் கண்முன்னே நடந்த இன்னோர் விபத்து இன்னும் பல கேள்விகளை எழுப்பியது......






Sunday, February 17, 2013

விபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை

விபாஸ்ஸனா என்றால் என்ன ?

விபாஸ்ஸனா என்பதில் ஒரு ஒழுக்கமான வாழ்வை வாழ்வது மொத்தமும் அடங்கும். இதை எந்த மதம், எந்த இனம், எதிர்க்கக்கூடும் ? இப்படிப்பட்ட ஒழுக்கமான வாழ்வை வாழ உங்களுக்குத் தேவை வலிமையான மனம்.. இதற்கு யார் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்.?

உங்கள் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதன் விளைவாய் ஒழுக்கம், மன ஒருமைப்பாடு, தூய்மையாக்கும் ஞானம், தெள்ளறிவு இவை நம்மிடம் வந்தடைய வேண்டும். மனதளவில் ஆரோக்கியமானவராகவும், அமைதியான, சலனமின்றி மனநிலை அமைந்து இருக்க,  பழக வேண்டியது விபாஸ்ஸனா தியான முறை..
 

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த முகாம் இருக்கின்ற குறையை நீக்கி, தென் தமிழகத்தில் மதுரை அருகே திண்டுக்கல் செட்டியபட்டியில் அமைந்துள்ள விபாஸ்ஸனா தியான முகாமை ஆர்வமுடையவர்கள் பயன்படுத்திக் கொள்வீர்க்ளாக :)

வருடம் முழுவதும் நிகழ்ச்சி அட்டவணை இருக்கிறது. வசதியான நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இணையம், பேச்சு எதுவும் இல்லாத  10 நாட்கள் அடிப்படை தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனம் என்பது என்ன? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை வெறும் வார்த்தை ஜாலங்கள் இன்றி அனுபவமாக உணருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள் :)

இருப்பிடம், நிகழ்வுகள் குறித்த அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய இதை சொடுக்கவும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய இதைச் சொடுக்கவும்.

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, January 29, 2013

ஜெயதேவ் தனக்குத்தானே வச்சுக்கிட்ட ஆப்பு

நண்பர் ஜெயதேவ் இடுகையை அவரது அறிவியல் சார்ந்த இடுகைகளுக்காக படிப்பேன்., நேற்றைய இடுகையில் சில அடிப்படைகள் தவறு என நினைத்ததால் என் ஆட்சேபணையை விரிவாக பொங்கலாக வைக்கிறேன் :)

 இனி சிகப்பு எழுத்தில் இருப்பவை ஜெயதேவ் இடுகையில் வாசித்தது. ஆட்சேபணையான பகுதிகளை மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். எனது கருத்துகள் கருப்பு எழுத்தில் :)

//தனிப்பட்ட முறையில் நாமும் ஒரு ஆன்மீகப் பாதையில் செல்வதால் நாம் செல்லும் வழி தான் உயர்ந்தது மற்றவர்கள் எல்லோரும் போலி என்று நாம் திரித்து கூற முயல்வதாக சில அன்பர்கள் நினைக்கலாம், ஆகையால் ஆத்திக அன்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றுகள் மூலமாகவே நாம் போலிகளைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறோம். //
ஆத்தீக அன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சான்றுகள்னு.. அனைவருக்கும் நான் தான் ரெப்சரண்டேட்டிவ்னு சொல்றத பார்த்தா ஏதாவது தடை போட்டுருவாரோன்னு பயந்துகிட்டேதான் எழுதறேன்:)

//தன்னையுணர்ந்த ஒரு குருவிடம் சரணடைந்து அவரை வழிகாட்டியாக ஏற்பது தான் ஆன்மீகத்தின் அறிச்சுவடியாகும். நாம் இந்த முடிவை பகவத் கீதையின் படி எட்டியுள்ளோம். //இந்த கண்ணாடியப் போட்டுட்டு பார்த்தா அப்படித்தானே தெரியும். நீங்க போலிகளா சொன்ன அத்தனை பேரும் பகவத் கீதையின் வழியே வாழ்றவங்களா? கீதய சொல்றதுக்கும், கீதையின்படி வாழ்றதுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு.

//அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி சரணடைந்து நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும். இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும். //

இங்கே ஒருத்தருக்கு குரு இருக்கணும்னுதானே சொல்லி இருக்கீங்க ..இங்க எங்க நீங்க பலதடவ சொல்ற குரு பரம்பரை வருது.?

//யார் வேண்டுமானாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆதாரம் என்ன? //இறைவன் எப்போது, எங்கே தோன்றுவான், அவன் என்னென்ன பணிகளைச் செய்வான் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்னரே கூறுகிறது. அதன்படி, பூமியில் 5000 வருடங்களுக்கு முன்னர் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் தான் வந்த வேலை முடிந்ததும் தனது லோகமான கோலோக விருந்தாவனத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய அடுத்த அவதாரம் புத்தர். அவருக்குப் பின்னர் கல்கி கலியுகத்தின் இறுதியில் தோன்றுவார். கலியுகம் 4,32,000 வருடங்கள், அதில் 5000 வருடங்கள் முடிந்துள்ளன, இன்னமும் மீதமுள்ள 4,27,000 வருடங்கள் முடிந்த பின்னரே கல்கி தோன்றுவார். //

இந்த கணக்கெல்லாம் நான் எப்பவோ படிச்சதுதான். கடந்து போய்விடுவேன். இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? (நீங்க கேட்ட கேள்விதான்: ) கிருஷ்ணர் என்னிக்கு பூமியில் பிறந்தாரோ அப்பவே மனுசந்தான் :) அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் கடவுளா அவரை கொண்டாட வச்சுது.

//3. கடவுளுக்கு வடிவம் கிடையாது, பிரம்மம் என்ற ஒன்று இருக்கு, அதற்க்கு எந்தப் பண்பும் கிடையாது, நாம் முக்தியடைந்தால் அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, பிரம்மமும் நாமும் ஒன்றோடு ஒன்றாக ஆகிவிடுவோம், என்பவர்கள் போலிகள்:// நானோ, நீயோ இங்கே கூடியுள்ள அரசர்களோ யாரும் இல்லாமல் இருந்த ஒரு காலம் இதுவரை இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போகப் போவதுமில்லை.//ஆங்கிலத்தில் I [நான்-I st Person], You [நீ-அர்ஜுனன் IInd Person], they [அவர்கள்-அரசர்கள் Third Person], என்று மூன்று நிலைகளிலும் கடந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் நாம் இருப்போம், ஒருபோதும் இல்லாமல் போக மாட்டோம் என்று பகவான் கூறுகிறார்.//

இதப்படிச்ச உடன் கொஞ்சம் கூட புரியாம நீங்க எழுதுனதான் அடுத்த வரிகள் \\இதை படித்த பின்னர் கூட எந்த முட்டாளாவது கடவுளுடன் ஐக்கியமாய் போவோம் என்று போதிப்பானா? அவ்வாறு போதிப்பவன் போலி.\\ 
கட்டுரையின் உச்சபட்ச தடுமாற்றம் இதுதான் ஜெயதேவ்..:)

பிரம்மம் தனி, நான் தனி, அதனோடு முக்தி அடைந்து ஐக்கியமாகி விடுவோம்னு சொன்னது தவறுன்னா என்ன அர்த்தம்னா.. பிரம்மமும் நீயும் வேறவேறன்னு சொல்லாத எல்லாமே ஒன்னுதான்.. அதுதான் அப்பவும் இருந்துது, இப்பவும் இருக்குது. இனியும் இருக்கும் அத்தனையையும் ஒன்றாகப்பார்க்கிற விசயத்தை புரிஞ்சிக்கிறத விட்டுட்டு, புரிஞ்சுக்க முடியாம திணறகிற அவங்கள போலின்னு சொல்றதும், முட்டள்னு சொல்றதும் எப்படி சரியாகும்?.. இது வக்கிரம்தான் :)


4. போகும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பவன் போலி: பலபேருக்கும் மருத்துவரே கடவுளாகத் தெரிகையில் வைத்தியம் பார்ப்பவன் குரு அல்ல என்ற முடிவு சிரிப்புதான் வருகிறது. தேவையானவர்களுக்குத் தேவையானதைத் தருபவர்தான் உண்மையான குரு. ஒருவன் ஞானத்தெளிவடைய தடையாய் இருக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை உடைத்தெறியும் ஆற்றல் குருவுக்கு இருக்கும். உடல்நலத்தைத் எல்லோருக்கும் வாரிவழங்கும் மந்திரவாதி அல்ல அவர். ஆன்மீகப்பாதையில் தீவிரமாய் பயணிக்கும் ஒருவனது உடல்நிலை பாதிப்பை அதன் வேரை  அடையாளம் கண்டு ஒரு கையசைப்பில் அல்லது ஒரு வார்த்தையில் பக்தனது மனதில் அடிஆழம் வரை ஊடுருவி திருப்பத்தை உண்டு பண்ணும் நிலையை நீங்கள் சாதரண வைத்திய முறையாக பார்ப்பது வாசிப்பனுபவம் மட்டுமே உங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. (இப்படிப்பட்ட குரு இங்கொன்றும் அங்கொன்றுமாக தேவைக்கேற்ப தோன்றுவார்கள். இதில் பரம்பரைக்கெல்லாம் வேலை கிடையாது )

//, அங்கே போகிறவர்களுக்கு கையை தூக்கு, காலைத் தூக்கு, நெற்றியில் விரலால் அமுக்கு என்று வைத்தியம் பார்ப்பவராக இருக்கக் கூடாது. வைத்தியம் பார்ப்பது தவறல்ல, வைத்தியத்தைப் பார்க்க நிறைய மருத்துவ மனைகள் இருக்கின்றன. ஆன்மீகவாதி ஆன்மாவைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும், அழிந்து போகும் உடலை அல்ல.//

ஆன்மாவைக் காப்பாத்தினா மனுசனுக்கு என்ன பிரயோசனம்னு தெரியல..உடம்புங்கிறது என்ன? உயிர்னா என்ன ? மனசுன்னா என்ன? இதெல்லாம் தாண்டி ஆன்மான்னா என்ன இதுகளுக்கெல்லாம் இருக்கிற இணைப்பு என்ன? . உடம்ப நோய் இல்லாம காப்பத்தறதுக்கு சொல்ற எதுவுமே ஆன்மீகத்தான். அது ஆன்மாவுக்கு நாம செய்ற உபகாரம். அதச் சொல்லித்தர்றவன் குருதான். ஆன்மா அப்படின்னு ஒன்னு இருந்தா அதுஎங்க இருக்கும் உடம்பில் உயிர் ஓடிட்டு இருக்கற வரைக்கும் தானே..இதுக்கு மருத்துவ அடிப்படையப் பத்தி பேசணும். வேணாம் விட்டர்றேன் :)

5. மேஜிக் வித்தைகளைச் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல: ஆனா இன்னிக்கு தமிழ்நாட்டுல சென்னைக்கு கிருஷ்ணாநீர் வர்றது இந்த மனுசனாலதான்யா சாத்தியமாச்சு.. இந்த ஒன்னுக்காக சாய்பாபாவ தாராளமா கடவுள்னு சொல்லலாமே.....குருன்னும் சொல்லலாமே

//திருவண்ணாமலை 'கு'மணன் [குமனாஷ்ரமம் புகழ்..]- [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை. செத்த பின்னர் ஆஷ்ரம சொத்துக்கள் தம்பி மகனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிய பற்றற்றவர். ] \\
ஏன் தன்னோட பரம்பரைக்கு போகனும்னு செஞ்சதா வச்சுக்குங்க.. பொருளை எப்படி கையாளனுமோ அப்படித்தான் கையாளனும். நான் யார்னு யோசின்னு ஞானப்பாதைக்கான வாசலை சமீபகாலத்துல எளிமையாச் சுட்டிக் காட்டியவர்தானே ரமணர். இவரையா போலிங்கறீங்க :)

வடலூர் காரர் [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

இவருக்கு என்ன குறைச்சல் கிருஷ்ணர கும்பிட்டு இருக்கனுமோ.. உருவ வழிபாட்டின் அடிப்படையை மக்கள் மறந்து சடங்காக மாற்றியபோது ஜோதி வழிபாட்டின் மூலம் அதை உலகுக்கு உணர்த்தியவர். உயிர்க் கொலையை தவிர்க்க வலியுறுத்தின இவரு போலியா... :)

செக்ஸ் பண்ணிகிட்டே கடவுள்கிட்ட போகச் சொன்ன சீஷோ [ஈனம் மானம் எதுவுமே இல்லாத மோசடிப் பேர்வழி ]

பேரச் சொல்லி எழுதக்கூட தைரியமில்லாத நீங்க ஈனத்தைப் பத்தியும், மானத்தைப் பத்தியும் பேசறது எனக்கே வெட்கமா இருக்கு:).. செக்ஸ்னா என்னென்னு தெரியனும் வெறுமனே உடல் உறவு மட்டுமே செக்ஸ்னு நினைக்கிற பொதுமனப்பான்மையும், கடவுள்னா விழிப்புணர்வுதான்னு புரிஞ்சு அதை அனுபவிக்காத தன்மை., இதையெல்லாம் மாற்ற பாடுபட்டவர் ஓசோ. இதெல்லாம் சும்மா நாலு வார்த்தைல எழுதற விசயமல்ல. சும்மா அடிச்சு விடாதீங்க ஜெயதேவ்..

//அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, அவருடைய ஹம்சா குரு [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு உண்டு, ஆனால் அந்த குருவுக்கு வேறு யாரும் குரு இல்லை, அதாவது குரு பரம்பரை இல்லை ] //
சகோதர சகோதரிகளே என்ற ஒற்றை வார்த்தைல இந்தியாவின், தமிழகத்தின் பாரம்பரியத்த வெளி உலகிற்கு புரியவைத்த நல்ல மனுசன் இவரு..ஒற்றை வார்த்தையில் உலகை கட்டிப்போட்டவன் தெரிஞ்சவர்தான் குரு. இவ்ரைப் போலி என்றால் ...:)

//பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன் [கையைத் தூக்கு காலைத் தூக்கு, மூக்கை அமுக்கு, மூச்சை இழு, விடு அதுதான் ஆன்மிகம் என்றவர்,//
வாழுங்கலை ரவிசங்கர் மூச்சை அடிப்படையா வச்சு தன்னோட பயிற்சிய வடிவமைச்சிருக்காரு. மூச்சுக்கும் உடம்புக்கும் மனசுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள சம்பந்தம் என்னங்கிறது அனுபவிச்சவங்களுத்தான் தெரியும் ஜெயதேவ் இந்த உண்மை தெரியாத நீங்க இவர போலிங்கிறதுல ஆச்சரியமில்லை உடம்ப மருத்துவமனைக்கு கொண்டு போய் சித்திரவதைப்படுத்தாம இருக்க மூச்சுதான் முக்கியம். அதுதான் சாதி மதம் நாடுன்னு எதுக்குள்ளும் சிக்காத பொது சமாச்சாரம் எனக்குத் தெரிஞ்சு மூச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்றது இவரு ஒருத்தருதான். இவரு சகசமா அரசியல் பிரச்சினைகளுக்கு கருத்து சொல்வாரு. அது தப்பா…

//எல்லோரும் கடவுள் என்னும் போலி, நச்சுப் பாம்பு தற்போது ரஞ்சிதானந்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவரோட குரு அமேரிக்கா புண்ணிய பூமின்னு அங்கே போய் செத்து பின்னர் பிணம் 20 நாள் னாராம இருந்ததாக சான்றிதழ் பெற்றவர். பயோகிராபி எழுதியவர் ]உடல் நாறமா இருக்கிறதோட அருமை அத மதிக்கிறவங்களுத்தான் தெரியும். சான்றிதழ் வாங்கிட்டது சாதிச்சதுனாலதானே :)

இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ் [பயங்கரமான கிரிமினல், பாலியல் ரீதியாக தண்டனை பெற்றவர் ]
இந்த ஆளுவேணா பாலியல் ரீதியான சில பயிற்சிகளை செய்து விந்து நீண்டநேரம் வெளிப்படாமல் செய்தார். இதுவும் ஆன்மீகத்தின் ஒரு அங்கம் தான், என்ன சரியான வழில பயன்படுத்தாம பொம்பளைய மடக்கிறதுல பயன்படுத்தினதால தப்பான மனுசனாயிட்டான். இந்தஆள் போலிதான்:)

ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளியதில் குற்றம் சாட்டப் பட்டுள்ள காஞ்சிபுரத்தான் [பாலியல் ரீதியாக எழுத்தாளரால் குற்றம் சாட்டப் பட்டவர் ] இந்த ஆள் நீங்க வலியுறுத்தறா மாதிரி குருபரம்பரையைச் சேர்ந்தவர்தான், எனக்குப்பிடிச்ச குருபரம்பரை இல்லைன்னு நீங்க சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை. லட்சணம் என்னென்னு நீங்களே பரர்த்துகுங்க., மனிசனா பொறந்தா செக்ஸ் இல்லாம இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை சாத்தியமில்லை. இவரும் அதுல சிக்கிட்டாரு..அதுக்காக போலிங்கிறது ரொம்ப ஓவரு :) ....மனுசன்னு சொல்லுங்கஒத்துக்கிறேன்.

//கமலஹாசனின் வசூல்ராஜா புகழ் கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி//
ஒரு பொம்ப்ள எல்லோரையும் கட்டிப்பிடிகிறான்னா அதுல ஒரே செய்தி மட்டும்தான்., என் அன்பை வெளிப்படுத்துகிறேன்,. அவ்வளவுதான்.. அன்பு ஒன்னுக்குத்தான் உலகமே அடிமை… எங்கே 1000 ஆம்பிளைகளை நீங்க கட்டிப்பிடிச்சு காமிங்க பார்ப்போம்.... அதனால்தான் அங்கே பணம் குவியுது, அன்பால நெகிழ்ந்தவர்கள் தருகிற நன்கொடைகளினால்...இந்தம்மாவை போலின்னா அன்பு பத்திக்கூட புரிதல் உங்களுக்கு இல்லையோன்னு சந்தேகப்படறேன் .:)
//நம்மை கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன்[குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், எல்லோரும் கடவுள் என்பவர். இவரது பக்தர்கள் இவரை கடவுள் என்று சொன்னாலும் நடவடிக்கை எடுக்காதவர்]

செக்ஸ் நாட்டம் அதிகமாகாத வரைக்கும் மத்ததுல கவனம் இருக்கும். அதிகமாச்சு, வாய்ப்பும் அமைஞ்சது., பயன்படுத்திக்கிட்டாரு மனுசன். ரஞ்சிதா சம்மதத்தோடதானே எல்லாமே நடந்துச்சு.. பேச்சு ஒன்னு, செயல் ஒன்னுங்கிற குறைதான் இவருகிட்ட தப்பு ..இவரு உண்மையா இருந்து போலியா மாறிட்டாரு

//செவ்வாடைத் தொண்டர்களை கொண்ட கீழ்மருவத்தூர்க்காரன் [முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி, ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்தவர், அதற்க்கு தனது பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை காவலுக்கு போட்டிருப்பவர் ]

இங்க பக்கத்து ஊருதான், இந்த ஆள் செஞ்சது ஒன்னெ ஒன்னுதான் பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு பூசைகள் செய்யலாம். சமூகத்தில் ஆன்மீகத்தில் பக்தி வழிபாட்டில் கருவறைக்குள் பெண்களை அனுமதிக்காதன் அம்சத்தை ஆராயாமல்.மேலோட்டமாக நடத்திய புரட்சிதான் கிளிக் ஆகி இன்னிக்கு இந்த ரேஞ்ச்..இதில எங்க இவரு போலி.. வெளிப்படையாத்தான் இருக்காரு மனுசன்..பின்னால போற மக்கள்தான் பாவம்:)

//நாலு லட்சம் வருஷத்துக்கு ஆப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .....[இவர்கள் கல்கி அல்ல, தாங்கள் அவரதாரம் என்கிறார்கள். கல்கி ஒருத்தார் மட்டுமே அதுவும் ஆண் எப்படி புருஷன், பெண்டாட்டி இருவரும் கல்கியாக இருக்க முடியும்? அதுவும் 4,27,000 வருடங்கள் கழிந்த பின்னரே வர முடியும், இதுவும் ஒரு கற்பனைதான். இதய உல்டா பண்ணித்தானே இந்தகுருப் காலம் தள்ளுது. இந்த போலிக்கு மூலகாரணமே கல்கி மேட்டர்தான்.

முரளீதரன் [ரொம்ப மோசமானவர் இல்லை, ஆனால் தலப்பாக்கட்டு போன்றவர்களை மேற்கோள் காட்டுவதால் இவருக்கு விஷயம் தெரியவில்லை] இவர யாரும் கடவுள்னும் சொல்லலை, குருன்னும் சொல்லலை. அப்புறம் ஏன் கோபம். ஆமா இவரு மேல என்ன பாசம் :)

ககி சவம் [அனுபவத்தை வைத்து புருடா விட்டுக் கொண்டு திரிபவர், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர்]
 

இவர் தன்னம்பிக்கை சார்ந்த விசயங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறவர். சில விசயங்களை வித்தியாசமா சொல்லி, பார்த்து, உண்மை தெரியும்னு சொல்லி தொழில் முறை பேச்சாளரா இருக்கிறாரு, இவர ஏன் போலின்னு சொல்றீங்க :) பாவம் விட்டுருங்க :))

//வேலூர் தங்கக் கோவில் காரர் [தான்தோன்றி சாமியார், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர், தத்துவ ரீதியாக போலி, போலியோ போலி......] //

இவரு திடீர் சாமி.. எவரோட பணமோ இவருகிட்ட விளையாடுது.. சுற்றுலாத்தளம் மாதிரி ஒரு கோவில் டில்லில அக்சார்தம் மாதிரி தென்னகத்தில் ஒரு கோவில் கட்டிய சாதனைக்கு பினாமி சொந்தக்காரர்தான்,, இதுல எங்க போலி வந்துது. டம்மின்னு சொல்லுங்க ஒத்துக்கலாம். போலிங்கிறதுக்கு அர்த்தமே வேற.. மேலும் கோவிலோட பிரபலம் இந்த சாமிக்கு இல்லவே இல்லை.

ஈசா கிழவர் [மொக்கைச் சாமியார், எந்த அடிப்படையும் இல்லாதவர், வேணுமின்னா மரம் நடட்டும், வேறு எதற்கும் பிரயோசனமில்லாதவர்] இந்த ஆள் மொக்கைதான்.,ஓசோவையும் நடப்பு ஆன்மிகத்தையும் கலந்து அடிக்கிறாரு. வாஸ்தவம்தான். என்ன பண்றது ருசியான பிரியாணியா இருக்கிறதுனால கூட்டம் அம்முது:) அதுக்காக போலிங்க வேண்டியதில்லை. விசயம் கம்மின்னு சொன்னா ஒத்துக்கிறேன் :) ஒரு தடவ ஈசா போயிப் பாருங்க..இந்த மொக்கை எம்புட்டு செலவு செஞ்சிருக்கின்னு...

கேரளாவின் ஐயோ..... அப்பா.......... [சாஸ்திரத்தில் சொல்லப் படாத வழிபாட்டு முறை]. எத்தனையோ அக்கிரமங்களை நம்ம மனுச சாமிகள் பண்ணினாலும் ஒரு முறை அந்த பெருவழில கூட்டமில்லாத மழை நாட்கள்ல போய்ட்டு வந்து அனுபவத்து சொல்லுங்க.. போறதுக்கு ஒரு காரணம் அய்யப்பன். அவர ஏன் போலிங்கிறீங்க.. அவரு பேரச் சொல்லி திரியற நம்மாளுங்களைச் சொல்லுங்க.. கொஞ்சம் நிசம் இருக்கும்.

முடிவா குரு பரம்பரை அவசியம் வேணும்கிற ஜெயதேவ் வாதம் கிணற்றுத் தவளையின் பார்வை மட்டுமே. ஆன்மீகம் குறித்தான விரிவான பார்வை இன்றி வெறுமனே விமர்சிக்கிற தன்மையை ஆட்சேபித்து எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்த விளக்கம் இணைய நண்பர்களுக்கு நேர்எதிர்கருத்தையும் படிக்கிற வாய்ப்பைத் தரும் என்பதற்காகவே பதிகிறேன்.

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

Saturday, January 26, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில் சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும் குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939

View Larger Map கிளிக் பண்ணுங்க..

விழா நாளை காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.



நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233

Tuesday, January 22, 2013

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா - திருப்பூர்

திருப்பூர் வந்தோரை வாழவைக்கும் நகரம். பனியன் தொழில் ஏற்றுமதித்துறையில் சாதித்துக்கொண்டிருந்த நகரம். சினிமாத்துறைக்கு ஈடாக பல்வேறு உபதொழில்களை தன்னகத்தே கொண்டு பலரையும் உயரவைக்கும் நகரம்.

சிலரை குப்புறத் தள்ளியும் வேடிக்கை பார்த்திருக்கும். அது நகரத்தின் குற்றமல்ல.. வீழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் சங்கதிகளை ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியும்.

முயல் போன்ற ஓட்டம் இங்கே வேலைக்கு ஆகாது. குதிரை போன்று ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மை., பொறுமையிலும் பொறுமை என்பதெல்லாம் இத்தொழில் செய்வோருக்கும் இருக்க வேண்டிய அடிப்படைக்குணங்கள்.

வடமாநிலங்களில் இருந்து வந்து உழைக்கத் தயாராக இருப்பவர்கள் கூட எனக்கு இன்ன சம்பளம் வேண்டும் கேட்டு வாங்கும் நிலை இங்கே உண்டு. கொடுப்பதை வாங்கிக்கொள் என்கிற அடிமைத்தனம் இங்கே அறவே இல்லை. அதேசமயம் உழைப்பதிலும், புத்திக்கூர்மையிலும் நுட்பங்கள் அவசியம் தேவை என்பதே இங்கே முன்னேற ஆசைப்படுபவர்களின் அடிப்படைத் தகுதி.

அப்படி தனது உழைப்பால் இன்று குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கும் திருப்பூர் நண்பர் ஜோதிஜி அவர்கள்  அனுபவத்தை ஆர்வமுள்ளவர்களுக்கு  பயன் தரும் விதத்தில் 4தமிழ்மீடியா நிறுவனம் நூலாக பதிப்பித்திருக்கிறார்கள்.



விழாவிற்கு  26 ம் தேதி திருப்பூர் வருபவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். தங்குமிடம் பற்றிய விவரங்கள் தருகிறேன். என் அலைபேசி எண் 9790036233

 விழாவில் கலந்து கொள்வதில் சிரமம் இருப்பவர்களுக்கு டாலர்நகரம் புத்தகம் திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் கிடைக்கும்


Monday, January 14, 2013

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!

கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கறது தான்.

 எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும்.

சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.

 இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.

இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

ஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.

மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஆயூர்வேத கல்லூரி டீன், ஆயுர்வேத டாக்டர் சுவாமிநாதன் தினமலர் 13/01/2013 நாளிதழில் சொல்லியது நன்றியுடன்

Saturday, January 12, 2013

"நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' வேண்டாம்!

சென்னை, அறிஞர் அண்ணா மருத்துவமனையின் இயற்கை நல மருத்துவ பேராசிரியர் ஹிமேஷ்வரி:

 நல்ல உடம்பு, தெளிவான மனசு இரண்டும் இல்லாமல், ஒருத்தரால், தான் நினைச்சதை அடையவே முடியாது.உங்க உடம்புக்கு, என்ன நேரத்தில், என்ன செய்யணும்னு, "செல்'களுக்கு நல்லா தெரியும். கண்ணுல தூசி விழுந்தா, கண்ணை, "டேமேஜ்' பண்ணாம, அந்த தூசியை வெளியே தள்ள, உங்களுக்கு தெரியாது. ஆனா குறிப்பிட்ட செல்கள், கண்ணீர் மூலமா வெளியே கொண்டு வந்துடும். இப்படி பார்த்துப் பார்த்து, பல வேலைகளை செய்ற செல்களோட அறிவுத் திறன், செயல் திறன் மழுங்கிப் போகும் போது தான், நோய்கள் அதிரடியா நம்மை தாக்குது.நம்மகிட்டே, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' அதிகரிக்க அதிகரிக்க, நம் செல்களோட செயல்திறன் குறையத் தொடங்குது.168 விதமான, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' நம்ம மனசை பாதிக்குது. அதுல ஒண்ணோ, ஒண்ணுக்கு மேற்பட்டோ, நம்மைத் தாக்க ஆரம்பிச்சாலே போதும்... நம்ம உடம்புக்கு நோய் வந்துடும்.

நமக்கு பசி வந்தா, உடனே நம் அறிவு,"சாப்பிடு'ன்னு சொல்லுது. அந்த நேரம் பார்த்து, கவலையான ஒரு நியூஸ் வருதுன்னு வச்சிக்கலாம்; சாப்பிடாம விட்டுருவோம். கவலைப்பட்டதால், அறிவு வேலை செய்ய மறுத்து, உடலோட தேவையை செய்ய விடாம பண்ணிருது.ஒரு மருத்துவரோட முதல் கடமை, மனசை சரிபண்றது தான். துரதிஷ்டவசமா, வணிக நோக்கில் இன்னிக்கு, நோயாளியை அமைதிப்படுத்தறதுக்கு பதிலா, பயமுறுத்துதல் அதிகமாயிட்டுப் போகுது. பயம் இல்லாம யாரெல்லாம் இருக்காங்களோ, அவங்களுக்கு, நோய் சீக்கிரம் குணமாயிடும். மனசை ரிலாக்ஸ் பண்ண சில பயிற்சிகள் இருக்கு."இந்த நோய் குணமாகட்டும்'ன்னு, நம்ம இம்யூன் சிஸ்டத்திற்கு, அப்பப்ப சில, "கமாண்ட்' கொடுக்கலாம். நம்மை அமைதிப்படுத்தும் வழிபாடுகள், தானம் செய்வது, பிறருக்கு உதவுவது எல்லாம், நம்ம மனசை சந்தோஷப்படுத்தி, நோய்கள் இன்றி இருக்க தான்

நன்றி : தினமலர்


Tuesday, January 8, 2013

ஆண்கள் சந்தர்ப்பவாதிகளே....

பனியன் தொழில் நிறுவனத்தில் அன்றாடம் தொழிலாளர்கள் மாறுவது மிகச் சாதாரணம். சுமார் ஒரு வாரம் இரண்டு வாரத்திற்குள் அலைவரிசை ஒத்துவரக்கூடியவர்கள்  மனம் ஒத்து தங்களுக்குள் (பால்) உறவை ஏற்படுத்திக்கொள்வது சாதரண விசயம்தான். இதனால். யாருக்கும் நட்டமில்லை.  இங்கே கற்பு என்பதெல்லாம் கக்கூஸ் என்ற் அகராதியில் இல்லாத வார்த்தை போலத்தான் :)

சரி இப்படி இணையக்கூடியவர்களில்  ஒரு கட்டத்தில் சலித்து, இன்னபிற காரணங்களினால் அப் பெண்விலகும்போது இவனும்  புரிதல் உள்ளவனானால் விலகிவிடுவான். அல்லது தவறானவன் எனில் இவனது மிரட்டல் ஆரம்பமாகும். இன்னும் சிக்கலாகும்போது நண்பர்களுக்கு விருந்தாக வேண்டிய அவசியமும் ஏற்படும். இந்த சூழ்நிலைகளும் தனித்தனியாக நடந்தால் பிரச்சினை இல்லை. இங்கே கூட்டணி குழப்பம் வரும்போது பெண்மீதான தாக்குதல் நடைபெறும்.

இது ஓரளவு நடுத்தர வயதுபெண்களாக இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை . இப்படித்தான் திருப்பூரில் நடுத்தர வயதுப்பெண் மதியவேளையில் , நகரத்தில் முக்கிய இடத்தில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் ஆடைகளின்றி தாக்கப்பட்டு மயங்கிக்கிடக்க அது பெட்டிச் செய்தியானது. அத்தோடு மறக்கப்பட்டது.

இதை இங்கே குறிப்பிடவேண்டிய அவசியம் ஆணின் தவறுகளை நியாயப்படுத்துவது அல்ல.. ஆண் தவறு செய்ய பெண் எந்த அளவு இடம் கொடுக்கிறாள் என்பதை கவனத்தில் வைக்கத்தான் ...

ஆண் எப்போதுமே சந்தர்ப்பவாதிதான்....அவனுள் இருக்கும் பரம்பரை மிருககுணம்தான்.. இது ஆண்கள் எல்லோருக்கும் ஜீனின் வழிவந்த குணம்.  ஆண் பெண்ணோடு உறவுக்கு விரும்புவது என்பது உயிரினம் அழியாமல் இருக்க இயற்கை செய்திருக்கிற ஏற்பாடு.. இதில் குடும்ப அமைப்பு என்பதுவும் சந்ததி பெருக்க நடவடிக்கைதான். ஆனால் சந்ததி பெருக்கத்திற்கு மட்டுமின்றி சுகத்துக்கென பாலுறவை ஏற்படுத்திக்கொள்வதில் முதலிடம் மனிதனுக்கு மட்டும்தான்.

டெல்லி விசயத்தில் உடை ஒரு காரணமாக இல்லாதபோதும், எவனோட சுற்றுகிறாள் என்ற் அம்சமே முன்னிலையில்....இங்கே சரி எது தவறு எது நான் ஆராயவில்லை. சூழ்நிலைகளை உருவாக்கியதில் அப்பெண்ணின் பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். இத்தாக்குதலில் சம்பந்தபடட் ஆண்களுக்கு தண்டனை அவர்களின் உறுப்பு சார்ந்ததாகவே இருக்க வேண்டும். இது அவர்களுக்கான் தண்டனை. சில வருடங்கள் கழித்தேனும் தூக்கில் இடலாம். இது மற்றவர்களுக்கு எச்சரிக்கைக்காக....இரவு நேர ஊர்சுற்றல் எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது . அதனால்  உடை கட்டுபாடு இரவு நேரச் சுற்றல்களை தவிர்த்தால் நன்மை பெண்குலத்துக்குத்தான்..

 பெண்ணைக்கண்டால் ஆண் ஈர்க்கப்படுவது இயல்புதான். இதுதான் பிள்ளையார் சுழி.. மேலும் ஈர்க்கப்படுகிற வாய்ப்பை ஆணுக்கு ஏற்படுத்தித் தரவேண்டாம் என்பதே வேண்டுகோளாய் பெண்களிடத்தில் வைப்பது.

அதைவிட்டுவிட்டு பெண் சுதந்திரத்தில் குறுக்கிடாதே.. ஆடை உடுப்பது அவர்கள் விருப்பம். நீ திருந்து என்றால் என்ன லாஜிக்னு தெரியல.. அடுத்தவரை திருந்து என்று சொல்வதை எளிது. ஆனால் ஒரு பைசா பிரயோசனம் இல்லை. நடக்காத விசயம். ஆனால் தான் திருந்துவது எளிது.
என் வீடு நான் என் விருப்பப்படி (முதுகுல) தான் கதவு ஜன்னல் வைப்பேன். திறந்தும்கூட இருக்கும். நீ என்ன ......க்கு திரும்பிப்பார்க்கிற திருந்து.. திறந்து வச்சிருந்தா உள்ள வந்திருவையா .. இப்படி பெண் பேசினால் அடிபட்டாத்தான் திருந்துவீங்க என்றும் ஒதுங்க வேண்டியதுதான்..

ஒருவேளை பெண்களுக்காக ஆண் பரிந்து பேசினால் கொஞ்சம் நஞ்சம் சைட்டு அடிச்சிட்டு இருக்கிறோம். அது பொறுக்கலையா என்றும் கேட்பதாகவும் எடுத்துக்கொள்கிறேன். :)))))))))))

மற்ற நாடுகளின் சூழல் எனக்குத் தெரியாது. அதனால் இந்தியச் சூழலில். குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் தன்மையான பார்வை அல்ல இது. பாதிக்கப்படுபவர் யாரோ அவருக்கு இந்த எச்சரிக்கை.

திருடனுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்காதே என்றால் அதைச் செய்யாமல் திருடன் திருந்தவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு என்னைப் பொருத்தவரை அநியாயம்தான் :)

 பாலியல் சம்பவங்களில் உடல்ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே..
படித்தால் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் சற்று பொறுமையாக யோசித்தால் பெண் இடம் கொடுக்காமல் இது நடந்திருக்காது என்பது புரியும் :(

எனவே பெண்கள் பொது இடங்களில் நடத்தையிலும், உடை ஒழுக்கம் காப்பதுவும் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். தன் உடலை காட்சிப்பொருளாக சற்று நாகரீகமாக காட்டுவது என்பது தான் தற்போதய நவீன உடைக் கலாச்சாரம்.  பெண்கள் இவற்றிலெல்லாம்  தெளிவாக இருந்துவிட்டு, அதன் பின் ஆண்களைத் திருந்தச் சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.

கோவியாரின் இடுகையைப் படித்தவுடன் ஜிந்திச்சது :)

Wednesday, December 19, 2012

பயனற்றதைப் பேசாதே...ஓஷோ

குழந்தையாய் இருக்கையில் மனம் என்ற ஒன்று தர்க்கங்கள் இன்றி இருக்கும். வளர வளர நமது வாழ்க்கைமுறை, கல்வி, சமுதாயச் சூழ்நிலைகள் மனதிற்கு நிறைய சேகரிப்புகளைத் தந்து தர்க்கம் சார்ந்த முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொள்ளும். இந்த முடிவுகளின் சேகரிப்புதான் நமது தற்போதய மனம். இப்படிச் சேர்த்தவைகள் நல்லவைகளுக்காக நம்மால் சுயவிருப்பத்துடன் பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் நமது மன உளைச்சலுக்கும் அமைதி இன்மைக்கும் காரணமாகவும் அமைகிறது என்றால் வியப்பாக இருக்கிறதா ?

மனம் எப்போதுமே முன்னும் பின்னும் தாவிக் குதிக்கும், தங்கிக்கிடக்குமே தவிர உரிய கணத்தில் இருப்பதில்லை. அது பயனற்றதைப் பேசிக்கொண்டு இருக்கும். மனம் பேசினால் அது பயனற்ற வார்த்தைகளாக, வெளிப்பட்டு  நம்மை அந்தகணத்தில் இருக்கவிடாமல் செய்துவிடும்.

பயனற்ற பேச்சு, பயனற்ற எண்ணங்களில் மனம் ஓடிக்கொண்டிருக்க எதோ வாழ்கிறோம் என்ற அளவில் வாழலாமே தவிர  வாழ்கையை முழுமையாக வாழ முடியாது:)

கண்ணை மூடி உடல் உணர்வை, சூழலை, ஒலியை கவனிக்க முற்படுங்கள். எவ்வளவு நேரம் முடியும்? சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் கவனிக்க இயலாது. மனம் தாவ ஆரம்பித்துவிடும். இன்னும் என்னென்ன வேலை இருக்கு இப்படி உட்கார்ந்திருக்கே என்றோ., ஆபீஸ், குடும்பம், நட்பு, திரைப்படம் என வெளியேஓடிவிடும். அந்த கணத்தில் நாம் இருக்க உதவி செய்யாது  இந்தமனத்தை சரி செய்ய ஒரே தீர்வு அதை சாட்சி பாவனைக்கு ஆட்படுத்த வேண்டும். அதாவது நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மைக் கவனிக்கப் பழக்க வேண்டும்.

சாட்சி பாவம் என்பது விலகி நின்று கவனித்தல், வருகின்ற எண்ணங்களோடு தவறான அல்லது தர்க்க ரீதியான அபிப்ராயம் ஏதுமின்றி இருத்தல். இதுவே தியானத்தில் நடப்பது.:)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே நின்று கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனிப்பதில் அந்தக் கணங்கள் இருக்கின்றன்.

கவனிக்கும் நுட்பம் வாய்த்தால் நான் என்பது வேறு.. தோன்றுகின்ற எண்ணங்களோ, கவலைகளோ, கருத்துகளோ நான் அல்ல என்பது அனுபவமாகும். இது அவைகளுடனான உங்களின் உறவை செம்மைப்படுத்தும்.

தியானத்தில் நடப்பதை வாழ்க்கையாக்க முடிகிறதா... நீங்களே ஞானி வேறு எங்கும் தேடவேண்டாம் :)

Tuesday, December 11, 2012

திருப்பூர் பதிவர் சந்திப்பு 09/12/2012

வெள்ளிக்கிழமை அன்று இந்தத் தகவலை நண்பர் ஜோதிஜி பகிர்ந்து கொள்ள முதலில் தொடர் வேலைகளினால் அப்புறம் பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். பின்னர் நடக்கிற இடம் உள்ளூரில் என்பதால், கலந்து கொள்வோம் முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள செண்பகம் மக்கள் சந்தை என்கிற டிபார்மெண்டல் ஸ்டோரில் ஆஜராகிவிட்டேன்.

இந்த விழா தொழிற்களம், மக்கள் சந்தை, தமிழ்ச்செடி என்கிற அமைப்புகளின் சார்பில் நடப்பதாக பேனர் தெரிவிக்க சற்று யோசனையோடுதான் இருந்தேன். கடைசியில் MLM வியாபாரமுறையில் கொண்டு நிறுத்தி விடுவார்களோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது. :)

10 மணிக்கு விழா என்ற் உடன் சரியாக விழாவின் சிறப்பு அழைப்பாளார் திரு.சுப்ர பாரதி மணியன் வருகை புரிய இயல்பாக பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதி இருந்தபோதும் இவரை எனக்கு என் தொழிற்கூடத்திற்கு அருகில் தாய்தமிழ்ப் பள்ளி என்ற ஆரம்பப்பள்ளி நடத்திவருபவர் என்ற வகையில் அறிமுகம். ரூபாய் நூறுக்கும் குறைவான மாதக்கட்டணத்தில் மூன்றாம் வகுப்பிற்கு மேல்தான் ஆங்கிலம் என நடுத்தர, மக்களுக்கு இவரது சேவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

இவர் வளர்ந்துவரும் எழுத்தாளர் நா.மணிவண்ணனை பாராட்ட பொருத்தமானவர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஒவ்வொருவராக வர அடுத்த கால்மணிநேரத்தில் அரங்கம் உற்சாகமானது :)

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய கூட்டம் கலந்துரையாடல் போல தொடங்கியது. சுப்ரபாரதி மணியன் பேசும்போது போஸ்ட்மார்டனிசம் என்பதன்படி மையத்தில் இருப்பவர்களுக்காக விளிம்பில் இருப்பவர்கள் எல்லோரும் இயங்க வேண்டி இருக்கிறது. அதுபோல் எழுத்துலகில் சில எழுத்தாளர்கள் ஆட்சி செலுத்தி கொண்டிருந்த போதும், மற்றவர்கள் படிப்பதையும் விமர்சிப்பதையும் தவிர்த்து ஏதும்செய்ய முடியாத சூழலில் புத்தகம் வெளியிட அவசியம் இல்லாது தனது கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்த இணையம் உதவுகிறது, என்றும் இந்த ஒன்றே விளிம்புநிலை வாசகர்களை மையத்தை நோக்கி பயணிக்கச் செய்து இன்றைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. அந்தவிதமாகவே நா.மணிவண்ணனுக்கான பாராட்டும் பொருந்தும் என்றார்.



அடுத்து பதிவர்கள் சுய அறிமுகமாக நிகழ்ச்சி பயணிக்கத் தொடங்கியதும் அதில் மெட்ராஸ் ப்வன் சிவகுமார் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பை ஒட்டி ஜோதிஜியால் மேடைக்கு அழைக்கப்பட்டு பேச ஆரம்பித்தார். தமிழ் வளர்ச்சியில் தமிழரின் பங்காக தமிழன் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வதையும், தமிழை கிண்டல் செய்வதையும் தவிர்த்தால் போதும். தூய தமிழுக்கு மெனக்கெட வேண்டியதில்லை. மேலும் வரும்காலத்திலும் இப்போதும் ஆங்கிலம் இன்றி சம்பாத்தியம் இல்லை என்று சொல்ல. கோவை மு சரளா ஊடாடிய கருத்துகளை தெரிவிக்க இரு தரப்பின் கருத்துகளும் சந்தேகமின்றி பார்வையாளர்களுக்குத் தெளிவானது. இந்த கருத்துப் பரிமாற்றம் ஒரு துளிகூட மோதலோ, கடுமையோ, இன்றி இயல்பாக அமைந்ததை உணர்ந்தேன்.

செண்பகம் மக்கள் சந்தை என்ற டிபார்மெண்டல் ஸ்டோரின் உரிமையாளர் திரு. சீனிவாசன் வந்தவர்களுடன் அன்போடு எந்தவித பந்தாவும் இல்லாமல் இயல்பாகப் பழகினார். நிகழ்வு நடத்த இடத்தையும் வழங்கி, தேநீர் பிஸ்கெட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

கூட்டத்தில் அவரது கடைக்கு வந்த நண்பர் தம்பதியினரை வர வைத்து பேச வைத்தார். அவர் இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் கவிதையும், கதையும் எழுதுவதோடு மற்ற்வர்களுக்கு பயன் தரும் கருத்துகள் எழுத வேண்டினார். இதோடு நான் முரண்பட்டாலும் தெரிவிக்கவில்லை.:)

இணையம் என்கிற பொதுவெளியை தன் திறமையினை வெளிக்கொணரும் இடமாகவே பயனாளர்கள் பயன்படுத்தவேண்டும் என்பதே என் அவா. கவிதையோ, மொக்கையோ நகைச்சுவையோ இயல்பாக வெளிப்படுத்திப் பழகி, மெருகேற்றிக்கொள்ள இணையவெளியை பயன்படுத்தவேண்டும். எல்லோரும் அறிவுரை சொன்னால் இணையம் தாங்காது :) வராததை முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை

மணிவண்ணன் எனக்கு பேச வராது என்று யதார்த்தமாக சொல்லி, தனது எழுத்து சிறுமுயற்சிதானே தவிர இன்னும் வளரவேண்டிய இடத்தில்தான் இருக்கிறது என்றார். இன்னும் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள இந்த பரிசு சுட்டிக்காட்டுகிறது என்றார்.

தமிழ்ச்செடி குறித்து இரவு வானம் சுரேஷ் விவரித்தார். ஜோதிஜி கருத்துகளை இணைத்தும் நிகழ்ச்சியை வ்ழிநடத்த இறுதியில் மணிவண்ணனுக்கு நூல் பரிசளிப்பும், நினைவுப்பரிசும் வழங்கப்பட விழா நிறைவடைந்தது. மொத்தத்தில் கூட்டம் கலந்துரையாடல் போல் அமைந்து இயல்பாக சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடந்த கலந்துரையாடல்,, தேர்ந்த திட்டமிடப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட நிறைவைக்கொடுத்தது.

இந்தக்கூட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விசயங்கள் என்று எதையும் என்னால் குறிப்பிட முடியாத அளவு சிறப்பாக இருந்தது என்றால் மிகையில்லை.

Wednesday, October 31, 2012

உள்ளுற நோக்குதல் - விபாஸ்ஸனா

தீபாவளி பக்கம் வந்துவிட்டது. இன்னும் 10 நாட்களே இருக்கையில் அதற்குப் பின்னதாக வரும் லீவு நாட்களை , மனதில் கொண்டு  ஓட வேண்டி இருக்கிறது.

அன்றாட வாழ்க்கையும், அதை உரசல் இல்லாமல் நகர்த்த பணம் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட பணத்தின் மீது பற்றுதல் இல்லை என மனம் சொன்னாலும் பணத்தின் பின்னால் ஓட வேண்டி இருக்கிறது என்பதே நிதர்சனம்.. இது ஒன்றும் கடினமான பணி அல்ல. சற்றே அயர்ச்சியைத் தரும் பணி அவ்வளவுதான்.

இங்கே அயற்சியை உணர்வது உடல் அல்ல.மனம்தான் :)

இச் சூழ்நிலையில் மனதைப் பயன்படுத்துவதில் வரும் சிக்கல்களுக்கு தீர்வு என்ன. என்று பார்த்தால் மனதிற்கான வடிகாலாக, தற்காலிகமாக கவனத்தை இடமாற்றம் செய்வது......திசைதிருப்புவது மற்றும் கவனஈர்ப்புதான்... ஆடல், பாடல் திரைப்படம், கிண்டல், கேலி இணையம் என மனதை வெளிப்புறமாக திசை திருப்புதல்தான் நடக்கின்றது.

 சில சமயங்களில் இவை தற்காலிக நிம்மதியைக் கொடுத்தாலும் கிண்டலும் கேலியும் இருக்கிற நிம்மதியையும் கெடுத்துவிடுகின்றன.:( இணையத்தில் டிவிட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளே இதற்குச் சாட்சி.

நமக்கென ஒரு மனத்தோற்றத்தை நாம் ஒவ்வொருவரும் வைத்துகொண்டுள்ளோம். நாம் பார்க்க விரும்பும் தோற்றத்தைப் பார்க்கின்றோமே  தவிர நாம் உண்மையைப் பார்ப்பதில்லை.:)  பிறரும் அவ்வாறே பார்க்கவேண்டும் என விரும்புகிறோம். அவ்வாறு இல்லையெனில் புரிதல் இல்லாது பிரச்சினைகள் பெரிதாகின்றன.

நமது வாழ்க்கை முழுவதும் நாம் புறத்தே பார்த்தே பழகிவிட்டோம். வெளியில், நடப்பது என்ன என்பதிலும், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலுமே எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்துவந்திருக்கிறோம்.

நம்மையே. நமது மன உடல் கூட்டமைப்பையே, நமது சொந்த செயல்களையே, நமது சொந்த உண்மையையே நாம்  ஒருபோதும் முழுமையாக ஆய்வு செய்ய முயற்சித்ததே இல்லை.  நாம் நம்மை அறியாமலே இருந்து வருகின்றோம். இந்த அறியாமை எவ்வளவு தீமையானது என்பதை நாம் உணர்ந்தவர்களும் இல்லை.

நம்முள் இருக்கும் மன உந்துதல்களுக்கு நாம் எவ்வளவு அடிமையாக இருந்து வருகின்றோம் என்பதைப் பற்றி அறியாமலும், புரியாமலுமே இருந்து வருகிறோம். உண்மையை புரிந்துகொள்ள இந்த உள்ளிருள் நீக்கப்பட வேண்டும்.

இதற்கான நெறிதான் தன்னையே உற்று நோக்கும்  விபாஸ்ஸனா தியானமுறை.

நம்மையே உற்று நோக்குவதால், நமது மனதை மூடுகின்ற, மறைக்கின்ற நம்மிடமிருந்தே உண்மையை மறைக்கின்ற, துன்பங்களை உண்டாக்குகின்ற சில எதிர்வினைகளையும், தவறான எண்ணங்களையும் பற்றியும் முதன்முதலாக விழிப்புணர்வு கொள்கிறோம். இதெல்லாம் படிக்க நன்றாக இருந்தாலும் செயலில் நாம் இறங்காதவரை விழிப்புணர்வை அனுபவிக்க முடியாது.

மனதிற்கான மருந்து தியானம்தான்,  இந்த தியானம் உலகியலிலிருந்து தப்பித்து வாழும் நிலை என்பதாக சிலர் நினைக்கக்கூடும். ஏனென்றால் தீவிரமாக தியானம் செய்வதாக சில அன்பர்கள் வேறு உலகத்திலே மிதந்து கொண்டிருப்பது போல் மற்றவர்களுக்குத் தோன்றும். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது.,

விபாசனா என்பது உள்ளுற நோக்குதல்., என்பது பொருளாகும். உள்ளுற கவனித்தல் மட்டுமே...வேறு எந்த விளக்கங்களையும் திணித்துக்கொள்ளாமல் செயலில் இருந்தால் மட்டுமே இது அனுபவமாகும். 

விபாசனாவில் நீங்கள் உங்களை உள்ளுற நோக்குதலுக்குரிய சூழலை ஏற்படுத்தித் தருகிறார்கள். அவ்வளவே..

ஆர்வம் இருப்பவர்களுக்காக
பத்துநாள் முகாம் ஒன்றில் பங்கேற்றுப் பாருங்கள்.  கூடுதல் விவரத்திற்கு இங்கே சுட்டுங்கள்.

 கோவை சார்ந்த பகுதியினருக்காக
முகாம் மற்றும் நாட்கள் இடம் தொடர்பு கொள்ள
10-நாள் முகாம் (ஆண்கள் மட்டும்)
29-நவம்பர்-2012 முதல் 10-டிசம்பர்-2012 வரை
உலக அமைதி நிறுவனம் (Universal Peace Foundation),
நல்லகவுண்டம்பாளையம்,
படுவம்பள்ளி,
கருமத்தம்பட்டி-அன்னூர் சாலை,
கோயம்புத்தூர் - 641659.
1. திரு அரவிந்த் வீரராகவன் - 81481 35795
2. திரு பரத் ஷா - 98423 47244
3. திரு சிவாத்மா - 98422 80205


 சென்னையில்

டிசம்பர் 2012 
1)5-16 தேதி வரை
 

2)19-30 தேதி வரை 

 தம்ம சேது விபஸ்ஸனா தியான மையம்,
533, பழந்தண்டலம் சாலை,
(திருநீர்மலை வழி),
திருமுடிவாக்கம்,
சென்னை 600 044.

தொலைபேசி (தரைவழி): +91-44-64504142, +91-44-24780952, +91-44-24780953
முகாம் குறித்த விசாரணைகள் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தொடர்பு எண்கள்: +91-9444462583, +91-9442287592, +91-8148581350, +91-9042632889, +91-8015756339, +91-9940467453

Monday, September 3, 2012

போலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

நண்பர் இக்பால் செல்வத்தின்  தியான சார்ந்த இடுகையில் நான் பின்னூட்டமிட அதன் தொடர்ச்சியாய் நண்பர் சார்வாகனனின் பின்னூட்டங்கள், அதில் சில விளக்கங்கள் கேட்டிருந்தார்.  நண்பர்கள் மேற்கண்ட இடுகையை படித்துவிட்டு இதைப் படித்தால் எளிதாக புரியும்.

Thursday, August 23, 2012

என்ன நடக்குது இங்கே - 4

ஆன்மீகம் என்பதை முழுமையாக புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில், ஏற்கனவே நாம் இந்த வலைதளத்தில் ஆன்மீகம் குறித்து கொஞ்சம் பேசி இருப்போம் அதன் தொடர்ச்சியாகவே இந்த இடுகைகளும் பயணிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாகப்புரியும்.

இங்கு ஞானமார்க்கத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டு வருகிறது. பக்தி மார்க்கத்தை என்ன செய்வது என்றால் இன்றைய சமூச சூழ்நிலைக்கு ஏற்ப போற போக்கில புரிந்து எடுத்துக்கொள்ள முடிந்தால் கொஞ்சமா எடுத்துக்குங்க. இல்லைன்னா அதை பைபாஸ் பண்ணி போயிருங்க..,  போராட்டம் வேண்டாம், அதிக ஆராய்ச்சி வேண்டாம் என்பதே.,

 பக்தியோ, ஞானமார்க்கமோ மனதைத் தகுதிப்படுத்தாமல் வெற்றி சாத்தியமில்லை. அதற்கு மனதை தயார் படுத்தும் விதமாக மனம் எதுனுடனெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என உணர வேண்டும். இதற்கு விழிப்புடன் இருந்து தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை குறை கூறாமல், ஏன் வந்ததுன்னா.... அப்படின்னு தீர்ப்பு ஏதும் சொல்லாமலும்,  வந்த எண்ணத்தை கருமம் வந்துட்டுதேன்னு திட்டாமலும் ஒவ்வொரு எண்ணத்தையும் தொடர்ந்து சாட்சியாய் இருந்து கவனித்துவர வேண்டும். எழுதுவது எளிது. ஆனால் சிலநிமிடங்கள் கூட தொடர்ந்து செய்ய இயலாது என்பதுதான் உண்மை., மனம் தளராமல் முடிந்தவரை கவனித்து கவனித்து பழகவேண்டும்.

அப்போது கண்ணாடியின் மீது படர்ந்து பனித்திவலைகளைத் துடைத்துப்பார்ப்பது போல தன் மனதின் ஆழத்தில் மறைந்து இருக்கும் குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை  போன்றவைகளைக் கண்டு கொள்ள முடியும். இவற்றிற்கும் பக்திக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

 உடனடி விளைவாக இவைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் நம் மனதின் ஆற்றலை இழந்துகொண்டேதான் வருவோம். உபரியாக உடலும் பாதிக்கப்படும். மனம் இவற்றின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிப் போராடிக்கொண்டு இருக்கும். இதைச் சரிசெய்ய, இயல்புக்கு வர உற்றுக்கவனித்தல் உதவும். மனதின்  உள்வாங்கும் திறன்,  பாராபட்சமின்றி அணுகும் திறன எல்லாமே சமநிலைக்கு வரும்.

மனதின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துமுன் அதன் ஓட்டைகளை அடைத்து அதை செப்பனிடவேண்டியது அவசியம். தற்போதய ஆன்மீகரீதியான, யோகா சார்ந்த வழிமுறைகள் பெரும்பாலும்  இதை அதிகம் வலியுறுத்துவதில்லை.  பக்திவழியோ, ஞான வழியோ அவர்கள் தரும் குறிப்புகளுடன் நடக்கும்போது மனம் சக்தி பெற்று அமைதி அடைவதும், அதன் பின் இயல்பு வாழ்க்கையில் வழக்கம் போல சோர்வுற்று இருப்பதும் இதனால்தான்..

நம்முடைய அபிப்ராயங்கள், நம்பிக்கைகள் முடிவுகள் அனுபவங்கள் பிம்பங்கள் ஆகியவைகளை கொண்டுதான் நாம் அனைத்தையும் பார்த்து வருகிறோம். இவைகள் உண்மைநிலையை அவ்வாறே காட்டாமல் திரித்து ஒரு பொய்யான தோற்றத்தை உண்மை என தவறாககாட்டி வருகின்றன. உண்மைநிலையை நம்மால் கண்டுகொள்ள முடியாதபோதுதான் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுகின்றன். கூடவே குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றன.

உண்மைநிலையை மறைப்பதில் மனதின் தன்மைகள் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என உணருங்கள். ஆக ஒவ்வொன்றாக சரி செய்ய முயன்றால் கோபத்தை எப்படி தவிர்ப்பது? கவலையை எப்படி ஒழிப்பது, ? என்று தனித்தனியாக முயற்சித்தால் தற்காலிக வெற்றி மட்டுமே கிட்டும். நிரந்தரமான வெற்றி வேண்டுமானால் மனதை தன் அடையாளங்களில் இருந்து விலகி இருக்கப் பழக்கினால் கிடைக்கும்.

எழுதுவது போரடிக்கிறதா நண்பர்களே., நாலு ஜென்கதைகளைச் சொல்லி சம்பந்தமில்லாம இரண்டு நல்ல விசயங்களையும் சொன்னால் கட்டுரை சுவரசியமாகப் போகும். இவைகள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் என் தளத்தில் பகிரப்படும் விசயங்கள் சொற்பமாக சில இடங்களில் காணப்படலாம். ஆகவே புரியாதமாதிரி தோன்றினால் மீண்டும் மீண்டும் படியுங்கள்.,

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

Monday, August 20, 2012

என்ன நடக்குது இங்கே - 3

ஆன்மீகம் பற்றி அதில் உள்ளவர்களே போதுமான தெளிவில் இல்லை. தாம் தெளிவில்லாமல்  இருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாத அப்பாவிகள் அநேகர். இவர்களைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு எனக்கு அந்த சக்தி இருக்கிறது. இது இருக்கிறது என அவர்களிடம் காசு பார்க்கும் கூட்டமும் இதே ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி பிழைத்துக்கொண்டு இருக்கிறது ஆன்மீகத்தை கெடுத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த சூழ்நிலைதான் கம்மெனு போறாவங்களையும் திரும்பி நின்னு காறித்துப்பச் செய்துவிடுகிறது. (விதிவிலக்குகள் இருக்கும்)

இந்தநிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஆன்மீகப் பாதையில் பயனிப்பதன் பலனை அனைவரும் பெறமுடியும். ஆன்மீகம் என்பது வெறும் அற்புதங்கள் செய்வது மட்டுமோ,  குறை தீர்ப்பது மட்டுமோ அல்ல. இதெல்லாம் பக்க விளவுகள்தான். உண்மையில் ஆன்மீகம் என்பது எவ்வகையிலாவது உடலைப் பேணி நம் மனதிற்கு தெம்பூட்டுவதுதான். உடல்,உயிர்,மனம் இவற்றிற்கான ஒத்திசைவை, இணக்கத்தை அதிகப்படுத்துவதுதான்.

இதற்கு முதல்படி தன்னை உணர்வது மட்டும்தான். இதை ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்தால்தான் சமுக முன்னேற்றம் என்பது கிடைக்கும். அப்படி தன்னை உணர்வது பற்றி எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரிந்து இருக்கலாம். எனக்கும் தெரியும் என்பது முக்கியமல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்தோம் என்பதே முக்கியம்.

நாம் இந்த தொடரில் நம்மை (தன்னை) உணர்வதில்,அதன் வழிமுறைகளில் சிலவற்றைப் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இவை எல்லாம் தனித்தனியானது அல்ல. ஒவ்வொன்றுமே முக்கியமானதுதான். .

முதலில் நம் மனதில் உள்ள அடையாளங்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். நான் இன்ன சாதி.எனது கட்சி இது. எனது மதம் இது என் தலைவன் இவர் என் கடவுள் இது, கடவுளே இல்லை, என் வாழ்க்கை முறை இப்படித்தான். என எல்லோருக்கும் தெரியும் வண்ணம் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருப்போம். இதுதான் ஊர்உலகத்துக்கே தெரியுமே என்கிறீர்களா? இங்கே உங்கள் மனம் இவற்றோடு எந்த அளவு பிணைக்கபட்டிருக்கிறது என்பதை நீங்கள்  கண்டுபிடிக்கவேண்டும் எனபதுதான் முக்கியம்.

உதாரணமாக நம் சாதியைப் பற்றி ஒருவர் குறை கூறும்போது எனக்குக் கோபம் வந்தால் மிக இறுக்கமாக இதனுடன் என மனம் அடையாளப்படுத்தப்படுகிறது. மாறாக ஏன் சொல்றாங்க, அப்படி சொல்லும்படி நாம் என்ன தவறு செய்தோம். அடுத்த முறை சொல்லாத அளவிற்கு நம்மால் நடக்கமுடியுமா என மனம் சிந்தித்துக்கொண்டு எதிராளியின் மீது பாயாமல் இருந்தல் மனம் கொஞ்சூண்டுதான்  இதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் :)

மனம் எந்த ஒன்றோடும் எந்த அளவு பிணைக்கப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்வதே, அடையாளம் கண்டு கொள்வதே மனதை அறிவதன் முதல்படி.இதை யோசித்துப்பார்க்க ரொம்ப எளிதாகத் தோன்றும். எனக்கு எல்லாச் சாதியும் ஒண்ணுதான். இப்படி நினைக்கச் சுகமாத்தான் இருக்கும். ஆனால் தகுந்த சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான் உங்களுக்கு மட்டும் தெரியும். நீங்கள் எந்த அளவு இதில் தீவிரமாக இருக்கின்றீர்கள் என. இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அஸ்திவாரமே இதுதான் :)

வெளியுலகிற்கு தெரியும் வகையில் உள்ள அடையாளங்கள் எவை? நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை? என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா? இதோ வர்றேன்.

குடும்பம் ஆகட்டும், தொழில் செய்யுமிடம் ஆகட்டும், ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும், அல்லது சமுதாய முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும் நீங்கள் அதில் குறிப்பிடத்தக்கவராக., சாதனையாளராக, எதிர்ப்பில்லாதவராக, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா என்று ஒதுங்காதவராக மாற வேண்டும்.இது ஒன்றே பத்தோடு பதினொன்றாக நாம் வாழவில்லை, ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்ற நிறைவைக் கொடுக்கும். இதை வேண்டாம் என்று சொல்பவர் யார்?

இதற்கு முதலில் மனதை தகுதிப்படுத்தவேண்டும். அப்படி தகுதிப்படுத்த மனதைப் பற்றிய புரிதல் நடைமுறையில் அது இயங்கும் தன்மைகளை அறிந்து அதற்கேற்றவாறு இயங்கவேண்டும்.மனதின் ஏற்கும்தன்மையை முழுமையாகப் பயன்படுத்த அதை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு
நம்மிடம் உள்ள நமக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் குணங்களை அடையாளம் காண வேண்டும். இந்த குணங்கள் நம்மிடம் எப்படி தீவிரமடைகின்றது என்பதை கண்டுபிடிக்கத்தான் எதனோடு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்று ஆராய்கிறோம்.


மேலோட்டமாக மனதில் உள்ள பொறாமை, ஆசை, கவலை, கோபம்...போன்ற குணங்களை அறிய முடிந்தாலும். எனக்கு இவைகள் இல்லை எனச் சிலர் சொல்லக்கூடும். இந்த குணங்கள் குறைந்த அளவில் நம் மனதில் அடி ஆழத்தில் மறைந்து கிடந்தால் அவற்றை அறிவது கடினம்.... இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு திரிவோம் :) ஆனால் அடையாளம் கண்டுகொண்டால்தான் இவற்றை கையாள்வது எளிதாகும்.

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

Thursday, August 16, 2012

என்ன நடக்குது இங்கே - 2

ஒருநாள் காலையில் ஜீ தொலைக்காட்சியில் ஆன்மீக பேச்சாளர் ஒருவர் முருகனைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். எந்நேரமும் கடவுள் சிந்தனை வேண்டும். தனியா உட்கார்ந்து முருகனை நினைக்கமுடியலையா, பரவாயில்லை ரசத்துக்கு புளி கரைக்கும்போது முருகான்னு நினைங்க.. புளி ரசம் பக்தி ரசமா மாறிடும் அப்படின்னார் :)

இப்படித்தான் நமது ஆன்மீகம், பக்தி ரசமாக போய்க்கொண்டு இருக்கிறது, ஆன்மீகம் குறித்து தெளிவு நம்மிடம் இன்னும் தேவை. தேவை.:) நமது வாழ்க்கை நாம் நினைத்தவண்ணம் இல்லாது, எந்தவிதமாகவேனும் நகரும்போது  அதை பக்குவமாக எதிர்கொள்ளும் விதத்தை  கற்றுக்கொடுப்பது எல்லாம் ஆன்மீகம்தான் :)

Tuesday, August 14, 2012

என்ன நடக்குது இங்கே..1

 ஒருவரோடு ஒருவர் பேசுவதில் தன் மனதில் உள்ளதை அப்படியே எதிரே இருப்பவருக்கு முழுமையாக தான் உணர்ந்தவாறு சொற்களால் உணர்த்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பொருள் சார்ந்த விசயம் எனில் இப்படி செய். இன்ன லாபம் கிடைக்கும். சாட்சிக்கு அவரைப் பார் என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் ஆன்மீகத்தில் அப்படி இல்லை.ஆன்மீகம் என்பது மனம் சார்ந்த விசயம்.

முதலில் ஆன்மீகம் என்றாலே இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது நமது தமிழ்சமூகம். ஆன்மீகம் என்பதே மந்திரங்களும் பூசைகளும்  நம்பிக்கைகளும் அதிசயங்களும்  என்றாகிவிட்டது. விசேச நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே நமது குறைகள் நீங்கிவிடும் கேட்டது கிடைக்கும் என்பதன் விபரமும் ஆன்மீகத்துள் அடக்கம்.ஆன்மீகத்தின் மிகச்சிறிய பகுதிதான் இவைகள் என விளங்கிக் கொள்ள விரும்புவதும் இல்லை.

இங்கே கூர்ந்து கவனித்தால் நமக்குப் புரியவருவது எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி நமது மனதில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது? எந்தவிதமாகவோ அமைதி ஏற்பட்டது என்பதுதான்:) இதே போல எனக்கு இந்த அமைப்பின் /  யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது அந்த அமைப்பின் யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது, இந்த மதத்தின் வழிபாட்டு முறைகளினால் நன்மை என்பதின் மனோநிலையும் ஏறத்தாழ ஒன்றுதான்.

மனம் அமைதியாக, உற்சாகமாக, நேர்மறையாக இருக்கிறது என்பதுதான் கூட்டிக்கழித்தால் கிடைக்கிற முடிவு.

பக்தி மார்க்கத்தில் கிடைக்கும் அமைதி, சில நாட்கள் அல்லது குறைந்த நாட்கள் என்றால் ஞானமார்க்கத்தில், தியான வழிமுறைகளில் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் அமைதி கிடைக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் அதை நீடித்துக்கொண்டதாக யோகப்பாதையில் பயணிப்போர் சொன்னாலும், அவர்களைப் பார்க்கின்ற நம்மைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு பெரும்பாலும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.

ஏதோ போறார். பரவாயில்லை என்று சொல்லுமளவில்தான் பலரும் இருக்கின்றனர்.இந்த நிலை ஏன். பக்தி சார்ந்த ஆன்மீகப்பாதையோ, யோகப்பாதையோ, இவரைப்போல் பண்பட்ட மனிதன் இல்லை என்று சொல்லுமளவிலோ, அவருடைய வார்த்தைக்கு மாற்றோ எதிர்ப்போ இல்லாத தன்மை எவரிடத்திலாவது இருக்கிறதா என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணுமளவிற்குக்கூட இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த பண்பு எவரிடத்தில் இருப்பினும் அவர் வந்தவழி, அவர் கடைப்பிடித்த வழி மிகநிச்சயமாய் சரியானது.

என்னைப்பொருத்தவரை இவை மட்டுமல்ல எல்லா விசயங்களும் மனதினுள் அடக்கம்.  விதை ஒன்று வீட்டில் கழனிப்பானையில் கிடக்கும்வரை அதற்கு காலமும் கிடையாது. செயல்பாடும் கிடையாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி., ஆனால் அதே விதையை எடுத்து மண்ணில் போட்டு, தண்ணீர் பாய்ச்சினால், ஒளியின் உதவியோடு முளைவிட்டு செயல்பாட்டுக்கு வரும். அதன் பின்னர் அதன் வளர்ச்சி குறித்து நிறைய பேசிக்கொண்டு இருக்கலாம். இதற்கு முன்னர்வரை எதுவும் பேச முடியாது.

அதே போலத்தான் இயற்கையில் இருக்கின்ற   இந்த பிரபஞ்சத்தில் நாம் வந்து பிறந்திருக்கிறோம். நம்மைப் பொருத்தவரை நாம் உயிரோடு இருக்கும்வரை இதைப்பற்றி பேசலாம். நாம் இறக்கும்போது நம்மோடு பிரபஞ்சமும் மறைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் இருக்கிறது.:)

இதில் நாம் அறிந்தவை/ அறிந்ததாக மனம் நம்புபவை சொற்பமே., அந்த அறிந்தவைகளும் ஒவ்வொருவரின் மனதிற்கேற்ப ஒவ்வொருவிதமாகவே புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது :) இதுவே கருத்துவேறுபாடுகளுக்கும், சச்சரவுகளுக்கும் அடிநாதமாக அமைந்துவிடுகிறது. இவற்றை தவிர்க்க, களைய என்ன வழி? நாம் எந்த விதமாக மாற்றம் பெற வேண்டும்?


தொடர்ந்து சிந்திப்போம்

Thursday, July 5, 2012

தமிழால் இணைவோம் - ஞானாலயா புதுக்கோட்டை



புதுக்கோட்டை ஞானாலயா என்கிற நூலகத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தின் தனியார் நிர்வகிக்கும் நூலகங்களில் இரண்டாவது பெரிய நூலகம் என்கிற பெருமையைப் பெற்றது.முதலிடத்தில் இருந்த மறைமலை அடிகள் நூலகம், சரியாகப் பராமரிக்கப்படாமல்,முக்கால் பங்கு சேகரங்கள் கரையான் அரித்து மீதம் உள்ளவை கன்னிமாராவில் அடைக்கலமாகி விட்டது. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தனியார் நூலகம் ஞானாலயா ஒன்றாகத்தான் இருக்க முடியும்! வெறும் புத்தகங்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, சில விசேஷத் தன்மைகளோடும் கூட !

Wednesday, July 4, 2012

கருணையே கடவுள்தன்மை



அன்புக்கும் கருணைக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் அன்பின் முதிர்ச்சி நிலை கருணை. அன்பு உயர்ந்தது என்றால் கருணை மகத்தானது. கருணை நிரம்பி வழிபவர்கள் அனைவரும் கடவுட்தன்மை நிரம்பி வழிபவர்கள் என்பதே உண்மை.

அன்பு உறவுகளை உண்டாக்கும் உந்துதலில் உதயமாவது. கருணையோ முன்பின் அறியாத உயிர்கள் மீதும் பரவலாக விரவி நிற்பது. எல்லா உறவுகளுமே நாளடைவில் நீர்த்துப் போகிற தன்மையுடையவை. உறவுகளின் இருப்பில் எப்போதும் எதிர்பார்ப்பு உட்கார்ந்திருக்கும். ஆளுமை, பொறாமை, அபகரிக்கும் எண்ணம் என்று அனைத்தும் உறவுகளால் ஏற்படும். சண்டையும் சச்சரவும் உறவுகளால் உண்டாகும். இந்த உறவுகள் கடமைகளைத் தாங்கியவை.

Tuesday, July 3, 2012

சுயமுன்னேற்றம் என்பதன் உண்மைநிலை என்ன?

நண்பர்களே சுயமுன்னேற்றக் கருத்துகள் எந்த அளவிற்கு நமக்கு உதவும். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவுமா? அதன் மறுபக்கம் என்ன?

சுய முன்னேற்றக் கருத்துகள் மீது இரு வேறுபட்ட அபிப்ராயங்கள் உண்டு. இவற்றினால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் பலர் உண்டு நான் உட்பட.....எளிமையாகச் சொன்னால் இந்தக் கருத்துகள் திருமணத்திற்கு முன்னர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கோ அல்லது தொழிலுக்கோ சென்று கொஞ்சம் கையில் காசு பார்க்கும் சமயத்தில் நாம் கேள்விப்பட்டால் நிச்சயம் கொஞ்சமேனும் பலனளிக்கும்.

Monday, July 2, 2012

திரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்




தமிழ்மணம் நேயர்களுக்கு வணக்கம். நிகழ்காலத்தில் சிவா என சுயகுறிப்பில் பெயர் இடம் பெற்றிருந்தாலும் என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். பிறந்தது வளர்ந்தது இருப்பது எல்லாமே திருப்பூர்தான்.:)

திருப்பூரில் பனியன் உற்பத்தி துறையில் சுயதொழில் செய்து கொண்டு இருக்கிறேன். உழைப்பால் உயர்ந்தவன் என்று என்னை நானே தட்டிகொடுத்துக்கொள்வது உண்டு. உடலுக்கு வயது நாற்பதை தாண்டிவிட்டது. சிறுவயது முதல் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்ததாலும், எதோ ஒரு வெறுமையை மனம் உணர்ந்ததாலும் ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்தேன்.

Wednesday, June 20, 2012

மூச்சு விடுவது எப்படி ?

நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம்.  படிக்கலாம் அல்லது  ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா?

அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.?

Monday, May 7, 2012

மனிதருள் வேறுபாடு ஏன் ?



கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.


Friday, April 20, 2012

போடா வெண்ணை.....

நம்பிக்கை என்பதன் மீதுதான் நமது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. உயிர் பயம் நமக்கு இல்லை என்று மார்தட்டினாலும்  கூடி வாழும் சமுதாய விலங்கு என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பாதுகாப்பை முன்னிறுத்தியே கூடி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழுவாய் இருக்கிறோம் என்ற உணர்வே தைரியமாய் நம்மை வாழ வைக்கிறது.

பாதுகாப்பு என்ற அம்சத்தை உள்ளடக்கியே என் மதம், என் சாதி, என் கட்சி, என் இனம், என் நாடு என்று இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இதன்பொருட்டு பிறரை இம்சை பண்ணும்போதுதான் இவையெல்லாம் அவசியமா என தோன்றுகிறது.  என் மதம், என் சாதி, என் இனம், என் கட்சி என இவற்றை நான் நிறுவ முனையும்போது பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவதில்லை.

Wednesday, March 28, 2012

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!


இயற்கை விளைபொருள் அங்காடியை நடத்தும் சாகுல் ஹமீது:
அரிசியை மொத்தமாக சாக்குகளாகத் தூக்குவது தான் பெரும்பாலான வீடுகளில் வழக்கம். பத்து நாள் வெளியூர் சென்று வந்து பார்த்தால், சின்ன பூச்சிகள் வந்திருக்கும். இதைத் தடுக்க, கடையில் இருந்து சாக்கு அல்லது பையில் வாங்கி வரும் அரிசியை, அண்டா, தூக்குவாளி என்று பெரிய எவர்சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ மாற்றி, மூடிவைத்து விடவேண்டும். அரிசியின் மேற்புறம் கொஞ்சம் வேப்பம் தளிர் அல்லது காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால், பூச்சி, வண்டு எதுவும் அண்டாது.

Thursday, February 16, 2012

காதலுடல் -- பண்புடன் இணைய இதழுக்காக

பசித்துப் புசி என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான்., நடைமுறையில் பசித்துப்புசிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் :) பசி என்பது பல நேரங்களிலும் நமக்கு போதுமான அளவு ஏற்படுகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.

பசி என்கிற உணர்வு ஒரு தூண்டுதலாக ஆரம்பமாக சிக்னல் என்ற அளவில்தான் நமக்கு நம் உடலால் உணர்த்தப்படுகிறது.இதையே நாம் பசி என்பதாக எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். உடலுக்குக்கூட இரவு 6 மணி நேரமோ 8 மணிநேரமோ ஓய்வு கொடுத்து விடுகிறோம். நம் வயிற்றுக்கு ஓய்வு என்பதே இல்லை. ஏறத்தாழ 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து உடலைப்பற்றி சில சிந்தனைகள் பண்புடன் இணைய இதழுக்காக..... பிப்ரவரி 15க்கான ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கும் சேர்தளம் வெயிலான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பகிர்ந்து கொண்டது உங்களின் பார்வைக்கு...... படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..

Tuesday, January 31, 2012

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

Thursday, January 5, 2012

சொர்க்க வாசல் திறப்பு....

நட்புகளுக்கு., இந்தவலைத்தளம் ஆரம்பிக்கும்போது படிப்பவருக்கு மனதளவில் ஏதாவது ஒரு வகையில் தூண்டுதலை ஏற்படுத்தவேண்டும். என்ற நோக்கத்தோடுதான் ஆரம்பித்தேன்.  அதே சமயம் நான் எந்த அளவில் மனம் சார்ந்த விசயங்களில் புரிதலோடும்/செயல்பாட்டிலும் இருக்கிறேன் என்ற சுய பரிசோதனை முயற்சியுமாக ஆரம்பித்தேன்.

வலைதளங்களில் மனம் சார்ந்த விசயக்களை எழுதுபவர்கள் குறைவாக இருப்பதால் இணையத்தில் தேடுவோருக்கு இவை கிடைக்கவேண்டும் என்ற உந்துதலாலும் தொடர்ந்து  மனம் சார்ந்து ஆன்மீக கருத்துகளை பகிர்ந்து வருகிறேன்.

Sunday, January 1, 2012

இனி வரும் நாட்களே நம் கையில்-2012

ஆங்கில புத்தாண்டு 2012 தொடங்கிவிட்டது. இந்த வருடம் நம் அனைவருக்கும் மகிழ்வான தருணங்களை அதிகம் தரட்டும் என உள்ளன்போடு பிரார்த்திக்கிறேன்.

துன்பங்களே இன்றி இருக்க இயலாது. அதை எதிர் கொள்ளும் மன வலிமை நமக்கு அதிகரிக்க வேண்டும் என்கிற புரிதல் நமக்குள் வளரட்டும்.