"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, September 3, 2012

போலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

நண்பர் இக்பால் செல்வத்தின்  தியான சார்ந்த இடுகையில் நான் பின்னூட்டமிட அதன் தொடர்ச்சியாய் நண்பர் சார்வாகனனின் பின்னூட்டங்கள், அதில் சில விளக்கங்கள் கேட்டிருந்தார்.  நண்பர்கள் மேற்கண்ட இடுகையை படித்துவிட்டு இதைப் படித்தால் எளிதாக புரியும்.

Wednesday, June 20, 2012

மூச்சு விடுவது எப்படி ?

நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம்.  படிக்கலாம் அல்லது  ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா?

அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.?

Monday, November 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..10

காங்னானி என்ற இடத்தை சென்று சேர்ந்தோம். இங்கு என்ன விசேசம் என்றால் வெந்நீர் ஊற்றுதான்:) எனக்கு வெந்நீர் ஊற்றை முன்னபின்னே பார்த்தது இல்லையா! அதுனால அது எப்படி இருக்கும். தேங்கியிருக்கும் குட்டைபோல் இருக்குமா? நீர் ஆதாரம் கீழே இருந்து வருமா? என்கிற யோசனை எல்லாம் மனதில் ஓடியது. பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களுடன் வெந்நீர் ஊற்றைத் தேடிக்கொண்டே ரோடில் நடந்து போனோம். எங்குமே காணவில்லை. விசாரித்ததில் பஸ் நின்ற இடத்திலேயே கடைகள் நிறைய இருந்தன. அதற்கிடையில் மேலே படியில் ஏறிப்போகச் சொன்னார்கள்.

Wednesday, November 10, 2010

இதுதான் திருப்பூர். 10.11.2010

தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னர் புதன்கிழமை வங்கிக்கு பணம் எடுக்க சென்றேன். சரியான கூட்டம். காலை 11 மணிக்கு சென்றேன். செக்கைக் கொடுத்து டோக்கன் வாங்கினேன்.  "அப்புறம் வாங்க பணம் குறைவாக இருக்குது". என வங்கி அலுவலர் சொல்ல அடிக்கடி சென்று பழக்கமானதால் சரி என  வந்து விட்டேன்.

Wednesday, October 27, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..9

இயற்கை வைத்தியம் குறித்து எங்களுடன் வந்த டாக்டர் திரு.சுப்ரமணியம் அவர்கள் உரை நிகழ்த்த அனைவரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.சூரியன் மெல்ல மறையத் தொடங்க, நேரம் மாலை 6.45 க்கு மேல் ஆகிவிட்டது. மலைப்பிரதேசத்தில் சூரியன் மறைய நேரம் ஆவதுபோல் உணர முடிந்தது.

சரி இனி பேருந்திலேயே தங்க வேண்டியதுதான் என சிந்தனை செய்து கொண்டே சாலையைத் தாண்டி பேருந்துக்கு வந்தேன், ரோடில் வேன் ஒன்று வந்தது.அருகில் உள்ள ஊரிலிருந்து அதுபோல் அடிக்கடி வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. சற்று நம்பிக்கையுடன் உயரே பார்க்க வரிசையாக வாகனங்கள் மலைமீது இருந்து இறங்கி வர ஆரம்பித்தது தெரிந்தது.

Wednesday, October 13, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..8


ரிஷிகேஷ்லிருந்து கங்கை நதிக்கு செல்லும் வழி, மற்றும் ஊருக்குள் எனக்குத்தெரிந்தவரை இறைச்சி விற்கும் கடைகள் எங்குமே இல்லை. மதுபானக் கடைகளும் இல்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை அக்கறையோடு நடத்துவதும், இறைச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதையும் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. மக்கள் சரியாக இருந்தால் அரசைக் குறை சொல்ல வேண்டியதில்லை:).

Monday, September 27, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷிகேஷ்)

முஸோரி இரயிலில் நாங்கள் வந்தசமயம் ஹரித்துவாரில் கோவிலுக்கு காவடி எடுக்கும் சீசன். சிவனுக்கு காவடி எடுத்துக்கொண்டு இரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேசனிலும் பக்தர்கள் ஏறிக்கொண்டே வந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் உரிமையாக அமர்ந்தும் கொண்டனர்.

கூட்டம் தாங்காமல் இரயிலின் டிடிஆர், படுக்கைவசதி கொண்ட நாங்கள் இருந்த பெட்டிகளின் நான்கு கதவுகளையும் உள்பக்கமாக தாள் போட்டுவிட்டார். நடுஇரவு இரண்டுமணி இருக்கும்.ஏதோ ஒரு ஸ்டேசனில் இரயில் நின்று கிளம்பி வேகம் எடுத்தது. அந்த ஸ்டேசனில் எனக்கு இடதுபுறம் பிளாட்பார்ம் இருந்தது. பெட்டிகளில் பெரும்பாலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.

Wednesday, September 1, 2010

இதுதான் திருப்பூர்......2

திருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

Tuesday, June 22, 2010

பொன்னுச்சாமி கேட்ட கேள்வி

பனியன் தொழிலில் கணத்துக்கு கணம் நிச்சயமற்ற சூழலே இருக்கும். எதிர்பார்த்ததை விட எளிதில் பல விசயங்கள் முடியும். எளிதாக முடியும் என்ற விசயங்கள் பல சொதப்பலாக முடியும். அதிலும் முக்கியமாக தொழில்துறை நண்பர்களின், பணியாளர்களின் கவனக்குறைவு, புரிதலில் வரக்கூடிய தவறுகள். என வாய்ப்புகள் பலவிதம்..

Saturday, March 6, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி

திரு.முருகேசன் என்கிற ஆங்கில ஆசிரியர் +2 வில் கடைசி நான்கு மாதங்கள் தினசரி காலையில் பள்ளிதுவங்கும் முன்னர் ஒருமணிநேரம் ஆங்கில வகுப்பு எடுத்துவந்தார்.

Friday, February 26, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு

பதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.

Wednesday, January 20, 2010

காயில் மாற்றிய கதை....

தொழிற்சாலையில் ஆர்டருக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. மணி முற்பகல் 11.30. சட்டென ஒரு புறத்தில் அமைந்த தையல் இயந்திரங்களுக்கான 'ஸ்டார்ட்டர்' மின் கட்டுப்பாட்டுக் கருவி 'டப்' என சத்தத்துடன் பழுதானது.

அருகில் இருந்த பொன்னுச்சாமி சட்டென அங்கே சென்று தனக்கு தெரிந்த அனுபவ அறிவைக் கொண்டு மின்சாதனத்தை சோதிக்க அதில் உள்ள ’காயில்’ புகைந்துவிட்டது. அதை மாற்றினால்தான் மீண்டும் இயந்திரங்கள் இயங்கும். என தெரிந்தது.

உற்பத்தி தடைபட்டதோடு அடுத்து எவ்வளவு நேரத்தில் ரெடியாகும் என்று தெரியாத நிலை. ஆஸ்தான மின் பழுது நீக்குபவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து விட்டனர்.

’காயிலை’ கழட்டி கையில் கொடுத்து புதியதாக வாங்கி வரச் சொல்ல இன்னொரு பணியாளரை அழைத்து அருகில் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மின்சாதன பொருள்கள் விற்கும் கடையில் அதை புதிதாக வாங்கி வரப் பணித்தார் பொன்னுச்சாமி

அங்கே அந்த கடையில் ’காயில்’இல்லை, தொழிற்சாலை அமைந்த இடம் சற்று நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது. இப்போது வேறு எங்கு கிடைக்கும் என விசாரித்தில் வடக்குபுறமாக மூன்று கிலோமீட்டர் சென்றால் அங்கு உள்ள சிற்றூரில் கிடைக்கும் அல்லது தெற்குபுறமாக சென்றால் ஐந்து கிலோமீட்டர் சென்று நகரை அடைந்தால் நிச்சயம் கிடைக்கும் என்று தகவல் சொன்னார்கள்.

நேரமாக, நேரமாக பொன்னுச்சாமிக்கு வேகமாக செயல்படவேண்டும் என உணர்ந்தார். இல்லையெனில் உற்பத்தி தடைபடும். மேலும் சம்பள இழப்பும் நேரும். அந்த பணியாளரை வடக்கு நோக்கி சென்று வாங்கிவ்ரப் பணித்தார். அங்கு இல்லையென்றால் திரும்ப வந்த வழியே அங்கிருந்து எட்டு கி.மீ வந்து டவுனை அடைய வேண்டும். இன்னும் நேரமாக வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இருந்தால் நேரம் மிச்சம். உற்பத்தி பாதிக்காது. ரிஸ்க் எடுத்தார்.

பணியாளர் வடக்கே சென்று அங்கு கடைகளில் விசாரிக்கத் துவங்க ’அங்கு இல்லை’ என்ற பதிலே கிடைத்தது. பொன்னுச்சாமிக்கு இயல்பாகவே காலதாமதம் என்றால் பிடிக்காது. ஏற்கனவே முக்கால் மணி நேரம் வீணாகி விட்டிருந்தது. இனி அந்த பணியாளர் திரும்பவந்து டவுன் சென்றால் கூடுதலாக இன்னும் அரைமணியிலிருந்து ஒருமணிநேரம் வீணாகும்.

பொன்னுச்சாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென ஒரு யோசனை. பணியாளர் அங்கே முயற்சித்து கிடைக்க வில்லை எனில் உடனடியாக டவுனில் வேறுநபரை நியமித்து வாங்கிவிட்டால் பயணநேரம் அரைமணி மிச்சமாகும்.

பொன்னுச்சாமியின் வீடு டவுனில் இருந்தது. அருகிலேயே பெரிய மின்சாதன பொருள்கள் விற்கும் கடையும் இருந்தது. இந்த மதிய நேரத்தில் மனைவி வீட்டு வேலை முடித்துவிட்டு ஓய்வாக இருக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வேலை செய்ய வசதியான (நைட்டி) உடையில் இருந்தால் அப்படியே வீட்டைவிட்டு வெளியே வருவதை வெறுப்பவள்.


சரி ஆபத்திற்கு பாவமில்லை என மனைவியை உடைமாற்றி தயாராக இருக்கச் சொன்னால் ஒருவேளை அவசரமாக கடைக்குபோய் பொருளை வாங்கி வரச் செளகரியமாக இருக்கும் என முடிவு செய்தார்.

வீட்டிற்கு போன் செய்தார். போனை எடுத்த மனைவியிடம் ”ஆமா நீ நைட்டில இருக்கியா? இல்லை சேலைல இருக்கியா?”

”தேனுங்கோ என்ன விசயம்?”

இல்ல, அவசரமா எலக்ட்ரிகல் கடைக்கு போக வேண்டியதா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா ரெடியாகு !”

”இதோ இரண்டு நிமிசத்துல ரெடியாகிடறோனுங்கோ” என்று போனை வைத்தார் அவரது மனைவி.

கிட்டத்தட்ட மொத்தமாக ஒருமணிநேரம் ஆயிற்று. பணியாளருக்கு போன் செய்ய, ஒருவழியாக கிடைத்து விட்டதாக அவர் கூறி விரைவாக தொழிற்சாலைக்கு வந்து கொண்டு இருப்பதாக தகவல் சொன்னார். வந்து அதைப் பொருத்த அரைமணிநேரம் ஆக ஒருவழியாய் இரண்டு மணிநேரத்திற்குள் இயல்புநிலை திரும்பியது.

பொன்னுச்சாமி சற்று நிம்மதியோடு மதிய உணவுக்காக வீடு திரும்பினார். வீடு வந்த போது மனைவி தேவையானால் வெளியே கிளம்பத் தயாராக இருக்க, பொறுமையாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்படியே தொழிற்சாலையில் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளை விவரித்தார்.

அக்கறையுடன் கேட்ட அவரது மனைவி புன்னகை செய்ய ”ஏன் சிரிக்கிற?” என்றார்

”அது வேறொண்ணுமில்லீங்க. திடீர்னு போனு பண்ணி நைட்டில இருக்கிறயா, இல்லை சேலையில இருக்கிரயான்னு கேட்டீங்களா எனக்கு ஒரு மாதிரியா ஆயிப்போச்சுங்கோ..” என்று நாணத்துடன் தலை கவிழ, பொன்னுச்சாமிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை.

Wednesday, September 23, 2009

பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரம், குளித்துவிட்டு தயாராகி காலை உணவுக்காக காத்திருப்பேன், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மும்முரமும் சேர்ந்து கொள்ள, கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் இணயத்தில் மேய்வது வழக்கம்,






அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து "அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க" என்று அழைக்க

"அம்மாகிட்ட போயேன்,"


"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா?"


"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்..."


"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது...."


"சரிங்ங்ங்..."

சட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

என் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.

மேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...

உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,

இது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.


இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.


பல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,

விளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.

சிந்திப்பதுடன் செயல்படுவோம்

வாழ்த்துக்கள்,

Friday, August 28, 2009

உங்களை பாம்பு கடித்திருக்கிறதா ?

சில்லென்ற காற்று முகத்தில் அறைகிற மாதிரி வீசிக் கொண்டிருந்தது. இங்கு எப்பவுமே இப்படித்தான், நல்ல கிராமம், ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, மெள்ள மெள்ள விவசாயம் குறைந்து பெரிய பெரிய குடோன்கள் முளைத்துவிட்டன. இவை பனியன் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கு வசதியானவை, துணியை தயார் செய்து அதை வேண்டிய வடிவம், அளவுகளில் வெட்டி தயார் செய்வதில் கழிவுகள் ஏதும் வெளியேறாததால் அக்கம்பெனிகளும் வந்துவிட்டன.

நகரத்தில் ஆட்கள் பற்றாக்குறை, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி இயங்கி கொண்டிருக்கின்றன.கிராமத்திற்கு பஸ் அனுப்பி வேலைக்கு ஆள்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் கிராமத்திலேயே இந்த கம்பெனிகள் அமைவதால் பல வசதிகள்., சில சிரமங்கள், அதில் ஒன்றுதான் எனக்கு தினமும் வீட்டுக்கு போவது என்பது, வீட்டுக்கு சுமாராக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் வரும். பைக்கில் இந்த குளிரில் வீட்டிற்கு செல்வது சற்று சிரமாகத்தான் இருக்கும்.

விளக்குகள் அணைக்கப்பட்டன.வேலை முடிந்தது. வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப நானும் வீட்டிற்கு கிளம்பினேன். சட்டென ஞாபகம் வந்தது. மனைவியும் குழந்தைகளும் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்கள். சரி இன்றைக்கு இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான், உணவுக்குத்தான்...ம்ம்சரி

இங்கு பெரிய அளவில் உணவுவிடுதி ஏதும் கிடையாது. அரை கிலோ மீட்டர் சென்றால் ஊர் மையத்தில் மங்கலான குண்டுபல்பு வெளிச்சத்தில் அமைந்துள்ள குடிசைவீடுதான் இங்கு உள்ள ஒரே உணவு விடுதி, கிடைப்பதை வைத்து வயிற்றை நிறைத்துக்கொண்டு இன்று இங்கேயே இருக்கிற ஓய்வறையில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒத்தையடிப்பாதை வழியாக சென்றால் பக்கம், சீக்கிரம் சென்று திரும்பிவிடலாம்.
உணவை முடித்துக் கொண்டு திரும்பினேன். தனியாக வருவதால் பயம் வேறு, அப்பயத்தை துரத்த வேண்டி அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா எனப் பாடிக்கொண்டே நடையை எட்டிப்போடுகிறேன்
சட்டென இருள் சூழ்ந்தது. சரியான நேரத்திற்க்கு எது நடக்குதோ இல்லையோ மின்சாரம் போவது மட்டும் நடந்து விடுகிறது.
தொழிற்சாலை வாசலை அடைந்து, நிதானத்திலேயே கேட்டை உட்புறமாக பூட்டிவிட்டு, ஓய்வறைக்கு நகர்ந்தேன். தொழிற்சாலை கட்டிடத்தை விட்டு தள்ளி உட்புறமாக 200 அடி தொலைவில் அறை, கட்டில், குளிக்கும் வசதிகளுடன் ஓய்வறை,

வழக்கமான பாதைதான், முழங்கால் உயரத்துக்கு செடிகள் கண்டபடி வளர்ந்து பாதையை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிட வேலை நடந்த போது ஏற்பட்ட குழிகள், மண் மேடும் பள்ளமுமாய், அந்த இடத்தை கடக்க முயற்சிக்கும் போது சட்டென புத்திக்கு ஏதோ உரைக்கிறது, காலுக்கு கீழ் ஏதோ மிதிபடுவதைப்போல் உணர்வு, சற்று உருண்டையாக , கனமாக, வழுவழுப்பாக செருப்புக்கு கீழ் உணர முடிந்தது. அனிச்சை செயலாய் உடல் துள்ள, அந்த இடத்தை விட்டு எட்டிக் குதித்து,எப்படி அறைக்கு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.

பிறகுதான் தெரிந்தது, உடல் நடுங்குகிற நடுக்கம், படபடவென்ற இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் இதெல்லாம்,

கதவை நீக்கினேன், மேசைமீது இருந்த, குளிர்ந்த நீரை சொம்போடு எடுத்து அப்படியே அண்ணாந்து ஒரே மொடக்காக குடித்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டேன்,. கிறுகிறு என்று வந்தது. கண்ணை மூடிக்கொண்டேன்

யார் செய்த புண்ணியமோ, தப்பித்தேன் என நினைத்துக்கொண்டேன்.

பாம்புகள் பலவிதம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், விசமுள்ளது, விசம் இல்லாதது, என்று, நமக்கென்ன தெரியும் எந்த பாம்பு எப்படி இருக்கும், எதில் விசம் இருக்கும் என்று? காற்று வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது, சன்னலை திறந்து வைத்தேன்

அப்போது கால் பாதம் சற்றே ஈரமானது போன்ற உணர்வு, குடித்த தண்ணீர் சிந்திவிட்டதோ, சட்டென மனம் எச்சரிக்கை செய்ய கையால் தொட்டு பார்த்தேன், பிசுபிசுப்பாக இருந்தது, கையில் ஒட்டுவதுபோல் தெரிந்தது,கீறல் இருந்தது. வலிக்கவும் ஆரம்பித்தது.
கையை கிட்டே கொண்டுவந்து பார்த்ததில் இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், சிவப்பாக தெரிந்தது, இரத்தம் என மனது அலற ஆரம்பிக்க, முகர்ந்து பார்த்தேன், வாடையை வைத்து இரத்தம்தான் என உறுதி செய்தேன்.

அய்யய்யோ ! பாம்பு கடித்து ஒரேடியாக போய்விட்டால் என்ன ஆவது, மனைவி, குழந்தைகள் எல்லாம் வெளியூர் போன சமயத்தில் ஏதாவது ஆகிவிட்டால் ? ஒருவேளை அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்காமலே போய்விட்டால் என்ன ஆகும்?

அட அது எப்படியோ போகட்டும் அக்கம் பக்கத்தில் யாராவது விடிந்தவுடன் எட்டிப்பார்த்து தகவல் சொல்லாமலா போய்விடுவார்கள்.,

இந்த வாரம் அனுப்ப வேண்டிய சரக்கு இன்னும் தைக்க முடியாமல் இருக்கிறது, இந்த நிலையில் இப்படி என்றால் என்ன செய்வது, விடியும் வரை தாங்குமா, இந்த நேரத்திற்கு திருப்பூரில் எந்த ஆஸ்பத்திரி இருக்கும், டாக்டர் யாராவது இருப்பார்களா? இருந்தாலும் விசமுறிவு வைத்தியம் நல்லமுறையில் தெரிந்திருக்குமா

செல்போனை எடுத்தேன், யாரை அழைக்க,? உடனடியாக இங்கு யாராவது வந்தால்தான் நாம் உயிர் தப்பிக்க முடியும். போனை அழுத்த இயங்க மறுத்தது, ச்ச்சே மாலையிலேயே சார்ஜ் குறைந்து இருந்தது, வேலை மும்முரம், மறந்தாயிற்று

இனி ஒரே வழி, எப்படியாவது தொழிற்சாலைக்கு சென்று ஜெனரேட்டர் போட்டுத்தான் ஆகவேண்டும், அப்போதுதான் செல்போன் சார்ஜ் பண்ணமுடியும். அல்லது இருட்டில் சரக்குகளுக்கிடையே சென்று தடுமாறிக்கொண்டே அலுவலகத்தை திறந்து போன் பண்ண வேண்டும்.

எங்கே செல்வது, ஓரேடியாக கோவை சென்றுவிடுவது நல்லதோ?

எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள், இரத்தமே முழுவதாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தால் கூட செய்ய முடியும், அதுவரை தாங்குவேனா?

குழந்தைகள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
அவர்களுக்கு மரணம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கும் வயதாயிற்றே? தாங்கிக் கொள்வார்களா? இவர்கள் ஒருபுறம் இருக்க, மனைவியை நினைத்தால் இன்னும் கஷ்டம்..
நீங்க இல்லைன்னா நான் இருக்கமாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளே இவ, என்ன பண்ணப்போறா? அப்படி ஏதேனும் அவ தவறான முடிவெடுத்திட்டா குழந்தைகளின் கதி?

இருட்டினூடே வெளியேறி தொழிற்சாலைக்கு செல்வதே இப்போதைக்கு ஒரே வழி, இருட்டினுள் துழாவ கட்டிலின் அருகே ஒரு பனியன் துணி நீளமாக கயிறுபோல் கிடந்தது தட்டுப்பட்டது.எடுத்து கணுக்காலோடு சேர்த்து இறுக்க்கிக் கட்டிக் கொண்டேன், விசம் ஏறாமல் இருக்க வேண்டும்.மீண்டும் இருட்டினுள் அதே வழியில் நடக்க வேண்டும், கால் மரத்துப்போக ஆரம்பித்தது. வாழ்வா சாவா போரட்டம் என்றால் என்ன என புரிந்தது.

பயமாக இருந்தது. இன்னும் ஏதேனும் பாம்பு இருந்தால்,? சரி இனி எந்த பாம்பு கடித்தால் என்ன? ஏற்கனவே கடித்துவிட்டதே,, மனதை தைரியப்படுத்திக்கொண்டேன்.

தடுமாறி எழுந்து தொழிற்சாலையை நோக்கி நடந்தேன், இல்லை தவழ்ந்தேன், சரி எப்படியோ சென்றேன். கையில் இருந்த சாவியால் கதவை நீக்கினேன், இதெல்லாம் ஒரு யுகம் போல் தெரிந்தது.

சட்டென முகத்தில் வெளிச்சம் அடித்தது, மின்சாரம் வந்துவிட்டதோ?

கண்ணுக்கு எல்லாமே மங்கலாக தெரிந்தது, யாரோ இருவர் எதிரே நிற்பது போல் தெரிந்தது, உற்றுப்பார்த்ததில் தலையில் கிரீடம் வைத்துக்கொண்டு கொம்புடன்…. குழப்பத்துடன் பார்த்தேன்,ஒன்றுமே தெரியவில்லை, தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கொஞ்சதூரம் நடந்த மாதிரி தெரிந்தது.பின்னர் தேரில் ஏறி பறந்தது தெளிவாக உண்ர முடிந்தது. சொர்க்கமா, நரகமா எங்கே போகிறோம் என்றும் புரியவில்லை,

கண்விழித்துப்பார்த்தேன். வெண்ணிற் ஆடையில் அங்குமிங்கும் தேவதைகள் நடந்து கொண்டிருந்தன.

எதிரே மனைவியும் குழந்தைகளும், மனைவி அழுகையை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். மருத்துவமனையில் படுக்கையில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன்

தூரத்தில் அலுவலக நண்பர்கள், அருகில் அம்மா, அப்பா,

எனக்கு என்ன நடந்தது என்று நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. கையில் குளுக்கோஸ் வாட்டர் ட்யூப் வழியாக உள்ளே ஏறிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மாதிரியாக இருக்க, கண்ணை மூடிப் படுத்துக்கொண்டேன்.

மதியம் மருத்துவர் வந்து எல்லாமே நல்லாயிருக்கு, எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல மாலையில் வீடுதிரும்பினேன். இரண்டுநாள் ஓய்விற்கு பின் தொழிற்சாலைக்கு திரும்பினேன். உடல் முழுவதும் இலேசான வலி,

தொழிற்சாலையில் உள்ளே செல்லும் வழியில் ஏதோ பைப் உடைந்து விட்டது போல. பிளம்பர் வந்து பிரித்து போட்டு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்.

அருகில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்னுச்சாமி நின்றிருந்தார், என்னைப் பார்த்தவுடன் ”அய்யா வாங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லீங்களா?” என்று கேட்டவாறே என் பதிலுக்கு காத்திராமல் ”என்னையா உங்கோட ஒரே வம்பாப் போச்சு, தேவையானத கொண்டு வரமாட்ட, இங்க வந்து அதுவேணும், இது வேணும் அப்படின்னுட்டு, இப்ப என்ன, பைப்ப சூடுபண்ண ஏதாவது வேணும் அவ்வளவுதானே?” என்றவாறு அங்கும் இங்கும் துழாவியவர் சட்டென காலில் தட்டுப்பட்ட ஏற்கனவே பாதி எரிந்த கம்பிகள் வெளியே துருத்திக்கொண்டிருந்த, பழைய சைக்கிள் டயரை எடுத்து இந்தா என்று பிளம்பர் கையில் கொடுத்துவிட்டு, என்னிடம் திரும்பி ”அய்யா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு, திடீர்ன்னு நீங்க மயங்கிக் கிடந்ததை காலையில் பார்த்து எனக்கு உசிரே போச்சிங்க, அப்புறம் ஆசுபத்திரில சேர்த்து உங்களுக்கு ஒண்ணுமில்ல அப்படின்னு கேட்ட பொறவுதான் நிம்மதி ஆச்சுங்க… என்றவாறு என் கையை ஆதரவாகப் பிடித்தார். எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.