"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 21, 2009

தோல் பொருட்களை உபயோகிப்போருக்கு...(18+)

டிஸ்கி;இருதய பலவீனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
இளவயதினர் தவிர்க்கவும்....

தோல் பொருட்களின் உபயோகத்தை குறைத்துவிடலாமா!!!





















வருகைக்கு நன்றி, மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

Monday, April 20, 2009

உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)

நண்பர் ஓம்கார் அவர்களின் யோகம் சம்பந்தமான நடுநிலையற்ற காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்ட உலகின் ”யோக”மான வியாபாரம் கட்டுரையை படித்ததன் விளைவே இந்த இடுகை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி; யோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்களைவிட நாம் இந்த இந்த வகைகளில் சிறப்பாக இருக்கிறோம் என்று ஒப்பிட்டுசொல்வது ஒரு ரகம்,

யோகத்தில் கற்றுத்தருவதில் அல்லது விளக்குவதில் மற்றவர்கள் இந்த இந்த வகைகளில் மோசமாக இருக்கிறார்கள் என்று சொல்வது மற்றொரு ரகம்,

சம்பந்தபட்ட கட்டுரையில் மட்டும் திரு ஓம்கார் இரண்டாவது ரகத்துக்கு வந்துவிட்டதாக நாம் உணர்ந்ததாலே இந்த கட்டுரை. மற்றபடி அவர்மீது மரியாதையே வைத்திருக்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் இங்கே \\ குறிகளுக்குள் கொடுத்துள்ள அவரின் வார்த்தைகள், சம்பந்தபட்ட இடுகையின் மொத்த சாராம்சத்தையும் வெளிப்படுத்துவதாக நாம் கருதுகிறோம்.

இனி என்னுடைய பார்வையில் பெரிய விஷயஞானம் ஏதும் இல்லாமல் எளிமையாக
(இருந்தாத்தானே வர்றதுக்கு)—பார்ப்போம்.

\\நாளாக நாளாக மூளை மற்றும் மூல தனம் குறைந்து பிறரை ஏமாற்றி பொருள்சேர்க்கும் தன்மை அதிகரித்து வருகிறது.\\

இதை தாங்கள் சாதாரண பதிவராக சொல்கிறீர்களா? அல்லது ஜோதிட வல்லுநராக சொல்கிறீர்களா? ’

’காலம்’ பற்றி APRIL 3—விளக்கம் சரிதான். அதையே காலத்திற்கும் பொருத்திப்பாருங்கள். இங்கு ஏமாற்றத்திற்கும் பொருத்திப் பாருங்கள். ஏமாற்றவில்லை என்பதாகவும் புரியும். இதே தத்துவத்தைதான் வாழ்க்கைக்கு உபயோகமாக ஜீரோவில் MARCH 19 -நாம் சொல்லி இருக்கிறோம்.
பொருளாதாரமாக பார்த்தால்கூட கட்டணம் பெறுவது, எப்படி அவர்களை ஏமாற்றுவதாக அமையும். சொல்லிக் கொடுக்கும் விஷயத்திலும் ஏமாற்றவில்லை.அதை பின்னர் பார்ப்போம்.

\\தற்காலத்தில் யோகசாஸ்திரத்தை மக்கள் எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதைத்தான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.\\

யாரும் சீரழிக்கவில்லை. யோகத்தில், யானையைக் கண்ட குருடன் போல் மக்கள் இருக்கின்றனர். தங்களை போன்றோர் அவனுக்கு சரியான பார்வையைக் கொடுத்து யானையை இன்னதென்று உணர்த்தவேண்டும். மாறாக யானையை சீரழிக்கிறான் என்று குறைசொல்ல தாங்கள் தேவையில்லை.

இன்னொரு குருடனே போதும்.,

\\உடலை வளைத்து செய்யும் ஆசனா எனும் அஷ்டாங்க யோகத்தின் உள்பிரிவு யோகா என தற்காலத்தில் தவறாக கூறப்படுகிறது.\\
யோகா செய்தேன் என்றால் ஆசனம் செய்தேன் என்றோ, ப்ராணாயமம் செய்தேன் என்றோ அர்த்தம் கொள்ள வேண்டி இருக்கிறது. \\


அதைப்பற்றித் தெரிந்த, தங்களைப் போன்ற சிறுபான்மையினர் சொல்வது சரிதான்.

ஆனாலும் பெரும்பான்மையான யோகத்தைப் பற்றி தெரியாத மக்களிடம் ( நம்மாளுக்கு தியானம், தவம், யோகம், ஞானம் எல்லாம் ஒன்னுதானே! என்னமோ கண்ணைமூடி உட்காருங்கிறாங்க.., கையத்தூக்கு, கால அசைங்கிறாங்க.)அறிமுகப்படுத்தும் விதமாக, பொதுவாக அப்படி சொல்வதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.

தேர்தல் என்கிற வார்த்தை இப்போது சொல்லப்பட்டால், அது ஒன்றும் தவறில்லையே. பாராளுமன்ற தேர்தல் என்று அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கிறது என சலித்து கொள்வீர்களோ? சட்டமன்ற,உள்ளாட்சி,உட்கட்சி தேர்தல் என பல வகைகள் உள்ளது. எனவே தேர்தல் என்ற சொல்லை இங்கே தவறாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சொல்வீர்களோ? இடத்திற்கு தகுந்தாற்போல் பொருள்கொள்வதில் என்ன தவறு?

\\நமது நாட்டில் யோக பயிற்சி பள்ளிகள் யோகாவை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)\\\\

”நமது நாட்டில் ஜோதிடப் பயிற்சி பள்ளிகள் ஜோதிடத்தை வியாபாரமாகவே செய்கிறார்கள் என சொல்ல வேண்டி இருக்கிறது. (இதில் சிலர் விதிவிலக்கு - விதிவிலக்குகள் ஆதாரமானவையாக எப்பொழுதும் கொள்ள கூடாதே)—”

இப்படி நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்குமா? ஏன் இந்த தாக்குதல்?

யோகம் என்ற வார்த்தைக்கு பதில் ஜோதிடம் என்ற வார்த்தையை போட்டால், நான் ஜோதிடத்தை தாக்குவதுபோல் இருக்கிறதா? இல்லையா? ”சாந்தமடைவீராக

தங்களின் பயிற்சிகள் ஒரு வேளை இலவசமாக சேவை நோக்கில் அளிக்கப்படுகிறதா? தாங்கள், தங்கள் மாணவர்களை பொதுமக்களுக்கு இலவசமாக ஜோதிடம் பார்க்க பயிற்றுவிக்கிறீர்களா? .யோகப் பயிற்சி இலாபகரமான வியாபாரமாகவே இருக்கட்டும். என்ன தவறு? பயிற்சிகளை கற்றுக்கொள்பவர் எந்த வகையில் நட்டம் அடைகிறார்? ( நம்மாளுதான் கத்துக்கிறதோடு சரி, செய்வதே இல்லையே )

\\கையை தூக்கு, மூச்சு விடு என சொன்னால் அது யோகா ஆகிவிடுமா?\\

அதன் பலன் என்ன என்று பாருங்கள் எதுவுமே தெரியாதவனுக்கு அப்படிதான் சொல்ல வேண்டும். பின்னர் படிப்படியாக சகல விளக்கமும் தரலாம். புரிந்து கொள்வான்.


\\மாயை எனும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஒருவன் மேலே வர யோக பயிற்சிக்கு சென்றால் அங்கே அவனை குண்டலினி எனும் பெயரில் மாயை எனும் மாபெரும் பள்ளத்தாக்கில் தள்ளுகிறார்கள்.\\\\

கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஜோதிடம் ஒரு சிகரம்!!!!??...ம்ம்ம்ம்
ஜோதிடத்தை விட்டுவிட்டு இதை சொல்லுங்கள். ஒரு சதவீதமேனும் நம்புகிறேன்.

\\குண்டலினி என்பதை குரு ஒருவர் தனிப்பட்ட சிஷ்யனுக்கு போதிக்க வேண்டியது. ஆனால் தற்சமயம் ஒரு விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து பல்லாயிர கணக்கான பேருக்கு சொல்லிகொடுப்பதால் அதன் தாத்பரியம் கெட்டுப்போய் விடுகிறது.\\

ஒன்றும் கெட்டுவிடவில்லை. பல்லாயிரத்தில் பத்தாவது தேறும். ஒன்று தேறினாலும் நன்மையே. குருகுலம் நடத்துவது, இன்று பொருத்தமாக இருக்காது. மக்கள்பெருக்கம் அப்படி. எந்த ஒரு கலையின் தாத்பரியமும் அப்படியேதான் இருக்கும். அவ்வப்போது தகுதியானவர்களால் முழுமையாக வெளிப்படும். அப்படியே கெட்டுப்போவதாக வைத்துக் கொண்டால்கூட, இராவணன் இல்லை என்றால் இராமன் யார்?

\\இதுபோல யோகம் பயின்றவர்கள் என்னிடம் வந்து “ஸ்வாமிஜீ, எனக்கு புருவ மத்தியில் ஒரு சிவப்பு ஒளி தெரிகிறது” என்பார்கள். இவர்களிடம் நான் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை, அவர்களிடம் கூறுவேன் “காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.\\

இது தரம் குறைந்த பதில். பெருமைபடக் கூடியதுஅல்ல. இதை தங்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை. (அதனாலேயே இந்த இடுகை போடவேண்டியதாகிவிட்டது) “அப்படியா தொடர்ந்து கவனியுங்கள். இத்தனை நாள் நாம் வெளியே மட்டுமே பார்த்து பழகியிருக்கிறோம். இப்பத்தானே உள்ளே கவனிக்கிறீங்க, இன்னும் பல விசயங்கள் நடக்கும்,” என்று யோகம் பயில்பவரை ஊக்கப்படுத்தி இருக்கவேண்டும். உங்கள் பதிலால் அவன் யோகம் என்பது ஏதோ தவறானது என்று ஓடியே போயிருப்பான். திருப்தியா?

உங்களுக்கு தெரியாதா உள்ளே ஒளி தெரிவது, யோகத்தில் PRE KG மாதிரிதானே என்று.?

என் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர் இந்த அமைப்பிற்கு இந்நேரம் புல் பூண்டு முளைத்து பூத்திருக்கவேண்டுமே? என்று அதிர்ச்சியடைந்தார். சரி உங்களிடம் நான் வந்து, இது பற்றி கேட்டால், “ஜாதகத்தைக் கொடுங்கள். அவர் கணிப்பில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. நல்ல நிலையில் இருப்பதற்கான ஏதோ ஒரு கணிப்பு அவரால் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்று சொல்வீர்களா?”
அல்லது “பூவைப் பறித்து தலையில் வையுங்கள் என்று சொல்வீர்களா? (“காத்திருங்கள், ஒளி பச்சையானதும் வண்டியை ஸ்டார்ட் செய்து செல்லுங்கள்” என்பேன்.)

இதற்கு நமது பேச்சுவழக்கில் சொன்னால் ‘எ……த்தாளம்’ என்று பொருள்.

இந்த கிண்டல், நையாண்டி, தங்கள் செயல்பாடுகளுக்கு பொருத்தமானது அல்ல தங்களுக்கு உரிய அணிகலனும் அல்ல. அப்படித்தான் இருப்பேன் என்றால் அது உங்கள் உரிமை. நான் நேரடியான கருத்துப் பரிமாற்றத்திற்கு வராமல் தாரளமாக ஒதுங்கிக் கொள்கிறேன்.


\\எனக்கு தெரிந்து இது போன்ற யோகபயிற்சியில் மனநிலை தவறியவர்கள் அதிகம். ஒரு குருவிடம் கற்றுக்கொள்ளும் பொழுது அவருக்கு நேரும் மாற்றத்தை கவனித்து வழிநடத்துவார். இவர்கள் யோக பயிற்சியில் ஒரு மணி நேரம் கற்றுக்கொண்டு பிறகு குருவை வந்து சந்திர்ப்பதே இல்லை. \\

யோகத்தினால் மனநிலை தவறுவதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். மனநிலை தடுமாற்றத்திற்கு யோகம் காரணமல்ல. ஜோதிடம் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஒரு மணி நேரம் கற்றுக் கொள்பவன் குருவை சந்திக்க அவசியம் இல்லை. குரு தகுதியான சிஷ்யனைத் .தேடி வருவார்தானே!! (இது உங்கள் வார்த்தை)

\\அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் யோக பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் இமாலயத்தில் ஒரு பாப்பாஜியோ அல்லது பாபாஜியோ சொல்லிகொடுத்தார். அவர் என் கண்களுக்கு மட்டும் தெரிவார் என சொல்லுங்கள்.\\

”அதனால் தான் சொல்லுகிறேன் உங்களுக்கு நல்ல தொழில் வேண்டும் என்றால் ஜோதிட பயிற்சியாளர் ஆகிவிடுங்கள். எங்கே படித்தீர்கள் என்றால் கோவையில் ஒம்கார்ஜி சொல்லிகொடுத்தார். அவர் எல்லார் கண்களுக்கும் தெரிவார் என சொல்லுங்கள்.-

என்று நான் சொன்னால் அது சரியானதா?” அது நக்கல் இல்லையா?

இந்த காழ்ப்புணர்ச்சி ஆரோக்கியமானதல்ல.உங்களை சராசி மனிதனாக நான் பார்க்கவில்லை.

இது போதாது என்று பின்னூட்டத்தில் வேறு பிதற்றல்…

\\திரு அப்துல்லா அண்ணே,

கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...!

இதை எழுதும் பொழுது எனக்கு பரிதாபமே வருகிறது.\\

தங்களை நினைத்தால் எனக்கு அதைவிடபரிதாபமாக உள்ளது. இப்போது தாங்கள் குண்டலினி சக்தியை உணர்ந்தவராக இருந்தால், குண்டலினியால் ஒரு ஓம்கார் “பூரண கால தந்திரி” இச்சமுதாயத்திற்கு கிடைத்துள்ளார் என உண்மையில் நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இது நன்மையா? இல்லையா? (உணர்ந்திருந்தால், மனநிலை பாதிப்பிற்கு குண்டலினி காரணமில்லை எனப் புரிந்திருக்கும்.)

இல்லை, குண்டலினியை உணரவில்லை என்றால், உணராத நீங்கள் எப்படி ’கோவையின் பிரபல பொறியியல் கல்லூரியின் துறைதலைவராக இருந்தவர் இப்பொழுது ஊட்டி ரோடுகளில் மனநலம் இல்லாமல் அலைகிறார். எல்லாம் குண்டலினி ...!’ என்று சொல்லலாம்?

உண்மையை சரியாக ஒருவர் சொல்லவில்லை எனில் அதில் பெரிய தவறேதும் இல்லை.
அந்த பொறுப்பை முடிந்தவரை நாம் சரிசெய்யலாம். மாறாக அவர்களை மோசமாக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜோதிடக்கலையை வளர்த்துங்கள். மகிழ்ச்சியே,
நோயாளிக்கு, நல்ல மருத்துவர் தேவைதான்.

ஆனால் அதற்காக எந்த உருவில் தாங்கள் யோகத்தை, அல்லது யோகத்தை சொல்லிக்கொடுக்கும் விதத்தை விமர்சித்தால் அது பூமராங் போல் உங்களிடமே திரும்ப வரும். (நான் சொல்லிக் கொடுப்பவன் அல்ல) அதே சமயம் ஒருவரிடத்தில் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடு இருந்தால் விமர்சிக்கலாம். அதில் தவறேதுமில்லை.

பொறுப்பை உணர்ந்து பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வாழ்த்துகிறேன். இது வேண்டுகோள் அல்ல. இது பச்சைக்கு பின் வரும் மஞ்சள்.

மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்…

Saturday, April 18, 2009

ஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....

ஒரு விஞ்ஞானி, எலிகளை ஆராய்ச்சி செய்பவர். தன் ஆராய்ச்சிக்காக பல எலிகளை வைத்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

எலிகளை மனிதன் தன் கட்டளைப்படி கேட்கச் செய்யமுடியும் என தீவீரமாக நம்பினார். அது சம்பந்தமாக அவருடைய ஆய்வின் போக்கு அமைந்திருந்தது.

முதலில் அதை உணவு விசயத்தில் பழக்க முடிவு செய்தார். அதற்கு பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி, எலியை, அந்த கட்டளைக்கு கீழ்படியப் பழக்கினார். ஒன்றும் பலன் இல்லை. அது தன் இஷ்டப்படி, அவ்வப்போது கூண்டை விட்டு வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தது.

சரி இது ஆகாது என முடிவு செய்து, உணவு கொடுக்கும் நேரங்களை மாற்றி அமைத்துப் பார்த்தார்.சில சமயங்களில் எலி வந்து உணவை எடுத்துக் கொண்டது. சில சமயங்களில் உணவு சாப்பிடவில்லை.

சரி இதுவும் ஆகாது, என முடிவு செய்து தானியங்கி ஒலி எழுப்பும் மணி ஒன்றை நிறுவினார்.உணவுநேரத்திற்கு முன் மணியை ஒலிக்க செய்தார். மணி சப்தம் கேட்டவுடன் எலிக்கு தவறாமல் உணவு வைத்தார். ஓரிரு நாட்களில் எலி கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொண்டது. பின்னர் தொடர்ந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

கிட்டதட்ட ஒரு மாத காலம் இதற்கு ஆனது. இறுதியாக தனது ஆராய்ச்சி குறிப்பில் விஞ்ஞானி இவ்வாறு எழுதினார்.

எலி எந்த சப்தத்திற்கும் கீழ்படியாது. மணி சப்தத்திற்கு மட்டுமே கீழ்படியும். இதுவே நான் கண்ட உண்மை என நிறைவு செய்தார்









அன்று இரவு புதிதாக வந்த எலி ஒன்று நமது எலியிடம், என்ன அண்ணே! எப்படி இருக்குது இந்த வாழ்க்கை, விஞ்ஞானி நல்லவரா? எனக் கேட்டது.

அட அத ஏன் கேட்கிற? ஒரு மாசமா இந்த ஆள்கிட்ட நா பட்டபாடு, ! பசிக்கிற நேரத்துக்கு ஒழுங்கா சாப்பாடு வைக்கத்தெரியல. ஒரு வழியா மணி அடித்தவுடன் சாப்பாடு வைக்கிற மாதிரி பழக்கறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்து போச்சு போ! என்றது.

நண்பர்களே பலசமயங்களிலும் நாம் எலியாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ இருக்கிறோம்.

உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புரிந்து கொள்வதிலும் இந்த நிலைதான் இருக்கிறது.

சரி இதற்கும் ஓம்காருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இப்போதைக்கு நான் எலி, ஓம்கார் விஞ்ஞானி

மீண்டும் அவசியம் சந்திப்போம்.

அடுத்த இடுகையின் தலைப்பு

உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)


Tuesday, April 14, 2009

மனநல காப்பகமும் ...அரசியல்வாதியும்...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் அருகே ஊத்துக்குளி ரோடில் உள்ள S.பெரியபாளையம் ஊரில் அமைந்துள்ள ’கருணை இல்லம்’அமைப்பிற்கு சென்றிருந்தோம்.

அங்கே உடல் ஊனமுற்றவர்,மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் என மொத்தம் 72 நபர்கள் தங்கவைத்து பராமரிக்கப் படுகின்றனர். அதன் நிறுவனரே நிர்வாகியாக இருக்கிறார். குடும்பமே அந்த சேவையில் ஈடுபட்டு உள்ளது.

காப்பகத்தில் இருக்கும் சூழ்நிலைகள் ரம்யாவின் ஐம்பதாவது பதிவை படித்து புரிந்து கொள்ளுங்கள்.

நான் சில காப்பகங்களுக்கு குழந்தைகளின் பிறந்தநாட்களை முன்னிட்டு ஒருநாள் செலவினை அன்போடு வழங்கிவருவது வழக்கம். நான் பார்த்தவரை ஓரளவிற்கு எல்லா இல்லங்களுமே அருள்கொடையாளர்களின் நன்கொடைகளால் நன்கு பராமரிக்கப்பெற்று இருந்தன.

விசயமே இனிமேல்தான்...

ஆனால் இந்த கருணைஇல்லமோ தகுந்த விளம்பரம் இல்லாததாலோ என்னவோ எளிமையாகத்தான் இருந்தது. இடப் பரப்பளவு சுமார் இரண்டரை ஏக்கர். நிறுவனர் வேலுச்சாமியின் பூர்வீக நிலம். முழுமையாக இதற்கென ஒதுக்கிவிட்டார். அதனுடைய இன்றைய மதிப்பு சுமாராக 2 கோடி இருக்கலாம்.

உள்ளூர் பஞ்சாயத்து முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் உடமையாக்கப்பட்ட நிலம், இந்த காப்பகத்திற்கு எதிரே உள்ளது. அதை வாங்க வருபவர்கள், எதிரே காப்பகத்தை பார்த்தவுடன் வாங்க மறுத்து சென்றுவிடுகிறார்களாம். இது ஒரு காரணம்.

நிறுவனருக்கு வாரிசு இல்லாததால் பிற்காலத்தில் இந்த நிலத்தையும் அபகரிக்க எண்ணி தன்னை அந்த காப்பகத்திற்கு தலைவராக நியமிக்க அதிகாரத்தை பயன்படுத்தி வற்புறுத்துகிறாராம். இது மற்றொரு காரணம்.

ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் போட்டிருக்கிறார்.

இந்த விசயம் CM தாத்தா வரை விசயம் போயும்(!?!!) இன்னும் காப்பகத்திற்கு விடிவு பிறக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக குடிதண்ணீர் சப்ளை தரப்படவில்லை. விளைவு தினமும் (ரூபாய் 200 க்கு) விலைக்கு குடிதண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஒரு வார கால தண்ணீர் செலவைக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத்துணைவி வாங்கிவந்த அரிசி மூட்டையையும் கொடுத்துவிட்டு, அவரோடு பேசிக் கொண்டு இருக்கும்போது

”தண்ணீருக்கு இந்த கஷ்டப்படவேண்டியுள்ளதே என்ன செய்யலாம். மீடியா-வின் கவனத்திற்கு கொண்டு போய்விடலாமா?” என்றேன்.

அதற்கு அவர் ”வேண்டாம். இப்பொழுதே மிகுந்த எதிர்ப்பை
சமாளித்து கொண்டு இருக்கிறேன். அது இன்னும் அதிகமாகிவிடும்.
காப்பக பராமரிப்புக்கு பொருளோ, பணமோ நண்பர்களிடம் சொல்லி
உதவுங்கள். அதுவே போதுமானது”.என்றார்.

பாருங்களேன்.. நம் அரசியல்வாதிகளின் லட்சணத்தை

உதவ மனமில்லாவிட்டாலும், உபத்திரவம் பண்ணாமல் இருக்கலாம் அல்லவா!!

சரி இந்த விஷயத்தில் நாம் முடிந்தால் உதவி செய்யலாமே..பொதுவாக காப்பகங்களுக்கு உதவுவது சிறப்பு என்றாலும், அதோடு சேவை மனப்பான்மையோடு சொத்து முழுவதையும் அர்ப்பணித்து, அதிலேயே சேவையும் ஆற்றுகிற ஒரு அன்புள்ளம் கொண்ட நபருக்கு அரசியல் எதிர்ப்பையும் சந்திக்கவேண்டிய அவலம்,கொடுமை நேர்ந்திருக்கிறது.

அவர் தேவையான மனவலிமை பெற பிரார்த்திப்பதோடு பொருளோ, பணமோ முடிந்தவரை உதவி செய்வோமே...பதிவர்களால் ஒரு நன்மை நடக்கட்டுமே...

தொடர்புக்கு..

கருணை இல்லம்
பதிவு எண் 18..2003
Dr.K.வேலுச்சாமி M.com.,M.A.,M.Lit.,
S.பெரியபாளையம்,
ஊத்துக்குளி ரோடு
திருப்பூர்-641607

தொலைபேசி:0421-291887. 0421-6541998

நன்றி

தீயினும் கொடியது காமம்! (18+)

மலரினும் மெல்லியது காமம் என்ற வள்ளுவன், இன்று வாழ்ந்தால் இப்படிச் சொல்வானா என்பது ஐயமே. 8 வயது பள்ளிச் சிறுமியை அவளது பள்ளியின் தலைமை ஆசிரியரே கற்பழிக்கிறார். தம் மனைவிக்கு, தாம் ஊரில் இல்லாதபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என்று 62 வயது தாய்மாமனையும் 63 வயதுச் சித்தப்பனையும் தம் மனைவியுடன் இருக்கச் செய்கிறார்.

இந்த 25 வயதுப் பெண்ணை இந்த இரு கிழவர்களும் கற்பழித்துக் கொன்றும் போடுகிறார்கள். இந்தத் தாய்மாமன் இப்பெண்ணுக்குச் சிற்றப்பன் முறை. அந்தச் சிற்றப்பனோ மாமன்முறை.

முறையாவது வெங்காயமாவது? வயது, தரம் உணராமல் காமம் வளர்த்துக்கொள். அதை யார் மீது வேண்டுமானாலும் பிரயோகி என்று கீழ்த்தரமாக எண்ணுமளவு பண்பாடு பற்றி வாயின் இருமுனைகளும் காதுகளைத் தொடுமளவு பேசும் தமிழகத்தில் இவ்விரு சம்பவங்களும் நடந்துள்ளன. இன்னும் கேவலமான உதாரணங்களையும் என்னால் காட்ட முடியும்.

இவ்விரு சம்பவங்களும் சில தினங்களின் இடைவெளியில் நடந்துள்ளதாலும், மிக அண்மையில் நடந்துள்ளதாலும் தமிழகம் எங்குதான் போய்க்கொண்டிருக்கிறது என்று மதிப்பிடத் தோன்றியது.

இவ்விரு சம்பவங்களிலிருந்து இரு உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நம் சமூகத்திற்கு உணர்த்தத் தோன்றியதன் விளைவே இக்கட்டுரை.

பெண்பிள்ளைகளைக் குடும்ப உறுப்பினர்களாகக் கொண்டவர்கள் எவரையும் எளிதில் நம்பாதீர்கள். ‘சேச்சே! அவரைப் பற்றி அப்படியெல்லாம் கனவில்கூட நினைக்கக்கூடாது’ என்கிற நம்பிக்கைகளெல்லாம் தவிடுபொடியாகிக்கொண்டிருக்கிற காலம் இது.

பார்க்க அப்பாவியாய் இருக்கிற பலர் மனத்திற்குள் பொல்லாத வக்கிரங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புற்றிலிருந்தா இந்தப் பாம்பு கிளம்பியது என ஊகிக்க முடியாத நிலை.

சமூகத்தின் வக்கிரக் குணங்களைச் சூடேற்றிவிட்டுக் கொண்டிருப்பவை இன்றைய ஊடகங்களே.

எதுவும் தவறில்லை; சும்மா அனுபவி என்றே இன்றைய பொறுப்பற்ற ஊடகங்கள் பல உணர்வுகளுக்கு உசுப்பேற்றிக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் பத்திரிகைகளின் பங்கும் உண்டு என்றாலும் இவற்றின் பங்களிப்புக் குறைவே. சின்னத்திரையும், பெரிய திரையும், கணினி, செல்போன்கள் வழியேயும் மக்கள் மனத்தில் கொடூர எண்ணங்கள் வளர்க்கப்படுகின்றன. அடைகாத்து அடைகாத்து அவை குஞ்சு பொரிக்கின்றன.

வாய்ப்புகள் உருவாகும்போது வடிகால்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். வாய்ப்புக் கிட்டாதவர்கள் வேறு வழியின்றி நல்லவர்களாக நமக்குக் காட்சியளிக்கிறார்கள்.

ஊடகங்களின் போக்கை மாற்றி அவற்றிற்குப் பொறுப்புணர்ச்சியை ஊட்டமுடியும் என்பதில் எனக்கு அரைகுறை நம்பிக்கையே இருக்கிறது. ஆனால் யார் மனசில யாரு? யார் மனசில என்ன இருக்கு? என்பதை ஊகிக்க ஆற்றலற்ற நாம், பெண்களுக்கு மிகப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் தருவதிலாவது கூடுதல் கவனம் செலுத்தலாம்.

(கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் சமீபத்திய கட்டுரை படித்தேன். அதை நண்பர்களோடு பகிர்ந்துகொண்டேன். இவருடைய ஒரு பக்க கட்டுரைகளும் நன்றாகவே இருக்கும். வாய்ப்பிருந்தால் தொடர்ந்து படியுங்கள்)

நன்றி: தமிழ்வாணன்.காம்

Monday, April 13, 2009

மன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....

மனிதர்களுக்குத் தோன்றும் விதவிதமான கவலைகளை எந்தவொரு புத்தகத்திலும் (பதிவிலும்) அடக்கிவிட முடியாது. கவலைகளுக்கு முடிவே கிடையாது.

எதைப் பற்றியாவது, சதா யோசித்துக்கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும் இருப்பது மனித சுபாவம்.

சின்னச் சின்னதாகத் தோன்றும் கவலைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் அவை தோன்றும் வேகத்திலேயே காணாமல் போய்விடும்.

பஸ் வருமா, வராதா என்ற கவலை, பஸ் வந்தால் தீர்ந்துவிடும்.பரிட்சையில் பாஸ் ஆகிவிட்டால், பரீட்சை பற்றிய கவலை தீர்ந்துவிடும்.

அதேசமயம் பரீட்சையில் பெயில். அது மூட் அவுட் ஆக்கும் சங்கதிதான்.ஆனால் அடுத்தது என்ன செய்வது என்று சிந்தித்து, அப்போதே அதிலிருந்து மீண்டு விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை.

மீளா விட்டால்தான் பிரச்சினை, மன அழுத்தம் என்ற விஷயம் இங்கேதான் வருகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டால், மனம் மட்டுமல்ல, உடலும் சேர்ந்தே பாதிப்படைகிறது. அதனால்தான் ”பிரச்சினையா? என்னால் முடியவே முடியாது சாமி” என சோர்ந்து ஒடுங்கி விடுகின்றனர் பலர்.

அதோடு நம் எண்ணங்கள் மாறுகின்றன. நமது சாப்பிடும் முறை மாறுகிறது.தூக்கம் கெடுகிறது. மூச்சு குறுகி விடும். மொத்தத்தில் நம்மை முற்றிலுமாக தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.

மன அழுத்தம் தாக்கும்போது பயப்படக்கூடாது. உடைந்து போகக்கூடாது


மன அழுத்தம் என்பது ஒரு மூட், மனநிலை. அவ்வளவுதான்..அதில் அழுந்திவிடக் கூடாது.


ஆரம்பநிலையில் ’வாழ்க்கையே வெறுமையா இருக்கு. ரொம்ப போரடிக்குது.என்ன செய்யறதுன்னே தெரியலே ’இப்படி ஓர் எண்ணம் வந்தால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிய வேண்டும். என்ன செய்தால் வெறுமை ஒழியும், எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறது என்று நமக்குநாமே டிடெக்டிவ்வாக மாறி கண்டு பிடிக்க வேண்டும்.

மாறாக மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டால் பிரச்சினை தீராது. மாறாக அதிகரிக்கவே செய்யும்.யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும். கணவனோ, மனைவியோ, பெற்றோர் அல்லது நண்பராக இருக்கலாம். அப்படி பேசினால்தான் மன பாரம் குறையும். புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.

சரி, பிறருக்கு மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் நாம் என்ன செய்யலாம்?

அவர்களோடு மனம் விட்டுப் பேசவேண்டும். மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்கள், பிறருடைய அரவணைப்பை எதிர்பார்ப்பார்கள். நல்ல விதமாக யாரவது நாலு வார்த்தை சொல்லமாட்டார்களா? என்று ஏங்குவார்கள்.

என்ன....அவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர இனிமேல் உதவுவீர்களா?

(தொடரும்)

நன்றி; கருத்து நோ ப்ராப்ளம் -- (சிபிகே சாலமன்) நூலில் இருந்து