"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, April 29, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 6

நோய், மனச்சோர்வு, சந்தேகம் இவைகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் ஆகும். தொடர்ந்து பார்ப்போம்...


ஊக்கம் இன்மையும், சோம்பலும் பார்க்க வேறுவேறு ஆகத் தோன்றினாலும் இவைகள் அண்ணன் தம்பிகள்தாம்:) 

 ஆன்மீகப்பயிற்சிகள் எதுவாக இருந்தாலும், ஊக்கத்துடன், தீவிரமாக ஈடுபடவேண்டியதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோ என்று செய்தால் அதில் எந்த பலனும் கிடைக்காது. அதைவிட பயிற்சிகளைச் செய்தால் நல்லது எனத் தெளிவாக நமக்குத் தெரியும். ஆனால் மனம் நாளைக்குச் செய்யலாம் எனச் சாதாரணமாக தள்ளிப்போட்டுவிடும். இன்னும் பயிற்சியைத் துவக்கியவுடன் நமது எண்ணங்களைச் சிதறடித்து அப்படியே நேரத்தை போக்கி பயிற்சியை நிறுத்தி விடும். இந்தச் சோம்பலை விரட்ட மதி ஒன்றே போதும். உங்களுக்கு நீங்களே உற்சாகமூட்டிக்கொண்டு தன்னம்பிக்கையோடு செய்ய வேண்டியதுதான். இந்த இடத்தில் விதிவழி என்று போகாமல் மதிவழியே போனால் மட்டுமே நமது வாழ்வு செம்மைப்படும். அடுத்ததாக சோம்பல் அலட்சியம் என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு வரும்.  ”என்னை மாதிரி பயிற்சி செய்ய ஆளே கிடையாது. ஆனா, செஞ்சா போதும்  இப்ப என்ன அவசரம்? இன்னிக்கு செய்யாட்டி என்ன குடியா முழுகிப்போயிடும்?” என்று அலட்சியப் போக்கினை காட்டும். இதெல்லாம் உங்கள் மனதின் விளையாட்டு என்று புரிந்து செயல்படுங்கள்.



6.புலனின்பம் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களுக்கு போதுமான ஓய்வினைக் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் இவற்றின் வழியாக செலவாகும் அதிக பட்ச உடல்சக்தி சேமிக்கப்படும். சினிமா, டிவி அதிகம் பார்ப்பது., அதிகமான சப்தம் வைத்து எந்நேரமும் பாடல் கேட்பது. குறிப்பாக காதில் ஹெட்போன் மாட்டி பாடல் கேட்பது, வாசனைத் திரவியங்களின் பயன்பாடு, உணவு ருசியில் நாக்குக்கு அடிமையாக இருப்பது. 4’ இன்ச் நாக்குக்குத்தான் நாம் அடிமை என புரிந்து கொள்ளுங்கள். அசைவம் தினமும் உண்பவராக நீங்கள் இருந்தால் வாரம் ஒருமுறை, மாதம் இருமுறை, மாதம் ஒருமுறை ஆறுமாதத்திற்கு ஒருமுறை எனத் தள்ளிப்போட்டுப்பாருங்கள். உங்கள் மனம் அசைவத்தை கேட்காது நாக்குதான் ருசிக்கு அலைகிறது என்பதை தெளிவாக உணரமுடியும்.

தொடு உணர்வு என்பது பாலுணர்வில் தத்தமது வாழ்க்கைத் துணையோடு மட்டும் சுகித்திருத்தல் மிக முக்கியம். மாறாக கிடைக்கிற துணையோடு எல்லாம் கூடுவது என்றால் மனம் ஆன்மீகப்பயிற்சிகளில் ஈடுபடாது. புலன் இன்பங்களில் மட்டுமே கண்மண் தெரியாமால் மூழ்கிக்கிடக்கும். இதிலெல்லாம் அளவு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தான் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது.

ஆன்மீகத்தைப்பற்றி ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கும், பல வருடங்கள் ஈடுபட்டும் மலர்ச்சி அடைய இயலாதவர்களுக்கும் இவையெல்லாம் மிக முக்கியமான் செய்திகள். ஐம்புலனின்பங்களை விட்டுப்போட்டு எதுக்கு தியானம் தவம், என்பவர்கள் தாராளமாக புலனின்பங்களில் ஈடுபட்டு, வாழலாம். . மாறாக ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனக்கும், ஆன்மீகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்காது. இது போன்ற அன்பர்களைத்தான் நாத்திக நண்பர்கள் குறிவைத்துத் தாக்க வேண்டியதாக இருக்கிறது. பகடி செய்ய வேண்டியதாக இருக்கிறது.:)


(இன்னும் தொடர்வோம்)

6 comments:

  1. Excellent. மிக அருமையாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆன்மீகத்தில் தோல்வி அடைவது இதனால் தான். ஆன்மீகம் அனைவருக்கும் போது, அது இது போன்ற சில காரணிகளால் தான் ஒருவருக்கு சித்திகறது, மற்றவருக்கு கிடைக்காமல் போகிறது. நன்றி

    ReplyDelete
  2. விதிவழி என்று போகாமல் மதிவழியே போனால் மட்டுமே நமது வாழ்வு செம்மைப்படும். //
    ஆழ்ந்தகருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. //ஆன்மீகத்தைப்பற்றி ஓரளவிற்கு தெரிந்தவர்களுக்கும், பல வருடங்கள் ஈடுபட்டும் மலர்ச்சி அடைய இயலாதவர்களுக்கும் இவையெல்லாம் மிக முக்கியமான் செய்திகள்.//

    நல்ல ஆய்வு

    ReplyDelete
  4. இது வெல்லம்-ஆன்மீகம் :)

    ReplyDelete
  5. கட்டுரையும், எழுத்துக்கோர்வையும் நன்றாக அமைந்துள்ளது, எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அவை முக்கியமற்றதாகக் கருதி வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. @கோவி.கண்ணன்

    தங்களின் அகம் மகிழ்ந்த வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்.

    மாற்றுக்கருத்துகளை இருப்பின் அதைத் தெரிவிக்கலாமே..

    நான் என் கருத்தில் எப்போதுமே பிடிவாதமாக இருப்பதில்லை. சரியான விளக்கம் கிடைத்தால் ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)