"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, June 4, 2009

தன்னை உள்ளும் புறமும் திரும்பிப் பார்க்கும் சங்கிலித்தொடர்பதிவு

இந்த தொடர்பதிவு இணைய நண்பர்களிடம் வலைய வரும்போதே, நண்பர் கோவி கண்ணன் அவர்கள் மூலமாக தான் எனக்கு அழைப்பு வரும் என்பதில் மிகஉறுதியாய் இருந்தேன். (இது எதிர்பார்ப்பு அல்ல) நிச்சயமானதாய்..

அழைப்புக்கு நன்றி கோவியாரே

சரி, இது என் முறை, வாருங்கள்


1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.

கோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)


என் பெயர் சிவசுப்பிரமணியன். கொங்குமண்டலம் ஆனதால் இஷ்ட தெய்வம் முருகனின் பெயர் என்பதாக என் தந்தை சொல்லி இருக்கிறார். வால்பையன் சாட்டிங்கின்போது அண்ணா என்று என்னை அழைத்ததால், இங்கே வயது குறிப்பிடுகிறேன் 41

2.கடைசியாக அழுதது எப்போது..?

நான்கு வருடம் முன்., என் மனைவி இரண்டாவது குழந்தையை சுகப் பிரசவமாக பெற்று எடுத்தபோது, அவள் பட்ட உடல் வேதனையைப் பார்த்து..(இயல்பான வேதனைதான்., நம்மால்,நமக்காக இப்படி கஷ்டப்படுகிறாளே என்றுதான்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
பிடிக்கும், தலையெழுத்தையும் பிடிக்கும்

4.பிடித்த மதிய உணவு..

கிடைத்த சைவ உணவு, நாக்குக்கு அப்படித்தான் உத்தரவு போட்டு வைத்துள்ளேன்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. முதலில் சாதரணமாக பழகுவேன். பின் அலைவரிசை ஒத்து வந்தால்தான் நெருக்கமாவேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியில்தான்., குளிக்கும்போது கொஞ்சம் தண்ணீரை ருசிப்பதுண்டு. அது அருவியில்தான் இனிமையாக அனுபவிக்க முடியும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..

பேசும் விதத்தை., மனதை., அது அவரைப் பற்றி கணிக்க உதவும். மனதளவில் நெருங்க உதவும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: தெரியவில்லை

பிடிக்காதது: கொஞ்சம் சோம்பேறித்தனம்


9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..

பிடித்த : குடும்ப நிர்வாகத்திற்கான உடல் உழைப்பு,

பிடிக்காத: குழந்தைகளின் குறும்பு எல்லை மீறும்போது கண்டிப்பது


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாரும் இல்லை.



11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?

பிரவுன் பேண்ட், லைட் வயலெட் சர்ட்


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..

எதுவுமில்லை. கணினியிலோ, தனியாகவோ பாட்டு கேட்பதில்லை. பழைய திரைப்பாடல்கள் பிடிக்கும்.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம் அல்லது கருப்பு, அப்போதுதான் பிற்ர் எளிதாகபடிக்க உதவியாக இருக்க முடியும்.

14.பிடித்த மணம்..

எல்லாமுமே., எதையும் மூக்கு ஏற்றுக்கொண்டாக வேண்டும். (விளையாடி ஓயும் என் குழந்தையின் வியர்வை மணம்)



15.நீங்க/உங்களால் அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..

ஷண்முகப்ரியனின் 'படித்துறை' - ஆன்மீகம் குறித்த தெளிவான பார்வை இவரிடம் இருப்பதாக கருதுகிறேன். இவர் எழுத்தை படிக்கிறபோதே ஒரு நெருங்கிய உணர்வு ஏற்படுகிறது. இன்னும் நெருக்கமாகத்தான்.

சாஸ்திரம் பற்றிய திரட்டு - யோகம் பற்றி போதுமான அளவு அறிந்து வைத்துள்ளவர்.

அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.:)) (சும்மா)
இவரால் சமுதாயத்திற்கு நிறைய மாற்றங்கள் வரும் என உண்மையாக நினைப்பதால்.

நெஞ்சின் அலைகள்- தமிழில் பிரபஞ்ச அறிவியல் கோட்பாடுகளை கடுமையாக உழைத்து, அருமையாக கொடுத்துக் கொண்டு இருப்பவர். அதனாலேயே தனி இடம் இவருக்கு. (இந்த ஏரியாவ யாருமே தொடுவதில்லையே)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?

17.பிடித்த விளையாட்டு...

ஒரு காலில் நொண்டி அடிப்பது.., அறைக்குள்ளேயே ஏழு நிமிடம் தொடர்ந்தாற்போல் நொண்டியுடன் நடனம் ஆடிப் பாருங்களேன்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

நகைச்சுவைப் படங்கள்,

20.கடைசியாக பார்த்த படம்..

சூர்யாவின் காக்க.. காக்க..

21.பிடித்த பருவ காலம்...

இந்த உடலுக்கு வெயிற்காலம்

.22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

பிரமிள் அவ்ர்களின் சாது அப்பாதுரையின் தியான தாரா

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்

மாற்றுவதே இல்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...

பிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பு, பிடிக்காதது: யாரேனும் தவறுதலாக தடுக்கிவிழும்போது அதைப் பார்த்து சிரிப்பவர்களின் சிரிப்பு

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு

திருப்பதி, காளஹஸ்தி

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?

தெரியாத எதையும் ஓரளவிற்கேனும் தெரிந்து கொள்ள முயற்சிப்பது.

+ஞாபக மறதி?!

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியாத ஒரு விஷயம்..

மிகத்தெளிவான குறிப்புகள் கொடுத்தும், அதைப் பின்பற்றாத தொழில்துறை அன்பர்களின் செயல்கள்

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..

இல்லை, அல்லது மனம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..

மலை சார்ந்த இடங்கள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை..

மனம் என் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பது மட்டுமே

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...

வேறென்ன.. இணையத்தில் மேய்வதுதான்

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..

கிடைத்தற்கரிய வரம்

பிற்சேர்க்கை

33. தற்சமயம் உங்களிடம் உள்ள உறுதியான நம்பிக்கை குறித்து

எண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது,

நான் இயல்பாக ஒரு வாரம் முன்னதாகவே உணர்ந்தேன்/எண்ணினேன், அவர் மனதில் அது தூண்டுதலாய் வெளிப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.இப்படி நான் நம்புகிறேன்.

Wednesday, June 3, 2009

முக்கரணத் தவம் -- பகவத் கீதை (17: 14-16)

தவம் என்பது
சரீரத்தால் செய்யப்படுவது,
வாக்கால் செய்யப்படுவது,
மனதால் செய்யப்படுவது

என்று மூவகைப்படும்.

பெரியோர்களுக்கும், குருக்களுக்கும்
செய்யும் சேவை, உடல்சுத்தம்,
ஒழுக்கம், பிரம்மச்சரியம், உயிர்களுக்கு
இம்சை உண்டாக்காமை (அஹிம்சை)
ஆகியன சரீரத்தால் செய்யப்படும் தவம்.

நல்ல நூல்கள் படிப்பது,
பிறரை துன்புறுத்தாமல் பேசுவது,
வாய்மை, பிறருக்கு சந்தோஷம்,
நலன் தரும் இனிய சொல் ஆகியன
நாவினால் செய்யப்படும் வாக்குத்தவம்.

உள்ளத்தில் அமைதி, அன்பு நிறைந்த
உள்ளம், மனதின் மவுன நிலை, தன்னடக்கம்
என்ற புலனடக்கம், ஆணவத்தை அகற்றி அடங்குதல்,
கருத்துத் தூய்மை இவை மனதால் செய்யும் தவம்.

நன்றி: ஞானப்புதையல்.- முனைவர் எம்.இராமலிங்கன், பூர்ணா பதிப்பகம்

இதை உங்களின் சிந்தனையோடு இணைத்துப் பாருங்கள்.
வாழ்வின் பல படிநிலைகளையும் முழுமையாக தவநிலையாக வாழச் சொல்கிறது.

அதில் ஓர் ஓரத்தில் ஒரு பகுதியாய் வருவது பெரியோர்களுக்கும், குருக்களுக்கும் செய்யும் சேவை,

தற்கால நடைமுறையில் பாருங்கள். பொதுவாக சமய ஆன்மீகப் பெரியவர்களுக்கு சேவை செய்வது மட்டுமே முழுஆன்மீகமாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அது மட்டுமல்ல நாத்திக நண்பர்களும் கீதை உருவாக்கப் பட்ட நோக்கமே பார்ப்பனர்களுக்கு அடிவருடத்தான் என்ற கருத்தையே உயர்த்திப் பிடிக்கின்றனர். மற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் எதுவும் தருவதில்லை.

சரியாக புரிந்து கொள்ளாமல் பின்பற்றுவதாலும், அல்லது புரிய வைப்பவரை அடையாளம் காண இயலாதாலும், ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் இந்நிலையில் இருக்க வேண்டியதாகிறது.

காலஓட்டத்தில் நிலைத்துள்ள அனைத்துமத நூல்களும் சரியான செய்தியையே கொடுத்துள்ளன. ஆனால் அதை பின்பற்றுவோரும், எதிர்ப்போரும் சரியான முழுமையான பார்வை பார்ப்பதே இல்லை.

இதனால் மதமோதல்கள், என் மதமே பெரிது என்ற உண்ர்வு,எனநம் மன அமைதியை நாமே குலைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம்.

எதையும் சரியாக உணர முற்படுவோம். நிம்மதியாய் நிகழ்காலத்தில் இருப்போம்.

Sunday, May 31, 2009

அவுங்களும் நானும்

திருப்பூரில் பனியன் தொழிலில் பலதரப்பட்ட வேலைகளை செய்துதான் பனியனை உருவாக்குகிறோம்.

அப்படி போனவாரத்தில் ஒருநாள் பனியனுக்கு தேவையான லேபிள்களை மொத்தமாக வாங்கிவந்து தொழிற்சாலைக்கு எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.

போகும் வழியில் என் வீடு அமைந்துள்ளதால் மதிய உணவை முடித்துக் கொண்டு செல்லும் உத்தேசத்துடன் வீட்டுக்கு வந்தேன்.

பல்வேறு தொழில்ரீதியான சிந்தனைகளுடன், மதிய உணவு முடிந்தவுடன் வேறு சில வேலைகளுக்காக மீண்டும் டவுனுக்கு சென்று திரும்பியவன், அந்த லேபிள் பார்சலை மறந்துவிட்டு சென்று விட்டேன். கம்பெனிக்கு சென்றபின் தான் ஞாபகம் வந்தது. அது உடனே தேவைப்பட்டது.

வீட்டுக்கு போன் பண்ணினேன். போனை எடுத்த அவுங்களிடம் (மனைவி) ஏம்மா, லேபிள் பார்சலை எடுக்க நாந்தான் எடுக்க மறந்திட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்லையா?. இனிமேலாவது சற்று விவரமா இரு” என்று சொல்லிவிட்டு நான்கு கி.மீ திரும்ப வந்து எடுத்து சென்றேன்.

அதற்கு அடுத்த நாள் மீண்டும் பல்வேறு துணிகள், price tag, போன்ற பலவற்றையும் வாங்கி மதிய உணவுக்கு வந்த நான், அவை அவசரமாக தேவைப்படாததாலும், வேறு ஒரு பிரிண்டிங் பட்டறைக்கு போக வேண்டிய காரணத்தினால் அவைகளை வைத்துவிட்டு கிளம்பினேன்.

பைக்கை ஸ்டார்ட் செய்த தருணத்தில் அனைத்து பொருள்களுடன் அவுங்க வந்து நிற்க, ”இப்ப நான் இதையெல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னேனா? சொன்னால் மட்டும் செய்தாப்போதும்” என்று சற்றே அதிகாரத் தோரணையுடன் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவுங்க அமைதியாக திரும்ப உள்ளே செல்ல எனக்கு உரைத்தது.

ஆமா, ’நேற்று நான் எதா இருந்தாலும் மறக்காம ஞாபகமாக எடுத்துக் கொடு’ என்று சொன்னதால் தான் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நான் சரியாக உணராமல் பேசிவிட்டதை உணர்ந்தேன். சரி இனிமேல் இதுபோன்ற தவறுகள் என்னிடத்தில் ஏற்படாது என உறுதிகொண்டேன்.

நிகழ்காலத்தில் இல்லாததால் முதலில் லேபிளை மறந்து சென்றேன்.

நிகழ்காலத்தில் இல்லாததால் அவுங்க எடுத்தவந்த காரணத்தை உணராமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.

(நம்மோடு வாழ்க்கை துணையாக வாழ்வது என்ன சாதரண விசயமா என்ன ?!?!?!)

அன்றாட வாழ்வில் இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் கண்டு சரி செய்தாலே போதும் , வாழ்வில் இனிமை பெருகும். நீங்கள் எல்லாம் எப்படி ????

Thursday, May 21, 2009

கடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்.

உலக அமைதி, உலக நலம் பற்றிய சிந்தனைகளைக் கூறும் கவனகர்முழக்கம்(மாதஇதழுக்கு)
தமிழன், தமிழ்மொழி என்னும் குறுகிய பார்வை தேவையா?
(வாழ்க வளமுடன் ஜெயகோபால், திண்டுக்கல் அன்பரின் கேள்விக்கு பதில்)


நபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் ஏக இறைவனாகிய அல்லாமேல் தூய நம்பிக்கை வைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை உபதேசம் செய்து வந்தார் என்பது நாம் அறிந்ததே.

அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அன்பர் ஒருநாள் நபி பெருமானைப் பார்க்க வந்தார்.
அவர்கல் உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த அன்பர் பெருமானாரைப் பார்த்து “தங்கள் மார்க்கத்தை அப்படியே ஏற்று அல்லா மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன் இப்போதெல்லாம் இரவில் என் ஒட்டகத்தைக்கட்டி வைப்பதுக்கூட இல்லை.
எல்லாவற்றையும் அல்லா பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். என் நம்பிக்கை சரிதானே?” என்று பெருமையாக கூறினார்.

அப்போது பெருமானார் அவரைப் பார்த்து அமைதியாக “அன்புச் சகோதரரே, அல்லாவை நம்புங்கள். ஆனால் அருள்கூர்ந்துஉங்கள் ஒட்டகத்தைக் கட்டி வையுங்கள்” என்று கூறினாராம்.

உலக அமைதி, உலக நலம் என்பதெல்லாம் நம் இலட்சியங்கள். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்மொழி தமிழினம் என்னும் ஒட்டகங்களை பாதுகாப்பாய்க் கட்டி வைப்பதில் தவறே இல்லை.


நன்றி: விநோதமான வினாக்கள், கவனகரின் விடிவுதரும் விடைகள் -- இராம.கனகசுப்புரத்தினம்.

*************************************************************************************************

என் பார்வையில்

எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால் என்ன அர்த்தம்.?

இன்ப துன்ப உணர்வுகள், சமுதாயத் தொடர்பில் வரும் அனைத்தும் இறைவன் செயலே என்றுணர்ந்து எல்லாம் அவன் செயல் என்ற பக்குவப்பட்ட மனதோடு, நிறைவோடு இருப்பது ஆகும்.

இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனில் குழப்பமே மிஞ்சும்.

எல்லாம் இறைவன் செயல் என்றால் நம் இஷ்டப்படி செயல் செய்யலாமா? அல்லது ஒன்றுமே செய்யாமல் அவன் செயல் என இருந்துவிடலாமா? இது நமக்கு எதைத் தரும்? உருப்படாத சோம்பேறித் தனத்தைதான் தரும்,

இந்த மனம் ஒன்றும் சாதரணப் பட்டதல்ல. சொல்வதைஎல்லாம் நம்பிக்கொள்ள! அது வெளிநோக்கி அலைந்து கொண்டு இருக்கும்வரை

ஐம்புலனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் வரை இந்த தத்துவங்களை எல்லாம் கொஞ்சம்கூட ஏற்றுக் கொள்ளாது.

மனதை திருத்த வேதாத்திரி மகான் சொன்னதுபோல் மனதைக் கொண்டுதான் முயலவேண்டும். எதிலும் உள்ளடங்கியுள்ள உண்மையினை உணர்ந்து அவைகளிடையே ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை அறிந்து உள்நோக்கி மனம் தெளிவை அடையுமானால் அடங்க ஆரம்பிக்கும்.

அதன்பின் எல்லாமே அவன் செயல்தான் என்று உணர உணர நம் செயல்களில் முழுஈடுபாடு இருந்தாலும் புளியம்பழம் எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் ஆனால் ஒன்றாக இருக்கிறதோ அதுபோல் மனம் பாதிப்போ உளைச்சலோ அடையாது.

தனக்கும் பிறர்க்கும் நன்மை விளையும் வண்ணம் நம் கடமைகளை ஆற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் மனம் அதில் முழுமையாக ஈடுபட்டாலும், எவ்வித விளைவு வந்தாலும் எந்தவித சலனமில்லாமல் அமைதியாக இருக்கும்.

இதனால் நம்மிடம் எண்ணங்கள், ஆசைகள்,சினம்,கவலை, போன்றவைகள் தானாக முயற்சி இன்றி சரியாகிவிடும். இதுதான் தானாக நிகழ்வது என்பது.

இது ஆன்மீகத்தில் சிறு ஆரம்பநிலையே.

இம்மனநிலை வர, மனதைப் பழக்கவே,தொடர்ந்த தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள், உரைகள்,தியானம் சம்பந்தமானவைகள்அனைத்தும்.

அனைத்தையும் உருவாக்கி காத்து நிற்கும் ஆற்றலுக்கு கட்டுப்பட்டு நம் கடமைகளை நாம் முழுமையாக ஆற்றி வாழ்வதே முழுமனிதவாழ்க்கை. இதுவே எல்லாம் அவன் செயல்.என உணர்ந்தாலும், நம் கடைமையான ஒட்டகத்தை கட்டி வைப்போம்.கட்டி வைக்காவிட்டால் காணாமல் போகலாம், வேறு ஏதெனும் நடக்கலாம். விளைவு சிக்கல், துன்பம் தான்.

கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் உள்ள மனநிலையும் இதுதான்

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்
வாழ்த்துக்கள்

Sunday, May 17, 2009

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்

"மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே... மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கியுள்ளானே... இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.

தத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.

தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!

நன்றி: தினமலர் - வாரமலர்

Thursday, May 14, 2009

‘டத்து வசவரு டா !’

கோவில்பட்டி நகரின் நூலக வாரவிழா நிகழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் எண்கவனக சிறப்பு நிகழ்ச்சி. அதில் கொடுக்கப்பட்ட ஈற்றடி என்ன தெரியுமா?

‘டத்து வசவரு டா !’

ஈற்றடியின் பொருள் புரியாமல் அரங்கம் முழுவதும் குழப்பத்தில் அமைதியாய் இருந்தது. ஆனால் திருக்குறள்.இராமையா அவர்கள் தெளிவான புன்னகையுடன். ”ஈற்றடி கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவினார்.

”பெரும்புலவர் அங்கப்ப பிள்ளை !” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.

”அதானே பார்த்தேன். ஈற்றடியைப் பார்த்தால் சாதரணமாகத் தெரியவில்லையே.. இந்தக் கோவில்பட்டி மண்ணில் இப்படி ஈற்றடி கொடுப்பதற்கும் ஆள் இருக்கிறதா என்று சி்ந்தித்தேன்..! என்றார்.

உடனே அங்கப்பபிள்ளை, “பாடுவதற்குச் சிரமமாய் இருந்தால் வேறு ஈற்றடி தருகிறேன்” என்கிறார்.

திருக்குறளார் சிரித்துக்கொண்டே”ஈற்றடிக்கு மாற்றடி தேவையில்லை. பாடல் சைவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா அல்லது வைணவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா? என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் !” என்றார்

இப்போது அங்கப்பபிள்ளை ஆடிப்போய்விட்டார். ஏனெனில் அவர்,”சைவக் கடவுளுக்கு மட்டுமே இந்த ஈற்றடியை வைத்துப் பாடமுடியும்’என்ற முடிவில் இருந்தார். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,”வைணவக் கடவுளுக்கு எப்படி...இந்த ஈற்றடியை”....என்று இழுத்தார்.

உடனே ”நான் இரண்டு கடவுளுக்கும் பொதுவாகப் பாடிவிடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு

”ஆக்கம் அறிவுடைமை

ஆன்ற பொருளுடைமை

ஊக்கம் பெருமை

ஒழுக்கமொடு வீக்குபுகழ்

இத்தரையில் என்றும்

இனிதடைய வேகுக்கு/கரு

டத்து வசவரு டா !”

இந்த வெண்பாவைப் பாடினார்.

”ஆக்கம்,அறிவு,செல்வம்,ஊக்கம்,பெருமை,ஒழுக்கம்,புகழ் என்னும் இத்தனை நன்மைகளையும் எனக்கு அருள வேண்டும் !” என்று கடவுளிடம் வேண்டும் விதத்தில் இந்த வெண்பா அமைந்துள்ளது.

சரி, எந்தக் கடவுளிடம் வேண்டுவது?

சைவ நெறியைப் பின்பற்றுவோர் முருகனிடம் வேண்டுவதாக இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம் . எப்படி?

“குக்குடத் துவச அருள் தா !”

’குக்குடம்’ என்றால் சேவல், ‘துவசம்’ என்றால் கொடி. சேவற்கொடியோனாகிய முருகனே அருள் தா !’ என்பதாக பொருள் வரும்.


அதே சமயம் ’குக்கு’ வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘கரு’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டால் வைணவக் கடவுளான திருமாலுக்கு உரிய பாடலாக மாறிவிடும். ’கருடன்’ என்றால் பருந்து. துவசம் என்றால் வாகனம் ‘கருடனை வாகனமாய் உடைய திருமாலே அருள் தா ! ’ என்பதாகவும் பொருள்தரும் என விளக்கினார்.

இந்த விளக்கத்தைக் கேட்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

நன்றி 2002 ஏப்ரல் கவனகர் முழக்கம்