"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, August 14, 2012

என்ன நடக்குது இங்கே..1

 ஒருவரோடு ஒருவர் பேசுவதில் தன் மனதில் உள்ளதை அப்படியே எதிரே இருப்பவருக்கு முழுமையாக தான் உணர்ந்தவாறு சொற்களால் உணர்த்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பொருள் சார்ந்த விசயம் எனில் இப்படி செய். இன்ன லாபம் கிடைக்கும். சாட்சிக்கு அவரைப் பார் என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் ஆன்மீகத்தில் அப்படி இல்லை.ஆன்மீகம் என்பது மனம் சார்ந்த விசயம்.

முதலில் ஆன்மீகம் என்றாலே இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது நமது தமிழ்சமூகம். ஆன்மீகம் என்பதே மந்திரங்களும் பூசைகளும்  நம்பிக்கைகளும் அதிசயங்களும்  என்றாகிவிட்டது. விசேச நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே நமது குறைகள் நீங்கிவிடும் கேட்டது கிடைக்கும் என்பதன் விபரமும் ஆன்மீகத்துள் அடக்கம்.ஆன்மீகத்தின் மிகச்சிறிய பகுதிதான் இவைகள் என விளங்கிக் கொள்ள விரும்புவதும் இல்லை.

இங்கே கூர்ந்து கவனித்தால் நமக்குப் புரியவருவது எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி நமது மனதில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது? எந்தவிதமாகவோ அமைதி ஏற்பட்டது என்பதுதான்:) இதே போல எனக்கு இந்த அமைப்பின் /  யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது அந்த அமைப்பின் யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது, இந்த மதத்தின் வழிபாட்டு முறைகளினால் நன்மை என்பதின் மனோநிலையும் ஏறத்தாழ ஒன்றுதான்.

மனம் அமைதியாக, உற்சாகமாக, நேர்மறையாக இருக்கிறது என்பதுதான் கூட்டிக்கழித்தால் கிடைக்கிற முடிவு.

பக்தி மார்க்கத்தில் கிடைக்கும் அமைதி, சில நாட்கள் அல்லது குறைந்த நாட்கள் என்றால் ஞானமார்க்கத்தில், தியான வழிமுறைகளில் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் அமைதி கிடைக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் அதை நீடித்துக்கொண்டதாக யோகப்பாதையில் பயணிப்போர் சொன்னாலும், அவர்களைப் பார்க்கின்ற நம்மைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு பெரும்பாலும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.

ஏதோ போறார். பரவாயில்லை என்று சொல்லுமளவில்தான் பலரும் இருக்கின்றனர்.இந்த நிலை ஏன். பக்தி சார்ந்த ஆன்மீகப்பாதையோ, யோகப்பாதையோ, இவரைப்போல் பண்பட்ட மனிதன் இல்லை என்று சொல்லுமளவிலோ, அவருடைய வார்த்தைக்கு மாற்றோ எதிர்ப்போ இல்லாத தன்மை எவரிடத்திலாவது இருக்கிறதா என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணுமளவிற்குக்கூட இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த பண்பு எவரிடத்தில் இருப்பினும் அவர் வந்தவழி, அவர் கடைப்பிடித்த வழி மிகநிச்சயமாய் சரியானது.

என்னைப்பொருத்தவரை இவை மட்டுமல்ல எல்லா விசயங்களும் மனதினுள் அடக்கம்.  விதை ஒன்று வீட்டில் கழனிப்பானையில் கிடக்கும்வரை அதற்கு காலமும் கிடையாது. செயல்பாடும் கிடையாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி., ஆனால் அதே விதையை எடுத்து மண்ணில் போட்டு, தண்ணீர் பாய்ச்சினால், ஒளியின் உதவியோடு முளைவிட்டு செயல்பாட்டுக்கு வரும். அதன் பின்னர் அதன் வளர்ச்சி குறித்து நிறைய பேசிக்கொண்டு இருக்கலாம். இதற்கு முன்னர்வரை எதுவும் பேச முடியாது.

அதே போலத்தான் இயற்கையில் இருக்கின்ற   இந்த பிரபஞ்சத்தில் நாம் வந்து பிறந்திருக்கிறோம். நம்மைப் பொருத்தவரை நாம் உயிரோடு இருக்கும்வரை இதைப்பற்றி பேசலாம். நாம் இறக்கும்போது நம்மோடு பிரபஞ்சமும் மறைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் இருக்கிறது.:)

இதில் நாம் அறிந்தவை/ அறிந்ததாக மனம் நம்புபவை சொற்பமே., அந்த அறிந்தவைகளும் ஒவ்வொருவரின் மனதிற்கேற்ப ஒவ்வொருவிதமாகவே புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது :) இதுவே கருத்துவேறுபாடுகளுக்கும், சச்சரவுகளுக்கும் அடிநாதமாக அமைந்துவிடுகிறது. இவற்றை தவிர்க்க, களைய என்ன வழி? நாம் எந்த விதமாக மாற்றம் பெற வேண்டும்?


தொடர்ந்து சிந்திப்போம்

6 comments:

  1. ஆன்மீகம் என்பது மனம் சார்ந்த விசயம்.!!!

    ReplyDelete
  2. நல்லதொரு சிந்தனை பகிர்வு... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 1)

    ReplyDelete
  3. நல்ல்தொரு சிந்தனைப்பதிவு
    எளிமையாகச் சொல்லிப்போனவிதம்
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆன்மீக தளங்கள் எல்லாம் வியாபாரமாக்கி விட்டார்கள். விரைவில் ஏதாவதொரு கார்பொரேட் கம்பெனி கோவில்களைக் கட்டி அதை சுற்றுலாத்தலமாக்கி காசு பார்க்க திட்டங்கள் தீட்டுவார்கள்.

    மக்கள் திருந்த வேண்டும். எத்தனை சொல்லுங்கள்? எதுவும் மாறாது

    ReplyDelete
  6. நல்ல பதிவு சிவா! தொடருங்க!

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)