"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்

No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)