"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, July 14, 2013

பொதிகை மலை பயணத் தொடர் பகுதி 5

பகல் 12.00 மணி அளவில் மரங்கள் அடர்ந்த பகுதிகளைத் தாண்டி புல்வெளியை அடைந்தோம். லேசாக மழை துளிக்க ஆரம்பித்தது. காற்றில் ஈரப்பதம்  அதிகமாகி குளிரெடுக்கத் தொடங்கியது.. 



பக்கவாட்டுப் பகுதிகளின் காட்சிகள்







மழை வேகமாக வருவது போல மிரட்டிக்கொண்டே இருந்தது. முதுகில் சுமையைக் குறைப்பது ஒன்று தொடர்து நடக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும், கூடவே  பசி தாக்குப்பிடிக்கமுடியாமல் 12.30 க்கு சாப்பிட்டுவிட்டோம்,. தொடர்மழை பிடித்துக்கொண்டது. எங்கும் ஒதுங்கவும் முடியாது. மழையில் தெப்பலாக நனைந்து கொண்டே சென்றோம். உடைகள் அனைத்தும் நனைந்து விட்டன. மழைக்கோட்டு அணிந்திருந்தும் கழுத்து கைப்பகுதிகள நனைகிற அளவிற்கு மழை அடித்துப் பெய்தது. காலில் மாட்டியிருந்த ஷீவுக்குள் இருந்து நடக்க நடக்க தண்ணீர் வெளிவந்து கொண்டே இருந்து.  :)



தொடர்ந்து நடந்து இரண்டரை மணிக்கு அதிரமலை முகாம்க்கு சென்று சேர்ந்தோம். அனுமதி டிக்கெட்டை அங்கே உள்ள வனக்காவலரிடம் காட்டிவிட்டு, அங்கே பயன்படுத்த தகுதியற்றது என வனத்துறையினால் அறிவிக்கப்பட்ட கட்டிடத்தில் தங்கினோம். அருகிலேயே வனத்துறையினால் சில கொட்டகைகள் அமைக்கப்பட்டு தங்கும் வசதி ஏற்படுத்தி இருந்தார்கள்.

தினமணி வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் மேலே



இருப்பினும் அங்கே கடும் குளிர் காற்று வீசியதால் ரிஸ்க் எடுத்து கட்டிடத்துள் படுத்தோம். சிறிய கேண்டீன் உண்டு. அவர்களால் தரப்படும் மெனு,, கஞ்சி, பூரி சாப்பாடு உணவுகள் கிடைக்கும் அதற்கு கட்டணம் உண்டு.


நடுவில் இருப்பது அடியேன்.தொழில்துறை நண்பர்களுடன் (கீழே உள்ள படம் )

கேண்டீனில் அகத்தியரின் உருவப்படங்கள். பல்வேறு அபிசேகங்கள் நடக்கும் போது எடுத்தபடங்களின் தொகுப்பை வைத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இடைவெளியின்றி பெய்து கொண்டே இருந்தது.


வெளியே தலைகாட்ட முடியாத அளவு காற்றும் மழையும், தங்கியிருந்த கட்டிடமோ பக்கச் சுவர்களில் தண்ணீர் மேலிருந்து கொட்டிக்கொண்டு இருந்தது.. நனைந்து கொண்டே பின்னால் வந்த அன்பர்களும்  தங்கள் பங்குக்கு ஈரத்துணிகளை அங்கேயே போட்டனர். இலவச இணைப்பாக தங்கள் உடைகளில் ஒட்டியிருந்த அட்டைகளையும் அவர்களை அறியாமல் அங்கேயே உதிர்த்துவிட.... படுத்திருந்தவர்களையும் அவைகள் பதம் பார்க்கத் துவங்கின.

மொத்தத்தில் அன்றைய இரவு தூக்கம் சுத்தமாக இல்லை.. கொண்டுவந்திருந்த உடைகள் போர்வை எல்லாம் மழையால் நனைந்திருந்தன. காலையில் மழை இல்லாவிடில் மேலேதொடர்ந்து செல்லலாம். இல்லையெனில் இறங்கத் தொடங்கிவிடலாம் என முடிவு செய்து படுத்தோம்... எப்படியோ விடிந்தது.. மழை இன்னும் மெதுவாக பெய்துகொண்டேதான் இருந்தது.

நிகழ்காலத்தில் சிவா

Wednesday, July 10, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 4


காலை ஒன்பது மணிக்கு நடக்க ஆரம்பித்து பத்துமணி அளவில் சிறிய நீரோடையை அடைந்தோம். காலை 8 மணியில் இருந்து தொடர்ந்த நடை உடலில் வியர்வையையும், களைப்பையும் ஏற்படுத்த, குளிக்கலாம் என்கிற முடிவை எடுத்தோம்.  நீரில் கால்வைத்தால் ஐஸ்கட்டியாய் ஜில்லிப்பு :)

மூன்று நண்பர்கள் பின்வாங்க.. நானும் இன்னொருவரும் கண்ணை மூடிக்கொண்டு நீரில் விழுந்தோம். அருவிகளில் குளிப்பதற்கும், இது போன்ற நீரோடைகளில் குளிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

அருவிகளில் குளிப்பது ஒரு சுகம். தடதடவென உடலின் எல்லா இடங்களிலும் அடித்து விழும் நீர், அனைத்து வலிகளையும் சமமாக்கி, பரவச் செய்து, உள்ளிருந்து துடைத்துவிட்டாற் போல் சுத்தமாக்கிவிடும்.புத்துணர்ச்சியைத் தரும்,

ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் :)

உணர்வுகளை மனம் எந்த முயற்சியும் இன்றி கவனிக்க ஆரம்பித்தது. தோலில் இருந்து உள்ளே எலும்பு வரை உள்ள தசைநார் கற்றைகளின் ஒவ்வொரு மில்லிமீட்டரும், ஒவ்வொரு அணுவும், தொடர்ந்து அதிர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அப்படி அதிர்வுகள் வெளியேற, வெளியேற மனமும் உடலும் ஒருசேர களைப்பு நீங்கி புத்துணர்ச்சி ஆவதை படிப்படியாக எளிதில் உணரவும் முடிந்தது. கண்ணை மூடி ஆனந்தமாக நீருக்குள் கிடந்தேன். கொஞ்சநேரம் ஆனதும் பழகிப்போனதாகவோ, மரத்துப்போனதாகவோ தெரியவில்லை.. நீரில் விழுந்த அந்த நொடிமுதல் பலநிமிடங்களும் இப்படியான உணர்வுகளே தொடர்ந்து நிலைத்து இருந்தது.

எங்களுக்குப்பின்னால் வந்தவர்கள் எங்களைத்தாண்டி நடக்க .. வெளியேறி தொடர்ந்தோம்.


பளிங்கு போன்ற நீரோடை... கண்டிப்பாக குளிக்க வேண்டிய இடம்.. ஏனோ பெரும்பாலானோர் கடந்து சென்றனர்.




முற்பகல் 10.20க்கு அடுத்த வனத்துறை கேம்ப்.. கிட்டத்தட்ட நாங்கள் நடந்த வந்த தூரம் போக இன்னும் அதிரமலைக்கு கேம்ப்க்கு 10 கிலோமீட்டரும், அதற்கு மேலாக அகத்தியர்மலைக்கு 5 கிலோமீட்டருமாக சுமார் 15 கிமீ இன்னும் போக வேண்டியிருக்கிறது. என்று காட்ட நடையை வேகப்படுத்தினோம்.



தொடர்ந்து நீரோடைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. எல்லாம் ஐந்து நிமிட நடை தூரம்தான்........நான்கு நீரோடைகளைத்தாண்டினோம். நேரம் முற்பகல் 11.00


முற்பகல் 11.30


கீழே கண்ட இடத்தை நாங்கள் கடந்தபோது முற்பகல் 11.35, இந்த இடம் பாறைகள் நிரம்பிய நீர்தேங்கி ஓடக்கூடிய பகுதி இடப்புறத்தில் பெரிய பரப்பளவாக விரிந்து இருக்க.. கால் நனையாமல் தாண்டிச் செல்லக்கூடிய நீளம், அகலம் அதிகமான பகுதி.. நாங்கள் சென்ற நாட்களிலும், அதற்கு முந்தய நாட்களிலும் மழை அதிகம் பெய்யாததால் நீரோட்டம் குறைவாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் திரும்ப வரும்போது இதே இடம் ஆறுபோல் பரந்துவிரிந்து இரண்டு அடி உயர நீர் பாய்ந்தோடிக்கொண்டு இருந்தது :)

நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, July 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 3

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வனத்துறை கேம்ப் தாண்டினோம். யானைகள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கவே தேவையில்லாமல் சுற்றிலும் அகழி...(காலை 9.20)



சுற்றிலும் நிஜமாகவே யானையை உள்ளே இறக்கிவிட்டால் தெரியாது. அந்த அளவு ஆழம், அகலம், கோவைப்பகுதியில் யானைக்கான அகழி (?) தோண்டி இருப்பதைப் பார்த்தால் வெள்ளாடு கூட தாண்டிக்குதித்துவிடும். அப்படி இருக்கும். இந்த குழிக்குள் தப்பித் தவறி நாம் விழுந்தால் வேறொருவர் துணையின்றி மேலே ஏற முடியாது :)  தாண்டிச் செல்ல இரண்டு குச்சிகளை கட்டி வைத்திருக்கின்றனர்.. சில சமயங்களில் அங்கே தேநீர் கிடைக்கும்.





அதைத்தாண்டியவுடன் சட்டென பாதை ஏதுமின்றி காலடிப்பாதை மட்டும்தான். இப்படியேதான் போகனுமோன்னு குழப்பம் வர நடந்தோம். ஆனால் நல்ல வேளையாக இது ஒரு குறுக்குப்பாதை.. பழைய பாதையுடன் இணைந்து விட்டது :)


வழியில் கண்ட வண்ண மலர்கள். நேரம் காலை 9.30




தொடர்ந்து நாங்கள் நடந்தபோது காலை 9.45 கீழ் கண்டவாறுதான் பாதையின் பாதிப்பகுதி இருக்கும். காய்ந்த இலைதழை கீழே கிடக்க, அவ்வப்போது பெய்யும் மழை அதை ஈரமாக்கி, இற்றுப்போகச் செய்ய சுற்றிலும் நெருக்கமாக மரங்கள் மனதை எளிதில் தன் வசமாக்கிவிடுகின்றன :)



படங்கள் எல்லாம் பொதிகை மலைப்பாதையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சான்றும், வரலாறும் முக்கியமல்லவா :) அதற்காக ஒன்று......






காலை 9.50 பாதையில் இது வரை நான் பார்த்திராத  மரத்தின் அடிப்பாக அமைப்பு, மரத்தின் அகலம் சுமார் 15 அடி முக்கோண உயரம் சுமார் 10 அடி,  உயரம் அண்ணாந்து பார்த்தால் தெரியவில்லை :) கூட்டல் குறி நிலத்தில் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரம் வேர் விட்டிருக்க புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.



10 மணிக்கு சிறிய நீரோடையை அடைந்தோம்.






நீளம் கருதி நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

Monday, July 8, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 2

இரயிலில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து நெடுமங்காடு ,விதுரா , ஊர்களின் வழியாக போனகாடு  செல்லும் பஸ் பிடிக்க, விசாரித்தபோது வர லேட்டாகும், அந்த பஸ்ஸில் சென்றால் போனாகாடு ஊரில் இரவு 9.30 க்கு இறக்கிவிடப்பட்டு தனியாக இருக்க வேண்டியதாகிவிடும்   , அதனால நாம நெடுமங்காடு போயிட்டு அங்கிருந்து கனெக்சன் பஸ் பிடித்தும் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. நாங்கள் சென்ற மாலை வேலையில் நெடுமன்காடு,விதுரா  பஸ்தான் கிடைத்தது. விதுராவுக்குச் செல்லும்போது மணி இரவு 8.30 மணி...எனவே விதுராவில் இரவு தங்கினோம். ஓரிரு லாட்ஜ்கள்தாம் .. இங்கேயே தங்குவது உத்தமம். ஏனெனில் பலர் மலை அடிவாரத்துக்கு முந்தய நாள் இரவு சென்று தங்கினர்.  அங்கே வாசலில்தான் படுக்கவேண்டும். மழை பெய்தால் படுக்குமிடமெல்லாம் நனைந்து விடும், கூடவே குளிரும்..

அடுத்தநாள் காலை 6 மணிக்கு பஸ் இருப்பதாக செய்தி கிடைத்தது .. காலை 5.30 க்கே சென்று  காத்திருந்தோம் அங்கே உணவு இருக்குமா? இருக்காதா என்ற சந்தேகம் .. கூட வந்த நண்பர்களுக்கு :)  இல்லையென்றால் மலை ஏறும்போது என்ன செய்வது என்று ஆலோசனை செய்துவிட்டு, காலை 5.30 க்கே அருகில் உள்ள மெஸ்ஸில் அப்பமும், சுண்டல் குழம்பும் ஊற்றி அடித்துவிட்டு, காத்திருக்க 6.30 க்கு பஸ் வந்து சேர, போனாகாடு என்ற ஊரில் காலை 7.30 க்கு வந்து சேர்ந்தோம்.



இந்த ஊர்தான் நமக்கான போக்குவரத்தின் ஆதாரம். இங்கிருந்து சுமார் 2 கிமீ நடந்தால் வனத்துறை அலுவலகம் வரும். அங்கிருந்துதான் நமது பொதிகை மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் இயங்காத தொழிற்சாலை ஒன்று தென்பட.....



 ஜீப்கள், கார்கள் செல்கிற அளவிலான மண்பாதை..அரைமணி நேரம் நடக்க வனத்துறை அலுவலகம் அடைந்தோம்.




எங்களுக்கு முன்னதாக இரவே வந்து தங்கியவர்கள் வெள்ளைரவை உப்புமா டிபனாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க.. முன்பதிவு இரசீதுகளை பதிவு செய்து கொண்டோம். மதிய உணவு பார்சலாக கட்டிக்கொடுத்தனர். எங்களுடைய பைகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.. ஏதேனும் உற்சாகபானங்கள், இருக்கிறதா என்று பார்த்து அனுப்புகிறார்கள். காலை 9.மணிக்குத்தான் மேலே அதிரமலைக்குச் செல்ல அனுப்புகிறார்கள். அங்கே தங்கி அதற்கு மேல் அகஸ்தியர் கூடம் போகவேண்டும் :)

அலுவலகத்தில் இருந்து காலை 9.15 க்கு கொஞ்சதூரம் நடந்தவுடன் காட்சியளித்த பிள்ளையார்.. இவரை வழிபட்டு நகர்ந்தோம்.



Thursday, July 4, 2013

வேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்...

வருடம் தவறாமல் தீபாவளி பொங்கல் முத்து தாத்தா வந்துவிடுவார். அவருடைய முதல் விசிட் என் வீடுதான்.. வயிறாற விருந்திட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்புவேன்.  சமைத்ததில் முதல் பங்கே அவருக்குதான். குழந்தைகளே பரிமாறுவார்கள். 

நாங்கள் பயன்படுத்தும் டம்ளர் போன்றவைகள் தரப்படும். இயல்பாக கழுவி பயன்படுத்துவோம். இலையை அவரே எடுக்க எத்தனித்தால் அனுமதி இல்லை. நாங்கள் தான் எடுப்போம். அவர் மெள்ள மெள்ள வெளியேறும்போது வாசலில் நின்று மறையும் வரை பார்ப்போம். குழந்தைகளின் மனநிறைவு அளவற்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பெற்ற தந்தையை விட மனம் உயர்வாகவே நினைக்கும்.

காரணம்  என்னன்னு தெரியல... எல்லோரையும் சாமி, சாமி ந்னு க்கூப்பிடற வாஞ்சையா? முதுமை காரணமா, எதுவும் புரியலை... இப்படித்தான் சாதி என்கிற உணர்வு உள்ளுக்குள்ள பனித்திரை மாதிரி இருக்குது.. என் குழந்தைகளுக்கு சாதி என்பது என்னன்னு தெரியாது.... ஆனா மன அலைவரிசைக்கு ஒத்துவர்றவுங்க, வராதவங்கன்னு பிரித்துப் பார்க்கத் தெரியும். 

சுருக்கமாச் சொல்லனும்னா அசைவம் சாப்பிடறவங்க வேற சாதி.. சைவமா இருக்கிறவங்க நம்ம சாதி.. இத நான் சொல்லிக்கொடுக்கலை... எனக்கு அசைவம் சாப்பிடறவங்களோட ஒன்னா உட்கார்ந்து சைவம் சாப்பிடுவேன். அவர்களுக்கு தேவையானதை பரிமாறவும் செய்வேன். மனம் பற்று, பிடிப்புன்னு ஒட்டாமல் இருக்கிறது சாத்தியமாயிட்டுது.

சரி என் புள்ளைங்க பெரிசான வேற சாதியில கட்டி வைப்பயான்னு கேட்டா என்ன பதில் சொல்றது தெரியல ..அப்படி கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் என்னன்னு புரியல... சாதி சோறுபோடாது.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசு இல்லாம இந்த உலகத்துல பிழைக்க முடியாது..  மாசம் இப்போதைக்கு இருபதாயிரம் இருந்தாத்தான் குடும்பம் தள்ள முடியும்..

வீட்டு வேலை எல்லாம் செஞ்சாகனும். ஆள்போடனும்னா இன்னும் பத்தாயிரம் சேத்து சம்பாதிக்கோனும். வீட்டு நிர்வாகம்,  காசு சம்பாதிக்கிறதுல உள்ள சிரமங்கள், நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற சுதந்திரம்னு எல்லாம் என் புள்ளைங்களுக்கு லேசுபாசா சொல்லித்தான் வளர்த்துகிட்டு வர்றேன்.

இவளுங்க வளர்ந்து குடும்பம் தள்றதுல உள்ள சவால்கள், வேறு சூழ்நிலை அங்கு வாழ்தலில் உள்ள அனுசரிப்பின் அவசியம் இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் என் எதிர்ப்பார்ப்பு....சாதி முக்கியமில்லைதான்.

படிக்க ஹாஸ்டல்ல கொண்டு விடறன்னா பக்கிக நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு வீட்ல எங்களை மேய்ச்சுக்கிட்டு இருக்கிறாங்க... இதுக வளர்ந்து எல்லாம் புரிஞ்சுகிட்டு வேற சாதியிலதான் கட்டுவேன்னா கட்டி வச்சுற வேண்டியதுதான்.

நமக்கென்ன.. மாட்டுற ஐயரு பாடுதான் திண்டாட்டம் ...அவ்வளவு விபரமா இருப்பாங்கன்னுதான் நடவடிக்கைகளைப்பாத்தா தோணுது .

தர்மபுரி விசயத்த படிச்சவுடன் தோணுச்சு.. எழுதினேன்.

இளவரசன் மரணம் வருந்தத்தக்கது எனினும் அது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இளவரசனோ, திவ்யாவோ ஆரம்பத்தில் இந்த அளவு எதிர்ப்பு வரும் என நினைத்திருக்க மாட்டார்கள். இடையில் அரசியல் புகுந்து பிரச்சினை பெரிதாகிவிட்டது உண்மைதான்... ஆனால் காதலுக்கு கண் இல்லை. சக்தியும் இல்லை போல.. இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது.. நம்பி வந்தவளை விட்டுட்டு போயிட்டது குற்றம்தான்... கொலை எனில் அடப்பரதேசி.. எங்கிட்டாவது ஓடிப்போயாவது பொழச்சு இருந்திருக்கலாமே.. அதொன்னும் கேவலம் இல்லையே? சில வருசம் கழிச்சு.. அல்லது எப்படியாவது திவ்யாவை பிக்கப் பண்ணி இருக்கலாமே.... ஏன் இப்படி மாட்டினேன்னு அங்கலாய்க்கத்தான் முடிகிறது.

சாதி என்பது வரும் தலைமுறையிடம் நாம் விதைக்காமல் இருந்தால் போதும். நம்மோடு அது மறைய வேண்டும். அரசும் சாதிகளை, சாதிக்கட்சிகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும். மெள்ள மறைந்துவிடும்.... இதற்கு அரசியல், சாதிக்கட்சிகள் தயாராகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் அது சாத்தியமாகும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

Friday, June 28, 2013

பொதிகை மலை பயணத்தொடர்...1


கடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..

எனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)

அட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா? வேண்டாமா? என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..

யாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள  வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.

Office of the Wildlife Warden,
Wild life Division ,
Vattiyoorkkavu .P.O,
PTP Nagar,
Thiruvananthapuram.
Fax No. 0471-2360762
Phone No. 0471-  2360762


பிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும்.  நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ஒருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக்கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.

நேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.

டிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

இதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.

இப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)