"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label வேதாத்திரி. Show all posts
Showing posts with label வேதாத்திரி. Show all posts

Sunday, June 25, 2017

கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்..

சுமார் 20 வருடங்களுக்கு முந்தய மனநிலையை நினைவுக்கு கொண்டு வந்து பார்க்கிறேன். பள்ளிப்பருவம் முடிந்து  பணிக்குச் சென்று கொண்டிருந்த காலகட்டம்.  கல்வி கற்ற அந்த நாட்களில் நான் அனுபவித்த உலகம் வேறு.. வேலைக்குச் சென்ற போது கண்ட உலகம் வேறு.. விதமான விதமான மனிதர்கள்., உணர்வுகள்.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வருமானம் இருந்தாலும், மனதில் உலகம் பற்றிய புரிதல் தேவையும், நான் எப்படி இயங்க வேண்டும் என்ற அறியும் வேட்கையும் மனதிற்கு ஒரு நிறைவின்மையைக்  கொடுத்துக்கொண்டே இருந்தது. கேள்விகள் நிறைய மனதில் எழுந்து கொண்டே இருக்கும்..

இந்த சூழலில் வேதாத்திரி மகானின் பாதை கிட்டியது. அப்போதய மனநிலையில் வேதாத்திரி அவர்களின் உரைத் தொகுப்புகளை நேரில் கேட்டபோது பல்வேறு தெளிவுகள் கிடைத்தன. அவரது சிறப்பே கேள்வி ஏதும் எழாதவாறு மிகத் தெளிவாக,தொடர்பு அறுந்து போகாமல் உரையாற்றுவதுதான்..

ஆழியாரில் ஒரு சிறப்புப் பயிற்சியில் அன்பர் ஒருவர் எழுந்து,  கேள்வி கேட்கிறார்.. அந்தக் கேள்வி, பிறரது பார்வையில்  ‘மகானிடம் இதையெல்லாமா கேட்பார்கள் ?  இது கூடத் தெரியலையா ‘ என்கிற பாணியில் அமைந்திருந்தது.. கூடியிருந்த கூட்டத்தில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. கேள்வி கேட்டவருக்கோ கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது போலும். முக வாட்டம் தெரிந்தது.

ஒரு நிமிடம் அமைதி.. வேதாத்திரி மெளனம் கலைத்தார்..

எந்தக் கேள்வியிலும் தவறு என்பதே இருக்கவே முடியாது. ..
பதிலில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்..

கேள்வி கேட்டவரின் அறிவு நிலைக்கு ஏற்ப, வாழ்க்கைச்  சூழலுக்கு ஏற்ப  பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்துடன் கேள்வி கேட்கின்றார். அதை ஏற்று அவருக்குப் பொருத்தமான பதிலைக் கூற வேண்டும்.பதில் சொல்பவருக்கே பொறுப்பு அதிகம். பதில் சொல்வதில், சொல்பவரின் அறிவாற்றல் திறம், பண்பு வெளிப்பட்டுவிடும். அதனால் அக்கறையுடன், கவனத்துடன் பதில் சொல்ல வேண்டும்’ என்று பதில் சொன்னார்.

கேள்வியினை எப்படி எதிர்கொள்வது ? கேட்டவரின் மீது கிண்டலை, ஆணவத்தை  வீசாது கருணையோடு எந்தவிதமாக பதில் சொல்ல வேண்டும்?. இருவருக்கு இடையே ஆன உரையாடலில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்த்தல் அனைவருக்கும் அங்கே தரப்பட்டது.

சரி இதை நான் இங்கே ஏன் குறிப்பிட வேண்டும். ?

உறவுகள், நட்புகள், தொழில்ரீதியாக தொடர்புடையோர் என சமூகத்தில் புழங்கும்போது மனதில்  எழும் பல கேள்விகளுக்கு பதில் நிச்சயம் தேவை. கூடவே நாம் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் ? இந்த பதில்கள் நமக்கு எப்படிச் சொல்லப் பட்டிருக்கவேண்டும் ?  என்ற சூழலுக்குச் சாட்சியாக ..
இருதரப்புக்கு இடையே உரையாடல் கலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சாட்சியாக இந்தச் சம்பவம் இருந்தது.

அப்போதய மனநிலைக்கு இந்த பதில்களே நிறைவானதாக இருந்தது. மன அமைதியும் , செயல்களில் கிடைத்த விளைவுகளும் நிறைவாகவே இருந்தது. 100 சதவீதம் சரியாகவே இருந்தது..மற்றொருவரிடம் உரையாட மகானின் இந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது..

காலச் சக்கரம் சுழன்றது..  எது பொருத்தமாகவும், தெளிவைத் தருவதாகவும் இருந்ததோ அது எனக்குத் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. மாற்றம் என்னிடத்தில்...

முரண்பாடாகத் தெரிகின்றதா ? ஏன் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.



Monday, September 3, 2012

போலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

நண்பர் இக்பால் செல்வத்தின்  தியான சார்ந்த இடுகையில் நான் பின்னூட்டமிட அதன் தொடர்ச்சியாய் நண்பர் சார்வாகனனின் பின்னூட்டங்கள், அதில் சில விளக்கங்கள் கேட்டிருந்தார்.  நண்பர்கள் மேற்கண்ட இடுகையை படித்துவிட்டு இதைப் படித்தால் எளிதாக புரியும்.

Thursday, May 27, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி நான்கு

நம் மனதிற்குப் பிடிக்காத உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் உள்ளிட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து ஆத்திரப்படுதல் சநதிப்பவர்களிடமெல்லாம் அவர்களைப்பற்றி பேசிக் கோபத்தை கொட்டித்தீர்த்தல் என்பது தவிர்க்க வேண்டியதில் நான்காவது ஆகும்.

'நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
'   குறள்-108

என குறள் ஆசான் சொன்னதை நினைவில் கொள்வோம்.

அதோடு மட்டுமில்லாமல்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
’.      குறள் 152

'ஏதோ ஒரு தீயகுணம் அதிகப்பட்டதன் காரணமாக, (அல்லது நமது கர்மவினை காரணமாக) பிறர் நமக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது உயர்ந்த பண்பு.  உடனுக்குடன் அந்த துன்பத்தையும் அதைச் செய்த மனிதரையும் நம் நினைவில் இருந்து அகற்றி விடுவது அதைவிட உயர்ந்த பண்பு'.என்றும் சொல்லி இருக்கிறார்.

பிறரை எச்சரிக்கை செய்யும் பாணியில் சொல்வது என்பது சரிதான், அதுவே நம் மனதைத் தாக்கக்கூடாது என்பதே இதில் முக்கியம்.துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது என்பதே நம் மனதின் சமநிலை பாதிக்காமல் இருக்கத்தான்.

பிடிக்காத மனிதர்களை நினைக்கும் நேரம் எல்லாம் வீணான நேரம். அவர்களைப் பற்றிப் பேச செலவிடும் ஆற்றல் வீணான ஆற்றல்.  திரும்பத்திரும்ப அவர்களை நினைப்பதால் அவர்களைப் பற்றி பேசுவதால் நமக்கு ஏற்படும் மனப்பதிவு,  நமக்கு மன உளைச்சலையும் உடல் உபாதைகளையும் உண்டாக்கும் ஆதலால் இதைத் தவிர்ப்போம் மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்வோம்.


”நமை தூற்றிப் பொறாமையினால் பிறர் பழித்தால்
நம் வினையே வெளிப்படுதலாக எண்ணி
சுமை மனதில் கொள்ளாது அமைதி கொள்வோம்
சொற்சூடு அளிப்பவர்க்கு வாழ்த்து சொல்வோம்
இமை கண்ணைக் காப்பது போல் இறை எவர்க்கும்
எத்துன்பத்துக்குள்ளும் காவலாக
அமை(ந்த) நியதி எப்போதும் மறத்தல் கூடா
அச்சமில்லை அச்சமில்லை அருட்சுடர் நாம்.”

- வேதாத்திரி மகரிஷி ஞானக்களஞ்சியம் பாடல் 602

Tuesday, March 2, 2010

கல்கி ஆசிரமமும் நித்தியானந்தரும்

இன்று விசேசமான நாள் போலிருக்கிறது..

சென்னை கல்கிபகவான் ஆசிரமம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது..



Saturday, November 21, 2009

பாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயன்களை அனுபவிக்கின்றனர்-இது ஏன்?


செயலுக்குத் தக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது.வராது.

செயலுக்கும் விளைவுக்கும் இடையே உள்ள காலநீளம் பல காரணங்களினால் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயல்களுக்கும் விளைவுகளை இணைத்துப் பார்ப்பதில் பொருத்தமில்லாமல் போகிறது.

ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம்,
மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம்.
இன்னொரு செயல் அதைச் செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து மூன்று அல்லது நான்கு தலைமுறைக்குப் பின்கூட விளைவு வரலாம்.

கணித்து இணைத்துப் பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கைச் சட்டத்தில் என்றுமே தவறு இருக்க முடியாது.

இதனாலேயே நாம் செய்யும் செயல்கள் முடிந்தவரை பிறரின் உடல், உயிர்,மனம் இவற்றிற்கு துன்பம் தருமா என்பதை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். அதே சமயம் நமது உடல்,ம்னம், உயிருக்கு இனிமை தருவதாகவும் அமைய வேண்டும்.

நன்றி - அன்பொளி 1983ம் வருடம் -  வேதாத்திரி மகரிஷி

வருங்கால சந்ததிக்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சேர்த்து வைக்கும் சொத்து வினைப்பதிவுகளே. ஆகவே நம் வினைகளை தேர்ந்து செய்வோம்.

Thursday, November 5, 2009

மருத்துவ முறைகள் மூன்று

ஒரு குடும்பத்தை மருவி வாழும் மகளுக்கு மருமகள் என்று பெயர், அதுபோல் நம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிர் ஆற்றலோடு மருவி, உந்தும் ஆற்றலுக்கு மருந்து என்று பெயர். மரு+உந்து வழியில் நோய் தீர்க்கும் கலைக்கு மருத்துவம் என்றே பெயர் வந்தது.




மூன்றுவகை மருத்துவம்

1)இரத்தத்தையும் சதைகளையும் இரசாயன முறையில் குறைபாட்டை நீக்கி, சீரமைக்கும் முறை ஒன்று. இம்முறையில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம்,யுனானி,உணவு மாற்றம், உடற்பயிற்சி இவைகள் அடங்கும்.

2)உயிர்துகள்களைப் பெருக்கி அதன்மூலம் ஜீவகாந்த ஆற்றலுக்கு திணிவு ஏற்படுத்தி, அதன் மூலம் நோயை போக்கும் முறை இரண்டாவது. இதில் இதில் இரசம்,கந்தகம்,பாஷாண வகைகளைக் கொண்டு செய்யப்படும். சித்த மருத்துவமும் இதுபோன்ற முறைகளும் இதில் அடங்கும்.

3)சீவகாந்தக்களத்தின் தன்மைகளை மாற்றும் காந்த அலைகளை ஊட்டி, அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறை ஒன்று. ஓமியோபதி, உளப்பயிற்சி, பிரார்த்தனை இவையும் இவை ஒத்த பிற முறைகளும் இதில் அடங்கும்.

மேற்கண்ட மூன்று வகைகளுமே இன்றுவரை மனித இனத்தில் பழக்கத்தில் இருந்து வரும் முறைகள் ஆகும். அதே சமயம் ஒவ்வொரு மருத்துவத்திலும், மற்ற மருத்துவ வகைகளின் பயன் மறைமுகமாக ஓரளவிற்கேனும் செயல்படும்.

--வேதாத்திரி மகரிஷி

Saturday, October 10, 2009

உருவ வழிபாடு ஏன்?

உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.

இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies

இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்


முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.

அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்


ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

---வேதாத்திரி மகரிஷி,

தொடரும்



டிஸ்கி; வேதாத்திரி மகரிஷி அவர்களின் இந்த கட்டுரை எளிமையாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ளதாக நான் எண்ணுவதால் இன்னும் சில பகுதிகள் தொடரும்.

Sunday, September 6, 2009

அனானியும் வேதாத்திரி மகானும்

நண்பர் ரவிஆதித்யா அவர்களது அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா? கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. மிகச் சரியான முறையில் விஞ்ஞானம் சொன்னதை அலசி இருந்தார்.


\\ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.\\

அதே சமயம் இறைநிலை என்பது பொருள் அல்ல,அதற்கு இந்த சூத்திரம் உதவாது.

சுலபமா யோசித்தால்கூட நாம் ஓட்டுகிற வாகனம், கீழே பூமி தாங்கி இருப்பதால்தான் பாதையில் ஓடுகிறது. ஒரு அடி உயரமா சக்கரம் நிலத்தில் படாமல் இருந்தால் ஓடாது, வெறும் சக்கரம்தான் சுற்றும், வாகனம் நகராது.

சரி பூமியின் எடையும், பருமனும் எவ்வளவு?
இதை எது தாங்கிக் கொண்டிருக்கிறது ?
பூமிக்கு கீழ் எந்த ரோடு சூரியனைச் சுற்றி வர போடப்பட்டிருக்கிறது ?
பூமி அதில் உருண்டு கொண்டு இருக்கிறதா ?
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் மற்றும் சூரியனைச் சுற்றி வரும் வேகத்திற்கு காரணம் என்ன?

பதிலே கேள்விக்குரியதாக அமையும் அறிவியலில். 

சூன்யத்திற்கு காரணம் வேண்டியதில்லை, ஏனெனில் சூன்யமே காரணம், சூனியமே காரியமாகவும் மலர்கிறது, சூனியம் என்பது அனைத்துக்கும் மூலம், அதனுள் அனைத்தும் அடக்கம்.

இனி இதோ வேதாத்திரி மகானின் கருத்துக்கள்

“சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா?
அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் இரகசியம் என்ன?


மகானின் பதில்

”படுத்திருக்கிறீர்கள், நல்ல ஓய்வு, அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே...? ஏன் எழுந்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் மிகும் உடல்ஆற்றல் வேகம் தானகவே எழுந்திருக்கச் செய்கிறது.

சுத்தவெளி தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்தன்மை கொண்டது. அது எப்போதுமே தானாகவே விரிந்து கொண்டே இருக்குக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும், தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.”

எனக்கு மகானின் இக்கருத்து, முழுமையாக, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவானதாக இருக்கிறது. சுத்தவெளி என்ற இறைவெளி இதையே இறை என மதிக்கிறோம்.

இந்த கருத்தை நான் இடுகையாக்க தூண்டுதலாய் இருந்த நண்பர் ரவி ஆதித்யாவுக்கு  எனது நன்றிகள், வாழ்த்துக்கள்

Thursday, August 13, 2009

கடவுள் எனபது என்ன? கட -- உள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வலையுலகில் தற்போது வால்பையன் அவர்கள் விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.


அவரது கருத்துகள் கடவுள் மறுப்பாக இருந்தாலும், இலாவகமாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கப்பட்ட விதத்திற்கு பதிலடியாக உள்ளது. அதற்கு வரும் பின்னூட்டங்கள் சில சமயங்களில் ஆரோக்கியமாகவும்,சில சமயம் அர்த்தமற்றதாகவும் (என் பார்வையில்), இருக்கின்றது.


கடவுள் இருக்கிறார் என சில நண்பர்கள் விவாதம் செய்யும் தொனியில், எனக்கு சில அடிப்படை விசயங்கள் அதில் தவறு என நினைக்கும்போது, அதை மிக வலுவாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்க்கின்ற இவர்களிடமும் எனக்கு குழந்தைகள் விளையாட்டுக்கு அடித்துக்கொள்வதை பார்க்கின்ற உணர்வே ஏற்படுகிறது.


சரி விசயத்துக்கு வருவோம்


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய வெட்டின நீயோ, உன் வம்சமோ இனிமேல் இருக்கக்கூடாது என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை உயிரோடு விட்டால்தான் ஆச்சரியம்.


சரி அரசாங்கமும், நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?. சிறையில் அடைத்து தண்டனை தந்துவிடும்.


அட ஒண்ண சொல்ல மறந்திட்டேனே


நான் ஒரு டாக்டர், நீங்க என்னிடத்தில் அறுவைச்சிகிச்சைக்கு வந்த நோயாளி !


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய எடுத்து, என்ன காப்பத்தின டாக்டர், நீங்களும் உங்க வம்சமும் நீண்ட நாளைக்கு நல்லா இருக்கனும் என நினைப்பீர்கள்.


உங்களை சேர்ந்தவர்களோ என்னை தெய்வமாக நினைக்கா விட்டால்தான் ஆச்சரியம்.


பாருங்க மக்கள் எப்படின்னு??


ஒருத்தர் கைய வெட்டினா அது தப்புங்கிறாய்ங்க..

இன்னொருத்தர் கைய வெட்டினா ரொம்ப நல்லதுங்கிறாய்ங்க...

ய்ஏஏஏஏஏன்ன்ன்???


செயலிலே இல்லை சரி என்பதும் தவறு என்பதும். அதன் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.


இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்??


தேங்காய், பழம் உடைத்து வைத்தால் சாமியா வந்து சாப்பிடுது? ஆனா அது ஏன் என்று மெதுவா உள்ளே கேளுங்கள், மூட நம்பிக்கையா நினைக்காதீங்க, பொருத்தமான விடை வந்து சேரும். அதுதான் தத்துவம், உள்ளடங்கிய விளைவு,


உருவ வழிபாட்டு முறையின் செயல்பாடுகளில், உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் யார் சொன்னாலும் நம்புங்க, கூடவே நம்பாதீங்க


(பொன்னுச்சாமி சகவாசத்தால் வந்த வினை, புரியற மாதிரி எழுத மறந்து போச்சு)


உருவ வழிபாட்டின் எந்த ஆன்மீக செயலாக இருந்தாலும் அதன் விளைவை கூர்ந்து கவனியுங்கள். (செயல் செய்து முடித்த பின்), ஆடி மாதம் கடவுளுக்கு கிடாவெட்டா, விளைவு உயிர்ப்பலி தேவையான்னு யோசிங்க வேண்டாம்னு ஒதுக்குங்க


திருவண்ணாமலை கிரிவலம் போகனுமா என்னபலன் மேலோட்டமா பார்த்தாக்கூட நடைப்பயிற்சிதானே! யாருக்கு நட்டம்? போயிட்டு வாங்க.


கடவுள் விசயமும் இப்படித்தான், ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம்,

பிராமணரா? முடிந்தால் சரியான நபரா என ஆராயுங்கள், சொல்றத கேளுங்க, பிடிக்கலை விட்டுடுங்க, ஆனால் சொல்றத செய்துபார்த்துட்டு, தவறுன்னு தெரிஞ்சா விட்டுடுங்க, ஆனா செய்யாமலேயே அது எப்படி சரியா வருமான்னா குழப்பம்தான் மிஞ்சும்.

எல்லாமே மனசுக்குத்தான், அது நிறைவடையத்தான் இத்தனையும்

சும்மா இயல்பா இருங்க, கடவுளப் பத்தி கவலைப்படாம இருங்க, அவரு உங்கள பார்த்துக்குவாரு. அல்லது பார்த்துக்க மாட்டாரு அப்படின்னும் வச்சுக்குங்க , ஆனா இயல்பா இருங்க,


நீங்க உங்களுக்கும் பிறருக்கும் நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மாத்திரம் செய்யுங்க, அது எதுவானாலும் சரி


செயல் செய்யும்போது ஆராய்ச்சி பண்ணாம, செய்வதற்கு முன் ஆராய்ச்சி பண்ணுங்க.,

தெரியல, புரியல அப்படின்னா செய்துட்டு அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுங்க

இத அனுபவத்தில் கொண்டு வந்து பாருங்க, விவாதம் குறையும், விளக்கம் கூடும்.



இனி வேதாத்திரி மகானின் கவிதைகள் இங்கே உங்கள் சிந்தனைக்கு....



கடவுள்

கடவுள் யார் என அறிய ஆர்வம் கொண்டு

கருத்துடனே ஆராயும் அன்பா கேளாய்

கடவுள் ஒன்றே பூரணமாம், உவமை இல்லை

கருத்தொடுங்கிக் கருத்தறிந்த நிலையில் மெளனம்

கடவுள் அணு,ஒலி,ஒளி,ஈர்ப்பு இவையாக உள்ளான்

கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக

கடவுளே அணு, அண்ட பிண்டமானான்

கருத்தானான் அந்நிலையே நீயும் நானும்.

* * *

கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்

கருத்தறியான் ஊன்றி இதைக்காணவில்லை;

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி

கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்ககூட்டி

கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு

கடவுள்! என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்

கடவுள் எங்கே? என்று பலரும் தேடுகின்றார்


நன்றி மீண்டும் சந்திப்போம்

Wednesday, August 5, 2009

மனிதருள் வேறுபாடு ஏன்?

மனிதருள் வேறுபாடு

கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.

ஞானக் களஞ்சியம் - 177



ரசாயன அமைப்பும் மாற்றமும்

கருஅமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல்-எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்,
தகுந்த அளவாம். இதிலோர் சக்திமீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்


ஞானக் களஞ்சியம் - 816

வேதாத்திரி மகான் அவர்களின் பாடல்கள் நம் சிந்தனைக்கு:

வாழ்த்துக்கள்

Tuesday, May 5, 2009

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்

இறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கம் என்னவென்றால்,’சுத்தவெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வமாகும்’ என்பதாகும்.

சுத்தவெளியானது (1) வற்றாயிருப்பு, (2)பேராற்றல், (3)பேரறிவு, (4)காலம் என்கின்ற நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது.

வற்றாயிருப்பு

சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, அதனுடைய ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்குகின்ற வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்

பேராற்றல்

பலகோடி சூரியக் குடும்பங்களை உடைய இந்த பேரியக்க மண்டலத்தில் உலவுகின்ற அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் சுத்தவெளியை பேராற்றல் என்று கூறுகிறோம்.

பேரறிவு

எந்தப் பொருளிலும், எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல் புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல்தான் அறிவு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோற்றத்திலும்,உருவ அமைப்பு,குணங்கள் மற்றும் காலத்தால் காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளியானது பேரறிவு என்று விளக்கப்படுகிறது.

காலம்

சுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்தும்போது, அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகானது கண்சிமிட்டும் நேரம்போல மிகக் குறைவானதாகும். இந்த
அதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருள்களுக்கும் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலை காலம் என்று சொல்கிறோம்.

ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. அதுவே காலமாகவும் இருக்கிறது.


இறைநிலை


வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்
வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்
வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்
வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்
வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை

ஞானக்களஞ்சியம் பாடல் 1666

நன்றி ஆன்மீக விளக்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி