"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label அன்பான உறவு. Show all posts
Showing posts with label அன்பான உறவு. Show all posts

Monday, January 7, 2019

மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?

சுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)
ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).
நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..
உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..
ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..
மன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 🌻ஸ்ரீனி🌻

facebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்

Thursday, July 4, 2013

வேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்...

வருடம் தவறாமல் தீபாவளி பொங்கல் முத்து தாத்தா வந்துவிடுவார். அவருடைய முதல் விசிட் என் வீடுதான்.. வயிறாற விருந்திட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்புவேன்.  சமைத்ததில் முதல் பங்கே அவருக்குதான். குழந்தைகளே பரிமாறுவார்கள். 

நாங்கள் பயன்படுத்தும் டம்ளர் போன்றவைகள் தரப்படும். இயல்பாக கழுவி பயன்படுத்துவோம். இலையை அவரே எடுக்க எத்தனித்தால் அனுமதி இல்லை. நாங்கள் தான் எடுப்போம். அவர் மெள்ள மெள்ள வெளியேறும்போது வாசலில் நின்று மறையும் வரை பார்ப்போம். குழந்தைகளின் மனநிறைவு அளவற்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பெற்ற தந்தையை விட மனம் உயர்வாகவே நினைக்கும்.

காரணம்  என்னன்னு தெரியல... எல்லோரையும் சாமி, சாமி ந்னு க்கூப்பிடற வாஞ்சையா? முதுமை காரணமா, எதுவும் புரியலை... இப்படித்தான் சாதி என்கிற உணர்வு உள்ளுக்குள்ள பனித்திரை மாதிரி இருக்குது.. என் குழந்தைகளுக்கு சாதி என்பது என்னன்னு தெரியாது.... ஆனா மன அலைவரிசைக்கு ஒத்துவர்றவுங்க, வராதவங்கன்னு பிரித்துப் பார்க்கத் தெரியும். 

சுருக்கமாச் சொல்லனும்னா அசைவம் சாப்பிடறவங்க வேற சாதி.. சைவமா இருக்கிறவங்க நம்ம சாதி.. இத நான் சொல்லிக்கொடுக்கலை... எனக்கு அசைவம் சாப்பிடறவங்களோட ஒன்னா உட்கார்ந்து சைவம் சாப்பிடுவேன். அவர்களுக்கு தேவையானதை பரிமாறவும் செய்வேன். மனம் பற்று, பிடிப்புன்னு ஒட்டாமல் இருக்கிறது சாத்தியமாயிட்டுது.

சரி என் புள்ளைங்க பெரிசான வேற சாதியில கட்டி வைப்பயான்னு கேட்டா என்ன பதில் சொல்றது தெரியல ..அப்படி கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் என்னன்னு புரியல... சாதி சோறுபோடாது.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசு இல்லாம இந்த உலகத்துல பிழைக்க முடியாது..  மாசம் இப்போதைக்கு இருபதாயிரம் இருந்தாத்தான் குடும்பம் தள்ள முடியும்..

வீட்டு வேலை எல்லாம் செஞ்சாகனும். ஆள்போடனும்னா இன்னும் பத்தாயிரம் சேத்து சம்பாதிக்கோனும். வீட்டு நிர்வாகம்,  காசு சம்பாதிக்கிறதுல உள்ள சிரமங்கள், நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற சுதந்திரம்னு எல்லாம் என் புள்ளைங்களுக்கு லேசுபாசா சொல்லித்தான் வளர்த்துகிட்டு வர்றேன்.

இவளுங்க வளர்ந்து குடும்பம் தள்றதுல உள்ள சவால்கள், வேறு சூழ்நிலை அங்கு வாழ்தலில் உள்ள அனுசரிப்பின் அவசியம் இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் என் எதிர்ப்பார்ப்பு....சாதி முக்கியமில்லைதான்.

படிக்க ஹாஸ்டல்ல கொண்டு விடறன்னா பக்கிக நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு வீட்ல எங்களை மேய்ச்சுக்கிட்டு இருக்கிறாங்க... இதுக வளர்ந்து எல்லாம் புரிஞ்சுகிட்டு வேற சாதியிலதான் கட்டுவேன்னா கட்டி வச்சுற வேண்டியதுதான்.

நமக்கென்ன.. மாட்டுற ஐயரு பாடுதான் திண்டாட்டம் ...அவ்வளவு விபரமா இருப்பாங்கன்னுதான் நடவடிக்கைகளைப்பாத்தா தோணுது .

தர்மபுரி விசயத்த படிச்சவுடன் தோணுச்சு.. எழுதினேன்.

இளவரசன் மரணம் வருந்தத்தக்கது எனினும் அது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இளவரசனோ, திவ்யாவோ ஆரம்பத்தில் இந்த அளவு எதிர்ப்பு வரும் என நினைத்திருக்க மாட்டார்கள். இடையில் அரசியல் புகுந்து பிரச்சினை பெரிதாகிவிட்டது உண்மைதான்... ஆனால் காதலுக்கு கண் இல்லை. சக்தியும் இல்லை போல.. இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது.. நம்பி வந்தவளை விட்டுட்டு போயிட்டது குற்றம்தான்... கொலை எனில் அடப்பரதேசி.. எங்கிட்டாவது ஓடிப்போயாவது பொழச்சு இருந்திருக்கலாமே.. அதொன்னும் கேவலம் இல்லையே? சில வருசம் கழிச்சு.. அல்லது எப்படியாவது திவ்யாவை பிக்கப் பண்ணி இருக்கலாமே.... ஏன் இப்படி மாட்டினேன்னு அங்கலாய்க்கத்தான் முடிகிறது.

சாதி என்பது வரும் தலைமுறையிடம் நாம் விதைக்காமல் இருந்தால் போதும். நம்மோடு அது மறைய வேண்டும். அரசும் சாதிகளை, சாதிக்கட்சிகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும். மெள்ள மறைந்துவிடும்.... இதற்கு அரசியல், சாதிக்கட்சிகள் தயாராகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் அது சாத்தியமாகும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

Tuesday, November 15, 2011

ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?

நாம்  எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை  என்பதே உண்மை.

Wednesday, November 24, 2010

லிவிங் டு கெதர்..... (18+)

லிவிங் டு கெதர் என்பது என்ன.. இது சரியா தவறா என்பதைவிட இதன் விளைவுகள் என்ன? சாதக பாதகங்கள் என்ன? இது தேவையா எனப் பார்ப்போம்.

லிவிங் டு கெதர் என்றால் என்னுடைய புரிதல் வயது வந்த ஆணும் பெண்ணும் இருவராக சேர்ந்து வசித்துப் பார்ப்போம். எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் இணைந்து வாழலாம். இல்லையெனில் பிரிந்துவிடலாம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சி என வைத்துக்கொள்கிறேன்.

Monday, April 27, 2009

கடவுளும்..நல்ஒழுக்க உறவும்..அன்பான உறவும்

‘கடவுளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வார்!’

என்னும் மூன்றாம் வகை உறவே நல்ஒழுக்க உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலதேவர் போன்ற மகான்களே இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளைப் பற்றிப் பேசவில்லை; புகழவில்லை; கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்த உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்யம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை உள்ளிட்ட சகல நல் ஒழுக்கங்களையும் கடுமையாய்ப் பின்பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டு கொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களைக் கண்டுகொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.சமாதியும் வாய்த்தது. இந்த வழி போற்றுதலுக்குரிய வழி. தாரளமாய் இந்த வழியில் நாம் பயணிக்கலாம்.

நான்காம் வகை ; அன்பான உறவு

‘கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர், கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் !’

என்னும் நான்காம் வகை உறவே அன்புவழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தடிகள், சைவ நாயன்மார்கள், சித்தர்கள் எனப் பலரும் பின்பற்றிய உறவு இது.கடவுள் விரும்பும் அனைத்து நல் ஒழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்து உயர்வடைந்தவர்கள். அதே வேளையில் கடவுளைப் புகழ்ந்து போற்றிப் பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.

’திருநீறு வர வைக்கிறேன். எலுமிச்சம்பழம் வர வைக்கிறேன்’ என்பதுபோல் அல்ப சித்துக்களைக் காட்டிப் பாமரர்களை ஏமாற்ற மாட்டார்கள்.

’என்னிடம் பணம் கட்டிப் பாதபூஜை செய்தால் வினைகள் தீர்ந்துவிடும்’ என்பதுபோல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்

’தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் !’ என்பது போல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள்.

‘நின் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்குப்போல் அடக்கமாய், எளிமையாய், மறைவாய், தனியாய் வாழ்வார்கள்.

இருப்பதில் உயர்ந்த நிலையை எய்தும் வல்லமை இவர்களுக்கே உண்டு. இவர்களை பின்பற்றுவோர் தாரளமாய் கடைத்தேறலாம்

இந்த நால்வரில் நீங்கள் யார் ?

நீங்கள் யார் என்பதையும், எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உணருங்கள். யாராக வேண்டுமானாலும் மாற உங்களுக்கு உரிமையும் தகுதியும் சுதந்திரமும் உண்டு முடிவு செய்யுங்கள் செயல்படுங்கள்.

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து