"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, February 15, 2014

அர்விந்த் கெஜ்ரிவால் போராளியா ? பிரதமராகத் தகுதியானவரா?

ஜனலோக்பால் மசோதா தோல்வி என பத்திரிக்கைகள் அலற..படித்துப்பார்த்த போதுதான் தெரிந்தது..ஜனலோக்பால் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமோ ஓட்டெடுப்போ நடந்து தோல்வி அடையவில்லை.

டில்லியைப் பொருத்தவரை எந்த மசோதாவாக இருந்தாலும், அது மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலோடுதான்  நிறைவேற்றப்படுகிறது. இதையே துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தியும் அதையும் மீறி தாக்கல் செய்ய நினைத்து அதில்தான் தோல்வி அடைந்தார் கெஜ்ரி..கடைபிடிக்கவேண்டிய நெறிமுறை,மரபு,விதிகளுக்கேற்ப நடக்காததுதான் தோல்விக்குக் காரணம்..


இது ஒரு முதல்வருக்கு அழகல்ல..அனுப்பி, மறுக்கப்பட்டிருந்தால் இவருக்கு வலு கூடி இருக்கும். அதைக் கூடச் செய்யாமல் என் விருப்பபடி செய்வேன் அது நடக்காவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்னதாக சொன்னதும் மூடத்தனம்.

முன்னதாக, அர்விந்த் கெஜ்ரிவால் டில்லியில் இத்தனை சீட் பிடிப்போம் என்றே  நினைத்துப் பார்க்காத நிலையில் மக்களின் ஆர்வத்தினால் வெற்றி பெற்றார்.. இவர் மற்ற துறைகளில் வல்லுநராக இருக்கலாம். ஆனால் அரசியலில் கத்துக்குட்டிதான்.. அவர் வெற்றி பெற்ற சமயத்தில் இந்த கருத்தை தெரிவித்தால் எதிர்மறை விமர்சனமாகவே கருதப்படும் என்பதால், எதையும் முன்கூட்டியே திட்டவட்டமாகச் சொல்லக்கூடாது என்பதாலும், பொறுமை காத்தேன்.

போதுமான பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் ஆட்சி அமைக்க முயற்சித்ததிலேயே இவரது பாதை சரியல்ல என்பது தெளிவானது. தகுதி இல்லாத ஒருத்தர் , தன்னைவிட அதிக தகுதி உடையவரை தாண்டிச் சென்று பயன் அடைவது என்பது லஞ்சத்தின மறைமுக வடிவம்தான்.

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு இந்த டில்லியில் கடந்த ஆண்டுகளில் நாட்டையே ஊழல் என்ற போர்வைக்குள் மூடி வைத்த பெருமைக்குச் சொந்தமுடைய காங்கிரசோடு கூட்டணி என்பதே ஜீரணிக்க முடியாத ஒன்று.

சரி ஏதோ தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமென்று நினைத்த கெஜ்ரி அரசு  தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்டது

மசோதா தாக்கல் செய்வதற்கே தன்விருப்பப்படி நடக்கவேண்டும் என்று மூன்று வயது குழந்தையை விட மோசமாக அடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல்,  அப்படி நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்கூட்டியே சொன்னது முதிர்ச்சி இல்லாத நிலையை படம் போட்டுக் காட்டுகிறது.

அரசியல் என்பது சாக்கடை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கூடவே அது ஒரு பணமுதலீடு இல்லா தொழில்.இதற்கு மூலதனம் வாய் பேசத் தெரியனும்.எந்த லாஜிக்கும் இல்லாம பேசத் தெரியனும். ... எனக்குத் தெரிந்து இந்தத் திறமை இன்றும் கூட குறையாமல் உற்சாகம் கொப்பளிக்க கொண்டு இருக்கிற எனக்குத் தெரிந்த ஒரு நபர் கலைஞர்தான்..இது உண்மையிலேயே பாராட்டுதான்..

கெஜ்ரி எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தத் தெரியாத முட்டாளாகப் போய்விட்டார். கிடைத்த வாய்ப்பை மரபு மற்றும் விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு புத்திசாலித்தனமாக அணுகி, படிப்படையாக தான் நினைத்தது போல் அரசு நிர்வாகத்தைச் சீர்திருத்தி இருக்க வேண்டும்..

பெரும்பான்மை இல்லாத ஆட்சியில் முதல்வராக இருப்பதைவிட ராஜினாமா மேல் என சில நண்பர்கள் எழுதி இருந்ததை பார்த்தேன்,,  இது முதல்வராக பதவி ஏற்கும்போது தெரியலையா..பெரும்பான்மை என்ன ஆட்சி அமைத்ததற்கு பின்னரா குறைந்தது? என்ன சாதிக்கமுடியும் என்ன சாதிக்க முடியாதுன்னு தெரியாம எதற்காக ஆட்சிபீடத்தில் ஏறீனீங்க

மூச்சுக்கு முன்னூறுதரம் மைனாரிட்டி அரசுன்னு ஜெ திட்டினாலும் அந்த அரசை எப்படி ஆட்சிக்காலம்  முழுவதும் ஓட்டறதுன்னு கலைஞர்கிட்ட பாடம் கேட்டிருந்தாக் கூட தப்பிச்சிருக்கலாமே

அரசியல், நிர்வாகம் இரண்டிலுமே எந்தவித முன் அனுபவம் இல்லாத இவர் ஆட்சிக்கு வந்த உட்கார்ந்தபின் தான் நெருப்பின் மீது உட்கார்ந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது. சமாளிக்கும் பக்குவம் இன்றி விட்டால்போதும் என்ற மனநிலையில் இராஜினாமா செய்திருக்கிறார்

சத்தமில்லாமல் காரியங்கள் செய்து விளைவுகளை உறுதி செய்தபின் மீடியாவில் பரபரப்பாக வந்திருந்தால் பாராட்டலாம்.. நினைத்தவுடன் செய்வது என்பதும் அதை உடனே மீடியாவில் சொல்வது என்பதும் இன்னும் அரசியலின்,  நிர்வாகத்தின்,.பாலபாடம்கூட தெரியாத இந்த கெஜ்ரியின் ராஜினாமாவை  வரவேற்கிறேன்..

இது ஓட்டுப்போட்ட மக்களுக்கு புத்தியில் உரைக்கக் கூடிய விசயம்..மெஜாரிட்டி இல்லாமல் வாக்களித்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பொதுத் தேர்தலுக்கு முன், நடத்திக் காட்டி விட்டார் கெஜ்ரி..வரும் பாரளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி அது மெஜாரிட்டியாக வர வேண்டியதின் அவசியத்தை, மக்களுக்கு நன்கு உணர்த்திக் காட்டிய நிகழ்வே இது..

காங்கிரசு டில்லி அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கி, கெட்ட பெயர் சம்பாதிக்காமல் இருக்க, நேரடியாகவே பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் அவராகவே விலகி உதவிதான் செய்திருக்கிறார்.

இனி இவரது எதிர்காலமும், இவரது ஆம் ஆத்மியின் எதிர்காலமும் வளமானதாக நிச்சயம் இருக்காது..பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்டால் சிரிப்பும் வேதனையும் மிஞ்சுகிறது.

காணமல் போனவர்கள் பட்டியலில் கெஜ்ரியின் பெயர், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் இடம் பெறும் என்பதே உண்மை..