"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, August 13, 2009

கடவுள் எனபது என்ன? கட -- உள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து வலையுலகில் தற்போது வால்பையன் அவர்கள் விவாதங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.


அவரது கருத்துகள் கடவுள் மறுப்பாக இருந்தாலும், இலாவகமாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கேள்வி கேட்கப்பட்ட விதத்திற்கு பதிலடியாக உள்ளது. அதற்கு வரும் பின்னூட்டங்கள் சில சமயங்களில் ஆரோக்கியமாகவும்,சில சமயம் அர்த்தமற்றதாகவும் (என் பார்வையில்), இருக்கின்றது.


கடவுள் இருக்கிறார் என சில நண்பர்கள் விவாதம் செய்யும் தொனியில், எனக்கு சில அடிப்படை விசயங்கள் அதில் தவறு என நினைக்கும்போது, அதை மிக வலுவாகவும், தர்க்கரீதியாகவும் எதிர்க்கின்ற இவர்களிடமும் எனக்கு குழந்தைகள் விளையாட்டுக்கு அடித்துக்கொள்வதை பார்க்கின்ற உணர்வே ஏற்படுகிறது.


சரி விசயத்துக்கு வருவோம்


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய வெட்டின நீயோ, உன் வம்சமோ இனிமேல் இருக்கக்கூடாது என நினைப்பீர்கள்.

உங்களை சேர்ந்தவர்களோ என்னை உயிரோடு விட்டால்தான் ஆச்சரியம்.


சரி அரசாங்கமும், நீதித்துறையும் என்ன செய்யப் போகிறது?. சிறையில் அடைத்து தண்டனை தந்துவிடும்.


அட ஒண்ண சொல்ல மறந்திட்டேனே


நான் ஒரு டாக்டர், நீங்க என்னிடத்தில் அறுவைச்சிகிச்சைக்கு வந்த நோயாளி !


உங்கள் கையை நான் வெட்டி விடுகிறேன், இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்களை சேர்ந்தவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்.?


என் கைய எடுத்து, என்ன காப்பத்தின டாக்டர், நீங்களும் உங்க வம்சமும் நீண்ட நாளைக்கு நல்லா இருக்கனும் என நினைப்பீர்கள்.


உங்களை சேர்ந்தவர்களோ என்னை தெய்வமாக நினைக்கா விட்டால்தான் ஆச்சரியம்.


பாருங்க மக்கள் எப்படின்னு??


ஒருத்தர் கைய வெட்டினா அது தப்புங்கிறாய்ங்க..

இன்னொருத்தர் கைய வெட்டினா ரொம்ப நல்லதுங்கிறாய்ங்க...

ய்ஏஏஏஏஏன்ன்ன்???


செயலிலே இல்லை சரி என்பதும் தவறு என்பதும். அதன் விளைவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.


இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்??


தேங்காய், பழம் உடைத்து வைத்தால் சாமியா வந்து சாப்பிடுது? ஆனா அது ஏன் என்று மெதுவா உள்ளே கேளுங்கள், மூட நம்பிக்கையா நினைக்காதீங்க, பொருத்தமான விடை வந்து சேரும். அதுதான் தத்துவம், உள்ளடங்கிய விளைவு,


உருவ வழிபாட்டு முறையின் செயல்பாடுகளில், உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணருங்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் யார் சொன்னாலும் நம்புங்க, கூடவே நம்பாதீங்க


(பொன்னுச்சாமி சகவாசத்தால் வந்த வினை, புரியற மாதிரி எழுத மறந்து போச்சு)


உருவ வழிபாட்டின் எந்த ஆன்மீக செயலாக இருந்தாலும் அதன் விளைவை கூர்ந்து கவனியுங்கள். (செயல் செய்து முடித்த பின்), ஆடி மாதம் கடவுளுக்கு கிடாவெட்டா, விளைவு உயிர்ப்பலி தேவையான்னு யோசிங்க வேண்டாம்னு ஒதுக்குங்க


திருவண்ணாமலை கிரிவலம் போகனுமா என்னபலன் மேலோட்டமா பார்த்தாக்கூட நடைப்பயிற்சிதானே! யாருக்கு நட்டம்? போயிட்டு வாங்க.


கடவுள் விசயமும் இப்படித்தான், ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம்,

பிராமணரா? முடிந்தால் சரியான நபரா என ஆராயுங்கள், சொல்றத கேளுங்க, பிடிக்கலை விட்டுடுங்க, ஆனால் சொல்றத செய்துபார்த்துட்டு, தவறுன்னு தெரிஞ்சா விட்டுடுங்க, ஆனா செய்யாமலேயே அது எப்படி சரியா வருமான்னா குழப்பம்தான் மிஞ்சும்.

எல்லாமே மனசுக்குத்தான், அது நிறைவடையத்தான் இத்தனையும்

சும்மா இயல்பா இருங்க, கடவுளப் பத்தி கவலைப்படாம இருங்க, அவரு உங்கள பார்த்துக்குவாரு. அல்லது பார்த்துக்க மாட்டாரு அப்படின்னும் வச்சுக்குங்க , ஆனா இயல்பா இருங்க,


நீங்க உங்களுக்கும் பிறருக்கும் நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மாத்திரம் செய்யுங்க, அது எதுவானாலும் சரி


செயல் செய்யும்போது ஆராய்ச்சி பண்ணாம, செய்வதற்கு முன் ஆராய்ச்சி பண்ணுங்க.,

தெரியல, புரியல அப்படின்னா செய்துட்டு அப்புறமா கூட ஆராய்ச்சி பண்ணுங்க

இத அனுபவத்தில் கொண்டு வந்து பாருங்க, விவாதம் குறையும், விளக்கம் கூடும்.



இனி வேதாத்திரி மகானின் கவிதைகள் இங்கே உங்கள் சிந்தனைக்கு....



கடவுள்

கடவுள் யார் என அறிய ஆர்வம் கொண்டு

கருத்துடனே ஆராயும் அன்பா கேளாய்

கடவுள் ஒன்றே பூரணமாம், உவமை இல்லை

கருத்தொடுங்கிக் கருத்தறிந்த நிலையில் மெளனம்

கடவுள் அணு,ஒலி,ஒளி,ஈர்ப்பு இவையாக உள்ளான்

கண்டிடலாம் அவனை எங்கும் இயற்கையாக

கடவுளே அணு, அண்ட பிண்டமானான்

கருத்தானான் அந்நிலையே நீயும் நானும்.

* * *

கட-உள் என்று சொல்லிவிட்டான் கருவறிந்தோன்

கருத்தறியான் ஊன்றி இதைக்காணவில்லை;

கட-உள் என்ற ஆக்கினையின் குறிப்பை மாற்றி

கண்டறிந்த நிலைக்கே அப்பெயரைக் கொண்டான்

கட-உள் என்ற இரு சொல்லை ஒன்றாய்ககூட்டி

கடவுள் என்றே சொல்லிச்சொல்லி வழக்கமாச்சு

கடவுள்! என்று மனிதன் ஓர் குறிப்புத்தந்தான்

கடவுள் எங்கே? என்று பலரும் தேடுகின்றார்


நன்றி மீண்டும் சந்திப்போம்

14 comments:

  1. இயற்கையை கடவுளாக நினைப்பது ஒரு வழிபாட்டு வழக்கம், ஆனால் அது மிகவும் பழைய முறை, ஆதிமனிதன் காலத்தில் முதன் முதலாக இயற்கை வழிபாடுகள் தோன்றி இருக்க வேண்டும்.

    ***

    இயற்கை பேரறிவு மிக்கது என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் எனக்குக் கிடையாது, என்னைப் பொருத்து நான் அதை இறைவனாக நினைப்பது இல்லை.

    ReplyDelete
  2. \\இயற்கையை கடவுளாக நினைப்பது ஒரு வழிபாட்டு வழக்கம், ஆனால் அது மிகவும் பழைய முறை, ஆதிமனிதன் காலத்தில் முதன் முதலாக இயற்கை வழிபாடுகள் தோன்றி இருக்க வேண்டும்.

    ***

    இயற்கை பேரறிவு மிக்கது என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் எனக்குக் கிடையாது, என்னைப் பொருத்து நான் அதை இறைவனாக நினைப்பது இல்லை.\\

    இறைவன் குறித்த முன்முடிவுகளோடு இருக்கிறீர்கள்:))

    ஒன்றுமே செய்ய முடியாது:))

    இதை அடிப்படையை புரிந்து கொண்டால் புரிந்து கொண்டால் அங்கே வாதம் இல்லை:))

    இந்த இடுகையின் நோக்கமே, ”ரொம்ப யோசிக்காதீங்க, அப்படியே போகிற போக்கில் கொஞ்சமா தெரிஞ்ச மாதிரி யோசிங்க, விளைவுகளை வைத்து எந்த செயலையும் செய்து பாருங்கள் அவ்வளவுதான்”

    ReplyDelete
  3. //இந்த இடுகையின் நோக்கமே, ”ரொம்ப யோசிக்காதீங்க, அப்படியே போகிற போக்கில் கொஞ்சமா தெரிஞ்ச மாதிரி யோசிங்க, விளைவுகளை வைத்து எந்த செயலையும் செய்து பாருங்கள் அவ்வளவுதான்”//

    இயற்கையைக் கடவுள் என்றால் சுனாமி போன்ற பெரும் இயற்கைச் சீற்றங்களை கடவுள் செயல் என்று ஏற்க மனம் வருமா ? செயலை வைத்து முடிவு செய்வது எவ்வாறு என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் !
    :)

    ReplyDelete
  4. அனைத்து அனுவிலும் அனுக்கருவாக இருப்பவன் இறைவன் - ஈஷாவாஷிய உபநிஷத்.

    இயற்கையும் அனுவால் உண்டானது தானே?

    மின்னல் - இந்திரன்
    மழை/நீர் - வருணன்
    நெருப்பு - அக்னி
    காற்று - வாயு
    மண் - பூமா

    மலையாக இருந்தால் பார்வதி, சுனாமியாக வந்தால் எமதர்மன்.

    படைத்தல் செய்தால் இறைவன்,
    அழித்தாலும் இறைவனே.

    அவனின் ஐந்தொழிலில் படைத்தலும் உண்டு, காப்பதும் உண்டு, மறைத்தலும் உண்டு,அருளலும் உண்டு. கடைசியாக அழித்தலும் உண்டு.

    மழை ஏன் பொழிகிறது என நமக்கு தெரியாமல் இருக்கலாம். விவசாயிக்கு நன்மையும், பட்டாசு விற்பவருக்கு தீமையும் செய்வதால் மழையை என்னவென்று சொல்ல? நீங்கள் பட்டாசு கடைக்காருக்கு உறவினர் என்பதால் மழை இறைவன் அல்ல என்பீர்களோ?

    சார்பற்று இருங்கள் அனைத்தும் புரியும்.

    ReplyDelete
  5. //மழை ஏன் பொழிகிறது என நமக்கு தெரியாமல் இருக்கலாம். விவசாயிக்கு நன்மையும், பட்டாசு விற்பவருக்கு தீமையும் செய்வதால் மழையை என்னவென்று சொல்ல? நீங்கள் பட்டாசு கடைக்காருக்கு உறவினர் என்பதால் மழை இறைவன் அல்ல என்பீர்களோ?

    சார்பற்று இருங்கள் அனைத்தும் புரியும்.//

    இயற்கையின் நன்மை / தீமை பற்றி பேசும் போது முரண்பாடாக நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு இறைவன் என்று உருவகப்படுத்துவது வழக்கமாக இருக்கிறது, அதைத்தான் முரண்பாடு என்று குறிப்பிட்டேன்.
    நான் அதை நன்மை/தீமை ஆண்டவன் செயல் என்று பகுப்பது கிடையாது. நீங்கள் அதை ஆண்டவன் செயல் என்று நம்பினாலு, நம்பாவிட்டாலும் இயற்கை அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
    :)

    ReplyDelete
  6. \\அனைத்து அனுவிலும் அனுக்கருவாக இருப்பவன் இறைவன் - ஈஷாவாஷிய உபநிஷத்.\\

    அணுவுக்கும் முந்தய நிலையே சிவ நிலை,
    அணுக்கரு சக்தி நிலை


    \\மின்னல் - இந்திரன்
    மழை/நீர் - வருணன்
    நெருப்பு - அக்னி
    காற்று - வாயு
    மண் - பூமா

    மலையாக இருந்தால் பார்வதி, சுனாமியாக வந்தால் எமதர்மன்.\\

    இவர்கள் எல்லாம் இறைவன் அல்ல
    அதற்கு அடக்கமான தெய்வங்கள் அவ்வளவுதான்

    \\சார்பற்று இருங்கள் அனைத்தும் புரியும்.\\

    சிவனேன்னு இருக்க சொல்றீங்க சாமி, அது உங்களால முடியுது, நாங்க முயற்சியற்று இருக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்:)))

    ReplyDelete
  7. //அனைத்து அனுவிலும் அனுக்கருவாக இருப்பவன் இறைவன் - ஈஷாவாஷிய உபநிஷத்.//

    நீங்கள் ஒன்று எழுதினால் 1000 ஆண்டுகள் கழித்து ஸ்வாமி ஓம்கார் அருளிய ஓம்கார் உபநிஷத் எனப்படும், போற்றப்படும் !

    இல்லை என்றால் 'நட்ட கல்லும் பேசுமோ' என்கிற எதிர்ப்பைக் கூட பக்தி இலக்கியமாக பார்க்கும், போற்றும் மன நிலை நமக்கு வந்திருக்குமா ?

    உபநிஷத்துகள் தனிமனிதன் அவன் எண்ணங்களை எழுதி இருக்கிறான் என்ற அளவில் தான் எனது புரிதல்
    :)

    //இயற்கையும் அனுவால் உண்டானது தானே?

    மின்னல் - இந்திரன்
    மழை/நீர் - வருணன்
    நெருப்பு - அக்னி
    காற்று - வாயு
    மண் - பூமா//

    நம் வசதிக்கேற்ப மாற்றுப் பெயர் தானே !

    ReplyDelete
  8. /அணுவுக்கும் முந்தய நிலையே சிவ நிலை,
    அணுக்கரு சக்தி நிலை//

    அணுக்கரு(நியூக்கிளியஸ்) இயக்கமற்ற நிலை. அது சிவநிலை. அதை சுற்றி வரும் பகுதிகளும் , அணுக்கருவை பிளந்தால் வெளிப்படும் ஆற்றல் சக்தி நிலை.

    இயக்கமற்ற நிலையை தான் - சிவனேனு இருப்பது என்பார்கள்.

    முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது இறைவனின் பரிமாணம். (evolution of God)

    முதலில் ஒன்றாக இருந்தது பிறகு மூன்றானது. மூன்று பலவானது.

    ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
    பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
    ஈசன் அது இது என்பார் நினைப்பிலார்
    தூசுபிடித்து தூரரியாரே.
    -திருமந்திரம்.

    இதைத்தான் பிக்-பாங்க் என்கிறது அறிவியல்.

    ReplyDelete
  9. ///நீங்கள் ஒன்று எழுதினால் 1000 ஆண்டுகள் கழித்து ஸ்வாமி ஓம்கார் அருளிய ஓம்கார் உபநிஷத் எனப்படும், போற்றப்படும் !
    //

    வருவதற்கு வாய்ப்பில்லை. உபநிஷத் சூத்திர வடிவில் எழுதப்பட்டது யாரும் இடைசெருக முடியாது.

    உபநிஷத்தின் எண்ணிக்கை 108. நமது நாடிகளுக்கு ஒவ்வொன்றும் ஒரு உபநிஷத்தை குறிக்கும்.

    நமக்கு என்று 109ஆவது நாடி உருவாகிறதோ அன்று நான் என் உபநிஷத்தை வெளியிடுகிறேன் :)


    //இல்லை என்றால் 'நட்ட கல்லும் பேசுமோ' என்கிற எதிர்ப்பைக் கூட பக்தி இலக்கியமாக பார்க்கும், போற்றும் மன நிலை நமக்கு வந்திருக்குமா ?//

    இது எதிர்ப்பல்ல உயர் ஆன்மீக வெளிப்பாடு. ஆதி சங்கர அனைத்தும் பொய் என்றார். எத்தனைபேர் அதை கேட்ப்பார்கள்? கோவில்கள் அனைத்தும் பொய்யா என ஆரம்பிப்பார்கள். உயர் நிலைக்கு செல்லும்ம் பொழுது அவர் சொன்னது உண்மை என புரியும்.

    //உபநிஷத்துகள் தனிமனிதன் அவன் எண்ணங்களை எழுதி இருக்கிறான் என்ற அளவில் தான் எனது புரிதல்
    :)//

    அங்குதான் பிரச்சனையே...

    வேதசாஸ்திரத்தில் ருத்ரன்,விஷ்ணு,பிரம்மா எல்லாம் கிடையாது. அக்னி, இந்திரன் வருணன் மட்டுமே இருக்கிறது. யஜூர் வேதத்தின் விளக்கம் இணையத்தில் கிடைக்கிறது(ஆங்கிலத்தில்!) முடிந்தால் படிக்கவும்.

    உலக அறிவியல் அறிஞ்ர் ஐன்ஸ்டின் வாழ்க்கை குறிப்பை படியுங்கள் அவர் உபநிஷத் பற்றி என்ன சொல்லுகிறார் என புரியும்.மேலை நாட்டுகாரர்கள் சொல்லால் தான் நம்மக்கள் நம்புவார்கள். இல்லையென்றால் “இந்து” சாயம் பூசி ஒரு குறிப்பிட்ட ஜாதிகாரர்கள் எழுதினார்கள் என்பார்கள்.

    ReplyDelete
  10. //வேதசாஸ்திரத்தில் ருத்ரன்,விஷ்ணு,பிரம்மா எல்லாம் கிடையாது. அக்னி, இந்திரன் வருணன் மட்டுமே இருக்கிறது. யஜூர் வேதத்தின் விளக்கம் இணையத்தில் கிடைக்கிறது(ஆங்கிலத்தில்!) முடிந்தால் படிக்கவும்.//

    அதைத்தான் பலரும் எப்போதும் சொல்லி வருகிறார்கள், வேதம் முழுக்க முழுக்க அன்றைய பார்பனர்கள் வழிபாட்டுடன் தொடர்புடையது, சிவன் விஷ்னு வணக்கமெல்லாம் அதில் கிடையாது, எனவே க்னி, இந்திரன் வருணன் ஆகியவற்றையும் பிற(ர்) தெய்வங்களையும் பின்னால் அதான் அதில் இடைச் சொருகினார்கள் என்று.

    வேதகாலத்தில் சிவனை சிசுனதேவர் என்று பழித்தது ஸ்வாமிக்கு தெரியுமா ? வேதம் பொதுவான அல்ல என்று ஏன் பலரும் சொல்கிறார்கள் என்று ஸ்வாமிக்கு இன்னும் விளக்க எனக்கு ஏதும் இல்லை :)

    ReplyDelete
  11. எனக்குள் தூண்டுதலகளை எழுப்பிய அளவில் சிவா,ஸ்வாமிஜி,கோ.வி.கண்ணன் மூவருக்குமே எனது நன்றிகள்.
    சில வரிகளால் கருத்துச் சொல்ல முடியாத விவாதம் இது.

    ReplyDelete
  12. கடவுள் என்பது உண்மையா-மாயையா?
    கடவுள் என்பவர் உண்டா- இல்லையா?
    நான் ஆத்திகனா-நாத்திகனா?
    இப்படி எல்லாமே இந்தப் படைப்பில் நேரெதிரான இரட்டைத் தன்மையில், முரண்பாடுகளின் மோதலிலேயே இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். ஆக, இந்த மாதிரியான விவாதங்கள் திரும்பத் திரும்ப எழுவதையும், அந்த விவாதங்களே கொஞ்ச நாளில் நீர்த்துப் போய் புதிய விவாதங்கள் தொடங்குவதையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்! இது இயல்பானது தான், ஒன்றும் புதிதில்லை.

    தருமியின் வலைப் பக்கங்களில் கடவுள் என்றொரு மாயை என்ற தலைப்பில், ஏழு பகுதிகளாக, ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய புத்தகத்தில் இருந்து சின்னச் சின்னப் பகுதிகளாகப் போட்டிருந்தார். அந்தப் பதிவில் இருந்து வால்பையன் திரு. அருண் சுறுசுறுப்பாகப் பின்னூட்டங்களும், பதிவுகளும் எழுதித் தள்ளுவதை தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

    இந்த மாதிரி விவாதங்களை வால்பையன் தான் ஆரம்பித்தார் என்று சொல்ல முடியாது.ஏற்கெனெவே பலரும் எழுதி எழுதிக் கை சோர்ந்து போனது தான். இன்றைய நிலவரப் படி, வால்பையன், ஆறிப் போன ஒரு விவாதத்தை மறுபடி சூடாக்கியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோமே!

    வால்பையனிடம் ஒரு அடிப்படையான நேர்மை இருப்பதையும், விமரிசனங்கள் எப்படி வந்தாலும் அதை எதிர்கொள்கிற பக்குவமும், ஒரு விளையாட்டுப் பிள்ளையாக, நகைச்சுவையோடு எழுதுவதையும் சேர்த்தே பார்க்கும் எனக்கு, நீங்களும் அப்படியே பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete
  13. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இங்கே இடப்பட்ட இடுகைகளும், பின்னூட்டங்களும் பல விசயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. கடவுள் ஒரு ஆசானாகவேத் தெரிகிறார். கடவுள் பற்றிய பேச்சு எழாமல் இருந்தால் கற்றுக்கொள்ளும் வழி பல அடைபட்டு இருக்கும். கடவுள் எனும் ஒரு சொல்லினால் மாறுபட்ட சிந்தனைகள் எழ காரணமாக இருந்தது. கடவுள் ஒரு வினை, மாறுபட்ட சிந்தனை ஒரு விளைவு. நல்லாவே எழுதி இருக்கீங்க, அருமை.

    ReplyDelete
  14. எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் எனச் சொல்லப் பட்டாலும், அறிவு என்பது தனித்து இருந்து பயனேதும் இல்லை.

    அறிவுக்கு உடையவன் ஒருவன் வேண்டுமே!

    அத்தகைய ஒருவனே கடவுள்! உள்ளே கடந்து செல்லச் செல்ல, எதனூடும் நின்றோங்கும் அறிவே கடவுள்!

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)