"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, May 31, 2009

அவுங்களும் நானும்

திருப்பூரில் பனியன் தொழிலில் பலதரப்பட்ட வேலைகளை செய்துதான் பனியனை உருவாக்குகிறோம்.

அப்படி போனவாரத்தில் ஒருநாள் பனியனுக்கு தேவையான லேபிள்களை மொத்தமாக வாங்கிவந்து தொழிற்சாலைக்கு எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன்.

போகும் வழியில் என் வீடு அமைந்துள்ளதால் மதிய உணவை முடித்துக் கொண்டு செல்லும் உத்தேசத்துடன் வீட்டுக்கு வந்தேன்.

பல்வேறு தொழில்ரீதியான சிந்தனைகளுடன், மதிய உணவு முடிந்தவுடன் வேறு சில வேலைகளுக்காக மீண்டும் டவுனுக்கு சென்று திரும்பியவன், அந்த லேபிள் பார்சலை மறந்துவிட்டு சென்று விட்டேன். கம்பெனிக்கு சென்றபின் தான் ஞாபகம் வந்தது. அது உடனே தேவைப்பட்டது.

வீட்டுக்கு போன் பண்ணினேன். போனை எடுத்த அவுங்களிடம் (மனைவி) ஏம்மா, லேபிள் பார்சலை எடுக்க நாந்தான் எடுக்க மறந்திட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தி இருக்கலாம் இல்லையா?. இனிமேலாவது சற்று விவரமா இரு” என்று சொல்லிவிட்டு நான்கு கி.மீ திரும்ப வந்து எடுத்து சென்றேன்.

அதற்கு அடுத்த நாள் மீண்டும் பல்வேறு துணிகள், price tag, போன்ற பலவற்றையும் வாங்கி மதிய உணவுக்கு வந்த நான், அவை அவசரமாக தேவைப்படாததாலும், வேறு ஒரு பிரிண்டிங் பட்டறைக்கு போக வேண்டிய காரணத்தினால் அவைகளை வைத்துவிட்டு கிளம்பினேன்.

பைக்கை ஸ்டார்ட் செய்த தருணத்தில் அனைத்து பொருள்களுடன் அவுங்க வந்து நிற்க, ”இப்ப நான் இதையெல்லாம் எடுத்துட்டு வரச் சொன்னேனா? சொன்னால் மட்டும் செய்தாப்போதும்” என்று சற்றே அதிகாரத் தோரணையுடன் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவுங்க அமைதியாக திரும்ப உள்ளே செல்ல எனக்கு உரைத்தது.

ஆமா, ’நேற்று நான் எதா இருந்தாலும் மறக்காம ஞாபகமாக எடுத்துக் கொடு’ என்று சொன்னதால் தான் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நான் சரியாக உணராமல் பேசிவிட்டதை உணர்ந்தேன். சரி இனிமேல் இதுபோன்ற தவறுகள் என்னிடத்தில் ஏற்படாது என உறுதிகொண்டேன்.

நிகழ்காலத்தில் இல்லாததால் முதலில் லேபிளை மறந்து சென்றேன்.

நிகழ்காலத்தில் இல்லாததால் அவுங்க எடுத்தவந்த காரணத்தை உணராமல் வார்த்தைகளை விட்டுவிட்டேன்.

(நம்மோடு வாழ்க்கை துணையாக வாழ்வது என்ன சாதரண விசயமா என்ன ?!?!?!)

அன்றாட வாழ்வில் இது போன்ற நிகழ்வுகளை அடையாளம் கண்டு சரி செய்தாலே போதும் , வாழ்வில் இனிமை பெருகும். நீங்கள் எல்லாம் எப்படி ????

Thursday, May 21, 2009

கடவுளை நம்புவோம் ஆனால் ஒட்டகத்தை கட்டி வைப்போம்.

உலக அமைதி, உலக நலம் பற்றிய சிந்தனைகளைக் கூறும் கவனகர்முழக்கம்(மாதஇதழுக்கு)
தமிழன், தமிழ்மொழி என்னும் குறுகிய பார்வை தேவையா?
(வாழ்க வளமுடன் ஜெயகோபால், திண்டுக்கல் அன்பரின் கேள்விக்கு பதில்)


நபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் ஏக இறைவனாகிய அல்லாமேல் தூய நம்பிக்கை வைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை உபதேசம் செய்து வந்தார் என்பது நாம் அறிந்ததே.

அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அன்பர் ஒருநாள் நபி பெருமானைப் பார்க்க வந்தார்.
அவர்கல் உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த அன்பர் பெருமானாரைப் பார்த்து “தங்கள் மார்க்கத்தை அப்படியே ஏற்று அல்லா மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன் இப்போதெல்லாம் இரவில் என் ஒட்டகத்தைக்கட்டி வைப்பதுக்கூட இல்லை.
எல்லாவற்றையும் அல்லா பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். என் நம்பிக்கை சரிதானே?” என்று பெருமையாக கூறினார்.

அப்போது பெருமானார் அவரைப் பார்த்து அமைதியாக “அன்புச் சகோதரரே, அல்லாவை நம்புங்கள். ஆனால் அருள்கூர்ந்துஉங்கள் ஒட்டகத்தைக் கட்டி வையுங்கள்” என்று கூறினாராம்.

உலக அமைதி, உலக நலம் என்பதெல்லாம் நம் இலட்சியங்கள். ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் தமிழ்மொழி தமிழினம் என்னும் ஒட்டகங்களை பாதுகாப்பாய்க் கட்டி வைப்பதில் தவறே இல்லை.


நன்றி: விநோதமான வினாக்கள், கவனகரின் விடிவுதரும் விடைகள் -- இராம.கனகசுப்புரத்தினம்.

*************************************************************************************************

என் பார்வையில்

எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால் என்ன அர்த்தம்.?

இன்ப துன்ப உணர்வுகள், சமுதாயத் தொடர்பில் வரும் அனைத்தும் இறைவன் செயலே என்றுணர்ந்து எல்லாம் அவன் செயல் என்ற பக்குவப்பட்ட மனதோடு, நிறைவோடு இருப்பது ஆகும்.

இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனில் குழப்பமே மிஞ்சும்.

எல்லாம் இறைவன் செயல் என்றால் நம் இஷ்டப்படி செயல் செய்யலாமா? அல்லது ஒன்றுமே செய்யாமல் அவன் செயல் என இருந்துவிடலாமா? இது நமக்கு எதைத் தரும்? உருப்படாத சோம்பேறித் தனத்தைதான் தரும்,

இந்த மனம் ஒன்றும் சாதரணப் பட்டதல்ல. சொல்வதைஎல்லாம் நம்பிக்கொள்ள! அது வெளிநோக்கி அலைந்து கொண்டு இருக்கும்வரை

ஐம்புலனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் வரை இந்த தத்துவங்களை எல்லாம் கொஞ்சம்கூட ஏற்றுக் கொள்ளாது.

மனதை திருத்த வேதாத்திரி மகான் சொன்னதுபோல் மனதைக் கொண்டுதான் முயலவேண்டும். எதிலும் உள்ளடங்கியுள்ள உண்மையினை உணர்ந்து அவைகளிடையே ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை அறிந்து உள்நோக்கி மனம் தெளிவை அடையுமானால் அடங்க ஆரம்பிக்கும்.

அதன்பின் எல்லாமே அவன் செயல்தான் என்று உணர உணர நம் செயல்களில் முழுஈடுபாடு இருந்தாலும் புளியம்பழம் எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் ஆனால் ஒன்றாக இருக்கிறதோ அதுபோல் மனம் பாதிப்போ உளைச்சலோ அடையாது.

தனக்கும் பிறர்க்கும் நன்மை விளையும் வண்ணம் நம் கடமைகளை ஆற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் மனம் அதில் முழுமையாக ஈடுபட்டாலும், எவ்வித விளைவு வந்தாலும் எந்தவித சலனமில்லாமல் அமைதியாக இருக்கும்.

இதனால் நம்மிடம் எண்ணங்கள், ஆசைகள்,சினம்,கவலை, போன்றவைகள் தானாக முயற்சி இன்றி சரியாகிவிடும். இதுதான் தானாக நிகழ்வது என்பது.

இது ஆன்மீகத்தில் சிறு ஆரம்பநிலையே.

இம்மனநிலை வர, மனதைப் பழக்கவே,தொடர்ந்த தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள், உரைகள்,தியானம் சம்பந்தமானவைகள்அனைத்தும்.

அனைத்தையும் உருவாக்கி காத்து நிற்கும் ஆற்றலுக்கு கட்டுப்பட்டு நம் கடமைகளை நாம் முழுமையாக ஆற்றி வாழ்வதே முழுமனிதவாழ்க்கை. இதுவே எல்லாம் அவன் செயல்.என உணர்ந்தாலும், நம் கடைமையான ஒட்டகத்தை கட்டி வைப்போம்.கட்டி வைக்காவிட்டால் காணாமல் போகலாம், வேறு ஏதெனும் நடக்கலாம். விளைவு சிக்கல், துன்பம் தான்.

கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் உள்ள மனநிலையும் இதுதான்

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்
வாழ்த்துக்கள்

Sunday, May 17, 2009

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' தத்தாத்ரேயர்

"மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனிதன் வணங்குகிறானே... மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கியுள்ளானே... இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.

தத்தாத்ரேயர் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார்.

தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான்.

"எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...' என்றார் தத்தாத்ரேயர். மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ உணர்த்தியது;

பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மனம் ஒன்றாக இருந்தாலும் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சு களைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது. இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின், இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள். யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள். இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையை பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்...' என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், தன் பதவியையே உதறித் தள்ளி விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபட்டான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே!

நன்றி: தினமலர் - வாரமலர்

Thursday, May 14, 2009

‘டத்து வசவரு டா !’

கோவில்பட்டி நகரின் நூலக வாரவிழா நிகழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருக்குறள் பெ.இராமையா அவர்களின் எண்கவனக சிறப்பு நிகழ்ச்சி. அதில் கொடுக்கப்பட்ட ஈற்றடி என்ன தெரியுமா?

‘டத்து வசவரு டா !’

ஈற்றடியின் பொருள் புரியாமல் அரங்கம் முழுவதும் குழப்பத்தில் அமைதியாய் இருந்தது. ஆனால் திருக்குறள்.இராமையா அவர்கள் தெளிவான புன்னகையுடன். ”ஈற்றடி கொடுத்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?” என்று வினவினார்.

”பெரும்புலவர் அங்கப்ப பிள்ளை !” என கூட்டத்திலிருந்து பதில் வந்தது.

”அதானே பார்த்தேன். ஈற்றடியைப் பார்த்தால் சாதரணமாகத் தெரியவில்லையே.. இந்தக் கோவில்பட்டி மண்ணில் இப்படி ஈற்றடி கொடுப்பதற்கும் ஆள் இருக்கிறதா என்று சி்ந்தித்தேன்..! என்றார்.

உடனே அங்கப்பபிள்ளை, “பாடுவதற்குச் சிரமமாய் இருந்தால் வேறு ஈற்றடி தருகிறேன்” என்கிறார்.

திருக்குறளார் சிரித்துக்கொண்டே”ஈற்றடிக்கு மாற்றடி தேவையில்லை. பாடல் சைவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா அல்லது வைணவக் கடவுளுக்குப் பொருத்தமாய் வேண்டுமா? என்பதை மட்டும் தெரிவித்தால் போதும் !” என்றார்

இப்போது அங்கப்பபிள்ளை ஆடிப்போய்விட்டார். ஏனெனில் அவர்,”சைவக் கடவுளுக்கு மட்டுமே இந்த ஈற்றடியை வைத்துப் பாடமுடியும்’என்ற முடிவில் இருந்தார். தன் சந்தேகத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,”வைணவக் கடவுளுக்கு எப்படி...இந்த ஈற்றடியை”....என்று இழுத்தார்.

உடனே ”நான் இரண்டு கடவுளுக்கும் பொதுவாகப் பாடிவிடுகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம் போல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு

”ஆக்கம் அறிவுடைமை

ஆன்ற பொருளுடைமை

ஊக்கம் பெருமை

ஒழுக்கமொடு வீக்குபுகழ்

இத்தரையில் என்றும்

இனிதடைய வேகுக்கு/கரு

டத்து வசவரு டா !”

இந்த வெண்பாவைப் பாடினார்.

”ஆக்கம்,அறிவு,செல்வம்,ஊக்கம்,பெருமை,ஒழுக்கம்,புகழ் என்னும் இத்தனை நன்மைகளையும் எனக்கு அருள வேண்டும் !” என்று கடவுளிடம் வேண்டும் விதத்தில் இந்த வெண்பா அமைந்துள்ளது.

சரி, எந்தக் கடவுளிடம் வேண்டுவது?

சைவ நெறியைப் பின்பற்றுவோர் முருகனிடம் வேண்டுவதாக இந்தப் பாடலை எடுத்துக்கொள்ளலாம் . எப்படி?

“குக்குடத் துவச அருள் தா !”

’குக்குடம்’ என்றால் சேவல், ‘துவசம்’ என்றால் கொடி. சேவற்கொடியோனாகிய முருகனே அருள் தா !’ என்பதாக பொருள் வரும்.


அதே சமயம் ’குக்கு’ வை எடுத்துவிட்டு அந்த இடத்தில் ‘கரு’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டால் வைணவக் கடவுளான திருமாலுக்கு உரிய பாடலாக மாறிவிடும். ’கருடன்’ என்றால் பருந்து. துவசம் என்றால் வாகனம் ‘கருடனை வாகனமாய் உடைய திருமாலே அருள் தா ! ’ என்பதாகவும் பொருள்தரும் என விளக்கினார்.

இந்த விளக்கத்தைக் கேட்டு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

நன்றி 2002 ஏப்ரல் கவனகர் முழக்கம்

Monday, May 11, 2009

தமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை

இன உணர்வு என்பது ஒருவகைத் தாய்மை உணர்வு. தான் பெற்ற பிள்ளை குடிகாரனாய், திருடனாய்,தறுதலையாய் எப்படி இருந்தாலும் எப்படி ஒரு தாய் தன் பிள்ளை மீது மாறாத பாசம் வைத்திருக்கிறாளோ அதைப் போன்ற உணர்வே ஓர் இனத்திற்குள் ஒருவருக்கொருவர் கொள்ளவேண்டியதே இன உணர்வு.

தன் இனத்தான் முட்டாளாய் இருந்தாலும், துரோகியாய் மாறினாலும், ஏழையாய் இருந்தாலும், எதிரியுடன் சேர்ந்து கொண்டாலும் அவன் மீது வெறுப்புக் கொள்ளாமல் அவன் உயர்வுக்காக எண்ணுவதும், எழுதுவதும், அதற்கேற்றபடி செயல்படுவதும் இன உணர்வு உள்ளவர்களுடைய கடமை. அப்படித்தான் நம் முன்னோர்கள் உழைத்திருக்கிறார்கள்.

தமிழர்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடப்பது உண்மைதான். அதை ஒரு பலவீனமாய்க் கருதவேண்டிய தேவை இல்லை.
ஏனெனில் ஆடு, மாடுகள்தான் மந்தை மந்தையாய்ச் சேர்ந்திருக்கும். சிங்கங்கள் தனித்தனியாய்ப் பிரிந்துதான் இருக்கும். அதில் தவறேதுமில்லை. ஆனால் தேவை ஏற்படும்போது எல்லா வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேரும் ‘துப்பு’ வேண்டும். அதை மட்டும் பராமரித்தாலே போதும். நம்மை யாரும் வீழ்த்த முடியாது.

நன்றி: விநோதமான வினாக்கள்,கவனகரின் விடிவுதரும் விடைகள்

*************************************************************************************

இனி எமது பார்வையில் ...

மனிதனை மனிதன் துன்புறுத்தாமல், வாழும் உரிமையில் குறுக்கிடாமல் இருப்பது உண்மையான மனிதத்தன்மை. தெய்வத்தன்மை என்றே சொல்லலாம்.

அதிலிருந்து ஒருபடி ஆராய்ச்சிக்காக (வேறு வழி இல்லாமல்) கீழ்இறங்கி பார்த்தால் இராஜபட்சே சிங்கள இனம் அதனால் அவர் தன் இனத்தை காக்க தமிழனின் மீது தாக்குதல் நடத்துவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அன்னை சோனியா வேறு இனம், வேறு நாடு அதனால் அவரையும் கூட தமிழனுக்கு பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்த உதவியையும் செய்யாததையும் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் தமிழினத்தலைவர் என அழைக்கப்படும் கலைஞரோ தனது பதவியை வைத்து ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்யவில்லை. இலங்கைஅரசுக்கு உதவியாக செயல்படும் இந்திய அரசுக்கு துணை நிற்பதைத்தவிர.

குறைந்தபட்சம் எதுவுமே செய்யமுடியவில்லை என்றால் காங்கிரசுக்கு மத்தியில் அளித்துவந்த ஆதரவை விலக்கி இருக்கலாம்.

இங்கே ஆட்சி கவிழ்ந்தாலும், அதையே முதலீடாக வைத்து பின் அனுதாப அலையிலாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து கம்பெனியை உலகத்தின் முதல் பணக்கார (குடும்ப) கம்பெனியாக கொண்டுவந்திருக்கலாம்.

எப்படியும் 2011 ஆட்சி இல்லை. தெரிந்தும் கம்பெனியை படுபாதளத்தில் வீழ்த்துகிறார்.சரி, பதவி விலகினால் இலங்கைதமிழர் பிரச்சினை தீருமா?

தீராது. குறைந்தபட்சம் நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம். (நல்ல மதிப்பும் புகழும் கிடைத்திருக்கும்.) எதிர்கால கம்பெனியின் நலனுக்கும் உதவும்.

போட்டிக் கம்பெனியினரைப் பற்றி இவருக்கு ஏன் அக்கறை?

அவர்கள் வந்து பிரச்சினையை தீர்த்தால் என்ன? தீர்க்காவிட்டால் என்ன? அவர்களாலும் முடியாது, என்னாலும் முடியாது அதனால் நானே நாற்காலியில் கடைசிவரை இருந்துவிடுகிறேன் என குழந்தைத்தனமாக பிடிவாதம் பிடிப்பது எதற்கு? இதுவரை சம்பாதித்த பணம் போதவில்லையா?

போட்டிக்கம்பெனியினர்க்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால் என்ன? ஒன்று பிரச்சினையை தீர்க்கட்டும். அல்லது அவர்கள் கம்பெனியும் வளரட்டும்.

அதில் என்ன தவறு? ஓ. சம்பாதித்ததை காப்பற்றவேண்டிய கடமையை மறந்துவிட்டேன்.

குடும்பத்தலைவரின் சொத்து பணமானலும் சரி, வினையானலும் சரி
பிள்ளைகளுக்கு சேரும். பாவம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

Saturday, May 9, 2009

ஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி

பசிப் பிணியற்ற தமிழ்நாடு, நோயற்ற தமிழ்நாடு,

வளம் நிறைந்த தமிழ்நாடு, ஞானம் செறிந்த தமிழ்நாடு.

என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.

ஞானப்பாதையை நம்க்கு அடையாளம் காட்டும் திருவிழா. கணத்துக்கு கணம் மாறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் விழா. வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.


கலந்து கொண்டு பயன் பெறுங்கள். நிச்சயம் வாழ்க்கை குறித்து ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.

Tuesday, May 5, 2009

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்

இறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கம் என்னவென்றால்,’சுத்தவெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வமாகும்’ என்பதாகும்.

சுத்தவெளியானது (1) வற்றாயிருப்பு, (2)பேராற்றல், (3)பேரறிவு, (4)காலம் என்கின்ற நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது.

வற்றாயிருப்பு

சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, அதனுடைய ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்குகின்ற வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்

பேராற்றல்

பலகோடி சூரியக் குடும்பங்களை உடைய இந்த பேரியக்க மண்டலத்தில் உலவுகின்ற அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் சுத்தவெளியை பேராற்றல் என்று கூறுகிறோம்.

பேரறிவு

எந்தப் பொருளிலும், எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல் புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல்தான் அறிவு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோற்றத்திலும்,உருவ அமைப்பு,குணங்கள் மற்றும் காலத்தால் காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளியானது பேரறிவு என்று விளக்கப்படுகிறது.

காலம்

சுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்தும்போது, அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகானது கண்சிமிட்டும் நேரம்போல மிகக் குறைவானதாகும். இந்த
அதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருள்களுக்கும் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலை காலம் என்று சொல்கிறோம்.

ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. அதுவே காலமாகவும் இருக்கிறது.


இறைநிலை


வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்
வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்
வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்
வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்
வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை

ஞானக்களஞ்சியம் பாடல் 1666

நன்றி ஆன்மீக விளக்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி