"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, October 26, 2016

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 
ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


 நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது. 
பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

 அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.


Sunday, October 23, 2016

எளிய சமையல் நுணுக்கங்கள்


தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கு தேவையான டிப்ஸ்களை வழங்கும், சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி:

பூந்திக்கு மாவு பிசையும் போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் கலந்து பிசைந்தால், பூந்தி உப்பி வரும்.

சிறுதானியங்களில் பலகாரம் செய்யும் போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், மிருதுவாக இருக்கும்.

சர்க்கரைப் பாகு செய்யும் போது, பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால், எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.

குலாப் ஜாமூன் பார்க்கும் போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து, லேசாக சூடு செய்து, அதில் ஜாமூனை ஊற வைத்தால் மிருதுவாகி விடும்.

ரசகுல்லா செய்யும் போது, முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரசகுல்லாவின் சுவை, ஒரே நாளில் மாறிவிடும்.

அல்வா செய்யும் போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பது போல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால், அல்வா கெட்டிப்படும்.

பயத்தம் லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன், பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.

சீடை உருட்டிய பிறகு, அதன் மேற்புறத்தில், ஊசியால் ஆங்காங்கே சிறிய துளையிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.

முறுக்கு செய்யும் போது, நீங்கள் எடுக்கும் அளவில், கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை, மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு, மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால், மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.எண்ணெய் பலகாரங்கள் செய்யும் போது,

எண்ணெயில் கோலிக்குண்டு அளவு புளியைச் சேர்க்க வேண்டும். பிறகு, பலகாரங்கள் பொரித்தெடுத்தால், அதிக எண்ணெய் குடிக்காது; எண்ணெயும் பொங்கி வழியாது.

நன்றி தினமலர்  23.10.2016