"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Thursday, December 5, 2019

சமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது!

வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி சித்த மருத்துவர் க.மதுகார்த்திஷ்: சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகளை அனைவரும் கண்ணை மூடியபடி பின்பற்ற முயற்சிக்கின்றனர்; அதனால் ஆரோக்கியம் கிடைக்காது; ஆபத்து தான் கிடைக்கும்.

உடல் பருமன் பிரச்னைக்கு, எலுமிச்சை சாறு, வெந்நீர், தேன் கலந்து குடிக்க வேண்டும் என, 'வீடியோ' படத்துடன் செய்தி வருகிறது. எலுமிச்சை சாறுடன் வெந்நீர் சேரும் போது, அமிலமாக மாறி, தொடர்ச்சியாக அருந்தும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தேனை எதனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. கையில் ஊற்றி, நக்கி தான் சாப்பிட வேண்டும். 

சிறு தானியங்களை தினமும் சாப்பிட்டால், உடல் வலு பெறும் என்கின்றனர். உண்மை தான் என்றாலும், அதை சரியாக, பக்குவமாக தயாரித்து சாப்பிடாவிட்டால், ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். சிறு தானியங்களை, எட்டு - பத்து மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். அவை எல்லாவற்றையும், ஒன்றாக கலந்தும் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு சிறு தானியத்திற்கும், வெவ்வேறு குணங்கள் உள்ளன; ஒவ்வொன்றையும், தனித்தனியாகத் தான் சாப்பிட வேண்டும். 

செக்கு எண்ணெய் தான் நல்லது என்கின்றனர். நல்லது தான். ஆனால், அதிக உடல் உழைப்பாளர்களுக்குத் தான், அது நல்லது. அதில் அடர்த்தி அதிகம் என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. ஒவ்வொரு பருவ நிலைக்கும், வெவ்வேறு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் கடலை எண்ணெய்; கோடை காலத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். 

ஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தை வறுத்து, பொடித்து சாப்பிட்டு வந்தால், எந்த வயிற்றுப் பிரச்னையும் வராது என்கின்றனர்; அதுவும் தவறு. கருஞ்சீரகம், அதிக உஷ்ணமானது. தினமும் பயன்படுத்தினால், எதிர் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். 

ஆப்பிள் சிடார் வினிகர், இஞ்சிச் சாறு, பூண்டுச்சாறு சேர்த்து குடித்தால், மாரடைப்பு அபாயம் நீங்கி விடும் என, சமூக வலைதளங்களில், இஷ்டத்திற்கு பலர் தகவல் பரப்புகின்றனர். அது தவறு. வினிகர், நம் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதல்ல. 

இது போன்ற இயற்கை மருத்துவத்தை நாடி, ஆங்கில மருத்துவம் அல்லது பிற மருத்துவத்தை கைவிட்டவர்கள், மரணம் அடைந்து உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. எந்த உணவாக இருந்தாலும், எளிதில் ஜீரணம் ஆக வேண்டும்; மலச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவ வேண்டும். தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனைபடியே, இயற்கை பொருட்களை மருந்தாக பயன்படுத்த வேண்டும்!

Thursday, October 17, 2019

பழங்களை எப்படிச் சாப்பிடணும்?

பழங்களை அப்படியே சாப்பிடணும்!

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்; வெட்டி வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து, இயற்கை மருத்துவர் ஒய்.தீபா:

பழங்களை நன்றாக கழுவிய பின், அப்படியே கடித்து சாப்பிடுவது தான் நல்லது. அலுவலகத்தில் அல்லது பிற இடங்களில் அவ்வாறு சாப்பிட முடியாது என நினைப்பவர்கள், சிறிய பேனா கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது, துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.

பழங்களை வெட்டி, நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிடும் போது, அந்த பழங்களில் உள்ள, 'விட்டமின் ஏ, சி, இ' போன்ற சத்துகளில் இழப்பு ஏற்படும். வெட்டப்பட்ட பழத்துண்டுகள், ஒளி மற்றும் ஆக்சிஜனுடன் வினை புரிந்து, பழத்தில் உள்ள, 'ஆன்டி ஆக்சிடன்ட்' அளவை குறைக்கிறது.

பழங்களை வெட்டி சாப்பிட வழியில்லை என நினைப்பவர்கள், அவற்றை துண்டுகளாக்கி, காற்று புகாத டப்பாவில் அடைத்து, 'ஏசி' அறை அல்லது பிரிஜ்ஜில் வைக்கலாம். இதனால், துண்டான பழங்களின் சுவாசம் குறைவாக இருக்கும்; எளிதில் கெட்டுப் போகாது.

அது போல, பழச்சாறுகளை, தயாரித்த சில நிமிடங்களில் அருந்த வேண்டும்; நீண்ட நேரம் வைத்திருந்தால், கெட்டு விடும். பழச்சாறுகளை உடனடியாக குடிக்க முடியவில்லை; கொஞ்ச நேரம் கழித்து தான் அருந்த முடியும் என்றால், ஐஸ் கட்டிகளை அதில் சேர்க்கக் கூடாது. இனிப்பு சேர்க்காமல், சிறிதளவு இந்துப்பு சேர்த்து வைத்தால், சீக்கிரம் கெட்டுப் போகாது.

எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி போன்ற, 'விட்டமின் சி' சத்து அதிகம் உள்ள பழங்களை, நேரம் கழித்து பருகக் கூடாது. தயாரித்த உடனேயே அதில் உள்ள, விட்டமின் சி சத்து, காற்றில் கரைந்து விடும்; எனவே, உடனே பருக வேண்டும்.

'இதுவும் பழச்சாறு தான்' என, 'டின்' பழச்சாறுகள் விற்பனைக்கு வருகின்றன. கொஞ்ச நேரம் வைத்திருந்ததும் கெட்டுப் போகும் பழச்சாறுகள், டின்னில் வைத்திருந்தால் மட்டும் கெட்டுப் போகாமல் இருக்குமா... கெட விடாமல் தடுக்கும் ரசாயனமான, 'பிரசர்வேடிவ்' அதில் உள்ளது.பழச்சாறு, தரமாக இருக்கிறதா என்பதை கண்டறிவது எளிது. பழச்சாறு தயாரிக்கப்பட்ட போது, எந்த நிறத்தில் இருந்ததோ, அதே நிறத்தில் இருந்தால், தைரியமாக அருந்தலாம். நிறம் மாறி இருந்தால், கெட்டு விட்டது என, அர்த்தம்!பழக் கடைகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ரசாயனம், நிறமூட்டிகள் கலந்தே விற்கப்படுகின்றன.

பல விதமான பழங்களை ஒன்றாக கலந்து, கூழாக அரைத்து, பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை சேர்க்கின்றனர். அத்தகைய பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது!

நன்றி தினமலர்

Tuesday, December 31, 2013

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !


கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி, தனி குடித்தனமாக குறுகிவிட்ட சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள, பெற்றோர் மிக சிரமப்படுகின்றனர். 

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை, தாய்ப்பாலே போதும். அதன் பின், உடல் வளர்ச்சிக்கு தேவையான கலோரிகள், தாய்ப்பாலில் அதிகம் இல்லாததால், அதற்கு இணையான உணவுகளை, கஞ்சி வடிவில் நன்கு குழைத்து தருவது அவசியம்.

பச்சரிசியை, "மிக்சி'யில் குருணை போல உடைத்து, வெயிலில் காய வைத்து, வறுத்து, பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமியுங்கள். ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, மூன்று ஸ்பூன் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்த பின், தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு சேர்த்து, நன்கு பிசைந்து, நம் கையாலேயே ஊட்டலாம்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சொட்டு மருந்துகள், தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் தான், உடலுக்கு வளம் சேர்க்கும். தேன்வாழை, ரஸ்தாளி, மலை வாழை போன்றவற்றின் விதைகளை நீக்கி, கைகளால் நன்கு மசித்து கொடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.

ஏழாம் மாதத்தில் இருந்து கேரட், உருளைகிழங்குகளை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு மசித்து தர வேண்டும். 

ஒன்பதாம் மாதத்திலிருந்து, அதிக நார்சத்துள்ள கீரை உணவுகளை, நன்கு வேகவைத்து, அதை கடைந்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

பெற்றோர், தன் குழந்தைக்கு ஈறு வளர்ந்திருக்கிறதா என, கண்காணிக்க வேண்டும். ஈறு வளர்ந்து விட்டால், அதன் பின், நாம் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும், கொடுக்க ஆரம்பிக்கலாம்.

எட்டு மாதங்கள் வரை அதிக காரம், இனிப்பு, புளிப்பு உள்ள எந்த பதார்த்தத்தையும் தரக்கூடாது. ஏனெனில், தரப்படும் சுவைக்கு ஏற்ப, அச்சுவைக்கு அடிமையாகி, வேறு எந்த உணவையும், உண்ண விரும்ப மாட்டார்கள். 

இதை பின்பற்றினாலே, குழந்தைகள் போதுமான உடல் எடையுடன், ஆரோக்கியமாக இருப்பர்.

ஆறு மாத குழந்தைகளுக்கு, உணவளிக்கும் முறைகளை சொன்னவர் சித்த மருத்துவர், கு.சிவராமன்: தினமலர்

Wednesday, March 28, 2012

சமையலறை பொருட்களை பாதுகாக்க டிப்ஸ்!


இயற்கை விளைபொருள் அங்காடியை நடத்தும் சாகுல் ஹமீது:
அரிசியை மொத்தமாக சாக்குகளாகத் தூக்குவது தான் பெரும்பாலான வீடுகளில் வழக்கம். பத்து நாள் வெளியூர் சென்று வந்து பார்த்தால், சின்ன பூச்சிகள் வந்திருக்கும். இதைத் தடுக்க, கடையில் இருந்து சாக்கு அல்லது பையில் வாங்கி வரும் அரிசியை, அண்டா, தூக்குவாளி என்று பெரிய எவர்சில்வர் பாத்திரத்திலோ, பிளாஸ்டிக் டப்பாவிலோ மாற்றி, மூடிவைத்து விடவேண்டும். அரிசியின் மேற்புறம் கொஞ்சம் வேப்பம் தளிர் அல்லது காய்ந்த மிளகாய் வற்றலைப் போட்டு வைத்தால், பூச்சி, வண்டு எதுவும் அண்டாது.

Thursday, February 16, 2012

காதலுடல் -- பண்புடன் இணைய இதழுக்காக

பசித்துப் புசி என்பது நமக்குத் தெரிந்த விசயம்தான்., நடைமுறையில் பசித்துப்புசிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான் :) பசி என்பது பல நேரங்களிலும் நமக்கு போதுமான அளவு ஏற்படுகின்றதா என்றால் இல்லை என்பதே உண்மை.

பசி என்கிற உணர்வு ஒரு தூண்டுதலாக ஆரம்பமாக சிக்னல் என்ற அளவில்தான் நமக்கு நம் உடலால் உணர்த்தப்படுகிறது.இதையே நாம் பசி என்பதாக எடுத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். உடலுக்குக்கூட இரவு 6 மணி நேரமோ 8 மணிநேரமோ ஓய்வு கொடுத்து விடுகிறோம். நம் வயிற்றுக்கு ஓய்வு என்பதே இல்லை. ஏறத்தாழ 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து உடலைப்பற்றி சில சிந்தனைகள் பண்புடன் இணைய இதழுக்காக..... பிப்ரவரி 15க்கான ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கும் சேர்தளம் வெயிலான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பகிர்ந்து கொண்டது உங்களின் பார்வைக்கு...... படித்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..

Monday, October 12, 2009

ருசியான சிக்கன் வேண்டுமா ?

நோயால் செத்த கோழிகளை விற்கும் கும்பல் : உடுமலை அருகே சிக்கியது

உடுமலை: பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் இறந்த கோழிகளை சேகரித்து அவற்றை ஓட்டல்களுக்கு விற்கும் கும்பலைச் சேர்ந்தவரை உடுமலை பகுதியில் விவசாயிகள் வளைத்து பிடித்தனர்

.பண்ணைகளில் நோய்த் தாக்குதல் மற்றும் இதர காரணங்களால் இறக்கும் கோழிகளை ஆள் நடமாட் டம் இல்லாத பகுதிகளில் வீசுகின்றனர். அவற்றை சேகரித்து, ஓட் டல்களில் குறைந்த விலைக்கு விற்பதை ஒரு கும்பல் தொழிலாக செய்கிறது.

பெதப்பம்பட்டி அருகிலுள்ள மாலக்கோவில் பிரிவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நேற்று அதிகாலை மர்மநபர், இறந்த கோழிகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விவசாயிகள் சென்று விசாரித்துள்ளனர். இறந்து பல நாட்களான 200க்கு மேற்பட்ட கோழிகள் சேகரித்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபரை விவசாயிகள் நன்கு "கவனித்தனர்'. இதில், காயமடைந்த நபர், தனது ஊர் பல்லடம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் என்றும், பெயர் பாண்டியன் என்றும் தெரிவித்துள்ளார்.



அவர் விவசாயிகளிடம் கூறியதாவது: உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு இறந்த கோழிகளை சேகரித்து குறைந்த விலைக்கு விற்கிறோம். சேகரிக்கும் இறந்த கோழிகளை தூய்மைப்படுத்தி "பேக்' செய்து ஓட்டல்களுக்கு விற்பனை செய்வோம்.வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறந்த கோழி இறைச்சி கிலோ 20 ரூபாய்க்கு ஓட்டல்களுக்கு "டோர் டெலிவரி' செய்ததால் எங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்.இவ்வாறு, பாண்டியன் தெரிவித்துள்ளார். பாண்டியன் தெரிவித்த தகவலால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், குடிமங்கலம் போலீசுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


பலத்த டிமாண்ட்: பாண்டியன் சிக்கியவுடன் விவசாயிகள் அவரிடமிருந்த மொபைல்போனை கைப்பற்றினர். அரை மணி நேரத்திற்குள் திருப்பூர், பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளை சேர்ந்த ஓட்டல்களிலிருந்து, "சிக்கன் என்ன ஆயிற்று?' என தொடர்ச்சியாக போன் அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளையும், இறந்த கோழி இறைச்சிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட ஓட்டல் பெயர்களையும் விவசாயிகள் குறித்துக் கொண்டனர்.

நன்றி; தினமலர் 12.10.2009

Monday, March 30, 2009

வந்துட்டீங்க…. சாப்பிட்டுவிட்டுதான் போகனும்

ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு தூரத்து உறவினரின் பெண் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து அழைக்க உதவியாக, உடன் சென்றோம். ஒவ்வொரு வீடாக அழைப்பு, பத்திரிக்கை கொடுத்துக்கொண்டே வந்தோம்

ஒருவீட்டில் காபி,
அடுத்தவீட்டில் டீ,
அடுத்தவீட்டில் சுவீட்,காரம், காபி,
அதற்கடுத்த வீட்டில் பிஸ்கட்,காபி,
அதற்கடுத்த வீட்டில் தண்ணீர் மட்டும்
என வரிசையாக சாப்பிட வேண்டியதாகிவிட்டது.

இது போன்ற நிகழ்வுகளில் அன்றைய அடுத்தவேளை உணவை தியாகம் செய்து வயிற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என் வழக்கம்.

கடைசியாக சென்ற வீட்டில் எங்களுக்கு உணவு செய்ய சொல்லி சிக்னல் கொடுத்து விட்டார் எங்களுடன் வந்த உறவினர். எங்களை உபசரிப்பதாக நினைத்துக்கொண்டு. மணியோ ஏழுதான் ஆகிறது.

அந்த வீட்டுக்காரர் கோதுமை ரவை உப்புமா செய்யத் தொடங்கிவிட்டார். அன்போடு வேண்டாம் என்று மறுத்தும் கேட்கவில்லை. கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர். அவர்களின் மனநிலையைப் பற்றி சிறிது கூட சிந்திக்கவில்லை.

உப்புமாவிற்கு தயிர் பற்றாக்குறை, நன்கு புளித்த தயிரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு ஒரு வழியாக சமாளித்துவிட்டார்

சூழ்நிலைகள் தர்ம சங்கடமாக இருந்தபோதும் நாம்தான் ஜீரோ ஆயிற்றே. அமைதியாக ஏற்றுக்கொண்டு சாப்பிட்டு விட்டேன்.

சிந்தனை விரிந்தது.

என் வீட்டில் யார் பத்திரிக்கை கொண்டு, அழைப்பு சொல்ல வந்தாலும், தண்ணீர் மட்டுமே முதலில் தரவேண்டும் என்பது என் இல்லத்து அரசிக்கு நான் இட்டுள்ள அன்புக்கட்டளை. இதில் ’அவன் வீட்டுக்கு போய் பச்சத் தண்ணி கூட தரவில்லை’ என வருபவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதும் அடக்கம்.

அதன் பின்னர் அவர்களிடம் என்ன வேண்டும், எனக் கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உணவோ, டீயோ தரவேண்டும். அதுவும் ஒருமுறைக்கு மேல் கேட்கக்கூடாது.

உறவினர்கள் தன் அன்பை காட்டுவதாக எண்ணிக்கொண்டு, அவர்களும் திடீர் விருந்தாளிகளை சமாளிக்க சிரமப்பட்டுக் கொண்டு, வருபவர்களின் சூழ்நிலை அறியாமல், உபசரிப்பதை விடுத்து, சிரமப்படுத்தாமல் ”அவர்கள் இன்னும் பல இடங்களுக்கு போகவேண்டியது இருக்கும்.” என்பதை கருத்திற்கொண்டு அன்பாக நாலுவார்த்தை விசாரித்து அனுப்புலாம் அல்லவா?

இதிலும் சில வீடுகளில் சாப்பிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏற்கனவே சிறு பிணக்கு ஏதேனும் இருக்கலாம். நாம் பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது சாப்பிட்டால் சமாதானமும், சாப்பிடாவிட்டால் பெரும் பிணக்காக மாறும் நிலை இருக்கலாம். இதனால் பெரும்பான்மையாக மற்ற இடங்களில் தண்ணீரே சாப்பிட்டால்தான் சவுகரியமாக இருக்கும். வயதானவர்கள் உடல்நிலையும் இதில் முக்கியம். விசேசத்தின் போது மருத்துவமனைக்கு செல்லும் நிலை தவிர்க்கலாம்.

இப்ப சொல்லுங்க , நீங்க யார்? கேட்காமலே தண்ணீர் மட்டும் தருபவரா?
வருபவரை காபி,டீ,டிபன்,சாப்பாடு சாப்பிட வற்புறுத்துபவரா?