"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label எண்ணெய் கொப்பளித்தல். Show all posts
Showing posts with label எண்ணெய் கொப்பளித்தல். Show all posts

Thursday, July 2, 2009

முடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்

சென்ற வாரத்தில் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடன் முடிதிருத்தி்க் கொள்ளும் பொருட்டு சலூனுக்கு சென்றேன்.

பல வருடங்களாக வழக்கமாக முடி திருத்தும் நண்பர் அவர்., காலை 7.00 மணி ஆதலால் கூட்டம் ஏதும் இல்லை.

முடிதிருத்தும் பணி தொடங்கியது. சுமார் இருபது நிமிடத்தில் பணி முடியும் பொழுது, வழக்கமான செயலாக, கையை உயர்த்தச் சொல்லி அக்குள் பகுதியை சுத்தப்படுத்த தொடங்கினார்.

அப்போது அவர் கேட்ட கேள்வி. ”உங்ககிட்ட கேட்கவேண்டும் என நினைத்தேன், குளித்து விட்டு வந்தீர்களா?” என்றார்.

”இல்லை, எழுந்தவுடன் வந்துவிட்டேன்., ஏன்?” என்றேன்

”பலபேருக்கு கையை உயர்த்தினாலே துர்நாற்றம் வீசும், ’கப்’அடிக்கும், வீச்சத்துடன், முடியில் முடிச்சு,முடிச்சாக அழுக்கு பிரிக்க முடியாதபடி ஒட்டி கிடக்கும், உங்களிடத்தில் அப்படி எதுவுமே அடிக்கவில்லை, குளிக்கவுமில்லை, என்கிறீர்களே? எப்படி?“ என்றார் ஆச்சரியத்துடன் அவர்.

சரி,அவருக்கு புரிகிற மாதிரி, எனக்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லவேண்டும்.

மெள்ள ஆரம்பித்தேன்.,

“அது வேறொன்றுமில்லை. அக்குள் பகுதியில் அழுக்கு சேர வியர்வைதான் காரணம், வாசம் அடிக்க காரணமும் வியர்வையே.

வியர்வை என்பது உடலில் உள்ள கழிவுப்பொருளை வெளியேற்ற உதவுவது. வியர்வை சுத்தமாக இருந்தால் இது போன்று உடலும் சுத்தமாக இருக்கும்“ என்றேன்

அவர் உற்சாகமானார், அதோடு என்னை விடுவதாக இல்லை.

”வியர்வைன்னாலே அழுக்கை வெளிக் கொண்டு வருவதுதானே, அதுல அழுக்கு இல்லாம எப்படி?” என்றார்.

வியர்வை சுத்தமாக இருக்க வேண்டுமானால் நம்ம உடலில் கழிவுகள் எந்த ரூபத்திலும் தேங்கக்கூடாது., முக்கியமாக சளி, துளி கூட இருக்கக்கூடாது சளிதான் அனைத்து கிருமிகளுக்கும் வைட்டமின் மாத்திரை மாதிரி. கிருமிகள் உடலில் வளர ஆதாரமாக இருக்கும். உடல் இயங்குவதில் ஏற்படும் சாதரண கழிவுகளைக் கூட முழுமையாக வெளியேற்ற சளி இடைஞ்சலாகவே இருக்கும்”. என்றேன்.

அது மட்டுமல்ல, மது,புகைப் பழக்கங்களும், முறையற்ற உணவுப் பழக்கங்களும் உடலில் கழிவுகளைச் சேர்த்துக் கொண்டேதான் இருக்கும். இதனால் உடல் உள்உறுப்புகள் வெளியே தெரியாமல் உள்ளே இயக்கக் குறைபாடு அடையும். அது நமக்கு தெரியவரும்போது திரும்ப சரிசெய்ய இயலாத அல்லது சரி செய்யெ கடுமையாக வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருப்போம்.

சளியினால் ஏற்படும் இது நமக்கு தேவைதானா?“ என்றேன்.

”சரிங்க அப்படி நாம் உள்ளே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்றார் அவர்.

”எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்பொழுது மலம் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்போழுது சளி பிடித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

அவ்வளவுதான்”
என்றேன்

”வாசமடிக்கிற பாத்ரூமை சுத்தம் செய்யாமல் இருப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் பாத்ரூமைப் பார்க்காதே, நம்மைப் பார் என்று சொல்கிறீர்களே!” என்றார்.

”ஆமாம். நம் உடல் உள்ளே சுத்தமாக இருந்தால் அதிலிருந்து வெளியாகும் எந்த கழிவுமே துர்நாற்றம் அடிக்காது. அதற்குண்டான இயல்பான வாசமே இருக்கும். இதை உணர்ந்து, தொடர்ந்து கழிவுகளின் வாசனையை கவனித்து வர வேண்டும், இதுகுறித்து குடும்ப உறவுகளோ, நண்பர்களோ சுட்டிக்காட்டினால் கூட அக்கறையோடு கேட்டு செயல்படவேண்டும்”. என்றேன்.

”உடல் நாற்றம் அடிக்காமல் இருக்க உணவுப்பாதையான வாய் முதல் மலம் வெளியேறும் பகுதி வரை சுத்தமாக இருக்கவேண்டும். இதுவே சுத்தமான உடல் அமைய அடிப்படை“ என்றேன்.

”சரி இதற்கு என்ன செய்ய வேண்டும்,, நீங்க என்ன செய்றீங்க?” என்றார்.,

மிக எளிமையான சில விசயங்கள்தாம் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு சிறிது எண்ணெய் கொப்பளித்தல், இது தொண்டையில் தேங்கியுள்ள உள்ள சளிக் கிருமிகள் அனைத்தையும் நீக்க...

பல்பொடி கொண்டு விரலால் பல்துலக்குதல், பின்னர் பிரஸ் கொண்டும் தேவையானால் பல் துலக்குதல்.

முடித்தபின் தண்ணீர் ஐந்து அல்லது ஆறு மிளகை கடிக்காமல் தண்ணீருடன் சேர்த்து விழுங்குதல், கூடவே போதுமான வரை தண்ணீர் அருந்துதல் இது குடலில் உள்ள சளிப்படலத்தை வெளியேற்ற உதவும்..

பின்னர் மலம் கழித்தபின்பு, குடல் தூய்மை”
என்றேன்.

“அப்படின்னா?” என்றார்.

பல்விளக்கியபின் வாய்கொப்பளிக்கிறோம் அல்லவா? அதுபோல் மலம் கழித்தபின் மலக்குடலை இயற்கைஎனிமா மூலம் சாதரண தண்ணீரை உள்செலுத்தி சுத்தப்படுத்துதல் அவ்வளவுதான்”


”இவற்றை தொடர்ச்சியாக நான் செய்து வருகிறேன். இவையெல்லாம் உடல் உள்ளும், புறமும் சுத்தமாக மாற சில எளிய வழிமுறைகள் ஆகும்.

இதை பின்பற்றினால் அன்றாட வாழ்க்கையில் மருத்துவரை அடிக்கடி அணுக வேண்டியதில்லை” என்றேன்

”நல்ல விசயமாக இருக்கே!” என்றார்

”நம்மால் பிறருக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது. சமுதாயத்திற்கும் நாம் பாரமாக இருக்கக் கூடாது இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். நல்ல விசயங்களில் நாட்டம் வரும்.” என்று சொல்லி விடைபெற்றேன்.,

என்ன நண்பர்களே, இனி நீங்களும் உங்கள் கழிவுகளின் வாசனையை கவனிப்பீர்கள்தானே, உங்கள் நன்மைக்காக முயற்சித்துப் பாருங்களேன்

சந்திப்போம், சிந்திப்போம்

Monday, March 9, 2009

தும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்

உடல் நலம், மனநலம் நன்றாக இருந்தால் நாம் சிறப்பாக செயல்படமுடியும். நமக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, சமுதாயத்திற்க்கு பாரம் இல்லாமல் இருக்கமுடியும். இருக்கவேண்டும். அதாங்க, மருத்துவமனைக்கு அன்றாடம் செல்வது நமக்கு தேவையா? அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்,வலியை பகிர்ந்து கொள்ளமுடியுமா?

சரி வழிதான் என்ன? எண்ணெய் கொப்பளித்தல் !!!

எப்படி செய்வது?

தரமான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் சுமார் 15 மில்லி,வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.விழுங்கி விடாமல் வாயிலியே வைத்துக் கொள்ளுங்கள். பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக, மெதுவாக, வாயில் சப்பியவாறு,,வாய் முழுவதும் கலந்து திரியும்படி, வாய் வலிக்காமல் ஒரே சீராக கொப்பளியுங்கள். தாடை சற்று உயர்ந்தே இருக்கட்டும். தொண்டைக்குள் செல்லாமல், பற்களின் இடை வெளிகளுக்கு உள்ளாக எண்ணெய் சென்று வருமாறு பத்து முதல் பதினைந்து நிமிடம் கொப்பளியுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்து, ஐந்து நிமிடத்தில் எண்ணை நீர்த்து, நுரைத்து,வெண்மையாகி, கனம் குறைந்து எளிதாக பல் இடுக்குகளில் அலைந்து திரியும். பத்து நிமிடத்திற்க்கு பின் துப்பி விடுங்கள். பிறகு வாயை நீரால் நான்கைந்து முறை கொப்பளித்து தூய்மை செய்யுங்கள்.

என்ன பலன்?

இப்படி செய்வதால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கேடு விளைவிக்கும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. விடியற்காலை,பல் தேய்த்த உடன், எண்ணெய் கொப்பளிப்பது சிறப்பு. அவசியமானால் மூன்று வேளையும் காலிவயிறாக இருக்கும்போது செய்யலாம். இதை நான் ஒரு மாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து உடல்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைத்ததால்தான் எழுதுகிறேன்.செய்து பார்த்து பலன் அடைந்தால் அதை பின்னூட்டம் இடுங்கள்.

நன்றி:வியத்தகு எண்ணெய் மருத்துவம். தமிழில்:கோ.கிருஸ்ணமூர்த்தி செல்வி பதிப்பகம்

நன்றி: எண்ணை கொப்பளித்தல், தாமோதரன். மனவளக்கலை பேராசிரியர், அன்புநெறி வெளியீடு திண்டுக்கல்

டிப்ஸ் உதவி: கவனகர் இராம.கனக சுப்புரத்தினம்

மெகா டி.வியில் காலை 7.30 முதல் 7.40 வரை பேசுவதை கண்டு பயன் பெறுங்கள்.