"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, December 31, 2013

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !


கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி, தனி குடித்தனமாக குறுகிவிட்ட சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள, பெற்றோர் மிக சிரமப்படுகின்றனர். 

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை, தாய்ப்பாலே போதும். அதன் பின், உடல் வளர்ச்சிக்கு தேவையான கலோரிகள், தாய்ப்பாலில் அதிகம் இல்லாததால், அதற்கு இணையான உணவுகளை, கஞ்சி வடிவில் நன்கு குழைத்து தருவது அவசியம்.

பச்சரிசியை, "மிக்சி'யில் குருணை போல உடைத்து, வெயிலில் காய வைத்து, வறுத்து, பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமியுங்கள். ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, மூன்று ஸ்பூன் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்த பின், தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு சேர்த்து, நன்கு பிசைந்து, நம் கையாலேயே ஊட்டலாம்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சொட்டு மருந்துகள், தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் தான், உடலுக்கு வளம் சேர்க்கும். தேன்வாழை, ரஸ்தாளி, மலை வாழை போன்றவற்றின் விதைகளை நீக்கி, கைகளால் நன்கு மசித்து கொடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.

ஏழாம் மாதத்தில் இருந்து கேரட், உருளைகிழங்குகளை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு மசித்து தர வேண்டும். 

ஒன்பதாம் மாதத்திலிருந்து, அதிக நார்சத்துள்ள கீரை உணவுகளை, நன்கு வேகவைத்து, அதை கடைந்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

பெற்றோர், தன் குழந்தைக்கு ஈறு வளர்ந்திருக்கிறதா என, கண்காணிக்க வேண்டும். ஈறு வளர்ந்து விட்டால், அதன் பின், நாம் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும், கொடுக்க ஆரம்பிக்கலாம்.

எட்டு மாதங்கள் வரை அதிக காரம், இனிப்பு, புளிப்பு உள்ள எந்த பதார்த்தத்தையும் தரக்கூடாது. ஏனெனில், தரப்படும் சுவைக்கு ஏற்ப, அச்சுவைக்கு அடிமையாகி, வேறு எந்த உணவையும், உண்ண விரும்ப மாட்டார்கள். 

இதை பின்பற்றினாலே, குழந்தைகள் போதுமான உடல் எடையுடன், ஆரோக்கியமாக இருப்பர்.

ஆறு மாத குழந்தைகளுக்கு, உணவளிக்கும் முறைகளை சொன்னவர் சித்த மருத்துவர், கு.சிவராமன்: தினமலர்

Saturday, October 12, 2013

ஆயுதபூஜை -- நன்றித் திருநாள்



                 
 உயிருள்ள, உயிரற்ற எதையும் நேசிக்க வேண்டும். அதுதான் வாழ்வின் முதல்பாடம்.

அவற்றை வாழ்த்த வேண்டும் என்பது இரண்டாவது பாடம்.

நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும். இது மூன்றாவதுபாடம்.

பயன்படுத்தும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு உதவுபவைகளுக்கும், நமக்கும் இடையே உணர்வுக் கலப்பு ஏற்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளும், இயற்கை ரகசியங்களும் அப்போது புரியும். இது நான்காவது பாடம்.

ஆயுதபூஜை நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கு நன்றி சொல்வதற்காகவே கொண்டாடுகிறோம். யார் நன்றி சொல்கிறார்களோ அவர்கள் மனது நிறைவாக இருக்கும். கருவிகளை இன்னும் பக்குவமாக பயன்படுத்துவோம். இன்னும் நல்ல முறையில் வைத்திருப்போம்

கவனித்துப்பாருங்கள். இப்படி கருவிகளோடு மனப்பூர்வமான/ஆத்மார்த்தமான/உயிர்த் தொடர்பு இருக்கையில் கருவிகள் பலநாள் நம்மிடம் தொலைந்து போகாமல் இருக்கும். அதிகநாள் உழைக்கும். இதை நினைவுகூறும் நாளாக இந்த ஆயுதபூஜை நாள் அமையட்டும். அனைத்துப் பொருள்களையும் துடைத்து சுத்தம் செய்து வணங்கி, நன்றி சொல்லி தினமும் பணியை ஆரம்பிப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். செய்வோம்.

என் உடல்நலத்திற்காக நன்றி
எனது அன்பிற்காக நன்றி
எனது மகிழ்ச்சிக்காக நன்றி
எனது செல்வத்திற்காக நன்றி
எனது வேலைக்காக நன்றி
என் இசைவான குடும்பத்திற்காக நன்றி
எனது உறவினர்களுக்காக நன்றி

ஜென் கதையும் - ஜென் தத்துவமும்



ஞானம் பெற்ற பின் என்ன செய்கிறீர்கள்? என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார்.

Thursday, September 26, 2013

மோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்?.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதில் இணையம் ரொம்பவுமே சூடாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தவரை முஸ்லீம் அன்பர்கள் அதிகம் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருந்தனர். அது அவர்கள் உரிமை. அதைத் தடை செய்ய இயலாது...ஆனால் அதில் அவர்கள் காட்டும் தீவீரம், மோடியை ஆதரிக்கும் இந்துமதம் சார்ந்த நண்பர்களின் கருத்துகளில் இருப்பதாகத் தெரிவதில்லை :)

Friday, September 13, 2013

பொதிகை மலைத் தொடர் பகுதி -நிறைவு


அதிரமலை முகாமிற்கு இறங்கிவந்து சேர்ந்தபோது நேரம் மதியம் 1.30. மலை உச்சிக்கு ஏறி இறங்க சுமார் 5 மணி நேரம் ஆகி இருந்தது.

அன்று இரவே ஊர் திரும்ப இரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்திருந்தோம். அதனால் அவசரமாக உணவருந்திவிட்டு அடிவாரம் செல்ல கிளம்பினோம்.

அங்கிருந்த வனத்துறை அதிகாரியோ ”கிளம்புறதுனா சீக்கிரம் கிளம்புங்க.. இரண்டு மணிக்கு மேல் கீழே இறங்க அனுமதிக்க மாட்டோம்..நாளைதான் கிளம்ப முடியும்”.என்றார்.. அட்டைகள் நிறைய ஊர்ந்து கொண்டிருக்க...தாண்டிக் குதித்துச் சென்றோம்...:)

Monday, September 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி - 8

மழை மீண்டும் ஆரம்பித்தது...அடுத்த வந்த அன்பர்களுக்கு வழிவிட்டு இறங்க ஆரம்பித்தோம். ஏறும்போது இருந்ததை விட பாதைகளில் நீர் வரத்து அதிகம் இருந்தது. பாறைகளில் வழுக்கும் தன்மை இல்லாததால் தைரியமாக இறங்க ஆரம்பித்தோம். படத்தில் சற்று கவனமாகப் பார்த்தால் மட்டுமே மஞ்சள் கோடு அடையாளம் தெரியும்... இப்போது தான் கேமிராவை வெளியே எடுத்து ஒருவிதமாக மழையில் நனையாமல் சமாளித்து புகைப்படம் எடுத்தேன்.

Saturday, August 31, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி - 7

மலையின் உச்சியில் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாவண்ணம் சுற்றிலும் மழைமேகம் சூழ்ந்திருக்க, அய்யன் திருமேனி அமைந்த இடத்தில் மட்டும் சற்று மழை நின்று, சாரல் மட்டும்  அடித்துக்கொண்டே இருந்தது.

எங்களுக்கு முன்னதாக வந்த கேரள அன்பர்கள், அய்யன் திருமேனியில் இருந்த முந்தய நாளைய மாலைகளை எடுத்து சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தனர். எங்கள் குழு நண்பர்கள் யாருக்குமே, இந்த விதமாக அய்யன் திருமேனியை அலங்கரிக்க வேண்டியது இருக்கும் என்பதை அறியாததால் ஊதுபத்தி, எண்ணெய் என மிகச்சில பொருள்களையே கொண்டு வந்திருந்தோம்.

Monday, July 15, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி 6


விடிந்தும், மழை பெய்கிற சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. குளிரில் எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருந்தோம்.  அருகில் பாத்ரூம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கே செல்ல அன்பர்களின் குடையைப் பயன்படுத்திக் கொண்டு, கடமைகளை முடித்துக்கொண்டு, உணவகத்திற்கு காலை 7.45 க்கு வந்து உணவருந்தினோம். தொடர்மழை  அகத்தியரைத் தரிசிக்க, மழை காரணமாக யாத்திரீகர்கள்,  மேலே செல்லத் தயக்கம் காட்டினார்கள்.

உடன் வந்த நான்கு நண்பர்களிடம் கலந்து பேசியபோது வந்தது வந்துட்டோம். ரிஸ்க் எடுப்போம். அதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி ஆச்சே....என்று உற்சாகத்தோடு அனைவரும் சொல்ல.. அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு,  கொண்டுவந்த பைகளை அங்கேயே வைத்துவிட்டு கிளம்பினோம். எங்களுக்கு முன்னதாக  ஐந்தாறு பேர் ஒருகுழுவாக மேலே கிளம்பிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்ற தகவலும் உற்சாகத்தைத் தர ஏறத் துவங்கினோம்.

கூட வந்த நண்பர்கள் இருவர்  மழைகோட் எதுவும் எடுத்துவரவே இல்லை. அவர்களும் நனைந்து கொண்டே ஏற காமிராவை நனையாமல் எடுத்துச் செல்வதே சிரமம் ஆகிவிட்டது.  போட்டோக்கள் எதுவும் எடுக்கவில்லை. ஒருமணிநேரம் மலைகளின் ஊடாக பயணம். பின்னர் புல்வெளிகளின் ஊடான பாதை...பாறைக்கற்கள் என பயணம் தொடர்ந்தது.

மேலே செல்லச் செல்ல ஒற்றையடிப்பாதையாக மாறியதோடு மழைநீர் வழிந்தோடி வரும் பாதையாகவும் மாறியது..எங்களின் கால்தடங்கள் மழைநீரினுள்..எங்கே கால் வைக்கிறோம் என்பது தெரியாது. நிதானமாக நடக்கத் துவங்கினோம்.   எதிரே நான்கு நபர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மேலே செல்லமுடியாது.. மழைநீரின் அளவு கூடிவிட்டது.  திரும்புகிறோம். நீங்களும் திரும்புவது நல்லது என்றார்கள். சரி.. உங்களின் அறிவுரைகள கவனத்தில் கொள்கிறோம். கவனமாகச் செல்கிறோம். முடியவில்லை எனில் திரும்பிவிடுகிறோம் என்ற உறுதியைக் கொடுத்து  தொடர்ந்தோம்.

செங்குத்தான சில இடங்களில் மழைநீர் அருவிபோல் சுமார் மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் இருந்து கொட்ட...நெஞ்சு முகம் எல்லாம் அருவிநீர் கொட்ட... சுமார் 100 அடி தூரத்திற்கு கால்வைப்பதற்கு எந்தப்பிடிப்பும் இல்லாத சரிவில் ஏறினோம். இந்த இடத்தில் பயந்துதான் எதிரே வந்தவர்கள் திரும்பியது புரிந்தது. துணிச்சலோடு ஒவ்வொருவராக கைகொடுத்து மேலே ஏறிச்சென்றோம். காலடித்தடமும் தெரியாத நிலை.... சுற்றிலும் மழைத்தூவல் பனிப்படர்ந்தாற்போல் பார்வையை மறைத்தது.  அகத்திய மலை எந்தத் திசையில் இருக்கிறது எப்படி போகவேண்டும் என்றும் தெரியாது. மிக முக்கியமாக பாதை பிரிகிறது என்று சந்தேகிக்கும் இடங்களில் மஞ்சள் பெயிண்ட் மார்க் பண்ணி இருந்தனர். ஆனால் மழைநீர் வரத்தில் அந்த பெயிண்ட் அடையாளம் முழுமையாகவே தெரியவில்லை.

எதிரே எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் மழைநீரை..சிறு வெள்ளத்தை எதிர்கொண்டேதான் போகவேண்டி இருந்தது.கரணம் தப்பினால் எதுவும் நடக்கும் என்ற நிலை.... எதிரே வந்தவர்களின் எச்சரிக்கை புரிய ,கூடுதல் கவனத்துடன் சென்றோம். மழைநீரின் கலங்கல் ஏதுமின்றி பளிங்கு போல் நுரைத்து வந்து கொண்டிருக்க..அதைச் சுட்டிக்காட்டி கண்டிப்பாக இது வழக்கமான பாதையில் வரக்கூடிய நீர் வரத்துதான்... வெள்ளமோ, எதிர்பாரத நீர்வரத்தோ இல்லை என நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே ..சென்றோம்....கிட்டத்தட்ட அரைமணிநேர பயணம் இப்படித்தான் இருந்தது.

இந்த அனுபவம் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாத பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்த மனநிலை....இயற்கையோடு ஒன்றிய அனுபவம் நான் இதுவரை அனுபவித்திராத ஒன்று..தீம்பார்க்குகளில் நீர்விளையாட்டுகள் எத்தனை ஈடுபட்டாலும் இயற்கை அன்னையின் மடியில் விளையாடுகிற இன்பம் வார்த்தைகளினால் விளக்க இயலாததாக இருந்தது. மேலும் மேலும் உற்சாகம் உந்தித்தள்ள தொடர்ந்து முன்னேறினோம்.

                                                படம் ...தினமணிதளத்திலிருந்து


இடையில் பரந்த அகன்ற நீர்ப்பரப்பு ஒன்றினை கடக்க வேண்டியதாக இருந்தது. மேலிருந்து அருவிகள் வந்து இங்கே ஒன்று சேர்ந்து தேங்கி பின் அருவியாய் கீழே கொட்டிக்கொண்டு இருந்தது. இதைத் தாண்டியவுடன் அகத்தியர் மலை பாறைப்பகுதிகள் வந்தன.. மூன்று இடங்களில் இரும்புக்கயிறு கட்டி இருந்தனர். இவைகள் நான் கற்பனை செய்து வைத்திருந்தபடி செங்குத்தாக இல்லை... 45 டிகிரி கோணத்தில் பெரிய பரந்த பாறைப்பகுதி, அதைக்கடக்க கயிறு இல்லையெனில் சிரமம்தான்..

                                          படம் தினமணி இணைப்பிலிருந்து




எங்களுக்கு மேலாக சிலர் நடுங்கிக்கொண்டே நின்றிருக்க.. அகத்தியர் திரு உருவச் சிலை அமைந்த இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தோம். மலை உச்சி என்பதால் காற்று தங்கு தடையின்றிவீச...தூறல்கள் ஊசிபோல் உடலில் விழ.. எங்களுக்கு முன்னதாக சென்ற அன்பர்கள், அகத்தியர் திருமேனிக்கு அபிசேகங்கள் செய்யத் தயாராயினர்.

தினமணியின் இணைப்பிலிருந்து மேலும் சில படங்கள்


தினமலர் இணைப்பிலிருந்து சில படங்கள்


 சின்ன இடைவேளைக்குப் பின் தொடர்வோம்

நிகழ்காலத்தில் சிவா




Sunday, July 14, 2013

பொதிகை மலை பயணத் தொடர் பகுதி 5

பகல் 12.00 மணி அளவில் மரங்கள் அடர்ந்த பகுதிகளைத் தாண்டி புல்வெளியை அடைந்தோம். லேசாக மழை துளிக்க ஆரம்பித்தது. காற்றில் ஈரப்பதம்  அதிகமாகி குளிரெடுக்கத் தொடங்கியது.. 



பக்கவாட்டுப் பகுதிகளின் காட்சிகள்







மழை வேகமாக வருவது போல மிரட்டிக்கொண்டே இருந்தது. முதுகில் சுமையைக் குறைப்பது ஒன்று தொடர்து நடக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும், கூடவே  பசி தாக்குப்பிடிக்கமுடியாமல் 12.30 க்கு சாப்பிட்டுவிட்டோம்,. தொடர்மழை பிடித்துக்கொண்டது. எங்கும் ஒதுங்கவும் முடியாது. மழையில் தெப்பலாக நனைந்து கொண்டே சென்றோம். உடைகள் அனைத்தும் நனைந்து விட்டன. மழைக்கோட்டு அணிந்திருந்தும் கழுத்து கைப்பகுதிகள நனைகிற அளவிற்கு மழை அடித்துப் பெய்தது. காலில் மாட்டியிருந்த ஷீவுக்குள் இருந்து நடக்க நடக்க தண்ணீர் வெளிவந்து கொண்டே இருந்து.  :)



தொடர்ந்து நடந்து இரண்டரை மணிக்கு அதிரமலை முகாம்க்கு சென்று சேர்ந்தோம். அனுமதி டிக்கெட்டை அங்கே உள்ள வனக்காவலரிடம் காட்டிவிட்டு, அங்கே பயன்படுத்த தகுதியற்றது என வனத்துறையினால் அறிவிக்கப்பட்ட கட்டிடத்தில் தங்கினோம். அருகிலேயே வனத்துறையினால் சில கொட்டகைகள் அமைக்கப்பட்டு தங்கும் வசதி ஏற்படுத்தி இருந்தார்கள்.

தினமணி வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் மேலே



இருப்பினும் அங்கே கடும் குளிர் காற்று வீசியதால் ரிஸ்க் எடுத்து கட்டிடத்துள் படுத்தோம். சிறிய கேண்டீன் உண்டு. அவர்களால் தரப்படும் மெனு,, கஞ்சி, பூரி சாப்பாடு உணவுகள் கிடைக்கும் அதற்கு கட்டணம் உண்டு.


நடுவில் இருப்பது அடியேன்.தொழில்துறை நண்பர்களுடன் (கீழே உள்ள படம் )

கேண்டீனில் அகத்தியரின் உருவப்படங்கள். பல்வேறு அபிசேகங்கள் நடக்கும் போது எடுத்தபடங்களின் தொகுப்பை வைத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இடைவெளியின்றி பெய்து கொண்டே இருந்தது.


வெளியே தலைகாட்ட முடியாத அளவு காற்றும் மழையும், தங்கியிருந்த கட்டிடமோ பக்கச் சுவர்களில் தண்ணீர் மேலிருந்து கொட்டிக்கொண்டு இருந்தது.. நனைந்து கொண்டே பின்னால் வந்த அன்பர்களும்  தங்கள் பங்குக்கு ஈரத்துணிகளை அங்கேயே போட்டனர். இலவச இணைப்பாக தங்கள் உடைகளில் ஒட்டியிருந்த அட்டைகளையும் அவர்களை அறியாமல் அங்கேயே உதிர்த்துவிட.... படுத்திருந்தவர்களையும் அவைகள் பதம் பார்க்கத் துவங்கின.

மொத்தத்தில் அன்றைய இரவு தூக்கம் சுத்தமாக இல்லை.. கொண்டுவந்திருந்த உடைகள் போர்வை எல்லாம் மழையால் நனைந்திருந்தன. காலையில் மழை இல்லாவிடில் மேலேதொடர்ந்து செல்லலாம். இல்லையெனில் இறங்கத் தொடங்கிவிடலாம் என முடிவு செய்து படுத்தோம்... எப்படியோ விடிந்தது.. மழை இன்னும் மெதுவாக பெய்துகொண்டேதான் இருந்தது.

நிகழ்காலத்தில் சிவா

Wednesday, July 10, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 4


காலை ஒன்பது மணிக்கு நடக்க ஆரம்பித்து பத்துமணி அளவில் சிறிய நீரோடையை அடைந்தோம். காலை 8 மணியில் இருந்து தொடர்ந்த நடை உடலில் வியர்வையையும், களைப்பையும் ஏற்படுத்த, குளிக்கலாம் என்கிற முடிவை எடுத்தோம்.  நீரில் கால்வைத்தால் ஐஸ்கட்டியாய் ஜில்லிப்பு :)

மூன்று நண்பர்கள் பின்வாங்க.. நானும் இன்னொருவரும் கண்ணை மூடிக்கொண்டு நீரில் விழுந்தோம். அருவிகளில் குளிப்பதற்கும், இது போன்ற நீரோடைகளில் குளிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

அருவிகளில் குளிப்பது ஒரு சுகம். தடதடவென உடலின் எல்லா இடங்களிலும் அடித்து விழும் நீர், அனைத்து வலிகளையும் சமமாக்கி, பரவச் செய்து, உள்ளிருந்து துடைத்துவிட்டாற் போல் சுத்தமாக்கிவிடும்.புத்துணர்ச்சியைத் தரும்,

ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் :)

உணர்வுகளை மனம் எந்த முயற்சியும் இன்றி கவனிக்க ஆரம்பித்தது. தோலில் இருந்து உள்ளே எலும்பு வரை உள்ள தசைநார் கற்றைகளின் ஒவ்வொரு மில்லிமீட்டரும், ஒவ்வொரு அணுவும், தொடர்ந்து அதிர்வுகளை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அப்படி அதிர்வுகள் வெளியேற, வெளியேற மனமும் உடலும் ஒருசேர களைப்பு நீங்கி புத்துணர்ச்சி ஆவதை படிப்படியாக எளிதில் உணரவும் முடிந்தது. கண்ணை மூடி ஆனந்தமாக நீருக்குள் கிடந்தேன். கொஞ்சநேரம் ஆனதும் பழகிப்போனதாகவோ, மரத்துப்போனதாகவோ தெரியவில்லை.. நீரில் விழுந்த அந்த நொடிமுதல் பலநிமிடங்களும் இப்படியான உணர்வுகளே தொடர்ந்து நிலைத்து இருந்தது.

எங்களுக்குப்பின்னால் வந்தவர்கள் எங்களைத்தாண்டி நடக்க .. வெளியேறி தொடர்ந்தோம்.


பளிங்கு போன்ற நீரோடை... கண்டிப்பாக குளிக்க வேண்டிய இடம்.. ஏனோ பெரும்பாலானோர் கடந்து சென்றனர்.




முற்பகல் 10.20க்கு அடுத்த வனத்துறை கேம்ப்.. கிட்டத்தட்ட நாங்கள் நடந்த வந்த தூரம் போக இன்னும் அதிரமலைக்கு கேம்ப்க்கு 10 கிலோமீட்டரும், அதற்கு மேலாக அகத்தியர்மலைக்கு 5 கிலோமீட்டருமாக சுமார் 15 கிமீ இன்னும் போக வேண்டியிருக்கிறது. என்று காட்ட நடையை வேகப்படுத்தினோம்.



தொடர்ந்து நீரோடைகள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. எல்லாம் ஐந்து நிமிட நடை தூரம்தான்........நான்கு நீரோடைகளைத்தாண்டினோம். நேரம் முற்பகல் 11.00


முற்பகல் 11.30


கீழே கண்ட இடத்தை நாங்கள் கடந்தபோது முற்பகல் 11.35, இந்த இடம் பாறைகள் நிரம்பிய நீர்தேங்கி ஓடக்கூடிய பகுதி இடப்புறத்தில் பெரிய பரப்பளவாக விரிந்து இருக்க.. கால் நனையாமல் தாண்டிச் செல்லக்கூடிய நீளம், அகலம் அதிகமான பகுதி.. நாங்கள் சென்ற நாட்களிலும், அதற்கு முந்தய நாட்களிலும் மழை அதிகம் பெய்யாததால் நீரோட்டம் குறைவாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் திரும்ப வரும்போது இதே இடம் ஆறுபோல் பரந்துவிரிந்து இரண்டு அடி உயர நீர் பாய்ந்தோடிக்கொண்டு இருந்தது :)

நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

Tuesday, July 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 3

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வனத்துறை கேம்ப் தாண்டினோம். யானைகள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கவே தேவையில்லாமல் சுற்றிலும் அகழி...(காலை 9.20)



சுற்றிலும் நிஜமாகவே யானையை உள்ளே இறக்கிவிட்டால் தெரியாது. அந்த அளவு ஆழம், அகலம், கோவைப்பகுதியில் யானைக்கான அகழி (?) தோண்டி இருப்பதைப் பார்த்தால் வெள்ளாடு கூட தாண்டிக்குதித்துவிடும். அப்படி இருக்கும். இந்த குழிக்குள் தப்பித் தவறி நாம் விழுந்தால் வேறொருவர் துணையின்றி மேலே ஏற முடியாது :)  தாண்டிச் செல்ல இரண்டு குச்சிகளை கட்டி வைத்திருக்கின்றனர்.. சில சமயங்களில் அங்கே தேநீர் கிடைக்கும்.





அதைத்தாண்டியவுடன் சட்டென பாதை ஏதுமின்றி காலடிப்பாதை மட்டும்தான். இப்படியேதான் போகனுமோன்னு குழப்பம் வர நடந்தோம். ஆனால் நல்ல வேளையாக இது ஒரு குறுக்குப்பாதை.. பழைய பாதையுடன் இணைந்து விட்டது :)


வழியில் கண்ட வண்ண மலர்கள். நேரம் காலை 9.30




தொடர்ந்து நாங்கள் நடந்தபோது காலை 9.45 கீழ் கண்டவாறுதான் பாதையின் பாதிப்பகுதி இருக்கும். காய்ந்த இலைதழை கீழே கிடக்க, அவ்வப்போது பெய்யும் மழை அதை ஈரமாக்கி, இற்றுப்போகச் செய்ய சுற்றிலும் நெருக்கமாக மரங்கள் மனதை எளிதில் தன் வசமாக்கிவிடுகின்றன :)



படங்கள் எல்லாம் பொதிகை மலைப்பாதையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சான்றும், வரலாறும் முக்கியமல்லவா :) அதற்காக ஒன்று......






காலை 9.50 பாதையில் இது வரை நான் பார்த்திராத  மரத்தின் அடிப்பாக அமைப்பு, மரத்தின் அகலம் சுமார் 15 அடி முக்கோண உயரம் சுமார் 10 அடி,  உயரம் அண்ணாந்து பார்த்தால் தெரியவில்லை :) கூட்டல் குறி நிலத்தில் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரம் வேர் விட்டிருக்க புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.



10 மணிக்கு சிறிய நீரோடையை அடைந்தோம்.






நீளம் கருதி நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

Monday, July 8, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 2

இரயிலில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து நெடுமங்காடு ,விதுரா , ஊர்களின் வழியாக போனகாடு  செல்லும் பஸ் பிடிக்க, விசாரித்தபோது வர லேட்டாகும், அந்த பஸ்ஸில் சென்றால் போனாகாடு ஊரில் இரவு 9.30 க்கு இறக்கிவிடப்பட்டு தனியாக இருக்க வேண்டியதாகிவிடும்   , அதனால நாம நெடுமங்காடு போயிட்டு அங்கிருந்து கனெக்சன் பஸ் பிடித்தும் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. நாங்கள் சென்ற மாலை வேலையில் நெடுமன்காடு,விதுரா  பஸ்தான் கிடைத்தது. விதுராவுக்குச் செல்லும்போது மணி இரவு 8.30 மணி...எனவே விதுராவில் இரவு தங்கினோம். ஓரிரு லாட்ஜ்கள்தாம் .. இங்கேயே தங்குவது உத்தமம். ஏனெனில் பலர் மலை அடிவாரத்துக்கு முந்தய நாள் இரவு சென்று தங்கினர்.  அங்கே வாசலில்தான் படுக்கவேண்டும். மழை பெய்தால் படுக்குமிடமெல்லாம் நனைந்து விடும், கூடவே குளிரும்..

அடுத்தநாள் காலை 6 மணிக்கு பஸ் இருப்பதாக செய்தி கிடைத்தது .. காலை 5.30 க்கே சென்று  காத்திருந்தோம் அங்கே உணவு இருக்குமா? இருக்காதா என்ற சந்தேகம் .. கூட வந்த நண்பர்களுக்கு :)  இல்லையென்றால் மலை ஏறும்போது என்ன செய்வது என்று ஆலோசனை செய்துவிட்டு, காலை 5.30 க்கே அருகில் உள்ள மெஸ்ஸில் அப்பமும், சுண்டல் குழம்பும் ஊற்றி அடித்துவிட்டு, காத்திருக்க 6.30 க்கு பஸ் வந்து சேர, போனாகாடு என்ற ஊரில் காலை 7.30 க்கு வந்து சேர்ந்தோம்.



இந்த ஊர்தான் நமக்கான போக்குவரத்தின் ஆதாரம். இங்கிருந்து சுமார் 2 கிமீ நடந்தால் வனத்துறை அலுவலகம் வரும். அங்கிருந்துதான் நமது பொதிகை மலைப்பயணம் ஆரம்பிக்கிறது. பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவுடன் இயங்காத தொழிற்சாலை ஒன்று தென்பட.....



 ஜீப்கள், கார்கள் செல்கிற அளவிலான மண்பாதை..அரைமணி நேரம் நடக்க வனத்துறை அலுவலகம் அடைந்தோம்.




எங்களுக்கு முன்னதாக இரவே வந்து தங்கியவர்கள் வெள்ளைரவை உப்புமா டிபனாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க.. முன்பதிவு இரசீதுகளை பதிவு செய்து கொண்டோம். மதிய உணவு பார்சலாக கட்டிக்கொடுத்தனர். எங்களுடைய பைகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டது.. ஏதேனும் உற்சாகபானங்கள், இருக்கிறதா என்று பார்த்து அனுப்புகிறார்கள். காலை 9.மணிக்குத்தான் மேலே அதிரமலைக்குச் செல்ல அனுப்புகிறார்கள். அங்கே தங்கி அதற்கு மேல் அகஸ்தியர் கூடம் போகவேண்டும் :)

அலுவலகத்தில் இருந்து காலை 9.15 க்கு கொஞ்சதூரம் நடந்தவுடன் காட்சியளித்த பிள்ளையார்.. இவரை வழிபட்டு நகர்ந்தோம்.



Thursday, July 4, 2013

வேற சாதியில் கட்டிக்கொடுக்க எனக்குச் சம்மதம்தான்...

வருடம் தவறாமல் தீபாவளி பொங்கல் முத்து தாத்தா வந்துவிடுவார். அவருடைய முதல் விசிட் என் வீடுதான்.. வயிறாற விருந்திட்டு கையில் பணமும் கொடுத்து அனுப்புவேன்.  சமைத்ததில் முதல் பங்கே அவருக்குதான். குழந்தைகளே பரிமாறுவார்கள். 

நாங்கள் பயன்படுத்தும் டம்ளர் போன்றவைகள் தரப்படும். இயல்பாக கழுவி பயன்படுத்துவோம். இலையை அவரே எடுக்க எத்தனித்தால் அனுமதி இல்லை. நாங்கள் தான் எடுப்போம். அவர் மெள்ள மெள்ள வெளியேறும்போது வாசலில் நின்று மறையும் வரை பார்ப்போம். குழந்தைகளின் மனநிறைவு அளவற்றதாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பெற்ற தந்தையை விட மனம் உயர்வாகவே நினைக்கும்.

காரணம்  என்னன்னு தெரியல... எல்லோரையும் சாமி, சாமி ந்னு க்கூப்பிடற வாஞ்சையா? முதுமை காரணமா, எதுவும் புரியலை... இப்படித்தான் சாதி என்கிற உணர்வு உள்ளுக்குள்ள பனித்திரை மாதிரி இருக்குது.. என் குழந்தைகளுக்கு சாதி என்பது என்னன்னு தெரியாது.... ஆனா மன அலைவரிசைக்கு ஒத்துவர்றவுங்க, வராதவங்கன்னு பிரித்துப் பார்க்கத் தெரியும். 

சுருக்கமாச் சொல்லனும்னா அசைவம் சாப்பிடறவங்க வேற சாதி.. சைவமா இருக்கிறவங்க நம்ம சாதி.. இத நான் சொல்லிக்கொடுக்கலை... எனக்கு அசைவம் சாப்பிடறவங்களோட ஒன்னா உட்கார்ந்து சைவம் சாப்பிடுவேன். அவர்களுக்கு தேவையானதை பரிமாறவும் செய்வேன். மனம் பற்று, பிடிப்புன்னு ஒட்டாமல் இருக்கிறது சாத்தியமாயிட்டுது.

சரி என் புள்ளைங்க பெரிசான வேற சாதியில கட்டி வைப்பயான்னு கேட்டா என்ன பதில் சொல்றது தெரியல ..அப்படி கட்டி வைக்க வேண்டிய கட்டாயம் என்னன்னு புரியல... சாதி சோறுபோடாது.. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காசு இல்லாம இந்த உலகத்துல பிழைக்க முடியாது..  மாசம் இப்போதைக்கு இருபதாயிரம் இருந்தாத்தான் குடும்பம் தள்ள முடியும்..

வீட்டு வேலை எல்லாம் செஞ்சாகனும். ஆள்போடனும்னா இன்னும் பத்தாயிரம் சேத்து சம்பாதிக்கோனும். வீட்டு நிர்வாகம்,  காசு சம்பாதிக்கிறதுல உள்ள சிரமங்கள், நம்ம வீட்டுக்குள்ள இருக்கிற சுதந்திரம்னு எல்லாம் என் புள்ளைங்களுக்கு லேசுபாசா சொல்லித்தான் வளர்த்துகிட்டு வர்றேன்.

இவளுங்க வளர்ந்து குடும்பம் தள்றதுல உள்ள சவால்கள், வேறு சூழ்நிலை அங்கு வாழ்தலில் உள்ள அனுசரிப்பின் அவசியம் இதெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பது மட்டும் என் எதிர்ப்பார்ப்பு....சாதி முக்கியமில்லைதான்.

படிக்க ஹாஸ்டல்ல கொண்டு விடறன்னா பக்கிக நான் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு வீட்ல எங்களை மேய்ச்சுக்கிட்டு இருக்கிறாங்க... இதுக வளர்ந்து எல்லாம் புரிஞ்சுகிட்டு வேற சாதியிலதான் கட்டுவேன்னா கட்டி வச்சுற வேண்டியதுதான்.

நமக்கென்ன.. மாட்டுற ஐயரு பாடுதான் திண்டாட்டம் ...அவ்வளவு விபரமா இருப்பாங்கன்னுதான் நடவடிக்கைகளைப்பாத்தா தோணுது .

தர்மபுரி விசயத்த படிச்சவுடன் தோணுச்சு.. எழுதினேன்.

இளவரசன் மரணம் வருந்தத்தக்கது எனினும் அது கொலையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இளவரசனோ, திவ்யாவோ ஆரம்பத்தில் இந்த அளவு எதிர்ப்பு வரும் என நினைத்திருக்க மாட்டார்கள். இடையில் அரசியல் புகுந்து பிரச்சினை பெரிதாகிவிட்டது உண்மைதான்... ஆனால் காதலுக்கு கண் இல்லை. சக்தியும் இல்லை போல.. இளவரசன் தற்கொலை எனில் கோழைத்தனமானது.. நம்பி வந்தவளை விட்டுட்டு போயிட்டது குற்றம்தான்... கொலை எனில் அடப்பரதேசி.. எங்கிட்டாவது ஓடிப்போயாவது பொழச்சு இருந்திருக்கலாமே.. அதொன்னும் கேவலம் இல்லையே? சில வருசம் கழிச்சு.. அல்லது எப்படியாவது திவ்யாவை பிக்கப் பண்ணி இருக்கலாமே.... ஏன் இப்படி மாட்டினேன்னு அங்கலாய்க்கத்தான் முடிகிறது.

சாதி என்பது வரும் தலைமுறையிடம் நாம் விதைக்காமல் இருந்தால் போதும். நம்மோடு அது மறைய வேண்டும். அரசும் சாதிகளை, சாதிக்கட்சிகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் போதும். மெள்ள மறைந்துவிடும்.... இதற்கு அரசியல், சாதிக்கட்சிகள் தயாராகாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நம்மால் அது சாத்தியமாகும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

Friday, June 28, 2013

பொதிகை மலை பயணத்தொடர்...1


கடந்த 2013 ஜனவரி 15 முதல் மார்ச் 10 வரை பொதிகைமலையில் அமைந்த அகத்தியர்கூடத்திற்கு மலைப்பயணம் செய்வதற்காக கேரள அரசு அனுமதி அளிக்கும் என்ற செய்தியை நண்பர் இது என்ன என்ற மேல்விபரம் கேட்க என்னை அணுகி இருந்தார்..

எனக்கோ கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல். ஆனால் முதல்முறையாகச் செல்வதால் தனியாகச் செல்ல மனமில்லாமல் ஆர்வமுள்ள நண்பர்களை அடையாளம் காணுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டேன். இந்த அகத்தியர்மலை என்றும் பொதிகைமலை என்றும் அழைக்கப்படும் மலையைப்பற்றிய சில செய்திகளை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்ததால் தமிழகத்தில் உள்ள மலைப்பயணங்களைப் போல் பொதிகைமலைஇருக்காது. சிரமம் அதிகம் அதிகம் என்பது புரிந்தது :)

அட்டைகள் அதிகம் இருக்கும் என்ற விசயம் எனக்கு பழகிப்போனாலும், நண்பர்களுக்கு பயத்தை அளிக்க, போகலாமா? வேண்டாமா? என்று யோசனையில் ஒருவாரம் கழிந்தது. திடீர் முடிவாக முன்பதிவு செய்ய திருவனந்தபுரம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி கிளம்புவிட்டோம்..

யாத்திரை செல்பவர்கள் இதற்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள  வனத்துறை அலுவலகத்திலும் அனுமதி பெறலாம்.

Office of the Wildlife Warden,
Wild life Division ,
Vattiyoorkkavu .P.O,
PTP Nagar,
Thiruvananthapuram.
Fax No. 0471-2360762
Phone No. 0471-  2360762


பிப்ரவரி 4ல் நேரில் சென்று காத்திருந்து பதிவு செய்தோம். பயணத்திற்கு இடம் இருந்த நாட்களோ இரண்டுதான், மார்ச் 7,8 அதிலும் மொத்தமாக ஐம்பது இடங்க்ள் மட்டுமே.பாக்கி :) மற்ற நாட்கள் எல்லாம் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

தினமும் 100 பேருக்கு மட்டும் அனுமதி.. அதிலும் ஒரு நபருக்கு 5 பேருக்கான முன்பதிவு டிக்கெட்...அனுமதிக்கட்டணம் 500..இதுதான் முன்பதிவுக்கான சரியான வழி... இன்னொரு முறையிலும் பதிவு செய்யலாமாம். அகத்தியர் கூடம் செல்லும் வழியில் காணிதலம் என்னும் இடத்தில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் முன்பதிவு செய்யவேண்டும்.  நாங்கள் சென்ற போது காலை 8.45 அங்கிருந்த பாதுகாவலர் எங்களை என்போடு விசாரித்து இன்னும் ஒருமணிநேரம் ஆகும். உள்ளே அமைந்த கேண்டீனில் சாப்பிட்டுக்கொள்ளச் சொன்னார். அந்த வேலையை முடித்து காத்திருந்தோம் ஒருவழியாய் 10.15 க்கு வனத்துறை அதிகாரி வர எங்கள் குழு 5 பேருக்கு, தலைக்கு 500 கட்டிவிட்டு இரசீது பெற்றுக்கொண்டு திரும்பினோம். ஒரு போட்ட்டோவும், அடையாளச் சான்று இரண்டு நகல் கொண்டு செல்வது மிகவும் அவசியம்.

நேரில் செல்ல முடியாதெனில் காணிதலத்தில் உள்ள செக்போஸ்டில் போனில் முன்பதிவு செய்து, பயண நாளன்று பணம் கட்டினால் பொதும் என்று பயணம் முடிந்து திரும்பும் போது அந்தப்பகுதி அன்பர் சொன்னார். இத்தகவலின் சாத்தியக்கூறுகள் எனக்குத் தெரியவில்லை.

டிக்க்ட் முன்பதிவின்போது அங்குள்ள ஆபீசரிடம் மலை ஏறி இறங்க எத்தனைநாள் ஆகும் என்று கேட்டதற்கு இரண்டு நாள் போதும். ஏற ஒருநாள் இறங்க ஒருநாள் போதும் என்ன இறங்கும்போது சற்று நேரமாகிவிட வாய்ப்பு இருக்கிறது மாலை 5.30 அல்லது 6 மணிக்கு வந்துவிடலாம். என்று சொன்னார். அவருக்கு பொதிகைமலை அடிவாரத்தில் உள்ள பஸ்டைமிங் நிலவரம் தெரியவில்லை. உத்தேசமாக 7 மணிக்கு இருக்கும் நிச்சயம் திருவனந்தபுரம் 9 அல்லது 9.30 க்கு வந்து சேர்ந்து விடலாம் என்றும் தெரிவித்தார்.

இதை எழுத வேண்டிய காரணம் பயணம் செல்வது இரயிலில் என்பதால், முன்பதிவு அவசியங்கள், வேலைகளை திட்டமிட்டு முடிக்க வேண்டிய அவசியங்கள் கருதி இந்த தகவல்களைச் சேகரித்து திரும்பினோம்.

இப்படித் தகவல்கொடுத்தது என்னவோ வனத்துறை அதிகாரி என்றாலும் அவர் அதிகாரி ரூபத்திலான அகத்தியர் என்பதை பயண இறுதியில்தான் தெரிந்தது.:)

Friday, May 31, 2013

பயனற்றதைப் பேசாதே 2...ஓஷோ

பயனற்றதைப் பேசாதே என்ற இந்த கட்டுரையை படித்த பின் தொடர்ச்சியாக படிக்கவேண்டிய கட்டுரை இது :)

எண்ணங்களும், ஞாபகங்களும், கனவுகளும், கற்பனைகளும் நிறைந்த மனதின் போக்குவரத்தைக் கவனியுங்கள். அமைதியாய் தனியே  கவனியுங்கள். எவ்வித பாரபட்சமும் வேண்டாம்.. கருத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டாம். கண்டனம் செய்யவும் வேண்டாம் உள்ளார்ந்த அமைதியுடன் என்ன நிகழ்கிறது என்று கவனித்துப்பழக வேண்டும். இப்படி சென்ற இடுகையில் பார்த்தோம்.

எழுத எளிதாக இருக்கும் இந்த சில வரிகள் நடைமுறையில் பொதுவாக எளிதில் கைகூடாது. அதாவது கடினமானது என்று அர்த்தம் அல்ல. எளிதான விசயத்திற்கு மனம் ஒத்துழைக்காததோடு,  தன்விருப்பத்திற்கு மனம் அலைந்து கொண்டு, அதை, நமக்கு கடினமானதாகவே காண்பிக்கும் :)

தொடர்சூழ்நிலைகளும் சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்றுதான் அமையும். மனம் தளரக்கூடாது. :) மனமே இங்கு, மனதை மேய்க்கும் வேலையை செய்தாக வேண்டும் என்பதையும் மனதின் ஓரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.:)

சரி இப்படி சாட்சி பாவத்தில் இருந்தால் மனஅமைதி வாய்க்கும். அந்த அமைதியை ருசி பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளுங்கள்.

அமைதியை குலைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இந்த நிலையிலேயே இருக்க முடியும்போது நிதானமாய் செயல்பட முடியும். மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த அமைதியை குலைக்கும் வண்ணம்தான் அனைத்தும் நடக்கும்.:) மனம் தன் விருப்பப்படி கோபமோ, கவலையோ படும். இங்கே நம்மால் அமைதிநிலையை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதை குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு தாண்டி வாருங்கள். தொடர்ந்து திரும்பவும் கவனிக்க வேண்டியதுதான்.:)

அன்றாட வேலைகளுக்கு இடையில் இதை ஆரம்பித்தால் சிரமப்படவேண்டும். சும்மா இருக்கிறதாக தோன்றும் சமயத்தில், அல்லது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது மனதை கவனித்துப் பழகுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தொடர்முயற்சியில் மனம் இனி வேலைக்காகாது என்று அடங்க ஆரம்பிக்கும். இந்த விழிப்புணர்வும் , விருப்பு வெறுப்பற்ற தொடர்கவனித்தலும், நிலைத்த மன அமைதியைத் தரும்.

நம்முடைய கவனம் வெளியே ஒருமுகப்பட்டால் செயல்திறன் கூடும். இது உள்ளே விழிப்புணர்வு வரும் முன்னதான நிலை. இங்கே சுயமுன்னேற்றம் எளிதில் வாய்க்கும். இது தற்காலிகமானது. குறுகிய காலப் பலன்களைத் தரும் அல்லது தராமலும் போகலாம்.

மாறாக உள்ளே நிலைத்தால் வெளியாகும் உங்களின் திறமைகள் உங்களையே அதிசயப்படவைக்கும். :)


Tuesday, April 30, 2013

நம்மை பிணைக்கும் மாயச் சங்கிலி


சுமார் இருபது வருடங்களாக எனது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர் ஒருவரை கவனித்து வந்திருக்கிறேன். அவர் சுய தொழில் செய்வதில் கைதேர்ந்தவர். தன்னிடம் முதலீடு அதிகம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதித்துவிடுவார். வாங்கிய கடனை, கொடுத்துவர்களுக்கு தேவைப்படும்போது தரமாட்டார். வட்டியை மட்டும் கொடுத்து பேசிச் சமாளித்துவிடுவார். தனது தொழிலின் பணத்தேவை பூர்த்தியான பின்னர்தான் மீதியை கொடுப்பார். கணக்கு வழக்கில் வாய்ப்பு கிடைத்தால் வேலையக் காண்பித்துவிடுவார்.

தனதுதொழில்களுக்கு ஒத்தாசையாக பிறரை கொண்டுவந்துவிடுவதிலும், அல்லது சிரமமான காரியங்களை அதன் பாசிட்டிவ் பகுதிகளை மட்டும் சொல்லி மெருகேற்றி செய்ய வைத்து பயன் அடைந்துவிடுவார்.

நான் பள்ளிப்பருவகாலத்திலிருந்தே அவரை கவனித்து வந்ததால் அவரின் வலை விரிப்புகளுக்கு சிக்காமல் கடந்துவிட்டேன். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திருப்தியாக விலகமாட்டர்கள். ஏதேனும் ஒரு சங்கடத்துடன் விலகுவார்கள்.

அவருக்கு இரு மகன்கள். அதிலும் அவரது மனைவிக்கு சற்று கர்வமும் கூட.. இரண்டு பெண்குழந்தை பெற்றவர்களைப் பார்த்தால் ”பாவம் இரண்டும் புள்ளையாப் போச்சு” என்பார். இந்த குடும்பம் பலதொழில்கள் செய்து இறுதியில் துணிக்கடை வைத்து செட்டில் ஆகிவிட்டார்கள். இரண்டு மகன்களுக்கும் தனித்தனிக்கடை.

காலச்சக்கரம் உருண்டோடியது, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரியவன் திருமணமாகி தன் பெண்குழந்தையை வீட்டுக்கு அழைத்துவந்தார். அன்று இரவு சின்னமகன் வீடுதிரும்பும்போது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம். எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளித்த செய்தி.

சற்று வேகமாக வந்ததால் நடந்த விபத்து. ஹெல்மெட் போட்டிருந்ததால் சின்னமகன் உயிர் தப்பினார். விபத்தில் சிக்கிய சின்ன மகனை மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு சிகிச்சைஅளிக்கப்படுகிறது. உடனடியாக இருபதுஇலட்சம் பணம் கட்டியாக வேண்டியது ஆகிவிட்டது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

வழக்கம் போல் மனம் இதிலிருந்து வெளியே வந்து பிரச்சினையை தனக்கு பிடித்தமான கோணத்தில் அலச ஆரம்பித்துவிட்டது.

காசு காசு என்று அலைந்தவரை, அப்படிச் சேர்த்த காசை எப்படி பறிக்க வேண்டும் என்பது விதிக்குத் தெரியுமோ. இந்த விதி துல்லியமான கணக்கீடாக அமையும் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். வேகமாக வந்ததல் நடந்த தற்செயல் விபத்துக்கு இந்த சாயம் பூசுகிறேன் என்பதல்ல.. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உள்ள பிணைப்பை உறுதி செய்து கொள்ளும் சம்பவம் இது. இந்த பிணைப்புதான் நாமாறியா மாயச் சங்கிலி :)

இந்த துல்லியமான கணக்கீட்டுக்கு பலிகடாவாக சின்ன மகன் அமையக்காரணம் என்ன?

போனபிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் என்றால் அது உண்மையாகக்கூட இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த பிறவியில் செய்வதற்கு இந்த பிறவியிலேயே பலன் கிடைக்கும்போது போன பிறவிக்கு இப்போது பலனை அனுபவிப்பது வலிக்கின்றதே...

எந்தவகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்தவன் இப்போது அதே துன்பத்தை அனுபவித்தால் அர்த்தம் உண்டு. விபத்தில் சிக்கும் அந்த உயிர் துடிப்பதை நினைத்தாலே மனம் கலங்குகின்றது. எது எப்படி இருப்பினும் செய்கின்ற செயல்கள் நம்மையும் தொடர்ந்து நமது வாரிசுகளையும் நாம் அறியாமல் பாதிக்கும் என்பது மறுக்கவே முடியாத உண்மை. இந்த தெளிவுக்காகவே இதைப்பகிர்ந்தேன்.

நான் யாரையாவது மனதளவில் உடலளவில் துன்புறுத்தி இருக்கின்றேனா என்பதில் கவனமாக இருக்கிறேன். பணம் என்னளவில் இழப்பானாலும் சரி..பிறருக்கு என்னால் இழப்பு என்று தவறு நேராவண்ணம் இன்று வரை காத்து வருகிறேன்.

செய்யும் செயல்கள், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணம் இவற்றில் கவனமாக இருப்போம். நமது விதியை நிர்ணயிப்போம்

Sunday, March 24, 2013

விபத்து - விதியின் சதியா

காத்துக்கொண்டிருக்கையில் கண்முன்னே இன்னொரு விபத்து...நான் இருந்த இடமோ நகரத்தின் நடுவில் பழமையின் மிச்சமீதி அடையாளங்களை வைத்து இருக்கும் கிராமம். நகரத்தின் முக்கிய சாலையில் இருந்து பிரிந்து முக்கால் கிலோமீட்டர் வந்து அதன் பின்னர் 20 அடிச் சாலையில் சற்று உள்ளே செல்ல வேண்டும்.

 நகராட்சி பகுதி ஆனதினால் அந்த சாலை காங்கிரீட் சாலையாக, மாற்றம் பெற்றிருந்து. அந்த சாலை முடிவடைந்த இடம் ஊரின் மையப்பகுதி. நான்கு வீதிகள்  சந்திக்கும் இடமாக அமைந்திருந்தது. அந்த இடம் இரண்டு மூன்று லாரிகள் சாதரணமாக நிற்கும் அளவிற்கு இடம் அகலமாகவே இருந்தது.


ஆனாலும் கூட அப்படி இடம் இருப்பது  தெரியாத அளவில் நெருக்கமாக வீடுகள். அந்த இடத்தில் நுழைந்த பின்தான் அதன் விஸ்தீரணம் தெரியும். .. சின்ன சதுரமாக வலதுபுறம் தெரிவது மளிகைக்கடை. அங்கே வயதான பாட்டியுடன் மூன்று வயது ஆண்குழந்தை ஒன்று 10 ரூ மதிப்பிள்ள சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு பாட்டியின் கையைப் பிடித்து படி இறங்கியது. படி இறங்கியதுதான் தாமதம் தனது வீட்டுக்கு செல்லும் ஆர்வத்துடன்  பாட்டியின் கையை உதறிவிட்டு,  மேற்குப்புறத்திலிருந்து தென் கிழக்கு வீதிக்காக உற்சாகத்துடன் ஓடத் துவங்கியது.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தென் மேற்குசாலைக்காக சின்ன யானையான டாடா ஏஸ் சரக்கு வாகனம் ஒன்று அதேசமயம் சாதரண வேகத்துடன் வந்தது.
அந்த வாகனம் உள்ளே நுழையவும் ஓட்டுநரின் பார்வையில் காலி மைதானம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்து இருக்கும். சட்டென வலதுபுறத்தில் குழந்தை வர ஆரம்பித்ததை கவனிக்க வாய்ப்புகள் இல்லை. குழந்தையின் ஓட்டத்தை விட சற்று அதிகமான வேகம் 20 கிமீ வேகம்தான் வேன் வந்திருக்கும்.

வேனும் குழந்தையும் முக்கோணப்புள்ளியில் சந்தித்துக்கொள்ள குழந்தை வேனின் சைடில் மோதி  வேனுக்குக் கீழ் உள்புறமாக முன் சக்கரத்துக்கு முன்னதாகச் சென்று விழுந்தது. வேன் டிரைவர் ஏதோ மோதிவிட்டது என்று உணர்ந்து பிரேக் அடித்த அதே தருணம் வண்டி நகர்ந்து குழந்தை மீது ஏறி நின்றது.

டயருக்கு முன்னதாக குழந்தை விழுந்தவுடன் அதற்குப்பின் நடப்பதை முன்னதாகவே மனம் யூகித்துக்கொள்ள,  நடப்பதை காணும் சக்தி இல்லாததால் என் கண்கள் தானாக மூடிக்கொண்டன. இது பயமோ, கிறுகிறுப்போ இல்லை. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் மனம் தன்னை தற்காத்துக்கொள்ள இயங்கியதாகத் தோன்றியது.

வலுக்கட்டாயமாக கண்விழித்துப் பார்த்து  எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும் என்று தெரியாத நிலையில் வேனில் அருகில் ஓடினேன். எல்லாம் முடிந்தது. விஸ்வரூபம் படத்தில் வர்ற மாதிரி இரத்தம் கடகடவென தரையில் விரவி பாய்ந்தது. எந்த வித அசைவும் இன்றி குழந்தை கீழே சிக்கிக்கிடந்த கோணம், அதன் முடிவை, மரணத்தை  தெளிவாகச் சொல்லிவிட்டது. டிரைவர்  நடந்தை புரிந்து கொள்ள முடியாமல் நிற்க.. சத்தம் கேட்டு அருகில் வந்த சிலருடன் சேர்ந்து வேனின் முன் பக்கத்தை தூக்கினோம்.

யாரோ குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட..மெளனமாக விலகினேன். அடுத்த 20 நிமிடத்தில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லை.என மரணம் உறுதி செய்யப்பட மனதில் பல கேள்விகள் எழ, அந்த விபத்தை நேரில் பார்த்ததன் தாக்கம், அதிர்வு சற்று மனதைப் பாதிக்க அந்த இடத்திலிருந்து வெளியேறினேன். இயல்புக்கு வர சில மணி நேரங்கள் ஆனது...