"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா



Wednesday, November 8, 2017

தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ

தளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.
சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:

ஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.

இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.

ஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.

அடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது

முழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு
வாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.

உன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்

கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’  என்று அதனிடம் சொன்னால் போதும்.

 உன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.

அடுத்து
இன்னும் ஆழமாக,

மனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது.  சிறிது கால அவகாசம்  பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.
உடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.

அடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.

 உடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து
நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு.  உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து. 

 உடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி   இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.

ஓஷோ
தம்மபதம்



Sunday, October 22, 2017

தானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ


நீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது

ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.

ஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும்  எண்ணங்கள்.

இந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.

ஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.

உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது

எதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்தனத்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா






Tuesday, August 22, 2017

குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை


பிறந்தது முதல், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை குறித்து கூறும், டயட்டீஷியன் ஷைனி சந்திரன்:

பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; தாய்ப்பால் தான் மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு.
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் அன்றி, வேறு உணவு தேவையில்லை.

சுகப்பிரசவம் அல்லது சிசேரியனில் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆறு முதல், 12 மாதங்களில், குழந்தையின் எடை, பிறந்த போது இருந்ததை விட, இரண்டு மடங்கு கூடியிருக்கும். அதனால், 600 - 700 கலோரி வரை ஊட்டச்சத்து மிக்க உணவு, குழந்தைக்கு தேவை. தாய்ப்பால் மூலம், 400 - 500 கலோரி மட்டுமே கிடைக்கும் என்பதால், வேறு துணை உணவுகளும் கொடுக்க வேண்டியது அவசியம்.காய்கறி, நெய் சேர்த்து நன்கு மசிக்கப்பட்ட சாதம், வேக வைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வாழைப் பழம், பிஸ்கட், பப்பாளி, மாம்பழக் கூழ், சப்போட்டா என, சிறிது சிறிதாக சத்துணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று வேளையும், தாய்ப்பால் கொடுக்காவிட்டால், ஒரு நாளைக்கு ஐந்து வேளையும், இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.குழந்தைக்கு தேவையான போது, 12 - 24 மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்டலாம். அனைத்து உணவுகளையும், புதுவிதமான ரெசிபிகளாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அரிசி கஞ்சி, இட்லி, தோசை, உப்புமா, டோக் ளா, கடலை மாவு பர்பி, வெஜிடபிள் கட்லெட், பிரெட் துண்டுகளுடன் சீஸ் ஆம்லெட் என, வித்தியாசமாக தயாரித்து
கொடுக்கலாம்.இரண்டு வயதுக்கு மேல், தினமும் மூன்று வேளை உணவு கொடுக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாழைப்பழ மில்க் ஷேக், சப்போட்டா பழக்கூழ் போன்ற சத்துணவுகளையும் கொடுக்கலாம். 2 முதல், 5 வயது வரை, ஒரு குழந்தையைப் போல் மற்ற குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது.

எனவே, எந்த குழந்தையுடனும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒப்பிட்டு வருத்தப்பட வேண்டாம். 2 வயதில் சராசரியாக ஒரு குழந்தை, 2.5 கிலோ எடை அதிகரித்தும், 12 செ.மீ., உயரத்துடனும் இருக்கும். 3 - 5 வயதுக்குள், 2 கிலோ எடை அதிகரித்தும், 6 - 8 செ.மீ., வரை உயரம் அதிகரித்தும் இருக்கும். ஆறு முதல், 12 வயது வரை, குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பதின் பருவத்துக்கு முந்தைய கால கட்டம் என்பதால், குழந்தையின் எடை, 3 - 3.5 கிலோ அதிகரித்தும், உயரம், 6 செ.மீ., அதிகரித்தும் இருக்கும்.

சத்து மாவு லட்டு, தேங்காய் பர்பி, நிலக்கடலை உருண்டை, சன்னா சுண்டல், ராகி அடை, காய்கறிகள் சேர்த்த ஸ்டப்டு ரொட்டி, பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு சேர்த்த ஸ்நாக்ஸ் பார், எள்ளுருண்டை, வறுத்த நிலக்கடலை, அவல், பழ ஸ்மூத்தி போன்றவை சிறந்த உணவு!

குழந்தையின் விருப்பம், உங்களின் வசதிக்கேற்ப வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது, ஊட்டச்சத்தும் கெடாது; துாய்மைக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.

நன்றி தினமலர்


Wednesday, July 5, 2017

பெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை

அழகு மட்டுமல்ல; ஆரோக்கியத்திற்கும்நல்லது!


உள்ளாடை தேர்வில், பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்களை கூறும், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் மகேஸ்வரி:

 உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும் கூட.

ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில், தன் மார்பக அளவில், ஆறுமுறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின்வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்ப காலத்தின் போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பின், பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும்.

தாய்ப் பாலுாட்டுவதை நிறுத்திய பின், பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும்.

இப்படி, பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறியபடி இருக்கும். ஆனால், பலர் அதற்கேற்றவாறு, தங்களின் பிரேசியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும்.

பொதுவாக, பெண்கள் பிரேசியர் வாங்கும்போது, 32, 34, 36 என, உடற்சுற்றளவின் அடிப்படையிலேயே அதை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதன், கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது, 'ஏ, பி, சி' என, மூன்று அளவுகளில் கிடைக்கிறது.உதாரணமாக, 34ஏ என்பது, உடலில் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34பி, சராசரி கப் சைசும், 34சி, சிறிய கப் சைசும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமின்றி, கப் சைசையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

அதிக இறுக்கமான அல்லது தளர்வான பிரேசியர் அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமாக அணியும் போது வலி, அரிப்பு, எரிச்சல், பட்டைகள் அழுத்துவதால் ஏற்படும் புண் என்று பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம்.

பாலுாட்டும் நேரத்தில் உள்ளாடை அணிய வேண்டாம், அணியக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. உண்மையில், அப்போது மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளை தவிர்க்க, கட்டாயம் பிரேசியர் அணிய வேண்டும்.

குழந்தை பிறப்புக்கு பின் சில பெண்கள், பிரேசியர் அணியும் பழக்கத்துக்கு விடை கொடுத்து விடுகின்றனர்; அது மிகத் தவறு. அழகு மட்டுமல்ல, இது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது. மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் வியர்வை தங்கி அரிப்பு, புண் ஏற்படுவதைத் தவிர்க்கவும், செல்களின் தொய்வைக் குறைக்கவும், பெண்களுக்கு உள்ளாடை மிக அவசியமாகிறது.

சிந்தெடிக் ரகங்கள் தவிர்த்து, காட்டன் பிரேசியரையே பயன்படுத்த வேண்டும். வெயிலில் அதிகம் செல்வோர், புறஊதாக் கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்கள் தவிர்த்து, வெளிர் நிறங்களில் உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடல் எடை அதிகமானால், மெலிந்தால் அதற்கேற்ப பிரா அளவையும் மாற்றிப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு பிரேசியரை ஆறு முதல் ஒன்பது மாதம் வரை பயன்படுத்தலாம். எலாஸ்டிக் லுாசாகி, ஹூக் உடைந்த, துணி நைந்து போனவற்றை பயன்படுத்த வேண்டாம்.

நன்றி
தினமலர்
05/07/2017


Wednesday, June 28, 2017

'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா ?


'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகளை பட்டியலிடுகிறார், குழந்தைகள் நல மருத்துவர் கங்கா

பெண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது பிறப்புறுப்பைத் தொட்டுக் கொண்டே இருக்கும். இதனால், அந்த இடத்தில் தோலில் அழற்சி - 'டெர்மெடைட்டிஸ்' ஏற்படும். சிறுநீரில் உள்ள யூரியா போன்ற வேறு உப்புகள், குழந்தையின் தோலில் தடிப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, பூஞ்சைத் தொற்று - 'டேண்டிடா' ஏற்படுத்தும்.
காற்றோட்டம் இல்லாத ஈரமான இடங்களில் பூஞ்சைத் தொற்று எளிதில் ஏற்படும். பிறப்புறுப்பின் உள்ளே கிருமிகள் சென்று, யூரினரி இன்பெக் ஷனை ஏற்படுத்தக் கூடும். பெண் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம்.

அதேபோல், ஆண் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிக்கும்போது, அது விரை பையில் பட்டு, அதிகச் சூட்டை உண்டாக்கும். இந்தச் சூடு அவர்களுக்கு நல்லதல்ல. இதனால், அணுக்கள் பாதிக்கப்படும்; விந்தணு உற்பத்தியாவது குறைகிறது. இந்தப் பாதிப்பு குழந்தையாக இருக்கும்போது தெரியாது; வளர்ந்து பெரியவர்களான பின் தான் தெரியவரும்.

ஜெல் டெக்னாலஜி உள்ள டயாபரில் உள்ள ரசாயனப் பொருட்கள், குழந்தையின் மென்மையான தோலுடன் வினைபுரிந்து, அதிகமான அழற்சியை ஏற்படுத்தும். மேலும், தளர்வான டயாபர்களே சிறந்தவை. பிளாஸ்டிக் இழைகள் கலந்த, இறுக்கி பிடிக்கும் டயாபர், அரிப்பு, வறட்சி மற்றும் தோல் சிவந்து போதல், புண் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இதை தவிர்ப்பது நல்லது.

இரவு நேரங்களில் டயாபர் அணிவிக்கும்போது, குழந்தைகள் சிறுநீர், மலம் கழித்தால் அம்மாவுக்கு தெரியாது. ஆனால், குழந்தை அசவுகரியமாக உணரும். கழிவில் உள்ள பாக்டீரியாக்களால் அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சிறிது நேரத்திலேயே அந்தக் குழந்தை அழ ஆரம்பிக்கும்.

வெளியூர் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும்போது, டயாபர் அணிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இச்சூழ்நிலைகளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கண்டிப்பாக டயாபரை மாற்ற வேண்டும். அத்துடன், டயாபரைக் கழற்றியவுடனேயே அடுத்ததை அணிவிக்கக் கூடாது. அரை மணி நேரம் காற்றுப் பட விட்டு, பின்னர் போடவும். சிறுநீரோ, மலமோ குழந்தை போகவில்லை என்பதற்காக, பயன்படுத்தியதையே திரும்பப் போடக் கூடாது.

ஒன்றரை வயது தாண்டிய குழந்தைகளுக்கு, டயாபரைத் தவிர்த்து, 'டாய்லெட் டிரெயினிங்' கொடுக்க வேண்டும். தொடர்ந்து டயாபர் போடும் குழந்தைகளுக்கு, இந்தப் பயிற்சி அளிப்பது தாமதமாகும்.
டயாபர் போடும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால், தடிப்பு ஏற்படுவது குறையும் என்பது தவறு. சிறுநீரில் உள்ள யூரியா மற்றும் மற்ற உப்புக்கள், எண்ணெயுடன் வினைபுரிந்து மேலும் பாதிப்பை அதிகரிக்கும்.

டயாபருக்கு மேல் பேன்டீசையும் அணிவிப்பது முற்றிலும் தவறு. இதனால் காற்றோட்டம் சுத்தமாகக் கிடைக்காது. தொடர்ந்து இவ்வாறு அணிவிக்கும்போது, குழந்தைகளின் இரண்டு தொடைகளும் விலகி, அவர்கள் நடையில் மாற்றம் ஏற்படும்.

நன்றி
தினமலர்
28/06/2017


Tuesday, June 27, 2017

கர்ம வினைகள் பற்றி.... ஓஷோ


உன் பெற்றோரை, உன் ஆசிரியர்களை, அரசியல்வாதிகளை, சாமியார்களை, இப்படி சமூகத்தில் பலரையும், வெகுவாக நம்பிக் கொண்டிருந்து விட்டாய்.  அவர்கள் சொன்னதை எல்லாம் மூட்டை கட்டி உன்னுள் அடுக்கி வைத்துக் கொண்டே இருந்துவிட்டாய்.

ஏழ்மையுடன் இருக்கிறாய். காந்தி ஏழைகளைத் தரித்திர நாராயணர்கள் என்றார். ஏழைகள் கடவுள்களாம். ஏழ்மை தெய்வீகமாம். இது உண்மையென்றால் ஏழையாக இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள் ?

இந்த வியாக்யானத்தை சமணர்கள், பெளத்தர்கள் போன்றோர் கடவுளை நம்பாதவர்கள் என்பதால், அவர்களுக்கு தரமுடியாது அல்லவா ? அவர்களுக்காகவே கர்மா கோட்பாடு வந்தது

உன்னுடைய முற்பிறவிகளில் பாவங்கள் செய்துவிட்டாய். அதனால் இந்தப் பிறவியில் ஏழையாக இருக்கிறாய்., துன்பங்கள் அனுபவிக்கிறாய். முற்பிறவியில் பாவங்கள் செய்திருப்பதால் அதை இந்தப் பிறவியில் கழித்துவிட வேண்டும். அதனால் வறுமை, துன்பம் அனுபவி. எதிர்த்தால் இன்னும் புதிய கர்மவினைகளைப் புரிந்து அடுத்த பிறவிக்கு வழிவகுக்கிறாய். மனதார துன்பப்பட்டு கர்மாவைக் கழித்துவிடு.

இப்படிச் சொல்லிச் சொல்லி மனிதர்களை மாடுகளாகவும், எருமைகளாகவும் ஆக்கிவிட்டார்கள். குற்ற உணர்ச்சி கொள்ள வைத்து, எந்த  எதிர்ப்பும் இன்றி துயரத்துடனும், துன்பத்துடனும் திருப்தி அடைந்துவிடுகிறார்கள்.

நான் சொல்வதை வெறுமனே நம்பாதே. நம்புகிறவர்களை உருவாக்குவதல்ல என் வேலை.  முகம்மதுவை, கிறிஸ்துவை, புத்தரை நம்பிக்கொண்டிருந்த நீ என்னையும் நம்ப ஆரம்பித்துவிடாதே. என்மீது நம்பிக்கை வை என்று நான் சொல்லவில்லை. எல்லா நம்பிக்கைகளையும் ஓரம்கட்டிவிட்டு நீயாக உனக்குள் பார் என்கிறேன்.  பரிசோதனைகளை மேற்கொள். தியானி, அனுபவங்களை உணர்ந்துபார். சாத்திரங்களை நம்பாமல் உன் அனுபவங்களை நம்ப ஆரம்பித்து விடுவாய்  அனுபவங்கள் உன்னுடையது ஆகும்வரை எந்தப்புரிதலாலும் பயன் இல்லை.

உனக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் உன்னிடம் ஏற்கனவே உள்ளது.  உள்ளே திரும்பிப் பார்க்க வேண்டியது மட்டுமே பாக்கி. நாம் கடவுளின் ஒரு பகுதி. கடவுள் நம்மில் ஒரு பகுதி. நீ உள்ளே திரும்பிக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறது.

ஆனந்தம் அன்பு பரவசம் என்று வற்றாத பொக்கிசம் உள்ளே இருப்பதை காண்பாய்.
.
ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா





Monday, June 26, 2017

கேள்வியும் பதில்களும் - ஓஷோ

முந்தய பதிவில், கேள்வி எப்போதுமே சரிதான்.. பதில்கள்தாம் தவறுக்கு உட்பட்டவை என்று பார்த்தோம். வாழ்க்கை அனுபவத்தில் பல வருடங்களுக்கு முன் சரியாக இருந்தது. தற்போது, எனக்குள் எழுகின்ற கேள்விகள் அனைத்தும் தேவையில்லாதவை என உணர்கிறேன்.

பிறரது கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேருகின்றபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. மறைமுகமாக ஒரு பிரச்சினை உண்டு.. பலவிதமான பதில்கள் முந்திக்கொண்டு நிற்கும். மனம் சார்ந்த கேள்விகள் என இங்கே குறிப்பிடுவது அவசியம்.

எனக்குள் எழும் கேள்விகளே தேவையில்லை என்றபொழுது ஏற்கனவே எனக்குள்  இருக்கின்ற பதில்கள் பலவும் இல்லாது போக வேண்டியவையே..

ஆம். கற்றவை அனைத்தும் பயன்பட்ட காலம் போய், கழித்துவிடவேண்டிய தருணம் வந்துவிட்டது.

இனி ஓஷோவின் வார்த்தைகளைப் பார்ப்போம்.
                                                                           ----


மனதில் பதில்கள், பதில்கள் என்று பலவும் இருக்கின்றன.  இது முடிவில்லாது தொடரும். ஆனால் உண்மையில் பதில் என்பது ஒன்றே ஒன்றுதான்.
அந்த பதில் எல்லா கேள்விகளையும் கரைத்துவிடும்.

 கேள்விகளின் சித்திரவதை இருந்து கொண்டேதான் இருக்கும். மனதில் பதில்கள் இருக்கும்வரை புதிய கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். மன வேர் இருக்கும்வரை கேள்விகள் கிளைத்து, புதிய தளிர்கள் அரும்பிக் கொண்டேதான் இருக்கும்.

மனதின் பிணைப்பை அறுக்கும்போது, அதன் வேர்களை வெட்டுகிறாய்.
மனதோடு ஆன அடையாளங்களை விட்டு ஒதுக்கும்போது, எதனோடும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பரிசுத்தமாக, ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டு, கவனித்துக்கொண்டு இருக்கும்போது எல்லோரிடத்திலும் கேள்விகள் கரைந்து போகின்றன.

இப்போது மிஞ்சி இருப்பது ஒரே ஒரு பதில்தான். அதுவே ஆழ்ந்த நிர்ச்சலனம்.

ஒருவேளை  கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் தெரிவது போல் நினைக்கிறாயா ? அது ஒரு பிரமை. இந்த மனம் பிரமைகளைத் தோற்றுவிப்பதில் வெகு சமர்த்து. இந்த மனம் பசப்பக் கூடியது. அறிவு என்ற பெயரில் உன்னை ஏமாற்றிவிடும். எல்லாவற்றிலும் உன்னை ஏமாற்றக் கூடியது.  ஏற்கனவே ஞானியாகி விட்டாய். புத்தனாகிவிட்டாய் என்று கூட உன்னை நம்ப வைத்து ஏமாற்றி விடும். எச்சரிக்கையாக இரு.

மனதைக் கூர்ந்து கவனி. அப்படி கவனிப்பதில் கேள்விகள் மறைந்து போகின்றன. அவ்வளவே. பதில்கள் கிடைத்துவிடுகின்றன என்று நான் சொல்லவில்லை.

பதில்கள் என்ற தகவல்களை நூல்கள், பல்கலைக்கழகம், ( இணையம் ) என எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். விபரம் தெரிந்தவராக ஆகிவிடலாம். ஆனால் என் பணியோ '' நீ கற்றுக்கொண்டதை விட்டுவிட வைப்பதுதான்” இப்போது உன்னிடம் பதில்கள் இருப்பது இல்லை. இயல்பாகச் செயல்படுகிறாய். ஏற்கனவே இருக்கின்ற முடிவுகளைச் சார்ந்தோ, கடந்த காலம் சார்ந்தோ இல்லாமல் இயல்பாய் நீரூற்று கிளம்புவது போல் உன் செயல்கள் அமைகின்றன.



ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா


Sunday, June 25, 2017

கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்..

சுமார் 20 வருடங்களுக்கு முந்தய மனநிலையை நினைவுக்கு கொண்டு வந்து பார்க்கிறேன். பள்ளிப்பருவம் முடிந்து  பணிக்குச் சென்று கொண்டிருந்த காலகட்டம்.  கல்வி கற்ற அந்த நாட்களில் நான் அனுபவித்த உலகம் வேறு.. வேலைக்குச் சென்ற போது கண்ட உலகம் வேறு.. விதமான விதமான மனிதர்கள்., உணர்வுகள்.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வருமானம் இருந்தாலும், மனதில் உலகம் பற்றிய புரிதல் தேவையும், நான் எப்படி இயங்க வேண்டும் என்ற அறியும் வேட்கையும் மனதிற்கு ஒரு நிறைவின்மையைக்  கொடுத்துக்கொண்டே இருந்தது. கேள்விகள் நிறைய மனதில் எழுந்து கொண்டே இருக்கும்..

இந்த சூழலில் வேதாத்திரி மகானின் பாதை கிட்டியது. அப்போதய மனநிலையில் வேதாத்திரி அவர்களின் உரைத் தொகுப்புகளை நேரில் கேட்டபோது பல்வேறு தெளிவுகள் கிடைத்தன. அவரது சிறப்பே கேள்வி ஏதும் எழாதவாறு மிகத் தெளிவாக,தொடர்பு அறுந்து போகாமல் உரையாற்றுவதுதான்..

ஆழியாரில் ஒரு சிறப்புப் பயிற்சியில் அன்பர் ஒருவர் எழுந்து,  கேள்வி கேட்கிறார்.. அந்தக் கேள்வி, பிறரது பார்வையில்  ‘மகானிடம் இதையெல்லாமா கேட்பார்கள் ?  இது கூடத் தெரியலையா ‘ என்கிற பாணியில் அமைந்திருந்தது.. கூடியிருந்த கூட்டத்தில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. கேள்வி கேட்டவருக்கோ கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது போலும். முக வாட்டம் தெரிந்தது.

ஒரு நிமிடம் அமைதி.. வேதாத்திரி மெளனம் கலைத்தார்..

எந்தக் கேள்வியிலும் தவறு என்பதே இருக்கவே முடியாது. ..
பதிலில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்..

கேள்வி கேட்டவரின் அறிவு நிலைக்கு ஏற்ப, வாழ்க்கைச்  சூழலுக்கு ஏற்ப  பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்துடன் கேள்வி கேட்கின்றார். அதை ஏற்று அவருக்குப் பொருத்தமான பதிலைக் கூற வேண்டும்.பதில் சொல்பவருக்கே பொறுப்பு அதிகம். பதில் சொல்வதில், சொல்பவரின் அறிவாற்றல் திறம், பண்பு வெளிப்பட்டுவிடும். அதனால் அக்கறையுடன், கவனத்துடன் பதில் சொல்ல வேண்டும்’ என்று பதில் சொன்னார்.

கேள்வியினை எப்படி எதிர்கொள்வது ? கேட்டவரின் மீது கிண்டலை, ஆணவத்தை  வீசாது கருணையோடு எந்தவிதமாக பதில் சொல்ல வேண்டும்?. இருவருக்கு இடையே ஆன உரையாடலில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்த்தல் அனைவருக்கும் அங்கே தரப்பட்டது.

சரி இதை நான் இங்கே ஏன் குறிப்பிட வேண்டும். ?

உறவுகள், நட்புகள், தொழில்ரீதியாக தொடர்புடையோர் என சமூகத்தில் புழங்கும்போது மனதில்  எழும் பல கேள்விகளுக்கு பதில் நிச்சயம் தேவை. கூடவே நாம் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் ? இந்த பதில்கள் நமக்கு எப்படிச் சொல்லப் பட்டிருக்கவேண்டும் ?  என்ற சூழலுக்குச் சாட்சியாக ..
இருதரப்புக்கு இடையே உரையாடல் கலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சாட்சியாக இந்தச் சம்பவம் இருந்தது.

அப்போதய மனநிலைக்கு இந்த பதில்களே நிறைவானதாக இருந்தது. மன அமைதியும் , செயல்களில் கிடைத்த விளைவுகளும் நிறைவாகவே இருந்தது. 100 சதவீதம் சரியாகவே இருந்தது..மற்றொருவரிடம் உரையாட மகானின் இந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது..

காலச் சக்கரம் சுழன்றது..  எது பொருத்தமாகவும், தெளிவைத் தருவதாகவும் இருந்ததோ அது எனக்குத் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. மாற்றம் என்னிடத்தில்...

முரண்பாடாகத் தெரிகின்றதா ? ஏன் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.



Thursday, June 15, 2017

கவனி.. கவனி.. கவனி - ஓஷோ

கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்

கவனித்திருப்பது.

கவனி.   உன் மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனி.  உன்
ஒவ்வொரு  செயலையும், ஒவ்வொரு அசைவையும்  தொடர்ந்து கவனித்துப் பார்.

நடக்கும்போதும், பேசும் போதும், உணவு உண்ணும் போதும், குளிக்கும் போதும், உன் ஒவ்வொரு அசைவையும் கவனி. அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இரு.

Wednesday, June 14, 2017

குருவை உணரும் வழி - ஓஷோ

அன்புக்குரிய போதிச் சத்துவர்களே.. என்று உங்களை நான் அழைக்கும்போது, என்னுடைய அறிவு நிலையில் நின்று பேசவில்லை. 

என் உயிரினை உங்களின் உயிருக்குள் கொட்டுகின்றேன்.

இது சக்திகளின் சங்கமம். ஆன்மாக்களின் சந்திப்பு. அதனால்தான் என்னோடு நீங்கள் இருக்கும்போது நான் பேசுவது சத்தியம் ஆகத் தெரிகின்றது. உங்களால் முழுமையாக நம்ப முடிகின்றது.

Tuesday, June 13, 2017

தூசு படியாத கண்ணாடி - ஓஷோ

மனம் என்பது ஆசைகளின் தொகுப்பு. இந்த ஆசைகள் எல்லாம் நினைவகத்தைச் சார்ந்தவை. நினைவகம் என்றபோதே கடந்தகாலம்தான்.

ஆனால் நெஞ்சம் இந்தக் கணத்தில் வாழ்கிறது.அதன் துடிப்பு இந்தக் கணத்துக்கானது. இதனாலேயே பரிசுத்தமானதாகிறது.

மனமோ நெஞ்சுக்கு நேர் எதிர்., மனம் எப்போதுமே இங்கே இப்போதயதில் இருப்பதில்லை. கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களை அசைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.  அல்லது அத்தகைய அனுபவங்களை எதிர்காலத்தில், எதிர்நோக்கிக் கற்பனையில் திளைக்கின்றது.
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டு நிகழ்காலத்தில் கால் ஊன்றுவதில்லை. நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
இப்போது பிரச்சினையாக இருப்பதே அறிவார்ந்த மனம்தான்..

நீ உன் இதயத்திலிருந்து, மூளைக்குள் குடி புகுந்து விட்டாய். பகலில் எண்ணங்கள், இரவில் கனவுகள் என வாழ்க்கை கழிந்து கொண்டே இருக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும் ?

வேதங்கள், உபநிடதங்களில் அழகிய வார்த்தை அலங்காரங்களைக் காணும்போது கவனமாக இரு. தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கவனி. வார்த்தைகளில் தொக்கி நிற்கும் செய்தியை மட்டும் பார். ஆனால் நுண்மையான தர்க்கத்தில் உன் நேரத்தை வீணடிக்காதே. வார்த்தைகளில் அதீத கவனத்தை செலுத்தி அர்த்தம் தேடிக்கொண்டு இருக்காதே.

மெளனம் கைக்கொள். நெஞ்சகத்தை நோக்கு., இயல்பைக் கைக்கொள், உன்னோடயே இயைந்து பிரவாகி. இதுவே நீ சுதந்திரம் அடைய வழி 

இயல்பு என்பது என்ன ? பிரக்ஞையே உன் இயல்பு.

மனதின் சலனநிலையை, எண்ணங்களின் வயப்பட்டு பின் செல்லுதலை, வெளியே போவது என்று குறிக்கின்றோம். எண்ணங்களுக்கு அகப்படாமல் இருப்பது என்பதே உள்ளே போவது.. எண்ணமும் ஆசையுமே சேர்ந்ததே மனம்., இதுவே வெளியே போகும் யாத்திரைக்கு எரிபொருள். இங்கே ஆசை என்பது மனம் எதிர்காலத்தில் சிக்கிக் கொண்டு இருப்பதையே குறிக்கும் என்பதையும் அறிக.

மனம் வெளியே போகமல் இருந்துவிடுவதே.....   உள்ளே இருப்பது

மனம் வெளியே போகாமல் எப்படி நிறுத்தி வைப்பது ? எண்ணங்களை அலட்சியப்படுத்திவிடு. அவைகள் பற்றி கவலைப் படவேண்டாம்
அவை இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாதே. அவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதே. இருக்கட்டும் விடு. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு மெளனமாக இருந்துவிடு. கவனிப்பது என்பது கண்காணிப்பதல்ல.. விழிப்போடு இருத்தல், சாட்சியாக இருத்தல்.

மனம் உள்ளே போக என்ன வழி ? உன்னுடைய எண்ணங்களை  உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இரு.  உன் எண்ணங்களும் நீயும் வேறு வேறு என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி விட்டேற்றியாக உன் எண்ணங்களை கவனித்துப்பார். இவை தவறு, இவை சரி என்றும் தீர்மானங்களின் பாற்பட்டு எண்ணங்களைப் பார்க்காதே..  அவை பற்றி எந்தக் கருத்தும் எழுப்பாதே.

எண்ணங்களின் ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிரு.

எண்ணங்களின் போக்குவரத்து நகர்வதற்கு நீ சக்தியைக் கொடுக்கும் வரைக்கும் அது நகர்ந்து கொண்டுதான் இருக்கும். உன்னுடைய சக்திதான் அதற்கு ஆதாரம்.. அந்த சக்தியை நிறுத்தினால் எண்ணப் போக்குவரத்து நின்றுவிடும்.. அப்படி உன்னை அறியாமல் வழங்கும் சக்தியை தடுப்பதுதான் கவனித்தல் என்ற செயல். கண்ணாடியைப் போல் மனம் எதையும் வெறுமனே பிரதிபலிக்க வேண்டும்.  மாறாக உருமாற்றம் செய்யக்கூடாது.

வெளிச்சத்தை பார்க்கும் குழந்தை இது சூரியன், இல்லை மின்சார விளக்கு, இல்லை வாகன விளக்கு, என்று சொல்லிக்கொள்ளுமா ? எல்லாவற்றையும் பார்த்தாலும் எதைப் பற்றியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாது.  இதுதான் பிரதிபலிப்பது என்பது ஆகும்.

எண்ணங்கள் என்பவை தூசுத் துகள்கள்..
தூசு படியாத கண்ணாடியாக இருங்கள்.

ஓஷோ
தம்மபதம் I






Saturday, June 10, 2017

அந்த உணர்வு உங்களைப் பற்றிக்கொள்ள.. ஓஷோ

அந்த உணர்வு உங்களைப் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள். அப்போது அது என்னவென்று புரிந்துவிடும். ஆனால் அதற்கு மாறாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். அதை நீங்கள் ‘பற்றிக்’ கொள்ளவே முயல்கிறீர்கள். மனம் அப்படித்தான் விரும்புகிறது. இதைத்தான் மனம் ‘புரிந்து கொள்ளுதல்’ என்று உங்களுக்குச் சொல்கிறது. எதையாவது ஒன்றைப் பற்றாத வரை மனம் நிறைவடைவதே இல்லை.

எதுவும் செய்யாமல் , சாதரண மெளனத்துடன் உடலளவிலோ, உணர்வுபூர்வமாகவோ, அறிவுபூர்வமாகவோ எதுவும் செய்யாமல் , சும்மா அப்படியே முழு அமைதியுடன் இருக்க முடிகிறதா ? முடிந்தால் அது உங்களைப் பிடித்துக் கொள்ளும்.  அதை அறிவதற்கான ஒரே வழி, அது உங்களைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பது மட்டுமே.

பறவைகளின் பாடல் கேட்கும்போது, காற்று மரங்களிடையே வீசும்போது, நீரோடையில் தண்ணீர் சலசலத்து ஓடும்போது உங்களை அந்த உணர்வு பற்றிக் கொள்ள அனுமதித்தால் போதும், சட்டென எங்கிருந்தோ உண்மை வெளியாகிவிடும். உங்களுக்குள் தம்மம் தோன்றிவிடும்.

வைகறை விண்மீன் மறைவதைப் பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போதுதான் புத்தர் ஞானம் பெற்றார்.
புத்தருக்கு ஞானம் கிட்டியது மரத்தடியில்...
மகாவீரருக்கு ஞானம் கிட்டியது வனத்தில் சும்மா உட்கார்ந்திருந்த போது...
முகம்மதுவிற்கு ஞானம் பிறந்தது மலையொன்றின் உச்சியில்...

அதிகாலையில் எழுந்துபோய் உதிக்கும் சூரியனைப் பார். நடு இரவில் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைப் பார்.. நிலவினைப் பார். மரங்களையும் பாறைகளையும்  நண்பனாக்கிக் கொள். ஆற்றருகே அமர்ந்து அதன் கலகலப்பைக் கேள்.  அப்படிச் செய்யும்போது இயற்கை உன்னைத் தன் வசப்படுத்த விடு. இயற்கையை மனதால் உன் உரிமையாக்க நினைக்காதே.  உன்னை அதன் வசப்பட அனுமதித்துவிடு.

அது உன்னை வசப்படுத்தட்டும்.  விடு... அதை ஆடி அனுபவி..  பாடி அனுபவி. அதனோடு இரண்டாகக் கலந்துவிடு.அதுதான் அதை அறிந்துகொள்ளும் ஒரே வழி.

ஓஷோ
தம்மபதம் I

பொழுதுபோக்கு - கடவுள் - ஓஷோ


பொழுது போக்கு

எத்தனை நாளைக்குத்தான் உணவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டு இருப்பது ?

யாருக்குமே அலுப்புத் தோன்றத்தான் செய்யும்.  அப்படி அன்றாட வேலையில் அலுப்புத் தோன்றும்போது மாற்றாக இரண்டு வழி உண்டு.

ஒன்று சும்மா இருப்பது... சும்மாயிருப்பது என்பது தன்னோடேயே மட்டும் இருப்பது. அவரவர் உள்ஆழத்தில் இருப்பதை எதிர்கொள்வது. ஆனால் சும்மா இருப்பது என்பது உன்னை பயப்பட வைக்கின்றது.  முடிவில்லாத, பயத்தை தரக்கூடிய, புரிந்து கொள்ள இயலாத, பரந்திருக்கும் மனதின் அளவே பெரியதொரு நடுக்கத்தை தரக்கூடியதாக அமைந்துவிடுகிறது.

மற்றொன்று... ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தில் இறங்கிவிடுவது.  அதற்குப் பொழுதுபோக்கு என்று பெயர் வைத்துவிடுவது. எல்லாப் பொழுதுகளும் உன்னிடமிருந்தே உன்னைத் தப்பித்திருக்கச் செய்யும் முயற்சிகள்தாம். பொழுதுபோக்கு என்பதே வேலையின் மற்றொரு பெயர்தான். உண்மையான வேலை உனக்கு இல்லாத நேரங்களில் பொழுது போக்கு என்ற போலி வேலையில் ஈடுபட்டு பொழுதைக் கழிக்கிறாய்.

ஞாயிற்றுக்கிழமைக்கு ஏங்குகிறாய்.. ஏதோ ஒன்றைச் செய்து நாளைக் கழிக்கிறாய். அதற்கு பொழுதுபோக்கு என்று பெயர் வைத்து விடுகிறாய். சம்பளமில்லாத வேலையின் பெயர்தான் பொழுதுபோக்கு.

உனக்கு ஓய்வெடுக்கத் தெரியாது. தளர்வாக இருக்கத் தெரியாது. இதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிப்பார். எப்போதெல்லாம் செய்வதற்கு ஒன்றுமில்லையோ, அப்போதெல்லாம் உன்னோடயே இருந்து பார்.



                                                  ********************



கடவுள் ஒரு முழுமை. முழுவதும் அவரே. இருப்பவரும் அவரே. நாம் அவருடைய பகுதிகள். பகுதிகள் முழுமையைப் பார்த்து பயந்திருப்பது ஏன் ?
முழுமைக்குத் தன் பகுதிகளின் மீது அக்கறை இருக்கின்றது.. பகுதிகள் இல்லாமல் முழுமை இருக்க முடியாது அல்லவா ?
அதனால்தான் முழுமை தன் பகுதிகளை அலட்சியப்படுத்த முடியாது.

இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமையின்மீது விசுவாசம் பிறக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ளும்போது முழுமை தன்னை வசப்படுத்தி வைத்துக் கொள்ள, தன்னை ஒப்புக் கொடுக்கிறான். பயங்களை விட்டுத் தொலைக்கிறான். சரண் அடைகிறான். முழுமை இருப்பது சரணாகதியில், விசுவாசத்தில்...

ஓஷோ
தம்மபதம் I
                                                             



Friday, June 9, 2017

பிரார்த்தனை - தியானம் - ஓஷோ

பெளத்தம் பற்றி ஓஷோ குறிப்பிடும்பொழுது..

கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து பெளத்தம் வேறானது.
இம்மூன்று சமயங்களும் ஏதோ ஒரு வகையில் உரையாடலை பற்றிக் கொண்டிருந்தன. உரையாடல் என்று வந்தாலே இருமையை, துவைதத்தை வலியுறுத்தல்தான்… 

பிரார்த்தனை என்றவுடன் உன்னிலும் வேறாக கடவுள் ஒருவர் இருக்கின்றார். நீ அவருடன் பேசுகிறாய் என்று பொருளாகி விடுகிறது. அந்த உரையாடல் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கு நிலவுவது பிரிவினைதான். பிளவுதான். பிரார்த்தனை என்பதே இன்னொருவரிடத்தில் முறையிடுவது.. உண்மையோ உண்மையில்லையோ யாரிடமாவது முறையிடுவதுதான்.

ஆனால் பெளத்தமோ தியான மதம். மெளனமே இதன் வழி.  தியானத்தில் முறையீடே கிடையாது, ஒருவர் மெளனத்தில் வீழ்ந்துவிடுவது.. ஒன்றுமில்லாமல் அப்படியே காணமல் போய்விடுவது. ஒருவர் இல்லாமல் போய்விடும்போது எஞ்சி நிற்பது தியானம் மட்டுமே.

                                *********************

புத்தர் தியானத்தை மட்டுமே வலியுறுத்துகிறார். அது கடவுள்தன்மையின் ஒரு பக்கம் மட்டுமே. 

முகம்மது நபி தொழுகை, இசை, பாடல் இவற்றினை வலியுறுத்தினார். குரானைப்போல் வேறு எந்த வேதநூலிலும் அந்த அளவு இசையைக் காணமுடியாது.

உலகில் மூன்று வகையான சமயங்கள் மட்டுமே உண்டு. 

இஸ்லாம், இந்து, கிறிஸ்துவம், யூதம், இவை இசைச் சமயங்கள். 

இரண்டாவதாக பெளத்தம், தாவோயிசம் போன்றவை தியான சமயங்கள். 

சமணமோ கணிதச் சமயம். மகாவீரர் சார்புடைமைக் கோட்பாடு பற்றிப் பேசிய முதல் மனிதர். அதன்பின் இருபத்தி ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் ஐன்ஸ்டீனால் அறிவியல் பூர்வமாக அதை நிரூபிக்க முடிந்தது.

இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்த முழுமையானதொரு சமயத்தையே நான் (ஓஷோ ) வழங்க  முயல்கிறேன்.

ஓஷோ
தம்மபதம் I

Tuesday, January 31, 2017

சிறுபுல்லும் பிரபஞ்சமும் -- ஓஷோ

'தம்ம' என்ற சொல் பல பொருள் தரும். இயற்கைச் சட்டம் அல்லது விதி என்ற ஒரு பொருளும் உண்டு. விதி என்பது  பிரபஞ்சத்தையே ஒன்றிணைத்து வைத்திருக்கும் மேலான விதி.. கண்ணுக்குப் புலப்படாத விதி., புதிரான விதி., ஆனால் சர்வ நிச்சயமாய் இருக்கும் விதி.

இல்லாவிட்டால் பிரபஞ்சம் சிதறுண்டு போகும். எல்லையற்ற, விசாலமான பிரபஞ்சம் எவ்வளவு இணக்கமாக, அமைதியாக, ஆற்றலுடன் ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உணருங்கள். எல்லாவற்றையும், எல்லாவற்றோடும் இணைக்கும் ஆதார சக்திப் பிரவாகம் ஒன்று இருக்கின்றது என்பதற்கு, இந்த ஒத்திசைவான இயக்கமே சான்று.

எல்லாவற்றையும் இணைக்கும் பாலமாக அமைந்திருப்பது அந்தச் சக்திப் பிரவாகம். நாம் தீவுகள் அல்ல. ஒரு சிறு புல்லின் இலையும் மாபெரும் நட்சத்திரத்தோடு பந்தப்பட்டிருக்கின்றது. ஒரு சிறு புல்லின் இலையைச் சிதைத்தாலும் மதிப்புமிக்க பிரபஞ்சப் பகுதி ஒன்றைச் சிதைத்ததாகவே ஆகிவிடும்.


*********************************************************************************
சொற்கள் சக்தியற்றவை. பகுதி உண்மையைத்தான் சொற்கள் உணர்த்தும். முழுமையாக உணர்த்த வல்லது மெளனமே.
அர்த்தம் என்னுடனேயே தங்கிவிட சொல் மட்டுமே உங்களை அடைகிறது. அந்தச் சொல்லுக்கு உங்கள் அர்த்தத்தையே நீங்கள் தருகிறீர்கள்.அதில் உங்கள் அர்த்தமே இருக்கும். என் அர்த்தம் இருக்காது

வார்த்தைகளை புரிந்து கொள்வது மிகச் சிரமம்.
அதைவிட உங்களுக்கு புரியவில்லை எனப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். இந்த இரண்டுமே ஏறத்தாழ சாத்தியமில்லை. அதனால் இருக்கும் ஒரே சாத்தியக்கூறு தவறாகப் புரிந்து கொள்வதுதான்.


********************************************************************************************************************************** 

காலம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு.  இருப்பதென்னவோ எப்பொழுதும் இப்பொழுதுதான். இயற்கைக்கு இறந்தகாலமும் தெரியாது. எதிர்காலமும் தெரியாது. இயற்கை அறிந்ததெல்லாம் நிகழ்காலம் மட்டுமே.

ஓஷோ
தம்மபதம் 1
கண்ணதாசன் பதிப்பகம்

Thursday, December 15, 2016

தம்மத்தில் அன்பும் வெறுப்பும் -- ஓஷோ


வெறுப்பு என்பது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இருப்பது. நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது. இறந்தகால, எதிர்காலத் தொடர்பில்லாமல் வெறுப்புக் காட்டவே முடியாது.

நேற்று யாராவது உங்களை அவமானப்படுத்தி இருப்பார்கள். அதை ஒரு மனக்காயமாக,  தலைவலியாக நீங்கள் சுமந்து கொண்டு இருக்கலாம். அல்லது நாளை யாராவது  உங்களை அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமோ, அதன் நிழலோ இருக்கலாம்.

இப்படிப்பட்ட வெறுப்பு,  வெறுப்பையே உருவாக்கும்.  வெறுப்பையே கிளறிவிடும். ஒருவரை நீங்கள் வெறுக்கும்போது அவர் மனதில் உங்களுக்கு எதிரான வெறுப்பையும் உருவாக்கி விடுகிறீர்கள்.

ஆனால் அன்புக்கு இறந்தகாலமும் கிடையாது எதிர்காலமும் இல்லை. அன்பு காரணமில்லாமல் நிகழ்வது. அது உங்கள் பரவசத்தின் வெளிப்பாடு. பரவசமோ விழிப்பின் துணைத் தயாரிப்பு. விழிப்புணர்வு ஏற்பட்டதும் ஆனந்த பரவசம் தானாக வந்துவிடும்.

நமது அன்பு வேறு... உண்மை அன்பு வேறு.

நமது அன்பு வெறுப்பின் மறுபக்கமே தவிர வேறில்லை. அதனால் நம் அன்பிற்கு ஒரு பின்னணி இருக்கும். யாராவது உங்களிடம் நேற்று இனிமையாக நடந்து கொண்டிருந்திருப்பார்கள். அதனால் உங்களுக்கு அவர்மீது அன்பு தோன்றி இருக்கும். அது அன்பே அன்று.. வெறுப்பின் மறுபக்கம்தான்.

அதனால்தான் எந்தக்கணத்திலும் அன்பு வெறுப்பாக மாறிவிடக்கூடியதாக இருக்கின்றது. மாறுவேடம் பூண்ட வெறுப்புதான் உங்கள் அன்பு.

உண்மையான அன்பிற்குப் பின்னணி தேவை இல்லை. உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதைப் பொழிவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமும் தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.

நான் குறிப்பிடும் அன்பு அப்படிப்பட்ட அன்பு. இதற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால் அதுவே சுவர்க்கம். அன்பே ஒளி. உங்கள் இருப்பின் ஒளி.

அன்பு மட்டுமே வெறுப்பை விரட்டும். ஒளி மட்டுமே இருளை விரட்டும். இதுவே நிரந்தரவிதி. புத்தர் இதையே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்
               “ஏஸ் தம்மோ ஸனந்தனோ..”

ஓஷோ
தம்மபதம் 1

Wednesday, October 26, 2016

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே

தொழில்ல செண்டிமென்ட் கலக்காதே என்பது வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று.

 வேலை வாங்கும்போது வேலையை வாங்கு.. 
ஒருவேளை வேலையாட்களின் குடும்ப சூழல் சரியில்லைன்னா தனிப்பட்ட உதவியாக எவ்வளவு வேணும்னாலும் பண உதவி செய்யலாம்.  உடல்நிலை சரியில்லை எனில் லீவு கொடுத்து போதுமான பண உதவியும் செய்யலாம்.. 

ஆனால் அட்ஜஸ்ட் பண்ணி வேலை செய்யச் சொல்லி அவர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி, வேலை நடக்கும் சங்கிலித் தொடரையும் சிக்கலுக்கு உள்ளாக்கக் கூடாது.


 நான் பார்த்தவரை நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கிற பெண்மணி, இயல்பிலேயே மெதுவாக வேலை செய்து பழகி இப்படி இயங்குகிறார் என்பதைவிட…   உடல்நிலை பாதிக்கப்பட்டு இனி இதற்குமேல் தேற மாட்டார் என்ற நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன். நார்மலான மன/உடல் இயக்கம் இல்லை என்பது சந்தேகமில்லாமல் தெரிகிறது.

இவர்மீதான பரிதாபம் பார்த்தவுடன் யாருக்கும் எழுவது இயற்கை.. 

ஆனால் சூழல் சரியில்லை… இவர் ஒரு சுயதொழில் பார்ப்பவராக இருப்பின் இந்த உடல்நிலையில் இந்த அளவுக்கு இயங்குகிறார் எனப் பாராட்டாக சொல்லி இருப்போம். ஆனால் இவர் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிவதுதான் சிக்கல்.. 

குறிப்பாக தினசரி வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பு கொள்ளும் கேஷ் கவுண்டரில் பணி புரியும்போது இப்பெண்மணியின் வேகமின்மை சூழலை கடுமையாக்குகிறது.. காத்திருப்பவர்களின் நேர விரயம். ஒருவர் செய்ய வேண்டிய பணிச்சுமை நாசூக்காக இன்னொருவர் மீது சுமத்தப்படுகிறது. 
பொதுத்துறை நிறுவனம் என்பதால் நட்டம் யாருக்கோ 

வீடியோ எடுத்தது குற்றம்தான்.. அதில் சந்தேகம் இல்லை..

 அதற்காக வங்கி, மற்றும் வங்கி பணியாளர் மீது குற்றமே இல்லை என்கிற தொனியில் விமர்சனங்களைப் பார்க்கும்போது வருத்தமே மிஞ்சுகிறது,

இரண்டுநிமிடம் வீடியோ எடுத்ததை எந்த வங்கிப்பணியாளரும் கவனிக்கவில்லை. ஒருவேளை ஏதேனும் கொள்ளை, களவு முயற்சி நடந்திருப்பின் என்னாகும் ? வங்கிப்பாதுகாப்பு கேள்விக்குறி.

அதுமட்டுமில்லாமல் மந்தநிலையில் இயங்குகிற இந்த பணியாளரை உள்வேலைக்கு மாற்றி விட்டு, அதிக வாடிக்கையாளரை விரைவில் கையாளும் வண்ணம் வங்கி நிர்வாகம் செயல்பட்டிருக்கலாம். இது அக்கறையின்மை , அலட்சியம் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 

உடல்நிலை பாதிக்கப்பட்டதாலோ, நடுத்தர வயதை தாண்டிவிட்டதாலோ, சம்பளத்தை குறைத்தால் ஒத்துக்கொள்வார்களா என்ன ? முழுச்சம்பளம் வாங்குபவர்களிடம் முழு வேலைத்திறனை எதிர்ப்பார்ப்பதில் தவறேதுமில்லை.. இதில் என்ன முரண் என்றால் வங்கி மேலாளர் எதிர்பார்க்க வேண்டியதை வாடிக்கையாளர் எதிர்பார்க்கவேண்டியதாகிறது.

BSNL, SBI போன்ற நிறுவனங்களில் உள்ள சிக்கலே இதுதான்.. நவீன உலகத்தின் வேகத்திற்கேற்ப இணைந்து இயங்க மறுப்பதுதான்.. முடியும் என்பது வேறு.


Sunday, October 23, 2016

எளிய சமையல் நுணுக்கங்கள்


தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கு தேவையான டிப்ஸ்களை வழங்கும், சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி:

பூந்திக்கு மாவு பிசையும் போது, கடலை மாவுடன் சிறிது அரிசி மாவும் கலந்து பிசைந்தால், பூந்தி உப்பி வரும்.

சிறுதானியங்களில் பலகாரம் செய்யும் போது, சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், மிருதுவாக இருக்கும்.

சர்க்கரைப் பாகு செய்யும் போது, பாகுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்தால், எவ்வளவு நேரம் ஆனாலும் கெட்டிப்படாது.

குலாப் ஜாமூன் பார்க்கும் போதே கடினமாகத் தெரிந்தால், ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து, லேசாக சூடு செய்து, அதில் ஜாமூனை ஊற வைத்தால் மிருதுவாகி விடும்.

ரசகுல்லா செய்யும் போது, முதலில் பாலை திரித்து பனீர் எடுப்போம். அந்த பனீரை மூன்று முறையாவது தண்ணீரில் கழுவுவது அவசியம். இல்லையெனில், ரசகுல்லாவின் சுவை, ஒரே நாளில் மாறிவிடும்.

அல்வா செய்யும் போது, அல்வா பதம் தண்ணீராக இருப்பது போல் இருந்தால், சிறிது சோள மாவு சேர்த்துக் கிளறினால், அல்வா கெட்டிப்படும்.

பயத்தம் லட்டு, ரவா லட்டு மற்றும் உளுந்து லட்டு செய்வதற்கு முன், பயத்தம்பருப்பு, ரவை, உளுந்து போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பிறகு அரைத்து லட்டு செய்தால் வாசனையாக இருக்கும்.

சீடை உருட்டிய பிறகு, அதன் மேற்புறத்தில், ஊசியால் ஆங்காங்கே சிறிய துளையிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சீடை வெடிக்காது.

முறுக்கு செய்யும் போது, நீங்கள் எடுக்கும் அளவில், கால் பகுதிகளாக பிரித்து வையுங்கள். முதல் கால் பகுதியை, மாவாக பிசைந்து முறுக்கு சுட்ட பிறகு, மற்றவற்றை எடுங்கள். ஒட்டுமொத்த மாவையும் பிசைந்து முறுக்கு சுட்டெடுத்தால், மாவு காய்ந்து அதிக எண்ணெய் குடிக்கும்.எண்ணெய் பலகாரங்கள் செய்யும் போது,

எண்ணெயில் கோலிக்குண்டு அளவு புளியைச் சேர்க்க வேண்டும். பிறகு, பலகாரங்கள் பொரித்தெடுத்தால், அதிக எண்ணெய் குடிக்காது; எண்ணெயும் பொங்கி வழியாது.

நன்றி தினமலர்  23.10.2016

Monday, May 30, 2016

கிரிவலமும் நாய்க்குட்டியும்

சித்ரா பெளர்ணமி அன்று சென்னிமலை கிரிவலம் குடும்பத்தோடு செல்லும் வாய்ப்பு அமைந்தது.  சுமார் 14 கி.மீ.. கிரிவலம் ஆரம்பித்த இரண்டாவது கி.மீல் சிறுகுன்று, அகலமான ரோடு,  நாங்கள் நடந்து செல்கையில் எங்களுக்கு எதிர் திசையில் மேடான பகுதியில் ஒரு வயதான தம்பதியினர் சைக்கிளில் சிலிண்டர் வைத்து ஓட்ட வலுவில்லாமல், தள்ளிகொண்டு சென்று கொண்டு இருந்தனர். குட்டி நாய் ஒன்று சற்றே தளர்ந்த நடையில் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.. கூட வந்த மகள்களிடம் ”அங்கே பாருங்க ..அவர்கள் வளர்த்தும் நாய்க்குட்டி போல இருக்கிறது; எவ்வளவு அக்கறையாக பின் தொடர்கிறது பாருங்கள்.  குட்டியாய் இருந்தாலும் பாசம் பாருங்கள்..” என்று சொல்லிக்கொண்டே நடக்கிறேன்... நாய்க்குட்டியின் அழகு ஈர்த்தது. என் மகள்கள் நாய்க்குட்டி கண்ணில் இருந்து மறையும் வரை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தனர்..

அந்த இடத்தில்  ஒரே சமயத்தில் நான்கு வண்டிகள் வரும் அளவு ரோடு அகலம்… தொடர் போக்குவரத்தும் இருந்தது. பேசிக்கொண்டே நடக்கிறோம்.. 5 நிமிடம் நகர்ந்திருக்கும்.  காலுக்குள் ஏதோ புகுவது போன்ற உணர்வு குனிந்து பார்க்க அதே நாய்க்குட்டி..எங்களுக்கோ அதிர்ச்சி.. எங்களைத் தாண்டி செல்லும் எண்ணம் நாய்க்குட்டிக்கு இல்லை என்பது சட்டென புரிந்தது.. அது மட்டுமில்லை. இந்த நாய்க்குட்டி வளர்ப்பு நாய் அல்ல.. ஏதாவது உணவு கிடைக்குமா என்று அந்த வயதான தம்பதியினர் பின்னால் சுமார் ஒருகிமீக்கும் மேலாக தொடர்ந்து ஓடி வந்த  தெரு நாய்க்குட்டி.

இப்போது எங்கள் பின்னால்.. கையில் எடுத்து மார்போடு அணைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம்  மகள்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்கள், நாயைக்கண்டாலே எகிறிக்குதித்து ஓடும் அவர்களுக்கு மிகக் கிட்டத்தில் ஒரு நாய்க்குட்டி..தொட்டு இரசித்துக்கொண்டே “ எப்படி நாய்க்குட்டி நம்மைத் தேடிவந்து, கண்டுபிடித்து நம்முடனே வருகிறது “ என்ற கேள்வியும் எழுந்தது..  அதைப்பற்றி நாம் கொஞ்சம் முன்னாடி பேசிக்கொண்டும் சென்றோமல்லவா? அந்த ஃபிரீக்வன்சிதான் அதை  இழுத்திருக்கின்றது.. நம்மிடம் வந்துவிட்டது என்றேன்... ஆனால் 4 வழிப்பாதைக்கு சமமான ரோட்டில் அடிபடாமல் தாண்டிவந்து சுமார் 200 பேருக்கும் மேல் தாண்டி நம்மிடம் வந்து சேர்ந்தது. தற்செயல் என்றால் தற்செயல்தான்.. மற்றவர்களுக்கு களைப்படைந்த அந்த நாய்க்குட்டியை எடுத்து ஆதரிக்கத் தோன்றவில்லை..நமக்கு தோன்றுகிறது…அதனால் நம்மிடம் வந்து சேர்கிறது..இப்படி சரியான இடத்துக்கு வந்து சேர்வது என்பதுதான் இயற்கை விதி..


இப்படி பேசிக்கொண்டே நடந்ததில் அருகில் இருந்த சிற்றூர் வந்துவிட்டது.. கடையில்  பிஸ்கட் பாக்கெட் வாங்கி,  அதற்கு கையில் வைத்துக்கொண்டே,  இன்னொரு கையில் உடைத்து வைக்க ஆவலுடன் உண்டது. பிஸ்கட் வாங்க நிற்கையில்  அங்கே இருந்த கிராமத்து நாய்கள் இரண்டு இந்தக்குட்டியை பார்த்துவிட்டு உறுமத் தொடங்கின..  மறைத்தும் பலனில்லை.. அந்த எல்லையை விட்டு நகர்ந்தபின் அவைகள் அடங்கின.

பிஸ்கட் சாப்பிட்டு முடித்த பின்னும் இறக்கி விடவே இல்லை.. ஏதாவது இடத்தில் இறக்கிவிட்டு வேறு நாய்கள் இதை கடித்த விட வாய்ப்புகள் அதிகம். செல்லும் வழியில் நீர்மோர் வழங்கப்பட ., ஒரு டம்ளர் வாங்கி கையில் வைத்துக்கொண்டே மீண்டும் நடந்தோம். கிராமத்தை விட்டு விலகி ஓரிரு வீடுகள் அமைந்திருந்த இடத்தை அடைந்தபோது, நாய்க்குட்டியை இறக்கிவிட்டு நீர்மோரை டம்ளரோடு வைக்க.. அரைடம்ளருக்கு மேல் குடித்துவிட்டு உற்சாகமாய் உடலை குலுக்கியபடி ஓட ஆரம்பித்தது.

வீட்டுக்கு எடுத்துச்செல்ல மகள்கள் ஆவலாக இருந்தாலும் தொடர் பராமரிப்பில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து அங்கேயே விட்டு விட்டு கூட்டத்தில் கலந்தோம்.. அந்த நாய்க்குட்டி எங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.

FRACTION DEMANDS, TOTALITY SUPPLIES என்பது இயற்கை நியதி..
தேவை உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கை அதை எவ்வழியிலேனும் தந்தே தீரும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு அத்தாட்சி