"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 13, 2009

எதிர்மறைச் சிந்தனை

இன்றைய இளைஞர்கள் எதிர்மறையாகச் சிந்திக்கின்றார்கள்.

வாழ்க்கையைப் பற்றிய அவநம்பிக்கை வாதம் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக வளர்ந்து வருகிறது.

எதிர்மறைச் சிந்தனை நம்மை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச் சென்றுவிடும்.
எந்த ஒரு முயற்சியிலும் சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவற்றையும் மீறி நல்ல விசயங்களைப் பார்ப்பது என்பது நம்மைச் சுகமாக வைத்திருக்கின்ற ஒரு செய்தி.


எல்லாவற்றிலும் தேடிப்பிடித்தாவது குறையைச் சொல்வது என்பது நாளடைவில் நம் உடல்நலத்தைக் கூடப் பாதிக்கும்.காரணம், நம் மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த சம்பந்தம் இருக்கிறது.

மனம் சரியாக இல்லாவிட்டால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது.
மனதில் மகிழ்ச்சி இருந்தால், பசியைக்கூட மறந்துவிடுகிறோம்.


ஆனால், தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் உடலில் அதிக அமிலம் சுரக்கின்றது.முகத்தில் சுருக்கம், உடல் தளர்வு ஏற்படுகிறது. எனவே நாம் வாழ்க்கையை நம்பிக்கையோடு பார்க்க வேண்டும்.

இன்னொரு மனப்பான்மை இருக்கின்றது.

எதைப் பார்த்தாலும் இதை விடச் சிறந்தது ஏற்கனவே எனக்குத் தெரியும் என்று சொல்லிக் காட்டுகிற மனப்பான்மை.

அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கான ஒரு உபாயமாக இருக்கிறது.

ஆனால், நம்மிடம் எவ்வளவோ குறைபாடுகள் இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

பாரத பிரதமர் என்ன செய்ய வேண்டுமென்பதை ஒரு பள்ளி ஆசிரியர் (உதாரணத்திற்காகத்தான்) விலாவாரியாக சொல்கிறார்.ஆனால் அவர் பள்ளி ஆசிரியராக என்ன செய்ய வேண்டுமென்பதை மறந்துவிட்டுப் பாரத பிரதமருக்கு அறிவுரை கூறுகிறார் !

நிறையப் பேர் அடுத்தவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.ஆனால் அவர்கள் கடமைகளை மட்டும் செளகரியமாக மறந்து போகிறார்கள்.எங்கேயாவது ஏதாவது பிசகு நடந்தால்கூட, அதைப் பெரிது படுத்துகிறார்கள்.

பூதக் கண்ணாடியால் பூங்கொத்துகளைப் பார்க்கிறார்கள்.
எங்கே குற்றம் நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
யாரை வேண்டுமானாலும் எளிதில் குறை சொல்லலாம் என்று நினைக்கிறார்கள்.


வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.
கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.
இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன


இளைஞர்கள் அனைவரும் புன்னகையோடு உலகத்தைப் பார்த்தால் நிச்சயமாக அவர்கள்மீது பூக்கள் சொரியும்.

நன்றியுடன்:இறையன்பு எழுதிய - ஏழாவது அறிவு – நூலில் இருந்து

9 comments:

  1. நல்ல சிந்தனைகள்...
    இந்த உலகில் யார் யாரையோ மாற்றிவிடலாம் என்று போராடுகிறோம்...
    மாற்ற முடியவில்லையே என்று கூட அமர்ந்து வருந்துகிறோம்...

    இந்த உலகில் மாற்றக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது நாம் மட்டும் தான் என்பது ஏனோ நமககுப் புரியாமல்ப்போகிறது.

    ReplyDelete
  2. மற்றவர்களுக்கு நாம் சொல்வதை, நாம் பின்பற்றுகிறோமா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

    தங்களின் கருத்துக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. \\சந்ரு said...

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... நல்ல சிந்தனைகள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்....\\

    ஊக்கத்திற்கும், வருகைக்கும்
    நன்றியும் வாழ்த்துக்களும் சந்ரு.

    ReplyDelete
  5. **

    வாழ்க்கை என்பது நம்பிக்கை நிறைந்தது.
    கூட்டை விட்டுப் பறக்கிற பறவைகள்கூட நம்பிக்கையோடுதான் பறக்கின்றன.
    இன்று நாள் முழுவதும் நாம் சுகமாக இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன
    **

    superb.

    பேரு மாத்திட்டீங்க. பாப்பா போட்டோ பார்த்து தான் கண்டுபிடிச்சேன். ஏன் பெயர் மாற்றம் ?

    ReplyDelete
  6. நண்பர் மணிகண்டன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றியுடன் இதோ பெயர் காரணம்.


    \\1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

    பிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.

    கோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)\\

    ReplyDelete
  7. சிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...

    ReplyDelete
  8. \\பழமைபேசி said...

    சிரிப்பாவும் இருக்கு... சிந்திக்கும்படியாவும் இருக்கு...\\


    நான் அனுப்பிய லிங்கா, அல்லது பதிவா!!:)))

    ReplyDelete
  9. எதிர் மறைச் சிந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும் - உண்மை - புன்னகையோடு உலகத்தினைப் பார்ப்ப்போம் - பூக்கள் சொரியட்டும் நம்மேல்

    நல்வாழ்த்துகள் சிவா

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)