"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, April 30, 2009

ஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1

தெய்வத்தைப் பற்றிய கருத்து

தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்

தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்

தெய்வ மென்று கும்பிடுவோன் பக்தன், அந்தத்

தெய்வத்தையறிய முயல்வோனே யோகி,

தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம், அத்

தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்

தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே

தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன் காணீர்


--வேதாத்திரி மகரிஷி


டிஸ்கி
: மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஞானக்களஞ்சியம் என்ற பாடல் தொகுப்பு நூலில் இருந்து அவ்வப்போது சில (தேர்ந்தெடுக்கப்பட்ட) பாடல்கள் இத்தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்படும்.

டிஸ்கி குன்னூர் போகலாம் வர்றீங்களா?

Tuesday, April 28, 2009

பெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு !

”கடவுள் இல்லை, வேதங்களை கொளுத்து, விநாயகர் சிலைகளை உடை’... ”என்பது போன்ற முழக்கங்களை ஒருபுறம் எழுப்பினாலும் மறுபுறம், ஏதேனும் ஓர் உயர்ந்த ஒழுக்க நெறியையும் மக்களுக்குக் காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் தந்தை பெரியார் உள்ளத்தில் இருந்தது.

அதனால் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திராவிடர் கழக மாநாடு நடத்தும்போதெல்லாம் அதற்கு முதல்நாள் திருக்குறள் மாநாடு என ஒன்றை நடத்தித் திருக்குறளின் சிறப்புகளை அறிஞர்கள் வாயிலாகக் கூறச் சொல்லிக் கேட்க வைத்தார்.

வள்ளல் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கை பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு முறை வடலூர் சென்று சத்திய ஞானசபையை பார்க்கவேண்டும். அவரது கொள்கைகள் குறித்து விளக்கம் கேட்கவேண்டும் என விருப்பம் கொண்டார்.

அதன்படி ஒருமுறை தம் தொண்டர்கள் புடைசூழ வடலூருக்கு வந்துவிட்டார். சத்திய தருமச்சாலையின் அணையா அடுப்பையும், அங்கு நிகழும் அன்னதானப் பணிகளையும் பார்த்து முடித்தபின் சத்தியஞானசபையைப் பார்க்கவேண்டி அந்த வாசலுக்கு வந்தார்.

உடன் வந்தவர்கள் எல்லாம் ’திமுதிமு’வென்று ஞானசபை வளாகத்திற்குள் புகுந்துவிட்டனர். ஆனால் தந்தை பெரியாரோ பொறுமையாக ஞானசபையின் வெளியே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ச்சி செய்தபடி வாசலுக்கு முன் வந்தார்.

வந்தவர் ஞானசபையின் வாசலில் உள்ள கல்வெட்டில் இருந்த வாசகத்தைத் தம் மூக்கு கண்ணாடியை தூக்கிப் பிடித்தபடி படித்தார். அதில்,

’கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே செல்லவும்

என்ற வாசகம் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றிருந்தது. உடனே வழிகாட்டியாளராய் அருகில் நின்றிருந்த ஊரன் அடிகளாரிடம்,”இது என்ன?” என்று கேட்டார் பெரியார்.

"கொலை செய்யாதவர்கள், புலால் உண்ணாதவர்கள் மாத்திரம்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று அய்யாவே எழுதச் சொன்ன வாசகம்” என்று ஊரன் அடிகள் பதில் சொன்னார்

”அப்படியா? அப்ப உள்ளே செல்லும் அருகதை எனக்கில்லை. ஏனென்றால் நான் புலால் உண்ணுபவன்” என்று கூறியபடி அய்யா உள்ளே நுழையாமல் திரும்பினார்.

உடனே ஊரன் அடிகள் ”அதனால் ஒன்றும் தவறில்லை அய்யா. எழுதிப் போட்டிருக்கிறதே தவிர யாரும் அதைப் பின்பற்றுவதில்லை. பேரறிஞர் அண்ணா,கலைஞர் என எல்லோருமே வந்திருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்த்திருக்கிறார்கள்.” என்று கூறினாராம்.

உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம். அவர் வாழும்போது அவர் கட்டளையை அவரது ஒப்புதலுடன் மீறினால் கூடத் தவறில்லை. அவர் இல்லாதபோது அவரது கட்டளையை மீறுவது அறிவு நாணயம் இல்லை. அத்தகைய தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியபடி சத்திய ஞானசபையை பார்க்கமலேயே புறப்பட்டு விட்டாராம்.

இந்த நிகழ்ச்சியை கோவை ஆர்.எஸ்.புரம் மரக்கடை வசந்தம் அய்யா
கூறியதாக கவனகர் முழக்கம் ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பெரியார் ஒரு உதாரணம். அவர் வழி வருபவர் எப்படி இருக்கக்கூடாது, அல்லது தலைவர் கடைபிடிப்பது பின்னர் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதற்க்கு இந்த விஷயத்தில் மட்டும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் பிற ஆன்மீக அன்பர்கள் உதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்க்கு இந்நிகழ்ச்சி ஓர் நல்ல உதாரணம்.

நன்றி: கவனகர்முழக்கம் ஏப்ரல் மாத இதழ்

Monday, April 27, 2009

கடவுளும்..நல்ஒழுக்க உறவும்..அன்பான உறவும்

‘கடவுளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வார்!’

என்னும் மூன்றாம் வகை உறவே நல்ஒழுக்க உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலதேவர் போன்ற மகான்களே இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளைப் பற்றிப் பேசவில்லை; புகழவில்லை; கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்த உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்யம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை உள்ளிட்ட சகல நல் ஒழுக்கங்களையும் கடுமையாய்ப் பின்பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டு கொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களைக் கண்டுகொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.சமாதியும் வாய்த்தது. இந்த வழி போற்றுதலுக்குரிய வழி. தாரளமாய் இந்த வழியில் நாம் பயணிக்கலாம்.

நான்காம் வகை ; அன்பான உறவு

‘கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர், கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் !’

என்னும் நான்காம் வகை உறவே அன்புவழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தடிகள், சைவ நாயன்மார்கள், சித்தர்கள் எனப் பலரும் பின்பற்றிய உறவு இது.கடவுள் விரும்பும் அனைத்து நல் ஒழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்து உயர்வடைந்தவர்கள். அதே வேளையில் கடவுளைப் புகழ்ந்து போற்றிப் பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.

’திருநீறு வர வைக்கிறேன். எலுமிச்சம்பழம் வர வைக்கிறேன்’ என்பதுபோல் அல்ப சித்துக்களைக் காட்டிப் பாமரர்களை ஏமாற்ற மாட்டார்கள்.

’என்னிடம் பணம் கட்டிப் பாதபூஜை செய்தால் வினைகள் தீர்ந்துவிடும்’ என்பதுபோல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்

’தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் !’ என்பது போல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள்.

‘நின் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்குப்போல் அடக்கமாய், எளிமையாய், மறைவாய், தனியாய் வாழ்வார்கள்.

இருப்பதில் உயர்ந்த நிலையை எய்தும் வல்லமை இவர்களுக்கே உண்டு. இவர்களை பின்பற்றுவோர் தாரளமாய் கடைத்தேறலாம்

இந்த நால்வரில் நீங்கள் யார் ?

நீங்கள் யார் என்பதையும், எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உணருங்கள். யாராக வேண்டுமானாலும் மாற உங்களுக்கு உரிமையும் தகுதியும் சுதந்திரமும் உண்டு முடிவு செய்யுங்கள் செயல்படுங்கள்.

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

Friday, April 24, 2009

கடவுளும்....வியாபார உறவும்...

“கடவுளை இவர்கள் கண்டு கொள்வார்கள். ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை!”

என்னும் இரண்டாம் நிலை உறவே வியாபார உறவு.

இது ஆன்மீக வியாபாரிகளிக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு.

மடாதிபதிகள், மதபோதகர்கள், போலிச்சாமியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், மந்திரவாதிகள், மாந்திரீகர்கள் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

கடவுள் பெயரால் வருமானம் கிடைக்கும் ஒரே காரணத்திற்காகக் கடவுளை விரும்புபவர்கள். சுவரொட்டிகள், ’கட் அவுட்’கள், பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எனப் பலவழிகளில் மக்களைக் கவர்வார்கள்.

சிலர் நான் தான் கடவுள் அவதாரம் என்பார்கள். சிலர் நான் தான் கடவுள் என்பார்கள். இவர்கள் கடவுளுக்கு விரோதமானவர்கள். ஆனால் இவர்கள் சிறுதெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் , துர்தேவதைகளுக்கும் பேய், குட்டிச் சைத்தான் போன்றவற்றிற்கு
மிகவும் விருப்பமானவர்கள்.

அதனால்தான் இவர்களை நம்பிச் செல்பவர்களுக்குச் சில அற்ப வெற்றிகள் கிடைக்கும். ஆனால் முடிவான ஞானமும் சமாதியும் கிடைக்கவே கிடைக்காது.

கடவுள் என்பது ஒரு நாட்டின் பிரதமர் போல. (இந்தியா அல்ல)
தெய்வங்கள் என்பன அமைச்சர்கள் போல
தேவதைகள் என்பன அதிகாரிகள் போல

ஒரு நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ நாடு நலமாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுபோல்தான் கடவுளும்.

ஆனால் நாடு நாசமாய்ப் போவது யாரால்? அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆசைகளாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் தான்.

அந்த வகையில் இத்தகைய ஆன்மீக வியாபாரிகளுக்கு சில சமயங்களில் தெய்வங்களின் துணையும், தேவதைகளின் துணையும் கிடைப்பதுண்டு.

கடவுளின் பெயரால் வியாபாரம் செய்வோருக்குக் கடைசி மன்னிப்பும் கிடையாது. கதிமோட்சமும் கிடையாது. எனவே ஆன்மீக வியாபாரிகளிடம் தொடர்பு தேவையா
என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

டிஸ்கி: கடவுளை பிரபஞ்ச ஆற்றலாக இவர் நினைப்பதாக கருதுகிறேன்.
தெய்வங்களும், தேவதைகளும் இருப்பதாக தற்காலிகமாக, இதை படிக்கும்வரை ஒப்புக்கொண்டு பார்த்தால் இவர் சொல்ல வருவது முழுமையாக புரியும்.

தொடரும்....அடுத்து … நல்ஒழுக்க உறவு….

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

Thursday, April 23, 2009

கடவுளும்... நாத்திக உறவும்...

பொதுவாய்க் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவை நான்காகப் பிரித்துக் கொள்ளலாம். இந்த நால்வகை உறவில் நம் உறவு எத்தகையது என்பதில் தெளிவாய் இருந்தால் நம் பாதையில் தெளிவு கிடைக்கும். பயணமும் குழப்பமின்றி நடக்கும்.

முதல்வகை உறவு - நாத்திக உறவு

கடவுளும் நாத்திக உறவும்


'கடவுளையும் இவர்கள் கண்டு கொள்வதில்லை.கடவுளும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை’


நாத்திகர்கள், பொதுவுடமைவாதிகள், உலகாயதவாதிகள், பொருள்முதல்வாதிகள் போன்றோர் இந்தப் பட்டியலில் வருவார்கள்.

’கடவுளைக் கண்டுகொள்ளாதோர் அல்லது கடவுளை மறுப்போர்’ என்ற நிலையில் இருக்கும் இவர்களிடம் விருப்பு - வெறுப்பு அற்ற நடுவுநிலை நாயகமாக கடவுள் திகழ்கிறார்.

பொதுவாக ஒருவர் ஆளும் கட்சியை வெறுத்து, விமர்சிப்பவராக இருந்தால் கூட அரசின், மக்களுக்கு கிடைக்கக் கூடிய பொதுவான சலுகைகள் அவருக்கும் கிடைக்காமல் போகாது. ரேசன், தகுதிக்கேற்ப அரசுவேலை, அரசு மருத்துவம் போன்ற நியதிப்படி
கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கத்தான் செய்யும்.(இன்றைய சூழ்நிலை அல்ல)

அதுபோலவே கடவுளை இவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடவுள் படிப்படியாய் ஏற்படுத்தி வைத்திருக்கும் உலக வாழ்க்கை எனும் பஞ்சபூத அமைப்புகள் இவர்கள வெறுக்காது. கண் தெரியும், காது கேட்கும், நாக்கு ருசிக்கும், நியதிப்படியே நடக்கவேண்டிய எல்லாம் முறைப்படி நடக்கும்.

இதைத்தான்


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணே


வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே


மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே


நல்லோர்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடுவே


நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம்கொடுக்கும் நலமே


எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே


என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே


என்று வள்ளல் பெருமான் விளக்கமாக வர்ணிப்பார். இதுதான் இறைவனின் விருப்பு வெறுப்பற்ற நடுவுநிலை நிர்வாகம்.

ஆனால் விதிக்கு அப்பாற்பட்ட வெற்றிகள் இவர்களுக்கு வாய்க்காது.
சாவை வெல்லும் சமாதி, முக்தி, மோட்சம், பிறவிப்பிணியிலிருந்து விடுதலை என்பதெல்லாம் இவர்களுக்கு இல்லை. இவைகள் எல்லாம் இறைவனை ஏற்றுக் கொண்டோர்க்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சலுகைகள்.

தற்சோதனை செய்யுங்கள்.

இந்த நாத்திக உறவு என்ற வகையில் நீங்கள் இருந்தால் இதுவே போதுமென்றால், தொடர்ந்து பயணம் செய்யுங்கள். இதை ஒரு வகையில் எதுவமற்ற நடுவுநிலை என்றுகூட சொல்லலாம்.

தொடரும்... அடுத்து......கடவுளும் வியாபார உறவும்

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

Tuesday, April 21, 2009

தோல் பொருட்களை உபயோகிப்போருக்கு...(18+)

டிஸ்கி;இருதய பலவீனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்.
இளவயதினர் தவிர்க்கவும்....

தோல் பொருட்களின் உபயோகத்தை குறைத்துவிடலாமா!!!





















வருகைக்கு நன்றி, மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்