"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, August 18, 2023

வெகுமதி

வெகுமதி என்றால், பரிசு என்பது நாம் அனைவரும் அறிந்தே இருந்தாலும், அது பொருளாகவோ பணமாகவோதான் நிகழ்காலத்தில் உணரப்படுகிறது.

நமக்கு, பல்வேறு தொழில் சூழல், குடும்ப, சமூக சூழல் காரணங்களினால் அவ்வப்போது மனச்சோர்வு ஏற்படத்தான் செய்யும். அப்போதெல்லாம் மீண்டு வருவது எப்படி ?  ஒவ்வொருவரின் மனவலியும், ஒவ்வொருவிதம். இதற்கு, வெளியிலிருந்து வரும் உணவு, இசை, பாடல், ஆட்டம், பயணம் எல்லாம் அதை குறைந்த காலத்திற்கே மறக்க வைக்கும். 

மனம், தன்னிலைக்கு ஏற்றவாறு, வெளியிலிருந்து வரும் வார்த்தைகளை, எழுத்துக்களை தன்வயமாக எப்போது உணர்கிறதோ, அப்போது உற்சாகம் கொள்ளும். வெறுமனே, தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்மை மீட்டெடுக்காது. 

நம்மை மீட்டு எடுத்து, உற்சாகம் ஊட்டும் வார்த்தைகள் எப்படி இருக்கும் தெரியுமா? நம் மனதுக்கு முதலில் ஆறுதல் அளிக்கும். நாம் செய்த காரியங்கள், நம் குணங்களில் உள்ள நியாயங்களை முழுமையாக ஏற்று வெளிப்படுத்தும். நாம் செல்லும் வழி, தனி வழியாக தெரிகிறதே? சரிதானா என்ற ஐயம் தோன்றும்போது, சரியான வழிதான் என்று உணர்த்தும். பின்னர் அம்மனச்சோர்வில் இருந்து மீண்டு வருவது எப்படி என்ற பாதையை காட்டும்.

அப்படியான ஒரு கவிதை பகிர்தல்.



(William Arthur Ward - The Rewarding)               

இவையெல்லாம் கடினமானதுதான். ஆனாலும் இவை வாழ்வில் நமக்கு வெகுமதியை தருகின்றன. இதை அனுபவமே, உண்மையென உணர்த்தும்.

செயல் ஊக்கம் கொண்டவன், விழி மூடி சும்மாவிருக்க மாட்டான்.  விழிப்புணர்வு பெறுவோம். ஆற்றலை வளர்ப்போம்.

(நன்றி: விஜயா பதிப்பகத்தின் நலவாழ்வின் படிகள் நான்கு என்ற நூல். ஆசிரியர் பேரா.எம்.இராமலிங்கன் அவர்கள் நூலில் இருந்து கவிதை பகிர்வு)

Wednesday, June 22, 2022

மிர்தாதின் புத்தகம் 2

                                     வேலைக்காரன், எசமானனின் எசமான்


இப்படி சொன்னாலே, நம்மை முறைக்கும் பலர் உண்டு. 

இன்றைய பொருளாதார சூழலில், உடல் சார்ந்த வேலைகளில், வேலைக்காரனே, எசமான். இதுதான் இன்றைய பெரும்பான்மை நிலவரம். ஒரு வேலைக்காரனின் சிரமங்களை அறியாதவனல்ல, நான். அவனின் நியாயங்கள் தெரியாதவனல்ல, நான். 

ஆயினும், மிகச்சிறுபான்மையினரே எசமானின் வேலைக்காரனாக இருக்கிறார்கள். இவர்களே வருங்கால எசமானர்கள். 

இதன் பொருள், எசமானின் சொல்லுக்கு, ஆமாம் சாமி போட்டு, காலம் தள்ளுபவர்கள் என்பது அல்ல. 

எசமானின் நிறுவனத்திற்கு எது நல்லதோ, எசமானின் தொழிலுக்கு எது நல்லதோ. அதை தொய்வின்றி அனுதினமும் செய்து முடிப்பவனே, நல்ல வேலைக்காரன். வருங்கால எசமானன்.

சரி சரி. வேலைக்காரன் எசமானனின் எசமான் என்று சொன்னது யார்? நான் அல்ல. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம்தான், இப்படி பேசுகிறது. 

இந்த நூல் தத்துவநூல் என்று யாரேனும் நினைத்திருந்தால், உங்கள் எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மிகெய்ல் நைமியின் வாழ்க்கை. சமூகத்திற்கு, தான் வாழ்ந்த வாழ்வை, எண்ணங்களை பகிர்ந்ததன் அடையாளம் மட்டுமே. இந்த வாழ்வின் மனநிலை நம்மால் அனுபவிக்க முடியுமா? முடியும். முடியவேண்டும் என்றுதான் மிகெய்ல் நைமி, இதை நூலாக எழுதி இருக்கிறார்.

இந்நூலின் பொருள், இதன் சொற்களில் இல்லை.  இதன் வாக்கியங்களில் இல்லை. இந்தப் புத்தகத்தின் பொருள் சொற்களுக்கு இடையிலும், இதன் வாக்கியங்களுக்கு இடையிலும், இதன் வரிகளுக்கு இடையிலும் இடைவெளிகளிலும் ஓடிக்கொண்டே இருக்கும்.  இந்த நூல் படிப்பதற்கன்று. அனுபவபூர்வமாக பருகுவதற்கே.

இங்கே சொற்கள் இரண்டாம்பட்சம்தான். வேறு ஏதோ ஒன்று (ஒருமை) முதன்மை பெற்றுவிடும். இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம், இது. மனதால் அன்று. புரிந்து கொள்ளப்பட வேண்டிய புத்தகம் அல்ல, இது. உணர வேண்டிய ஒன்று.  - இதெல்லாம் நான் சொன்னது அல்ல. ஓஷோ சொன்னது.

இந்த நூலை வெறுமனே படிக்க ஆரம்பியுங்கள். முன் கற்றவற்றை எல்லாம் பொருத்திப் பார்க்காது, படியுங்கள். இந்நூல், உங்களுக்கு தன்னைக் காட்டும்.

கண்ணதாசன் பதிப்பகம். மிர்தாதின் புத்தகம். (The Book of Mirdad - Mikhail Naimy)

தொடரும்.


Monday, June 20, 2022

மிர்தாதின் புத்தகம் -1




மனிதனுக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் இருமையை, இரண்டுபட்ட தன்மையை, அவன் உள்ளுணர்வில் கரைத்து, ஒருமைப்படுத்தி, அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தை, அவனுக்கு திரை நீக்கி காட்டும் சுய தரிசனத்திற்கான தூண்டுதல் முயற்சிதான்  மிர்தாதின் புத்தகம் என்கிற நூலின் சாரம். - இப்படித்தான் முன்னுரை சொல்கிறது.

இந்த புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டும் எனில் இது தியான அனுபவத்தை, வார்த்தைகள் அற்ற நிலை எதுவோ, அதனை வார்த்தை ஆக்கும் முயற்சியினை, செய்கிறது. அந்த வார்த்தை அற்ற நிலைக்கு, நம்மை அழைத்துச் செல்லும்போது, பல தருணங்களில் நம் மனதை சம்மட்டியால் அடித்து இழுத்துச் செல்லும். மயிலிறகால் தடவியும் கூட்டிச் செல்லும்.  இந்த நூலை எத்தனை முறை படித்து, புரிந்து, உணர்ந்து கொண்டு எவ்வளவு பேசினாலும், அது கால்பங்கு அளவே பொருந்தும்.

இந்த நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கிற உத்தி, நம் மனதை, திகைப்பில் ஆழ்த்தி, உறைய வைக்கிற வேலையை செய்து கொண்டே வரும்.  மனம் திகைப்பதும், அதிலிருந்து மீள்வதும் சாதரண விசயம் என்று எண்ணலாம். ஆனால் மிர்தாத், நம் மனதை மீள முடியாத திகைப்பில் தொடர்ந்து ஆழ்த்திக் கொண்டே வருவார்.

நிகழ்வுகளில் கலக்கும் இறந்தகால, நிகழ்கால நிகழ்வுகள், இதனூடே பயணிக்கும் உண்மை, மற்றும் கற்பனை  பாத்திரங்கள். மனநிலை மாறுபாடுகள், இதனினூடே பிரபஞ்சத்தில், இந்த பூமியில், இந்த விண்ணில் உருவெடுத்திருக்கும் அனைத்தும் எப்படி வேண்டுமானாலும், உள்ளே கலந்து வரும். மாயஜால உலகில் நடப்பது போன்று, எந்த தர்க்கத்துக்கும் உட்படாததாகவே நகரும். உட்பட்டும் நகரும்.

மிர்தாத்தின் புத்தகத்தைப் பற்றி, எதுவுமே சொல்ல முடியாது என்கிற போதும், உடையத் தயாராய் இருக்கிற மனதை, சல்லி சல்லியாய் உடைத்து நொறுக்கும் தன்மையை கொண்டது, இந்த புத்தகம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இந்நூலை பற்றி மனதில் பட்டதை எழுதும் எண்ணம் எனக்கு உண்டு. முழுக்க முழுக்க இது, எனக்கான புரிதல் மட்டுமே. ஒத்த கருத்துடையோராய் இருப்பின் உரையாடுவோம்.  மாற்றுக் கருத்து இருப்பின், நூலை உணர்வோடு படியுங்கள். உங்களுக்கு வேறு விதமான புரிதலை நிச்சயம், இந்தப் புத்தகம் கொடுக்கும். அதுவும் முழுக்கவே சரியாகத்தான் இருக்கும்.

இந்தப் புத்தகம் இப்புவியில் உள்ள 780 கோடி பேரால் படிக்கப்படுமாயின், அதே எண்ணிக்கையிலான புரிதல்களை தரும் என்பதே உண்மை.

வார்த்தை என்பது,  சுட்டிக் காட்ட  விரும்பும், பொருளை உணர்த்தும் குறியீடு மட்டுமே.  அந்த பொருளின் முழு பண்பை, அந்த சொல் முழுமையாய் எப்போதும் உணர்த்தாது.

கல் என்ற சொல், கல்லின் கனத்தை உணர்த்தாது. தென்னை என்ற சொல், அதன் உயரத்தை பயன்பாட்டையும் உணர்த்தாது. முல்லை, அதன் வெண்மையையோ, அளவையோ, நறுமணத்தையோ உணர்த்தாது. இன்பம் என்ற சொல் தனக்குப் பின்னால் எத்தனை கதைகளை ஒவ்வொருத்தருக்கும் வைத்திருக்கிறது? அப்படி இருக்கையில் உங்கள் இன்பத்தை நான் எப்படி உணர முடியும்?

 ஒரு சொல், சொல்லப்பட்ட உடனே, எழுதப்பட்ட உடனே, அவற்றின் பண்புகள் அனைத்தையும், நம் அனுபவ அறிவின் காரணமாக, அந்தச் சொற்களின் மீது ஏற்றி உணர்ந்து கொள்கிறோம்.

 - மிர்தாதின் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் கவிஞர் புவியரசுவின் வார்த்தைகள் மேலே.

இங்கே சொற்கள் முக்கியம் அல்ல.
சொற்களால் என்ன அதிர்வு பிறக்கிறது என்பதே முக்கியம் - மிர்தாத்

வார்த்தைகள் என்னுடையவை. அதற்கான அர்த்தம் உன்னுடையவை - ஓஷோ

நடைமுறை வாழ்க்கையில் அது தொழிலாகட்டும், குடும்பமாகட்டும், நட்புகள் ஆகட்டும். நம் வார்த்தை, நாம் நினைத்த பொருளை/அதிர்வினை அப்படியே சம்பந்தப்பட்டவருக்கு கொண்டு சேர்க்கிறதா என்பதை, சற்றே சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். குறைந்த அளவாக, கருத்திற்கு நெருக்கமாகவேனும் கொண்டு செல்கிறதா என்று பார்ப்போம். 

( தொடரும் )



Tuesday, May 5, 2020

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

 குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கறாங்க, எப்போதிருந்து அடம் பிடிக்க பழகிக் கொள்றாங்க என்று பார்த்தோம்ன்னா, சின்ன வயசுல இருந்தே, நடக்க ஆரம்பிச்சதில இருந்தே இதெல்லாம் கத்துக்குவாங்க. 

 குழந்தை வளர்ப்பில் அழும்போது, நம்ம போய், உடனே குழந்தையைக் கவனிக்கறோம். அதன் அழுகை வந்து, ஒரு சமயம் பசியா இருக்கலாம், இல்லை, குழந்தைக்கு தூக்கம் வர்றதுக்கான ஒரு அறிகுறியா இருக்கலாம், வயிற்று வலியா இருக்கலாம். அதெல்லாம் நம்ம சரியா தொடர்ந்து கவனிக்கும்போது, அதை நம்ம, காரணம் கண்டு பிடித்து தீர்க்க முடியும். இதை விட்டுவிடலாம்.

 ஆனால், நம்ம வெளியே கடைக்குப் போறோம். குழந்தை வந்து, ஒரு பொம்மை கேட்குது. சரி, அந்த பொம்மையை வாங்கிக் கொடுக்கிறோம். இன்னொரு பொம்மை கேட்குது.  என்ன நினைக்கிறோம்? ஒரு பொம்மை போதும். இல்லை, ஒரு chocolate போதும், அப்படின்னு நினைக்கும்போது, ஒண்ணு போதும் கண்ணா, அடுத்தமுறை வரும்போது, நம்ம  இன்னொண்ணு வாங்கிக்கலாம்னு, சொல்றோம். நம் குழந்தை, கேட்க மாட்டேங்குது. கடையில சத்தம் போடுது, அழுவுது, எல்லா ரகளையும் பண்ணுது. இல்லை, கீழே விழுந்து, தரையில புரண்டு, ஆட்டம் போடுது. தந்திரத்தை வெளிப்படுத்துகிறது.

அப்ப, நம்ம என்ன பண்ணணும்? 

அதற்கு முன்னரே நீ கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறாய்  என்கிற மெல்லிய உணர்வினை குழந்தைக்கு ஏற்படுத்தி இருக்கணும். அதையும் மீறி ஒரு குழந்தை அடம் பண்ணும்போதோ, குறைந்தபட்ச சமுதாய ஒழுங்கினை மீறும்போதோ, உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடாது. ஆனால் பதில் நடவடிக்கை (respond) மேற்கொள்ளலாம். எப்படி?

 எப்பவுமே ஒரு தவறான நடத்தைகளை, குழந்தைகள்  எப்படி கத்துக்கிறாங்கன்னா, அந்தக் குழந்தை தவறினை செய்யும்போது, பெற்றோர், குழந்தையின் அலட்டலுக்கு பயந்து போயி, இல்லை, அதீத செல்லம் கொஞ்சுவதால் குழந்தைக்கு அடிபணிந்து விடுகிறோம். இதிலிருந்து குழந்தை, தான் செய்த தவறினை சரி என்பதாக கற்றுக் கொள்கிறது.

இப்படி குழந்தை கத்துக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணும்னா, குழந்தையின் அந்த கவன ஈர்ப்பு, அடுத்தவர்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடிய செயல்களில் இறங்கி, அடம் பண்ணும்போது,  நம் குழந்தையை, அந்தக் கடையிலிருந்து தூக்கிட்டு, நம் வீட்டுக்கு வந்துரலாம்.  குழந்தை கேட்பதை பூர்த்தி செய்தே ஆகவேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

 வீட்ல ஏதாவது அடம் பண்ணுச்சுன்னா,  நாம் அதை அலட்சியம் பண்ணணும். எல்லா குழந்தைகளுமே அதிகபட்சம் ஒரு மூணு நாலு நிமிஷம், அல்லது  பத்து நிமிஷம் அழுதுட்டு, தானா அடங்கிடும். அப்படி அடங்கவில்லை எனில், குழந்தையை,  ஒரு அறைக்குள் விட்டு, நாமும் கூட போய் இருக்கணும். ஆனால் கதவை சாத்திரலாம். அதன் பொருள் குழந்தையின் உதவிக்கு தாத்தா, பாட்டி, அம்மாவோ அப்பாவோ என யாரும் வர மாட்டார்கள். வர சாத்தியம் இல்லை. என்பதை சொல்லாமல் உணர்த்தி விடவேண்டும்.

 நீ வேணும்கிறவரைக்கும் அழுதுக்கோ, நீ அழுது முடிச்சதுக்கு அப்புறமா, அம்மா/அப்பா கிட்ட வந்தா போதும். நான், உனக்காக இங்கதான் இருப்பேன், ஆனால்,  நீ அழுது காரியத்தை சாதிக்கணும்னு நெனச்சா, அந்த வேலை எங்கிட்ட நடக்காது அப்படிங்கிறதை இயல்பாக சொல்லிவிட வேண்டும். நம்மிடம் வெறுப்போ, கோபமோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இந்த respondதான் மிக முக்கியம். இந்தப் பக்குவம் நமக்குத்தான் வரணும். இப்படி ஓரிரு முறை நடந்தாலே குழந்தை புரிந்து கொண்டு அடம் பிடிப்பதை விட்டுவிடுவார்கள்.

பக்குவமில்லாத எதிர்வினைன்னா என்னவாக இருக்கமுடியும்?  நம் குழந்தை மீது, பதில் கோபம் காட்டறது, அடிக்கிறதுங்கிறது எல்லாம் குழந்தைக்கான தண்டனையாக மாறிவிடும்.  இது ஓரளவிற்கு, அப்போதைக்கு பயன் தந்தால் கூட, நாளடைவில,   அம்மா என்ன பண்ணுவாங்க, ஏதாவது குறும்பு பண்ணினால், அடிக்கத்தானே போறாங்க, அப்படின்ற ஒரு தான்தோன்றித்தனம் வந்துரும், குழந்தைகளுக்கு. அப்புறம் திருத்துவது கடினம். தானாத் திருந்தினாத்தான் உண்டு.

குழந்தையை குழந்தையா இருக்க விடுங்க என்பதை வேற ஏரியா. குழந்தையா இருக்காம அடம்பிடிச்சு, பெரிய மனுசனா மாற, குழந்தை முயற்சிக்கும்போது என்ன செய்யலாம்ன்ற நடைமுறை பகிர்வுதான் இது.

சரி. இது குழந்தைகளுக்கு மட்டும்தானா? பெரியவர்களுக்கு பொருந்துமா என்றால் திருமணமான பெண்களுக்கு நன்கு பயன்படும். கூட்டுக் குடும்பமாக இருப்பின் நன்கு வேலை செய்யும். கணவனை வீட்டுக்குள் விட்டு.....

சரி, ஆண்களுக்கு? வாய்ப்பில்லை ராசா. சொன்னபடி கேட்கவும்.

Thursday, December 5, 2019

சமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது!

வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி சித்த மருத்துவர் க.மதுகார்த்திஷ்: சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகளை அனைவரும் கண்ணை மூடியபடி பின்பற்ற முயற்சிக்கின்றனர்; அதனால் ஆரோக்கியம் கிடைக்காது; ஆபத்து தான் கிடைக்கும்.

உடல் பருமன் பிரச்னைக்கு, எலுமிச்சை சாறு, வெந்நீர், தேன் கலந்து குடிக்க வேண்டும் என, 'வீடியோ' படத்துடன் செய்தி வருகிறது. எலுமிச்சை சாறுடன் வெந்நீர் சேரும் போது, அமிலமாக மாறி, தொடர்ச்சியாக அருந்தும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தேனை எதனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. கையில் ஊற்றி, நக்கி தான் சாப்பிட வேண்டும். 

சிறு தானியங்களை தினமும் சாப்பிட்டால், உடல் வலு பெறும் என்கின்றனர். உண்மை தான் என்றாலும், அதை சரியாக, பக்குவமாக தயாரித்து சாப்பிடாவிட்டால், ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். சிறு தானியங்களை, எட்டு - பத்து மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். அவை எல்லாவற்றையும், ஒன்றாக கலந்தும் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு சிறு தானியத்திற்கும், வெவ்வேறு குணங்கள் உள்ளன; ஒவ்வொன்றையும், தனித்தனியாகத் தான் சாப்பிட வேண்டும். 

செக்கு எண்ணெய் தான் நல்லது என்கின்றனர். நல்லது தான். ஆனால், அதிக உடல் உழைப்பாளர்களுக்குத் தான், அது நல்லது. அதில் அடர்த்தி அதிகம் என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. ஒவ்வொரு பருவ நிலைக்கும், வெவ்வேறு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் கடலை எண்ணெய்; கோடை காலத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். 

ஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தை வறுத்து, பொடித்து சாப்பிட்டு வந்தால், எந்த வயிற்றுப் பிரச்னையும் வராது என்கின்றனர்; அதுவும் தவறு. கருஞ்சீரகம், அதிக உஷ்ணமானது. தினமும் பயன்படுத்தினால், எதிர் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். 

ஆப்பிள் சிடார் வினிகர், இஞ்சிச் சாறு, பூண்டுச்சாறு சேர்த்து குடித்தால், மாரடைப்பு அபாயம் நீங்கி விடும் என, சமூக வலைதளங்களில், இஷ்டத்திற்கு பலர் தகவல் பரப்புகின்றனர். அது தவறு. வினிகர், நம் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதல்ல. 

இது போன்ற இயற்கை மருத்துவத்தை நாடி, ஆங்கில மருத்துவம் அல்லது பிற மருத்துவத்தை கைவிட்டவர்கள், மரணம் அடைந்து உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. எந்த உணவாக இருந்தாலும், எளிதில் ஜீரணம் ஆக வேண்டும்; மலச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவ வேண்டும். தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனைபடியே, இயற்கை பொருட்களை மருந்தாக பயன்படுத்த வேண்டும்!

Monday, November 18, 2019

5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.


      ஜோதிஜின் புதிய புத்தகமான 5 முதலாளிகளின் கதை, amazon pen to publish 2019 Tamil competition போட்டியில் பங்கெடுப்பதற்காகவே எழுதப்பட்டிருதது. Kindle E-book ஆக மட்டுமே வெளியாகி இருப்பதால் முதன்முறையாய் Kindle for Pc மூலம் வாசிக்க வேண்டியதாகிவிட்டது.

      ஒரு முதலாளி, தனது வெற்றிக்கான வாய்ப்பினை, ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி கண்டுபிடித்து, அதனைத் தன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்கிற, தன் குணத்தையே அனுபவமாக எழுதி இருக்கிறார். இந்தப்புத்தகம் அவரது பலவருட தொழில் அனுபவங்களின் காரணமாக, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த வழிகாட்டியாய் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

      அடுத்த தலைமுறை என்பது நடுத்தர மக்களான குடிசைச் சமூகம் என்று ஜோதிஜியினால் வர்ணிக்கப்பட்ட, நம் இக்கால இளம் சிறுதொழில் முனைவோர் என்பதாகக் கொண்டால், இப்புத்தகம் அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

      இரவு என்ற ஒன்று இருப்பதால்தான் பகலைப்பற்றியும், ஒளியைப் பற்றியும், அதன் தேவையைப் பற்றியும் பேச நேரிடுகிறது. ஒளியின் அவசியத்திற்கு, இரவைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஆனால் உலகம் நம்மை எதிர்மறையாளன் என்றே முத்திரை குத்தும். பாதையில் உள்ள பள்ளங்களைப் பற்றிப் பேசுவது, இலக்கினை நோக்கிய பயணம் வெற்றியாக முடிய வேண்டும் என்ற அடங்கவொண்ணா ஆர்வம் மட்டுமே காரணம். ஜோதிஜியின் எழுத்துகளில் இதைக் காண்கிறேன்.

      இன்றைய காலகட்டம், வாழ்க்கை என்பது பணம் சார்ந்து, சற்று கடினமாக மாறிவிட்ட சூழலிலும் கூட, சொந்த உழைப்பினால் சேர்த்த முதலீடு இல்லாமல், எதாவது பரம்பரை அல்லது தாய்தந்தையரின் சொத்தினை விற்றுவரும் பணம், அல்லது யாரிடமோ மிகைப்படுத்திக் கூறி, முதலீட்டினை கவர்ந்து ஆரம்பிக்கப்படும் தொழில்கள் எனத் புதியன துவங்கப்படும் காலமாக மாறிவிட்டது.

  அதேசமயம், ஏற்கனவே அந்தந்தத் துறையில் இருப்பவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தி, புதிய இயந்திரங்கள், புதிய கட்டமைப்பு என்று ஆரம்பித்தாலும் பழையதுக்கு மாற்று அல்லது நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்தல் என்றே மாற்றங்களைச் செய்து கொண்டும் இருக்கின்றனர். இது மற்றவர்கள் பார்வையில் அசுர வளர்ச்சி என்பதாகவே தோன்றுகிறது.

      இத்தகைய இன்றைய சூழலில், புதிய தொழில்முனைவோரை வரவேற்று, நீங்கள் நூலுக்குள் செல்லும்போது, ஆரம்பிக்கவேண்டிய இடம் கடைசி அத்தியாயம். அதை, முதலில் ஒருமுறை படித்துவிட்டு, பின்னர் நூலை முதலில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். இப்போது கடைசி அத்தியாயம் மூலம் ஜோதிஜி திருப்பூர் பனியன் தொழிலின் மீதும், புதிய தொழில் முனைவோர்களின் மீதும் கொண்டுள்ள அக்கறை எளிதில் விளங்கும்.

      சுமார் இருபது முப்பது வருடங்களுக்கு முன் இருந்த திருப்பூரை நூல் கண்முன்னே நிறுத்திவிடுகிறது. பணியிடங்களில் காமம் என்பது இப்போது சற்று நாகரீகமடைந்து பணியிடத்திற்கு வெளியே என்பதாக  வரவேற்கத்தகுந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. காரணம் Buyerரின் விதிமுறைகள் பின்பற்றுவதற்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகம் எல்லா இடங்களிலும் Camera மாட்டி இருப்பது, முக்கிய மாற்றம்.

        தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் Buyerரின் விதிமுறைகள், அதற்கான ஆடை உற்பத்திச் சூழல், இன்ன பிற வசதிகள் நிறைவேற்றுவது என்பது வேப்பங்காயாக இருந்தகாலம் நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போதோ, வசதிகளை விரும்பி ஏற்படுத்தி, Buyer வருவாரா என்று காத்திருக்கும் காலமாக மாறிவிட்ட சூழலில், புதிய தொழில் முனைவோர், தன்னை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது. 

    எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை, பகலை, ஒளியைச் சொல்வதற்காக இரவினைப்பற்றி விளக்குவதுபோன்று சொல்லியிருக்கிறார். இந்த, தவிர்க்கப்பட வேண்டிய மனப்பான்மை, குணங்கள் என்பவை, பனியன் தொழிலுக்கு மட்டுமானதல்ல, எந்தத் தொழிலானாலும் பொருந்தும்.

   கூடவே, நாம் தொழில் செய்ய இறங்கும் களமான திருப்பூர், திடீரென வளர்ந்த நகரம். திட்டமிடப்பட்டு வளர்ந்ததல்ல. அதற்குச் சற்றும் குறையாத நம் அரசுகள், தொழிலுக்குச் செய்து கொடுக்கும் வசதிகள். அதை கேட்டு வாங்கும் அமைப்புகளுக்குள் கட்சிகள் புகுந்துகொண்டு ஒற்றுமையின்றி குரல் ஓங்கி ஒலிக்காவண்ணம் பார்த்துக் கொள்கின்றன.

    இதையெல்லாம் மீறி தொழிலின் வளர்ச்சிக்கான நடைமுறைகள், குறிப்பாக ஏமாற்றும் பையர்களிடம் பணம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்கள், எச்சரிக்கைகள் என இளம்தலைமுறையினரின் பாய்ச்சல்கள்தான் திருப்பூர் மீண்டும் முன்னைவிட உத்வேகத்தோடு எழும் என்ற நம்பிக்கையை, நமக்கு மிச்சம் வைக்கின்றது.

திருப்பூரின் தொழிலில், அப்படியே தொடர்கிற இரண்டாம் தலைமுறையினர் மிகக்குறைவு. ஆனால் புதிய தலைமுறையினர் வருகை அதிகம். அவர்களின் வெற்றி சதவீதம் அதிகரிக்கவேண்டும் என்ற அக்கறையை மட்டுமே, இந்த நூலில் நான் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எந்தவடிவிலேனும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.

5 முதலாளிகளின் கதையை வாங்கிப் படிக்க இதை அழுத்தவும்.

5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by [ஜோதிஜி, Jothi G, Ganesan, Jothi]

நிகழ்காலத்தில்சிவா


Thursday, October 17, 2019

பழங்களை எப்படிச் சாப்பிடணும்?

பழங்களை அப்படியே சாப்பிடணும்!

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்; வெட்டி வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து, இயற்கை மருத்துவர் ஒய்.தீபா:

பழங்களை நன்றாக கழுவிய பின், அப்படியே கடித்து சாப்பிடுவது தான் நல்லது. அலுவலகத்தில் அல்லது பிற இடங்களில் அவ்வாறு சாப்பிட முடியாது என நினைப்பவர்கள், சிறிய பேனா கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது, துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.

பழங்களை வெட்டி, நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிடும் போது, அந்த பழங்களில் உள்ள, 'விட்டமின் ஏ, சி, இ' போன்ற சத்துகளில் இழப்பு ஏற்படும். வெட்டப்பட்ட பழத்துண்டுகள், ஒளி மற்றும் ஆக்சிஜனுடன் வினை புரிந்து, பழத்தில் உள்ள, 'ஆன்டி ஆக்சிடன்ட்' அளவை குறைக்கிறது.

பழங்களை வெட்டி சாப்பிட வழியில்லை என நினைப்பவர்கள், அவற்றை துண்டுகளாக்கி, காற்று புகாத டப்பாவில் அடைத்து, 'ஏசி' அறை அல்லது பிரிஜ்ஜில் வைக்கலாம். இதனால், துண்டான பழங்களின் சுவாசம் குறைவாக இருக்கும்; எளிதில் கெட்டுப் போகாது.

அது போல, பழச்சாறுகளை, தயாரித்த சில நிமிடங்களில் அருந்த வேண்டும்; நீண்ட நேரம் வைத்திருந்தால், கெட்டு விடும். பழச்சாறுகளை உடனடியாக குடிக்க முடியவில்லை; கொஞ்ச நேரம் கழித்து தான் அருந்த முடியும் என்றால், ஐஸ் கட்டிகளை அதில் சேர்க்கக் கூடாது. இனிப்பு சேர்க்காமல், சிறிதளவு இந்துப்பு சேர்த்து வைத்தால், சீக்கிரம் கெட்டுப் போகாது.

எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி போன்ற, 'விட்டமின் சி' சத்து அதிகம் உள்ள பழங்களை, நேரம் கழித்து பருகக் கூடாது. தயாரித்த உடனேயே அதில் உள்ள, விட்டமின் சி சத்து, காற்றில் கரைந்து விடும்; எனவே, உடனே பருக வேண்டும்.

'இதுவும் பழச்சாறு தான்' என, 'டின்' பழச்சாறுகள் விற்பனைக்கு வருகின்றன. கொஞ்ச நேரம் வைத்திருந்ததும் கெட்டுப் போகும் பழச்சாறுகள், டின்னில் வைத்திருந்தால் மட்டும் கெட்டுப் போகாமல் இருக்குமா... கெட விடாமல் தடுக்கும் ரசாயனமான, 'பிரசர்வேடிவ்' அதில் உள்ளது.பழச்சாறு, தரமாக இருக்கிறதா என்பதை கண்டறிவது எளிது. பழச்சாறு தயாரிக்கப்பட்ட போது, எந்த நிறத்தில் இருந்ததோ, அதே நிறத்தில் இருந்தால், தைரியமாக அருந்தலாம். நிறம் மாறி இருந்தால், கெட்டு விட்டது என, அர்த்தம்!பழக் கடைகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ரசாயனம், நிறமூட்டிகள் கலந்தே விற்கப்படுகின்றன.

பல விதமான பழங்களை ஒன்றாக கலந்து, கூழாக அரைத்து, பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை சேர்க்கின்றனர். அத்தகைய பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது!

நன்றி தினமலர்

Wednesday, October 2, 2019

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை. ஏனெனில் எதை எழுதினாலும், அதன் மறுபக்கம் அல்லது நியாயம் கூடவே மனதில் வந்து விடுகிறது. அதை ஒதுக்கி,  ஒன்றை நியாயப்படுத்தி எழுத வேண்டுமா என்ற கேள்வி தோன்றுகிறது.

கடும்கோடையில், பறவைகளுக்கு மொட்டை மாடியில்  சிறு கிண்ணங்களில் தண்ணீரும், சிறுதானியங்களும் வைத்தால், ஆகா அருமையான யோசனை  என, உயிர்களின் மீதான அன்பினை பாராட்டத் தோன்றுகிறது.

கூடவே, அது எங்கோ, தன் முயற்சியால் உணவு தேடி, நீர் அருந்தி, கூடு அடையும் பறவையாக இருப்பதை, நாய் பூனை போன்ற வீட்டு விலங்கு போல மாற்றி, அதன் இயல்பை, வாழும்திறனை ஒழிப்பதற்கு துணை போக வேண்டாம் எனவும் தோன்றுகிறது. இதுவும் அந்த உயிர்களின்  மீதுள்ள அன்பினால்தான் எனும்போது, இதையும் ஏற்க வேண்டியதாக இருக்கின்றது.

ஆக இரண்டு விசயங்களுமே சரிதான். செய்யலாம். ரொம்ப யோசிக்காமல் தோன்றுவதைச் செய்யலாம். இப்படி இருதரப்பு அபிப்ராயங்கள் வரும்போது எனக்கு என்ன விருப்பமோ அதையும், உங்களுக்கு என்ன விருப்பமோ அதையும் செய்ய வேண்டியதுதான்.  உள்ளார்ந்த அர்த்தம் அவரவர் வெளிப்படுத்தினால் அன்றித் தெரியாது.

தீனி வைக்காதவன் கஞ்சன் என்றோ, பிற உயிர்களின்மீது அக்கறை இல்லாதவன் என்று மற்றவனால் பார்க்கப்படலாம். தீனி வைத்தவன் நாயைக் கெடுத்தான்,  பூனையைக் கெடுத்தான், இப்ப குருவியின் வாழ்க்கை முறையை கெடுக்கிறான் என இவனால் பார்க்கப்படலாம். இதுதான் சமூக இயல்பு. இவற்றைக்  கண்டு கொள்ளாமல் உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே நல்லது. ஏன்?

இப்படியான நம் விருப்பத்தில் எது சரி, எது தவறு என்பதெல்லாம் விளைவுகளைப் பொறுத்தே அமையும் என்பதே, என் நிலைப்பாடு. சரி, தவறு என்பதெல்லாம் தர்க்கரீதியாக மனதை வைத்து யோசிக்காமல், சொல் விளையாட்டில் சிக்கிக் கொள்ளாமல், செயலின் விளைவாக என்ன நடந்தது என்று கவனித்தால் போதுமானது. இது மனிதர்களோடு தொடர்ந்து உறவாட உதவியாக இருக்கும்.

அப்படி நடப்பது அல்லது கிடைப்பது மனரீதியாக இருக்கலாம். இல்லை, பொருள்ரீதியாக இருக்கலாம். ஒரு சில ரூபாய் மதிப்புள்ள சிறுதானியங்கள் மூலம், உங்கள் மனதிற்கு ஒரு சந்தோசம், நிம்மதி கிடைக்கிறது. கூடவே குருவிகளின் வயிறும் நிறைகிறது எனில், அதை ஏன் தவிர்ப்பானேன்?  இது ஒரு சுயநலமான யோசனைதான். நான் மறுக்கவில்லை.

சுயநலமின்றி, பொதுநலம் இல்லை. என்னிடம் இரண்டு வேளைக்கான உணவு இருக்கிறது. எனில், அடுத்தவேளையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம், இப்போது பசியுடன் இருக்கும் ஒருவரோடு பகிர்ந்து கொள்பவன் பாராட்டுக்குரியவனே.

தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என இரு நபர்களுக்கு கொடுப்பவன் தியாகி, தெய்வம், முட்டாள் என்று எப்படிச் சொன்னாலும், ஒரே பொருள்தான்.

இதில், நான் செயல்களை உயர்வு தாழ்வு எனப் பிரிக்கவில்லை.  உங்களின் செயல்கள் உங்களைச் சார்ந்தோருக்கு, குடும்பம், தொழில் நட்புகள் என எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது  என்பதை கவனத்தோடு இருங்கள். குருவி வயிறும் நிரம்பவேண்டும், நம் மனதும் நிரம்பவேண்டும். வீட்டில் இருப்போரை பட்டினி போட்டு, உணவை வெளியே பகிர்வது, இங்கு பாதிப்பு, அங்கு மகிழ்ச்சி என்று அமைந்துவிடும்.

எந்தச் செயலாக இருப்பினும், அதன் பலன் இரு தரப்பிலும் மகிழ்ச்சியை விதைக்குமாறு அமைய, முயற்சிப்போம். மனநிம்மதியைப் பெறுவோம்.

நிகழ்காலத்தில் சிவா

Friday, May 10, 2019

உங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா ?

சின்ன வயதில் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாரேனும் மாந்திரீகம் செய்து வைப்பதாகப் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களிடம் சவால் விடுவதுண்டு. ”உனக்கு என்ன வேணும்?.என்னோட இரத்தம்?, என்னோட முடி?, என்னோட உடை எதுவேண்டுமோ? கேள், தருகிறேன். முடிந்தால் , என்னை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.ஒரே நிபந்தனை என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ, அதை கால நிர்ணயம் செய்து நடத்திக் காண்பிக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி என்னுடைய வாழ்வில் இயல்பாக நடக்கிற ஏற்ற தாழ்வுக்கு உரிமை கொண்டாடாதே”,

இந்த சவாலுக்கு இதுவரை நான் அறிந்த சில மாந்திரீகர்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள்.எனக்குத் தெரியும் என்னிடம் பருப்பு வேகாது என்று.. ஆனால் அவர்கள் , தங்கள் வாடிக்கையாளரிடம் பாவம்னு விட்டுட்டேன் என்று தன் திறமைக்கு உரிமை கொண்டாடக்கூடும். அதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.  

இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை. எந்த ஒரு உயிரும்/பொருளும் சுயமாக இயங்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.. தொடர்பு கொள்ளும் பொருளுக்கு ஏற்ப மாற்றம் அடையும் .  பொருள் மற்றும் தொடர்பு கொள்ளும் பொருள் இரண்டின்  (உறுதித்} தன்மையைப் பொறுத்து நேர்மறையான மாற்றம் அல்லது எதிர்மறையான மாற்றம் நிகழும்

மேலே சொன்னதை மேலோட்டமான உதாரணம் ஒன்றின் மூலம் பார்ப்போம். 

எதிர்மறை விசயங்களையும் அலச வேண்டி இருப்பதால் விஷத்தை உதாரணமாக வைத்துக் கொள்வோம். அதிலும் சையினைடு விசம். இப்போது உங்களிடம் பால் இருக்கின்றது. பாலில் சையினைடினை கலக்கின்றீர்கள் அல்லது கலந்தால். பாலின் நிலை என்ன ? உடனடியாகக் திரிந்து கெட்டுப்போய் கொல்வதற்கு உரிய விசமாக மாறிவிடும். அருந்தினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஆக நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்பதும், பாலில் கலந்த அனுபவமும் சொல்லித் தருவது விசம் குறித்த பயம், எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதே. விசத்தை ஒதுக்குவதேதான் ஒரே வழி

சரி நேர்மறையாகப் பார்ப்போம். உங்களிடத்தில் சையினைடு விசம் இருக்கின்றது. கூடவே உங்களிடம் பெருநெருப்பொன்று இருக்கின்றது. ஆம் அதில் சையினைடு வீசப்படுகிறது. இப்பொழுது சையினைடு தீயை என்ன செய்து விடும் ?  தீயில் பஸ்பமாவதைத் தவிர விசத்திற்கு வேறு வழி இல்லை. விசம் குறித்த பயம் நெருப்புக்கு  இருக்குமா ?

விசத்தில் ஒரு விசயமும் இல்லை. விசத்தை எதிர்கொள்ளும் பொருளே விசத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றது.  அதுபோலவே மாந்திரீகம் என்பது ஓரளவிற்கு வேலை செய்யும் என்பதாக  ஒரு பேச்சுக்கு, வைத்துக்கொண்டு பார்ப்போம்.

மந்திரங்களை சுயமாய் , தனக்கெனப் பிரயோகிக்கலாம். பிறர் நலம் பெறவும் பிரயோகிக்கலாம்.. இதனை சம்பந்தப்பட்ட பிறரின் விருப்பப்படியே செய்கிறர்கள். அவர்கள் ஏற்புத் தன்மையுடன் இருப்பதால் பலன் உண்டு

ஆனால் மாந்திரீகம் என்பது தான் கெட்டுப்போவதற்காக செய்யப்படுவதில்லை.. பிறர் கெட்டுப்போகவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு செய்யப்படுவது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபரின் நேரடி பங்கேற்பும் இருக்காது. அதனால் பலன்கள் அந்நபரின் மனநிலையைப் பொறுத்தே மிகக் குறைவாகவே தாக்கும்  அதுவும் மன உறுதியின்றி பால்போல் வெள்ளை உள்ளமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

சரி, நம் மனதின் தற்போதய நிலை என்ன ? பால் போன்ற வெள்ளை மனமா ? கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றதா ? 

வாழ்க்கையில் வெற்றியை குவிக்க, அல்லது வெற்றி தாமதம் ஆகிக் கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டுமானால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று சுயபரிசிலனை செய்து கொள்வது உத்தமம். பாலாக நீங்கள் இருக்கலாம். நெய்யாக உருமாறி சிறப்படைவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பாதையில் விசம் போன்ற சில விஷயங்கள் குறுக்கும் மறுக்கும் வரத்தான் செய்யும்.

உங்கள் மனம் தீயாய் இருந்தால் எல்லாவற்றையும் பஸ்பம் செய்துவிட்டு நினைத்தை அடைந்தே தீரும். இந்தத் தீ இயல்பாய் உங்களுக்குள் இருக்க வேண்டும். கருத்தொடர் வழியே வந்திருக்க வேண்டும்.  சிறு வயது முதல் வளர்ந்த சூழல் அந்தத் தீயை மேலும் தூண்டக்கூடியதாய் அமைந்திருக்கலாம்.

வெற்றிகள் தாமதமானால் மற்றவைகள் மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. நம் பங்கு என்ன என்று சுய ஆய்வு மேற்கொள்வோம். நாம் பாலா, நெருப்பா என்பதில் தெளிவடைவோம். , நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் மனமே.. நம் விருப்பமும் கூட.

 மகிழ்ச்சி நன்றி
நிகழ்காலத்தில் சிவா







Sunday, April 7, 2019

கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை!

கர்ப்பகால உடல் வீக்கம் குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், கீதா ஹரிப்ரியா: 

கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து, சில பெண்களுக்கு, கை, முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்; இது இயல்பானது. இதனால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என, கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை.சீரான நடைப்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளின் மூலமே, இதை, சரி செய்து விடலாம். 

கர்ப்பிணிகளின் உடலின் தன்மையை பொறுத்து, வீக்கத்துக்கான காரணங்களும், தீர்வுகளும் வேறுபடும். பொதுவாக, கர்ப்ப காலத்தில், உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நீர்ச்சத்து, வழக்கத்தைவிட, 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது, உடல் உறுப்புகள் வீக்கமடைய, காரணமாக அமையலாம்.

கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது, கர்ப்பப் பை விரிவடையும். அதனால், அதன் அருகில் உள்ள ரத்தக்குழாய் அழுத்தத்துக்கு உள்ளாகி, ரத்த ஓட்டம் சீரின்றி இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, சருமத்தின் அடியில் நீர் கோர்த்து, வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். 

அதிகப்படியான ரத்த அழுத்தம் காரணமாகவும், வீக்கம் ஏற்படலாம்.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பு சத்தும், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கை, கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதாலும், வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, உடலில் ஏற்படும் புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும், வீக்கத்துக்கு காரணமாகின்றன.ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம், மெதுவான நடைப்பயிற்சி அவசியம். இறுக்கமான ஆடை மற்றும் காலணிகளை தவிர்க்கலாம். உடலை விட, கால்களை சற்று உயர்த்தி வைத்து கொண்டால், ரத்த ஓட்ட சீரின்மையால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும். 

தொடர் வீக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனைபடி, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யலாம்.புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், ஊறுகாய், வற்றல் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், கீரைகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து கொள்ளலாம்.பால், தண்ணீர், பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை, பருக வேண்டும். சீரான இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றமும் அவசியம். இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளோர், கர்ப்ப காலத்தின் துவக்கத்திலிருந்தே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

நன்றி தினமலர் 07/04/2019

Thursday, April 4, 2019

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)

கோவை ராமநாதபுரம் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஏறத்தாழ மதியம் 11.30 மணி கடும்வெய்யிலில் திணறினேன். காரணம் தேர்தல் பிரச்சாரம்.  சாலையின் இரும்ருங்கிலும் டெம்பொ டிராவலர் வேன்கள். சுமாராக 100 எண்ணிக்கையில் இருக்கலாம். சந்துபொந்துகளில் புகுந்து  சிங்காநல்லூர் செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது

அடுத்து மாலை 4.15 க்கு பவர்ஹவுஸ் பகுதியில் முக்கிய வேலை.. அது முடிந்தபின் 4.45 க்கு கலெக்டர் அலுவலகம் அருகில் வேலை.. பவர் ஹவுஸ்கிட்ட அரசியல் மீட்டிங்.. ரோடு மறிக்கப்பட...... வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றேன். இங்கும் சின்ன வேன்களில் சாரி சாரியாய் மக்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்தபின், உள்ளே அனுப்பி, எண்ணி சரிபார்க்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்

எதற்காக இந்த கூட்டம் சேர்த்தல் என்று புரியவில்லை. யாருக்காக என்றும் புரியவில்லை..  எந்தக்கூட்டணியாக இருந்தாலும் சரி.. மக்களிடையே இந்த மீட்டிங், பிரச்சாரம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றியது.  எல்லோரின் கையிலும் வாட்ஸாப், ஃபேஸ்புக் வசதியுடன் அலைபேசி. எல்லா ஊழல்களும், அயோக்கியத்தனங்களும் விரல் நுனியில்.  இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. 

சிங்காநல்லூர் நகராட்சி மண்டல  அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். வரவேற்புக்கு ஒரு வயதான பெண் அலுவலர். .. வருபவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கூட்டம் அதிகமாக இருக்கவே சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நபர் சொத்துவரி கட்டுவதற்கான பாஸ்புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து. புது புத்தகம் வேண்டும் என்றார். அந்த அம்மா ஏனுங்க இதுக்கு என்ன ஆச்சு ? என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. ? நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போனாத்தானே வருவாங்க ? வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். ? நல்லாப் பார்க்கக் கூட மாட்டீங்கறீங்க என்று மானாங்காணியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அந்த அம்மா சற்றே யோசனையுடன் புத்தகத்தை புரட்டிப் பார்க்க அருகில் நின்ற எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.. சரி என்றைக்குமே அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொங்க வேண்டுமா ? இன்று ஆதரவாக ஓரிரு வார்த்தைகளச் சொல்வோம் என்று எண்ணி “ அண்ணா.. நீங்க வந்து புத்தகத்தை கொடுத்ததில் இருந்து அந்தம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க பார்த்துச் சொல்லுவாங்க என்று சொன்னேன்.

ஆனால் அவரோ என்னை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு.. நீங்க கம்முனு இருங்க என்றார். சிரித்துக் கொண்டே சரி என அமைதியாக நின்று  விட்டேன். பெண் அலுவலர் அந்த புத்தகத்தை நன்கு புரட்டிப் பார்த்துவிட்டு, கடைசிப் பக்கத்தில் 2019-2020 என்று பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்து இது இருக்கின்றதே இதுவே போதுமே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்
அவரோ அதெப்படி ஒரு பக்கம் போதுமா ? இந்த வருடம் முழுவதும் கட்ட இது போதுமா புது புத்தகம்தான் வேண்டும் என்று சண்டைக்கு நின்றார்.  இரண்டு வரி பதிவு செய்ய அந்த கடைசிப் பக்கமே தாரளமாகப் போதும் என்ற நிலைகூடத் தெரியாமல் வந்ததில் இருந்து சண்டைக் கட்டிக் கொண்டே இருந்த அந்த நபரைப் பார்த்ததும் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான்டா லாயக்கு :) 

Tuesday, March 19, 2019

இனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ


அலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின்  இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்தக்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை.  மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.
சரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்து சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான். 
.
இதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது.  சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.

எதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவரது இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார்.  நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir  என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.


Monday, January 7, 2019

மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?

சுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)
ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).
நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..
உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..
ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..
மன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 🌻ஸ்ரீனி🌻

facebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்

Monday, December 31, 2018

பயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் ?

மனதை விலகி நின்று கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கவனிக்க முடியாமல் போகும். அப்போது குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்.  இதுதான் கடந்த இடுகைகளின்  சாரம்.

மனதை கவனித்தலில் உள்ள சூட்சமமே, புலன்களால் அறியப்படுகிற எதனையும், எதனோடும் இணைத்துப் பார்த்துக் கொண்டு, மனம் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கும்.. உங்களை அறியாமலே இது நடக்கும்.

கவனித்தல் கைவரப்பெற்றால் மனம் இந்த வேலையைச் செய்யாமல் அனுபவத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கும்.

இந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதில் உள்ளடங்கிய செய்திகளை அப்படியே மனம் வாங்கிக்கொண்டு இருந்தால் கவனித்தலில் முன்னேற்றம்.. மாறாக இப்படி செய்தால் அப்படி நடக்காதா? என்ற கேள்வி, இந்தமாதிரி எத்தனை படிச்சிருக்கேன். செஞ்சும் பார்த்தாச்சு, பலன் இல்லை என்றோ மனம், எதனோடாவது கொக்கி போட்டால் ’நழுவுகிறது’ என்றுதான் பொருள்.:)

எனக்கு ஒரு பனியனைப் பார்த்தால் துணி என்ன ஃபைனா? இண்டர்லாக்கா? சிங்கிள் ரிப்பா? லூப்நிட்டா? டர்க்கியா? லைக்ரா பைனா? என்று பார்த்த மாத்திரத்தில் மனம் தன்னிச்சையாக விடையினை உணர்ந்துகொள்ளும் . இதற்கு விநாடிக்கும் மிகக்குறைவான நேரமே போதும். இது வெளியே குவியும் மனம்.

ஆனால் கவனித்தல் எனக்கு வசப்படும்போது துணியை துணியாக மட்டுமே பார்ப்பேன். பார்க்கிறேன் என்ற உணர்வு இருக்கும். துணி என்ன வகைன்னு சொல்லு என மனதிற்கு கட்டளை என்னுள் உருவகம் பெற்று, மனதிற்கு தரப்பட்டபின்/தரப்பட்டால் மட்டுமே அதே விநாடியில் இந்த துணி இன்ன வகை என்று மனம் எனக்குச் சொல்லிவிட்டு அமைதியாக வேண்டும். இது போல் எல்லா கணங்களிலும் விழிப்புணர்வு கைவரப்பெற்ற நிலை. ஒவ்வொரு கணமும் நிகழ வேண்டும். அவ்வப்போது மட்டுமே இது எனக்கு நிகழ்கிறது. இதில் நிலைத்த தன்மை வேண்டும் என்ற முயற்சிதான் எனது இந்த எழுத்துகள்.:)

சரி வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்போது எதிரே வரும் லாரியினை பார்த்து, இப்படி வருகின்றதே ஒதுங்க வேண்டுமே மனதின் உத்தரவிற்கு காத்திருப்பதா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எப்பொழுது வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டத் துவங்கி விட்டீர்களோ அப்போதே மனம் இயங்கத் தொடங்கிவிடும்...மிகக்குறைந்த அளவில், வாகனத்தை இயக்கும் அளவிற்கு மனம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஓட்டும்போது தன்னிச்சையாக கையும் காலும் இயங்க, மனம் எங்கோ நழுவத் துவங்கும். இதையே எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை என்று சாதரணமாகச் சிலர் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வற்ற நிலைதான் தவிர்க்கப் படவேண்டும்.

மனதை இப்படிக் கவனித்துப் பழக்க, சாத்தியக்கூறான வழிகளில் ஒன்று மந்திரம்.. , அலைகிற மனதை கட்டுக்குள் கொண்டுவர மந்திரங்கள் பெரும்பாலும் உதவும். ஆனால் அவைகளைக் கையாளும்போது மட்டுமே பலனளிக்கும். அதன் பின் மனம் மீண்டும் குரங்காகிவிடும். இது மனதின் தன்மை :)

இதைக் கட்டுக்குள் கொண்டு வர நமது மனதை நமது உடலோடு பிணைக்க வேண்டும்/ ஏற்கனவே அப்படித்தானே இருக்குது என்கிறீர்களா? மனதின் பிறப்பிடம் நமக்குள்ளே.  ஆனால் அது விளையாடிக் கொண்டு இருக்குமிடம் நமக்கு வெளியே, ஊர் உலகம் அரசியல் என்று எங்கு வேண்டுமானாலும் :)

மனதைக் கவனிக்க, அதை நம் கண் பார்வையிலேயே (ஙே..) வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்கமோ, இந்தப்பக்கமோ ஓடவிடக் கூடாது. அதற்குச் சிறந்த வழி, சரியான வழி, உடலை கவனிக்கச் செய்தல். இது மனதை பழக்குவதற்கான ஆரம்பநிலைப்பாடம். உடலின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கச் செய்வதுதான். முயற்சித்துப்பாருங்கள். ரோபோட் மாதிரி அசைவதா என்கிற குழப்பம் வருகிறதா?  இயல்பான செயல்களில் உங்களின் அசைவுகளோடு மனதை ஒட்டவையுங்கள்.  அது  அப்படியே அசைவுகளுடன் பொருந்திக்கொள்வதை அனுபவமாக அடைவீர்கள்.

வெற்றி உண்டாகட்டும்.


Thursday, August 30, 2018

ஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ


முன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது.  முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது.   கிறிஸ்துவர்களுக்கு   இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது .  ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும்,  நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.

இயேசுவைத் தெரியும்,  ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும்,  பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும்.  உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன.   இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது

ஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்.,  பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.

 அப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ  விட்டு விலகி விடுவதும் இல்லை.  மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.  அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்  பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்

ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா



Wednesday, November 8, 2017

தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ

தளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.
சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:

ஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.

இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.

ஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.

அடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது

முழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு
வாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.

உன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்

கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’  என்று அதனிடம் சொன்னால் போதும்.

 உன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.

அடுத்து
இன்னும் ஆழமாக,

மனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது.  சிறிது கால அவகாசம்  பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.
உடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.

அடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.

 உடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து
நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு.  உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து. 

 உடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி   இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.

ஓஷோ
தம்மபதம்



Sunday, October 22, 2017

தானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ


நீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது

ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.

ஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும்  எண்ணங்கள்.

இந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.

ஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.

உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது

எதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்தனத்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா






Tuesday, August 22, 2017

குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை


பிறந்தது முதல், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை குறித்து கூறும், டயட்டீஷியன் ஷைனி சந்திரன்:

பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; தாய்ப்பால் தான் மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு.
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் அன்றி, வேறு உணவு தேவையில்லை.

சுகப்பிரசவம் அல்லது சிசேரியனில் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆறு முதல், 12 மாதங்களில், குழந்தையின் எடை, பிறந்த போது இருந்ததை விட, இரண்டு மடங்கு கூடியிருக்கும். அதனால், 600 - 700 கலோரி வரை ஊட்டச்சத்து மிக்க உணவு, குழந்தைக்கு தேவை. தாய்ப்பால் மூலம், 400 - 500 கலோரி மட்டுமே கிடைக்கும் என்பதால், வேறு துணை உணவுகளும் கொடுக்க வேண்டியது அவசியம்.காய்கறி, நெய் சேர்த்து நன்கு மசிக்கப்பட்ட சாதம், வேக வைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வாழைப் பழம், பிஸ்கட், பப்பாளி, மாம்பழக் கூழ், சப்போட்டா என, சிறிது சிறிதாக சத்துணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று வேளையும், தாய்ப்பால் கொடுக்காவிட்டால், ஒரு நாளைக்கு ஐந்து வேளையும், இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.குழந்தைக்கு தேவையான போது, 12 - 24 மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்டலாம். அனைத்து உணவுகளையும், புதுவிதமான ரெசிபிகளாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அரிசி கஞ்சி, இட்லி, தோசை, உப்புமா, டோக் ளா, கடலை மாவு பர்பி, வெஜிடபிள் கட்லெட், பிரெட் துண்டுகளுடன் சீஸ் ஆம்லெட் என, வித்தியாசமாக தயாரித்து
கொடுக்கலாம்.இரண்டு வயதுக்கு மேல், தினமும் மூன்று வேளை உணவு கொடுக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாழைப்பழ மில்க் ஷேக், சப்போட்டா பழக்கூழ் போன்ற சத்துணவுகளையும் கொடுக்கலாம். 2 முதல், 5 வயது வரை, ஒரு குழந்தையைப் போல் மற்ற குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது.

எனவே, எந்த குழந்தையுடனும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒப்பிட்டு வருத்தப்பட வேண்டாம். 2 வயதில் சராசரியாக ஒரு குழந்தை, 2.5 கிலோ எடை அதிகரித்தும், 12 செ.மீ., உயரத்துடனும் இருக்கும். 3 - 5 வயதுக்குள், 2 கிலோ எடை அதிகரித்தும், 6 - 8 செ.மீ., வரை உயரம் அதிகரித்தும் இருக்கும். ஆறு முதல், 12 வயது வரை, குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பதின் பருவத்துக்கு முந்தைய கால கட்டம் என்பதால், குழந்தையின் எடை, 3 - 3.5 கிலோ அதிகரித்தும், உயரம், 6 செ.மீ., அதிகரித்தும் இருக்கும்.

சத்து மாவு லட்டு, தேங்காய் பர்பி, நிலக்கடலை உருண்டை, சன்னா சுண்டல், ராகி அடை, காய்கறிகள் சேர்த்த ஸ்டப்டு ரொட்டி, பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு சேர்த்த ஸ்நாக்ஸ் பார், எள்ளுருண்டை, வறுத்த நிலக்கடலை, அவல், பழ ஸ்மூத்தி போன்றவை சிறந்த உணவு!

குழந்தையின் விருப்பம், உங்களின் வசதிக்கேற்ப வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது, ஊட்டச்சத்தும் கெடாது; துாய்மைக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.

நன்றி தினமலர்