"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, August 20, 2012

என்ன நடக்குது இங்கே - 3

ஆன்மீகம் பற்றி அதில் உள்ளவர்களே போதுமான தெளிவில் இல்லை. தாம் தெளிவில்லாமல்  இருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாத அப்பாவிகள் அநேகர். இவர்களைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு எனக்கு அந்த சக்தி இருக்கிறது. இது இருக்கிறது என அவர்களிடம் காசு பார்க்கும் கூட்டமும் இதே ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி பிழைத்துக்கொண்டு இருக்கிறது ஆன்மீகத்தை கெடுத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த சூழ்நிலைதான் கம்மெனு போறாவங்களையும் திரும்பி நின்னு காறித்துப்பச் செய்துவிடுகிறது. (விதிவிலக்குகள் இருக்கும்)

இந்தநிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஆன்மீகப் பாதையில் பயனிப்பதன் பலனை அனைவரும் பெறமுடியும். ஆன்மீகம் என்பது வெறும் அற்புதங்கள் செய்வது மட்டுமோ,  குறை தீர்ப்பது மட்டுமோ அல்ல. இதெல்லாம் பக்க விளவுகள்தான். உண்மையில் ஆன்மீகம் என்பது எவ்வகையிலாவது உடலைப் பேணி நம் மனதிற்கு தெம்பூட்டுவதுதான். உடல்,உயிர்,மனம் இவற்றிற்கான ஒத்திசைவை, இணக்கத்தை அதிகப்படுத்துவதுதான்.

இதற்கு முதல்படி தன்னை உணர்வது மட்டும்தான். இதை ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்தால்தான் சமுக முன்னேற்றம் என்பது கிடைக்கும். அப்படி தன்னை உணர்வது பற்றி எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரிந்து இருக்கலாம். எனக்கும் தெரியும் என்பது முக்கியமல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்தோம் என்பதே முக்கியம்.

நாம் இந்த தொடரில் நம்மை (தன்னை) உணர்வதில்,அதன் வழிமுறைகளில் சிலவற்றைப் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இவை எல்லாம் தனித்தனியானது அல்ல. ஒவ்வொன்றுமே முக்கியமானதுதான். .

முதலில் நம் மனதில் உள்ள அடையாளங்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். நான் இன்ன சாதி.எனது கட்சி இது. எனது மதம் இது என் தலைவன் இவர் என் கடவுள் இது, கடவுளே இல்லை, என் வாழ்க்கை முறை இப்படித்தான். என எல்லோருக்கும் தெரியும் வண்ணம் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருப்போம். இதுதான் ஊர்உலகத்துக்கே தெரியுமே என்கிறீர்களா? இங்கே உங்கள் மனம் இவற்றோடு எந்த அளவு பிணைக்கபட்டிருக்கிறது என்பதை நீங்கள்  கண்டுபிடிக்கவேண்டும் எனபதுதான் முக்கியம்.

உதாரணமாக நம் சாதியைப் பற்றி ஒருவர் குறை கூறும்போது எனக்குக் கோபம் வந்தால் மிக இறுக்கமாக இதனுடன் என மனம் அடையாளப்படுத்தப்படுகிறது. மாறாக ஏன் சொல்றாங்க, அப்படி சொல்லும்படி நாம் என்ன தவறு செய்தோம். அடுத்த முறை சொல்லாத அளவிற்கு நம்மால் நடக்கமுடியுமா என மனம் சிந்தித்துக்கொண்டு எதிராளியின் மீது பாயாமல் இருந்தல் மனம் கொஞ்சூண்டுதான்  இதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் :)

மனம் எந்த ஒன்றோடும் எந்த அளவு பிணைக்கப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்வதே, அடையாளம் கண்டு கொள்வதே மனதை அறிவதன் முதல்படி.இதை யோசித்துப்பார்க்க ரொம்ப எளிதாகத் தோன்றும். எனக்கு எல்லாச் சாதியும் ஒண்ணுதான். இப்படி நினைக்கச் சுகமாத்தான் இருக்கும். ஆனால் தகுந்த சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான் உங்களுக்கு மட்டும் தெரியும். நீங்கள் எந்த அளவு இதில் தீவிரமாக இருக்கின்றீர்கள் என. இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அஸ்திவாரமே இதுதான் :)

வெளியுலகிற்கு தெரியும் வகையில் உள்ள அடையாளங்கள் எவை? நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை? என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா? இதோ வர்றேன்.

குடும்பம் ஆகட்டும், தொழில் செய்யுமிடம் ஆகட்டும், ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும், அல்லது சமுதாய முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும் நீங்கள் அதில் குறிப்பிடத்தக்கவராக., சாதனையாளராக, எதிர்ப்பில்லாதவராக, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா என்று ஒதுங்காதவராக மாற வேண்டும்.இது ஒன்றே பத்தோடு பதினொன்றாக நாம் வாழவில்லை, ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்ற நிறைவைக் கொடுக்கும். இதை வேண்டாம் என்று சொல்பவர் யார்?

இதற்கு முதலில் மனதை தகுதிப்படுத்தவேண்டும். அப்படி தகுதிப்படுத்த மனதைப் பற்றிய புரிதல் நடைமுறையில் அது இயங்கும் தன்மைகளை அறிந்து அதற்கேற்றவாறு இயங்கவேண்டும்.மனதின் ஏற்கும்தன்மையை முழுமையாகப் பயன்படுத்த அதை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு
நம்மிடம் உள்ள நமக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் குணங்களை அடையாளம் காண வேண்டும். இந்த குணங்கள் நம்மிடம் எப்படி தீவிரமடைகின்றது என்பதை கண்டுபிடிக்கத்தான் எதனோடு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்று ஆராய்கிறோம்.


மேலோட்டமாக மனதில் உள்ள பொறாமை, ஆசை, கவலை, கோபம்...போன்ற குணங்களை அறிய முடிந்தாலும். எனக்கு இவைகள் இல்லை எனச் சிலர் சொல்லக்கூடும். இந்த குணங்கள் குறைந்த அளவில் நம் மனதில் அடி ஆழத்தில் மறைந்து கிடந்தால் அவற்றை அறிவது கடினம்.... இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு திரிவோம் :) ஆனால் அடையாளம் கண்டுகொண்டால்தான் இவற்றை கையாள்வது எளிதாகும்.

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

6 comments:

  1. பற்றற்ற என்ன இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது சுஜாதா எத்தனை ற என்று கேலியாக குறிப்பிடுவார், ஆனால் இது தான் மனிதர்களுக்கு தேவையாய் இருக்கிறது. விரும்பியது கிடைக்காத போது, எதிர்பார்ப்பது நடக்காத போது நமது மனோநிலையில் ஏற்படும் மாறுதல்களை வைத்தே நாம் எந்த அளவுக்கு பக்குவப்பட்டுளேளோம் என்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

    நான் நிறைய விசயங்களில் மாறி வந்துள்ளேன்,

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஜோதிஜி., அனுபவங்கள் நமக்கு இந்த படிப்பினையை கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றது. விழிப்புடன் இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம் :))

      நன்றி ஜோதிஜி..

      Delete
  2. Replies
    1. நன்றி கிருஷ் வரவுக்கும் கருத்துக்கும்.. :)

      Delete
  3. நல்ல அலசல்... சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்... நன்றி... (2)

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன். தொடர்வருகைக்கும் கருத்துக்கும் :)

      Delete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)