"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, January 5, 2012

சொர்க்க வாசல் திறப்பு....

நட்புகளுக்கு., இந்தவலைத்தளம் ஆரம்பிக்கும்போது படிப்பவருக்கு மனதளவில் ஏதாவது ஒரு வகையில் தூண்டுதலை ஏற்படுத்தவேண்டும். என்ற நோக்கத்தோடுதான் ஆரம்பித்தேன்.  அதே சமயம் நான் எந்த அளவில் மனம் சார்ந்த விசயங்களில் புரிதலோடும்/செயல்பாட்டிலும் இருக்கிறேன் என்ற சுய பரிசோதனை முயற்சியுமாக ஆரம்பித்தேன்.

வலைதளங்களில் மனம் சார்ந்த விசயக்களை எழுதுபவர்கள் குறைவாக இருப்பதால் இணையத்தில் தேடுவோருக்கு இவை கிடைக்கவேண்டும் என்ற உந்துதலாலும் தொடர்ந்து  மனம் சார்ந்து ஆன்மீக கருத்துகளை பகிர்ந்து வருகிறேன்.

வாழ்க்கை என்பதே கொண்டாட்டமாக இருக்க வேண்டும். அப்படி என்றால் பொழுது போக்கில் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே அல்ல. அதன் பின்னரும் எப்படி இருக்கிறோம் என்பதே......இதன் பொருள் நிகழ்காலத்தில் இருத்தலே...

உங்களுக்குள் எழும் உணர்வுகளை அப்படியே இயல்பாக வெளிப்படுத்த முடிகிறதா? மகிழ்ச்சியான தருணங்களின் போது அதில் முழுமையாக பங்கேற்க முடிகிறதா., அல்லது சோகமான தருணங்களின் போது அதை புரிந்துகொண்டு அதிலேயே அழுந்திவிடாமல் வெளியே வரமுடிகிறதா என்பதை மாத்திரம் அவ்வப்போது உறுதி செய்து வாருங்கள்...!

மகிழ்ச்சி மட்டுமே வாழ்வில் நிறைந்திருக்க வேண்டும் என நானும் ஆசைப்பட்டவனே., ஆனால் இயற்கை பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் நமக்கு இன்பத்தையும் துன்பத்தையும் தந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் நம் பங்கு என்ன என்பதை சற்றேனும் உள்நோக்கி மனக்கதவை  திறந்து பார்த்து இருக்கிறோமா?  இல்லையெனில் பார்த்துப் பழக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

பல சமயங்களில் நம் வாழ்க்கை எப்படி போகிறது என்கிற உணர்வோ, சிந்தனையோ, இல்லாமல் புலம்பிக்கொண்டு தெரிந்தவிதமாய் வாழ்ந்துகொண்டே போகிறோம்.  இதை முதலில் நாம் ஏற்றுக்கொண்டு இந்த புதுவருடத்தில் இருந்தேனும் ஒருநாளில் சிலமணித்துளிகள் நம் மனதை உற்றுநோக்கும் செயலை மேற்கொள்வோம். அது மெல்ல மெல்ல நம்மை, நம் மனதை, அமைதி, சாந்தம், அன்பு, கருணை  என்ற சொர்க்கத்தை நோக்கிச் செல்ல நிச்சயம் சரியான பாதையை அமைத்துத் தரும்.

இந்த சிந்தனை எதோ சொர்க்க வாசல் திறப்புக்கு எதிரான கருத்து என நினைத்துவிடவேண்டாம். இன்னிக்கு சொர்க்கவாசல் திறப்புக்கு சென்றுவாருங்கள். அதன்பின் வாழ்க்கை அப்படியே இருக்கிறதா என்று பார்த்து ஏன் என்ற சிந்தனையும் தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தூண்டுதல் நம் எல்லோருக்கும் வரவேண்டும் என்பதே என் அவா.

முயற்சி செய்வோம், வெற்றி அடைவோம்.
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா.

5 comments:

  1. உண்மையான சொர்க்க வாசல் நம் மனதுக்குள்தான் திறக்க வேண்டும் என அழகாக எடுத்துக் காட்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. நான் ஜெயிச்சுட்டேன்.

    ReplyDelete
  3. //ஒருநாளில் சிலமணித்துளிகள் நம் மனதை உற்றுநோக்கும் செயலை மேற்கொள்வோம். அது மெல்ல மெல்ல நம்மை, நம் மனதை, அமைதி, சாந்தம், அன்பு, கருணை என்ற சொர்க்கத்தை நோக்கிச் செல்ல நிச்சயம் சரியான பாதையை அமைத்துத் தரும்.//
    அருமையான கருத்து.நன்றி.

    ReplyDelete
  4. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையும் நம் மனங்கள்..

    ReplyDelete
  5. உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் அறிவைத் தெய்வமாக்கி கொண்டாட வைக்கின்றன. நன்றி சிவா.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)