"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, May 5, 2020

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

 குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கறாங்க, எப்போதிருந்து அடம் பிடிக்க பழகிக் கொள்றாங்க என்று பார்த்தோம்ன்னா, சின்ன வயசுல இருந்தே, நடக்க ஆரம்பிச்சதில இருந்தே இதெல்லாம் கத்துக்குவாங்க. 

 குழந்தை வளர்ப்பில் அழும்போது, நம்ம போய், உடனே குழந்தையைக் கவனிக்கறோம். அதன் அழுகை வந்து, ஒரு சமயம் பசியா இருக்கலாம், இல்லை, குழந்தைக்கு தூக்கம் வர்றதுக்கான ஒரு அறிகுறியா இருக்கலாம், வயிற்று வலியா இருக்கலாம். அதெல்லாம் நம்ம சரியா தொடர்ந்து கவனிக்கும்போது, அதை நம்ம, காரணம் கண்டு பிடித்து தீர்க்க முடியும். இதை விட்டுவிடலாம்.

 ஆனால், நம்ம வெளியே கடைக்குப் போறோம். குழந்தை வந்து, ஒரு பொம்மை கேட்குது. சரி, அந்த பொம்மையை வாங்கிக் கொடுக்கிறோம். இன்னொரு பொம்மை கேட்குது.  என்ன நினைக்கிறோம்? ஒரு பொம்மை போதும். இல்லை, ஒரு chocolate போதும், அப்படின்னு நினைக்கும்போது, ஒண்ணு போதும் கண்ணா, அடுத்தமுறை வரும்போது, நம்ம  இன்னொண்ணு வாங்கிக்கலாம்னு, சொல்றோம். நம் குழந்தை, கேட்க மாட்டேங்குது. கடையில சத்தம் போடுது, அழுவுது, எல்லா ரகளையும் பண்ணுது. இல்லை, கீழே விழுந்து, தரையில புரண்டு, ஆட்டம் போடுது. தந்திரத்தை வெளிப்படுத்துகிறது.

அப்ப, நம்ம என்ன பண்ணணும்? 

அதற்கு முன்னரே நீ கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறாய்  என்கிற மெல்லிய உணர்வினை குழந்தைக்கு ஏற்படுத்தி இருக்கணும். அதையும் மீறி ஒரு குழந்தை அடம் பண்ணும்போதோ, குறைந்தபட்ச சமுதாய ஒழுங்கினை மீறும்போதோ, உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடாது. ஆனால் பதில் நடவடிக்கை (respond) மேற்கொள்ளலாம். எப்படி?

 எப்பவுமே ஒரு தவறான நடத்தைகளை, குழந்தைகள்  எப்படி கத்துக்கிறாங்கன்னா, அந்தக் குழந்தை தவறினை செய்யும்போது, பெற்றோர், குழந்தையின் அலட்டலுக்கு பயந்து போயி, இல்லை, அதீத செல்லம் கொஞ்சுவதால் குழந்தைக்கு அடிபணிந்து விடுகிறோம். இதிலிருந்து குழந்தை, தான் செய்த தவறினை சரி என்பதாக கற்றுக் கொள்கிறது.

இப்படி குழந்தை கத்துக்காம இருக்கிறதுக்கு என்ன பண்ணணும்னா, குழந்தையின் அந்த கவன ஈர்ப்பு, அடுத்தவர்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடிய செயல்களில் இறங்கி, அடம் பண்ணும்போது,  நம் குழந்தையை, அந்தக் கடையிலிருந்து தூக்கிட்டு, நம் வீட்டுக்கு வந்துரலாம்.  குழந்தை கேட்பதை பூர்த்தி செய்தே ஆகவேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

 வீட்ல ஏதாவது அடம் பண்ணுச்சுன்னா,  நாம் அதை அலட்சியம் பண்ணணும். எல்லா குழந்தைகளுமே அதிகபட்சம் ஒரு மூணு நாலு நிமிஷம், அல்லது  பத்து நிமிஷம் அழுதுட்டு, தானா அடங்கிடும். அப்படி அடங்கவில்லை எனில், குழந்தையை,  ஒரு அறைக்குள் விட்டு, நாமும் கூட போய் இருக்கணும். ஆனால் கதவை சாத்திரலாம். அதன் பொருள் குழந்தையின் உதவிக்கு தாத்தா, பாட்டி, அம்மாவோ அப்பாவோ என யாரும் வர மாட்டார்கள். வர சாத்தியம் இல்லை. என்பதை சொல்லாமல் உணர்த்தி விடவேண்டும்.

 நீ வேணும்கிறவரைக்கும் அழுதுக்கோ, நீ அழுது முடிச்சதுக்கு அப்புறமா, அம்மா/அப்பா கிட்ட வந்தா போதும். நான், உனக்காக இங்கதான் இருப்பேன், ஆனால்,  நீ அழுது காரியத்தை சாதிக்கணும்னு நெனச்சா, அந்த வேலை எங்கிட்ட நடக்காது அப்படிங்கிறதை இயல்பாக சொல்லிவிட வேண்டும். நம்மிடம் வெறுப்போ, கோபமோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இந்த respondதான் மிக முக்கியம். இந்தப் பக்குவம் நமக்குத்தான் வரணும். இப்படி ஓரிரு முறை நடந்தாலே குழந்தை புரிந்து கொண்டு அடம் பிடிப்பதை விட்டுவிடுவார்கள்.

பக்குவமில்லாத எதிர்வினைன்னா என்னவாக இருக்கமுடியும்?  நம் குழந்தை மீது, பதில் கோபம் காட்டறது, அடிக்கிறதுங்கிறது எல்லாம் குழந்தைக்கான தண்டனையாக மாறிவிடும்.  இது ஓரளவிற்கு, அப்போதைக்கு பயன் தந்தால் கூட, நாளடைவில,   அம்மா என்ன பண்ணுவாங்க, ஏதாவது குறும்பு பண்ணினால், அடிக்கத்தானே போறாங்க, அப்படின்ற ஒரு தான்தோன்றித்தனம் வந்துரும், குழந்தைகளுக்கு. அப்புறம் திருத்துவது கடினம். தானாத் திருந்தினாத்தான் உண்டு.

குழந்தையை குழந்தையா இருக்க விடுங்க என்பதை வேற ஏரியா. குழந்தையா இருக்காம அடம்பிடிச்சு, பெரிய மனுசனா மாற, குழந்தை முயற்சிக்கும்போது என்ன செய்யலாம்ன்ற நடைமுறை பகிர்வுதான் இது.

சரி. இது குழந்தைகளுக்கு மட்டும்தானா? பெரியவர்களுக்கு பொருந்துமா என்றால் திருமணமான பெண்களுக்கு நன்கு பயன்படும். கூட்டுக் குடும்பமாக இருப்பின் நன்கு வேலை செய்யும். கணவனை வீட்டுக்குள் விட்டு.....

சரி, ஆண்களுக்கு? வாய்ப்பில்லை ராசா. சொன்னபடி கேட்கவும்.

Thursday, December 5, 2019

சமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது!

வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி சித்த மருத்துவர் க.மதுகார்த்திஷ்: சமூக வலைதளங்களில் வரும் ஆரோக்கிய குறிப்புகளை அனைவரும் கண்ணை மூடியபடி பின்பற்ற முயற்சிக்கின்றனர்; அதனால் ஆரோக்கியம் கிடைக்காது; ஆபத்து தான் கிடைக்கும்.

உடல் பருமன் பிரச்னைக்கு, எலுமிச்சை சாறு, வெந்நீர், தேன் கலந்து குடிக்க வேண்டும் என, 'வீடியோ' படத்துடன் செய்தி வருகிறது. எலுமிச்சை சாறுடன் வெந்நீர் சேரும் போது, அமிலமாக மாறி, தொடர்ச்சியாக அருந்தும் போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். தேனை எதனுடனும் சேர்த்து சாப்பிடக் கூடாது. கையில் ஊற்றி, நக்கி தான் சாப்பிட வேண்டும். 

சிறு தானியங்களை தினமும் சாப்பிட்டால், உடல் வலு பெறும் என்கின்றனர். உண்மை தான் என்றாலும், அதை சரியாக, பக்குவமாக தயாரித்து சாப்பிடாவிட்டால், ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். சிறு தானியங்களை, எட்டு - பத்து மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். அவை எல்லாவற்றையும், ஒன்றாக கலந்தும் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு சிறு தானியத்திற்கும், வெவ்வேறு குணங்கள் உள்ளன; ஒவ்வொன்றையும், தனித்தனியாகத் தான் சாப்பிட வேண்டும். 

செக்கு எண்ணெய் தான் நல்லது என்கின்றனர். நல்லது தான். ஆனால், அதிக உடல் உழைப்பாளர்களுக்குத் தான், அது நல்லது. அதில் அடர்த்தி அதிகம் என்பதால், எளிதில் ஜீரணம் ஆகாது. ஒவ்வொரு பருவ நிலைக்கும், வெவ்வேறு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். குளிர் காலத்தில் கடலை எண்ணெய்; கோடை காலத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். 

ஓமம், கருஞ்சீரகம், வெந்தயத்தை வறுத்து, பொடித்து சாப்பிட்டு வந்தால், எந்த வயிற்றுப் பிரச்னையும் வராது என்கின்றனர்; அதுவும் தவறு. கருஞ்சீரகம், அதிக உஷ்ணமானது. தினமும் பயன்படுத்தினால், எதிர் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். 

ஆப்பிள் சிடார் வினிகர், இஞ்சிச் சாறு, பூண்டுச்சாறு சேர்த்து குடித்தால், மாரடைப்பு அபாயம் நீங்கி விடும் என, சமூக வலைதளங்களில், இஷ்டத்திற்கு பலர் தகவல் பரப்புகின்றனர். அது தவறு. வினிகர், நம் சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதல்ல. 

இது போன்ற இயற்கை மருத்துவத்தை நாடி, ஆங்கில மருத்துவம் அல்லது பிற மருத்துவத்தை கைவிட்டவர்கள், மரணம் அடைந்து உள்ளனர் என்பது பலருக்கு தெரியாது. எந்த உணவாக இருந்தாலும், எளிதில் ஜீரணம் ஆக வேண்டும்; மலச் சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்; சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவ வேண்டும். தேர்ந்த மருத்துவர்களின் ஆலோசனைபடியே, இயற்கை பொருட்களை மருந்தாக பயன்படுத்த வேண்டும்!

Monday, November 18, 2019

5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.


      ஜோதிஜின் புதிய புத்தகமான 5 முதலாளிகளின் கதை, amazon pen to publish 2019 Tamil competition போட்டியில் பங்கெடுப்பதற்காகவே எழுதப்பட்டிருதது. Kindle E-book ஆக மட்டுமே வெளியாகி இருப்பதால் முதன்முறையாய் Kindle for Pc மூலம் வாசிக்க வேண்டியதாகிவிட்டது.

      ஒரு முதலாளி, தனது வெற்றிக்கான வாய்ப்பினை, ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி கண்டுபிடித்து, அதனைத் தன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார் என்கிற, தன் குணத்தையே அனுபவமாக எழுதி இருக்கிறார். இந்தப்புத்தகம் அவரது பலவருட தொழில் அனுபவங்களின் காரணமாக, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த வழிகாட்டியாய் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

      அடுத்த தலைமுறை என்பது நடுத்தர மக்களான குடிசைச் சமூகம் என்று ஜோதிஜியினால் வர்ணிக்கப்பட்ட, நம் இக்கால இளம் சிறுதொழில் முனைவோர் என்பதாகக் கொண்டால், இப்புத்தகம் அவர்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

      இரவு என்ற ஒன்று இருப்பதால்தான் பகலைப்பற்றியும், ஒளியைப் பற்றியும், அதன் தேவையைப் பற்றியும் பேச நேரிடுகிறது. ஒளியின் அவசியத்திற்கு, இரவைப் பற்றிப் பேசியே ஆகவேண்டும். ஆனால் உலகம் நம்மை எதிர்மறையாளன் என்றே முத்திரை குத்தும். பாதையில் உள்ள பள்ளங்களைப் பற்றிப் பேசுவது, இலக்கினை நோக்கிய பயணம் வெற்றியாக முடிய வேண்டும் என்ற அடங்கவொண்ணா ஆர்வம் மட்டுமே காரணம். ஜோதிஜியின் எழுத்துகளில் இதைக் காண்கிறேன்.

      இன்றைய காலகட்டம், வாழ்க்கை என்பது பணம் சார்ந்து, சற்று கடினமாக மாறிவிட்ட சூழலிலும் கூட, சொந்த உழைப்பினால் சேர்த்த முதலீடு இல்லாமல், எதாவது பரம்பரை அல்லது தாய்தந்தையரின் சொத்தினை விற்றுவரும் பணம், அல்லது யாரிடமோ மிகைப்படுத்திக் கூறி, முதலீட்டினை கவர்ந்து ஆரம்பிக்கப்படும் தொழில்கள் எனத் புதியன துவங்கப்படும் காலமாக மாறிவிட்டது.

  அதேசமயம், ஏற்கனவே அந்தந்தத் துறையில் இருப்பவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தி, புதிய இயந்திரங்கள், புதிய கட்டமைப்பு என்று ஆரம்பித்தாலும் பழையதுக்கு மாற்று அல்லது நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்தல் என்றே மாற்றங்களைச் செய்து கொண்டும் இருக்கின்றனர். இது மற்றவர்கள் பார்வையில் அசுர வளர்ச்சி என்பதாகவே தோன்றுகிறது.

      இத்தகைய இன்றைய சூழலில், புதிய தொழில்முனைவோரை வரவேற்று, நீங்கள் நூலுக்குள் செல்லும்போது, ஆரம்பிக்கவேண்டிய இடம் கடைசி அத்தியாயம். அதை, முதலில் ஒருமுறை படித்துவிட்டு, பின்னர் நூலை முதலில் இருந்து படிக்க ஆரம்பியுங்கள். இப்போது கடைசி அத்தியாயம் மூலம் ஜோதிஜி திருப்பூர் பனியன் தொழிலின் மீதும், புதிய தொழில் முனைவோர்களின் மீதும் கொண்டுள்ள அக்கறை எளிதில் விளங்கும்.

      சுமார் இருபது முப்பது வருடங்களுக்கு முன் இருந்த திருப்பூரை நூல் கண்முன்னே நிறுத்திவிடுகிறது. பணியிடங்களில் காமம் என்பது இப்போது சற்று நாகரீகமடைந்து பணியிடத்திற்கு வெளியே என்பதாக  வரவேற்கத்தகுந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டது. காரணம் Buyerரின் விதிமுறைகள் பின்பற்றுவதற்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகம் எல்லா இடங்களிலும் Camera மாட்டி இருப்பது, முக்கிய மாற்றம்.

        தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் Buyerரின் விதிமுறைகள், அதற்கான ஆடை உற்பத்திச் சூழல், இன்ன பிற வசதிகள் நிறைவேற்றுவது என்பது வேப்பங்காயாக இருந்தகாலம் நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. தற்போதோ, வசதிகளை விரும்பி ஏற்படுத்தி, Buyer வருவாரா என்று காத்திருக்கும் காலமாக மாறிவிட்ட சூழலில், புதிய தொழில் முனைவோர், தன்னை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது. 

    எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதை, பகலை, ஒளியைச் சொல்வதற்காக இரவினைப்பற்றி விளக்குவதுபோன்று சொல்லியிருக்கிறார். இந்த, தவிர்க்கப்பட வேண்டிய மனப்பான்மை, குணங்கள் என்பவை, பனியன் தொழிலுக்கு மட்டுமானதல்ல, எந்தத் தொழிலானாலும் பொருந்தும்.

   கூடவே, நாம் தொழில் செய்ய இறங்கும் களமான திருப்பூர், திடீரென வளர்ந்த நகரம். திட்டமிடப்பட்டு வளர்ந்ததல்ல. அதற்குச் சற்றும் குறையாத நம் அரசுகள், தொழிலுக்குச் செய்து கொடுக்கும் வசதிகள். அதை கேட்டு வாங்கும் அமைப்புகளுக்குள் கட்சிகள் புகுந்துகொண்டு ஒற்றுமையின்றி குரல் ஓங்கி ஒலிக்காவண்ணம் பார்த்துக் கொள்கின்றன.

    இதையெல்லாம் மீறி தொழிலின் வளர்ச்சிக்கான நடைமுறைகள், குறிப்பாக ஏமாற்றும் பையர்களிடம் பணம் வசூலிப்பதற்கான வழிகாட்டுதல்கள், எச்சரிக்கைகள் என இளம்தலைமுறையினரின் பாய்ச்சல்கள்தான் திருப்பூர் மீண்டும் முன்னைவிட உத்வேகத்தோடு எழும் என்ற நம்பிக்கையை, நமக்கு மிச்சம் வைக்கின்றது.

திருப்பூரின் தொழிலில், அப்படியே தொடர்கிற இரண்டாம் தலைமுறையினர் மிகக்குறைவு. ஆனால் புதிய தலைமுறையினர் வருகை அதிகம். அவர்களின் வெற்றி சதவீதம் அதிகரிக்கவேண்டும் என்ற அக்கறையை மட்டுமே, இந்த நூலில் நான் பார்க்கிறேன். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும், எந்தவடிவிலேனும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.

5 முதலாளிகளின் கதையை வாங்கிப் படிக்க இதை அழுத்தவும்.

5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by [ஜோதிஜி, Jothi G, Ganesan, Jothi]

நிகழ்காலத்தில்சிவா


Thursday, October 17, 2019

பழங்களை எப்படிச் சாப்பிடணும்?

பழங்களை அப்படியே சாப்பிடணும்!

பழங்களை எப்படி சாப்பிட வேண்டும்; வெட்டி வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது குறித்து, இயற்கை மருத்துவர் ஒய்.தீபா:

பழங்களை நன்றாக கழுவிய பின், அப்படியே கடித்து சாப்பிடுவது தான் நல்லது. அலுவலகத்தில் அல்லது பிற இடங்களில் அவ்வாறு சாப்பிட முடியாது என நினைப்பவர்கள், சிறிய பேனா கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போது, துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.

பழங்களை வெட்டி, நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிடும் போது, அந்த பழங்களில் உள்ள, 'விட்டமின் ஏ, சி, இ' போன்ற சத்துகளில் இழப்பு ஏற்படும். வெட்டப்பட்ட பழத்துண்டுகள், ஒளி மற்றும் ஆக்சிஜனுடன் வினை புரிந்து, பழத்தில் உள்ள, 'ஆன்டி ஆக்சிடன்ட்' அளவை குறைக்கிறது.

பழங்களை வெட்டி சாப்பிட வழியில்லை என நினைப்பவர்கள், அவற்றை துண்டுகளாக்கி, காற்று புகாத டப்பாவில் அடைத்து, 'ஏசி' அறை அல்லது பிரிஜ்ஜில் வைக்கலாம். இதனால், துண்டான பழங்களின் சுவாசம் குறைவாக இருக்கும்; எளிதில் கெட்டுப் போகாது.

அது போல, பழச்சாறுகளை, தயாரித்த சில நிமிடங்களில் அருந்த வேண்டும்; நீண்ட நேரம் வைத்திருந்தால், கெட்டு விடும். பழச்சாறுகளை உடனடியாக குடிக்க முடியவில்லை; கொஞ்ச நேரம் கழித்து தான் அருந்த முடியும் என்றால், ஐஸ் கட்டிகளை அதில் சேர்க்கக் கூடாது. இனிப்பு சேர்க்காமல், சிறிதளவு இந்துப்பு சேர்த்து வைத்தால், சீக்கிரம் கெட்டுப் போகாது.

எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி போன்ற, 'விட்டமின் சி' சத்து அதிகம் உள்ள பழங்களை, நேரம் கழித்து பருகக் கூடாது. தயாரித்த உடனேயே அதில் உள்ள, விட்டமின் சி சத்து, காற்றில் கரைந்து விடும்; எனவே, உடனே பருக வேண்டும்.

'இதுவும் பழச்சாறு தான்' என, 'டின்' பழச்சாறுகள் விற்பனைக்கு வருகின்றன. கொஞ்ச நேரம் வைத்திருந்ததும் கெட்டுப் போகும் பழச்சாறுகள், டின்னில் வைத்திருந்தால் மட்டும் கெட்டுப் போகாமல் இருக்குமா... கெட விடாமல் தடுக்கும் ரசாயனமான, 'பிரசர்வேடிவ்' அதில் உள்ளது.பழச்சாறு, தரமாக இருக்கிறதா என்பதை கண்டறிவது எளிது. பழச்சாறு தயாரிக்கப்பட்ட போது, எந்த நிறத்தில் இருந்ததோ, அதே நிறத்தில் இருந்தால், தைரியமாக அருந்தலாம். நிறம் மாறி இருந்தால், கெட்டு விட்டது என, அர்த்தம்!பழக் கடைகளில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ரசாயனம், நிறமூட்டிகள் கலந்தே விற்கப்படுகின்றன.

பல விதமான பழங்களை ஒன்றாக கலந்து, கூழாக அரைத்து, பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை சேர்க்கின்றனர். அத்தகைய பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது!

நன்றி தினமலர்

Wednesday, October 2, 2019

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை

முன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை. ஏனெனில் எதை எழுதினாலும், அதன் மறுபக்கம் அல்லது நியாயம் கூடவே மனதில் வந்து விடுகிறது. அதை ஒதுக்கி,  ஒன்றை நியாயப்படுத்தி எழுத வேண்டுமா என்ற கேள்வி தோன்றுகிறது.

கடும்கோடையில், பறவைகளுக்கு மொட்டை மாடியில்  சிறு கிண்ணங்களில் தண்ணீரும், சிறுதானியங்களும் வைத்தால், ஆகா அருமையான யோசனை  என, உயிர்களின் மீதான அன்பினை பாராட்டத் தோன்றுகிறது.

கூடவே, அது எங்கோ, தன் முயற்சியால் உணவு தேடி, நீர் அருந்தி, கூடு அடையும் பறவையாக இருப்பதை, நாய் பூனை போன்ற வீட்டு விலங்கு போல மாற்றி, அதன் இயல்பை, வாழும்திறனை ஒழிப்பதற்கு துணை போக வேண்டாம் எனவும் தோன்றுகிறது. இதுவும் அந்த உயிர்களின்  மீதுள்ள அன்பினால்தான் எனும்போது, இதையும் ஏற்க வேண்டியதாக இருக்கின்றது.

ஆக இரண்டு விசயங்களுமே சரிதான். செய்யலாம். ரொம்ப யோசிக்காமல் தோன்றுவதைச் செய்யலாம். இப்படி இருதரப்பு அபிப்ராயங்கள் வரும்போது எனக்கு என்ன விருப்பமோ அதையும், உங்களுக்கு என்ன விருப்பமோ அதையும் செய்ய வேண்டியதுதான்.  உள்ளார்ந்த அர்த்தம் அவரவர் வெளிப்படுத்தினால் அன்றித் தெரியாது.

தீனி வைக்காதவன் கஞ்சன் என்றோ, பிற உயிர்களின்மீது அக்கறை இல்லாதவன் என்று மற்றவனால் பார்க்கப்படலாம். தீனி வைத்தவன் நாயைக் கெடுத்தான்,  பூனையைக் கெடுத்தான், இப்ப குருவியின் வாழ்க்கை முறையை கெடுக்கிறான் என இவனால் பார்க்கப்படலாம். இதுதான் சமூக இயல்பு. இவற்றைக்  கண்டு கொள்ளாமல் உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே நல்லது. ஏன்?

இப்படியான நம் விருப்பத்தில் எது சரி, எது தவறு என்பதெல்லாம் விளைவுகளைப் பொறுத்தே அமையும் என்பதே, என் நிலைப்பாடு. சரி, தவறு என்பதெல்லாம் தர்க்கரீதியாக மனதை வைத்து யோசிக்காமல், சொல் விளையாட்டில் சிக்கிக் கொள்ளாமல், செயலின் விளைவாக என்ன நடந்தது என்று கவனித்தால் போதுமானது. இது மனிதர்களோடு தொடர்ந்து உறவாட உதவியாக இருக்கும்.

அப்படி நடப்பது அல்லது கிடைப்பது மனரீதியாக இருக்கலாம். இல்லை, பொருள்ரீதியாக இருக்கலாம். ஒரு சில ரூபாய் மதிப்புள்ள சிறுதானியங்கள் மூலம், உங்கள் மனதிற்கு ஒரு சந்தோசம், நிம்மதி கிடைக்கிறது. கூடவே குருவிகளின் வயிறும் நிறைகிறது எனில், அதை ஏன் தவிர்ப்பானேன்?  இது ஒரு சுயநலமான யோசனைதான். நான் மறுக்கவில்லை.

சுயநலமின்றி, பொதுநலம் இல்லை. என்னிடம் இரண்டு வேளைக்கான உணவு இருக்கிறது. எனில், அடுத்தவேளையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்வோம், இப்போது பசியுடன் இருக்கும் ஒருவரோடு பகிர்ந்து கொள்பவன் பாராட்டுக்குரியவனே.

தான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என இரு நபர்களுக்கு கொடுப்பவன் தியாகி, தெய்வம், முட்டாள் என்று எப்படிச் சொன்னாலும், ஒரே பொருள்தான்.

இதில், நான் செயல்களை உயர்வு தாழ்வு எனப் பிரிக்கவில்லை.  உங்களின் செயல்கள் உங்களைச் சார்ந்தோருக்கு, குடும்பம், தொழில் நட்புகள் என எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது  என்பதை கவனத்தோடு இருங்கள். குருவி வயிறும் நிரம்பவேண்டும், நம் மனதும் நிரம்பவேண்டும். வீட்டில் இருப்போரை பட்டினி போட்டு, உணவை வெளியே பகிர்வது, இங்கு பாதிப்பு, அங்கு மகிழ்ச்சி என்று அமைந்துவிடும்.

எந்தச் செயலாக இருப்பினும், அதன் பலன் இரு தரப்பிலும் மகிழ்ச்சியை விதைக்குமாறு அமைய, முயற்சிப்போம். மனநிம்மதியைப் பெறுவோம்.

நிகழ்காலத்தில் சிவா

Friday, May 10, 2019

உங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா ?

சின்ன வயதில் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாரேனும் மாந்திரீகம் செய்து வைப்பதாகப் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களிடம் சவால் விடுவதுண்டு. ”உனக்கு என்ன வேணும்?.என்னோட இரத்தம்?, என்னோட முடி?, என்னோட உடை எதுவேண்டுமோ? கேள், தருகிறேன். முடிந்தால் , என்னை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.ஒரே நிபந்தனை என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ, அதை கால நிர்ணயம் செய்து நடத்திக் காண்பிக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி என்னுடைய வாழ்வில் இயல்பாக நடக்கிற ஏற்ற தாழ்வுக்கு உரிமை கொண்டாடாதே”,

இந்த சவாலுக்கு இதுவரை நான் அறிந்த சில மாந்திரீகர்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள்.எனக்குத் தெரியும் என்னிடம் பருப்பு வேகாது என்று.. ஆனால் அவர்கள் , தங்கள் வாடிக்கையாளரிடம் பாவம்னு விட்டுட்டேன் என்று தன் திறமைக்கு உரிமை கொண்டாடக்கூடும். அதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.  

இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை. எந்த ஒரு உயிரும்/பொருளும் சுயமாக இயங்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.. தொடர்பு கொள்ளும் பொருளுக்கு ஏற்ப மாற்றம் அடையும் .  பொருள் மற்றும் தொடர்பு கொள்ளும் பொருள் இரண்டின்  (உறுதித்} தன்மையைப் பொறுத்து நேர்மறையான மாற்றம் அல்லது எதிர்மறையான மாற்றம் நிகழும்

மேலே சொன்னதை மேலோட்டமான உதாரணம் ஒன்றின் மூலம் பார்ப்போம். 

எதிர்மறை விசயங்களையும் அலச வேண்டி இருப்பதால் விஷத்தை உதாரணமாக வைத்துக் கொள்வோம். அதிலும் சையினைடு விசம். இப்போது உங்களிடம் பால் இருக்கின்றது. பாலில் சையினைடினை கலக்கின்றீர்கள் அல்லது கலந்தால். பாலின் நிலை என்ன ? உடனடியாகக் திரிந்து கெட்டுப்போய் கொல்வதற்கு உரிய விசமாக மாறிவிடும். அருந்தினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஆக நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்பதும், பாலில் கலந்த அனுபவமும் சொல்லித் தருவது விசம் குறித்த பயம், எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதே. விசத்தை ஒதுக்குவதேதான் ஒரே வழி

சரி நேர்மறையாகப் பார்ப்போம். உங்களிடத்தில் சையினைடு விசம் இருக்கின்றது. கூடவே உங்களிடம் பெருநெருப்பொன்று இருக்கின்றது. ஆம் அதில் சையினைடு வீசப்படுகிறது. இப்பொழுது சையினைடு தீயை என்ன செய்து விடும் ?  தீயில் பஸ்பமாவதைத் தவிர விசத்திற்கு வேறு வழி இல்லை. விசம் குறித்த பயம் நெருப்புக்கு  இருக்குமா ?

விசத்தில் ஒரு விசயமும் இல்லை. விசத்தை எதிர்கொள்ளும் பொருளே விசத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றது.  அதுபோலவே மாந்திரீகம் என்பது ஓரளவிற்கு வேலை செய்யும் என்பதாக  ஒரு பேச்சுக்கு, வைத்துக்கொண்டு பார்ப்போம்.

மந்திரங்களை சுயமாய் , தனக்கெனப் பிரயோகிக்கலாம். பிறர் நலம் பெறவும் பிரயோகிக்கலாம்.. இதனை சம்பந்தப்பட்ட பிறரின் விருப்பப்படியே செய்கிறர்கள். அவர்கள் ஏற்புத் தன்மையுடன் இருப்பதால் பலன் உண்டு

ஆனால் மாந்திரீகம் என்பது தான் கெட்டுப்போவதற்காக செய்யப்படுவதில்லை.. பிறர் கெட்டுப்போகவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு செய்யப்படுவது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபரின் நேரடி பங்கேற்பும் இருக்காது. அதனால் பலன்கள் அந்நபரின் மனநிலையைப் பொறுத்தே மிகக் குறைவாகவே தாக்கும்  அதுவும் மன உறுதியின்றி பால்போல் வெள்ளை உள்ளமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

சரி, நம் மனதின் தற்போதய நிலை என்ன ? பால் போன்ற வெள்ளை மனமா ? கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றதா ? 

வாழ்க்கையில் வெற்றியை குவிக்க, அல்லது வெற்றி தாமதம் ஆகிக் கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டுமானால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று சுயபரிசிலனை செய்து கொள்வது உத்தமம். பாலாக நீங்கள் இருக்கலாம். நெய்யாக உருமாறி சிறப்படைவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பாதையில் விசம் போன்ற சில விஷயங்கள் குறுக்கும் மறுக்கும் வரத்தான் செய்யும்.

உங்கள் மனம் தீயாய் இருந்தால் எல்லாவற்றையும் பஸ்பம் செய்துவிட்டு நினைத்தை அடைந்தே தீரும். இந்தத் தீ இயல்பாய் உங்களுக்குள் இருக்க வேண்டும். கருத்தொடர் வழியே வந்திருக்க வேண்டும்.  சிறு வயது முதல் வளர்ந்த சூழல் அந்தத் தீயை மேலும் தூண்டக்கூடியதாய் அமைந்திருக்கலாம்.

வெற்றிகள் தாமதமானால் மற்றவைகள் மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. நம் பங்கு என்ன என்று சுய ஆய்வு மேற்கொள்வோம். நாம் பாலா, நெருப்பா என்பதில் தெளிவடைவோம். , நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் மனமே.. நம் விருப்பமும் கூட.

 மகிழ்ச்சி நன்றி
நிகழ்காலத்தில் சிவா