"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, May 10, 2019

உங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா ?

சின்ன வயதில் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாரேனும் மாந்திரீகம் செய்து வைப்பதாகப் பேசிக் கொண்டு இருந்தால் அவர்களிடம் சவால் விடுவதுண்டு. ”உனக்கு என்ன வேணும்?.என்னோட இரத்தம்?, என்னோட முடி?, என்னோட உடை எதுவேண்டுமோ? கேள், தருகிறேன். முடிந்தால் , என்னை என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.ஒரே நிபந்தனை என்ன செய்வேன் என்று சொல்கிறாயோ, அதை கால நிர்ணயம் செய்து நடத்திக் காண்பிக்க வேண்டும்.  காலம் தாழ்த்தி என்னுடைய வாழ்வில் இயல்பாக நடக்கிற ஏற்ற தாழ்வுக்கு உரிமை கொண்டாடாதே”,

இந்த சவாலுக்கு இதுவரை நான் அறிந்த சில மாந்திரீகர்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள்.எனக்குத் தெரியும் என்னிடம் பருப்பு வேகாது என்று.. ஆனால் அவர்கள் , தங்கள் வாடிக்கையாளரிடம் பாவம்னு விட்டுட்டேன் என்று தன் திறமைக்கு உரிமை கொண்டாடக்கூடும். அதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.  

இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை. எந்த ஒரு உயிரும்/பொருளும் சுயமாக இயங்கும் தன்மையை தன்னகத்தே கொண்டிருக்கின்றன.. தொடர்பு கொள்ளும் பொருளுக்கு ஏற்ப மாற்றம் அடையும் .  பொருள் மற்றும் தொடர்பு கொள்ளும் பொருள் இரண்டின்  (உறுதித்} தன்மையைப் பொறுத்து நேர்மறையான மாற்றம் அல்லது எதிர்மறையான மாற்றம் நிகழும்

மேலே சொன்னதை மேலோட்டமான உதாரணம் ஒன்றின் மூலம் பார்ப்போம். 

எதிர்மறை விசயங்களையும் அலச வேண்டி இருப்பதால் விஷத்தை உதாரணமாக வைத்துக் கொள்வோம். அதிலும் சையினைடு விசம். இப்போது உங்களிடம் பால் இருக்கின்றது. பாலில் சையினைடினை கலக்கின்றீர்கள் அல்லது கலந்தால். பாலின் நிலை என்ன ? உடனடியாகக் திரிந்து கெட்டுப்போய் கொல்வதற்கு உரிய விசமாக மாறிவிடும். அருந்தினால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை. ஆக நாம் இதுவரை கேள்விப்பட்டிருப்பதும், பாலில் கலந்த அனுபவமும் சொல்லித் தருவது விசம் குறித்த பயம், எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்பதே. விசத்தை ஒதுக்குவதேதான் ஒரே வழி

சரி நேர்மறையாகப் பார்ப்போம். உங்களிடத்தில் சையினைடு விசம் இருக்கின்றது. கூடவே உங்களிடம் பெருநெருப்பொன்று இருக்கின்றது. ஆம் அதில் சையினைடு வீசப்படுகிறது. இப்பொழுது சையினைடு தீயை என்ன செய்து விடும் ?  தீயில் பஸ்பமாவதைத் தவிர விசத்திற்கு வேறு வழி இல்லை. விசம் குறித்த பயம் நெருப்புக்கு  இருக்குமா ?

விசத்தில் ஒரு விசயமும் இல்லை. விசத்தை எதிர்கொள்ளும் பொருளே விசத்தின் தன்மையை நிர்ணயிக்கின்றது.  அதுபோலவே மாந்திரீகம் என்பது ஓரளவிற்கு வேலை செய்யும் என்பதாக  ஒரு பேச்சுக்கு, வைத்துக்கொண்டு பார்ப்போம்.

மந்திரங்களை சுயமாய் , தனக்கெனப் பிரயோகிக்கலாம். பிறர் நலம் பெறவும் பிரயோகிக்கலாம்.. இதனை சம்பந்தப்பட்ட பிறரின் விருப்பப்படியே செய்கிறர்கள். அவர்கள் ஏற்புத் தன்மையுடன் இருப்பதால் பலன் உண்டு

ஆனால் மாந்திரீகம் என்பது தான் கெட்டுப்போவதற்காக செய்யப்படுவதில்லை.. பிறர் கெட்டுப்போகவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு செய்யப்படுவது. அதே சமயம் சம்பந்தப்பட்ட நபரின் நேரடி பங்கேற்பும் இருக்காது. அதனால் பலன்கள் அந்நபரின் மனநிலையைப் பொறுத்தே மிகக் குறைவாகவே தாக்கும்  அதுவும் மன உறுதியின்றி பால்போல் வெள்ளை உள்ளமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

சரி, நம் மனதின் தற்போதய நிலை என்ன ? பால் போன்ற வெள்ளை மனமா ? கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்றதா ? 

வாழ்க்கையில் வெற்றியை குவிக்க, அல்லது வெற்றி தாமதம் ஆகிக் கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டுமானால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று சுயபரிசிலனை செய்து கொள்வது உத்தமம். பாலாக நீங்கள் இருக்கலாம். நெய்யாக உருமாறி சிறப்படைவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பாதையில் விசம் போன்ற சில விஷயங்கள் குறுக்கும் மறுக்கும் வரத்தான் செய்யும்.

உங்கள் மனம் தீயாய் இருந்தால் எல்லாவற்றையும் பஸ்பம் செய்துவிட்டு நினைத்தை அடைந்தே தீரும். இந்தத் தீ இயல்பாய் உங்களுக்குள் இருக்க வேண்டும். கருத்தொடர் வழியே வந்திருக்க வேண்டும்.  சிறு வயது முதல் வளர்ந்த சூழல் அந்தத் தீயை மேலும் தூண்டக்கூடியதாய் அமைந்திருக்கலாம்.

வெற்றிகள் தாமதமானால் மற்றவைகள் மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. நம் பங்கு என்ன என்று சுய ஆய்வு மேற்கொள்வோம். நாம் பாலா, நெருப்பா என்பதில் தெளிவடைவோம். , நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் மனமே.. நம் விருப்பமும் கூட.

 மகிழ்ச்சி நன்றி
நிகழ்காலத்தில் சிவா







Sunday, April 7, 2019

கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை!

கர்ப்பகால உடல் வீக்கம் குறித்து கூறும், மகப்பேறு மருத்துவர், கீதா ஹரிப்ரியா: 

கர்ப்ப காலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து, சில பெண்களுக்கு, கை, முகம், பாதம் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம்; இது இயல்பானது. இதனால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ என, கர்ப்பிணிகள் பயப்பட தேவையில்லை.சீரான நடைப்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளின் மூலமே, இதை, சரி செய்து விடலாம். 

கர்ப்பிணிகளின் உடலின் தன்மையை பொறுத்து, வீக்கத்துக்கான காரணங்களும், தீர்வுகளும் வேறுபடும். பொதுவாக, கர்ப்ப காலத்தில், உடலின் ரத்த ஓட்டம் மற்றும் நீர்ச்சத்து, வழக்கத்தைவிட, 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது, உடல் உறுப்புகள் வீக்கமடைய, காரணமாக அமையலாம்.

கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது, கர்ப்பப் பை விரிவடையும். அதனால், அதன் அருகில் உள்ள ரத்தக்குழாய் அழுத்தத்துக்கு உள்ளாகி, ரத்த ஓட்டம் சீரின்றி இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, சருமத்தின் அடியில் நீர் கோர்த்து, வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். 

அதிகப்படியான ரத்த அழுத்தம் காரணமாகவும், வீக்கம் ஏற்படலாம்.கர்ப்பிணிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பு சத்தும், வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கை, கால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதாலும், வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு, உடலில் ஏற்படும் புரதம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளும், வீக்கத்துக்கு காரணமாகின்றன.ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம், மெதுவான நடைப்பயிற்சி அவசியம். இறுக்கமான ஆடை மற்றும் காலணிகளை தவிர்க்கலாம். உடலை விட, கால்களை சற்று உயர்த்தி வைத்து கொண்டால், ரத்த ஓட்ட சீரின்மையால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும். 

தொடர் வீக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனைபடி, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்யலாம்.புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளலாம். கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், ஊறுகாய், வற்றல் போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், கீரைகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கை சேர்த்து கொள்ளலாம்.பால், தண்ணீர், பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை, பருக வேண்டும். சீரான இடைவெளியில் சிறுநீர் வெளியேற்றமும் அவசியம். இதய கோளாறு, சிறுநீரக பிரச்னை உள்ளோர், கர்ப்ப காலத்தின் துவக்கத்திலிருந்தே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

நன்றி தினமலர் 07/04/2019

Thursday, April 4, 2019

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான் லாயக்கு :)

கோவை ராமநாதபுரம் ஏரியாவில் கடும் போக்குவரத்து நெரிசல்.. ஏறத்தாழ மதியம் 11.30 மணி கடும்வெய்யிலில் திணறினேன். காரணம் தேர்தல் பிரச்சாரம்.  சாலையின் இரும்ருங்கிலும் டெம்பொ டிராவலர் வேன்கள். சுமாராக 100 எண்ணிக்கையில் இருக்கலாம். சந்துபொந்துகளில் புகுந்து  சிங்காநல்லூர் செல்வதற்கு சுமார் 45 நிமிடங்கள் ஆனது

அடுத்து மாலை 4.15 க்கு பவர்ஹவுஸ் பகுதியில் முக்கிய வேலை.. அது முடிந்தபின் 4.45 க்கு கலெக்டர் அலுவலகம் அருகில் வேலை.. பவர் ஹவுஸ்கிட்ட அரசியல் மீட்டிங்.. ரோடு மறிக்கப்பட...... வண்டியை நிறுத்திவிட்டு நடந்து சென்றேன். இங்கும் சின்ன வேன்களில் சாரி சாரியாய் மக்கள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் செய்தபின், உள்ளே அனுப்பி, எண்ணி சரிபார்க்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்

எதற்காக இந்த கூட்டம் சேர்த்தல் என்று புரியவில்லை. யாருக்காக என்றும் புரியவில்லை..  எந்தக்கூட்டணியாக இருந்தாலும் சரி.. மக்களிடையே இந்த மீட்டிங், பிரச்சாரம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டதோ எனத் தோன்றியது.  எல்லோரின் கையிலும் வாட்ஸாப், ஃபேஸ்புக் வசதியுடன் அலைபேசி. எல்லா ஊழல்களும், அயோக்கியத்தனங்களும் விரல் நுனியில்.  இருந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. 

சிங்காநல்லூர் நகராட்சி மண்டல  அலுவலகத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தேன். வரவேற்புக்கு ஒரு வயதான பெண் அலுவலர். .. வருபவர்களுக்கு தேவையான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் கூட்டம் அதிகமாக இருக்கவே சில நிமிடங்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு நபர் சொத்துவரி கட்டுவதற்கான பாஸ்புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து. புது புத்தகம் வேண்டும் என்றார். அந்த அம்மா ஏனுங்க இதுக்கு என்ன ஆச்சு ? என்று யதார்த்தமாகக் கேட்டார். உடனே இவர் என்ன ஆச்சா.. ? நல்லாப் பாருங்க தீர்ந்து போச்சு, தீர்ந்து போனாத்தானே வருவாங்க ? வேலையில்லாமலா இங்க கொண்டு வருகிறோம். ? நல்லாப் பார்க்கக் கூட மாட்டீங்கறீங்க என்று மானாங்காணியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அந்த அம்மா சற்றே யோசனையுடன் புத்தகத்தை புரட்டிப் பார்க்க அருகில் நின்ற எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.. சரி என்றைக்குமே அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொங்க வேண்டுமா ? இன்று ஆதரவாக ஓரிரு வார்த்தைகளச் சொல்வோம் என்று எண்ணி “ அண்ணா.. நீங்க வந்து புத்தகத்தை கொடுத்ததில் இருந்து அந்தம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்க அவங்க பார்த்துச் சொல்லுவாங்க என்று சொன்னேன்.

ஆனால் அவரோ என்னை சற்று முறைத்துப் பார்த்துவிட்டு.. நீங்க கம்முனு இருங்க என்றார். சிரித்துக் கொண்டே சரி என அமைதியாக நின்று  விட்டேன். பெண் அலுவலர் அந்த புத்தகத்தை நன்கு புரட்டிப் பார்த்துவிட்டு, கடைசிப் பக்கத்தில் 2019-2020 என்று பிரிண்ட் செய்யப்பட்டிருப்பதைக் காண்பித்து இது இருக்கின்றதே இதுவே போதுமே அப்புறம் ஏன் கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்
அவரோ அதெப்படி ஒரு பக்கம் போதுமா ? இந்த வருடம் முழுவதும் கட்ட இது போதுமா புது புத்தகம்தான் வேண்டும் என்று சண்டைக்கு நின்றார்.  இரண்டு வரி பதிவு செய்ய அந்த கடைசிப் பக்கமே தாரளமாகப் போதும் என்ற நிலைகூடத் தெரியாமல் வந்ததில் இருந்து சண்டைக் கட்டிக் கொண்டே இருந்த அந்த நபரைப் பார்த்ததும் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..

உங்களுக்கெல்லாம் எடப்பாடிசாமிதான்டா லாயக்கு :) 

Tuesday, March 19, 2019

இனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ


அலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின்  இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்தக்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை.  மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.
சரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்து சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான். 
.
இதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது.  சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.

எதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவரது இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார்.  நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir  என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.


Monday, January 7, 2019

மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?

சுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)
ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).
நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..
உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..
ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..
மன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 🌻ஸ்ரீனி🌻

facebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்