"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 19, 2019

இனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ


அலுவலக வேலையாக கோவை கே.ஜி மருத்துவமனை அருகில் உள்ள நகலெடுக்கும் கடையில் காலை 11 மணி அளவில் நின்று கொண்டிருந்தேன். என் வேலை முடிந்து கிளம்பும் நேரம் அந்தக் கடையின்  இடதுபுற சுவரைத் தடவியபடி முழுமையான பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் உள்ளே நுழைந்தார். ஏகப்பட்ட இடங்களில் இடித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்ததால் ”பார்த்து வாங்க” என்று கைபிடித்து உள்ளே அழைத்து, கடைக்காரரிடம் இவரின் தேவையினை உடனடியாக கவனித்து அனுப்ப வேண்டுகோள் வைத்தேன்.

இரண்டு நாளைக்கு முன்னர் அவரது அலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் அந்தக்கடையில் செய்திருக்கின்றார். இன்றுவரை அது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி ஏதும் வரவில்லை.  மகனிடம் கொடுத்து போனில் பரிசோதித்தேன் என்றார். அவனும் பரிசோதித்து, செய்தி ஏதும் இல்லை அந்தக்கடையில் போய் கேட்கச் சொன்னதாகச் சொன்னர். அவர்களும் 10 நிமிடம் வாடிக்கையாளர் சேவை மையத்தோடு தொடர்பு கொண்டு ரீசார்ஜ் ஆகிவிட்டது என்றார்கள்..என் வேலை முடிந்ததால் நான் கிளம்ப ஆயத்தம் ஆனேன். இவருக்கோ குழப்பமான சூழல் நிலவ என்னிடம் ஒரு நிமிடம் இருங்க பிளீஸ் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். சரி என்ற முடிவுடன் நான் ஏனுங்க, அந்த எண்ணில் இருந்து யாருக்காவது கூப்பிட்டுப் பார்த்தீர்களா என்று கேட்க இல்லை என்றார்.
சரி போனைக் கொடுங்க என்று வாங்கிப் பார்த்தபோது மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு போன் .. என்னுடைய எண்ணிற்கே அழைத்துப் பார்த்தேன்..போன் கொஞ்சநேரம் முயற்சி செய்து, பின்னர் ஏரோப்ளேன் மோட்-ல இருப்பதாகவும் அதைச் சரிசெய்யச் சொல்லி குறிப்பு காட்டியது. புரிந்துவிட்டது. இரண்டு நாட்களாக அதே மோட்-ல இருப்பதால் செய்தி ஏதும் வரவில்லை. நான் போனை இயல்பு நிலைக்கு சரி செய்தவுடன் ரீசார்ஜ் செய்தியும் வந்து சேர்ந்துவிட்டது. அவரது மகன் போனை கையாண்ட விதத்தில் இருந்த அலட்சியம் புரிந்தது. கடைக்காரர்களோ பார்வை குறைபாடு உடையவர் என்பதால் போனை வாங்கிப் பரிசோதித்திருக்கலாம். அங்கும் கவனக்குறைவுதான். 
.
இதற்கிடையில் ஆதார் அட்டை நகல் எடுக்க, தன்னுடைய கைப்பையை திறந்து தடவித் தடவி பல்வேறு பைகளைத் திறந்து தடவி சரியான பையினுள் இருந்து அதை வெளியே எடுத்தார். எனக்கு அடுத்த வேலைக்கான நேரம் அருகிக் கொண்டே வர நான் கிளம்பத் தயார் ஆனேன். என்னுடைய செய்கைக்கு நன்றி சொல்லிய அவர் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு அழைத்துப் போக வேண்டுகோள் விடுத்தார். தர்மசங்கடமான சூழல். வேலையோ அவசரம். இங்கே ஒரு உயிர் நம்மை நம்பி உதவிக்கரம் நீட்டுகிறது.  சரி நடப்பது நடக்கட்டும்.என கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்றேன்.

எதிரே வரும் வாகனங்கள் குறித்து எச்சரிக்கையாக செல்லுமாறு என்னை எச்சரிக்கை செய்து கொண்டே வந்தார். எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் ஒன்று காலக்கெடு முதிர்ந்து விட்டதாகவும். அதை எடுக்கவே வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டே நடந்துவந்தார். அவரது இந்த உடல்நிலையில் தனியாளாக வங்கி, ரீசார்ஜ் போன்ற தேவையான வேலைகளை செய்யும் அவரது மனம் தளரா, ஊக்கமுடைய மனதினை புரிந்து கொண்டேன். இடையில் அவர் எனக்கு டீ வாங்கித் தர விருப்பப்பட்டார்.  நான் மறுக்க , பத்து ரூபாய் தாளை எடுத்து என்னிடம் கொடுத்து டீ சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார். அவரின் அன்பை/நிலையை புரிந்து கொள்ள முடிந்ததால் புன்சிரிப்புடன் உங்க அண்ணன் மாதிரி நான். கம்முனு வாங்க என்று சொல்லி கூட்டிச் சென்றேன். வாழ்க்கை இப்படித்தான் உதவிகளைச் செய்யவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் ஒவ்வொருத்தருக்கும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

ஒரு வழியாக மேல்தளத்தில் உள்ள வங்கிக் கிளையை படியேறி, அடைந்து உள்ளே நுழைந்தேன். அங்கே may i help you என்ற வாசகத்துடன் வரவேற்பு மேசை காத்திருக்க., ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஏர்ஹோஸ்டல் போன்ற அழகான யுவதி ஒருவர் வரவேற்றார். அவரிடம் தெளிவாக இவருக்கு சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. நான் இவருடன் வந்தவன் அல்ல.. ஆகவே நீங்க உதவி செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் புன்சிரிப்புடன் sure sir  என்று பதிலளிக்க இவரை யுவதியிடம் ஒப்படைத்துவிட்டு.. அண்ணா இந்தப் பொண்ணு கையப் பிடிச்சிக்குங்க.. தேவையான உதவிகளைச் செய்வார் என்று சொல்லிவிட்டு உற்சாகமாய் என் வேலையைத் தொடர வேகமெடுத்தேன்.


Monday, January 7, 2019

மன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி ?

சுவர் கடிகாரமும் சுத்தியலும் (மன உரையாடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டு)
ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால் இரவு நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா நீயும் வேணாம், உன் சுத்தியும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).
நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது..
உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.. நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்..
ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..
மன உரையாடல்களை கவனியுங்கள், உறவுகளுக்கிடையேயான புரிந்துணர்வை பலப்படுத்துங்கள்..
உற்சாகத்துடனும் நன்றியுணர்வுடனும் 🌻ஸ்ரீனி🌻

facebook பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி நண்பர் திரு.ஸ்ரீனி அவர்களுக்கு

Friday, January 4, 2019

மன உளைச்சலை தவிர்ப்போம். மகிழ்ச்சியோடு இருப்போம்

மன உளைச்சல் - இதைப் பற்றி எழுதவே சற்று யோசனையாக உள்ளது. 

உடலுக்கு வரும் நோய்களை பல்வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருத்துவம் பார்க்கலாம். முன்னேற்றங்களையும் அப் பரிசோதனைகள் மூலமே சரிபார்த்து சிகிச்சையினைத் தொடரலாம்

ஆனால் மன உளைச்சல் ஆரம்ப நிலையில் அவ்வளவு எளிதாக கண்டறியப்பட முடிவதில்லை. அப்படி ஓரளவிற்கு கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை செய்தாலும் அவர்களின்  முன்னேற்றம் குறித்து எதனாலும் உறுதிப்படுத்த இயலாது. நன்றாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள் . திடீரென எந்த முடிவுக்கும் இறங்கி விடுவார்கள்.

வீட்டுக்கு பக்கத்து வீதியில் இருக்கும் ஒருவரின் மனைவி, ஒரு மாதம் முன்னதாக, 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை ( ஹாஸ்டலில் படித்துக்கொண்டு இருப்பவள்)  விட்டுவிட்டு, வேறொருவருடன் ஓடி விட்டார். மனமொடிந்த கணவர் இரயில் விழுந்து கதையை முடித்துக்கொண்டார்.  குழந்தையின் நிலை என்ன? பாசம் என்றால் என்ன என்று உணர்த்த வேண்டிய பெற்றோர் எங்கே ?

 அடுத்து, வயதான உறவினர் ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார்.. வயதான தம்பதியருக்குள் ஏதோ பூர்விகச் சொத்து குறித்து கருத்து வேறுபாடு இருந்திருக்கின்றது..வயதான ஆண் கோழைத்தனமாக தன்னை மாய்த்து கொண்டார். மாதம் 40 ஆயிரம் பென்சன் வந்து கொண்டிருக்கின்றதாம். மிச்சம் இருக்கிற வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்க வேண்டியவர், போதுமான பணம் இருந்தும் பேரன் பேத்திகளோடு மகிழ்ந்து இருக்க வேண்டியவர் அன்பும் அரவணைப்பும் இல்லாததால் கிளம்பிவிட்டார். குடும்பத்தில் சொத்தினால் நிம்மதி இழப்பு

இன்னொரு உறவினர் மிக நிறைவான வாழ்க்கை,  சகோதரர்கள் ஒன்றிணைந்த தொழில், ஒற்றுமையே பலம் என்று  பலரும் பாராட்டும் வகையில் பேரோடும் புகழோடும் இருக்க , அதில் ஒருவரின் மனைவி தன்னை மாய்த்துக் கொண்டார்.  இவர்களுக்கு கல்லூரி செல்லும் மகனும், மேல்நிலைக்கல்வி பயிலும் மகளும் உண்டு. காரணம் உடல்நிலைக் கோளாறுகள். மற்றும் மற்றவர்களோடு எளிதில் பழகாமை. கணவரின் வெற்றிக்கு உறுதுணையாக, குடும்பத் தலைவியாக வழிகாட்ட வேண்டியவர் இப்போது இல்லை.. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற நிலை இப்போது. குடும்பத்திற்கான தாயன்பு எங்கே ?

கூர்ந்து கவனித்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு தான் செய்யவேண்டிய கடமை, பொறுப்பு, வழிகாட்டுதல் எல்லாமே மறந்து விடுகிறது. மாறாக தன்னைச் சார்ந்தவர்களை பழிவாங்கும் முகமாக தன்னை மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள். மேற்கண்ட மூன்று நிகழ்வுகளிலுமே பணப் பற்றாக்குறை இல்லை ..மனதிலே மகிழ்ச்சி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. நிம்மதி இன்னும் தேவையாக இருந்திருக்கின்றது. எங்கோ மனச்சிக்கல் ஏற்பட்டு விடுகின்றது.

உயிர் வாழ்வது முக்கியம். பொருள் ஈட்டுவதும், காப்பதும் இரண்டாம்பட்சம்
கெளரவம், மதிப்பு, இதெல்லாம் உயிரைவிட முக்கியமானதா?  இல்லை. பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதும் முக்கியமானது இல்லை.  வெட்கம், மானம், ரோசம் என்பதை எல்லாம் நாம் உயர்வதற்கு உதவுமானால் வைத்துக்கொள்ளலாம்.. மாறாக நம் மனதில் குற்ற உணர்ச்சியைத் தோன்றச் செய்யுமானால் தூக்கி எறிந்துவிட்டு வேலையைப் பார்ப்பதே மேல். இதுவே மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கான வழி

உணர்வோம்., செயல்படுவோம், வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி உண்டாகட்டும்

Monday, December 31, 2018

பயனற்றதை பேசிக்கொண்டு இருக்கிறதா உங்கள் மனம் ?

மனதை விலகி நின்று கவனிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கவனிக்க முடியாமல் போகும். அப்போது குற்ற உணர்ச்சி ஏதுமின்றி மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்.  இதுதான் கடந்த இடுகைகளின்  சாரம்.

மனதை கவனித்தலில் உள்ள சூட்சமமே, புலன்களால் அறியப்படுகிற எதனையும், எதனோடும் இணைத்துப் பார்த்துக் கொண்டு, மனம் தொடர்ந்து சலிப்பின்றி இயங்கும்.. உங்களை அறியாமலே இது நடக்கும்.

கவனித்தல் கைவரப்பெற்றால் மனம் இந்த வேலையைச் செய்யாமல் அனுபவத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கும்.

இந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இதில் உள்ளடங்கிய செய்திகளை அப்படியே மனம் வாங்கிக்கொண்டு இருந்தால் கவனித்தலில் முன்னேற்றம்.. மாறாக இப்படி செய்தால் அப்படி நடக்காதா? என்ற கேள்வி, இந்தமாதிரி எத்தனை படிச்சிருக்கேன். செஞ்சும் பார்த்தாச்சு, பலன் இல்லை என்றோ மனம், எதனோடாவது கொக்கி போட்டால் ’நழுவுகிறது’ என்றுதான் பொருள்.:)

எனக்கு ஒரு பனியனைப் பார்த்தால் துணி என்ன ஃபைனா? இண்டர்லாக்கா? சிங்கிள் ரிப்பா? லூப்நிட்டா? டர்க்கியா? லைக்ரா பைனா? என்று பார்த்த மாத்திரத்தில் மனம் தன்னிச்சையாக விடையினை உணர்ந்துகொள்ளும் . இதற்கு விநாடிக்கும் மிகக்குறைவான நேரமே போதும். இது வெளியே குவியும் மனம்.

ஆனால் கவனித்தல் எனக்கு வசப்படும்போது துணியை துணியாக மட்டுமே பார்ப்பேன். பார்க்கிறேன் என்ற உணர்வு இருக்கும். துணி என்ன வகைன்னு சொல்லு என மனதிற்கு கட்டளை என்னுள் உருவகம் பெற்று, மனதிற்கு தரப்பட்டபின்/தரப்பட்டால் மட்டுமே அதே விநாடியில் இந்த துணி இன்ன வகை என்று மனம் எனக்குச் சொல்லிவிட்டு அமைதியாக வேண்டும். இது போல் எல்லா கணங்களிலும் விழிப்புணர்வு கைவரப்பெற்ற நிலை. ஒவ்வொரு கணமும் நிகழ வேண்டும். அவ்வப்போது மட்டுமே இது எனக்கு நிகழ்கிறது. இதில் நிலைத்த தன்மை வேண்டும் என்ற முயற்சிதான் எனது இந்த எழுத்துகள்.:)

சரி வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். அப்போது எதிரே வரும் லாரியினை பார்த்து, இப்படி வருகின்றதே ஒதுங்க வேண்டுமே மனதின் உத்தரவிற்கு காத்திருப்பதா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எப்பொழுது வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டத் துவங்கி விட்டீர்களோ அப்போதே மனம் இயங்கத் தொடங்கிவிடும்...மிகக்குறைந்த அளவில், வாகனத்தை இயக்கும் அளவிற்கு மனம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஓட்டும்போது தன்னிச்சையாக கையும் காலும் இயங்க, மனம் எங்கோ நழுவத் துவங்கும். இதையே எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை என்று சாதரணமாகச் சிலர் சொல்வார்கள். இந்த விழிப்புணர்வற்ற நிலைதான் தவிர்க்கப் படவேண்டும்.

மனதை இப்படிக் கவனித்துப் பழக்க, சாத்தியக்கூறான வழிகளில் ஒன்று மந்திரம்.. , அலைகிற மனதை கட்டுக்குள் கொண்டுவர மந்திரங்கள் பெரும்பாலும் உதவும். ஆனால் அவைகளைக் கையாளும்போது மட்டுமே பலனளிக்கும். அதன் பின் மனம் மீண்டும் குரங்காகிவிடும். இது மனதின் தன்மை :)

இதைக் கட்டுக்குள் கொண்டு வர நமது மனதை நமது உடலோடு பிணைக்க வேண்டும்/ ஏற்கனவே அப்படித்தானே இருக்குது என்கிறீர்களா? மனதின் பிறப்பிடம் நமக்குள்ளே.  ஆனால் அது விளையாடிக் கொண்டு இருக்குமிடம் நமக்கு வெளியே, ஊர் உலகம் அரசியல் என்று எங்கு வேண்டுமானாலும் :)

மனதைக் கவனிக்க, அதை நம் கண் பார்வையிலேயே (ஙே..) வைத்திருக்க வேண்டும். அந்தப் பக்கமோ, இந்தப்பக்கமோ ஓடவிடக் கூடாது. அதற்குச் சிறந்த வழி, சரியான வழி, உடலை கவனிக்கச் செய்தல். இது மனதை பழக்குவதற்கான ஆரம்பநிலைப்பாடம். உடலின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கச் செய்வதுதான். முயற்சித்துப்பாருங்கள். ரோபோட் மாதிரி அசைவதா என்கிற குழப்பம் வருகிறதா?  இயல்பான செயல்களில் உங்களின் அசைவுகளோடு மனதை ஒட்டவையுங்கள்.  அது  அப்படியே அசைவுகளுடன் பொருந்திக்கொள்வதை அனுபவமாக அடைவீர்கள்.

வெற்றி உண்டாகட்டும்.


Thursday, August 30, 2018

ஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ


முன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது.  முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது.   கிறிஸ்துவர்களுக்கு   இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது .  ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும்,  நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.

இயேசுவைத் தெரியும்,  ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும்,  பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும்.  உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன.   இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது

ஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்.,  பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.

 அப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ  விட்டு விலகி விடுவதும் இல்லை.  மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.  அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்  பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்

ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா