"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, August 30, 2018

ஒட்டுமொத்தமாய் வெளியே வீசி எறி - ஓஷோ


முன்பெல்லாம் புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பது மட்டுமே பெளத்தர்களுக்குத் தெரிந்திருந்தது.  முகம்மது நபி சொல்லிப் போயிருந்தது மட்டுமே முகமதியர்களுக்குத் தெரிந்திருந்தது.   கிறிஸ்துவர்களுக்கு   இயேசுவை மட்டுமே தெரிந்திருந்தது .  ஆனால் இப்போதோ மானுடம் முழுக்க, இவர்கள் சொல்லிப் போயிருப்பது அனைத்துக்கும்,  நாம் வாரிசாகப் போயிருக்கிறோம்.

இயேசுவைத் தெரியும்,  ஸாரதூஸ்ட்ராவைத் தெரியும்,  பதஞ்சலி, புத்தர், மகாவீரர், லாவோட்சு என்று நூற்றுக்கணக்கானோர் சொல்லிப் போயிருக்கும் விளக்கங்கள் எல்லாம் தெரியும்.  உன் மனதில் எல்லாமும் ஒன்றோடு ஒன்று, பிணைந்து போய்க் கிடக்கின்றன.   இந்த குழப்ப வலையிலிருந்து உன்னைப் பிரித்து வெளியே கொண்டு வருவது முடியாத காரியம் ஆகிவிட்டது

ஒரே வழி என்னவென்றால் இத்தனை இரைச்சலையும் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்து விடுவதுதான்.,  பகுதி பகுதியாக இல்லாமல் ஒட்டுமொத்தமாக வெளியே வீசி எறிந்துவிடுவதே என்னுடைய செய்தி.

 அப்படி அவற்றை விட்டொழித்து விடும் போது, இயேசுவை வீசி எறிந்து விடுவதில்லை. முகம்மதுவையோ, புத்தரையோ  விட்டு விலகி விடுவதும் இல்லை.  மாறாக அவற்றை விடுவதன் மூலம், அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகச் செல்கிறாய்.  அப்படி விட்டொழித்து விடும்போது , இந்த பூசாரிகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் இவற்றைத்தான் கழித்து வீசி விடுகிறாய். தெளிவு பிறக்கிறது. பரிசுத்தம் கிடைக்கின்றது. இதயம்  பளுவைத் துறந்து இலேசாகி விடுகிறது. அமைதி அடைகிறாய்

ஓஷோ
தம்மபதம் II
நிகழ்காலத்தில் சிவா

Tuesday, August 14, 2018

தளர்வாய் இருப்பது எப்படி ? தொடர்ச்சி.. ஓஷோ

இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவைகள் பாடிக்கொண்டு இருக்கின்றன. நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. நட்சத்திரங்கள் நகர்ந்து கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரு லயத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.  அதில் பரபரப்பு இருப்பதில்லை. அவசரம் ஏதும்  இருப்பது இல்லை. கவலையும் இல்லை.

சரி.  உடலில் ஆரம்பி., பிறகு மெதுவாக , மிக மெதுவாக ஆழ்ந்து போய்ப் பார்.
முதல் கட்டத்தில் சிரமமாகத் தோன்றலாம்.  உடல் விறைத்துப்போய் இறுக்கமாக இருந்தால் மனதில் ஆரம்பிக்க முயலாதே பொறு.  முதலில் உடலின் இயக்கங்களை சரி செய்து கொள்

ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நடக்கிறாய் அல்லவா ? அது பழக்கமாகிப் போகின்றது. ,  தன்னிச்சையான செயலாகிப் போகின்றது.

மெதுவாக நடக்க முயன்று  பார்.  ஒவ்வோர் அடியையும் உணர்ந்து வைக்க வேண்டும்.  நடை மெதுவாகிவிடும். . உடலில் ஒருவித உணர்தல் ஆரம்பம் ஆகிவிடும். இப்படி எதையும் மெதுவாகச் செய்வதே பழைய பழக்கங்களை விட்டுவிடுவதற்காகத்தான்.. இப்போது உடலில் இறுக்கமே இருக்காது. குழந்தையைப் போல், உன் உடல் இறுக்கமில்லாததாக ஆகிப்போகும்.

அடுத்து மனதைக் கவனிக்கலாம். மனதின் இறுக்கத்தை உணர்கிறாய். நான் எப்போதாவது ஆசுவாசமாக இருந்ததாக, உணர்ந்ததே இல்லை என்றே தோன்றும். சரிதான். மனதைப்பற்றி ஏதாவது ஒன்றை உணர்ந்தால்தானே, அதைப்பற்றி ஏதேனும் செய்யமுடியும் ? எதுவும் தெரியவே தெரியாதென்றால் எதுவுமே சாத்தியமில்லை

தெரிந்திருப்பதே நிலை மாற்றத்துக்கான ஆரம்பம்.

மனம் இறுக்கமின்றி இருப்பதன் அடையாளங்கள் பல. நம்பிக்கை வைப்பது, சரணடைவது, அன்போடு ஏற்றுக்கொள்வது, அதன்போக்கில் போவது, இருத்தலோடு இணைந்துவிடுவது, தானின்றி இருப்பது, பரவசம் என எல்லாமே இறுக்கமின்றி இருக்கும்போது  ஏற்படுகின்றன.

இறுக்கமாக இருப்பதுதான் நரகம். இறுக்கமின்றி இயல்பாக இருப்பதே
சொர்க்கம். எல்லாவிதமான குற்ற உணர்வுகளில் இருந்தும் பயத்திலிருந்தும் உன்னை விடுவிப்பதுதான் என்னுடைய செயல்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா



Wednesday, November 8, 2017

தளர்வாய் இருப்பது எப்படி ? ஓஷோ

தளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட.
சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்போது பரபரப்பின்றி கேள்:

ஒவ்வொரு செயலையும் நிதானப்படுத்து. அவசரப்படாதே.

இறுக்கம் என்றாலே அவசரம், பயம், சந்தேகம் என்றுதான் பொருள்.

ஆபத்துக்குப் பயந்த முன்னேற்பாடுதான் இறுக்கம்.

அடுத்த நாளை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாததால்தான், இறுக்கம் வந்து சேர்கிறது. இறுக்கம் என்றாலே கடந்தகாலத்தை சரியாக நீ வாழவில்லை என்று பொருள். எந்த ஒரு அனுபவத்தையும் வாழ்ந்து கழித்திருந்தால் அதன் மிச்சம் மீதி ஏதும் இருக்காது

முழுக்க வாழ்ந்திருந்தால் அது கரைந்து போயிருக்கும். உனக்கு
வாழ்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடு இருந்ததே இல்லை. தூக்கத்தில் நடப்பவனைப் போல், வாழ்வுக்குள் நகர்ந்து போய்க்கொண்டு இருக்கின்றாய்.

உன்னுடைய வெளிவட்டத்தில் இருந்து, இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதில், முதலில் செய்ய வேண்டியது, உடலைத் தளர்த்திக் கொள்வதுதான். அடிக்கடி உன் உடலை கவனித்துப் பார்

கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு பகுதியாக உன் உடலைக் கவனி. கழுத்து தலை அல்லது கால் என ஏதாவது ஒரு இடத்தில் இறுக்கம் இருக்கிறதா என்று பார். அப்படி இருப்பின் அதை முழு உணர்வோடு கவனி. ஆசுவாசப்படுத்திக் கொள். அந்தப் பகுதிக்கு உன் கவனத்தை கொண்டு போய், ’தளர்வாக இரு’  என்று அதனிடம் சொன்னால் போதும்.

 உன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன், ஆசுவாசப் படுத்திக்கொள் என உரையாடு. மெதுவாக இந்த நுணுக்கம் பிடிபட்டுவிடும்.. உடல் இறுக்கம் நீங்கிப் போவதை உணரலாம்.

அடுத்து
இன்னும் ஆழமாக,

மனதிடம் இறுக்கம் நீங்கி இளகி வரச் சொல். உடல் கேட்பதைப்போல் மனம் எளிதில் அடங்கி கேட்டுக்கொள்ளாது.  சிறிது கால அவகாசம்  பிடிக்கும். நேரடியாக மனதோடு ஆரம்பித்தால் தோற்றுப்போய்விடுவாய்.
உடலில் ஆரம்பித்து மனதிடம் இறுக்கம் தளர, மெதுவாக ஆசுவாசப்படுத்து.

அடுத்து நெஞ்சம், மனதைவிட உணர்வுகள்பாற்பட்ட நெஞ்சம் நுண்மையானதும் சிக்கலானதாகவும் இருக்கும்.

 உடல் தளர்வடைந்துவிட்டது, மனம் தளர்வடைந்துவிட்டது அடுத்து
நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பி. உடலோடு சாத்தியமானது , மனதோடும் சாத்தியமானது, நெஞ்சோடும் சாத்தியம்தான் என்ற உணர்வுடன் செயல்படு.  உடலையும், மனதையும் தளர வைத்த அனுபவத்தை நெஞ்சத்துக்கும் பயன்படுத்து. 

 உடல் மனம் நெஞ்சம் இவற்றை ஊடுருவி   இருப்பின் (உயிருருவின் உட்புரி) மையத்திற்கு போக முடியும். அதையும் உன்னால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். இது நிகழும்போது மிக நிறைவானதொரு மகிழ்ச்சியை அடைகிறாய். அதுதான் முழுமையான பரவசம், ஏற்புடைமையின் உச்சம், வாழ்வின் ஆனந்த நடனம்.

ஓஷோ
தம்மபதம்



Sunday, October 22, 2017

தானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ


நீ தானியங்கி இயந்திரம் ஆகிவிட்டாய். கார் ஓட்டுகிறாய் கூடவே நண்பனோடு பேசிக்கொண்டு இருக்கிறாய், கூடவே சிகரெட்டும் பிடிக்கிறாய், கூடவே ஆயிரத்தொரு எண்ணங்களை நினைத்தும் பார்த்துக்கொள்கிறாய். இந்த உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது

ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்து, உன்னுடைய கவனத்தை ஈர்க்க, தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உன்னை அலைக்கழிக்கின்றன.

ஒரு உள்நாட்டுப்போரே நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குள் முடிவில்லாது போரிட்டுக்கொண்டு இருக்கும் எண்ணங்கள் , நீ அவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரும்  எண்ணங்கள்.

இந்தக் களேபரத்தைத் தான் மனம் என்கிறாய். மனம் என்றாலே குழப்பம்தான்.

ஆனால் மனம் என்றாலே குழப்பம்தான் என்று தெரிந்து கொள்ளும்போது, உன்னை உன் மனத்தோடு அடையாளப்படுத்திப் பார்த்துக் கொள்ளாதபோது உனக்கு எப்போதும் தோல்வி இருக்காது.

உன்னுடைய இயந்திரத்தனத்தை விட்டொழிக்க வேண்டி இருக்கின்றது. . தானியங்கித்தனத்திலிருந்து விடுபட வேண்டி இருக்கின்றது

எதனாலும் பாதிக்கப்படாத மனநிலை, விழிப்போடு இருத்தல், பிரக்ஞை உணர்வோடு இருத்தல், சாட்சியாக இருத்தல், உள்ளடக்கம் ஏதுமில்லா உணர்வுடன் இருத்தல். இந்த நிலைதான் தியானம். இது தானியங்கித்தனத்திலிருந்து விடுபட்டு முழுபிரக்ஞை தரும்.

ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா






Tuesday, August 22, 2017

குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை


பிறந்தது முதல், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய உணவு முறை குறித்து கூறும், டயட்டீஷியன் ஷைனி சந்திரன்:

பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; தாய்ப்பால் தான் மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு.
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் அன்றி, வேறு உணவு தேவையில்லை.

சுகப்பிரசவம் அல்லது சிசேரியனில் குழந்தை பெற்ற பெண்கள், குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆறு முதல், 12 மாதங்களில், குழந்தையின் எடை, பிறந்த போது இருந்ததை விட, இரண்டு மடங்கு கூடியிருக்கும். அதனால், 600 - 700 கலோரி வரை ஊட்டச்சத்து மிக்க உணவு, குழந்தைக்கு தேவை. தாய்ப்பால் மூலம், 400 - 500 கலோரி மட்டுமே கிடைக்கும் என்பதால், வேறு துணை உணவுகளும் கொடுக்க வேண்டியது அவசியம்.காய்கறி, நெய் சேர்த்து நன்கு மசிக்கப்பட்ட சாதம், வேக வைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வாழைப் பழம், பிஸ்கட், பப்பாளி, மாம்பழக் கூழ், சப்போட்டா என, சிறிது சிறிதாக சத்துணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று வேளையும், தாய்ப்பால் கொடுக்காவிட்டால், ஒரு நாளைக்கு ஐந்து வேளையும், இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்.குழந்தைக்கு தேவையான போது, 12 - 24 மாதங்கள் வரை தாய்ப்பால் புகட்டலாம். அனைத்து உணவுகளையும், புதுவிதமான ரெசிபிகளாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அரிசி கஞ்சி, இட்லி, தோசை, உப்புமா, டோக் ளா, கடலை மாவு பர்பி, வெஜிடபிள் கட்லெட், பிரெட் துண்டுகளுடன் சீஸ் ஆம்லெட் என, வித்தியாசமாக தயாரித்து
கொடுக்கலாம்.இரண்டு வயதுக்கு மேல், தினமும் மூன்று வேளை உணவு கொடுக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாழைப்பழ மில்க் ஷேக், சப்போட்டா பழக்கூழ் போன்ற சத்துணவுகளையும் கொடுக்கலாம். 2 முதல், 5 வயது வரை, ஒரு குழந்தையைப் போல் மற்ற குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது.

எனவே, எந்த குழந்தையுடனும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை ஒப்பிட்டு வருத்தப்பட வேண்டாம். 2 வயதில் சராசரியாக ஒரு குழந்தை, 2.5 கிலோ எடை அதிகரித்தும், 12 செ.மீ., உயரத்துடனும் இருக்கும். 3 - 5 வயதுக்குள், 2 கிலோ எடை அதிகரித்தும், 6 - 8 செ.மீ., வரை உயரம் அதிகரித்தும் இருக்கும். ஆறு முதல், 12 வயது வரை, குழந்தைகளின் வளர்ச்சி சீராக இருக்கும். பதின் பருவத்துக்கு முந்தைய கால கட்டம் என்பதால், குழந்தையின் எடை, 3 - 3.5 கிலோ அதிகரித்தும், உயரம், 6 செ.மீ., அதிகரித்தும் இருக்கும்.

சத்து மாவு லட்டு, தேங்காய் பர்பி, நிலக்கடலை உருண்டை, சன்னா சுண்டல், ராகி அடை, காய்கறிகள் சேர்த்த ஸ்டப்டு ரொட்டி, பேரீச்சம் பழம், பாதாம் பருப்பு சேர்த்த ஸ்நாக்ஸ் பார், எள்ளுருண்டை, வறுத்த நிலக்கடலை, அவல், பழ ஸ்மூத்தி போன்றவை சிறந்த உணவு!

குழந்தையின் விருப்பம், உங்களின் வசதிக்கேற்ப வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது, ஊட்டச்சத்தும் கெடாது; துாய்மைக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.

நன்றி தினமலர்


Wednesday, July 5, 2017

பெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை

அழகு மட்டுமல்ல; ஆரோக்கியத்திற்கும்நல்லது!


உள்ளாடை தேர்வில், பெண்களுக்கான விழிப்புணர்வு தகவல்களை கூறும், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர், டாக்டர் மகேஸ்வரி:

 உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும் கூட.

ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில், தன் மார்பக அளவில், ஆறுமுறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின்வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்ப காலத்தின் போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பின், பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும்.

தாய்ப் பாலுாட்டுவதை நிறுத்திய பின், பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும்.

இப்படி, பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறியபடி இருக்கும். ஆனால், பலர் அதற்கேற்றவாறு, தங்களின் பிரேசியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும்.

பொதுவாக, பெண்கள் பிரேசியர் வாங்கும்போது, 32, 34, 36 என, உடற்சுற்றளவின் அடிப்படையிலேயே அதை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதன், கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது, 'ஏ, பி, சி' என, மூன்று அளவுகளில் கிடைக்கிறது.உதாரணமாக, 34ஏ என்பது, உடலில் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34பி, சராசரி கப் சைசும், 34சி, சிறிய கப் சைசும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமின்றி, கப் சைசையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

அதிக இறுக்கமான அல்லது தளர்வான பிரேசியர் அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமாக அணியும் போது வலி, அரிப்பு, எரிச்சல், பட்டைகள் அழுத்துவதால் ஏற்படும் புண் என்று பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம்.

பாலுாட்டும் நேரத்தில் உள்ளாடை அணிய வேண்டாம், அணியக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. உண்மையில், அப்போது மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளை தவிர்க்க, கட்டாயம் பிரேசியர் அணிய வேண்டும்.

குழந்தை பிறப்புக்கு பின் சில பெண்கள், பிரேசியர் அணியும் பழக்கத்துக்கு விடை கொடுத்து விடுகின்றனர்; அது மிகத் தவறு. அழகு மட்டுமல்ல, இது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது. மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் வியர்வை தங்கி அரிப்பு, புண் ஏற்படுவதைத் தவிர்க்கவும், செல்களின் தொய்வைக் குறைக்கவும், பெண்களுக்கு உள்ளாடை மிக அவசியமாகிறது.

சிந்தெடிக் ரகங்கள் தவிர்த்து, காட்டன் பிரேசியரையே பயன்படுத்த வேண்டும். வெயிலில் அதிகம் செல்வோர், புறஊதாக் கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்கள் தவிர்த்து, வெளிர் நிறங்களில் உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கலாம்.

உடல் எடை அதிகமானால், மெலிந்தால் அதற்கேற்ப பிரா அளவையும் மாற்றிப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு பிரேசியரை ஆறு முதல் ஒன்பது மாதம் வரை பயன்படுத்தலாம். எலாஸ்டிக் லுாசாகி, ஹூக் உடைந்த, துணி நைந்து போனவற்றை பயன்படுத்த வேண்டாம்.

நன்றி
தினமலர்
05/07/2017