"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, November 29, 2009

படித்ததில் பிடித்தது 29/11/2009

பாலகுமாரனின் எழுத்துகள் எப்போதும் உள்நோக்கிய சிந்தனைகளை மையமாகக் கொண்டிருக்கும். அவரது கதாபாத்திரங்கள் மனிதருள் பலவிதம் இருப்பதை அப்படியே படம்பிடித்துக்காட்டும்.

வாழ்க்கையில் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள், பல வித அவமானம் தாங்குதல் பற்றி அவர் எழுதும் பாங்கு எனக்குப் பிடிக்கும்.

படித்துப் பாருங்களேன்..ரஜினிகாந்த் அவர்கள் வாழ்வில் உச்சாணியில் இருந்தபோதும், அவரது மனநிலையை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறார்





“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.

தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.

கண்டக்டரா, கன்னடமா, தமிழ், இங்கிலீஷ், ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.

இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.

மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”


நன்றி;   பாலகுமாரன் பேசுகிறார். வலைத்தளம்


வாழ்த்துகள்

Thursday, November 26, 2009

அறிவும் உணர்ச்சியும் தொழில்நுட்பக் கோளாறும்

நண்பர்களே


நம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது, சிக்கல் வருகிறது என்றால் அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.


”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.


”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!” என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத் தெரியும்.


மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனதிற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்...துரதிர்ஷ்டம் என்று பல பெயர்கள் வைத்துள்ளோம்.


சமையலில் சிறிது உப்பு அதிகம் என்றால் சற்று தண்ணீர் சேர்த்து சரி செய்யலாம். அதே போல் தண்ணீர் அதிகமாகிவிட்டால் சற்று தண்ணீர் அதிகமாக்கி சரி செய்யலாம்.


அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)


அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)


முயற்சித்துப் பாருங்களேன்

வாழ்த்துகள்

Wednesday, November 25, 2009

வலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.

வலையுலகில் பலவித இடுகைகளை படிக்கிறோம். படிக்கிற இடுகை ஒரு கவிதை, கதை, குறித்தான இடுகையாக இருக்கும்போது, அதில் பதிவரின் எண்ண ஓட்டம் தெரிகிறது. அதற்கு பின்னூட்டம் சூப்பர், நல்லா இருக்கு அவ்வளவுதான். அங்கே விவாததிற்கு இடமே இல்லை.

சாதி, ஆன்மீகம், மதம், நாத்திகம், அரசியல்,காமம் சார்ந்த இடுகைகள் வரும்போது விவாதத்திற்கு உள்ளாகக் கூடிய வகையில்தான் கருத்துகள் அமையும். விவாதமும் தவிர்க்க முடியாதது.

இது போன்ற இடுகைகளை நான் படிக்கும்போது முதலில் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதைத்தான் கவனிக்கிறேன்,

அது கடுமையாக எதிர்க்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு ஜால்ராவா? இல்லை கிண்டல் அடிக்கிறதா? ஆராய்கிறதா? எடுத்துக்கொண்ட கருத்தை நிறுவுகிறதா? சமுதாயத்தில் தனது கருத்தை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறதா என்று இடுகையைப் பற்றி படித்து முடிவுக்கு வருகிறேன்.

கடுமையாக எதிர்க்கிறது, நிறைகளைச் சுட்டிக் காட்டாமல் குறைகளையே பெரிது படுத்தி பேசுகிறது என்றால் அங்கே நமது குரல் எடுபடாது. குரல் கொடுத்தாலும் கடுமையான ஆட்சேபனைகள் நிச்சயம் வரும். எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே விலகிவிடுகிறேன்.மாறாக ஒத்த கருத்துடைய அந்த நண்பர்களின் பின்னூட்டங்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்து இரசிக்கிறேன்.

உதாரணமாக ஆன்மீகம் சார்ந்து எழுதக்கூடிய அன்பர்களிடையே தானகவே ஒரு குழுபோல் அமைந்துவிடும். தினசரி வந்து படிக்கும் நண்பர்கள் மற்றும் எழுதும் பதிவரிடையே கருத்தளவில், மனதளவில் ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிடும். அப்போது இடையில் புகும் மாற்றுக் கருத்துடைய நண்பர் தொடர்ந்து படிப்பவராக இருந்தாலும், தாங்கமுடியாமல் ஒருகட்டத்தில் எதிர்க் கருத்தை அங்கு பதிவு செய்ய முயலும்போது அது அவரைப் பொறுத்து சரியானதாகவே இருந்தாலும், மற்ற அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் அவர் சொல்ல வந்ததும் மறைக்கப்பட்டு, பின்னூட்டமிட்ட நண்பரின் மீது குழுவாக பாய்ச்சல் நிச்சயம்.

இது சூழ்நிலையையே கெடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் பாடம் போய்விடும், அவருக்கும் எதிர்ப்பை திரும்பவும் எதிர்க்க, கருத்தை வலியுறுத்த என மனநிம்மதி போய்விடும்.

இது ஆன்மீகம் மட்டுமல்ல, அனைத்துத் துறையினருக்கும் பொருந்தும், கணினி தொழில்நுட்ப விளக்கம் தரும் நண்பரின் நோக்கம் புரிந்து கொள்ளாது அங்கு தமிழில் குற்றம் கண்டுபிடிக்கிறார் ஒரு நண்பர்.

இந்த சூழ்நிலையை நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்றால் இடுகையின் நோக்கம் புரிந்தது. ஆக்கபூர்வமான நோக்கம் எனில் சிறு குறைகளாக என் மனதிற்கு பட்டதை (பிழைதிருத்தத்தை கூட) தனி மடலிடுவேன், நிறைவுகளை பாராட்டி விடுவேன். முக்கிய நோக்கத்தைப் புறக்கணித்து குறைகளை பெரிது படுத்தும்போது எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடுகிறது. இடுகையின் நோக்கம் திசை திருப்பப்பட்டு பின்னர் வந்து படிப்பவரின் மனோநிலையை குழப்பம் அடையச் செய்து விடுகிறது.

அதற்காக தவறை அனுமதிக்க வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. அந்தத் தவறு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அவரிடம் தெரிவித்துவிட்டு என் தளத்தில் தனித் தலைப்பிட்டு எதிர்கருத்தை பதிவு செய்கிறேன். அப்போது அவர்கள் மனநிலையும் கெடுவதில்லை, எழுதும் எனக்கும் மனநிறைவு ஏற்பட்டுவிடும்.

இதனால் என்னுடைய பின்னூட்டம் எங்கு இருந்தாலும் பெரும்பாலும் பாராட்டியே இருக்கும், சிறு நகைச்சுவை இருக்கலாம். அதிகமாக இடுகையின் மையத்தை விட்டு விலகி பின்னூட்டமிடுவதில்லை அதனால் கும்மிக்கு நான் எதிரானவன் அல்ல, மனதை ரிலாக்ஸ் பண்ண சில சமயங்களில் கும்மியும் தேவைதான். அதற்கான இடுகை எது எனபதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்றே சொல்ல வருகிறேன்.  

இடுகைகளின் தரத்தை முடிவு செய்து அதற்கேற்றவாறு பின்னூட்டமிடுவது பதிவரிடையே நட்பை இன்னும் பலப்படுத்தும், பிணைப்பை ஏற்படுத்தும்.

வலையுலகில் நட்பு முக்கியமா, என் கருத்து முக்கியமா எனும்போது என்கருத்தை வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நட்பு என்பது விரிசல் வந்தால் மீண்டும் மனதளவில் ஒட்டாது. வாயளவில்தான் நட்பு இருக்கும். எனவே பின்னூட்டத்தில் எனது பாணியாக இதைக் கடைபிடித்து வருகிறேன்.

சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்தா......நட்பா.. உங்கள் விருப்பம்.!!!

வாழ்த்துகள்..

Tuesday, November 24, 2009

பரிணாமம் குறித்தான...1

 முந்தய இடுகையின் பின்னூட்டங்களின் தொடர்ச்சியே இந்த இடுகை
இந்த பதில் பின்னூட்டமாக வெளியிடுவதில் கூகுளாண்டவர் ஒத்துழைக்காததால் இங்கே இடுகையாக..


டவுட் தனபாலின்  கேள்விக்கான பதில்

\\அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது? அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே?\\

அதற்கு முன்னர் பஞ்சபூதங்களின் தோற்றம், அதற்கு முந்தய நிலை இவற்றிற்கு எந்த செயலும் விளைவும் காரணம் இல்லைதான்.

காரணம் உருபொருள் என தாங்கள் சொல்லும் இறையின் தன்மைகளுள் ஒன்று விரிவு,அழுத்தம்

ஆகவே அதன் பெருக்கத்தில் மலர்போல் உள்ளிருந்து உள்ளாக தோன்றியதே இப்பிரபஞ்சம், இதில் மறைபொருளாய் இருப்பது காந்த ஆற்றல்.

விளைவு என்பதே வித்திலிருந்துதான் தொடங்குகிறது. அதன் பின்னரே வினைப்பதிவுகள் வந்தன.

\\புல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது? \\

பஞ்சபூதங்களாக, அதற்கு முன்னதாக இந்த பூமியை எது தாங்கிக் கொண்டிருக்கிறதோ அதுவாக இருந்தது.அதற்கு முன் அதுவுமில்லாமல் இருந்தது.

\\புல்லாக எது செயல்பட்டது? \\

தோற்றுவித்தது எதுவோ அதுவே புல்லாகவும் செயல்பட்டது.

\\எதன் கருமையம் புல்லில் இருந்தது?\\

உயிரோட்டம் எதை மையமாக வைத்து ஓடுகிறதோ அதை கருமையம் என்கிறோம். அப்படி பார்க்கும்போது தாவர இனங்கள் புவியோடு வேர்மூலம் இணைந்தே இருப்பதால் கருமையம் என்று ஒன்று தனியாக இல்லை. அது நகரும் உயிரினங்களுக்கே உரித்தானது

\\புல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது? பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.?\\

இதற்கு சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது செயலுக்கு வினைக்கு விளைவு நிச்சயமே தவிர செயலினால்தான், அதன் விளைவினால்தான் அடுத்த பிறவி (பரிணாமம்)என என்னால் சொல்ல முடியவில்லை.

ஆனால் அதன் குணங்களும்,அமைப்புகளும் காந்ததின் மூலம் சுருக்கி இருப்பாக வைத்து அடுத்த நிலையில் விரித்து காண்பிக்கப்படுகிறது.

 காந்தஓட்டம் பஞ்சபூதங்களுள் முறையான சுழற்சி அடையும் போது ஒருசெல் உயிரினம், இந்த ஓட்டம் மேலும் ஒழுங்கு பெற்றபோது பிற உயிரினங்கள் வந்தன.

அவையும் அழுத்தம், ஒலி,ஒளி,சுவை, மணம் இவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் வரிசையாக தோன்றின. இதில் காந்த(சக்தி) ஆற்றலின் பங்கு மகத்தானது

இறையின் பண்புகளின் ஒன்று ’விரிவு‘ அதுதான் காரணம்., யார் கண்டார்கள், பலகோடி வருடத்திற்குபின் பரிணாமத்தில் நாம் என்ன உருவம் எடுப்போமோ?

இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையது. நிறை இருந்தால் வேதாத்திரி மகானுடையது.

வாழ்த்துகளைத் தனபாலிடம் சொல்லுங்கள்.

Monday, November 23, 2009

நடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்

சிதம்பரம், நவ.23-
சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். தி.மு.க. நகர செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.


நன்றி தினமலர்-23-11-2009 கடைசிப்பக்க செய்தி

டவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை

திரு.டவுட் தனபால் அவர்களின் சென்ற இடுகையை ஒட்டிய கேள்வி

\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?


முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது? \\

டிஸ்கி:என்னைச் சார்ந்த மரியாதைக்குரிய புரியாத பொன்னுசாமி அவர்களிடம் இந்த கேள்வியின் விபரம் தரப்பட்டு அதற்கான பதில் வாங்கி இங்கு இடுகையாக வெளியிடப்படுகிறது.:))


முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது ? சரிங்களா !!”

இதையே கொஞ்சம் மாற்றிப் பாருங்க..

முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,

எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.

போதுங்களா., தேவைன்னா இனி சற்று விளக்கமாப் பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.

ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை, அதேசமயம் மனிதனுக்காக வேறு எந்த உயிரினத்தையும் படைக்கவில்லை. :))

 பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன்வந்தான்.

இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.

மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.

பிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வரும் கோடிக்கணக்காக வருடங்களில் இப்புவியில் நிலம், நீர், காற்று, வெப்பம், விண் முதலான பஞ்சபூதங்கள் முதலியன  ஒரு பொருத்தமான கூட்டாக தக்க சூழ்நிலையில் சேர்ந்தது.

அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.

சரி அந்த சாராம்சம் என்ன பறித்துண்ணுதல்

சுருக்கமாக..  ஈரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக, வேறு ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகக் கொண்டே வாழுகின்றன,

இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.

பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
பிற உயிரைத் துன்புறுத்தல், கொல்லுதல்,
பிற உயிரின் பொருளைத்திருடுதல் - இதுவே விலங்கின செயல்


உணவாகப் போகிற, உணவாக்கிக்கொள்கிற இரு உயிர்களின் போராட்டத்தில் ஒன்றால் மற்றொன்றுக்கு துன்பம் விளையும்போது அதை சமாளிக்க எழும் வேகம், கோபமாகவும், பயமாகவும், தனது உணவை மற்றவை பறிக்க வரும்போது அதை காப்பாற்றிக்கொள்ள முனைவது (அதிக)ஆசையாகவும், தன்னைத்துன்புறுத்திய உயிரினத்தை எதிர்க்கும் முயற்சி தோல்வியடையும்போது எழும் உணர்வு வஞ்சமாகவும் வளர்ந்து தொடர்ந்து நீடித்து நம்மிடம் வந்துள்ளது.

இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..

இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.

இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.

தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம்.

அவ்வளவுதான் விசயம். இதை நண்பர் டவுட் தனபாலிடம் சேர்த்து விடுங்கள், இதில ஏதாவது டவுட் வந்தா அதையும் அய்யா கிட்ட சொல்லிடுங்க..

-----புரியாத பொன்னுசாமி.