"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, September 25, 2009

நாய் வளர்த்ததும், கண்கள் பனித்ததும்

நாய், பூனை என செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், ரொம்ப உயர்ந்தரகம் என்கிற அளவில் நினைத்து விடாதீர்கள்,

சாதரண கிராமத்தில் கிடைக்கக்கூடிய பழகிய நாய், பூனை அவற்றின் குட்டிகளை பார்க்க பார்க்க, வளர்த்த வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு செயலில் இறங்கிவிடுவேன்

இப்போது அல்ல, சின்ன வயதில், 12 அல்லது 13 வயது இருக்கும்,

நாய்க்குட்டி வளர்த்தும்போது அதைப் பராமரிப்பது தனிசுகம்,அது உணவுக்காக நம்மை எதிர்பார்ப்பதும் வாலை ஆட்டிக்கொண்டு நம்மோடு உறவாடுவதால் ஏற்படும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது ஒரு தனி சுகம்.

எனக்கு கிடைக்கிற உணவு, பால் ஆகியவற்றை அதனோடு பகிர்ந்து கொள்வேன், இதற்கிடையில் கிணற்றில் நீந்தப்போகும்போது நாய்குட்டியை உடன் கூட்டிச்சென்று, அதைத் தூக்கி தண்ணீரில் போட்டுவிட்டு, அப்புறம்தான் நான் குதிப்பேன்.

நாம் நீச்சல் பழகும்போது, கத்தாளைமுட்டி, என்கிற கத்தாளையின் காய்ந்த தண்டுப்பகுதி, சுரைப்பொரடை என்கிற காய்ந்த சுரைக்காய் ஆகியனவற்றை முதுகில் கட்டிக்கொண்டு நீச்சல் பழகியது உண்டு,

நாய்க்குட்டியோ எந்த உதவியும் இல்லாமலே இயற்கையாகவே நீந்தும். அது மட்டுமில்லாமல் இரவு திண்ணையில் நான் தூங்கும்போது , அது அருகிலேயே வாசற்படியில் தூங்கும், அதிகாலையில் பார்த்தால் எனது போர்வைக்குள் படுத்துக்கொண்டிருக்கும்,

அதற்கு ஆரம்பத்தில் பெயர் வைத்ததுதான் வேடிக்கை, எந்தப்பெயரும் தோன்றாமல், ஏனோ எனக்கு பிடித்தது எனத் தோன்றிய மணி என்கிற பெயரை வைத்தேன்

என் தந்தை சற்று கண்டிப்பானவர், எனவே அவர் பணிக்கு சென்ற பின்னர்தான் இந்த நாய்க்குட்டியுடன் கொஞ்சல் எல்லாம்
.
அவர் இருந்தால் அமைதியாக இருப்பேன், நாயும்தான்

மணி,மணி,மணி... என்று அழைத்தால் போதும், எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும், அப்படி ஒருநாள் அழைத்து உணவிட்டுக் கொண்டிருந்தபோது ஒருநாள் பின்னால் வந்து நின்ற என் தந்தையார் ’திமிரப்பாரு..’ என்றபடியே என் முதுகில் ஒரு சாத்து சாத்தினார்,

காரணம் புரியாமல் விழித்தேன்,

அப்புறம்தான் தெரிந்தது. அவரது வேலை செய்யும் இடத்தில் அவரது சுருக்கமான பெயர் மணி என்பது :))

அன்றிலிருந்து நாயின் பெயர் ’ஏய்’ தான்,


அப்போது ஒரு நாய்க்கு பெயர் வைப்பதில் இத்தனை விசயங்கள் அடங்கி உள்ளதா !!!
இந்த சுதந்திரம்கூட நமக்கு வாய்க்கவில்லையே என அந்த வயதில் வருத்தப்பட்டது உண்டு

இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன், காரணம் சிவா என்கிற என்பெயர் குறித்துதான். அவ்வப்போது ஏதோ தகுந்த காரணத்தோடுதான் பெயர் அமைந்திருக்கிறது என நினைத்து கொள்வேன்,

என் நண்பரால் எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அன்றாடம் அழைத்து மகிழும் வகையில் அமைந்தது கண்டு உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன்.

நண்பர் ஓம்கார் தினமும் என்னை கவனித்துக்கொண்டும், அழைத்து மகிழ்வதும் நான் பெற்றபேறுதான் :) ஏனோ இன்னும் நெருக்கமாக உணர்கிறேன். மேலதிக விவரங்களுக்கு





இதை சிவனின் திருவிளையாடலுக்கு மேலும் ஒரு சான்றாக எடுத்துக்கொள்கிறேன்.

கண்கள் பனிக்க இதயம் கனக்க      சிவா

Wednesday, September 23, 2009

பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரம், குளித்துவிட்டு தயாராகி காலை உணவுக்காக காத்திருப்பேன், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மும்முரமும் சேர்ந்து கொள்ள, கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் இணயத்தில் மேய்வது வழக்கம்,






அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து "அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க" என்று அழைக்க

"அம்மாகிட்ட போயேன்,"


"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா?"


"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்..."


"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது...."


"சரிங்ங்ங்..."

சட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

என் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.

மேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...

உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,

இது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.


இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.


பல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,

விளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.

சிந்திப்பதுடன் செயல்படுவோம்

வாழ்த்துக்கள்,

Sunday, September 20, 2009

பொன்னுச்சாமியின் புலம்பல்

என்றைக்கும் இல்லாத சத்தம் , விளம்பர பாடல்கள் காதில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன், எங்கும் எந்த ஸ்பீக்கரையும் காணோம்

பகல் பொழுதில் நகரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள புதிய பஸ்நிலையம் பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்,

சுற்றும் முற்றும் பார்த்தேன். பாடல் தொடர்ந்து காதில் விழுந்தது.மேலிருந்து சத்தம் வந்ததால் நிமிர்ந்து பார்த்தேன்

பாதையின் வலதுபுறம் இரண்டு மாடிக் கட்டடம், மொட்டை மாடியில் பத்தடிக்கு பத்தடி அளவில் பெரிய திரை, அது திரையா அல்லது டிவியா என சரியாக தெரியவில்லை.

எங்கள் பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள், சரி தீபாவளி நெருங்கிவிட்டது, அதனால் துணி,நகை விற்பனையகங்கள் விளம்பரம் செய்தால்தான் வாடிக்கையாளாரை ஈர்க்க முடியும் என்று நினைத்தபடியே சென்றுவிட்டேன்,

பனியன் உற்பத்தி துறை வேலைகள் அலைக்கழிக்க ஒருவழியாய் முடித்து அலுவலகம் திரும்பினேன், இரவு வர, பணி முடிந்தது, அப்போதுதான் பார்த்தேன்

பொன்னுசாமி சற்றே காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார், போகும்போது நன்றாகத்தானே போனார்,??

”ஏனுங்ன்னா, என்னாச்சுங்க,.. ”

”ஒன்னுமில்லைங்கைய்யா, டவுனுக்குள்ளார போகும்போது ஒரு மொப்பட்க்காரன் மேலே கொண்டு வந்து வண்டிய விட்டுடான்ங்ய்யா.. கீழ விழுந்ததுல சுளுக்கு மாதிரி ஆயிப்போச்சுங்க.”

“ஆசுபத்திரிக்கு போனிங்களா..”

”ஆமாங்கய்யா எக்ஸ்ரே எடுத்து பார்த்து ஒன்னுமில்லை அப்படினு சொல்லிட்டாங்க, தசைப்பிடிப்புன்னு ஆயின்மெண்ட் கொடுத்திருக்காங்க”

”எப்படி ஆச்சு, வண்டியிலெ போகும்போது எச்சரிக்கையாத்தானே போவீங்க?”

நா போயி என்ன பண்றதுங்க, எதிரில வர்றவுங்க பார்த்து வரோணுமில்ல,”

அப்படி என்ன ஆச்சு?”

”மொபட்டுக்காரன் ஒருத்தன் மேல பார்த்துக்கிட்டே வந்து எம்மேல உட்டுட்டானுங்..”

”மேலயா” என்றேன்.  “ரோட்டப்பார்க்காம மேல பார்த்தானா !!”

”மேல ஏதோ புதுப்படப்பாட்டு கேட்டுதுங்க, மாடிமேல இருக்கிற டிவிய பாத்துக்கிட்டே எம்மேல வந்து ஏறிட்டானுங்..”

“என்ன கவருமெண்டோ இத்தனை நாளா போஸ்டர் வச்சு குப்புற அடிச்சு விழ வெச்சானுக, இப்ப பல்டியே அடிக்கிற மாதிரி பெரிய டிவி விளம்பரம், என்ன லாஜிக்கோ தெரியலீங்க.”என்றவாறே உள்ளே சென்றார்.

யோசித்தபடியே வீடு திரும்பினேன்

Wednesday, September 16, 2009

திரு.கோவி.கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பாசத்துக்குரிய நண்பர் கோவியானந்தா, கோவியார், என்று நம் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. கோவி கண்ணன் அவர்களுக்கு இன்று திருமணநாள்

பதினோராவது ஆண்டுதொடக்கம், ஆண்டு முழுவதும் இனிமையாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.

திரு.கோவி.கண்ணன் குடும்பத்தார் அனைவரும் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம்,  உயர்புகழ்,மெய்ஞானம் இவற்றில் ஓங்கி, நீடூழி வாழ வேண்டும்என குடும்பத்தினர், நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்




***********************************************
டிஸ்கி; நம்மால சமாளிக்க முடியாத இவரை சமாளித்துக்கொண்டிருக்கும்  அண்ணியாருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்
***********************************************

Friday, September 11, 2009

பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலை செய்வது.....

ஏற்றுமதி பனியன் தயாரிப்பு தொழிலில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. நிட்டிங், டையிங்,பிரிண்டிங், எம்ப்ராய்டரி இதுபோல இன்னும் பல துறைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் தேவையான பிரிண்டிங் வரைபடத்தை கணினியில் மேம்படுத்தித் தருதல், அங்கு பணிநிமித்தம் சென்றேன், காலை 10.00 மணி இருக்கும் ,

மூன்று கணினிகள் உள்ள அலுவலகம், தொழிற்சாலையும் அதுதான்:))

எனக்குத்தேவையான டிசைனை மேம்படுத்த சென்றிருந்தேன். கணினியின் பின்புலத்தில் சினிமா பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது. எல்லா பாடல்களுமே நான் அதிகம் கேள்விப்படாதவை, எல்லாமே புதியவை.

சற்று சத்தமாகவே இருந்தது."என்ன தம்பி, வேலை செய்யும் போது கொஞ்சம் மெதுவாக சத்தம் வைக்கலாம் அல்லவா?" என்றேன்.

சிரித்துக் கொண்டே சத்தம் குறைத்து, பின்னர் வேலையில் ஈடுபட்டார்.

வேலையின் சலிப்பை போக்கிக்கொள்ள பாட்டுக்கேட்பதாக எடுத்துக்கொண்டேன்.

அந்த நபர் பாட்டை ஒழுங்கா கேட்பாரா !!

இல்லை வேலைய ஒழுங்கா செய்வாரா !!






சரி நான் கார் ஓட்டிப்பழகும்போது, பாட்டுக்கேட்டால் எப்படி கார் ஓட்டமுடியும், ரோட்டைப்பார்த்து எப்படி காரோட்டுவது என்று பயிற்றுவிக்கும் நண்பருடன் சண்டைக்கே போய்விட்டேன்.

ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.

இதெல்லாம் சரியா, தவறான்னு மனசு யோசிக்குது :)))

நீங்க எப்படி ?

உங்க மனசுல தோணுவதை சொல்லுங்க, அலசிப் பார்ப்போம் :)

Sunday, September 6, 2009

அனானியும் வேதாத்திரி மகானும்

நண்பர் ரவிஆதித்யா அவர்களது அந்த ”அனானி” யார்? சொல்லமுடியுமா? கட்டுரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. மிகச் சரியான முறையில் விஞ்ஞானம் சொன்னதை அலசி இருந்தார்.


\\ஒரு பொருள் இருந்தால் அதனை உருவாக்கியவன் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞான நியதி. காரணம்-காரணன். நான்கு M இருந்தே ஆக வேண்டும். அதாவது Man,Machine,Method,Materials.\\

அதே சமயம் இறைநிலை என்பது பொருள் அல்ல,அதற்கு இந்த சூத்திரம் உதவாது.

சுலபமா யோசித்தால்கூட நாம் ஓட்டுகிற வாகனம், கீழே பூமி தாங்கி இருப்பதால்தான் பாதையில் ஓடுகிறது. ஒரு அடி உயரமா சக்கரம் நிலத்தில் படாமல் இருந்தால் ஓடாது, வெறும் சக்கரம்தான் சுற்றும், வாகனம் நகராது.

சரி பூமியின் எடையும், பருமனும் எவ்வளவு?
இதை எது தாங்கிக் கொண்டிருக்கிறது ?
பூமிக்கு கீழ் எந்த ரோடு சூரியனைச் சுற்றி வர போடப்பட்டிருக்கிறது ?
பூமி அதில் உருண்டு கொண்டு இருக்கிறதா ?
பூமி தன்னைத்தானே சுற்றும் வேகம் மற்றும் சூரியனைச் சுற்றி வரும் வேகத்திற்கு காரணம் என்ன?

பதிலே கேள்விக்குரியதாக அமையும் அறிவியலில். 

சூன்யத்திற்கு காரணம் வேண்டியதில்லை, ஏனெனில் சூன்யமே காரணம், சூனியமே காரியமாகவும் மலர்கிறது, சூனியம் என்பது அனைத்துக்கும் மூலம், அதனுள் அனைத்தும் அடக்கம்.

இனி இதோ வேதாத்திரி மகானின் கருத்துக்கள்

“சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா?
அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் இரகசியம் என்ன?


மகானின் பதில்

”படுத்திருக்கிறீர்கள், நல்ல ஓய்வு, அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே...? ஏன் எழுந்திருக்கிறீர்கள்? உங்களுக்குள் மிகும் உடல்ஆற்றல் வேகம் தானகவே எழுந்திருக்கச் செய்கிறது.

சுத்தவெளி தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்தன்மை கொண்டது. அது எப்போதுமே தானாகவே விரிந்து கொண்டே இருக்குக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும், தோன்றிக்கொண்டேதான் இருக்கும்.”

எனக்கு மகானின் இக்கருத்து, முழுமையாக, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவானதாக இருக்கிறது. சுத்தவெளி என்ற இறைவெளி இதையே இறை என மதிக்கிறோம்.

இந்த கருத்தை நான் இடுகையாக்க தூண்டுதலாய் இருந்த நண்பர் ரவி ஆதித்யாவுக்கு  எனது நன்றிகள், வாழ்த்துக்கள்