"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, December 10, 2014

கறையை நீக்குவதில் கவனம் தேவை!


 விலையுயர்ந்த துணிகளை வாங்குபவர்களுக்கு, அதை பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பட்டுப் புடவைகளை உடுத்திக் களைந்த பின், வியர்வை, ஈரம் உலரும் வரை நிழலில் காய வைக்க வேண்டும். பின், 'அயர்ன்' செய்யாமல் அப்படியே மடித்து, மர அலமாரியில் வைத்து விட வேண்டும்.மறுமுறை தேவைப்படும் போது, அந்த சமயத்தில் எடுத்து, 'அயர்ன்' செய்து உடுத்திக் கொள்ளலாம். ஏனெனில், நீண்ட காலத்துக்கு, பட்டுப் புடவை, 'அயர்ன்' மடிப்பில் இருக்கும் போது, அந்த மடிப்பில் நுாலும், ஜரியும் சேதமடைந்து, புடவை கிழிந்து விடும்.

அதேபோல், ஆண்களின் டி-ஷர்ட், உள் பனியன் வகைகளை அடித்து துவைப்பது, முறுக்கிப் பிழிவது கூடாது. நிறம் மங்கிய வெள்ளை நிறத் துணிகள், வேட்டி போன்றவற்றில் அதன் நிறம் பளிச்சிட, கறை போக்குவதற்கான, 'லிக்விட்'களை நீரில் கலந்து, அதிகபட்சம், 10 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் போதும். கூடுதல் வெண்மை வேண்டும் என, அதிக நேரம் வைத்தால் துணி தான் சேதமாகும்.

குழந்தைகளுக்கான உடைகளுக்கு அதிகப்படியான சோப்பு பவுடர், சோப்பை பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக, அவர்களின் உள்ளாடைகளில் படிந்திருக்கும் சோப்பின் காரம், அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அசவுகரியத்தையும் கொடுக்கும்.துணிகளில் படிந்த கறையை எடுக்க, நெயில்பாலிஷ் அசிட்டோன் எனப்படும் கெமிக்கலை, அந்த இடத்தில் சில துளிகள் விட்டு, காட்டனால் மெதுவாக தேய்த்து எடுக்க, கறை நீங்கி விடும் அல்லது அசிட்டோன் சேர்க்கப்பட்டுள்ள நெயில் பாலிஷ் ரிமூவரையும் இதற்கு பயன்படுத்தலாம்.

 ஐஸ்கிரீம், பால், சாக்லேட், கிரேவி, லிப்ஸ்டிக் கறையை எடுக்க, துணியை, வாஷிங் பவுடர் கரைசலில் ஊற வைத்து, டிடர்ஜன்ட் சோப்பை அந்த இடத்தில் மட்டும் கவனம் கொடுத்து தேய்த்தால் போதுமானது.

எண்ணெய் கறை படிந்த ஆடைகளை, முக பவுடரை மிதமான சூட்டில் நீரில் கலக்கி, அந்த துளிகளை கறையில் விட்டு பிரஷ் செய்தால், கறை காணாமல் போய்விடும்.

ரத்தம், துரு, சூப், கிரேவி போன்றவை கறையாக படிந்திருந்தால், சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்சைடை அதில் விட்டு மெதுவாக தேய்த்தால் போய் விடும்.

ஆடைகளை ஊற வைக்கும் போது, அதிகளவு டிடர்ஜன்ட் பவுடர் சேர்ப்பதையும், அதிக நேரம் ஊற வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால், எத்தனை முறை அலசினாலும், சோப்பின் ரசாயனம் துணியில் தங்கி விடும். காய வைத்து எடுத்தாலும், வெண்மை கோடுகள் இருக்கும்.எல்லா வகை ஆடைகளையும், உள்பக்கம் வெளியில் தெரியுமாறு உலர்த்தினால், நிறமும், ஆயுளும் பாதுகாக்கப்படும்

நன்றி தினமலர்

Saturday, February 15, 2014

அர்விந்த் கெஜ்ரிவால் போராளியா ? பிரதமராகத் தகுதியானவரா?

ஜனலோக்பால் மசோதா தோல்வி என பத்திரிக்கைகள் அலற..படித்துப்பார்த்த போதுதான் தெரிந்தது..ஜனலோக்பால் தாக்கல் செய்யப்பட்டு, விவாதமோ ஓட்டெடுப்போ நடந்து தோல்வி அடையவில்லை.

டில்லியைப் பொருத்தவரை எந்த மசோதாவாக இருந்தாலும், அது மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலோடுதான்  நிறைவேற்றப்படுகிறது. இதையே துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தியும் அதையும் மீறி தாக்கல் செய்ய நினைத்து அதில்தான் தோல்வி அடைந்தார் கெஜ்ரி..கடைபிடிக்கவேண்டிய நெறிமுறை,மரபு,விதிகளுக்கேற்ப நடக்காததுதான் தோல்விக்குக் காரணம்..


இது ஒரு முதல்வருக்கு அழகல்ல..அனுப்பி, மறுக்கப்பட்டிருந்தால் இவருக்கு வலு கூடி இருக்கும். அதைக் கூடச் செய்யாமல் என் விருப்பபடி செய்வேன் அது நடக்காவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்னதாக சொன்னதும் மூடத்தனம்.

முன்னதாக, அர்விந்த் கெஜ்ரிவால் டில்லியில் இத்தனை சீட் பிடிப்போம் என்றே  நினைத்துப் பார்க்காத நிலையில் மக்களின் ஆர்வத்தினால் வெற்றி பெற்றார்.. இவர் மற்ற துறைகளில் வல்லுநராக இருக்கலாம். ஆனால் அரசியலில் கத்துக்குட்டிதான்.. அவர் வெற்றி பெற்ற சமயத்தில் இந்த கருத்தை தெரிவித்தால் எதிர்மறை விமர்சனமாகவே கருதப்படும் என்பதால், எதையும் முன்கூட்டியே திட்டவட்டமாகச் சொல்லக்கூடாது என்பதாலும், பொறுமை காத்தேன்.

போதுமான பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் ஆட்சி அமைக்க முயற்சித்ததிலேயே இவரது பாதை சரியல்ல என்பது தெளிவானது. தகுதி இல்லாத ஒருத்தர் , தன்னைவிட அதிக தகுதி உடையவரை தாண்டிச் சென்று பயன் அடைவது என்பது லஞ்சத்தின மறைமுக வடிவம்தான்.

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு இந்த டில்லியில் கடந்த ஆண்டுகளில் நாட்டையே ஊழல் என்ற போர்வைக்குள் மூடி வைத்த பெருமைக்குச் சொந்தமுடைய காங்கிரசோடு கூட்டணி என்பதே ஜீரணிக்க முடியாத ஒன்று.

சரி ஏதோ தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமென்று நினைத்த கெஜ்ரி அரசு  தனக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்டது

மசோதா தாக்கல் செய்வதற்கே தன்விருப்பப்படி நடக்கவேண்டும் என்று மூன்று வயது குழந்தையை விட மோசமாக அடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல்,  அப்படி நிறைவேறாவிட்டால் ராஜினாமா செய்வேன் என முன்கூட்டியே சொன்னது முதிர்ச்சி இல்லாத நிலையை படம் போட்டுக் காட்டுகிறது.

அரசியல் என்பது சாக்கடை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கூடவே அது ஒரு பணமுதலீடு இல்லா தொழில்.இதற்கு மூலதனம் வாய் பேசத் தெரியனும்.எந்த லாஜிக்கும் இல்லாம பேசத் தெரியனும். ... எனக்குத் தெரிந்து இந்தத் திறமை இன்றும் கூட குறையாமல் உற்சாகம் கொப்பளிக்க கொண்டு இருக்கிற எனக்குத் தெரிந்த ஒரு நபர் கலைஞர்தான்..இது உண்மையிலேயே பாராட்டுதான்..

கெஜ்ரி எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தத் தெரியாத முட்டாளாகப் போய்விட்டார். கிடைத்த வாய்ப்பை மரபு மற்றும் விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு புத்திசாலித்தனமாக அணுகி, படிப்படையாக தான் நினைத்தது போல் அரசு நிர்வாகத்தைச் சீர்திருத்தி இருக்க வேண்டும்..

பெரும்பான்மை இல்லாத ஆட்சியில் முதல்வராக இருப்பதைவிட ராஜினாமா மேல் என சில நண்பர்கள் எழுதி இருந்ததை பார்த்தேன்,,  இது முதல்வராக பதவி ஏற்கும்போது தெரியலையா..பெரும்பான்மை என்ன ஆட்சி அமைத்ததற்கு பின்னரா குறைந்தது? என்ன சாதிக்கமுடியும் என்ன சாதிக்க முடியாதுன்னு தெரியாம எதற்காக ஆட்சிபீடத்தில் ஏறீனீங்க

மூச்சுக்கு முன்னூறுதரம் மைனாரிட்டி அரசுன்னு ஜெ திட்டினாலும் அந்த அரசை எப்படி ஆட்சிக்காலம்  முழுவதும் ஓட்டறதுன்னு கலைஞர்கிட்ட பாடம் கேட்டிருந்தாக் கூட தப்பிச்சிருக்கலாமே

அரசியல், நிர்வாகம் இரண்டிலுமே எந்தவித முன் அனுபவம் இல்லாத இவர் ஆட்சிக்கு வந்த உட்கார்ந்தபின் தான் நெருப்பின் மீது உட்கார்ந்த அனுபவம் கிடைத்து இருக்கிறது. சமாளிக்கும் பக்குவம் இன்றி விட்டால்போதும் என்ற மனநிலையில் இராஜினாமா செய்திருக்கிறார்

சத்தமில்லாமல் காரியங்கள் செய்து விளைவுகளை உறுதி செய்தபின் மீடியாவில் பரபரப்பாக வந்திருந்தால் பாராட்டலாம்.. நினைத்தவுடன் செய்வது என்பதும் அதை உடனே மீடியாவில் சொல்வது என்பதும் இன்னும் அரசியலின்,  நிர்வாகத்தின்,.பாலபாடம்கூட தெரியாத இந்த கெஜ்ரியின் ராஜினாமாவை  வரவேற்கிறேன்..

இது ஓட்டுப்போட்ட மக்களுக்கு புத்தியில் உரைக்கக் கூடிய விசயம்..மெஜாரிட்டி இல்லாமல் வாக்களித்தால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பொதுத் தேர்தலுக்கு முன், நடத்திக் காட்டி விட்டார் கெஜ்ரி..வரும் பாரளுமன்ற தேர்தலில் எந்தக்கட்சியாக இருந்தாலும் சரி அது மெஜாரிட்டியாக வர வேண்டியதின் அவசியத்தை, மக்களுக்கு நன்கு உணர்த்திக் காட்டிய நிகழ்வே இது..

காங்கிரசு டில்லி அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கி, கெட்ட பெயர் சம்பாதிக்காமல் இருக்க, நேரடியாகவே பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் அவராகவே விலகி உதவிதான் செய்திருக்கிறார்.

இனி இவரது எதிர்காலமும், இவரது ஆம் ஆத்மியின் எதிர்காலமும் வளமானதாக நிச்சயம் இருக்காது..பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறதாக நண்பர்கள் சொல்வதைக் கேட்டால் சிரிப்பும் வேதனையும் மிஞ்சுகிறது.

காணமல் போனவர்கள் பட்டியலில் கெஜ்ரியின் பெயர், நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் இடம் பெறும் என்பதே உண்மை..

Tuesday, December 31, 2013

கை குழந்தைக்கான சத்தான உணவுகள் !


கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி, தனி குடித்தனமாக குறுகிவிட்ட சூழ்நிலையில், குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள, பெற்றோர் மிக சிரமப்படுகின்றனர். 

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை, தாய்ப்பாலே போதும். அதன் பின், உடல் வளர்ச்சிக்கு தேவையான கலோரிகள், தாய்ப்பாலில் அதிகம் இல்லாததால், அதற்கு இணையான உணவுகளை, கஞ்சி வடிவில் நன்கு குழைத்து தருவது அவசியம்.

பச்சரிசியை, "மிக்சி'யில் குருணை போல உடைத்து, வெயிலில் காய வைத்து, வறுத்து, பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமியுங்கள். ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, மூன்று ஸ்பூன் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்த பின், தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு சேர்த்து, நன்கு பிசைந்து, நம் கையாலேயே ஊட்டலாம்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பல்வேறு சொட்டு மருந்துகள், தேங்காய் எண்ணெயில் உள்ள சத்துக்கள் தான், உடலுக்கு வளம் சேர்க்கும். தேன்வாழை, ரஸ்தாளி, மலை வாழை போன்றவற்றின் விதைகளை நீக்கி, கைகளால் நன்கு மசித்து கொடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.

ஏழாம் மாதத்தில் இருந்து கேரட், உருளைகிழங்குகளை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, மிளகு, சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு மசித்து தர வேண்டும். 

ஒன்பதாம் மாதத்திலிருந்து, அதிக நார்சத்துள்ள கீரை உணவுகளை, நன்கு வேகவைத்து, அதை கடைந்து, உப்பு, சீரகம், மிளகு சேர்த்து கொடுக்கலாம்.

பெற்றோர், தன் குழந்தைக்கு ஈறு வளர்ந்திருக்கிறதா என, கண்காணிக்க வேண்டும். ஈறு வளர்ந்து விட்டால், அதன் பின், நாம் சாப்பிடும் உணவுகளையே குழந்தைக்கும், கொடுக்க ஆரம்பிக்கலாம்.

எட்டு மாதங்கள் வரை அதிக காரம், இனிப்பு, புளிப்பு உள்ள எந்த பதார்த்தத்தையும் தரக்கூடாது. ஏனெனில், தரப்படும் சுவைக்கு ஏற்ப, அச்சுவைக்கு அடிமையாகி, வேறு எந்த உணவையும், உண்ண விரும்ப மாட்டார்கள். 

இதை பின்பற்றினாலே, குழந்தைகள் போதுமான உடல் எடையுடன், ஆரோக்கியமாக இருப்பர்.

ஆறு மாத குழந்தைகளுக்கு, உணவளிக்கும் முறைகளை சொன்னவர் சித்த மருத்துவர், கு.சிவராமன்: தினமலர்

Saturday, October 12, 2013

ஆயுதபூஜை -- நன்றித் திருநாள்



                 
 உயிருள்ள, உயிரற்ற எதையும் நேசிக்க வேண்டும். அதுதான் வாழ்வின் முதல்பாடம்.

அவற்றை வாழ்த்த வேண்டும் என்பது இரண்டாவது பாடம்.

நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும். இது மூன்றாவதுபாடம்.

பயன்படுத்தும் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு உதவுபவைகளுக்கும், நமக்கும் இடையே உணர்வுக் கலப்பு ஏற்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளும், இயற்கை ரகசியங்களும் அப்போது புரியும். இது நான்காவது பாடம்.

ஆயுதபூஜை நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கு நன்றி சொல்வதற்காகவே கொண்டாடுகிறோம். யார் நன்றி சொல்கிறார்களோ அவர்கள் மனது நிறைவாக இருக்கும். கருவிகளை இன்னும் பக்குவமாக பயன்படுத்துவோம். இன்னும் நல்ல முறையில் வைத்திருப்போம்

கவனித்துப்பாருங்கள். இப்படி கருவிகளோடு மனப்பூர்வமான/ஆத்மார்த்தமான/உயிர்த் தொடர்பு இருக்கையில் கருவிகள் பலநாள் நம்மிடம் தொலைந்து போகாமல் இருக்கும். அதிகநாள் உழைக்கும். இதை நினைவுகூறும் நாளாக இந்த ஆயுதபூஜை நாள் அமையட்டும். அனைத்துப் பொருள்களையும் துடைத்து சுத்தம் செய்து வணங்கி, நன்றி சொல்லி தினமும் பணியை ஆரம்பிப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். செய்வோம்.

என் உடல்நலத்திற்காக நன்றி
எனது அன்பிற்காக நன்றி
எனது மகிழ்ச்சிக்காக நன்றி
எனது செல்வத்திற்காக நன்றி
எனது வேலைக்காக நன்றி
என் இசைவான குடும்பத்திற்காக நன்றி
எனது உறவினர்களுக்காக நன்றி

ஜென் கதையும் - ஜென் தத்துவமும்



ஞானம் பெற்ற பின் என்ன செய்கிறீர்கள்? என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார்.

Thursday, September 26, 2013

மோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்?.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதில் இணையம் ரொம்பவுமே சூடாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தவரை முஸ்லீம் அன்பர்கள் அதிகம் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருந்தனர். அது அவர்கள் உரிமை. அதைத் தடை செய்ய இயலாது...ஆனால் அதில் அவர்கள் காட்டும் தீவீரம், மோடியை ஆதரிக்கும் இந்துமதம் சார்ந்த நண்பர்களின் கருத்துகளில் இருப்பதாகத் தெரிவதில்லை :)